FUTURE IS NOW - J Krishnamurti.

பிறப்பு, இறப்பு என்பது உண்மையே இல்லை. அத்தகைய பொய்யான தோற்றத்தை நமது மனமே உருவாக்கிக் கொள்கிறது. மனம் தனக்கென்று ஒரு உடலை உருவாக்கிக் கொள்கிறது. அதைக் கனவு மழையில் நனைத்துத் துன்பப் படுத்துகிறது. - ரமண மகர்ஷி.

Search This Blog

Showing posts with label சிறிது சினிமா. Show all posts
Showing posts with label சிறிது சினிமா. Show all posts

Friday, September 4, 2015

உத்தம வில்லனும், கமலஹாசனும்

உத்தம வில்லனும், கமலஹாசனும்

 | சொல்வனம் இதழ் 128 | 13-05-2015|
Uttama-Villain-Official-Trailer-kamal-haasan-1
திரைப்படம் எடுப்பதும் ஒரு வித்தை. இத்தனை வருடங்களாக இதில் இருக்கிறேன் என்பதாலோ, இத்தனை படங்கள் எடுத்திருக்கிறேன் / நடித்திருக்கிறேன் என்பதாலோ அது கை வந்து விடாது.
சீதா தமிழில் சீதையாவதைப் போல் வித்யா, வித்யையாகி உச்சரிப்பில், பழக்கத்தில் வித்தையாகிறது.  வித்யா என்றால் கல்வி, கற்றல். கல்விக் கடவுள் ‘கலை’மகள். ஆனால் ‘வித்தை’ என்னும் தமிழ்ச் சொல் பல பொருட்களிலும் வருகிறது. செப்பிடு வித்தை, கண்கட்டு வித்தை. ‘வித்தை காட்டுவது’.  சினிமாவைக் கூட இப்படிச் சொல்லலாம்.  கண்கட்டு வித்தையால் வசனகர்த்தாக்களையும், நடிகர்களையும் முதலமைச்சர்களாக்க முடியும். தமிழில் வித்தை என்பதற்கு அதன் சம்ஸ்க்ருத பொருளையும் தாண்டி, திறன், தந்திரம், ஜாலம் என்றெல்லாம் அர்த்தங்கள் உண்டு.
கற்க வேண்டிய வித்தைகளிலேயே தலையாயது எது? சகல ஜீவராசிகளாலும் வேண்டப்படும் வித்தை எது?
‘சாகா வித்தை.’ இந்தப் படம் அதைப் பற்றியது.
இந்தப் படம் சாவைப் பற்றியது. இது சாவை ஆராய்கிறது; கூர்ந்து நோக்குகிறது. வாழ்வின், சாவின் மையப் புள்ளியை நோக்கி உட்புக முனைகிறது.
னோரஞ்சன் என்னும், வயதாகிக் கொண்டிருக்கும், சினிமா சூப்பர் ஸ்டார் சற்று நாட்களில் இறக்கப் போகிறோம் என்று திடீரென்று அறிந்ததும் எஞ்சியுள்ள சின்னாட்களை என்ன செய்கிறார் என்பதுதான் படம். தொழில் ரீதியாக வெகு நாட்களாகப் பிரிந்திருக்கும் தன் குருநாதரோடு சேர்ந்து ஒரு படம்பண்ணுகிறார். அதைப் பார்த்து விட்டு வரும் ரசிகர்கள் சிரித்துக் கொண்டே வர வேண்டும் என்று அதைக் ‘காமெடிப் படமா’கச் செய்கிறார். சில நூற்றாண்டுகளுக்கு முற்பட்ட காலகட்டப் படம்.  “உத்தம வில்லன்”. அந்தப் படத்தின் நாயகன், உத்தமன். அவனும் ஒரு நடிகன்,  கூத்துக் கலைஞன். சந்தர்ப்பவசத்தால் சாகா வரம் பெற்றவன் என்று நம்பப் படுபவன்.
நாம் பார்க்கும் படமும், அந்தப் படத்தில் எடுக்கப்பட்டுக் கொண்டே காட்டப்படும் படமும் என்று இரண்டு படங்கள். இரண்டும் சாவு பற்றி ஆராயும், ஊடுருவிப்பார்க்கும் அது உண்மையில் என்ன என்பதை அறியப் பயணிக்கும் படங்கள். ஒன்று, மனோரஞ்சனின் நிஜமான துக்கமும், தீவிரமும் நிரம்பிய கண்ணெதிர் வாழ்க்கை. இன்னொன்று ஃபான்டஸியான, ஒரு ஃபேரி டேல் போல் இருக்கும் சந்தோஷமான எப்போதும் முடிவிலே இன்பம் என்னும் சுப முடிவு திரைப்பட வாழ்க்கை.
மனோரஞ்சன் வாழ்க்கை தலைவலியாய் இருக்கிறது. அந்தத் தலைவலிதான் சாவின் அழைப்பு மணி. சாவது நிச்சயம். அவனுக்கு அதிருஷ்ட வசமாக வாழ்வின் உயர்வு தாழ்வுகளை, பாவ புண்ணியங்களை, உத்தம, வில்லதனச் செயல்களை சரி செய்ய, ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. அதை அவன் செய்கிறான். பிரிந்த குருவோடு ஒரு படம் செய்வதிலிருந்து, மறைந்த காதலிக்குப் பிறந்த தன் குழந்தையோடு இணைவதிலிருந்து, இருக்கும் மனைவியை அணைப்பதிலிருந்து, இளம் காதலியை ஏற்பதிலிருந்து, மகனோடு இணக்கமாவதிலிருந்து, மாமனாரோடு சகஜமாவதிலிருந்து எல்லாமும் செய்கிறான்.
மிழில்  பல்வேறு வகையான படங்கள் வந்துள்ளன. அவற்றில் ஆன்மீகப் போராட்டம் (Spiritual struggle) பற்றிய, அக மாசை அகற்றுவது பற்றிய படங்கள் மிக மிகக் கம்மி. ‘தேவதாஸ்’ சஞ்சலப் பேய் வசப்பட்டு காதலி(பார்வதி)யைப் பறிகொடுத்த ஒருவனின் மீட்சிக்கான தொல்வியுறும் முயற்சி பற்றியது; ‘யாருக்காக அழுதான்’ குற்றம் செய்யாதவன், செய்தவனுக்காகவும் சிந்தும் கண்ணீர் பற்றியது; ‘என்னதான் முடிவு’ குற்றவாளி, வாழ்க்கையின் மூலம் அடையும் தண்டனை மற்றும் பரிகாரம் பற்றியது; ‘பூவே பூச்சூடவா’ கல் மனதையும், அது கக்கும் விஷத்தையும் கரைக்கும் அன்பு பற்றியது. அவ்வரிசையில் ‘உத்தம வில்லன்’, எல்லொருக்குமே, அவர்கள் இப்போது இருக்கும் காட்சியின் அடுத்த காட்சியாக தோளுக்குப் பின்னால் மறைந்து நிற்கும், ஒரு முறை உண்மையாகவே முன்னால் வந்துவிடும் புலி போன்ற மரணம் மற்றும் அதன் வெகு அருகாமை நேரடிப் பார்வையில் ஒருவன் செய்யும் பாவ நிவிர்த்தி பற்றியது.
சாவு பற்றி ஜனரஞ்சக சினிமாக்களில் முன்பும் படங்கள் வந்திருக்கிறன. மேலோட்டமாக, சாவை ரொமான்டிக்காக அணுகும் நீர்க்குமிழி, நீலவானம், ஹ்ருஷிகேஷ் முகர்ஜியின் ஆனந்த் போன்ற படங்கள்;
“Often  by a queer process of reasoning, movement was equated with action and action with melodrama” என்பார் சத்யஜித் ராய் (Our films their films) அதை நிரூபணமாக்கும் கண்ணீர் பம்ப் காட்சிகள் கொண்ட யதார்த்தத்துடன் அறவே சம்பந்தமில்லாத  கணக்கிலடங்கா மெலோ டிராமாக்கள் வெளிவந்து அவற்றில் பல மாபெரும் வெற்றியும் பலரின் மனதில் நீங்காத இடமும் பெற்றுள்ளன.
உலக அளவில் குரோசாவாவின் ‘இகிரு’ , பெர்க்மனின் ‘செவன்த் ஸீல்’ முதலியவை சாவின் சில நிஜப் பரிமாணங்களைக் காட்டியவை. செவெந்த் ஸீலில் சாவும், மன்னனும் சதுரங்கம் ஆடும் காட்சிகள் மிகப் பிரபலமானவை. இகிரு வில் இன்னும் சில நாட்களில் சாக இருக்கும் ஒரு மாநகராட்சி அதிகாரி தன் வாழ்வை பொருளுள்ளதாக, முழுமையாக்க செய்யும் செய்லகளைக் காட்டும் அற்புதமான படம்.
முதலில் குறிப்பிட்ட ரொமான்டிக் மற்றும் டியர் ஜெர்கர்ஸ் ஆன நடுவாந்திரப் படங்கள் போலல்லாது, ஒரு புதிய அணுகு முறையில் உத்தம வில்லன் எடுக்கப் பட்டுள்ளது, அதன் பல குறை நிறைகளுடன்.
‘ராஜ பார்வை’ கமல்ஹாசனை நிமிர்ந்து பார்க்க வைத்தது. அதில் சில காட்சிகள் வழக்கமான தமிழ் சினிமாவுக்கு முற்றிலும் மாறாக இருந்தன; இன்னமும் நினைவில் இருக்கின்றன.
சிறுவன் மேலே பார் (Bar) கம்பியில் தொங்கிக் கொண்டிருக்கும் போது அதில் விளையாட ஏற்றிவிட்ட தகப்பனார் மாரடைப்பு வந்து சாவார். அந்தச் சிறுவன் கை நழுவி அடியற்ற பள்ளத்துக்குள் கீழே விழுந்து கொண்டே இருப்பான்.
‘அந்தி மழை’ப் பாடலைக் காட்சிப் படுத்திய விதம், ‘ரிடிக்யுலஸ்’,என்று சொல்லிக் கொண்டே எப்போதும் எரிச்சலில் இருக்கும் மாதவியின் தந்தை, சித்தியின் கூச்சமுற வைக்கும் பொய்ப்பாசம், அற்புதமான தாத்தா-பேத்தி உறவு – இவை போல், வேறு எந்த கமலஹாசன் படத்திலும் பாசாங்கு இல்லாத, திணிக்கப்படாத, செல்ஃப் கான்ஷியசாக இல்லாத, இயல்பாகவே எழுந்த காட்சிகள் எனக்குக் கிடைத்ததில்லை.
07slide3
முக்கியமாகப் பலரும் போற்றும் ‘நாயகன்’ என்னும் ஆழமேயில்லாத பாசாங்குப் படம், அதை விட நல்லதே என்றாலும் திசை தெரியாத, வன்முறையைப் பெரிதும் நம்பி எடுக்கப்பட்ட, மிகச் சிறந்த கடவுள் எதிர்ப்புப் படமாக வந்திருக்க வேண்டிய ‘மகாநதி’.
‘குருதிப் புனல்’ மற்றும் ‘உன்னைப் போல் ஒருவன்’ இரண்டும் ஹிந்திப் படங்களின் தமிழ் ஆக்கங்கள். ‘த்ரோகாலி’ல் இருக்கும் ஆன்மீகப் போராட்டத்தை கமல்ஹாசன் என்னும் நட்சத்திர பிம்பத்தால் முழுதாய் ஸ்வீகரிக்க முடியவில்லை. அதனால்தான் துரோகி, (ஒருவேளை ‘துரோகி கமலஹாசன்’ என்னும் பெயர் வந்து விட வாய்ப்பு இருந்ததால்) என்னும் சரியான பெயர் குருதிப் புனலாய் மாற்றப் பட்டு வந்தது. உன்னைப் போல் ஒருவனில் அசலிலிருந்து மாற்றப்பட்ட விஷயங்கள் பிழை மிகுந்து, படத்தின் தீவிரத் தன்மையைப் பெரிதும் குலைத்து இருந்தன. ‘எ வெட்னஸ்டே’யில் ஷாவின் நடிப்பை வேறு முதலிலேயே பார்த்து விட்டதால் நிலைமை அவருக்கு சாதகமாய்ப் போய் விட்டது.
‘தேவர்மகன்’ வணிக வெற்றியை மட்டுமே நோக்கி எடுக்கப்பட்ட நல்ல படமே போன்ற நடுவாந்திரப் படம். ‘அன்பே சிவம்’ அதை விட அபாயமானது. நல்ல படம் என்று சொல்லி, நல்ல படம் என்று நம்பப் படுகிற மோசமான படம் என்பதால். ஃப்ளாஷ் பேக் ஆரம்பிக்கும் வரையிலான முதல் பகுதி நன்றாகவே இருக்க அப்புறம் முற்போக்குவாதி கமல் வந்து விடுவார். படம் செயற்கையான, திணிக்கப்பட்ட இடது சாரி சிந்தனைகள், நம்ப முடியா சம்பவங்கள், மனிதச் சித்தரிப்புகள், பாசாங்கான நெகிழ்சித் தருணங்கள் என்று எதிர் பார்க்கிற திசையில் கண்றாவியாகப் பயணிக்கும், மெனக்கெட்டு கட்டப் பட்ட செத்த படமாகி விடும். திருடன் யூகி சேதுவிடம், “சம்ஸ்க்ருதம் தெரியுமா” என்று மரியாதை கலந்த ஆச்சர்யத்தோடு எந்த அன்பரசு கேட்பாராம் என்று கமலைச் சந்தித்தால் கேட்க வேண்டும்.
‘ஹே ராமி’ல் ராணி முகர்ஜி வந்து விட்டு இறந்ததும் நடக்கும் நிகழ்வுகளும், நிலையும் சுமார் 20 நிமிடங்களுக்கு ஆச்சர்யமாகத் தீவிரமாக இருக்கும். அப்புறம் கமல், அவரது கொள்கைகள், வலிய புகுத்தப்பட்ட உடன் நிகழ்வுகள், செயற்கைத்தனங்கள் எல்லாம் படத்தை ஆக்ரமிக்கும். குணா, ஆளவந்தான் Disasters. நம்மவரில் நாகேஷ் மட்டும்தான்.
நகைச்சுவைப் படங்கள் பலதிலும் மிகச் சிறப்பாக நடித்திருக்கும் கமலஹாசன், ஒப்பனை மற்றும் தோற்ற மாறுபாடுகளின் உதவியில்லாமல் சாமான்ய மனிதராகவே வந்து நன்றாக நடித்திருந்தது மீண்டும் கோகிலா, மூன்றாம் பிறை  போன்ற படங்களில். மூன்றாம் பிறையிலும் கடைசி மெலோடிராமா காட்சி படத்தின் பொதுவான லயத்தோடு பொருந்தாமல் துருத்திக் கொண்டு நிற்கும்.
வற்றையெல்லாம் போலலல்லாது உத்தம வில்லன் படத்தில்தான் இயல்பான தீவிரமான காட்சிகள் மற்றும் நடிப்பு, குறிப்பாக கமலஹாசனின் நடிப்பு யதார்தமாக மலர்ந்துள்ளன.
அப்போதுதான் அக்கா தம்பி என்று தெரிந்து கொண்ட கமலஹாசனின் மகளும், மகனும் அணைத்துக் கொள்ளும் உணர்ச்சி மிகு தருணத்தில் அங்கு உள்ளே வரும் அந்தப் பையனின் கேர்ல் ஃப்ரெண்ட் அதைத்  தப்பாய் எடுத்துக் கொள்ள, விவரம் சொல்லி அவளிடம் விளக்க முற்படும் மகனுக்கு ஓர் உதவியும் செய்யாமல் அவனுடைய தர்ம சங்கடத்தைப் பார்த்து தந்தை கமலஹாசன்  சிரிப்பை அடக்க முடியாமல், கையைத் தட்டிக் கொண்டே அறைக்கு வெளியே செல்வதும், உள்ளே நுழையும் ‘என்ன” என்று கேட்கும் ஜெயராமிடம் “போய்ப் பாருங்கள்” என்று சொல்லி சிரிப்பை நிறுத்தாமலே போவதும்.. .. .. இது போன்ற காட்சியைக் கடைசியாக தமிழ்ப் படத்தில் எப்போது பார்த்தோம் என்பதே நினைவில் இல்லை.
தன் மகளும் தன் மகனும் ஒன்று சேர்ந்து விட்டார்கள். அப்போது நியாயமான, ஆனால் அந்தத் தருணத்தில் அபத்தமான, மன உடைவோடு பையனின் சிநேகிதி. இன்னும் சில நொடிகளில் அவள் சந்தேகம் நிவர்த்தியாகப் போகிறது. அதை சரி செய்து கொண்டிருக்க வேண்டிய அவகாசமோ, அவசியமோ தந்தைக்கு இல்லை. தன் மகளும் மகனும் சேர்ந்து விட்டார்கள். மனம் ஒன்றி விட்டார்கள். எந்த சிறுபிள்ளைத்தனமான உராய்வுகளும், வஞ்சிக்கப்பட்டு விட்ட உணர்வுகளும் இல்லை. தன் வாழ்வின் கடைசித் தருணங்கள்தாம். இருந்தாலும் என்ன? என் மகளும் மகனும் சேர்ந்து விட்டார்கள். அந்த சிநேகிதி, இன்னொரு சிறுமி, அவள் சந்தேகம், நியாயமான சந்தேகம் இதோ நிவர்த்தியாகப் போகிறது. இடையில் விளங்கி அவள் சந்தேகத்தை முடிக்கும் வரை கொஞ்ச நேரம் திண்டாடப் போகும் தன் மகன். ஆம் வாழ்வு முடியப் போகும் நேரம்.  அதுவே துயரம், அதுவே இந்த ஆனந்தம் நிகழக் காரணமும்.
அந்தக் குழந்தைகளும் என்னமாய் நடித்திருக்கிறார்கள். கமலஹாசனின் 50 + வருட அனுபவத்தில் அவர் சீரியஸாக நடித்ததில் இது முதன்மையான காட்சி.
தன் வாழ்வு சாச்வதம் என்கிற அனைவருக்கும் பொதுவான மயக்கத்தில், புகழின் உச்சியில், போதைகளில் வாழும் மனோரஞ்சனின் அந்த ‘ப்ளாக் மெயிலரை’ ஒழிக்கச் சொல்லும் அகம்பாவம், நிலையாமை என்னும் நிதர்சனத்தின் முன் நீங்கி ஜெயராமுடன் முதல் தரம் உட்கார்ந்து உரையாடும் காட்சி. அந்த சதை தொங்கும் கிழ முகத்தின் பரந்த கண்களில்தான் எத்தனை நினைவுகளின் வாசனை சுமக்கும் உணர்ச்சிகள். இந்த மாதிரி க்ளோசப்பில் தைரியமாக நடிக்க இன்று தமிழில் யார் இருக்கிறார்கள்? எவ்வளவு அளவான, தீவிரமான, மிகை எட்டியே பார்க்காத, சப்ட்யூட் என்ற பெயரில் சறுக்கி விழாத கச்சிதமான, அடர்த்தியான, நுட்பமான நடிப்பு. ஜெயராமும் இணையாக நடித்திருக்கிறார்.
கையில் பந்துடன் அப்பாவும், பிள்ளையும் வாழ்க்கையின் உக்கிர கணத்தை நெருங்குகிறார்கள் என்கையில் ஐயோ பாலச்சந்தர் போல நல்ல தருணங்களை ‘டைரக்டோரியல் டச்’ என்று கொலை செய்து விடப் போகிறார்களே என்று நினைத்து பயந்தேன். நல்ல வேளையாகக் க்ளீஷேவாக ஆரம்பிக்கும் கட்சி தன் க்ளீஷே தனத்தைக் களைந்து இயல்பாகி அருமையாக மலர்ந்து விட்டது. மனோகராக வரும் அந்தப் பையன் யார்? நடிக்கவே இல்லை. நம் பக்கத்துத் தெரு பணக்காரப் பையன் போல் இருக்கிறான்.
மரணம் அணைத்துக் கொள்ள அருகில் நிற்கிறது. பகுத்தறிவு வக்கிரங்களும், மரபு, சரி தப்பு போன்ற பாரச் சுமைகளும் பனி போல் மறைந்து பகா அறிவும், அச்சமற்ற பேரன்பும் நிரம்பி ஒரு காட்சியில் மகன், மகளை அணைத்துக் கொள்ளும் மனோரஞ்சனிடம் மனைவியும் வருவார். அவரையும் அவரால் அணைத்துக் கொள்ள முடிகிறது; அணைத்துக் கொள்வார். அனைத்தையும் அரவணைத்துக் கொள்ளும் மன நிலைக்குப் போயிருப்பார். இன்னும் அர்பணா, சொக்கு, மார்க்க தரிசி, கார் டிரைவர், ஜேகப், மாமனார் எல்லோருக்கும் அவர் அரவணைப்பில் இடம் இருக்கிறது. அருகில் வந்திருந்தால் அவர்களையும், நம்மையுமே கூட அணைத்துக் கொண்டிருப்பார்.
uttama-villain-07
இறுதி ஷூட்டிங் முடிந்ததும் ‘அவர்’ என்று சொல்வதற்குப் பதிலாக ‘அது’ என்று சொல்லி விட்டேன், மீண்டும் நடிக்கவா என்று புது மாணவனைப் போல் குற்ற உணர்வுடன், மரியாதை மிகக் கேட்கும் கமலஹாசன், பாலச் சந்தர் ‘வேண்டாம் சரி செய்து கொள்ளலாம்’ என்கையில் மீண்டும் பரவாயில்லையா என்று அதற்கு ஒப்புக் கொள்ளத் தயங்கி தான் செய்த தவறை மீண்டும் சொல்ல முற்படுகையில் வாய் லேசாகாக் குழறும். நாம் முதலில் அதைக் கவனிக்க மாட்டோம். ஒரு புறத்துக் கன்னம் மற்றும் தாடையில் ஒரு மிக நுண்ணிய அசைவுடன் அந்தக் குழறலை அவரிடம் மீண்டும் கவனிக்கும் போது மனம் துணுக்குறும். ஐயோ என்ன ஆச்சு என்று. அந்த வசன உச்சரிப்பையும், அந்த சின்னஞ்சிறு குழறலையும் அதி அற்புதமான இயல்புத் தன்மையோடு கொண்டு வந்திருப்பார்.
ஊர்வசி மார்வலி வந்து படுக்கையில் கணவனிடமும் அருகில் உள்ள ஆண்ட்ரியாவிடமும் பேசும் காட்சி. அவரது க்ளோஸ் அப்கள்.
கடைசிக் காட்சியில் சற்றுத் தொலைவில் டாக்டர் ஆண்ட்ரியா எல்லாம் முடிந்து விட்டது என்பதைப் போல நிற்பதைப்  பார்த்து கமலஹாசனின் மகளும், மகனும் அவரிடம் செல்ல அவர் அவர்கள் இருவரையும் அணைத்துக் கொள்வார். மனோரஞ்சனின் இறப்பைவேறு எந்த விதத்திலும் காட்டி கோரமாக்காமல் செய்திருக்கிறார்கள்.
பாலச்சந்தர் நெடுநாள் தொழில் விரோதி விஸ்வநாத்திடம் சாரி சொல்லும் காட்சி. மனோவின் மாமியாரின் வெகு யதார்த்தமான நடமாட்டங்கள்.
கார் காட்சி இன்னொரு அற்புதமான காட்சியாக இருந்திருக்க வேண்டிய ஒன்று. நினைத்த அளவு நன்றாக வர வில்லை என்று தோன்றுகிறது. ஆண்ட்ரியாவை அவர் தன் மடியில் கிடத்திக் கொண்டிருந்தால் ஒரு வேளை இன்னும் பொருத்தமாக இருந்திருக்கலாம்.

னோரஞ்சனின் காதலி யாமினிக்குப் பிறந்த, ஆனால் பட்டம் பெறும் வயது வரை, யாமினி இறக்கும் வரை அப்படி ஒரு மகள் இருப்பதே மனோரஞ்சனுக்குத் தெரியாத, மகள் மனோன்மணியாக வரும் பார்வதி மேனன் என்னமாய் நடித்திருக்கிறார். ஓர் இளம் நடிகை இவ்வளவு கூர்மையாக, இவ்வளவு பவர்ஃபுல்லாக நடித்திருப்பதும் தமிழ் சினிமாவில் வெகு காலத்துக்குப் பின் நிகழ்ந்துள்ளது. இத்தனைக்கும் அவர் வருவது வெகு சில காட்சிகளில்தான், பேசுவது இரண்டே காட்சிகளில்தான். அந்த இளமைக்கே உரித்த நேர்மை, சுய மரியாதை. அடடா !
எம். எஸ். பாஸ்கர் நன்றாக நடித்திருப்பதை எல்லோரும் சொல்லி  விட்டார்கள்; அப்படியும் அது நன்றாக இருந்தது. இவரைப் போல் அருமையான நடிகர்கள் நம்மிடம் இருக்கிறார்கள். பயன்படுத்தும் கமலஹாசனுக்குப் பாராட்டு.
கே. பாலசந்தர் பேசுவது – “படவா ராஸ்கல், லாங் லாங் அகோ, ஸோ லாங் அகோ” போன்றவை நாகேஷ் பேசுவது மாதிரியே இருந்து நாகேஷ் இந்தப் படத்தில் இல்லையே என்கிற குறையைத் தீர்த்து விட்டது. இவர் சொல்லிக் கொடுத்துதான் அவர் பேசினாரா அல்லது அவர் தாக்கத்தால் இவர் பேசுகிறாரா என்று தெரியவில்லை. அவர் கே. விஸ்வநாத்தை ‘ராவ்ஜி’ என்று அழைப்பது நாகேஷ் நினைப்பால்தானோ என்னவோ? கே. பி. யின் நடிப்பை அவர் படங்களில் பல நடிக, நடிகைகளிடம் ஏற்கனவே பார்த்திருக்கிறோம். சிவாஜியைப் போல் தோற்றுப் போன பந்தயக்காரர். 83 வயதில் நன்றாகவே செய்திருக்கிறார்.
ஆனால் பாலச்சந்தரை விட ஓரளவு நன்றாக படம் எடுத்திருக்கும் கே. விஸ்வநாத் அவரை விட நன்றாக நடித்தும் விட்டார். கே. பாலச்சந்தருக்கு மிக உயர்வான வேடம். அவராகவே (ஆனால் வேறு பெயரில்) வருகிறார், ஓர் உத்தமராக. ஆனால் கே. விஸ்வநாத்துக்கு வில்லன் வேடம். அதைச் செய்ய மிகவும்  துணிவு வேண்டும். அதற்காகவும், இத்தனை இயல்பாக நடித்திருப்பற்காகவும் அவரைப் பாராட்ட வேண்டும்.

ன்பே சிவத்தில் வரும் ஃப்ளாஷ் பேக் முதலில் வரும் படத்தின் தரத்தைக் குலைத்து விடும். உத்தம வில்லனில் படத்துக்குள் வரும் படமான உத்தமனின் உத்தம வில்லன் வெளியில் வரும் மனோரஞ்சனின் உத்தம வில்லன் படத்துக்கு சமானமான ஆழத்தோடு, நுட்பத்தோடு, முற்றிலும் கான்ட்ராஸ்டான வெளிப்பாட்டில், கற்பனை செய்யப் பட்டு இருக்கிறது. ஆனால் எடுத்த விதத்தில் முதல் 10 நிமிடங்கள் செட்டில் ஆகவேயில்லை. வெகு சீரியசாகப் போய்க் கொண்டிருந்த படம் தொய்ந்து விடுகிறது. ஆனால் அதன் பின் முற்றிலும் புதிய நகைச்சுவைப் பாணியில் (க்ரேஸி மோஹன் நினைவு வராத வண்ணம்) போனாலும் அதிலுள்ள சில விஷயங்கள் தமிழ்ப் பார்வையாளர்களை அந்நியப் படுத்துகிறது.
‘தெய்யம்’ என்கிற பாணியில் எடுத்தது மீசைக்கு பதிலாக வண்ணக் கோடுகளில் நரசிம்மமே நரபூனை ஆகி விடுகிறார். இது ஒரு மாதிரி சீப் ப்ரொடக்ஷன் என்கிற இம்ப்ரெஷனைத் தருகின்றது.
தைரியமாக அமெடியஸ் படத்தில் வரும் ஆபரா காட்சிகளைப் போலவோ, நமக்குப் பரிச்சயமான தெருக் கூத்துப் பாணியில் முற்றிலுமோ எடுத்திருக்கலாம்.
அதே போல் இசை. இந்த பின்னணிக்கு, இம்மாதிரி நாட்டார் கலைக்கு ஒரு கே.வி. மகாதேவன், எம். எஸ். விஸ்வநாதன் சரியாக இருந்திருப்பார்கள். முன்னவர் இல்லை. பின்னவர் இசையமத்துக் கொண்டில்லை. அதுதான் இளைய ராஜா இருக்கிறாரே. அவரை வைத்திருந்தால் வேண்டிய மட்டும் செய்திருப்பாரே. கிப்ரான் மோசமில்லை. ஆனால் உத்தமன் கதையின் நகைச்சுவை இசையில் வெளியாக வில்லை. இது என் இசை நுணுக்கங்கள் அறியா பாமரக் கருத்து
ராஜேஷ் கன்னா, நாகேஷ், சிவாஜி போன்றவர்களை ஆரம்ப கால கமலஹசன் நடிப்பில் காணலாம். இன்னொரு மாபெரும் நடிகனான வடிவேலுவையும் உத்தமனில் காண முடிந்தது. நாசர் இருப்பது வேறு 23ம் புலிகேசியை நினைவு படுத்துகிறது.
நாசருக்குப் பதிலாக பிரகாஷ் ராஜ் போன்றவர்களைப் போட்டிருந்தால் இது ஒருவேளை தவிர்க்கப் பட்டிருக்குமோ என்னவோ?
ஒப்பனை, குடுமி, பஞ்சகச்சம், மேக்கப் எல்லாம் தெலுங்கு, கன்னட சாயல். ரேலங்கி காலத்திலிருந்து பிரம்மானந்தம் வரை நினைவுக்கு வருகிறார்கள்.
காட்சிகளும் ப்ரும்மாண்டமாகத் தோன்றவில்லை. கூத்து காட்சிகளைத்தவிர இதர காட்சிகளும் மேடை நாடகம்போலவே உள்ளன. கே. பி. நாடகத்துக்கும், சினிமாவுக்கும் வித்தியாசம் இல்லாமல் முதலில் எல்லாம் படம் எடுத்தாரே, அந்த Terrible habit of theatre ரை  நினைவூட்டவோ?
திருவிளையாடல் போன்ற சாதாரண வணிகப் படத்தில் கூட அந்தக் காலத்திலேயே அவ்வளவாக தொழில் நுட்பத்துக்காக பெயர் பெற்றிராத ஏபிஎன் ஒரு பிரும்மாண்டத்தைக் கொண்டு வந்திருப்பார். ஸூம் வசதிகளோ இதர வசதிகளோ இல்லாத காலத்திலேயே ‘ஒருநாள் போதுமா’ காட்சியிலும், திறந்த வெளிக் காட்சிகளிலும் நிறைய ஸ்பேஸ் இருப்பது போல் காட்டியிருப்பார்.
படத்தில் முக்கியமாக வந்திருக்க வேண்டிய இந்தப் பகுதியே ஏதோ பையன்கள் கரியால் சுவரில் ஸ்டம்ப் வரைந்து ஆடும் க்ரிகெட் மாதிரி ஆகி விட்டது. அவர்களுக்கு வெகு சுவாரஸ்யமாக இருக்கும். ஆடியன்ஸுக்கு?
பேராசிரியர் கு. ஞான சம்பந்தம் அமைச்சராகவே தெரிந்தார். இல்லாவிட்டால் நாசரின் நடு சீட்டைப் பிடித்துக் கொண்டு பட்டிமன்ற நடுவராகி விடுவாரோ என்கிற பயம் வந்திருக்கும். அமைச்சர் கட்சி மாறுவதும், இருக்கும் வலக்காதைப் பொத்திக் கொண்டு நாசர் பூஜா குமாரை காமத்தோடு அணுகுவதும், அவருக்கு கமல் ஊட்டுவதும், அவரது வயிற்று உபாதையும் அப்போது வரும் அருவருப்பூட்டிவிடக் கூடிய ஆனால் ஊட்டாத வசனங்களும் கமல் மற்றும் இதரர் நடிப்பும் என்று நன்றாகவே போகிறது. ஆனால் முக்கால்வாசிக்கு மேல் காதில் வசனங்கள் சரியாக விழவில்லை. பாடல்கள் சுத்தமாகக் கேட்கவில்லை. அதில் கமலஹாசன் தன் கொள்கைகளைப் புகுத்தியிருந்தாலும் நல்ல வேளையாக எனக்கு அவை கேட்கவில்லை; ஒருவேளை நன்றாகவே எழுதியிருந்தால் படத்துக்கு இப்படி கேட்காமல் இருப்பது பெரிய அநீதி. சென்னையில் படம் பார்த்த என் நண்பர்களும் இதையே சொன்னார்கள்.
ஜெயகாந்தன் மும்பை எக்ஸ்பிரஸ் பார்த்துவிட்டு “எனக்குப் படம் பிடித்தது; அதுதான் பயமாய் இருக்கிறது’ என்றாராம். அது போல் இந்த உள் படத்தின் காமெடி வேறு திசையில், வேறு தளத்தில் இருக்கிறது. எனக்குப் பிடிக்கிறது; அதுதான் பயமாகவும் இருக்கிறது.
புலி, பூஜா குமார், அப்பாவி உத்தமன், ம்ருத்யுஞ்ச்ய மந்திரம், அரசன், அமைச்சர்கள், சூழ்ச்சி, இறுதியில் ஒரு ட்விஸ்ட் எல்லாம் நன்றாக இருந்தும், புது மாதிரியான நகைச்சுவை இருந்தும், ஏதோ பஞ்சத்தில் அடிபட்டு படம் எடுத்த மாதிரி இருக்கிறது.

ரு நல்ல படம் எடுக்க முயன்றிருப்பதால் வேறு சிலதும் சொல்ல வேண்டியிருக்கிறது.
இரண்டு நாள் ஜுரம் அடித்தாலே கண்கள் கருவளையம் சூழ்ந்து, தாடைகள் தொங்கி களைப்பு முகத்தில் குடிகொள்கையில் இவ்வளவு சீரியஸான வியாதிக்கு ஷூட்டிங் இல்லாத சமயங்களாக சில காட்சிகளைக் காட்டி  களைப்புற்ற, கொஞ்சம் கொஞ்சமாக சோபை இழந்து கொண்டிருக்கும் மனோரஞ்சனைக் காட்டியிருக்கலாம்.
ஒரு சூப்பர் ஸ்டாருக்கு உடல் நலக் குறைவு என்றால் ஒரு மருத்துவர்களின் பட்டாளமே வந்து விடாதா? இரண்டே மருத்துவர்கள்தான் வருகிறார்கள். வெளி நாடு போக மாட்டாரா? படம் எடுக்கிறேன் என்று இங்குதான் இருப்பாரா?
மனோரஞ்சனின் உத்தம வில்லனிலும் ஒரு சூப்பர் ஸ்டாரின் வாழ்வில் சாதாரணமாகச் சூழ்ந்திருக்கும் ப்ரும்மாண்டம் இல்லை. வீடு, படுக்கை அறை, தோட்டம், ஆஸ்பத்ரி முதற்கொண்டு  எல்லாமே ஒரு அப்பர் மிடில் க்ளாஸ் அமைப்பு போல் உள்ளன.
இதற்கா 80 கோடி செலவு?
ஹிரண்ய வதம் நாடகத்தில் “ஹரி ஹரி” என்கையில் “சொறி சொறி” என்று கேலி செய்திருக்கிறார்கள் என்று கேள்விப் பட்டு கமலஹாசனது தீவிர ரசிகைகள் இந்தப் படத்தைப் பார்க்க வரவில்லை. அவர்கள் கமலஹாசனை விட ம்ருத்யுஞ்சயனான நரசிம்மனுக்கு அதிகம் ரசிகைகள். இன்னும் பல கமல் ப்ராண்ட் பிராமண ஜாதி, ஹிந்து மத தாழ்ச்சிகள், பிற மத உயற்சிகள் படத்தில் உண்டு. ஒரு வேளை இவை வேறு யாராவது நடித்திருக்கும் படத்தில் கவனிக்கப் படாமலே பொயிருக்கும். ஆனால்,  வெண்மணியில் பலிகளின் மீதே குற்றம் கண்டுபிடித்து, திண்ணியம், உத்தபுரத்தில் காட்டும் எதிர்ப்பு முணுமுணுப்பில் கண்ணியத்தை(!)க் கடைபிடித்து, திருப்பித் தாக்க இயலாத ‘சாஃப்ட் டார்கெட்’களை மட்டும் தொடர்ந்து அவமானப் படுத்தும் தமிழக மாவீரர்களின் வரிசையில் வந்த, இவரது கடந்த கால செயல்பாடுகள் இவருக்கு எதிராகவே உள்ளன.
மிகக் கட்டுக் கோப்பாகப் போய்க் கொண்டிருக்கும் மனோரஞ்சனின் கதையில் ஒரு சில வசனங்கள் சற்று பொருந்தாமல் வந்து விழுந்து காட்சிகளின் தீவிரத் தன்மையைத் திசை திருப்புகின்றன. ஊர்வசி மாரடைப்புக்குப் பின் வரும் காட்சியில் கணவனின் நிலையைச் சற்று முன்தான் அறிந்திருப்பவர், வெகு சீக்கிரம் சாகவிருக்கும் தன் கணவர்  தன் கண்ணெதிரே எப்போதும் இருக்க வேண்டும் என்கிறவர் நடுவில் தன் உடல் குண்டானதைப் பற்றி புலம்புவது, மனோரஞ்சன் திடீரென்று கமலஹாசனாகி “ஆத்மாவுக்கு காது கேட்காது” என்கையில், தன் பாய் ஃபிரெண்ட் இன்னொரு பெண்ணை அணைத்துக் கொண்டிருப்பதைப் பார்த்த பதின் வயது இளம் பெண் (குழந்தை) அதிர்ச்சியால், அருவருப்பால் தாக்கப் பட்ட இடத்தில் ‘உனக்காகத்தான் தலை மயிரை குறைத்துக் கொண்டேன்” என்பது எல்லாமே இன்னமும் கொஞ்சம் கொஞ்சம் பழைய கெட்ட கற்றதும், பெற்றதுமான பழக்கங்கள் இவரிடம் ஒட்டிக் கொண்டிருக்கின்றன என்பதைக் காட்டுகின்றன.
நிறைய பொடி வைத்து எழுதப் பட்ட வசனங்கள். கொஞ்சம் ஓவர் லோட். அதே போல் காட்சி மற்றும் கதை அமைப்பு. உதாரணமாக மனோரஞ்சன் கான்சல் செய்யும் படம் ஆதி சங்கரர். அதை நிறுத்தி விட்டுத்தான் உத்தமனைப் பற்றிய உத்தம வில்லனை எடுக்கிறான்.

“புனரபி ஜனனம், புனரபி மரணம்’ என்றிருக்கிற கடக்க முடியாத இப்பிறவிப் பெருங்கடலைக் கடக்க எனக்கு உதவுவாய்” என்று இறைவனை இரைஞ்சிய,  “ப்ரம்மமே ஆன ஆத்மாவாகிய உனக்கு பிறப்புமில்லை; இறப்புமில்லை” என்று மரணமிலாப் பெருவாழ்வு பற்றி உலகுக்கு அறிவித்த மஹா ஞானி சங்கரன். அறுதியான இறுதி உறுதியான சாவே அற்ற பிரம்மத்தை உலகுக்கு எடுத்து உணர்த்திய ஆதி சங்கரனை தவிர்த்து விட்டு அதைவிட சிரமமான ஆனால் அதனோடு ஒப்பிடுகையில் அல்பமான ம்ருத்யுஞ்சய மந்திரத்தைத் தேடி அலைகிறான் மனோ.
ம்ருத்யுஞ்சய மந்திரம் உண்டா கிடையாதா என்பதில் தன் நேரடிப் பொருளில் அது இல்லை என்கிற நிலைப்பாட்டை மிருதுவாகத் தெரிவித்திருக்கிறார். அதே சமயம் அதன் எதிரிடையான அது உண்டு என்பதையும் காட்டியிருக்கிறார். (“a truth in art is that whose opposite is also true” –Oscar wilde) மந்திரம் போல் சொல்லின்பம் வேண்டும் (பாரதி) சொற்கள் மந்திரம் அல்ல. மந்திரம் சொல்லாய்த்தான் இருக்க வேண்டும் என்கிற அவசியமும் இல்லை. சொற்களில் சில மந்திரம் ஆகையில் கற்களில் சில தெய்வமும் ஆகலாம். சொற்கள் எவை அதில் மந்திரம் எவை கற்கள் எவை அதில் தெய்வம் எவை என உணரும் சுத்த அறிவே சிவம். அந்த சிவமே அன்பு. அன்பே ம்ருத்யுஞ்ச்ய மந்திரம்.
ம்ருத்யுஞ்சய மந்திரம் வெறுமனே சொற்களாலான ஒரு மந்திரம் அல்ல என்று உத்தமனே விளக்குகிறான். அந்த வழி முறைகளில் முதல் இரண்டும் கடினமானவையாக இருக்க மூன்றாவதான காலத்தால் அழியாத கலைஞனாக ஆக நாசர் விழைகிறார். ஆம். மிகச் சிறந்த கலைச் செயலால் “பார் மீது நான் சாகாதிருப்பேன் காண்டீர்” என்கிறான் உத்தமன். அதாவது மனோரஞ்சன். கமலஹாசன் செய்யத் துணிவதும், இது மாதிரி ஒரு படத்தை எடுத்து, அதுதானே? ஆக அது – ம்ருத்யுஞ்சய மந்திரம் – உள்ளது.
இறுதியில் உத்தமன் வாழ்கிறான்.  மனோரஞ்சன் இறக்கிறான். எனினும் அவன் நடித்த உத்தமன் பாத்திரம் மூலம் அவனும் சாகாமல் வாழலாம். ம்ருத்யுஞ்சய மந்திரம் அப்படியும் உண்மையாகி விடுகிறது.

த்தம வில்லன் பார்க்கையில் சத்யஜித் ராயின் ‘நாயக்’, ‘கூபி கய்ன் பாகா பய்ன்’ படங்கள் இரண்டும் ஞாபகம் வந்தன. ஒன்று சொஃபிஸ்டிகேடட் தருணங்களாலான, வசதி நிறைந்த வாழ்வு கிடைத்த மனிதர்களைப் பற்றியது. ஒரு ரயில் பயணம், ஒரு நடிகன், ஒரு பெண் நிரூபர். காதல் கத்தரிக்காய் எல்லாம் கிடையாது. மிகச் சிறந்த அகப் போராட்டங்கள் கொண்ட படம். இரண்டாவது ஃபேரி டேல். ராஜா காலத்து ஃபாண்டஸி. உத்தமன் கதையைப் போல. சங்கீதமே வராத கிராமிய சாமானிய பதின் வயது இளைஞர்கள். அதன் காரணமாகவே நாடு கடத்தப் பட்டு காட்டில் ஒரு தேவதை தந்த வரங்களால் போர்களையும், பஞ்சங்களையும், பசியையும் தீர்த்து மனிதர்களை ஆனந்தமாக்கும் படம்.  படத்தின் இசை. அதன் வெகுளித் தனம். அதன் அன்பு. அதன் நோக்கம்.
நாயக் மாதிரி மனோரஞ்சனின் சொஃபிஸ்டிகேடட் வாழ்க்கை, எல்லா குழப்பங்களுடனும், ஆத்ம ஹத்தியுடனும் கொந்தளிக்கும் affluence. கூபி கய்ன் மாதிரி இன்னொசென்ஸை மட்டுமே கருவியாய்க் கொண்ட ஒரு அப்பாவியின் கதை. ( இதில் அந்த அப்பாவித்தனம் ஒரு புத்திசாலி அரசனுடைய வேடம் என்று உத்தமனின் கதை முடிகிறது)
அந்தத் தளத்துக்கு இந்தப் படத்தைக் கொண்டு போயிருக்லாம். தவற விட்டு விட்டார்கள். அப்போது ஒருவேளை படம்  ஓடியிருக்காது. இப்போதும் நிலைமை என்னவென்று நிச்சயமாகத் தெரியவில்லை.

குணம் குற்றம் இரண்டையும், பிறதையும் நாடியாயிற்று. அவற்றுள் மிகை நாடுதல் கீழே:-

50 வருடங்களுக்கு மேலாக திரையுலகில் இருக்கும் கமலஹாசன் நடிப்பார்; விதவிதமாக வருவார்; ஆடுவார்; பாடுவார்; முத்தமிடுவார், யுத்தமிடுவார். எனவே அப்ளாஸ் காட்சிகளை மனதில் வைத்து நரைகூடிக் கிழப்பருவம் எய்திக் கொண்டிருக்கும் ஒரு நடிகன் இளமையாகவே என்றும் தெரிவதற்காக எடுத்துக் கொள்ளும் முயற்சிகளையும், இயற்கைக்கும் அவன் முயற்சிகளுக்குமான போராட்டத்தையும் கூட எடுத்திருக்கலாம்.
ஆனால் அதை ஏற்கனவே நம் காலத்திய சில இந்திய நட்சத்திரங்கள் வாழ்ந்து காட்டி விட்டார்கள்; அமோல் பாலேகர், அனில் சாடர்ஜியை வைத்து நகாப் (Naquab) டி.வி.சீரியல் எடுத்து விட்டார். அந்தப் பேராசையின் உச்ச கட்ட நிர்மூலத்தை ‘ஃபெடொரா’வில் ‘பில்லி வைல்டர்’ காட்டிவிட்டார். சிவாஜி டைரெக்டராக வரும் ‘எது மாதிரியும் இல்லாத புதுமாதிரி’ படம் எடுப்பதாகச் சொன்ன திரு ஏ.எஸ். பிரகாசம் ‘சாதனை’யில் மிகப்பெரிய வாய்ப்பைக் தவற விட்டிருப்பார். அதுபோலவும் ஆகியிருந்திருக்கும். நன்றாக எடுக்கப் பட்டிருந்தால் அவர் ரசிகர்களையும், தயாரிப்பாளர்களையும் திருப்திப் படுத்தியிருக்கும். பத்தோடு பதினொன்றாய்ப் போயிருக்கும்.  நல்ல வேளையாக அதைச் செய்யாததற்காக.. ..
ரு நாவலாக எழுதப் பட்டிருந்தால் தமிழில் எழுதப்பட்ட மிகச் சிறந்த நாவல்களில் ஒன்றாக இருந்திருக்கும். அந்த நாவலைத் திரையில் கடத்துகையில் முழுதாக வெற்றி பெறா விட்டாலும் அந்த முயற்சியை எடுத்ததற்காக.. ..
டத்தில் எடுக்கப்பட்டுள்ள மிகப் பெரிய ரிஸ்கே படத்தின் மிகப் பெரிய பலமாய் அமைந்து விட்டது. தொடர்ந்து மீண்டும் மீண்டும் வரும் க்ளோஸ் அப் காட்சிகள். இதில் நடிக்க அடாத தைரியம் வேண்டும்; தன்னம்பிக்கை வேண்டும். அது கமலிடம் இருக்கிறது. அவரிடம் மட்டும்தான் இருக்கிறது. கரணம் தப்பினால் மரணம். ஒன்று ஓவர் ஆக்டிங் அல்லது செயற்கையான சப்ட்யூட் ஆக்டிங். மெல்லிய கயிறின் மேல் ஆயிரம் அடிகளுக்கு மேலான உயரத்தில் இரண்டு மலைச் சிகரங்களை இணைத்து கீழே வலை கூட கட்டாமல் மிக வெற்றிகரமாக நடந்திருப்பதற்காக.. ..
(முன்பெல்லாம், எஸ்.வி. ரங்காராவ், சிவாஜி கணேசன், டி. எஸ். பாலையா, நாகேஷ், ஜெமினி கணேசன், பானுமதி, சாவித்திரி என்று இப்படி தைரியமாக பெருமளவான காட்சிகளில் எமோட் பண்ணுவதற்கு இருந்தார்கள். இப்போது நமக்கு இருக்கும் ஒரே ஒரு கொழுந்து கமலஹாசன்தான்.
தொழில் நுட்பம் மற்றும் உட்பொருள் பற்றிய விவாதம் உலகளாவியது.  மிகச் சிறந்த திரைப்படங்களை எடுத்தவர்கள் உட்பொருளின் முக்கியத்துவம் பற்றித் தெரிந்தவர்கள். “it is just because a director has something to say that he finds the form, the skill, the technique to bring it out.  If you are concerned only with how you say something without having anything to say then even the way you say something won’t come to anything – Techniques do not enlarge a director. They limit him”  – அகிரா குரோசாவா.
தொழில் நுட்பத்திலும் பணம் காரணமாக நாம் நமக்கு எட்டக் கூடிய அரிய உயரங்களை எட்ட முடிவதில்லை. தொழில் நுட்பம் அன்றி உட்பொருளுக்குத் (Content)தான் நல்ல சினிமாவில் முதல் இடம் என்பதை தமிழ் ஜாம்பவான்கள் (!) உணர்ந்ததே இல்லை. ஜாம்பவான்கள் என்று விதந்தோதப் படுபவர்களில் ஒருவர் தங்கத் தாம்பாளத்தில் அரிசியை வைத்து, மலைகா அரோராவையோ, மல்லிகா ஷராவத்தையோ விட்டு “இதுதான் ஐயா சாப்பாடு, சாப்பிடுங்கள்” என்று கொடுக்க வைப்பவர். இன்னொருவர் அதே அரிசியை சேற்றில் புரட்டி எல்லோரும் இப்படித்தான் சாப்பிடுகிறார்கள் என்று ஜோதி லட்சுமியையோ, சிம்ரனையோ ஆட வைத்துக் கொடுப்பவர். நல்ல வேளையாக, அவலை நினைத்து எது எதையோ இடித்துக் கொண்டிருந்த கமலஹாசன், அவர்களைப் போலெல்லாம் இல்லாமல், content டின் முக்கியத்துவத்தை உணர்ந்துவிட்டார். இது எதேச்சையா இல்லை நிரந்தரப் புரிதலா என்பதை அவரது இனி வரும் படங்கள் காட்டிவிடும்.
நம் புதிய இளம் இயக்குனர்களுக்கு உட்பொருள்தான் திரைப்படத்தின் உயிர் என்பது intuitive வாக வாவது புரிந்திருக்கிறது. நலன் குமாரசாமிகளும், கார்த்திக் சுப்பராஜ்களும், கோகுல்களும், விக்ரம் குமார்களும், விஜய் சேதுபதிகளும் இன்று மலர்ந்துள்ள இளம் பட்டாளத்தில் சீரியஸான திறமை மிகு சிலரும் குழுமி நவ தமிழ் சினிமாவின் உதயத்தைக் கொண்டு வந்து விடுவார்கள் போலிருக்கிறதே என்று என்னைப் போன்றவர்கள் ஆவலோடும், ஆன்க்ஸைடியோடும் காத்துக் கிடக்கையில் பல காலம் முன்பே சுஜாதா எதிர்பார்த்த கமலஹாசன் எவ்வளவோ முறை ஏமாற்றிய பின்னும் கூட இன்னமும் பந்தயத்தில் இருக்கிறார் என்பதற்காக.. ..
கே. விஸ்வநாத், மனோகராக நடித்த பையன், பார்வதி மேனன், எம். எஸ். பாஸ்கர், பாலசந்தர், ஊர்வசி, ஜெயராம், ஆண்ட்ரியா, பூஜா குமார், நாசர் என்று எல்லோருக்குமே நடிக்க வாய்ப்பு இருக்கிறது. ஸ்பேஸ் இருக்கிறது. நடிக்கவும் செய்திருக்கிறார்கள். இந்த எல்லாப் பாத்திரங்களுமே ஒற்றைப் பரிமாண கேரக்டர்களாக இல்லாமல் ஒரு ஆழத்தோடு இருப்பதற்காக.. ..
இப்போதெல்லாம் கமலஹாசன் படங்களின் இயக்குனர்கள் யாராக இருந்தாலும் படத்தின் குறை நிறைகளுக்கு கமலஹாசனே காரணம் என்றுதான் பலரும் எண்ணுகிறார்கள். இந்த விமர்சனமும் அந்த விதத்திலேயே அமைந்துள்ளது. படத்தின் அனைத்து அம்சங்களிலும் அவரது ஒப்புதல் இல்லாமல் எதுவும் வர முடியாது என்றே நினைக்கிறோம். ஒரு வேளை ரமேஷ் அரவிந்த்தின் பங்கு நிறைய இருந்தால் நடிப்பு, காட்சியமைப்பு மற்றும் க்ளோஸ் அப்புகளுக்காக அவருக்கும் பாராட்டுகள்.
சாவு, வாழ்வு இரண்டைப் பற்றியும் பலதும் யோசிக்க வைக்கும் ஒரு படம் யோசிக்கவே விடாத தமிழ்ப் பட சூழலில் எடுத்திருப்பதற்காக, 20+ வயதுப் பெண்ணுக்குத் தந்தையாகக் குறைகளும், குற்றங்களும் நிரம்பிய நடிகனாகக் கமலஹாசன் நடிக்கத் துணிந்தமைக்காக.
துகாறும் தீவிரமான உணர்ச்சி மிகு நடிப்பு என்றால் இதுதான் என்று இருந்த – அவரே உருவாக்கியவை உட்பட – அனைத்து வரையறைகளையும் கமலஹாசன் தகர்த்து எறிந்ததற்காக, புதிய ஒரு உயரத்தைப் பிற்காலச் சாதனையாளர்களுக்காக ஏற்படுத்தியதற்காக,
உத்தம வில்லனை அவசியம் பார்க்கலாம்.
பாசாங்கு குறைந்திருக்கிறது. கமலஹாசன் இதே திசையில் பயணித்தால், தன் தனிப்பட்ட சாய்வுகளை, சார்புகளை, காழ்ப்புகளை மெனக்கெட்டு கதையில், சம்பவங்களில், வசனங்களில், பாத்திரங்களில் புகுத்தாமல், கதையின், பாத்திரங்களின் மனோ தர்மமும், மனோ தத்துவமும் கெடாமல் படங்களை எடுத்தால் உண்மையிலேயே அவர் மூலம் நல்ல படங்கள் வர வாய்ப்பிருக்கிறது.
து நிகழ, ஓரு சிறிய ஆலோசனை : சினிமா வித்தையில் சீரியஸ் மாணவரான கமலஹாசனுக்கு மகத்தான திரைக் கலைஞன் ராபர்ட் ப்ரெஸ்ஸான் தனக்குத் தானே சொல்லிக் கொண்ட இந்த வார்த்தைகள் முன்பே தெரிந்திருக்கும். இது ஒரு நினைவூட்டல்தான்:
“Rid myself of the accumulated errors and untruths. Get to know my resources, make sure of them.”
oOo
நன்றி: இந்தக் கட்டுரைக்குத் தேவையான சில தகவல்களைச் சொன்ன திரு. எஸ். பார்த்தசாரதி அவர்களுக்கு.

Tuesday, January 4, 2011

முன்னோடிகளும், பின்வந்தவர்களும், ஈயடிச்சான்களும்

முன்னோடிகளும், பின்வந்தவர்களும், ஈயடிச்சான்களும்

வ.ஸ்ரீநிவாசன் | பிரசுரம் : சொல்வனம் : இதழ் 41 | 01-01-2011 
anjaana-anjaani-copied
ஜார்ஜ் லூயி போர்ஹே ‘காஃப்காவின் முன்னோடிகள்’ என்று எழுதியுள்ள கட்டுரையில் “உண்மை என்னவென்றால் ஒவ்வொரு எழுத்தாளனும் அவன் முன்னோடிகளை சிருஷ்டித்துக் கொள்கிறான்.” என்கிறார். சுந்தர ராமசாமியும், ஜி.நாகராஜனும் புதுமைப் பித்தனையும், நாஞ்சில் நாடன் தி.ஜானகிராமனையும் உருவாக்கிக் கொண்டதை புரிந்து கொள்ள முடிகிறது. அவர்கள் அந்த முன்னோடிகளின் பின்வந்தவர்கள் மட்டுமோ, ஒரே ஒரு முன்னோடியை மட்டுமே கொண்டவர்கள் என்பதோ, முன்னோடிகளைத் தாண்டிச் செல்லதவர்கள் என்பதோ இல்லை. இவர்களது படைப்புத் திறனையோ, தரத்தையோ சுருக்குவதும் இல்லை. இது உள்ளே சென்றது உள்ளின் இருப்புக்கு எற்றவாறு உருமாறி வெளியே வருவது. மேலும் இதுவும் ஒரு அசல்தான். அடிப்படையான உண்மை மட்டுமே ஒன்று. வேறு வேறு வெளிப்பாடுகள்.
கலையுலகில், இலக்கியத்தில், சினிமாவில் இது காலங்காலமாக இருந்து வருவதுதான். ஆதிகவியிலிருந்து கம்பர், துளசிதாசர் என்று எத்தனை பேர் எழுதியுள்ள ‘ஒரிஜினல்’ இராமாயணங்கள். தாஸ்தாயவ்ஸ்கி கோகோலைப் பற்றிச் சொல்லும்போது, “ரஷ்ய எழுத்தாளர்களான நாம் அனைவரும் கோகோலின் ‘ஒவர்கோட்’டுக்குள்ளிருந்து வந்தவர்கள்” என்கிறார். ஜெயகாந்தன் இதைப் ‘பாரதி யுகம், நாமனைவரும் அவனிடமிருந்து வந்தவர்கள்’ என்கிறார்.
துப்பறியும்கதைகளின் தந்தை எட்கார் அல்லன் போ வின் கதைகளில் வரும் சார்லஸ் ஆகஸ்ட் ட்யூபின் (Charles Auguste Dupin) பற்றி சொல்லும் போர்ஹே இவரே இலக்கிய உலகின் முதல் துப்பறிவாளர் என்கிறார். இவர் வரும் கதைகளை ட்யூபினின் நண்பரே சொல்வதாக போ எழுதியிருக்கிறார். கானன் டாயலின் (Conan Doyle) ஷெர்லக் ஹோம்ஸின் மூளை சாகசங்களைச் சொல்வது அவர் நண்பர் டாக்டர். வாட்சன்தான். அகதா க்றிஸ்டியின் ஹெர்க்யூல் பைரோ (Hercule Poirot) வின் சாகசங்களைச் சொல்வது அவரது நண்பர் கர்னல் ஹேஸ்டிங்ஸ். நமது சத்யஜித் ராயின் ப்ரதோஷ் சி. மிட்டரின் (ஃபெலுதா) சாகசங்களைச் சொல்வது அவரது கஸின் தாபேஷ்தான்.
இவையெல்லாம் முன்னோடிகளை உருவாக்கிக்கொள்வது. இன்னுமொன்று இருக்கிறது. அது ‘கான்ஷியஸ்’ஸாக ஒன்றைப்போலவே, தன் பங்களிப்பு எதுவும் இல்லாமல், செய்வது. இதை ‘இன்ஸ்பைரேஷன்’ ‘ஹெவிலி இன்ஸ்பையர்ட்’ ‘ஈயடிச்சான் காப்பி’ என்று பலவாறு அவற்றின் நகல்தன்மைக்கு ஏற்ப சொல்கிறோம்.
சில வருடங்களுக்கு முன் ‘மிஷ்கின்’ (தாஸ்தாயவ்ஸ்கியின் இடியட்) என்கிற பெயரில் மயங்கி அவர் இயக்கிய ‘சித்திரம் பேசுதடி’ பார்த்தேன்; மகிழ்ந்தேன். தொடர்ந்து ‘அஞ்சாதே. பெரும் ஏமாற்றம். இப்போது ‘நந்தலாலா’ வந்திருக்கிறது. பார்க்க வேண்டும் என்றதும் ‘kikujiro’ பற்றி தெரியவந்தது. இப்போது ‘சித்திரம் பேசுதடி’ பற்றியே கவலை வந்து விட்டது. ‘Kikujiro’ வுக்கு நன்றி சொல்லியிருந்தால் பரவாயில்லை. என்ன செய்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை. படம் பார்க்கும் ஆர்வம் போய்விட்டது.
‘மன்மதன் அம்பு’ கதையைக் கேள்விப்பட்டதும் சடாரென்று ‘டோபோல்’ நடித்த ‘ஃபாலோ மீ’ நினைவுக்கு வருகிறது. படத்தைப் பார்த்தால்தான் தெரியும்.
தாதா மிராஸி, அனந்து, பாலசந்தர் காலங்களை விட இப்போது உலக சினிமா சுலபமாக அனைவருக்கும் கிடைக்கிறது. திரையுலகில் உள்ள பலரும் இவற்றில் ஆர்வம் கொண்டு இருக்கிறார்கள். அதனால் இத்தகைய நகலாக்கங்கள் உடனடியாக வெளிச்சத்துக்கு வந்து விடுகின்றன. பெரிய ஜனரஞ்சக வியாபரப் படங்களிலிருந்து, கலைப் படங்கள் சாயம் பூசி வெளிவருபவை வரை இது நடக்கிறது.
“இது மாதிரி ‘காப்பி’ அடிப்பதில் என்ன தவறு? ஒரு நல்ல படத்தை ஒழுங்காக தமிழில் தருவதால் பிற மொழி தெரியாதவர்கள் அதைப் பார்த்து அனுபவிக்கலாம் அல்லவா?’ என்று ஒரு கருத்து இருக்கிறது. மேலும் பொதுஜனங்கள் இதைப் பற்றியெல்லாம் கவலைப்படுவது இல்லை. “என்னம்மா எடுத்திருக்கான்யா?” என்று வியந்து புகழ்ந்து தள்ளிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
பாரதியின் எழுத்துகளின் அத்தனை உரிமையும், அவை துணை நிற்கும் ஆத்ம சுத்திகரிப்பும், அவையீட்டும் உணர்வு அபிமானங்களும் அவருக்கன்றி அவர் எழுதிய பத்ரிகைக காகிதங்களையே சாரும்; கம்பனின் கவி மேதைமை மீதான காதல் அவர் கை ஓலைச் சுவடிகளுக்கே என்பது போல் இது இருக்கிறது. இத்தகைய சூத்திரத்தை ஆமோதித்து, பிறரது உழைப்பை, அறிவை, தொழிலை வெட்கமின்றி அபகரித்துப் பணம் பண்ணுபவர்கள் ‘திருட்டு விசிடி (டிவிடி) பற்றி குய்யோ முறையோ என்று அலறுவதுதான் விந்தை. அத்தகு திருட்டு விசிடிக்களைச் செய்பவர்களுக்கும் இவர்களுக்கும் என்ன பெரிய வித்யாசம்?
கண்டுபிடிக்கப்படாவிடில், குற்றாஞ்சாட்டப்படாவிடில், அகப்பட்டுக்கொள்ளாவிடில், ஆள் தெரிந்திருக்காவிடில், என்பன போன்ற பல ‘விடில்’களுக்கு அப்பால் சுகமாக கொலுவீற்றிருக்கும் இந்த ‘கலைஞர்கள்’ அல்லது சினிமா வியாபாரிகள் இது போன்ற தூய ‘மாரல்’ சம்பந்தமான மனக் கிலேசங்களால் துன்புறுவதும் இல்லை. ‘ஐயோ’ என்று போவதும் இல்லை. சொல்லப் போனால் அவர்கள் செல்வமும், செல்வாக்கும் 1.76 லட்சம் மடங்கு அதிகரித்துத்தானிருக்கிறது. இதில் வியாபாரிகள் என்று சொல்லிக் கொள்பவர்கள் தேவலாம். ஆனால் கலைஞர்கள் என்று போற்றப்படுபவர்கள்தான்…
‘The secret to creativity is knowing how to hide your sources’ என்று ஐன்ஸ்டீன் சொன்னது போல் இன்னும் நம் கண்ணில் அகப்படாத ‘மேதைகள்’ எத்தனை பேரோ.
காப்பிப் பூனைகளைவிட, சுயமாக படம் எடுப்பவர்கள்தான் மேல் என்கிற சிந்தனையும் சினிமாவை, கலைகளை சீரியஸாக எடுத்துக் கொள்பவர்கள் மத்தியில் இருக்கிறது. சுயமாக எடுப்பவர்கள் வணிகத் தோல்விகளால் அழிக்கப் பட்டாலும் கம்பீரமானவர்கள், சுய மரியாதை உள்ளவர்கள். சுய மரியாதை என்பது ‘பொய் சொல்லாமல், ஊழல் செய்யாமல், பிறரெவரையும் அவமரியாதை செய்யாமல் இருப்பதுதானே?
tie-me-up-tie-me-down
கீழேயுள்ள தமிழ்ப் படங்களையும் வேற்று மொழிப் படங்களையும் ‘மேட்ச்’ செய்யுங்கள் பார்க்கலாம். - விடை கடைசியில்.
தமிழ்ப்படம்பிறமொழிப்படம்
புதிய பறவைசேஸ் எ க்ரூக்கட் ஷாடோ
தாமரை நெஞ்சம்ஸ்லெண்டர் த்ரெட்ஸ்
நாணல்டெஸ்பரேட் ஹவர்ஸ்
அழியாத கோலங்கள்சம்மர் ஆஃப் ஃபார்ட்டி டூ
ரெட்டைவால் குருவிமிக்கி அண்ட் மாட்
கஜினிமொமென்டோ
மூன்றாம்பிறைரோமன் ஹாலிடே
எனக்குள் ஒருவன்ரீ-இன்காரனேஷன் ஆஃப் பீடர் ப்ரௌட்.
மகளிர் மட்டும்நைன் டு ஃபைவ்
ட்வெல்வ் பிஸ்லைடிங் டோர்ஸ்
சாந்தி நிலையம்சவுண்ட் ஆஃப் ம்யூசிக்
ஔவை சண்முகிமிஸர்ஸ் டௌட் ஃபையர் + டூட்ஸி
ஜுலீ கணபதிமிஸரி
பச்சைக்கிளி முத்துச்சரம்டிரெயில்ட்
நாயகன்காட் ஃபாதர்
ராஜி என் கண்மணிசிடி லைட்ஸ்
ரங்கோன் ராதாகேஸ் லைட்
நாடோடி மன்னன்ப்ரிஸனர் ஆஃப் ஜெண்டா
நல்ல தம்பிமிஸ்டர் டீட்ஸ் கோஸ் டு டௌன்.
சொர்க்க வாசல்க்வீன் க்றிஸ்டினா.
மே மாதம்ரோமன் ஹாலிடே
குணாடை மீ அப் - டை மீ டெளன்
யோகிTSOTSI
விடை :- ‘மேட்ச்’ செய்ய என்னை இருக்கிறது?  இடது புறமுள்ள தமிழ்ப்படங்கள் வலதுபுறப் படங்களை தகுந்த அனுமதியுடனோ,  அல்லது அனுமதி இன்றியோ, தழுவி, அல்லது இறுகத் தழுவி எடுக்கப்பட்டவை என்று சொல்லப்படுகின்றன.

Saturday, December 25, 2010

சிறிது சினிமா - 1

சிறிது சினிமா - 1

பிரசுரம்:சொல்வனம்-இதழ் 39 | 30-11-2010  
 
சுமார் இரண்டு மாதங்கள் சிங்கப்பூரில் மகள் வீட்டில். தங்கை வீடும் இங்குதான். பாதி நாட்கள் கழிந்து விட்டன. சில திரைப்படங்களை வீடியோ / தொலைக்காட்சியில் பார்க்க முடிந்தது. களேபரமான காம்பினேஷன்.

12-angry-men-old-dvdcover 

12 ஆங்ரி மென்’- (12 Angry Men) ஹென்றி ஃபோண்டா தயாரித்து நடித்தது. நான்கு ஆஸ்கர் நாமினேஷன்கள். 1957 வருடப் படம். சேரியில் வாழும் ஒரு ஏழைப் பையன் தந்தையைக் கத்தியால் குத்திக் கொன்ற வழக்கு. படம் ஆரம்பிக்கையிலேயே நீதிமன்ற விசாரணைகள் மற்றும் குறுக்கு விசாரணைகள் முடிந்து ஜூரர்களின் சிபாரிசுதான் பாக்கி. 12 ஜூரர்கள். விதவிதமான பின் புலம், வயது, வாழ்வு மற்றும் சமூகம் பற்றிய நோக்கம். அனுசரணை, ஆதிக்கம், சமரசம், கூச்சம் என பல்வேறு மனநிலைகள். பூரண ஈடுபாட்டிலிருந்து, கடனெழவே என்கிற பங்கெற்பு வரை தெரியும் விதவிதமான அணுகு முறைகள்.

ஒரே ஒரு சிக்கல். பனிரெண்டு பேரும் ஒருமனதான முடிவை / சிபாரிசை தெரிவிக்க வேண்டும். அந்தப்பையன் குற்றவாளியா இல்லையா என்கிற கேள்விக்கு ‘ஆம்’அல்லது ‘இல்லை’ என்கிற பதில் தான் சிபாரிசு. ஒருவர் மாறுபட்டிருந்தாலும் அது ஜூரர்களின் சிபாரிசாகாது. சாட்சிகளும், பின்புலமும், பின்கதையும் ஏற்கனவே பையன் நள்ளிரவில் தந்தையைக் குத்திக் கொன்றுவிட்டு படிகளில் இறங்கி ஓடியதை நிரூபித்தாயிற்று. ‘ஓபன் அண்ட் ஷட்’ கேஸ். ஐந்து நிமிடங்களில் முடிவைச் சொல்லி விடலாம்.

ஜுரர்களில் தலைமை தாங்கி நடத்திச் செல்பவர் முடிவை ஓட்டுக்கு விடுகிறார். பதினோரு பேர் ‘ஆம்’ என்கையில் ஒரு கை உயராமல் ‘சந்தேகமாக இருக்கிறது’என்கிறது. பிறகு அடுத்த சில மணிகளில் அந்த ‘ஓபன் அண்ட் ஷட்’ கேஸ் என்னவாகிறது என்பதுதான் படம்.

தயாரிப்பாளர் ஹென்றி ஃபோண்டா மட்டுமில்லாமல் வேறு பலரும் சிறப்பாக நடித்திருந்தார்கள். மூன்று நிமிடங்களைத் தவிர முழுப் படமுமே ஒரே அறைக்குள் படமாக்கப் பட்டிருந்தது. அதுவும் நாம் இப்போதைய படங்களில் காணும் சௌகர்யமான அறை இல்லை. ஓடாத ஃபேன், வெளியே கொட்டும் மழையால் இறுக்கமான (கோவையில் இதை உப்புசம் என்பார்கள்) சூழல், வியர்வை. எரிச்சல். ஒரு பெண் கூட நடிக்கவில்லை. கொலை, அதைத் தொடர்ந்து, மற்றும் அதற்கு முன் நடந்தவை எல்லாமே வசனத்தில்தான் வருகின்றன.

பெரிய உணர்ச்சி கொந்தளிப்புகள் இல்லை. ‘உபதேசங்களுக்கு’ வாய்ப்பிருந்தும் இடம் பெறவில்லை. இது வரை எடுக்கப்பட்ட படங்களிலேயே மிகச் சிறந்தவைகளில் ஒன்று’ என்று பெயர் வாங்கியுள்ள படம்.

ஓரிருவரின் நடிப்பு பிறருடையதைப் போல் அமைந்திருந்தால், துளி எட்டிப் பார்க்கும் மேடை நாடகத் தன்மையும், கதை ஓட சிறிதளவு உபயோகப்படுத்தி இருக்கும் உத்தியும் தவிர்க்கப் பட்டிருந்தால் நாமினேஷன்களை தாண்டி ஆஸ்கர் வென்றிருக்கக் கூடும். ஆஸ்கர் இல்லவிட்டால்தான் என்ன?

அடுத்து ‘டிஸ்ட்ரிக்ட் 13’ என்கிற ஃப்ரென்ச் படம். ‘parkour’ சண்டைகளுக்காக புகழ்பெற்ற படம்.http://www.youtube.com/watch?v=bTyWfbvX0xQ&feature=player_embedded
அரசு இயந்திரம் செயலற்றுப்போய் நுழைய முடியாத ஒரு தாதா மாவட்டத்தில் இரண்டு இளைஞர்கள் - ஒருவர் அங்கேயே பிறந்து அதை தூய்மைப் படுத்தவேண்டும் என்கிற முனைப்பில் இருப்பவர்; இன்னொருவர் போலிஸ் இலாகாவில் உள்ள இலட்சியவாதி. முதலிலிருந்து முடிவு வரை ஒரே ஓட்டம்தான், வசனங்களிளும். சாதாரணமாக இப்படி எடுக்கப் படும் படங்களில் ‘உயிர்’ இருக்காது. மறைக்கப்பட்ட சங்கிலிகள், கயிறுகள், ‘கம்ப்யூட்டர் க்ராஃபிக்ஸ்’ போன்ற உபகரணங்களால் அசாதாரணமான சண்டைகள் காட்டப்படும் இக்கால கட்டத்தில் இவை எதுவுமில்லாமல் இயற்கையான சண்டைக் கட்சிகள். மனித உடலின் அதி வேகம், சக்தி, வளையும் தன்மை போன்றவற்றைக் காண நிம்மதியாக இருந்தது. இரண்டு கதாநயகர்களும், பிறரும் சரியாக நடித்திருந்தார்கள். பெரிய தாதாவை இருவரும்போட்டு துகைக்காமல் யாரோ வேறு சிலரால் அவர் கொல்லப் படுவது இன்னொரு நிம்மதி. கூர்மையான வசனங்கள். திருப்பங்கள். அமெரிக்கப் படங்களின் உயிரின்மையும், போலி நெகிழ்வுணர்ச்சிக் காட்சிகளும் இல்லாத மகிழ வைக்கும் படம்.

மூன்றாவதாக ‘இன் கோஸ்ட் ஹவுஸ் இன்’ (In Ghost House Inn) என்கிற மலையாளப் படம். காமெடி த்ரில்லர். நிறைய திருப்பங்களும், சுற்றல்களும். முகெஷ், ஜகதீஷ், சித்திக், அசோகன்,நெடுமுடி வேணு மற்றும் பலர்.  பதினெட்டு வருடங்களுக்கு முன் முதல் நால்வரும் நடித்த இன் ஹரிஹர் நகர் வந்தது. (இது தமிழில் எம்.ஜி.ஆர் நகரில் என்று ஆனந்த் பாபு, விவேக், சின்னி ஜெயந்த், சார்லி நடித்து வந்ததாக நினைவு. ) மீண்டும் சமீபத்தில் அதேகூட்டணியில் ‘2, ஹரிஹர் நகர்’ வந்து உடனே ‘கோஸ்ட் ஹவுஸ்’. படு சுவாரஸ்யமாக நேரம்போவதே தெரியாதபடிக்கு இருந்தது.

‘மர்டர் பை டெத்’ நான் பார்த்ததிலேயே சிறந்த அற்புதமான காமெடி த்ரில்லர். காமெடியும், கொலையும் சேர்ந்து வந்து கலக்கிய தமிழ்ப்படம் 1966-இல் வெளிவந்த ‘சாது மிரண்டால்’. இதில் சில நகைச்சுவை காட்சிகளை மட்டும் மீண்டும் பார்த்தேன். நடிப்பின் சிகரங்களை இப்படத்தில் பார்க்கலாம். நகைச்சுவைக்குப் புகழ் பெற்ற டி.ஆர்.ராமச்சந்திரனின் அற்புதமான சீரியஸ் நடிப்பு. நாகேஷ் கேட்கவே வேண்டாம். மிகக் கச்சிதமான, தரமான ஓ.ஏ.கே. தேவரின் நடிப்பு. மனோரமா. இதில் ஏ.கருணாநிதி வரும் காட்சியைப்பார்த்துவிட்டு யாராலாவது சிரிக்காமல் இருக்க முடியுமென்றால் அவர் வேற்று பிரபஞ்சவாசியாகத்தான் இருக்கக் கூடும். கொஞ்ச நேரத்தில் அந்த சமயங்களில் சீரியஸ் பாத்திரங்களிலேயே நடித்து வந்த டி.எஸ்.பாலையாவின் அதி அற்புத நகைச்சுவை நடிப்பு. அவர் பாடும் கர்நாடக இசைப் பாடல்களை அவர் நடிப்போடு கேட்கையில் எப்பேற்பட்ட மேதை என்கிற எண்ணம் மேலெழுகிறது. மொத்தமாக மாமேதைகள் பலர் சேர்ந்து நடித்திருந்தபடம். நகைச்சுவை த்ரில்லர்.

பிறகு ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’. மேற்சொன்ன த்ரில்லர் படங்களையெல்லாம் விட என்னை திடுக்கிட வைத்த படம். முதல் த்ரில். ஆர்யாவை எனக்குப் பிடிக்கும், அவர் என் நண்பர் சுகா இயக்கும் திரைப்படத்தின் தயரிப்பாளர் என்பதால். மற்ற படி நடிப்பு கிடிப்பு என்றெல்லாம் அவர் என்னை தொந்தரவு செய்ததேயில்லை. ‘பாஸ்’படத்தில் நடித்திருந்தார். நயனதாராவும், சந்தானமும் கூட ஆச்சர்யகரமாக நன்றாக நடித்திருந்தார்கள். பெஸ்ட் பர்ஃபார்மென்ஸ் சரவணனாக நடித்த பஞ்சு அருணாசலத்தின் மகன், ‘பாஸ்’ஸின் தாயாரக நடித்தவர், சித்ரா லட்சுமணன். படம் தொந்தரவு செய்யாமல் போயிற்று. தமிழகத்தில் பெரிய வெற்றியாம்.

 

கொஞ்சம் கொஞ்சம் ‘மதராசப்பட்டினம்’ பார்த்தேன். பீரியட் ஃபிலிம் என்பதால், அந்த ஐரோப்பிய பெண்ணால், மற்றும் ஆர்யா மீதுள்ள அபிமானத்தால் படம் பார்க்கத் தோன்றியது.

கதைக்குக் கையுண்டா காலுண்டா என்பார்கள். ஒரே புருடா. அதுவும் சுதந்திர நாளன்று ரயில்வே ஸ்டேஷனில் வரும் வெற்றி கோஷங்களும், பொதுமக்கள் உரையாடல்களும் அபத்தக் களஞ்சியம். நல்ல வேளை தலைவர்களாக யாரையும் காட்டவில்லை.

வரலாற்றை இப்படியெல்லாமா திரிப்பார்கள்? 1947 ஆகஸ்ட் பதினைந்து சமய்த்தில் காமராஜர் அகில இந்தியத் தலைவர் இல்லை. சரி தமிழ் நாட்டில் வாழ்க கோஷமிடுகிறார்கள் என்று வைத்துக் கொள்ளலாம். ‘ஆச்சாரியார் வாழ்க’ என்கிறர்கள். பொது மக்கள் ‘ராஜாஜி’ என்றே சொல்வார்கள். திராவிட இயக்கத்தினர் முதலில் ‘ஆச்சாரியார்’ என்றும் பின்பு ‘மூதறிஞர்’ என்றும் சொல்வது வழக்கம். இப்போது எல்லோரும் மூதறிஞர் என்றே சொல்கிறர்கள். பெரியாரின் தி.க. சுதந்திர தினத்தை துக்க தினமாகக் கொண்டாடியவர்கள். ப்ரிட்டிஷ் காரர்களை தொடர்ந்து ஆட்சி செய்யுமாறு கோரியவர்கள். அவர்கள் ராஜாஜியை வாழ்த்த வாய்ப்பில்லை.

வரலாற்றுப்படி ராஜாஜி சுதந்திரத்துக்கு முதல் நாளே கல்கத்தா சென்றுவிட்டார், கவர்னராக. ஆகஸ்ட் 15 அன்று கல்கத்தாவில் இருந்தார். ராஜாஜி உத்தரவுப் படி ‘கவர்ன்மென்ட் ஹவுஸ்’ பொது மக்களுக்குத் திறந்து விடப்பட்டது. 2,00,000 சாமானியர்கள் உள்ளே வந்து சுதந்திரத்தைக் கொண்டாடினார்கள். மறு நாள் வங்காளத்தில் முகாம் இட்டிருந்த மகாத்மா காந்தியை சந்திக்கிறார். காந்திஜியின் கரங்களை ராஜாஜி தன் கரங்களில் எடுத்துக் கொள்கிறார். இருவரும் ஒன்றும் பேசாமல் வெகு நேரம் இருக்கிறார்கள். ஆனால் மதறாசப் பட்டினத்தில் ‘ஆசாரியார் வாழ்க’ (என் காதில் விழுந்தது சரி என்றால்) என்று அவரை வரவேற்க ரயில்வே ஸ்டேஷனில் கோஷமிடுவது போல் வருகிறது.

இதற்கெல்லாம் சிகரம் ‘சத்தியமூர்த்தி வாழ்க’ தான். ஆசாரியாரும் சத்தியமூர்த்தியும் வண்டியில் வருவதாக வேறு பேசிக் கொள்கிறார்கள். 28-3-1943ல் இறந்து போன சத்திய மூர்த்தியின் ஆவிதான் அங்கு வந்திருக்கக் கூடும். அந்த அளவில் ம.ப.(மதராசப் பட்டணம்)வும் ஒரு ம.ப. (மர்மப் படம்) ஆகிவிட்டது.

Monday, December 21, 2009

அமெடியஸ் - திரைப்படம்.

அமெடியஸ் - திரைப்படம்.


வ.ஸ்ரீநிவாசன்.



(Whether angels play only Bach in praising God, I am not sure. I am sure, however, that en famille they play Mozart.)


‘அமெடியஸ்’ திரைப்படம் இசை மாமேதை மொஸார்ட்டின் (வுல்ஃப்கேங் அமெடியஸ் மொஸார்ட்) கதை.







ஆனால் அவர் காலத்தில் வாழ்ந்த இசை வல்லுனர் அன்டோனியோ சலய்ரியின் மூலமாக ‘ஃப்ளாஷ் பேக்’கில் சொல்லப் பட்டது.


சலய்ரி, இசையில் மெய்மறந்து போகும் சிறுவன். அவன் தந்தைக்கு இசை ஒரு பொருட்டல்ல. அதே காலகட்டத்தில் சலய்ரி, தன் பிள்ளையை பயிற்றுவித்து வெவ்வேறு முக்கிய மனிதர் சபைகளில் இசைக்கச் சொல்லும் அமெடியஸின் தந்தையைப் பற்றியும் கேள்விப் படுகிறான். அமெடியஸ் ஒரு ‘பயிற்றுவிக்கப் பட்ட வித்தை காட்டும் குரங்கு’ என்கிறார் சலய்ரியின் தந்தை.


இசையால் உயிர் கவ்வப் பட்ட சலய்ரி, கடவுளிடம் தனக்கு மகத்தான திறமையைத் தரச் சொல்லி வேண்டுகிறான். அதற்கு காணிக்கையாக தன் எல்லாவற்றையும் தர சித்தமாயிருக்கிறான். ‘ஒவ்வொரு மணிநேரமும் என் இசையால் உன் புகழ் பாடுவேன்’ என்னும் சலய்ரியின் வாழ்வில் உடனே ஓர் அற்புதம் நடக்கிறது. தொண்டையில் உணவு சிக்கி அவன் தகப்பனார் இறக்கிறார். தடை நீங்கி விட்டது. சலய்ரி இசை பயின்று வியன்னாவுக்குச் சென்று அரசரின் ஆஸ்தான இசைக் கலைஞராகிறார்.


மீண்டும் அமெடியஸ். அவன் வருகை தெரிந்து அந்த இடத்துக்கு சலய்ரி போகிறார். இசை கேட்க குழுமி இருக்கும் மனிதர்களிடையே அவனைத் தேடுகிறார். அவன் ஒர் இளம் பெண்ணுடன் விளையாடிக் கொண்டு இருக்கிறான். சலய்ரி ஒளிந்திருப்பது தெரியாத இருவரும் ஓர் அறையில் சல்லாபித்துக் கொண்டே சொல் விளையாட்டு ஒன்றை ஆடுகிறார்கள். கடைசியிலிருந்து ஆரம்பம் வரை எழுத்தொலிகளை தலைகீழாகக் கூறி அப்படி சொல்கையில் ‘கிஸ் மை ஆஸ்’ ‘ஈட் மை ஷிட்’ என்கிற வாக்கியங்கள் வருமாறு விளையாடுகின்ற, அவன் ஆபாசப் பேச்சும், நாசூக்கற்ற நடவடிக்கைகளும் அவரை தாக்குகின்றன. அந்த நிமிஷம் அவன் இல்லாமலேயே அவனது இசை அவையில் வாசிக்கப்படுவதைக் கேட்டு அங்கு ஓடிச் சென்று இசைக்க ஆரம்பிகிறான்.


இசை நர்த்தனம் புரிகிறது. மழையாய்ப் பொழிகிறது. பூக்களைத் தலையாட்டச் செய்கிறது. வருடி விடுகிறது. விம்மிப் பதைக்கிறது. எம்பி குதிக்கிறது. இதயம் நிரம்பி வழிந்து உலகெலாம் நிறைகிறது. என்ன தெய்வீகம் ! எந்த உலகத்தது?


ஆனால் கடவுளின் இவ்விசை உலகை நிரப்புவது இதற்கென்றே சகலத்தையும் துறந்த , சகலத்தையும் உணர்ந்து ரசிக்கிற சலய்ரி மூலம் அல்ல, ஒரு நாசூக்கற்ற, கோமாளித் தனமான, கெக்கெலி கொட்டி இடம் பொருள் ஏவல் தெரியாமல் சிரிக்கிற,











அனாச்சாரமான அமெடியஸின் மூலம். ‘என்ன அநியாயம். இசையை ரசிக்கிற, இசையில் உருகுகிற ரசனையை மட்டும் கொடுத்து மகத்தான சிருஷ்டித் திறனைத் எனக்குத் தராமல் ஒரு ஆபாச, அல்ப, விளையாட்டுப் பிள்ளைக்கு இத்தனை திறமையைக் கொடுத்தாயே, எனக்கு துரோகம் செய்து விட்டாயே, கடவுளே’ என்கிற சலய்ரியின் வாழ்வு மாறிப் போய் விடுகிறது. கடவுளின் எதிரி என்று தன்னைப் பிரகடனப் படுத்திக் கொள்கிறார். கடவுளின் தேர்வான அமெடியஸை அழிப்பதே தன் வேலை என்றும் சூளுரைக்கிறார்.






படம் சலய்ரியின் தற்கொலை முயற்சியில் ஆரம்பிக்கிறது. மன நோய் காப்பகத்தில் அமெடியஸின் மரணத்துக்குப் பின் 32 வருடங்கள் அந்தக் குற்ற உணர்விலேயே பயித்தியமான அவரை ஒரு பாதிரியார் சந்திக்கையில் அவரிடம் தன் கதையைச் சொல்வது போல் படம் நடக்கிறது.



பாதிரியாரிடம், “என்னை யார் என்று தெரியுமா” என்பவரிடம் அவர் ‘ எனக்கு அது அவசியமில்லை. துயர்படும் ஆத்மாக்களுக்கு ஆறுதல் அளிப்பதே என் வேலை.’ என்கிறார். தொடர்ந்து “கடவுளின் படைப்பில் அனைவரும் சமம்” என்கிற பாதிரியாரிடம் சலய்ரியின் கேள்வி”அப்படியா சமமா?” இது மனித வாழ்வின் அடிப்படைக் கேள்வி. பாக்கிப் படம் அப்படி சமம் இல்லை என்பதை சலய்ரியின் கோணத்தில் விவரிக்கின்றது.





***************



அமெடியஸ் அப்பாவியாக இருகிறான். அவனது இசை மேதைமை மட்டுமே அதற்கான அங்கீகாரம் பெறுவதற்கு போதுமான தகுதியாக இவ்வுலகம் இல்லை.


சலய்ரியின் சூதால் அவன் ஆபெராக்கள் ஒன்பது முறைகளும், ஐந்து முறைகளுமே மேடை ஏற்றப் படுகின்றன.


ஆனால் அவன் சலய்ரிதான் தனக்கு அரசில் இருக்கும் நண்பன் எனக் கொள்கிறான். அவனிடம் தன் ஆதங்கங்களைச் சொல்கிறான்.


இது கொஞ்சம் உண்மை வரலாற்றாலும், மிகுந்த கற்பனையாலும் பின்னப் பட்ட திரைக் கதை. அமெடியஸின் தாய், அவன் முதல் காதலி, (மனைவியின் மூத்த சகோதரி) இன்னொரு மகன் பற்றியெல்லாம் இல்லை. சலய்ரி பற்றிய வடிவாக்கமே அவர் குற்றவுணர்வு கொண்டிருந்தார் என்கிற செய்தியின் அடிப்படையில் எழுந்தது.


நாடகமாக பலமுறை மேடை எற்றப்பட்டு மெருகேறி, மெருகேறி கிட்டத்தட்ட ‘பர்ஃபெக்ட்’ டான வடிவத்தில் இத்திரைப்படம் வந்துள்ளது.


சில காட்சிகள்:


ஒரு இசை நாடகத்தை ஜெர்மானிய மொழியில் செய்வதா இத்தாலிய மொழியில் செய்வதா என்கிற பிரச்னை வரும்போது இத்தாலிய மொழியையே பண்டிதர்கள் பரிந்துரை செய்கிறார்கள். அங்கும் நீச பாஷை, தேவ பாஷை உண்டு போலும். அமெடியஸ் ஜெர்மானிய மொழியையே தேர்ந்து எடுக்கிறான். அவனுக்கு நாசூக்கு தெரிவதில்லை. அவனிடம் ‘ஈகோ’ இல்லை. அரசரை அவன் கேட்கிறான். “பெரியவர்களைப் பற்றி மட்டுமே, உயர்ந்தவர்களைப் பற்றி மட்டுமே கடவுளர்களைப் பற்றி மட்டுமே கலைகளைப் படைக்க வேண்டுமா? அவர்கள் மட்டுமென்ன மார்பிளை (marble)யா கழிக்கிறார்கள்? (டு தே ஷிட் மார்பிள்?) என்கிறான். அரசர் முன்னிலையில் பேசக்கூடிய வாசகமா? அவை அசௌகரியமான நிசப்தத்தில் ஆழ்கிறது. அடுத்த நொடி அவனது அப்பாவியான இரைந்த கெக்கெலி கொட்டும் சிரிப்பு. Innocence is ashamed of nothing. Roussau.



அமெடியஸ், அவன் மனைவி, அவன் தந்தை மூவரும் அவர் (தந்தையின்) வருகையை கொண்டாட ஒரு இரவுப் பார்ட்டிக்கு செல்கிறார்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு முகமூடி கொடுக்கப் படுகிறது. அலங்காரமான, அரை முகத்தை மூடும், முழு முகத்தை மூடும், இரண்டு புறமும் முகமிருக்கும் முகமூடிகள் என்று வித விதமான முகமூடிகள்.; அங்கே சலய்ரியும் வருகிறார். ஒரு முகமூடியுடன். ஒரு விளையாட்டில் தோற்ற அமெடியஸின் மனைவியை மேடையில் ஏற்றி விளையாட்டாக தண்டனை அளிக்கிறார்கள். என்ன தண்டனை தராலாம் என்று கூட்டம் உரக்க யோசிக்கையில் ‘அவளை தன் கால்களைக் காட்டச் சொல்லுங்கள்’ என்று ஒரு சிரிக்கும் குரல் சொல்கிறது. அது அமெடியஸினுடையது. கூட்டம் சிரிக்கிறது. சிரித்தவாறே அவளும் தன் ஆடையைத் தூக்கி ஸ்டாக்கிங்க்ஸால், மறைக்கப் பட்ட தன் கால்களை காட்டுகிறாள். அடுத்து அமெடியஸின் முறை. வேடிக்கையான தண்டனை. அவனை தலைகீழாய்த் தொங்க விட்டு பியானோவை வாசிக்கச் சொல்கிறார்கள். முதுகுப் புறம் பியானோவைப் பார்த்தவாறு கைகளை மாற்றி என்று தொங்கியவாறே வாசிக்கிறான். ஒவ்வொரு இசைக் கலைஞன் மாதிரியும் வாசித்துக் காட்டும் அவன் ஒரு சமயம் சலய்ரியின் இசையை வாசிக்கிறேன் என்று குனிந்து, பின்புறத்தைக் காட்டியவாறே ‘புர்’ரென்ற ஒலியை வாயினால் எழுப்புகிறான். கூட்டம் சிரிக்கிறது. சலய்ரி அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருக்கிறார்.





இவையனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கும் அமெடியஸின் தந்தை இதையேல்லாம் ரசிக்கவில்லை. அவர் முகமூடி ஒருபுறம் சிரீயஸாகவும் மறுபுறம் சிரித்துக் கொண்டும் இருக்கும் இருபுறமும் உள்ள முகமூடி..



கொஞ்ச நாட்களில் நிகழும் தந்தையின் மரணம் அமெடியஸைப் பெரிதும் பாதிகிறது. அதன் முலம் பிறந்த இசை நாடகத்தின் மகிமையை சலய்ரி உணர்கிறார். அதுவும் வெற்றியடையாமல் செய்கிறார். அதில் மரணத்திலிருந்து எழுந்து வருவது அமெடியஸின் தந்தையின் உருவகம்தான் என்பது அறிந்த சலய்ரி அத்தந்தையின் ஆளுமையை உபயோகப் படுத்தி அதே இரு புற முகமூடி அணிந்த ஒருவனை அனுப்பி





 ‘இறந்தவர்களின் ஆத்மா சாந்தி அடைவதற்கான ‘தொழுகை பிரலாபம்” (“Mass requiem”) தனக்கு அளிக்குமாறு கேட்கிறார். (மரண கீதத்தை எழுதச் சொல்லும் தந்தையின் தோற்றத்தை அந்த முகமூடியின் மூலம் கொண்டு வரும் உருவம் பண முடிப்பைக் கொடுத்து விட்டு திரும்பிச் செல்கையில் அது இறங்கிச் சென்ற சில நொடிகளுக்குப் பிறகும் அதன் நிழல் சென்று கொண்டிருக்கும், அவரது தாக்கம் என்றும் அவர் இறப்பிற்குப் பின்பும் தொடரும் என்பதாக.)



சிருஷ்டிக்கும் இசையில், இரண்டறக் கலக்கும் அமெடியஸைக் கொல்ல சலய்ரி கையாளும் ஆயுதம் அந்த தொழுகை பிரலாபம்.அதற்கு பெரிய சம்பளமும் கொடுக்கிறார். பணத் தேவை மிகுந்த அமெடியஸ் ( அவன் கொண்டு வந்த ஒன்பது சிமிழ்களில் இருந்த அத்தனை பொற்காசுகளும் தீர்ந்து விட்டன) அந்த வேலையை ஒத்துக் கொள்கிறான்.



மனனவி, குழந்தையுடன் அவனை விட்டு விட்டுப் போய்விட்ட ஒருநாளில் அரங்கிலேயே மயங்கி விழும் அவனை சலய்ரி வீட்டுக்கு கொண்டு வந்து உடனிருக்கிறார். விழித்த அமெடியஸ் ‘நான் ஒரு முட்டாள். நீங்கள் என் இசையைப் பொருட்படுத்தியதில்லை என்று தவறாக எண்ணியிருந்தேன். என்னை மன்னியுங்கள்” என்கிற போது யார் யாரிடம் மன்னிப்பு கேட்பது என்று நமக்கு அழுகையும், கோபமும் வரும். படுக்கையிலிருந்து எழ முடியாது, எழுத முடியாது தொய்ந்து போய் இருக்கும் அவன் ‘மரண இசை’யை சொல்லச் சொல்ல சலய்ரி அதை எழுதிக் கொள்கிறார்.







அமெடியஸின் மனைவியும், மகனும் வருகிறார்கள். களைப்பின் உச்சியில் இருந்த அமெடியஸ் மேல் இருக்கும் மரண இசையின் நொடேஷன்கள் நிரம்பிய காகிதங்களை பார்க்கும் அவன் மனைவி, அதை எழுதினால் அதில் முழுதுமாய் ஈடுபட்டு அமெடியஸே இறக்க நேரிடலாம் என்று உணர்ந்து அதை மேற்கொண்டு எழுதக் கூடாது என்று எடுத்து வைத்து விடுகிறாள். சலய்ரியையும் வெளியே போகச் சொல்கிறாள். ‘அமெடியஸ் சொல்லட்டும், போகிறேன்’ என்று நிற்கும் சலய்ரிக்காக ‘போகச் சொல்’ என்று அமெடியஸின் அருகே செல்லும் அவள் அவன் இறந்து விட்டதை உணருகிறாள்.



அமெடியஸின் உடல் ஒரு வெள்ளைத்துணியில் சுற்றப் பட்டு வேறு பல பிணங்கள் இருக்கும் ஒரு புதைகுழிக்குள் போடப் படுகிறது. அடையாளம் எதுவும், அறிவிப்பு எதுவும் இல்லாமல். தனியாய் அறிவிப்போடு புதைக்கப் பட்டிருந்தால் மட்டுமென்ன? அதனால் அமெடியஸுக்கு என்ன லாபம்? நாம் நம் நெற்றியில் அந்த ஞாபகச் சாம்பலைப் பூசிக் கொள்ளலாம் என்பதை தவிர.





‘பாதிரியாரை ரட்சிகிறேன் , இந்த உலகில் உள்ள நடுவாந்திர ( mediocre) மனிதர்கள் அனைவருக்குமான பிரதிநிதி நான்’ என்று நம்மனைவரின் பிரதிநிதியாய் சலய்ரி கூறிச் செல்கையில் அமெடியஸின் அந்த வெகுளித்தனமான, மரியாதை- அவமரியாதை, புனிதம்-ஆபாசம், கௌரவம்-கீழ்மை அனைத்திற்கும் அப்பாற்பட்ட இவ்வாழ்க்கையின் ஒரே உண்மை முன் நம்மை நிர்தாட்சண்யமாய், ஆனால் நோக்கமற்று நிறுத்துகின்ற கெக்கலி சிரிப்போடு படம் முடிவடைகிறது.





***********





காட்சிகளின் ஆரம்பம், ஒளி அமைப்பு, பின்னணி இசை, கை விரல்களும், பாத்திரத்தின் முழு உடலும், கண்களும் இசைக்க தொடங்குகையிலேயே பின்னால் பொங்கி எழும் இசை பிராவாகம், அது காட்சியாய் மாறுவது, இடையே மீண்டும் சொல்பவர், ஒரு வார்த்தை, ஒரு விரலசைப்பு. மொஸார்ட்டின் ஒரு ஸ்வரத்தைக் கூட மாற்ற முடியாது என்பது போல ஒரு ‘ஷாட்’டைக் கூட மாற்ற முடியாத காட்சிகள்.





குறைகள் எனில், ஒரு காட்சியில் பாதி எரிந்த மெழுவர்த்தி, பின்பு முழுதுமாய்த் தெரிவது முதலியவை மற்றும் சரித்திர திரிபுகள் பற்றி படித்தேன். எனக்குத் தோன்றுவது, ‘ஃப்ளாஷ் பேக்’ உத்தியில், சலய்ரி சொல்லும் கதையில் அவர் இல்லாத காட்சிகள் கூட படத்தில் இடம் பெறுவது.





மகத்தான நடிப்பு. அமெடியஸ் சசின் டெண்டுல்கரை நினைவுறுத்தும் பாலகனுடைய முகம் கொண்ட இளைஞர் டாம் ஹல்ஸ். சலய்ரி ‘ஓம் பூரி’ போல் முகம்கொண்ட முரேஅப்ரஹாம். நாம் வாழும் இருவரைப் பார்க்கிறோம். அந்த இருவர் மட்டுமல்ல, அமெடியஸின் “வுல்ஃபி’ என்று கொஞ்சும், இறுதி நாட்களில், இசை நாடகம் வேண்டும் என்று வருபவர்களிடம் பணம் பற்றி பேசும், சம்பளம் இன்றி வரும் வேலைக்காரியை வேண்டாம் என்று சொல்லும் மாமனாரிடம் நீங்கள் யார் இதைச் சொல்ல என்று கேட்டு அவளை வேலைக்குஅமர்த்திக்கொள்ளும், மொஸார்ட்டோடு விளையாடும், அவனைப் பிரிந்து போயும் தன்னை அணைத்து பார்ட்டியில் ஆடிக் கொண்டிருப்பவனிடம் ‘நான் செய்வது தப்பு’ என்று கணவனிடம் ஓடி வரும், சலய்ரியை மொஸார்ட்டின் அறையில் கண்டதும் ‘போய் விடுங்கள், துரதிருஷ்டவசமாக உங்களை வெளியே அனுப்ப எங்களிடம் வெலையாட்கள் இல்லை’ என்று நிச்சயத்தோடு கூறும், அமெடியஸின் மீது அவன் இன்னொஸென்ஸின் மீது அவன் மகத்தான மேதைமையின் மீது காதலைப் பொழியும் மனைவியாக வரும். எலிஸ்பத் பெர்ரிட்ஜ்... . .கும்மாளம் இடும் மகன், தான் வேண்டாம் என்று சொன்ன பெண்ணைத் திருமணம் செய்து கொண்டவன், தன் ‘கனவின் நினைவுருவம்’ அதன் கட்டை மீறி செல்வதைக் காணச் சகிக்காமல், அவன் நன்மைக்காகவே என்று வாழும் கண்டிப்பான தந்தை, சலய்ரியால் ‘ஒற்று’ செய்யவரும் சம்பளமில்லாத வேலைக்காரி, ஆர்ச் பிஷப், மன்னர், அவர் கூடவே இருக்கும் பிரபுக்கள், பிரபலஸ்தர்கள், தனியே அரசின் உதவியின்றி செயல்படும் ஆபெரா குழுக்கள், ஒவ்வொருவரும் வாழ்கிறார்கள் நம்மனைவரின் குறைகளோடு, நிறைகளோடு, குமுறல்களோடு, ஆசாபாசங்களோடு, டாம்பீகத்தோடு.



நீதி, நியாயம், கடவுள், அவர் சித்தமென்று மனித குலம் கற்பித்துக்கொண்டுள்ளவை பற்றி சந்தேகங்களையும், கேள்விகளையும் எழுப்பும் படம்.



வாழ்வில் இசையில் அமெடியஸிடம் ஒட்டு மொத்தமாக தோல்வியுற்ற சலய்ரி ஒரே இடத்தில் வென்றார். சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் பரிசு சலய்ரியாக நடித்த முரே அப்ரஹாமுக்குக் கிடைத்தது. அதே பிரிவில் போட்டி யிட்ட டாம் ஹல்ஸ் தோற்றார். சிறந்த துணை நடிகர் பிரிவில் அவரை சேர்த்திருந்தால் நிச்சயம் அவருக்குத்தான் பரிசு கிடைத்திருக்கும். இரண்டு பேருக்கு பரிசை பிரித்து வழங்கும் வழக்கம் இருந்தால் அவருக்கும் கிடைத்திருக்க வேண்டும். அது போன்ற நடிப்பு எப்பொதாவதுதான் காணக் கிடைக்கிறது.



பீடர் ஷாஃபர், மிலோஸ் ஃபோர்மன் எனும் மேதைகளின் படைப்பு இப்படம். இதன் இசையமைப்பாளர், மொஸார்ட்டின் ஒரு நோட்டைக் கூட மாற்ற அனுமதிக்க மாட்டேன் என்று சொன்னவர். மேடையை விட சினிமாவில் இசையை அதிகம் சேர்க்க முடிந்திருக்கிறது. எட்டு ஆஸ்கார் பரிசுகளை வென்ற படம்.





‘மனிதர்கள் வாழ்வது எதனால்?’ என்ற கேள்வியைக் கேட்டு ‘பிறரின் அன்பால்’ என்று டால்ஸ்டாய் சுலபமாகச் சொல்லிவிட்டார். “பிறர் மேல் உள்ள பொறாமையாலும்தான். ‘Jealousy is as cruel as the grave’ என்கிறது விவிலியம். ‘as powerful as love’ என்பதும் உண்மைதான்.

கம்பனும் ஒட்டக் கூத்தனும் இப்படி வாழ்ந்திருக்கலாம். ராஜாஜி இறந்ததற்கு பெரியார் அடக்க முடியாமல் அழுதது எதனால்?



மனித மனதைப் பற்றிய படங்கள் என்னை கவருகின்றன. வாழ்வைப் போலவே பல தளங்களிலும் இப்படம் இயங்குகிறது. இப்படத்தின் (மொஸார்ட்) இசையைக் கேட்கையில், பாமரனான எனக்கே All art constantly aspires towards the condition of music என்பது புரிகிறது. ஒரு குறுக்கு வெட்டுத் தோற்றத்தில் ஒரு பொருளின், உள், வெளி, விளிம்பு அனைத்தும் தெரிவது போல் இப்படம் மனிதர்களின் அக புற நிகழ்வுகளை அனாயாசமாய்ச் சொல்லிச் செல்கிறது. வைக்கோல் அடைக்கப் பட்ட கன்றுக் குட்டிகளால் ஆன கலைப் படைப்புகள் என்று சொல்லப் படுபவைகளின் நடுவே சில துள்ளி விளையாடும் கன்றுகளைக் காணும் போது தாங்கொணா பரவசம் வருகிறது. அவ்விதத்தில் இது முதல் வரிசைப் படம். இதன் பரவசமே வாழ்வை சின்னாப் பின்னமாக்கும், மாமேதைமையையும் புழுதியில் எறியும் மனிதர்களின் தன்முனைப்பும், பேதமையும், குரூரமும் நிறைந்த, வெறும் கொடுக்கல், வாங்கலாக வாழ்க்கையைச் சுருக்கிவிட்ட இயல்பைக் காட்டும் சோகம்தான்.



The heart of the melody can never be put down on paper. இசையின் இதயத்தை காகிதத்தில் கொண்டு வர முடியாது. அமெடியஸ் படத்தைப் பற்றியும்தான்.





***********************