FUTURE IS NOW - J Krishnamurti.

பிறப்பு, இறப்பு என்பது உண்மையே இல்லை. அத்தகைய பொய்யான தோற்றத்தை நமது மனமே உருவாக்கிக் கொள்கிறது. மனம் தனக்கென்று ஒரு உடலை உருவாக்கிக் கொள்கிறது. அதைக் கனவு மழையில் நனைத்துத் துன்பப் படுத்துகிறது. - ரமண மகர்ஷி.

Search This Blog

Friday, January 21, 2011

A Buddha Statue seen in a Buddhist Temple in Singapore


Monday, January 17, 2011

நாஞ்சில் நாடன் - ஒரு கனிந்த தமிழ் இதயம்

வ.ஸ்ரீநிவாசன் : பிரசுரம் : சொல்வனம் : இதழ் 42 : 16-01-2011 

வாசிப்பின் சுகம் ஒருவரை தொடர்ந்து வாசிக்க வைக்கிறது. அதுதான் அடிப்படை. விமர்சனம் பண்ண வேண்டிய நிர்பந்தமும், போக்குகளைப் பற்றிய தகவல் சுமைகளும் அதிருஷ்டசாலி வாசகனை பீடித்து இந்த சுகத்தை வதம் செய்து விடுவதில்லை.
அதே போல் கலையானுபவம் கலைஞனுக்கும், ரசிகனுக்கும் இடையே ஆன பிரத்யேக உறவு.
சுகமும், பிரத்யேக உறவும், கலைஞனின், வாசகனின் குறிப்பாக வாழ்க்கையின் புரிதலை தெளிவாக்கி விரிவாக்குகின்றன.
கலைஞன் தான் காணும் ஒளியால் நிரம்பி வழிகையிலேயே தாஸ்தாயவ்ஸ்கியும், காஃப்காவும், பாரதியும், புதுமைப் பித்தனும் கிடைக்கிறார்கள். நாஞ்சில் நாடனும் அவ்வழியில் வந்தவர்தான்.
dsc_5439-1வெகுசனப் பத்ரிகைகளும்,‘இஸம்’ ‘இனம்’ சார்ந்த பத்ரிகைகளும் அதிகமாயுள்ள சூழலில் ஒரு வாசகன் சாதாரணமாகக் காண்பது வெற்றுச் சந்தடி, இலட்சிய கோஷம், பொழுது போக்கு நீர்மை, காழ்ப்பு. எழுதுபவர்களிலோ பலரும் எங்கோ எதிலோ தேங்கிப் போனவர்கள். இது வசை அல்ல. இத்தகைய சூழலில் ஊற்றுக் கண்களையும், வரத்து வாய்க்கால்களையும் மூடி விடாத, புண்ணிய நதியாகும் நோக்கமுமற்று நமது அன்றாட வாழ்வின் அங்கமான சாமான்ய ஆறாக நாஞ்சில் நாடன் ஓடுகிறார்.
சுமைகளும், பழைய குப்பைகளும், பாசியும் அற்ற இந்த ஆறு, தமிழர்களின், அதன் மூலம் மனிதர்களின் இயல்பை, முரண்பாடுகளை, பஞ்சமா பாதகங்களை அஞ்சாது செய்யக் கூடிய சாத்தியக் கூறுகளை, கருணையின் சாயையை, தூய்மையை, சர்வ சாதாரணமாக, ‘அனுபவங்களை முயற்சி செய்து பெற்ற செயற்கைத் தகவல்கள்’ இன்றி அனாயாசமாக, ஆனால் மிகப் பெரிய வேட்கையோடு காட்டிச் செல்கிறது.
இவரோடு எழுத வந்த பலர் தீவிரமாக இயங்குவதை நிறுத்தி பல காலம் ஆகி விட்டது. இவர் இன்னமும் தன் வாசகர் வட்டமும், அவர்கள் மேல் தன் தாக்கமும் அதிகரித்தபடி இயங்கிக் கொண்டிருக்கிறார். இதற்கு முக்கிய காரணம் இவர் எந்தக் கொட்டகையிலும், சாதனையிலும் ஓய்வெடுத்துக் கொள்ள நினைத்து உறங்கிப் போய் விடவில்லை. வாழ்வின் சவால்களும், சண்டைகளும், தாக்குதல்களும் பேனாவைப் பிடுங்கி எறியவும் இவர் விடவில்லை. கதவு, கூரை, சன்னல்கள் அற்ற இடத்தில் உயிர்ப்புடன் இருப்பதனாலேயே இவருக்கு இது சாத்தியமாகி இருக்கிறது.
இவர் பெரிதும் மதிக்கும் முன்னோடிகளில் ஒருவரான நகுலன் சொன்ன ‘When you hate some thing you cannot understand it’ என்கிற சொற்கள் இவர் வாழ்நாள் முழுவதும் துணை வரும் ஜீவ வாக்யங்களில் ஒன்றென்பதால் எதன் மீதும் துவேஷமற்று எதையும் புரிந்து கொள்ள இவரால் முடிகிறது. இலக்கியம் வாழ்க்கையின் புரிதலுக்கான ஒரு சாதனம் என்றாகையில் அந்த சாதனத்தின் சாதகர்களில் இதன் காரணமாகவே இவர் மிக முக்கியமானவராகிறர்.
நாஞ்சில் நாடன் அவர்களின் எழுத்தில் உடனே தென்படுபவை: வாழ்க்கையைப் பார்க்கும் பார்வையின் முன் முடிவுகள் அற்ற கூர்மை, கொள்கலனின் கொள்ளளவின் பிரம்மாண்டம், எங்கும் தங்காது எந்த முடிவுப் புதரிலும் சிக்காது இயங்கும் நேர்மை, அனாதைகள், அபலைகளின் மேல் (பிரச்சார, தன்னை ‘இன்னார்’ என்று வெளி உலகுக்கு பறைசாற்ற காட்டிக் கொள்கிற நீச புத்தி அற்ற) உண்மையாக உள்ள அக்கறை, சுவாரஸ்யம், பாதகம் செய்பவரைக் கண்டு அஞ்சாத எள்ளல், எல்லாவற்றுக்கும் மேல் வளமும், எளிமையும், குளிர்ச்சியும், செழுமையும் மிளிரும் தமிழ்.
காலங்கள் தோறும் இவர் கற்றுக் கொண்டேயிருந்திருக்கிறார். இன்னமும் கற்கிறார். ஒரு தமிழ்ப் பேராசிரியன் செய்ய வேண்டிய வேலையை தன் சொந்தப் பணத்தைச் செலவழித்து செய்து கொண்டேயிருக்கிறார். தமிழில் வெளிவரும் முக்கியமான புத்தகங்கள் அனைத்தையும் காசு கொடுத்து வாங்கிப் படிப்பவர். நான் கூட வேடிக்கையாகக் கேட்பேன். “பெண்டிங் விழுந்த அரியர்ஸ்ஸை எல்லாம் க்ளியர் பண்ணிட்டீங்களா” என்று. “இன்னும் மூன்று புத்தகங்கள் இருக்கு. இந்த வாரம் படிச்சுடுவேன்” என்பார்.
இதற்கிடையில் சங்கத் தமிழ், அகராதிகள், கம்பன், ஆழ்வார்கள், தேவாரம், ஔவை, என்று கலந்து பழக இவருக்கு எப்படி நேரம் இருக்கிறது என்பது இவர் இலக்கிய தாகம் எத்தகையது என்பதற்கு சான்று.
இவ்வளவு படித்தும் அறிவின் சுமை இவரிடம் இல்லை. அதனால் வாசகனுக்கு அயற்சியும் இல்லை. இவர் தனிப் பேச்சில் கூட யாருக்கும் வகுப்பு எடுப்பதோ உபதேசம் செய்வதோ இல்லை. ஆறு நாவல்கள், 110 சிறுகதைகள், ஏராளமான கட்டுரைகள், இரண்டு கவிதைத் தொகுதிகள், எண்ணற்ற பேட்டிகள், முன்னுரைகள், மதிப்புரைகள் எழுதியுள்ள இவரிடம் ஒரு புது எழுத்தாளர் சுலபமாகத் தன் கருத்துகளைக் கூற முடியும். சில சமயம் அவர்கள் மட்டுமே கூட பேசி, இவர் கேட்டுக் கொண்டிருப்பதும் உண்டு.
அதே போல் இவரை முகஸ்துதியாக யாரும் புகழவும் முடியாது. ‘அந்தக் கதை ப்ரமாதம், எனக்கு ரொம்பப் பிடித்தது’ என்று யாராவது ஆரம்பிக்கையில், பேச்சை வேறெங்கோ மாற்றி எடுத்துச் சென்று விடுவார். அதே சமயம் அவர் கதைகளை ஆழமாக விவாதிக்கும் நல்வாய்ப்பும் என் போன்ற சிலருக்குக் கிடைத்திருக்கிறது.
அனைவருக்கும் நண்பர். எல்லா கூடாரங்களிலும் இவருக்கு நண்பர்கள் உண்டு. எனினும் தன் கருத்துகளைக் கூற அஞ்சாதவர். இவரது துவேஷமற்ற போக்கும் நேர்மையுமே இவர் பெயரை எவர் ஜாபிதாவிலும் இடம் பெற வைத்து விடுகிறது.
தன் மனதைப் புண் படுத்தியவர்களிடம் கூட இவர் சாதாரணமாக பகைமை பாராட்டுவதில்லை. ‘அவன் இப்பிடி செஞ்சுட்டான். இனி அவனுக்கு நான் எதையும் அனுப்பப் போறதில்லை’ என்று சொல்லிக் கொண்டிருக்கையிலேயே அந்த நபர் ஃபோனில் வந்தால், ‘என்ன. . . . நல்லாருக்கீங்களா’ என்று ஆத்மார்த்தமாகக் கேட்பார்.
nanjil3
அறிவு, சாமர்த்தியமாக மாறாத எல்லையில் இருப்பவர். எதிர் கருத்துகளைக் கூறுபவர்களிடமும் பொறுமையாக இருக்கும் பக்குவம் பெற்றவர். குடும்பம், நண்பர்கள் என பேச, அன்பு செலுத்த 24 மணி நேரமும் இவருக்கு ஆட்கள் இருந்து கொண்டே இருக்கிறார்கள். ஆயினும் வாழ்வில் காட்டும் அன்பெனும் அமுதைப் போன்றே ஆலகாலத்தையும் எழுத்தில் மட்டும் கொண்டு வருகிறார் நிதர்சன வாழ்வில் அது எங்கும் நிறைந்திருப்பதை உணர்ந்தவர் என்பதால்.
புற உலகு, அக உலகு என்று இரண்டு இருப்பது போல் தோன்றுகிறது. அதே போல் மூளை, இதயம் என்கிற இரண்டு இயக்கங்களும் மனதில் இயங்குகிற மாதிரி தோன்றுகிறது. Subjectivity - objectivity, இடது மூளை - வலது மூளை, கலை - அறிவியல் என்றெல்லாம் இவை பிளவு பட்டு நிற்பது போன்ற தோற்றங்களும் உள்ளன. இவ்விரட்டைகளை புராண அன்னத்தைப் போல் பால், நீர் என்று பிரிப்பது என்பது எல்லாக் காலங்களிலும் இயலாது.
புற உலக நிகழ்வுகளை இதயம் கொண்டு ‘சப்ஜெக்டிவ்’ வாக எழுதுவதோ, அக உலக இயக்கங்களை ‘அப்ஜெக்டிவ்’ வாக எழுதுவதோ உலக இலக்கியங்களில் அரிதில்லை. எல்லாவித ‘பர்முடேஷன் காம்பினேஷன்’களிலும் இதைப் பார்க்கலாம்.
புதுமைப் பித்தனும், மௌனியும் வேறு மாதிரி என்று தெரிந்தாலும் இருவரும் மிகுந்த தெளிவுடன் சிலவற்றை ‘இன்டலெக்ட்’ டை உபயோகித்து எழுதியவர்களே! சிலகதைகளில் வேண்டுமென்றாவது ஈரம் கொஞ்சம் கம்மியாக இருப்பதைப் படிக்கும் போதே உணரலாம்.
‘இதயம், இதயம்’ என்ற தம்பட்ட எழுத்துகளுக்குப் பஞ்சம் இல்லை. இதய நிகழ்வுகளை இதயம் மூலம் கனிவோடு அணுகியவர் தி.ஜானகிராமன். இவர் போன்றே புறப்பட்ட நகலெழுத்துகளினூடே ஆயாசமடைய வைக்கும் அபரிமித நெகிழ்ச்சிகளும் பல உண்டு.
பெருங்கலை என்பது இதயமும் மூளையும் வலது இடது பேதமின்றி ‘சப்ஜெக்டிவ்’ விஷயங்களைப் பற்றிக் கூட ‘அப்ஜெக்டிவ்’ வாக எழுதும் போது நேர்கிறது. கலைஞன் வாழ்வின் தரிசனத்தில் லயித்து கரைந்த பின்னரே வெளிவந்து தன் அறிவால் மொழியால் அதை நம்மிடம் தொடர்பு கொண்டு கூறுகிறான். இந்த சரிவிகிதக் கலப்பில் இதயம் உணர்வதை மூளை சரியாக சொல்கையில் பெருங்கலை தோன்றி விடுகிறது.
போர்ஹே சற்று தூக்கலான இன்டலெக்டின் வெளிப்பாடு என்றால் காஃப்கா சரியான இதய மூளை கலப்பாக, அதாவது முழுமையான பார்வை, கூர்மை, வெளிப்பாடு சேர்ந்து ‘கலை’ செய்தவராகவும் தெரிகிறார். தாஸ்தாயவ்ஸ்கியும், டால்ஸ்டாயும் அப்படியே. லாவ்ட்சு சொல்லும் “clear heads and calm minds’. இவர்கள் மிகக் களேபரத்தில் இருக்கும் வாழ்க்கையையும் அப்படியே எழுத்தினால் ‘காம் மைண்ட்’டுடன், அதாவது திரிக்காத மனதினால் வாசகனுக்குக் கடத்துபவர்கள்.
புற உலகு பற்றிய இதயத்தின் வெளிப்பாடாக பழந்தமிழ் இலக்கியம் பெரும்பாலும் இருக்கிறது. மன நெகிழ்வின் உச்சமாக அதன் பின் வந்த காவியங்களும், பக்தியும். இவை அனைத்திலும் ஊறியது நாஞ்சில் நாடனின் மனம். புற உலக வாழ்க்கையை வறட்டு, தத்துவ, கோட்பாடு, தர்க்க நோக்கின்றி இதயத்தால் பார்த்துணர்ந்து எழுதியவை இவர் எழுத்துகள்.
இதயத்தில் ‘காலம் மீறி இருந்து சொதசொதத்துப் போகாமல்’ எழுதுவதே இவர் கலை வெளிப்பாடு. அதற்கு கறாரான தர்க்கத்தின் மீதமைந்த கணிதத்தில் முதுகலைப் பட்டப் படிப்பு பெற்றவர் என்பதும் ஒரு முக்கிய காரணமாயிருக்கலாம். இன்னொரு முக்கிய காரணம் பழந்தமிழ், பக்தித் தமிழ், காவியத்தமிழ் மட்டுமின்றி பாரதி துவங்கி, இன்று எழுதும் எவ்வித பின்புலமோ, பிரபலமோ அற்றவரின் எழுத்துகள் வரை அயராது ஆர்வத்துடன் படிப்பது. மேலும் உலக இலக்கியங்களோடான பரிச்சயம்.
மற்றொன்று இவரது தாட்சண்யம். ஈழத் தமிழருக்காக, ஒரு பைசா பிரதியுபகாரமாகப் பெறாமல், உண்மையிலேயே துக்கமுற்றுத் துடித்தவர். முற்றிலும் எதிரிடையான கருத்துகளைச் சொல்பவரிடத்தும் முகம் சுளிக்காது கேட்பவர். தன் அபிப்பிராயங்களைக் கட்டித் தொங்காமல் இருப்பது மனிதரிடையே மிக அரிதாக காணப் படும் அருங்குணம். அதுவும் இவருக்கு சாத்தியமாகி இருக்கிறது.
கலை, நீதியுனர்வோடு இரண்டறக் கலந்தது. ‘வெள்ளாளர் வாழ்க்கை’யில் ‘காலம் நிகழ்த்திய மாற்றங்களை’ நூலாக எழுதிய இவரை தற்கால தமிழ் வழக்கப் படி ‘வெள்ளாளர் அடைப்புக் குறிகளு’க்குள் அடைக்க முடியாது. இவரது எழுத்துகளைப் படித்தவருக்கு இது தெரியும். லௌகீக வாழ்விலும் வெள்ளாளர்கள் அவர்கள் இனத்து அமைச்சருக்கும் சேர்த்து இவரை கௌரவிக்க அழைத்தபோது அந்த விழாவையே ‘வர முடியாது’ என்று தவிர்த்தவர்.
வெள்ளாளர், தமிழர் என்றில்லாமல் மனிதருக்குப் பொதுவான மனம் இவரது எழுதும் மனம். அதனால்தான் வட இந்தியாவிலிருந்து “காஞ்ச ரொட்டியைத் தின்னுக்கிட்டு ஊருலே கெடக்காம , ஊரை நாறடிக்க வந்திருப்பதாக” வசைபாடப்படும் க்ஷெத்ராடனம் வரும் வட இந்திய ஏழை யாத்ரீகர்களுக்காக “மேற்கில் மேலாங்கோடும், கிழக்கில் முப்பந்தலும் தாண்டியிராத, தெற்கே கன்யாகுமரி கடலையும், வடக்கே காளிகேசம் மலைகளையும் தாண்டவே முடியாத” வெற்றுக் காழ்ப்பினருக்கு எதிராக எழுத முடிகிறது.
கலை உள்ளம் என்பது எப்போதுமே ‘anti-establishment’ டாகத்தான் இருக்கும். வெற்றி தோல்விகளிலோ, சாச்வதத்தைப் பற்றியோ அதற்குக் கவலை இல்லை. இது ஒரு மாற்றமுடியாத சூத்திரம். அவ்வுள்ளம் எழுதவோ, பிற கலைகளில் ஈடுபடவோ கூட வேண்டாம். மகாத்மா காந்தியிடமும், ராஜாஜியிடமும், பாரதியிடமும், ஜெயகாந்தனிடமும், ஜெயமோகனிடமும் இன்ன பிறரிடமும் நாம் இதைத்தான் கண்டோம்; காண்கிறோம். (அவ்வுள்ளம் சகட வாழ்க்கையினால் சின்னாப் பின்னமாக்கப் பட்டோ, சாமர்த்தியத்தாலோ எஸ்டாப்ளிஷ்மென்டுக்கு இணக்கமாகப் போனால் அதில் கலை செத்து விடும் என்பதும் கண்கூடு) அந்நியர் ஆட்சிக்கு இணங்கிப் போவதே அனுகூலம் என்ற கால கட்டத்தில் அதை எதிர்ப்பது, நாத்திகப் போர்வையில் துவேஷம் வளர்ப்பதில் உள்ள அநீதியை முழுமூச்சாக எதிர்ப்பது, அரசு கையில் இருப்பதால், அரசியல் கூட்டம் பின்னால் இருப்பதால் எல்லா புகழும் எனக்கே என்பவரின் பொய்யை எதிர்ப்பது எல்லாமே ‘anti-establishment’ உணர்வுகள்தான். தராசு அநியாயமாக தாழ்கையில் எதிர்த்தட்டில் அமர்ந்து சரி செய்பவன் கலைஞன். அதைத் தொடர்ந்து செய்து வருபவர் நாஞ்சில் நாடன்.
உயர்கலையும் இலக்கியமும் ஒரு மொழியைச் சேர்ந்ததாய் இருந்தாலும், ஒரு பிரதேசத்தில் உருவானாலும் அவை உலகளாவியவை. உயிர்கள் அனைத்தையும் தழுவியவை. அதனால்தான் நாஞ்சில் நாடன் கதைகளில், இரையுண்டதாலோ கர்ப்பிணியாயிருப்பதாலோ நிறைந்த வயிறோடு சாலையைக் கடந்து செல்லும் பாம்புக்காக வண்டியை நிறுத்திய பேருந்து ஓட்டுநர் “போ மோளே பெட்டென்னு’ என்று கனிவு கசிய கூறி காக்கிறார். எங்கிருந்தோ வரும் பாபுராவும், யுகங்களாய்த் தொடரும் மனித குலத்தின் பசியின் வடிவமாய் நாத்ரேயும் சந்திக்கும் அந்த திரிவேணி சங்கமத்தில் கண்ணுக்குத் தெரியாமல் அனைத்துக்கும் ஆதாரமாக ‘தயை’ சரஸ்வதியாக ஓடுகிறது. அதனால்தான் ‘யாம் உண்பேம்’ என்பது தகப்பன் சாமியின் உபதேசம் போல், மிச்ச வாழ்க்கைக்குமான மந்திரம் போல் பாபுராவின் காதில் ஒலிக்கிறது. நம் காதிலும்.

Tuesday, January 4, 2011

முன்னோடிகளும், பின்வந்தவர்களும், ஈயடிச்சான்களும்

முன்னோடிகளும், பின்வந்தவர்களும், ஈயடிச்சான்களும்

வ.ஸ்ரீநிவாசன் | பிரசுரம் : சொல்வனம் : இதழ் 41 | 01-01-2011 
anjaana-anjaani-copied
ஜார்ஜ் லூயி போர்ஹே ‘காஃப்காவின் முன்னோடிகள்’ என்று எழுதியுள்ள கட்டுரையில் “உண்மை என்னவென்றால் ஒவ்வொரு எழுத்தாளனும் அவன் முன்னோடிகளை சிருஷ்டித்துக் கொள்கிறான்.” என்கிறார். சுந்தர ராமசாமியும், ஜி.நாகராஜனும் புதுமைப் பித்தனையும், நாஞ்சில் நாடன் தி.ஜானகிராமனையும் உருவாக்கிக் கொண்டதை புரிந்து கொள்ள முடிகிறது. அவர்கள் அந்த முன்னோடிகளின் பின்வந்தவர்கள் மட்டுமோ, ஒரே ஒரு முன்னோடியை மட்டுமே கொண்டவர்கள் என்பதோ, முன்னோடிகளைத் தாண்டிச் செல்லதவர்கள் என்பதோ இல்லை. இவர்களது படைப்புத் திறனையோ, தரத்தையோ சுருக்குவதும் இல்லை. இது உள்ளே சென்றது உள்ளின் இருப்புக்கு எற்றவாறு உருமாறி வெளியே வருவது. மேலும் இதுவும் ஒரு அசல்தான். அடிப்படையான உண்மை மட்டுமே ஒன்று. வேறு வேறு வெளிப்பாடுகள்.
கலையுலகில், இலக்கியத்தில், சினிமாவில் இது காலங்காலமாக இருந்து வருவதுதான். ஆதிகவியிலிருந்து கம்பர், துளசிதாசர் என்று எத்தனை பேர் எழுதியுள்ள ‘ஒரிஜினல்’ இராமாயணங்கள். தாஸ்தாயவ்ஸ்கி கோகோலைப் பற்றிச் சொல்லும்போது, “ரஷ்ய எழுத்தாளர்களான நாம் அனைவரும் கோகோலின் ‘ஒவர்கோட்’டுக்குள்ளிருந்து வந்தவர்கள்” என்கிறார். ஜெயகாந்தன் இதைப் ‘பாரதி யுகம், நாமனைவரும் அவனிடமிருந்து வந்தவர்கள்’ என்கிறார்.
துப்பறியும்கதைகளின் தந்தை எட்கார் அல்லன் போ வின் கதைகளில் வரும் சார்லஸ் ஆகஸ்ட் ட்யூபின் (Charles Auguste Dupin) பற்றி சொல்லும் போர்ஹே இவரே இலக்கிய உலகின் முதல் துப்பறிவாளர் என்கிறார். இவர் வரும் கதைகளை ட்யூபினின் நண்பரே சொல்வதாக போ எழுதியிருக்கிறார். கானன் டாயலின் (Conan Doyle) ஷெர்லக் ஹோம்ஸின் மூளை சாகசங்களைச் சொல்வது அவர் நண்பர் டாக்டர். வாட்சன்தான். அகதா க்றிஸ்டியின் ஹெர்க்யூல் பைரோ (Hercule Poirot) வின் சாகசங்களைச் சொல்வது அவரது நண்பர் கர்னல் ஹேஸ்டிங்ஸ். நமது சத்யஜித் ராயின் ப்ரதோஷ் சி. மிட்டரின் (ஃபெலுதா) சாகசங்களைச் சொல்வது அவரது கஸின் தாபேஷ்தான்.
இவையெல்லாம் முன்னோடிகளை உருவாக்கிக்கொள்வது. இன்னுமொன்று இருக்கிறது. அது ‘கான்ஷியஸ்’ஸாக ஒன்றைப்போலவே, தன் பங்களிப்பு எதுவும் இல்லாமல், செய்வது. இதை ‘இன்ஸ்பைரேஷன்’ ‘ஹெவிலி இன்ஸ்பையர்ட்’ ‘ஈயடிச்சான் காப்பி’ என்று பலவாறு அவற்றின் நகல்தன்மைக்கு ஏற்ப சொல்கிறோம்.
சில வருடங்களுக்கு முன் ‘மிஷ்கின்’ (தாஸ்தாயவ்ஸ்கியின் இடியட்) என்கிற பெயரில் மயங்கி அவர் இயக்கிய ‘சித்திரம் பேசுதடி’ பார்த்தேன்; மகிழ்ந்தேன். தொடர்ந்து ‘அஞ்சாதே. பெரும் ஏமாற்றம். இப்போது ‘நந்தலாலா’ வந்திருக்கிறது. பார்க்க வேண்டும் என்றதும் ‘kikujiro’ பற்றி தெரியவந்தது. இப்போது ‘சித்திரம் பேசுதடி’ பற்றியே கவலை வந்து விட்டது. ‘Kikujiro’ வுக்கு நன்றி சொல்லியிருந்தால் பரவாயில்லை. என்ன செய்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை. படம் பார்க்கும் ஆர்வம் போய்விட்டது.
‘மன்மதன் அம்பு’ கதையைக் கேள்விப்பட்டதும் சடாரென்று ‘டோபோல்’ நடித்த ‘ஃபாலோ மீ’ நினைவுக்கு வருகிறது. படத்தைப் பார்த்தால்தான் தெரியும்.
தாதா மிராஸி, அனந்து, பாலசந்தர் காலங்களை விட இப்போது உலக சினிமா சுலபமாக அனைவருக்கும் கிடைக்கிறது. திரையுலகில் உள்ள பலரும் இவற்றில் ஆர்வம் கொண்டு இருக்கிறார்கள். அதனால் இத்தகைய நகலாக்கங்கள் உடனடியாக வெளிச்சத்துக்கு வந்து விடுகின்றன. பெரிய ஜனரஞ்சக வியாபரப் படங்களிலிருந்து, கலைப் படங்கள் சாயம் பூசி வெளிவருபவை வரை இது நடக்கிறது.
“இது மாதிரி ‘காப்பி’ அடிப்பதில் என்ன தவறு? ஒரு நல்ல படத்தை ஒழுங்காக தமிழில் தருவதால் பிற மொழி தெரியாதவர்கள் அதைப் பார்த்து அனுபவிக்கலாம் அல்லவா?’ என்று ஒரு கருத்து இருக்கிறது. மேலும் பொதுஜனங்கள் இதைப் பற்றியெல்லாம் கவலைப்படுவது இல்லை. “என்னம்மா எடுத்திருக்கான்யா?” என்று வியந்து புகழ்ந்து தள்ளிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
பாரதியின் எழுத்துகளின் அத்தனை உரிமையும், அவை துணை நிற்கும் ஆத்ம சுத்திகரிப்பும், அவையீட்டும் உணர்வு அபிமானங்களும் அவருக்கன்றி அவர் எழுதிய பத்ரிகைக காகிதங்களையே சாரும்; கம்பனின் கவி மேதைமை மீதான காதல் அவர் கை ஓலைச் சுவடிகளுக்கே என்பது போல் இது இருக்கிறது. இத்தகைய சூத்திரத்தை ஆமோதித்து, பிறரது உழைப்பை, அறிவை, தொழிலை வெட்கமின்றி அபகரித்துப் பணம் பண்ணுபவர்கள் ‘திருட்டு விசிடி (டிவிடி) பற்றி குய்யோ முறையோ என்று அலறுவதுதான் விந்தை. அத்தகு திருட்டு விசிடிக்களைச் செய்பவர்களுக்கும் இவர்களுக்கும் என்ன பெரிய வித்யாசம்?
கண்டுபிடிக்கப்படாவிடில், குற்றாஞ்சாட்டப்படாவிடில், அகப்பட்டுக்கொள்ளாவிடில், ஆள் தெரிந்திருக்காவிடில், என்பன போன்ற பல ‘விடில்’களுக்கு அப்பால் சுகமாக கொலுவீற்றிருக்கும் இந்த ‘கலைஞர்கள்’ அல்லது சினிமா வியாபாரிகள் இது போன்ற தூய ‘மாரல்’ சம்பந்தமான மனக் கிலேசங்களால் துன்புறுவதும் இல்லை. ‘ஐயோ’ என்று போவதும் இல்லை. சொல்லப் போனால் அவர்கள் செல்வமும், செல்வாக்கும் 1.76 லட்சம் மடங்கு அதிகரித்துத்தானிருக்கிறது. இதில் வியாபாரிகள் என்று சொல்லிக் கொள்பவர்கள் தேவலாம். ஆனால் கலைஞர்கள் என்று போற்றப்படுபவர்கள்தான்…
‘The secret to creativity is knowing how to hide your sources’ என்று ஐன்ஸ்டீன் சொன்னது போல் இன்னும் நம் கண்ணில் அகப்படாத ‘மேதைகள்’ எத்தனை பேரோ.
காப்பிப் பூனைகளைவிட, சுயமாக படம் எடுப்பவர்கள்தான் மேல் என்கிற சிந்தனையும் சினிமாவை, கலைகளை சீரியஸாக எடுத்துக் கொள்பவர்கள் மத்தியில் இருக்கிறது. சுயமாக எடுப்பவர்கள் வணிகத் தோல்விகளால் அழிக்கப் பட்டாலும் கம்பீரமானவர்கள், சுய மரியாதை உள்ளவர்கள். சுய மரியாதை என்பது ‘பொய் சொல்லாமல், ஊழல் செய்யாமல், பிறரெவரையும் அவமரியாதை செய்யாமல் இருப்பதுதானே?
tie-me-up-tie-me-down
கீழேயுள்ள தமிழ்ப் படங்களையும் வேற்று மொழிப் படங்களையும் ‘மேட்ச்’ செய்யுங்கள் பார்க்கலாம். - விடை கடைசியில்.
தமிழ்ப்படம்பிறமொழிப்படம்
புதிய பறவைசேஸ் எ க்ரூக்கட் ஷாடோ
தாமரை நெஞ்சம்ஸ்லெண்டர் த்ரெட்ஸ்
நாணல்டெஸ்பரேட் ஹவர்ஸ்
அழியாத கோலங்கள்சம்மர் ஆஃப் ஃபார்ட்டி டூ
ரெட்டைவால் குருவிமிக்கி அண்ட் மாட்
கஜினிமொமென்டோ
மூன்றாம்பிறைரோமன் ஹாலிடே
எனக்குள் ஒருவன்ரீ-இன்காரனேஷன் ஆஃப் பீடர் ப்ரௌட்.
மகளிர் மட்டும்நைன் டு ஃபைவ்
ட்வெல்வ் பிஸ்லைடிங் டோர்ஸ்
சாந்தி நிலையம்சவுண்ட் ஆஃப் ம்யூசிக்
ஔவை சண்முகிமிஸர்ஸ் டௌட் ஃபையர் + டூட்ஸி
ஜுலீ கணபதிமிஸரி
பச்சைக்கிளி முத்துச்சரம்டிரெயில்ட்
நாயகன்காட் ஃபாதர்
ராஜி என் கண்மணிசிடி லைட்ஸ்
ரங்கோன் ராதாகேஸ் லைட்
நாடோடி மன்னன்ப்ரிஸனர் ஆஃப் ஜெண்டா
நல்ல தம்பிமிஸ்டர் டீட்ஸ் கோஸ் டு டௌன்.
சொர்க்க வாசல்க்வீன் க்றிஸ்டினா.
மே மாதம்ரோமன் ஹாலிடே
குணாடை மீ அப் - டை மீ டெளன்
யோகிTSOTSI
விடை :- ‘மேட்ச்’ செய்ய என்னை இருக்கிறது?  இடது புறமுள்ள தமிழ்ப்படங்கள் வலதுபுறப் படங்களை தகுந்த அனுமதியுடனோ,  அல்லது அனுமதி இன்றியோ, தழுவி, அல்லது இறுகத் தழுவி எடுக்கப்பட்டவை என்று சொல்லப்படுகின்றன.