FUTURE IS NOW - J Krishnamurti.

பிறப்பு, இறப்பு என்பது உண்மையே இல்லை. அத்தகைய பொய்யான தோற்றத்தை நமது மனமே உருவாக்கிக் கொள்கிறது. மனம் தனக்கென்று ஒரு உடலை உருவாக்கிக் கொள்கிறது. அதைக் கனவு மழையில் நனைத்துத் துன்பப் படுத்துகிறது. - ரமண மகர்ஷி.

Search This Blog

Friday, March 12, 2010

எதைப் பற்றியும் (அ) இது மாதிரியும் தெரிகிறது. ( 9 )

எதைப் பற்றியும் (அ) இது மாதிரியும் தெரிகிறது. ( 9 ) பிரசுரம் : வார்த்தை டிசம்பர், 2008.

வ.ஸ்ரீநிவாசன்.

போக்குவரத்து விதிகள் சம்பந்தமான வாசகங்கள் அடங்கிய தட்டிகளைப் பிடித்துக் கொண்டு, சென்ற மாதம் எங்கள் வீட்டருகே இருக்கும் பள்ளியின் குழந்தைகள், வீதியில் நின்றார்கள். அப்பள்ளியில் கிழ் மத்திய தர வர்க்கத்துப் பிள்ளைகள் படிக்கிறார்கள். அவர்கள் பைகளிலும் தண்ணீர் குடுவைகளிலும் அவர்களது பொருளாதார நிலைமை தெரியும். பல பெற்றோர்கள் சிறு குழந்தைகளை கொண்டுவந்து விட்டு பின் பள்ளி முடிந்ததும் கூட்டிச் செல்வார்கள். எப்பொழுதும் பள்ளியிலிருந்து ஆரவாரம் கேட்டுக் கொண்டே இருக்கும். காலையில் 'தமிழ்த்தாய் வாழ்த்தைத் தொடர்ந்து தலைமை ஆசிரியையின் அறிவுரைகள் கேட்கும். பள்ளி முடிந்ததும் தெருவில் இருக்கும் ஈ மொய்க்கும் தின்பண்ட கூடைகளைச் சுற்றி குழந்தைகளின் கூட்டம் நிற்கும்.

போக்குவரத்து விதிகள் பற்றி ஆரம்பித்தோம். ஒரு தொலைக் காட்சி நேர்காணலில் ஒரு நடிகர், நஸிருத்தீன் ஷா என்று நினைக்கிறேன், கூறினார். "போக்குவரத்து விதிகளை ஒழுங்காக அமல் படுத்தினால் இந்தியாவே மாறிவிடும்". பல வருடங்களுக்கு முன் ஒரு கட்டுரையில் 'சாவரின்" "sovereign" என்கிற சொல்லுக்கு 'மன்னருக்கு விசுவாசமான' என்றும் பொருள் என்று படித்தேன். மன்னராட்சியில்லாத நம் ஜனநாயகத்தில் அது 'அரசியலமைப்பு சட்டத்திற்கு விசுவாசமான' என்றே பொருள் படும் என்றும் அக்கட்டுரையில் குறிப்பிடப் பட்டிருந்தது. சட்டம் சரியாக நடைமுறைப் படுத்தப் படுவதே சாவரின் என்பதன் பொருளாகும். அதை போக்கு வரத்து விதிகளிலிருந்து ஆரம்பிக்கலாம். வீட்டை விட்டு வெளியே வந்தால் நாம் சட்டப்படிதான் நடக்க வேண்டும். மீறினால் தண்டனை நிச்சயம் என்பது வந்துவிட்டால் ஒரு ஒழுங்கு மனதில் வர சாத்தியம் உள்ளது. அரசு 'திறமை'யான 'நேர்மை'யான ஒன்று என்பதை அதன் இலாகாக்களின் நடவடிக்கைகள்தான் நிறுவ வேண்டும். நாமோ நல்லவேளையாக ஜனநாயக நாடாய் இருக்கிறோம். சட்டம் சரியில்லை என்றால் அதை மாற்றவும் நமக்கு வழி உள்ளது.


***************

சென்ற கட்டுரையில் 'இகுரு' மற்றும் 'மர்டர் பை டெத்' திரைப் படங்களின் புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தன. இகுரு பற்றி ஒரு வாக்கியமும், மர்டர் பை டெத் பற்றி அரைப் பத்தியும்தான் கட்டுரையில் இருந்தன. இப்படங்கள் ஒவ்வொன்றையும் பற்றி ஒரு தனிக் கட்டுரையே எழுதலாம். சில படங்களைப் பற்றி கட்டுரையோ, புத்தகமோ கூட எழுதலாம். (உ-ம்) அமேடியஸ், ஃபிட்லர் ஆன் தி ரூஃப், சிடிஸன் கேன், லிபரேஷன் ஆஃப் எல். பி. ஜோன்ஸ், தே ஷூட் ஹார்ஸஸ் டோண்ட் தே, ஸ்லூத் முதலியன; லூயி புனுவெல், ராபர்ட் ப்ரெஸ்ஸான், டார்க்கவ்ஸ்கி முதலியவர்களின் படங்கள்; இந்த வட்டத்துக்குள் மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்படும் பெர்க்மன், குரோசாவா, ரே முதலியோரது என்று எவ்வளவோ இருக்கின்றன. எவ்வளவோ பேர் எழுதவும் செய்கிறார்கள். மிகுந்த உழைப்பும், கூர்மையும் உள்ள கட்டுரைகள் வந்துள்ளன. யார் எவ்வளவு எழுதினாலும் நம் உண்மையான பார்வையில் நமக்குப் பட்டதை எழுதினால் அது பழைய விஷயமே என்றலும் புதியதாக இருக்கும். ஒவ்வொரு படத்தில் ஓர் உயிர் நாடி ரசிகனுக்குத் தென்படும். (உ-ம்) தேவதாஸில் (நாகேஸ்வர ராவ்) அவன் குடிப்பதை விடச் சொல்லி மன்றாடும் (சாவித்திரி) பாருவிடம் தேவதாஸ் பேசும் காட்சி. தன் வீட்டிற்கு அவன் அவசியம் வரவேண்டும் என்கிற அவளிடம் தேவதாஸ், 'வருகிறேன் பாரு,.... உயிர் போவதற்குள்' என்கையில் அக்காட்சியும், நடிப்பும், உரையாடலும், பின்னணியும் நம் இதயங்களை பின்னால் வர இருக்கும் மீட்சி இல்லாத சோக சாம்ராஜ்யத்துக்குத் தயார் செய்துவிடும். சிடிஸன் கேனில் ஒருவேளை அவனிடம் மனம் மாறி திரும்பியிருக்கக் கூடிய மனைவியிடம், (ஆர்ஸன் வெல்ஸ்) கேன் 'You can't do this to me' என்றதும் ஒரு vengeance சுடன் 'ஏன் முடியாது இதோ செய்கிறேன்' என்கிற மாதிரி திரும்பி அவள் அவரிடமிருந்து முற்றுமாகப் பிரிந்து செல்வது, வாழ்க்கை நொடியிலும் சிறிய கால அளவில் எப்படி தலைகீழாகி விடுகிறது என்பதைக் காட்டிச் செல்லும். பதேர் பாஞ்சாலியில் இறந்து போன அக்கா ஒரு செல்வந்தர் வீட்டிலிருந்து (யாருமறியாது ஆனால் சந்தேகத்துக்கு இடமாகி) எடுத்து வந்த ராக்கொடி பரணில் அகப்படுகையில் அதை யாரிடமும் சொல்லாமல் குட்டையில் எறிவான் சிறுவன் அப்பு. ரே காட்டும் Human Dignity. இதைத் தவிர இயக்குனர்களின் மேஜிக். புனுவல் 'that obscure object of desire' ரில் ஒரே பெண் பாத்திரத்துக்கு இரண்டு நடிகைகளைப் பயன்படுத்தியிருப்பார். (அறைக்குள் நுழைகையில் ஒரு நடிகையும் வெளியே போகையில் வெறொருவரும் என்கிற அளவில் பல காட்சிகளில் முதலில் ஒருவரும் பிறகு மற்றொருவரும் நடித்திருப்பார்கள்.)

திரைப் படம் இசை, ஓவியம், சிற்பம், இலக்கியம் எல்லாம் சேர்ந்த விசித்திர கலவை. தமிழ் நாட்டில், ஒரு வேளை இந்தியாவில் அது பணக்காரர்களிடமும், லாட்டரி சீட்டு மாதிரி அதிருஷ்டம் அடிப்பவர்களிடமும் மாட்டிக் கொண்டு இருக்கிறது. மூன்று நிமிட சங்கீத கவிதை முயற்சிகளின் அராஜக வியாபாரத்தில் தமிழ் சினிமா பாடல்களில் எப்போதாவது உயர் கலை தென்படுகிறது.

இசை நேரடி அனுபவம். இசை புறப்படும் இடம் மனிதக் குரல் முதலியன. சேரும் செவிகள். அவ்வளவுதான். எளிமையான செயல்பாடு. ஒரே ஒரு படி. (step).

ஓவியம்: காகம், அதைப் பார்த்த ஓவியர் நேரடியாகப் பார்த்தோ, நினைவிலிருந்தோ வரைந்த காகத்தின் பிம்பம், பிம்பத்தைப் பார்த்தவர் நினைவில் அதை ரெஃபர் செய்து காகம் என்று உணர்தல். இரண்டு படிகள். சிற்பமும் இப்படித்தான். பார்ப்பவரின் கற்பனையின் எல்லைகளை ஓவியரும், சிற்பியும் வரையறுத்து விடுகிறார்கள். நவீன ஓவியம் இந்த எல்லைகளை மீறியது.

இலக்கியம் : காகம். அதை பார்த்தவர் அதை வர்ணணை செய்வது. அதை சொல்லில் ஏற்றுவது. சொல்லைப் புரிந்து வர்ணணையைப் புரிந்து நினைவை ரெஃபர் செய்து காகத்தை புரிந்து கொள்வது. முதல் காகத்துக்கும் கடைசி காகத்துக்கும் சம்பந்தமே இல்லாமல் இருக்கலாம். குறைந்தது மூன்று படிகள்.

சினிமா இந்த அத்தனை படிகளும் கொண்டது. ரபர்ட் ப்ரெஸ்ஸான் சொன்ன மாதிரி "சினிமாவில் நிஜமான இசை , ஓசை, ஒலிகள் காதில் விழுகின்றன. பொய்யான பிம்பங்கள் கண்ணில் தெரிகின்றன." ஒரே நேரத்தில் நிஜத்தையும் பொய்யையும் புலன்கள் அனுபவிக்கும். பெர்க்மன் சினிமாவை 'இரட்டைப் பொய்' என்கிறார். 'அதனால்தான் சினிமாவை விட்டேன்' என்கிறார். நாடகத்தில் அரிச்சந்திரனின் பிம்பம் அவ்வேடம் போடும் நடிகன். ஒற்றைப் பொய். சினிமாவில் திரைமேல் தெரியும் அப்பிம்பத்தின் பிம்பம், இரட்டைப் பொய்.


திரைஅரங்குகளின் இருளில் கோடானுகோடிப் பேர் தங்கள் ஆதார நரம்பு மீட்டப் படுவதை உணர்ந்திருக்கிறார்கள். அதனால்தான் அதற்கு இத்தனை மவுசு. எம்ஜியார் அம்மாவை வணங்குகையில் கலங்கிய தாய்மார்கள். (இவர்களுக்குக் குழந்தை இல்லாமல் கூட இருக்கலாம்) அவர் வில்லனை வீழ்த்துகையில் தங்களுக்கு கெடுதல் செய்த, தாங்கள் கனவிலும் வீழ்த்த முடியாதவனை வென்ற உணர்வில் த்ருப்தி கொள்பவர்கள். சிவாஜியோடு அழுபவர்கள், ரஜினி, கமல், விஜயோடு காதல் செய்பவர்கள். எஸ்.வி.ரங்காராவையும், ஜே.பி.சந்திரபாபுவையும், தாய் நாகேஷையும் பார்த்து பரவசமடைபவர்களும் இதனிடையே உண்டு.

****************
இக்கட்டுரை எழுதுகையில் ஆஸ்திரேலிய அணியுடனான கிரிக்கட் பந்தயங்கள் முடிந்து விட்டன. ஆஸ்திரேலியா பெரிய தோல்வியை சந்தித்தது. அதற்கு காரணம் பான்டிங்குடைய தலைமை என்றெல்லாம் சொல்கிறார்கள். விளையாட்டு வீரர்களின் காயமும் (அதாவது கும்ப்ளேயின் காயம்) என்று ஒரு ஜோக் உலா வந்தது.. அதனால்தான் அவருக்கு பதிலாக விளையாடிய அமித் மிஷ்ரா அபாரமாக பந்து போட முடிந்தது, தோனி தலைமை ஏற்க முடிந்தது. வழக்கம் போல் என் மனைவி கண்டு பிடித்த உண்மையான காரணம்: உலகக் கோப்பை போட்டிகளில் டிராவிட் தலைமையில் இந்தியா அடைந்த அவமானகரமான தோல்விக்கு முக்கிய காரணமாயிருந்த அப்போதைய இந்திய அணியின் பயிற்சியாளர் க்ரெக் சேப்பல்தான் இப்போது ஆஸி அணியின் தலைமைப் பயிற்சியாளர்.

கும்ப்ளே மற்றும் கங்கூலி இனி விளையாட மாட்டார்கள். கும்ப்ளேயைப் பற்றி என்ன சொல்வது? இரண்டே வார்த்தைகளில் சொல்வதானால், ஒரு ஆங்கில தினசரியில் சொன்னதைப் போல அவருடைய 'enormous dignity' பற்றி சொல்லலாம். கங்கூலி போன இதழ் வார்த்தை தலையங்கத்தில் திரு சிவகுமார் எழுதியதைப் போல புறக்கணிக்கப் பட முடியாதவர். இதுவரை ஆடிய இந்திய அணித் தலைவர்களில் அதிக வெற்றிகளைக் கொணர்ந்தவர். எனக்கு (டெண்டுல்கருக்குப் பின்) மிகவும் பிடித்த ஆட்டக்காரர். ஓய்வு பெற்ற நாளில் அவருக்கு உகந்த, தகுந்த பிரிவு உபசாரம் பிரமாதமாக நடந்தது. He left on a high note and with grace.

************

நவம்பரின் இலேசான குளிரும், இதமான வருடி விடும் காற்றும், மிதமான உஷ்ணமும் உடலை மகிழ்ச்சிக்குள்ளாக்குகின்றன. நாமும் ஒருவித மரம், செடி, கொடி தான் என்பது மீண்டும் புலனாகிறது. இந்த வானிலையில் மரங்கள் சந்தோஷமாயிருப்பதற்கு முக்கிய காரணம் அவற்றுக்கு எண்ணம் இல்லை என்பதே. மிக ரம்மியமான வேளைகளில் அதி காலையில், அந்திப் பொழுதுகளில் வறண்ட சென்னையில் கூட பறவைகளின் கீதம் கேட்கிறது. இத்தகு தருணங்களில் மனிதன் பாட மறந்து வெகு காலமாகி விட்டது. அவனுக்கு இசையையும் சுகத்தையும் விட இன்பமும், இனமும், மொழியும், நிறமும், மதமும் மிக முக்கியமானவைகளாகி எத்தனை காலமானதோ அத்தனை காலமாகி விட்டது.

சென்னை அபூர்வமாகவே வெயிலின் காய்ச்சல் இல்லாமல் இருக்கும். நவம்பரிலிருந்து பிப்ரவரி முடிய நடுவில் கொட்டும் மழை, தோன்றும் புயற்சின்னங்கள் இவை தொடர்பான இடர்பாடுகளுக்கு இடையில் சில நாட்கள் ஓரளவு ரம்யமாகவேகூட இருக்கும். இங்கிருக்கும் லட்சக் கணக்கான மக்கள் இதைக் கவனிகிறார்களோ இல்லையோ அவர்களது உடல் இதை கவனிக்கும்; அனுபவிக்கும். உடல் பொய் சொல்வதே இல்லை. வலிக்கும் போது வலி இல்லையே என்று அதனால் ஏமாற்ற முடியாது. தவிர உடல் எப்போதும் நிகழ் காலத்திலேயே இருக்கிறது. நேற்று வரை கண் தெரிந்தது இன்று மங்கலாக இருக்கிறது என்றால், நேற்று வரை காய்ச்சல் அடித்தது இன்று சுகமாகி விட்டது என்றால், விபத்தில் போன கை அல்லது கால் ஃபான்டம் வலியில் துடிக்கிறது என்றால் இப்பொது இருப்பதை மட்டும்தான் உடல் சொல்லும். (எழுபது வயது ஆகப் போகிற நண்பர் ஒருவர் செக்ஸையும் ஃபான்டம் உணர்ச்சி என்பார்.) உடலுக்கு உண்மையில் உண்டென்றால் உண்டு இல்லையென்றால் இல்லை. அவ்வளவுதான். ஆனால் உடல் பேசுவதை நாம் பெரும்பாலும் கேட்பதில்லை.

யோகம் என்றால் உடலும் மனமும் ஒன்றாவது என்கிறார்கள். உடம்பு உண்மையிலேயே, நிகழ்காலத்திலேயே இருக்கும் இப்பொதைய வாழ்வை மட்டுமே வாழ்கிறது. யோகம் உடலைப் போன்றே மனமும் ஆவதுதான் போலும். யோகக்காரர் என்பதை அதிருஷ்டசாலி என்ற பொருளில் பயன்படுத்துகிறோம். உண்மையுடன் இசைந்த மன, உடல் வாழ்க்கையை வாழ்பவர்கள் யோகக்காரர்கள். இல்லையா?

மனம், வாக்கு, செயல் மூன்றும் ஒன்றாய் இருப்பதைக் குறிக்கும் வார்த்தைதான் 'திரிகரண சுத்தி' என்றார் என் நண்பர். ஜே.க்ருஷ்ணமூர்த்தி 'when you say something, do it' என்று கூறிய கையோடு 'always say what you mean' என்று இதைத்தான் சொல்கிறார்.

'ஒரே நான் (self) தான் எல்லா உயிர்களிலும் (beings) நிலவுகிறது', 'இரண்டென்று எதுவும் இல்லை, எல்லாம் ஒன்றுதான்' என்ற ஸ்லோகங்களைக் கூறியவாறே அடுத்தவரை குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்வது. 'லவ் தை நெய்பர்' என்பதைப் பரப்ப உலகெங்கிலும் யுத்தம் செய்வது; 'சமாதான' மதத்திற்காக அப்பாவி உயிர்களை பலி கொள்வது. இவையெல்லாம் மனம், வாக்கு, காயங்கள் எவ்வளவு பின்னப் பட்டு இருக்கின்றன என்பதற்கு கண்ணெதிரில் இருக்கும் நிதரிசனங்கள்.

எல்லாம் வாக்குச் சுரைக்காய். எண்ணை வாழைக்காய் கறி என்பது எண்ணையே இல்லாமல் செய்யப் படுவதாம். தன் படங்களில்தான் இருப்பதே இல்லையே என்று தலைப்பிலாவது இருக்கட்டும் என்று 'உயிரே' என்று ஒரு படத்திற்கு பெரும் புகழ் பெற்ற இயக்குனர் பெயர் வைக்கவில்லையா?

****************
'பிரம்மத்தை உணர்ந்தவன் பிராமணன் என்கிறார்கள். பிரம்மத்தை உணர்ந்த பிறகு பிராமணனாவது, பிள்ளையாவது' - இளையராஜா.

*****************

No comments: