FUTURE IS NOW - J Krishnamurti.

பிறப்பு, இறப்பு என்பது உண்மையே இல்லை. அத்தகைய பொய்யான தோற்றத்தை நமது மனமே உருவாக்கிக் கொள்கிறது. மனம் தனக்கென்று ஒரு உடலை உருவாக்கிக் கொள்கிறது. அதைக் கனவு மழையில் நனைத்துத் துன்பப் படுத்துகிறது. - ரமண மகர்ஷி.

Search This Blog

Showing posts with label நூற்கடலின் கரையில்.... Show all posts
Showing posts with label நூற்கடலின் கரையில்.... Show all posts

Saturday, November 10, 2018

க. நா. சு. வின் ஆட்கொல்லி - ஒரு வாசிப்பு

க. நா. சு. வின் ஆட்கொல்லி - ஒரு வாசிப்பு

வ.ஸ்ரீநிவாசன்

க. நா. சு. பலவிதமான பரிசோதனைகளை எழுத்தில் செய்து பார்த்தவர். அதில் ஒன்று ஆட்கொல்லி. மிகச்சிறிய நாவல். சரியாகச் சொன்னால் ரேடியோ நாவல்; நண்பருக்காக அவர் ரேடியோவில் வாராவாரம் வாசிக்க எழுதிய நாவல்.

ஒரே அமர்வில் இலக்கிய வாசகர்கள் இந் நாவலை படித்து விட முடியும். படிக்கையில் மிக நுணுக்கமான கவனிப்புகள், மனித சுபாவத்தின் விவரணைகள், வாழ்க்கை  பற்றிய கருத்துகள் நாவல் நெடுக இருப்பதைப் பார்க்க முடியும். இத்தகைய நுட்பங்கள் உள்ள நாவல் அதன் நேர்த்திக்கு கொஞ்சம் விலகிய மாதிரியான ஒரு முடிவை கொண்டிருக்கிறது என்றும் தோன்றலாம். அது க.நா.சு. வுக்கே தோன்றி  முன்னுரையிலும் அதை அவர் குறிப்பிடுகிறார். “அப்படித்தான் வந்தது. போகட்டும் என்று விட்டு விட்டேன்” என்கிறார்.

அப்போதுதான் ’ஜேம்ஸ் ஜாய்ஸ்’ கூறியதை* மேற்கோளக்கி இலக்கிய உலகில் பலரும் நிகழ்த்தும் ’கண்ணீர் துளி வர  உள்ளுருக்குதல்’ ஒரு கோடியில் என்றால் நாலைந்து பேர்களுக்கே கைவந்த ’ஒதுங்கி நிற்றல்’ என்கிற மறு கோடியை நமக்கு அறிமுகம் செய்கிறார்.

நாவலில் காணப்படும் சம்பவங்களும், பாத்திரங்களின் குணமும் மிக நுட்பமான கவனிப்புகளோடு விவரிக்கப்படுகின்றன.

     ரயிலில் ஜன்னல் ஓரமாக உட்கார்ந்துகொண்டு வெளியே எதிர்ப்பக்கமாக ஓடிய மரங்களின் ஒரு வரிசையை கண்களை விரலால் அமுக்கி இரண்டாக பண்ணிக் கொண்டிருக்கும் சிறுவன்,


    பேரன், தாய் மாமனின் வீட்டில் சாப்பிடுவதற்கு, அதுவும் பாலும் சோறும் கலந்து தின்பதற்கு வெள்ளிக் கிண்ணம் கிடைக்கும் என்கிற பாட்டி,

    தலையில் டர்பனுடன், மூடிய கோட்டுப் பையில் பேனாவுடன் சாட்சாத் பள்ளிக்கூட உபாத்தியாயரின் நிரந்தர உருவமாக நிற்கிற மாமா,

    கலைத் தேவிக்கு போட்டியாக தோன்றிய ஒரு கேலித்தேவியின் படைப்பாகிய அம்மாமி,

    பெற்றோரின் குணங்களின் சாரலோ, சாயலோ விழாத ஸ்ரீனிவாஸன்…..

என்று இன்னும் பலர்  ஒற்றைப் பரிமாணமாக இல்லாமல்  நாம் வாழ்வில் இருப்பது போலவே நல்லதும் கெட்டதும் கலந்தே வருகிறார்கள்.   

தன் ஆளுமையின் கீழ் அனைத்தையும்   முழுமையாக வைத்திருக்கும் மாமி, ராஜா குழந்தையில் சோறுண்ண மாமா செய்த வெள்ளிக் கிண்ணத்தைப் பின்னாட்களில், “ராஜாவின் வெள்ளிக் கிண்ணம்” என்று குறிப்பிட்டுக் கொண்டே தன் பெட்டிக்குள் பூட்டி வைத்துக்கொள்பவள், குழந்தைக்காக ஏங்குபவளாகவும் இருக்கிறாள். ராஜாவிடம் அன்பாகவும் இருக்கிறாள்.


மேற்படி வெள்ளிக் கிண்ணம் விஷயம் பற்றி சொல்கையில் ”இது சின்ன விஷயம் தான்” என்று முடித்துவிடுகிறார்; முடித்த கையோடு “ஆனால் காற்று எந்தப் பக்கம் அடிக்கிறது என்பதை சிறு துரும்பு தானே காட்டும்? கற்பாறையா காட்டும்?” என்று நம்மை மேலும் ஆழமான கவனிப்புக்கு சர்வசாதாரணமாக இட்டுச் செல்கிறார்.

இன்னொரு இடத்தில் ‘குளிக்க இழுத்துக்கொண்டு போகும் நாய்க்குட்டியை போல பின்னங்கால்களை ஊன்றி கொண்டு அசைய மறுத்து விடும்’ என்று மனதைப் பற்றி சொல்கிறார்.

நாவல் முழுதும் ஒரு அலட்சியத்துடன்  கூடிய, லேசான கேலி இழையோடும் கைத்த நகைச்சுவை விரவிக் கிடக்கிறது.

    ”காய்கறி வாங்கக் கொடுத்த எட்டணாவை முழுக்க தொலைத்துவிட்ட விஷயத்தைத் ’தொட்டுக்கொண்டே’ ஒரு வாரம் பூராவும் சாப்பாடு நடந்தது.”

    ”மனிதனுக்கு இன்பம் பெற வழிகள் கணக்கற்றவை இருக்கின்றன. வைக்கோலை சுவைத்து சாப்பிடுவதில் கூட இன்பம் கண்டு விடுவான் மனிதன்.”

    ”அந்த நாட்களில், நான் சொல்கின்ற காலத்தில், பையன்களின் பகிரங்க உபயோகத்துக்கும், உபாத்தியாயர்களின் அந்தரங்க உபயோகத்துக்கும் என்று நோட்ஸ் என்று சொல்லப்படுகிற புஸ்தகங்கள் கிடையாது.”

வாழ்க்கை, வாழ்க்கையில் வெற்றி, பணம், பணம் செய்யும் வழி, அந்தப் பணம் என்னவெல்லாம் செய்யும்?, அதனால் என்னவெல்லாம் செய்ய முடியாது?, கடவுள், தர்மம், அதர்மம், நியாயம், அநியாயம், நம்பிக்கை, மூடநம்பிக்கை,  உலகத்தோடு ஒத்து வாழத்தெரியாதவன், அவன் அனுபவங்கள் ஆகிய எல்லாவற்றைப் பற்றியும் ஆசிரியரின் கூற்றுகள் அந்தந்த சந்தர்ப்பத்துக்கு ஏற்றார்போல் வந்துகொண்டே இருக்கின்றன; என்ற போதிலும் இவை தனியாக, கதை போக்கிலிருந்து விலகி நில்லாமல் இருக்கின்றன. காரணம் இவை அனைத்தும், குறிப்பாக பணம் பற்றிய விஷயங்கள்  அவ்விஷயங்களில் ”ஆசை, பேராசை என்றில்லாமல் நிராசையையே இருபது முப்பது வருடங்களாக பயின்று வந்தேன் நான்” என்று சொல்லிக் கொள்ளும் ராஜா என்கிற கதாபாத்திரத்தால் சொல்லப்படுபவை. அக்கதாபாத்திரத்தின் மனோ தர்மத்துக்கும், மனோ தத்துவத்துக்கும், அவன் வாழ்க்கைக்கும் பொருந்தி வருதவதாலும், நாவலே ’தன்மை’யில்  (first person) அக்கதா பாத்திரம் சொல்வது போன்றே எழுதப்பட்டிருப்பதாலும் இவை மிக அழகாக நாவலோடு இரண்டறக் கலந்து நிற்கின்றன.


இந்நாவல், ஒருவர் பணத்தின் மூலம், அப்பணத்தை தன் சுற்றத்தாரிடம் வட்டிக்குக் கடன் கொடுப்பதன் மூலம் பெரும் பொருள் ஈட்டி விடக் கூடும் என்றாலும் பணம் சேரும் அதே நேரத்தில் அந்தச் சுற்றத்தை அவர் அப்படியே இழந்து விடுவார், அந்தப் பணம் உண்மையில் ஓர் ’ஆட்கொல்லி’ என்ற பார்வையை முன்னால் வைக்கிறது.

நிதர்சன வாழ்வில் பணம் சேர்ந்தவரிடம் உலகம் நடந்துகொள்ளும் விதம் வேறு மாதிரி எல்லாம் கூட இருக்கிறது. ஒரு கூட்டம் கரையும் அதே நேரத்தில் புதுக் கூட்டம் ஒன்று மாலைகள், பெரும் கைதட்டல்கள், சாஷ்டாங்க நமஸ்காரங்கள், புகழுரைகள், ’ஆஹா’க்களோடு  பணம் படைத்த அவருடைய கடைக்கண் பார்வை தன் மீது பட்டு விடாதா என்கிற ஆவலில் தயாராக நிற்கிறதையும் நாம் பார்க்கிறோம்.

க.நா.சு. என்கிற மேதை வாழ்க்கையில் பணத்தின் இடம் பற்றிய குறுக்குவெட்டுத் தோற்றத்தை நமக்கு விவரிக்கும் இந்நாவலில் மனித மன விவரணைகளோடு, வாழ்க்கையின் கணிக்க முடியாத் தன்மையும் மிகத் துல்லியமாக அமைந்திருக்கின்றது

இத்தகைய தன்மை களுக்காகவே தொடர்ந்து நல்ல எழுத்துகளையே வாசர்களுக்கு எடுத்துச் செல்லும் சிறுவாணி வாசகர் மையம் தங்கள் இலக்கியப் பணியில் இந்நாவலையும் வெளியிட்டு வாசகர்களின் வாசிப்பனுபவத்தில் செழுமையை சேர்த்துள்ளார்கள். அவர்கள் பணி மேன் மேலும் சிறக்க வாழ்த்துகள்.

***

  • “The artist, like the God of the creation, remains within, behind or beyond or above his handiwork, invisible, refined out of existence, indifferent, paring his fingernails”  - James Joyce.

Tuesday, May 14, 2013

சி.சு.செல்லப்பாவின் வாடி வாசல் - ஆதார குணங்களின் தெறிப்பு


நூற்கடலின் கரையில்…

வ.ஸ்ரீநிவாசன் | பிரசுரம் : சொல்வனம் : இதழ் 86 | 11-5-2013
சி.சு.செல்லப்பாவின் வாடி வாசல் - ஆதார குணங்களின் தெறிப்பு

சுருக்கமாகச் சொல்வதென்றால் ஒரு ஜல்லிக் கட்டில் தன் தகப்பனைக் கொம்பால் குத்தி அவர் மரணத்துக்குக் காரணமான குறிப்பிட்ட ஒரு காளையை ஓர் இளைஞன் அடக்குவது பற்றிய கதை ‘வாடிவாசல்’.
sisuche_100கதை முழுவதும் ‘இப்போதே’ சொல்லப்படுகிறது. சஞ்சயன் பாரதப் போரை, அதைப் பார்க்க முடியாத திருதிராஷ்டிரனுக்குச் சொன்ன மாதிரி செல்லப்பா நமக்குச் சொல்கிறார். நடக்க நடக்க உடனுக்குடன். முன்னங்கதைகள் கூட இப்போதைய பேச்சில் இந்தக் கணத்தின் நினைப்பில் சொல்லப்படுகின்றன. கதை சொல்ல ஆசிரியர் உள்ளே நுழைவது இல்லை. முன்னால் நடந்ததைச் சொல்வதும் இல்லை. பாத்திரங்கள் இப்போது பேசுவது, இப்போது நினைப்பது என்பதிலேயே பழசும் நமக்குச் சொல்லப்படுகின்றது. சி.சு.செ.வின் காமரா நர்ந்து கொண்டே இருக்கிறது. பேனா தூரிகையாய் வண்ணங்குழைத்து வரைந்து கொண்டே போகிறது. கதை நடக்கும் களம் அப்படிப்பட்டது. துல்லியமான, கூர்மையான, நிகழ் காலத்தின் உக்கிரமான களம். அங்கு பார்வையோ, உடல் அசைவோ ஒரு நொடி தடங்கினால் போதும் மரணம்தான். மாடு அணைபவனுக்கு மட்டுமல்ல, பார்வையாளனுக்கும். புலன்களின் கூர்மை தானாகவே உச்சத்தில் இருக்கும் களம். இந்த ‘இப்போதைக்கு இப்போதே’ நடக்க நடக்க கதை சொல்வது இந்த உடனடி உணர்வை வாசகனுக்கு அப்படியே கடத்துகிறது. வாடிவாசல் ஒரு மகத்தான கதையானதற்கு இதுவும் முக்கிய காரணம்.
‘காரி’க் காளையை அடக்கிய மாடு அணையும் பிச்சி மாதிரிதான் இதன் ஆசிரியரும். அவனுக்கு மாடுகள் பற்றிய ஆழ்ந்த ஞானம் அதனால் விளைந்த தன்னிச்சயம். இவருக்கு தான் என்ன எழுதப் போகிறோம் என்பதில் பூரண பிடிப்பு. தன்னிச்சயம். இதனாலேயே அற்புதமாக நிகழ்ந்துள்ளது கதையின் மொழி. மிகத் துரிதமாக நடக்கும் கதை. ஆனால் செல்லப்பாவுக்கு இக்கதையின் மேல் உள்ள முழுப் பிடியின் காரணமாக வெளிப்பார்வைக்குச் சாதாரணம் எனத் தோன்றும் மொழியில், கதையின் அவசரம் ஆசிரியனைத் தொற்றாமல், சிறு சிறு வேக வார்த்தைகளாலான செயற்கை உத்வேகங்கள் இன்றி, தவ்வாத மொழியில், தவ்வலைச் சொல்லும் சர்வ நிச்சயம் உள்ள எழுத்து. போதை தரும் கதைக் கரு, களம். அதில் கம்பீரமாக செல்லப்பா நடை போடுகிறார். பதற்றம் கொள்ளாத, அவசரம் இல்லாத மொழியில் எழுதப் பட்ட சாகசக் கதை.
அதே நிச்சயத்தால்தான் அந்த அவசரம் தொற்றாத, பழுப்பேறிய முரட்டுக் கதர்த் துணி பாஷையால் ஒவ்வொன்றாக பில்லை, கொரால், காரியென்று மூன்று காளைகளை அவரும் பிச்சியோடு சேர்ந்து அடக்குகிறார். பலர் அவசரத்தில் முதலிலேயே ‘முதல் கதாநாயகனான’ காரிக்குப் போயிருப்பார்கள்.
மொழி, நடை, உத்தி. - காளை அணைபவனின் புய பலத்தைப் போல - இவை வெளியில் தெரிபவை. பாத்திரங்களின் உளவியல், மனோதர்மம், இயல்பு, நடிப்பு, அவற்றை உள் நின்று நடத்தும் ஆற்றல் அந்தக் கதை கிளம்பும் ஊற்றின் கண் - இவை மாடு அணைபவனின் ஞானத்தைப் போல, கிழவன் சொல்கிறானே பிச்சியின் தகப்பன் அம்புலித்தேவனோடு போய்விட்ட அந்த சாத்திரத்தைப் போல - அனைத்தும் மிகச் சரியாக நிலவி இதன் அடர்த்தியையும், வலுவையும் அசாத்யமானவையாக்குகின்றன.
உச்சி நாழிகைக்கு முன்னாடியே எட்டி நடை போட்டு வரும் ஜனம், வண்டி போட்டு வருகிற ஜனம். முந்தின பொழுது மயங்கவும் வர ஆரம்பித்து இன்னும் மேலே மேலே சேர்ந்து கொண்டிருந்த காளைகளின் தொகை என்று அமர்க்களப்படும் செல்லாயி சாட்டு என்பதாகத் துவங்கும் கதை சில நாழிகைகளில் முடிகிறது. ஆனால் படிக்கையில் நமக்கு நேரம் தெரிவது இல்லை.
ஓரிரு வார்த்தைகள் பேசும் வெகு சில உள்ளூர்க் காரர்கள், முருகு, கிழவன், மருதன், ஜமீந்தார், பிச்சி என்கிற பாத்திரங்கள், இதைத் தவிர பேச்சில் வரும் அம்புலி, மொக்கையத் தேவர், செல்லாயி அம்மன். இவர்களால் மொத்தக் கதையும் நமக்குத் தெரிய வருகிறது.
‘வாடிவாசல்’ சொல்வது தமிழ்ச் சாதியின் மூலம் சொல்லும் மனித சாதியின், மிருக சாதியின் கதை. இது அட்டைக் கத்திகள் மற்றும் கத்தும் அட்டைகளின் வீரம் பற்றியது அல்ல. தமிழனின், இந்த மண்ணின், மனிதனின் அப்பழுக்கற்ற வீரம், தர்மத்தோடு இணைந்த வீரம் பற்றியது.
ஒரு எரிமலைத் தருணத்தில் கூட நிலைத்திருக்கும் இந்த மண்ணின் மதிப்புகள், தர்மங்கள், கண்ணியம், வீரத்தின் கூடவே இருக்கும் சாந்தம், மரியாதை, சமயோசிதம் என்பனவற்றைப் பேசும் கதை.
மூத்தோரை தாழ்வாக எண்ணாத, எள்ளாத, அதே சமயம் அப்பன் வெட்டிய குளம் என்பதால் உப்புத் தண்ணீரைக் குடிக்காத மனிதர்களைக் கண் முன் நிறுத்தும் கதை.
இம்மண்ணின் தர்ம சார்பை - அது அருகி விட்ட ஒன்றாக, துளிதான் இருக்கிறது என்ற போதிலும் - சொல்லும் கதை.
******
இது class or caste conflict பற்றிய ஒற்றைப் பரிமாணக் கதை என்று வகைப் படுத்தினால் அது இக்கதைக்குச் செய்யும் நியாயம் இல்லை. விளாதிமிர் நபொகோவ் இலக்கிய வரலாற்றில் வகைப்படுத்துதல் பற்றி, முத்திரை குத்துவது பற்றி இப்படிக் கூறுகிறார் :
“There are teachers and students with square minds who are by nature meant to undergo the fascination of categories. For them, “school” and “movements” are everything; by painting a group symbol on the brow of mediocrity, they condone their own incomprehension of true genius.”
பழி வாங்கல் அதிகாரம் அதிகார எதிர்ப்பு சாதி ஆதிக்கம் என்கிற வகையில் இந்நாவல் எழுதப் படவில்லை. அதற்கான விவரங்கள் கதை முழுவதும் காணக் கிடைக்கின்றன. செல்லப்பா இக்கதை குறித்து என்ன நினைத்தார் என்பது பற்றியோ, ஓரிரண்டு தவிர வேறு பல விமர்சனங்களையோ நான் படிக்கவில்லை. ஆனால் என் வாசிப்பில் இதன் பிரதான்யமான அம்சம் மனிதரிடையே நிலவிய குணநலன்கள். ஒரு ஆக்ரோஷமான களத்தில் அசையாது தெரியும் அரிய ஆதார குணங்களைப் பற்றிய கதை.
அம்புலித் தேவன் (பிச்சியின் தந்தை) காரியால் கொல்லப் படுகையில் அந்தக் காளையின் சொந்தக்காரர் ஜமீந்தார் இல்லை. மொக்கையத் தேவர். மேலும் பிச்சியின் நோக்கம் காரியைக் கொல்வது இல்லை. ஜமீந்தாரின் கௌரவத்தைக் குலைப்பதுமல்ல. அவன் தந்தை விட்டுச் சென்ற பணியை நிறைவு செய்வது.
இது மறச்சாதியின் தர்மம். தசரதன் வாக்கைக் காப்பாற்ற ராமன் கானகம் ஏகின மாதிரி, “எனக்கப்புறம் இந்த வாடியெல்லாம் ஒன் ராச்சியம்தான்” என்ற தந்தை அம்புலித்தேவன் மானம் காக்க பிச்சி வாடிவாசல் வருகிறான். இங்கு ஜமீந்தார் அவனுக்கு எந்த விதத்திலும் எதிரியல்லர். அவனைப் பொருத்தவரை வாடி, அவன், காளைகள் அவ்வளவுதான்.
இங்கு தான் காப்பாற்ற வேண்டியதாய்க் கருதும் கௌரவத்தின் சின்னங்களாக ஜமீந்தார் தன் காளைகளைக் கருதுகிறார். கடைசியில் காரியைக் கொல்வதும் அதனாலேயே. (wounded pride) இதே கௌரவ உணர்வை ஒரு சாதாரணக் குடிபடைக்காரனும், காணியாளனும் கொண்டிருக்கிறார்கள். அப்படித்தான் செல்லப்பா சொல்கிறார். இது அந்த அமைப்பில் இருப்பது. ஒருவனுடைய போலி கௌரவம் இல்லை. அந்தஸ்தாலோ அதிகாரத்தாலோ மட்டும் விளைவதும் இல்லை.
ஜமீந்தாரும் பிச்சியைத் தன் எதிரியாகக் கருதுவதில்லை. காரியைப் பிடிக்க பிச்சி ஆயத்தமானதும் கூட்டத்தில் “பய செத்தான்!”, “செல்லாயி வாடியிலே அவனுக்கு முடிவு போட்டிருக்கு!”, “குறுத்துப் பையன், அநியாயமா. . .!” “பட்டு உருமாவுக்கு ஆசைப்பட்டு உசிரை இந்தான்னு கொடுக்கிறானா பாவி !” “ரெண்டு பவுனு தங்கம் கண்ணுலே உறுத்துமில்லே!” என்று ஆளுக்கொரு அபிப்பிராயமாக கூட்டம் பரிமாறிக் கொண்டதும் ஜாமீந்தாரின் நிலைமை பற்றி ஆசிரியர் சொல்கிறர். “இத்தனை வருஷமும் இல்லாமல் தன் காளைமீது ஒருவன் விழுந்தான் என்றா பேச்சுப் பிறக்கப் போகிறதே என்று சற்று மயங்கியவருக்கு, திடீரென்று அந்த நினைப்பு மாறி தன் வாழ்நாளில் வாடிவாசலில் கண்டிராத ஒரு போராட்டத்தை எதிர்பார்க்கும் துடிப்பு ஏற்பட்டது. காரியைப்பற்றி அவருக்கு வெகு நிச்சயம்., அவனை வாழை நார் மாதிரி கிழித்து எறிந்துவிடும் அது. ஆனாலும். . . அது மேலே, என்ன ஆனாலும் விழுந்து விடுவது என்று துடியாத் துடிக்கும் அந்த வாலிபனைப் பார்க்கப் பார்க்க அவருக்குப் படபடத்தது. பில்லையும், கொராலுமா காரி? நந்தி தேவனே யல்லவா அவதாரமாக வந்திருந்தது. அதைப் போய் “பாவிப்பய!” அவர் வாய்விட்டு கூடப் பக்கத்தில் இருந்தவர்கள் கேட்கும்படி சொல்லிவிட்டார்.” இவ்வாறு பிச்சி குறித்து கவலைதான் கொள்கிறார்.
அடுத்து மாடு திட்டி வாசல் விளிம்புக்கு வந்ததும் “பாத்தியா, காளை வரவும் கிழக்கத்தியான் பம்மிட்டான்.” “அவ்வளவுதான் பய !”, “சும்மா ஆர்ப்பாட்டக்காரனுங்க!” என்று தன்னைச் சுற்றி எழுந்த இந்த கேலிவார்த்தைகளைக் கேட்ட ஜமீந்தார் “ உளறாமே பாத்துக்கிட்டிருங்க!” என்று சுருக்கெனச் சொல்லி அடக்குகிறார். “அவன் ஒரு பிறவி! எந்த மாட்டு மேலே எப்படி விழணும்னு அவனுக்கு சுபாவத்திலேயே ஊறிக் கிடக்கும். பாருங்க.” என்றதும் கண்டன வாய்கள் மூடிக் கொள்கின்றன. கடைசியாக பிச்சியின் சளைத்த கைகள் மடிகையில், காரியின் கொம்புகள் அவன் நெஞ்சுக் குழிக்கு நேரே வந்து கொண்டிருக்கையில் “காளையை விரட்டு!” என்று ஜமீந்தார் மேடையிலிருந்து பதட்டமாகக் கத்துகிறார். பிறகுதான் மருதன் உள்ளே இறங்குகிறான்.
காளையை அடக்கிய பிச்சிக்குத் தர வேண்டிய அங்கீகாரத்தையும்,சன்மானத்தையும் தருகிறார். பின் காயத்திலிருந்து ரத்தம் கொட்ட கிடக்கும் பிச்சியை ஆஸ்பத்திரிக்குத் தூக்கிச் செல்ல ஜமீன் வண்டிக்குக் கொண்டு போகச் சொல்கிறார். அதற்கெல்லாம் பின்பே காளையைக் கொல்கிறார். எங்கே இருக்கிறது ஆதிக்கம்?
பிச்சியிடமாவது ஜமீந்தார் மேல் துவேஷம் இருக்கிறதா என்றால் அவன் முழுக்க முழுக்க அவரிடம் மரியாதையாகவே இருக்கிறான். அதில் அவனுக்கு முரண்பாடோ, தயக்கமோ இல்லை. ஜமீந்தாரை மரியாதைக் குறைவாகப் பிச்சி நினைப்பது கூட இல்லை. அவரிடம் சங்கடம் இல்லாத மிகுந்த மரியாதையுடனேயே பழகுகிறான். பிச்சிக்கும் மருதனுக்கும் காரிதான் குறி. அவர்கள் நினைப்பில் ஜமீந்தார் இல்லை. ஜமீந்தாரிடம் பிச்சிக்கு இருப்பது மரபார்ந்த, பழக்கமாய்விட்ட, கேள்விகள் இல்லாத மரியாதை.
அந்த மரியாதையையே அவன் கூட்டத்தில் இருக்கும் ஏழைக் கிழவனிடமும் காட்டுகிறான். அது வீரமும், தர்மமும் நிறைந்த ஒரு மாடு பிடிக்கும் தொழிலில் பரம்பரை ஞானம் உள்ள தன்னிச்சயம் நிரம்பிய மறவனிடம் நிலவும் இயல்பான மரியாதை.
மேலும் இதில் ஜமீந்தார் என்ன ஜாதி என்று சொல்லப்படவில்லை. அவரும் பிச்சியின் ஜாதியாகவே இருக்கலாம். அப்போது எங்கே வந்தது ஆதிக்க சாதி?
ஆதிக்க சாதிக்கெதிரான சலனமெல்லாம் இதில் சொல்லப்படுவது இல்லை அது இதன் நோக்கமும் இல்லை.
பிச்சியின் தகப்பன் அம்புலித் தேவன். காரியின் சொந்தக்காரர் மொக்கையத் தேவர். இதிலே வரும் ‘ன்’ விகுதியும், ‘ர்’ விகுதியும் அம்புலியின் பேச்சில் வருபவை. தன்னைத் தேவன் என்றும் மொக்கயன் என்பவரை மொக்கயத் தேவர் என்றும் சொல்கிறார். ராஜகோபாலாச்சாரி, கிருபானந்த வாரி, சிவஞான கிராமணி என்றுதான் அவர்கள் ‘ஆர்’ விகுதி சேராமல் தன்னை அழைத்துக் கொள்வார்கள். அதுபோல்தான் இது.
இன்னொரு முக்கியமான குறுநாவலான நாஞ்சில் நாடனின் ‘மாமிசப் படைப்பு’ படித்தால் எப்படி ஆள்பவன், அடிமை இரண்டு பேரும் ஒரே ஜாதியில் இருக்கிறார்கள் என்பதும், ஆதிக்கம் என்பது என்ன என்பதும் தெரியும்.
******
பிச்சியின் ஆதார குணம் மறச்சாதியின் வீரம். தந்தை மீது மட்டிலா மரியாதை, அன்பு. ஜமீந்தாரோ, ஏழைக் கிழவனோ மூத்தோரிடம் தானாக இயல்பாய் வரும் மரியாதை. வாடிபுரம் காளையைப் பற்றி “பார்த்துடலாம்’ என்று ஒரே வார்த்தைதான் பிச்சி சொல்கிறான். “என்ன தம்பி விளையாட்டுக்குப் பேசறயா” என்று குரல் தடுமாற கலக்கத்துடன் கிழவன் கேட்கையில் “ஏன் தாத்தா சும்மா போகிற மாட்டு மேலே மனுசன் விளறதே ஒரு விளையாட்டுத்தானே, இல்லீங்களா? சொல்லுங்க. ஏன், பாக்கிறவங்களுக்குக் கூட அது விளையாட்டாத்தானே இருக்கு. அதுக்குன்னு பிறந்து போட்டு. . .” மேலும் கிழவன் அவன் பாதுகாப்பு கருதி அறிவுரை சொல்கையில் “ என் அப்பனாட்டமா நீங்க சொல்றபோது” என்கிறதுதான் பிச்சி. அதே போல் ஜமீந்தாரிடம் அவன் காட்டும் மரியாதை.
பிச்சி வீரன். கெட்டிக்காரன். கேலிப்பேச்சு அவனுக்கும் தெரியும். அவன் அல்ப விஷயங்களில் கவனம் சிதறுவதில்லை. அவனுடையதும் ஒரே பாணம்தான். தந்தையின் மானத்தையல்லவா உருமாலாக மீட்டெடுக்கிறான்.
மருதனின் உற்ற தோழமை. ராமனுக்கு இலக்குவன் மாதிரி மாப்பிள்ளைக்கு மைத்துனன். தங்கச்சியின் தாலி பற்றி கிழவன் சொல்கிறான். ஆனாலும் மருதனுக்கும் ஒரு தன்னிச்சயம் உண்டு. அது பிச்சியின் திறமை மீதான பூரண நம்பிக்கை. அவன் பணியின் அவசியம், புனிதம் குறித்த சந்தேகமின்மை.
கிழவனின் ஜல்லிக்கட்டு பற்றிய பூரண விஷய ஞானம். அம்புலியை அவன் நினைவு கூருவது, லாலா அமர்நாத், ஜி.ஆர். விஸ்வநாத், என்று கிரிக்கட் மைதானங்களில் நினைவு கூறுவார்களே பழைய ஆட்கள் அது மாதிரி. அது வயதானவர்கள் பாட்டையாக்களாக, தாத்தாக்களாக இருந்த காலம். அவர்கள் ‘பெரிசா’காத காலம். கிழவனுக்கு ஜமீந்தார் மீது உள்ள மதிப்பு காரியார்த்தமானது அல்ல. நோக்கம் உள்ளதும் இல்லை. ஆனால் மரபு அவனுக்குக் கற்றுக் கொடுத்த, மரபை அவன் காப்பாற்றிக் கொண்டிருக்கும், மரபின் ரூபமாக அவன் இருப்பது. ‘பிசாசுக்குப் பிசாசா பேரு பெத்த மாடு பிடிக்கிறவன்’ அம்புலியின் மகன் என்பதாலேயே அவனுக்குப் பிச்சியின் மேல் இன்னும் பாசம் பொங்குவது, முருகுவின் அடாத செயலைக் கண்டிப்பது, ஜமீந்தார் புகழ் பாடுவது எல்லாமே அவன் அறிவில், நேர்மையில், வாடிவாசலில் காளைகளுக்கும், மாடு அணைபவர்களுக்கும் இணையாக விஷய அறிவுள்ள பார்வையாளனுக்கு இருக்கும் பொறுப்பில், முக்கியத்துவத்தில் விளைந்தவை. கிழவன் ஜல்லிக் கட்டின் முழுச் சரித்திரத்தையும், சாத்திரத்தையும் உள் வாங்கியவன். வாடி வாசலை தன் தளராத ஈடுபாட்டால், அர்ப்பணிப்பால், கவனிப்பால் தனதாக சுவீகரித்துக் கொண்டவன். மருதன் அவனை மிகச் சரியாகப் ‘புதையல்’ என்கிறான்.
கிழவன் மரபின் பிரதிநிதி என்றால் முருகு எக்காலத்திலும் உள்ள ஜால்ராக் கூட்டத்தைச் சேர்ந்தவன். அக்கூட்டத்துக்கே உரிய கீழ்மை, பொறாமை, வஞ்சகம், அச்சம் நிறைந்த, வெட்டி ஜம்பப் பேச்சுக்காரன்.
இது பழம் தர்மங்களைப் பற்றிய அவற்றின் கம்பீரத்தை போற்றும் கதை. அதன் பரவசம் பற்றிய கதை. பிச்சி ஒருவேளை குடல் உருவப்பட்டு மாண்டிருந்தால்? அப்படி நிகழாது. அவன் அம்புலித்தேவன் மகன்தான். உண்மையில் அக்கணத்தில் அவன் அம்புலித்தேவனும்தான். மாடு அணையும் வீரர்கள் அனைவரும் ஒருவரேதான். ஆனால் பிச்சிக்கு சாதகமாக அவன் பக்கம் வயது இருக்கிறது. அம்புலித்தேவன் மட்டும் வயது என்கிற பளுவைச் சுமக்காது இளைஞனாக இருந்திருந்தால் அவனே காரியை வென்றிருப்பான். ஒருவிதத்தில் ஆதர்ச காலக் கதை. மானமாவது, வீரமாவது. அசட்டுத்தனம் என்பவர்களுக்கு இதில் ஒன்றும் இல்லை. எல்லோரும்தானே உலகில் இருக்கிறார்கள்.
******
019der
“மிருகத்துக்கு ரோஸம் வந்தாலும் போச்சு, மனுசனுக்கு ரோசம் வந்தாலும் போச்சு!”
“என்ன இருந்தாலும் அது மிருகம்தானே!”
என்று ஜமீந்தாருக்குப் பின்னால் குரல்கள் ஆற்றுப்பக்கம் பூராவும் கேட்டுக் கொண்டிருந்தன என்று கதை முடிகிறது.
“என்ன இருந்தாலும் அது மிருகம்தானே” என்பது பல்வேறு த்வனிகளில் புரிந்து கொள்ளப் படலாம். அதன் கொலையை நியாப் படுத்தும், ஒரு பெரிய விஷயமாகப் பொருட்படுத்தாத குரலிலிருந்து. ஆனால் ஆதார குணங்கள் மட்டுமே நிற்கக் கூடிய அந்த நிகழ் களச் சூழலில் அதன் பொருள் இப்படித்தான் தெரிகிறது.
காளை பாவம். அது என்ன பிழை செய்தது. இந்த நாளுக்காகவே ஊட்டி ஊட்டி வளர்க்கப் பட்டது. அதற்கு விளையாட்டு தெரியாது. தான் கௌரவச் சின்னம் என்பது தெரியாது. விளையாட்டின் சட்டங்களோ, சதிகளோ தெரியாது. அதனிடம் பிச்சியைப் பற்றி எடுத்துச் சொல்ல கிழக்காளை இல்லை. உதவ மைத்துனன் இல்லை. எதற்கென்றே தெரியாமல் வாடிவாசல் வந்து, அங்கு மனித அளவீட்டின்படி அடக்கப்பட்டு, பின்னரும் அதுவெல்லாம் புரியாமல், மிகுந்த எரிச்சல் ஊட்டப்பட்டு பின் கொல்லவும் படுகிறது. செல்லப்பா ஒவ்வொரு முறையும் காளையையும், காளை அணைபவனையும் பற்றிய ஜல்லிக்கட்டுக் கதை என்பது போல் காளையையே முதலில் சொல்கிறார். காளைதான் முதல் கதாநாயகன்.
உபயோகத்துக்கு இல்லாத வாடிவாசல் காளை எதற்குப் பிரயோசனம். அது உயிரோடு எதற்காக இருக்க வேண்டும். (They shoot horses, don’t they? என்றொரு அற்புதமான படம் 1969ல் வந்திருக்கிறது. ஹொரேஸ் மெக்காயின் 1935ம் வருட நாவல். சிட்னி பொல்லாக்கின் டைரெக்ஷனில், ஜேன் ஃபோண்டாவும், மைக்கேல் சராஸின் நடித்து)
(இதுவும் வாடிவாசல் சம்பந்தப் பட்டதுதான். அவசியம் பாருங்கள் https://www.facebook.com/photo.php?fbid=10201029238999405&set=a.1213192296195.2033729.1420432403&type=1&theater)
******
வன்முறையின் மீது கட்டமைக்கப்பட்ட விளையாட்டுகள். இரண்டு சேவல்களை மோதவிடுவது மனிதத் தந்திரம். அதில் மனிதனுக்கு துளி அபாயம் இல்லை. யுத்தம் முழுக்க முழுக்க மனிதர்களால் தங்களில் சிலரை பகடைக் காயாக்கி நிகழ்த்தப்படும் பிரும்மாண்ட வன்முறை. சல்லியில் இரண்டுக்கும் இடையில். மிருகத்தின் மீது நடத்தப்படும் வன்முறையில் இதில் ஈடுபடும் மனிதனுக்கும் காயமுற, பலியாக வாய்ப்பு இருக்கிறது. இங்கு பங்கேற்பவர்கள் தன்னிச்சையாகத்தான் வருகிறார்கள்; அவர்கள் யாராலும் அனுப்பப்படுவதில்லை.
இதில் பெண் பாத்திரங்களே இல்லை. செல்லாயி ஆத்தாவைத் தவிர. பெண்களுக்கு இந்த குருதி தோய்ந்த புழுதியில் என்ன வேலை. அவர்கள் ரத்தம் சிந்துவது மனித குலத்தை ரட்சித்து நீடிப்பதற்காக மட்டுமே. ஆத்தாவின் அனந்தகோடி விளையாட்டுகளில் இதுவும் ஒன்று என்று அவள் மட்டும் இருக்கிறாள் போலும். அதனால்தான் அவளை முன்னிறுத்தியே இதை செய்கிறார்கள். கிழவன் “ செல்லாயி ஆத்தா காப்பா! ஆனா ஒண்ணு என் மக்களா ! போறபோது அவளைக் கும்பிட்டுப் போகாமெ போயிராதிங்க.” என்று சொன்னாலும், பிச்சியோ, மருதனோ ஆத்தாவை வணங்கி இதை ஆரம்பிப்பதாக கதையில் சொல்லப்படுவதில்லை.
******
காலச்சுவடு பதிப்பில் ஆதிமூலம் அவர்களின் ஓவியங்கள் இடம்பெறுகின்றன. இக்கோட்டோவிங்களோடு விளிம்புகளற்ற வண்ணக் கலவைகளால் ஆன ஓவியங்கள் உக்கிரமான களத்தைக் காட்சிப்படுத்த இன்னும் உதவியாய் இருக்கும்.
******
கடல் நீர் மேலே படாமல் ஹெமிங்வேயின் ‘கிழவனும் கடலும்’ (Old man and the Sea) படிக்க முடியாது. புழுதியும், வெய்யில் பட்டுப் பட்டுக் காச்சுப் போன, மூடி இராத கறுப்பு முதுகுகளில் துளிர்த்து வெடிக்கும் வியர்வையும், உஷ்ண சுவாசமும், மனிதன், மிருகம் இருவரது குருதியும் உங்கள் மீது படாமல் நீங்கள் வாடிவாசாலைப் படிக்க முடியாது.
******
செல்லப்பா ‘வாடிவாசலை’ 1959ல் வெளியிட்டிருக்கிறார். அவர் இக்கதையைப் பற்றி சொன்னது : ஜெல்லிக் கட்டு ஒரு வீர நாடகம். இக்கதையில் ஜெல்லிக் கட்டு பற்றிய வர்ணனை தத்ரூபமாகச் சித்தரிக்கப் பட்டிருக்கிறது. நுட்பமாகவும் கூட. படிக்கும் போது சிலிர்ப்பு ஏற்படுத்தும் கதை.
வாடிவாசல் என்கிற தலைப்பின் கீழ் ‘காளையையும், காளை அணைபவனையும் பற்றிய ஜல்லிக்கட்டுக் கதை’ என்று குறிப்பிடப்படுகிறது.
“ஒரு தவ்வு, இரண்டு தவ்வு; மூன்றாவது தவ்வுக்கும் அவன் நின்று விட்டான்; மூன்று தடவையும் காளை அவனை உருட்டி எறிந்து கிழித்திருக்க வேண்டும்.” முதல் பதிப்பின் முன்னுரையில் சி.சு.செல்லப்பா அவர்களின் முதல் வார்த்தைகள் இவை. பிச்சி, காரிக்காளையை அடக்கிவிடுவதற்கான முயற்சியை, ‘வாடிவாசல்’ கதையின் ஒரு முக்கியக் காட்சியை, சுருக்கமாகச் சொல்கிறார். தவ்வுவது காரிக்காளை. அதன் மேல் விழுந்து அணவது பிச்சி. எழுதுகையில் அவரும் அதையே செய்திருக்கிறார். நடை, மொழி, உத்தி - ஒரு தவ்வு; களம், பாத்திரங்கள், உரையாடல்கள், சம்பவங்கள் - ஒரு தவ்வு; செறிவு, செம்மை, மனோதத்துவம், மனோதர்மம். கட்டுக்கோப்பு, மொத்தக் கதையின் தாக்கம் பற்றிய தெளிவு - ஒரு தவ்வு என்று அனைத்துத் தவ்விலும், துரிதமும், உக்கிரமும், துல்லியமும் நிறைந்த, அசாத்யமான தருணங்களைக் கொண்ட திமிறும், உருட்டி எறிந்து கிழித்திருக்கக் கூடிய இக்கதையைச் செல்லப்பா பூரணமாக அணைந்து ஆண்டு விடுகிறார்.
மிகச் சிறிய முன்னுரையின் இறுதியில் “இந்தப் பக்கங்களை மூடி வைத்து விட்ட பிறகும் அந்தக் காளையும் மனிதனும் வாடிவாசலும் உங்கள் நினைவில் இருந்து கொண்டே இருக்கும். இந்தக் கதை மூலம் ஒரு புது உலகத்தையே அறிமுகப்படுத்துவதாக நான் நினைக்கிறேன்” என்று எழுதுகிறார். நீங்கள் படித்திருந்தால் ஒப்புக்கொள்வீர்கள். படிக்கவில்லையென்றால் . . . படித்துத்தான் பாருங்களேன். உண்மையென்று உணர்வீர்கள்.
**********

Monday, May 4, 2009

மானசரோவர் - அசோகமித்திரன்.

காணக் கிடைத்தவை.

வ.ஸ்ரீநிவாசன்.


மானசரோவர் - அசோகமித்திரன்.

ஏற்கனவே படித்து விட்டேன் என்று நினைத்திருந்த புத்தகம். இருபது ஆண்டுகளுக்கு முன்பு ‘சாவி’யில் தொடராக வந்தது என்று 2006ல் அசோகமித்திரன் குறிப்பிடுகிறார். ஒரு நண்பரோடு பேசுகையில் ‘படிக்கவில்லை’ என்று தோன்றியது. இந்த முறை புத்தகக் கண்காட்சியில் ஞாபகமாக வாங்கி இப்போதுதான் படித்தேன். மொத்தமும் புதிதாக இருந்தது. ஆனாலும் முன்பு படித்திருக்கவில்லை என்று நிச்சயமாக சொல்ல முடியாது.

கடைசி பாகத்தின் கடைசிப் பகுதியில் கோபால் சத்யன்குமாரிடம் சொல்கிறான்: “இந்தப் பக்கம் வா சத்யன் குமார். இது ஒரு மரமா இரண்டா, ஆலமரமா அரச மரமா என்று சொல்ல முடியாதபடி போய்விட்டது. நிஜம் பொய் கூட இப்படித்தான் பிரித்து சொல்ல முடியாதபடி போய் விடுகிறது”

கோபால், சினிமா தொழிலில் இருக்கும் எழுத்தாளன். சத்யன் குமார் என்கிற இந்திப் படவுலக சூப்பர் ஸ்டாரின் மொழியில் “மதறாஸி ஸ்கிரிப்ட் ரைட்டர்”. சினிமாவுக்குக் கதை சுருக்கங்கள் எழுதி கதை எழுதுவதென்பதே வரவில்லை என்று நினைப்பவன். தன் தொழில் வாய்ப்புக்காக மனைவியையே பலி கொடுப்பவன் என்கிற பயங்கரமான பழிச் சொல் சொல்லும் அவன் மனைவி ஜம்பகம், குடும்பப் பெரியவர்கள் வற்புறுத்தலால் ஒரு சோதாப் பயலை பள்ளிப் பருவத்திலேயே கல்யாணம் செய்து கொண்டு மாமியார்ப் பேயும், வாழ்க்கைப் பேயும் அறைந்து சிரிப்பையே தொலைத்த செல்லம் காட்டப் படாத மகள் காமாட்சி, “தானும் நடிகனாக வர வேண்டும்” என்று ஆசைப்பட்ட, செல்வ மகனாக இருந்தாலும் பல நாட்கள் வயிறார உணவு கிடைக்காத பதினைந்து வயது மகன் ராஜா, இன்னும் கதைச் சம்பவங்களில் நேரடியாக வராத தாயார், மாமனார், மாமியார் என்கிற குடும்பம். நத்தானியெல் வெஸ்ட், டக்டர் ஜிவாகோ என்று படிக்கும், ஒரே வார்த்தை இரண்டு இடங்களில் வராதவாறு வசனம் எழுதும் அழகும் அகந்தையும் உள்ளவன்.

பிரிவினைக்கு முன்பே பெஷாவரிலிருந்து பம்பாய் வந்த பஞ்சாபி இசுலாமியன் சத்யன் குமார். பெற்றோரையும், உறவினரையும் ஒரேயடியாகப் பிரிந்து பல சம்பந்தமில்லாதவர்களோடு சம்பந்தம் கொண்டு வாழ்பவன். இசை அமைப்பாளர் நௌஷாத் போன்றவர்களின் மேதைமை, பட முதலாளிகளின் வியாபார யுக்திகள், தகவல் உறிஞ்சும் நிருபர்களின் விடா முயற்சிகள், துரத்தல்கள், இவன் கேட்கிறான் என்று எதையும் செய்ய தயாராயிருக்கும் வாய்ப்பு ஆசையில், தேவையிலிருக்கும் பெண்கள், அவர்தம் அன்னையர், முகமோ முகவரியோ இல்லாத பற்பல திரைத் துறை மனிதர்கள் இவர்கள் மத்தியில் கோபால்ஜி (கோபாலை அவன் அப்படித்தான் கூப்பிடுகிறான்.) என்னும் மெஹர் பாபாவை நினைவு படுத்துபவனின் நட்பு என்று அவன் வாழ்க்கையின் ஒரு துண்டம்.

இதற்கிடையே சினிமாவில் கதாநாயகியின் தோழியாக வரும், பத்து வயதிலிருந்து தன் சோற்றுக்கு பிறர் கையை நம்பி வாழாமல், குழந்தை கருவில் உதித்த உடனே வாய்ப்புகளைக் குறைத்துக் கொண்ட துணை நடிகை சியாமளா, அவளை அடித்துக் கொன்றிருக்கக் கூடிய கணவனிடமிருந்து கூட்டி வந்து தன்னுடன் வைத்துக் கொள்ளும் வம்பு பேசும் சவுண்ட் ரிகார்டிஸ்ட் ராமநாதன், வேலைக்கரி, பால்காரர் எல்லோரும் நாவலில் வருகிறார்கள்.

ஒரு நாள் கோபால் வாழ்க்கையில் பல விபரீதங்கள் நடந்து விடுகின்றன. மகன் ராஜா இறந்து விடுகிறான். அவன் இறந்தது கூட சரியாகத் தெரியுமா என்கிற ஸ்திதியில் ஆடைகள் கூட இல்லாமல் இருக்கும், கணவனின் கண்களைப் பிடுங்கப் பாயும் ஜம்பகம் என்று ஆகி விடுகிறது.

இது தெரிந்து அங்கு வரும் சத்யன்குமார் தன் துக்கங்களை எண்ணி கோபாலின் தோளில் சாய்ந்து ஒரு பெண்ணைப் போல் கண்ணீர் உகுக்கிறான். அவனிடம் மட்டும் கோபால், தான் டாக்டரை அழைத்துவர போன சமயம் வீட்டில் ராஜாவும் ஜம்பகமும் மட்டும்தான் இருந்தார்கள். தான் திரும்பி வருகையில் ராஜா செத்துப் போயிருந்தான். அவன் முகத்தில் தலையணை வைத்து அழுத்தப் பட்டிருந்தது, என்று சொல்கிறான்.

சத்யன்குமாரின் அடுத்த மதறாஸ் வருகையின்போது கோபால்ஜி அங்கு இல்லை. அவனைத் தேடுகிறான். பம்பாய்க்கும் மதறாஸுக்குமான தொழில் நிமித்தமான அலைச்சல்களுகிடையே தேடல் தொடர்கிறது. சவுண்ட் ரிகார்டிஸ்ட் ராமநாதன் மற்றும் அவனுடன் வாழும், ராஜா இறந்த அன்று கோபால் வீட்டில் பார்த்த, சியாமளா மூலமும் கோபாலைக் கண்டு பிடிக்க முயற்சிக்கிறான். இந்தப் பழக்கத்தில் சியாமளாவை தன்னோடு வீட்டுக்காரியாக இருக்க முடியுமாவென்று பம்பாய்க்கு அழைத்துச் செல்கிறான். தன்னால் மேலும் ஒளியமுடியாது என்ற நிலையில், உயிர்பயம் தரும் வயிற்று உபாதையுடன் மதறாஸ் வந்து ராமனாதனைக் கூட்டிக் கொண்டு கோபால் இருக்கக் கூடிய இடத்திற்கு விரைகிறான்.

சித்தர். நாட்டின் பிரதம மந்திரியே வந்து போகும் இல்லத்துப் பெண்மணிக்கு வினோதமான கஷ்டங்கள். அமானுஷ்யமான நிகழ்வுகளும், இறந்தவர் தோன்றிப் பேசுவதுமாயிருக்கும் சிதைந்து கொண்டேயிருக்கும் வீட்டில் சித்தர் காலடி வைத்ததிலிருந்து எல்லாம் சரியாகி விட்டது. கும்பகோணத்திலிருந்து திருவாரூர் போகும் வழியில் உள்ள வீர ஆஞ்சனேயர் கோவிலைக் கட்டியவர். கோயில் என்றால் ஒரு சிறு கட்டிடம். அவர் எல்லா இடத்திலும் இருக்கிறார். கோபாலிடம் அவர் எதையும் கேட்பதில்லை. புகையிலையைத் தவிர. அதற்கான காசையும் அவர் கொடுத்து விடுகிறார். நடு நிசியிலும் அவருக்காக புகையிலை தரும் வெற்றிலை பாக்குக் கடை திறந்திருக்கிறது, அதற்காகவே என்பது போல.

ஜம்பகத்தை அவள் பெற்றோர் அழைத்துச் சென்ற சில நாட்களில் கோபாலும் புறப்படுகிறான். ரயிலில் ஜெயச்சந்திரிகா என்ற நடிகை (இவள் தாயார் பால்யத்தில் கோபாலுடன் கொஞ்சம் பழகி இருக்கிறாள்) தன்னுடன் முதல் வகுப்பில் வருமாறும் பின் தன்னுடனேயே இருக்குமாறும் கேட்டுக் கொள்கிறாள்.

கும்பகோணத்தில் இறங்கி, மாமனார் வீட்டிற்கோ, மகளைக் கொடுத்திருக்கும் வீட்டுக்கோ அல்லது சித்தர் இருக்குமிடத்திறகோ போகக் கூடிய ஒரு புள்ளியில் கோபால் சித்தர் இடத்திற்கே போகிறான்.

சத்யன் குமார் அங்கு வந்து சேர்கிறான்.

நீங்கள் ‘மானசரோவர்’ இனிமேல்தான் படிக்கப் போகிறீர்கள் என்றால் மேற்கொண்டு இக்கட்டுரையைப் படிக்காதீர்கள். ஏற்கனவே படித்து விட்டீர்கள் என்றால் அல்லது படிக்கப் போவதில்லை என்றால் தயவுசெய்து தொடருங்கள்.

அங்கு தன்னை சித்ரவதை செய்து கொண்டிருக்கும் பாவச்சுமையை கோபாலிடம் இறக்கிவைக்க சத்யன்குமார் முயலுகையில், கோபால் ‘ஒன்றும் சொல்ல வேண்டாம்’ என்கிறான். சித்தரும் அப்படியே சொல்கிறார். மேற்கொண்டு, “என் பளு குறைய நான் இன்று சொல்லியே ஆக வேண்டும்...” என்கிற சத்யன் குமாரிடம், சித்தர், “என்ன சொல்ல வேண்டும்? கோபால் வீட்டிலில்லாத போது நீ அவன் பெண்டாட்டி கையைப் பிடித்திழுத்தாய் அல்லது அவள் உன் கையைப் பிடித்திழுத்தாள். இதை அவன் பெண்ணும் பிள்ளையும் பார்த்து விட்டார்கள். இதை விட வேறன்ன இருக்க முடியும்?” என்கிறார்.

‘அவள் மட்டும் வேண்டுமென்று அப்படிச் செய்தாளா?’ ‘நான் ஆமாம் அல்லது இல்லை என்று சொன்னால் உன்னால் அப்படியே ஏற்றுக்கொள்ள முடியுமா’ ‘மெஹர் பாபா சொன்னால் ஏற்றுக் கொள்ள முடியுமா? முடிந்ததா?’ என்கிறார்.

‘சுவாமிஜி’ என்கிறவனிடம் ‘இங்கே யாரும் சாமி கிடையாது, பூதம்தான்’ என்றவர், அருகில் ஓடும் கொஞ்சமே தண்ணீர் இருக்கும் ஆற்றில் சத்யன்குமாரை குளித்துப் போகும்படி சொல் என்று கோபாலிடம் சொல்கிறார். அதுதான் அவன் மானசரோவர் என்றும் சொல்கிறார்.

மானசரோவர் என்றால் என்ன என்கிற சத்யன்குமாருக்கு “ வடக்கே பனி சூழ்ந்த ஹிமாலய மலைகளுக்கு நடுவே ஓர் ஏரி. அங்கே குளித்துவந்தால் மனம் சுத்தமாகி விடும். மனம் சுத்தமானால் யோகம் சித்திக்கும். யோகமெல்லாம் நமக்கெதற்கு? மனம் கொஞ்சமாவது சுத்தமானால் போதாதா? என்கிறான் கோபால்.

மேலும் சத்யன்குமார் “ நான் பாபிஜி பாபிஜி என்று பதறினேன். பாபிஜியை உதறித் தள்ளிவிட்டு ஓடி வந்தேன்” என்கிறான்.

‘உனக்கு ஆற்றில் குளிக்கத் தெரியுமில்லையா? தெரியாமலென்ன? நீதான் எவ்வளவோ சினிமாக்களில் குளித்திருக்கிறாயே’

சத்யன் குமார் சிரிக்கிறான். இத்துடன் நாவல் முடிகிறது.

ஒரு பார்வையில் இந்நாவல் குற்ற உணர்வின் பல்வேறு தளங்களையும், தாக்கங்களையும், மனித மனம் அதனால் உருவாக்கிக் கொள்ளும் சித்ரவதைகளையும் கூறுகிறது. சத்யன்குமார் முப்பத்தெட்டு வயதாகியும் மணம் செய்து கொள்ளாதவன். ஆஸ்பத்ரியில் கிடக்கையிலும் நர்ஸை கட்டி அணைப்பவன், கூட நடிக்கும் நடிகையும் அவள் அன்னையும் நாணம் கொள்ளக் காரணமாய் இருப்பவன். அதன் மூலம் ஆண் பெண் உறவின் பல பரிமாணங்களையும் காண்பவன். அவனுக்கு ஜம்பகமும் இன்னொரு கிளர்ச்சிதரக்கூடிய பெண்தான்.

கோபாலைப் பற்றி ஜம்பகம் எழுப்பும் குற்றசாட்டுகள் நெருப்பில்லாமல் புகையாது குறைந்த பட்சம் பத்து சதவீதமாவது உண்மையாய் இருக்கும் என்று கொள்கையில் அதுவும் சென்னையை விட்டு கும்பகோணம் போகையில் ஜெயசந்திரிகா அன்று இரவு அவனைத் தூங்க விடவில்லை என்கையில் ஒரு சமயம் கோபாலே நினைப்பது போல் அவன்தான் அவன் மகனைக் கொன்று விட்டானோ?

அவன் மறைமுகமாக அவன் குடும்பத்தை சிதைத்து விடுகிற விஷயங்களுக்குத் துணை போனவன்; அவனால் அதுகுறித்து அதிகம் எதுவும் செய்ய முடியது என்றாலும். இறுதியில் ஒருபக்கம் பத்து மைல் போனால் இருக்கும் மனைவியையோ இன்னொரு பக்கம் போனால் இருக்கும் மகளையோ பார்க்கப் போகாமல் (அவர்களும் இவனைப் பார்க்க வரவில்லை) சித்தர் இருக்கும் இடத்தில் தங்கி விடுகிறான். கையலாகாதவன்?

ஜம்பகம் சத்யன்குமார் கையைப் பிடித்து இழுத்தாள் அல்லது சத்யன்குமார் ஜம்பகம் கையைப் பிடித்து இழுத்தான் (அதை குழந்தைகள் பார்த்து விட்டன) என்கிற ஒரு ambiguity வருகிறது. நிஜமும் பொய்யும் கலந்து விடுகிறது. இரண்டுக்கும் முகாந்திரம் இருக்கிறது. முகாந்திரம் இல்லாமலும் காரியங்கள் நடப்பதில்லையா என்ன? பார்த்த ஒரு குழந்தையை சித்த சுவாதீனமில்லாத, கற்பனையிலாவது தொடர்ந்து கணவனால் வஞ்சிக்கப் பட்ட, என்ன நடக்கிறது என்றே தெரியாத, ஆடை இல்லாமல் போவதைக் கூட அறியாத, துணியை நனைத்துக் கொள்கிற, ஆங்காரமாய் அடாத சொற்களில் கணவனை ஏசுகிற ஜம்பகம் குற்ற உணர்வில் கொன்று அதனால் தாங்க முடியாத எல்லையற்ற குற்ற உணர்வில் சித்த சுவாதீனத்தை முற்றிலுமாக இழந்திருக்கலாம்.

குற்றத்தை ஒப்புக் கொண்டு பளுவை இறக்க வரும் சத்யன் குமார், “நான் பாபிஜி பாபிஜி என்று பதறினேன். பாபிஜியை உதறித் தள்ளிவிட்டு ஓடி வந்தேன்” என்று தான் அந்த அளவுக்காவது குற்றமற்றவன் என்று இப்போதும் சொல்லக் காரணம் என்ன?

மகனின் மரணமும், விபரீதமான நிலையில் இருக்கும் மனைவியும் என்று கோபாலைப் பார்க்கும் சத்யன் குமார் மனதில் முதலில் வந்திருக்க வேண்டிய எண்ணமே அந்த சம்பவம்தானே? பின்னர் தன் பெற்றோரிலிருந்து அனைவரையும் நினைத்துப் பார்க்கும் அவன் பிரக்ஞையில் ஜம்பகம் வராதது ஏன்? அது எப்படி சாத்தியம்?


ஜம்பகம் தொட்டாளா சத்யன்குமார் தொட்டானா என்கிற இரண்டையும் தாண்டி மூன்றாவதாக ஒருவேளை ஒன்றுமே நடக்கவில்லையோ? அப்போது ஜம்பகம் ஏன் ஒருநாள் சத்யன்குமார் வந்து சென்றதை கோபாலிடம் சொல்லவில்லை? இரண்டு குறைப் பிரசவங்கள், மேலும் தவழும் முன்பே இறந்த இரண்டு குழந்தைகள். குடித்து கும்மாளம் போடுவதாக அவள் கற்பனை பண்ணும் அல்லது சந்தேகிக்கும் கணவன், சோதாப் பயலுக்கு வாழ்க்கைப் பட்ட மகள் இவற்றாலோ அல்லது இவையன்றியோ சித்தம் கலங்கிய நிலை காரணமா? அல்லது வேண்டுமென்றா?

சரி கோபால்? அதாவது ஒரு வார்த்தையில் இருக்கும் உதாசீனத்தைக் கூட தாங்காது பதில் வார்த்தை பேசுகிறவன் இதைத் தெரிந்து அல்லது யூகித்துக் கொண்ட பிறகு நடந்து கொள்வது விசித்திரமாக இல்லை? சித்தர் ஓரிடத்தில் சொல்வதைப் போல் சம்சாரம் பண்ணி சாகரத்தை எப்படிக் கடக்கப் போகிறவன்? பொறுப்புகளிலிருந்து தப்பித்துக் கொள்கிற அறிவுஜீவி?

ஒன்றுமே நடக்காத போது சத்யன்குமார் இவ்வளவு பிராயாசை எடுத்துக் கொண்டு வருவது எதற்கு? அவ்வளவு துன்மார்க்கனா அவன்?

அனுமன் என்னும் பிரம்மச்சாரி கோபால்களுக்கும் சத்யன்குமார்களுக்கும் எதிரில் நிற்கும் ஆதர்சம் போல் தெரிகிறார். அந்த ஆதர்சத்தைத் தேடி கோபால் கொஞ்ச நாட்களாகவே நகர்ந்து கொண்டிருக்கிறான். நாவலின் முதல் பத்தியிலேயே பவுர்ணமிக்கு வீர ஆஞ்சனேயர் கோவிலுக்குப் போவதைப் பற்றி வருகிறது.

கதை மொத்தமுமே கோபால் மற்றும் சத்யன்குமாரால் ‘தன்மை’ (First Person) யில் சொல்லப் படுகிறது. தன்மையில் சொல்லப் படும் கதைகளில் எப்படி ஒரு சில நினைவுகளை, எண்ண ஓட்டங்களை கடைசி வரை வாசகனிடமிருந்து மறைப்பதற்காக தன்னிடமிருந்தும் மறைக்க முடியும்? சத்யன்குமார் ஜம்பகத்தையோ அவள் வீட்டில் நடந்தாகக் கூறப்படும் அசம்பாவிதத்தையோ மிக நெருக்கடியான தருணங்களில் கூட ஏன் நினைக்கவில்லை?

‘தன்மை’ யில் எழுதப் படும் கதைகளில் இந்த சிக்கல் இருக்கிறது. ஜெயமோகனின் “காடு’ நாவலிலும் வருகிறது. அதைப் பிறிதொரு சமயம் பார்ப்போம்.

அசோகமித்திரனின் கூர்மையான பார்வை புற வாழ்வின் சகல நுணுக்கங்களையும் அகத்தின் சகல மடிப்புகளையும் காட்டிக் கொண்டே செல்கிறது. ஒரு வார்த்தையைக் கூட எடுக்க முடியாதபடிக்கு இருக்கும் எளிய செறிவு, இரு வேறு மனிதர்களின் பிரக்ஞையிலிருந்து பீறிடும் தனித் தனி நினைவுகள், உணர்வுகள் மீது முழுமையான கட்டுப்பாடு, ஒழுங்கு, வாழ்வில் எதுவும் எப்பேற்பட்ட அவலமும் நடக்கலாம் என்பதை குரலெழுப்பாமல் உயர்வு நவிற்சி துளியும் இல்லாமல் கூறும் தனித் திறமை இவையெல்லாம் நாவல் ஏற்படுத்தும் பாதிப்பை சிதறடிக்காமல் ஒருமுகப் படுத்துகின்றன.

ஜம்பகம், காமட்சி, சியாமளா, சுந்தரம், அத்தை, ஜெயசந்திரிகா என்ற - மற்றும் தேசப்பிரிவினையின் போது தாங்க முடியாத அவலங்களுக்கு ஆளான, உலகின் எல்லாக் காலங்களிலும் எல்லா பாகங்களிலும் இன்றும் துயரங்களுக்கு ஆளாகிக் கொண்டிருக்கும் ஆனால் உலகம் மீண்டும் உயிர்த்தெழ காரணமாயிருக்கும் - பெண்கள் பற்றிய கதையாகவும் இது உள்ளது.

மானசரோவர் ஒரு ஆன்மீக நாவல், சினிமா பற்றின நாவல் அல்லது சித்தர் பற்றின நாவல், பாவச் சுமையை முற்றிலும் கழுவ முயன்று கொண்டேயிருக்கும் இந்திய மனம் பற்றிய நாவல், நகர்வாழ் மத்தியதர, கீழ் மத்தியதர மனிதர்களையும் மேல்தட்டு மக்களோடு அவர்களுக்கு நேரும் அனுபவங்களைப் பற்றியுமான நாவல் - இன்னும் என்னவெல்லாமோவாக அறியப்படலாம். எனக்கு இது ஒரு உளவியல் த்ரில்லர் என்றும் பட்டது. இந்த த்ரில்லரில் முடிவில் எந்தப் புதிரும் அவிழ்க்கப் படவில்லை. துன்மார்க்கத்தைப் (wickedness) பற்றிய நாவல் என்றும் தோன்றுகிறது. (டாக்டர் ஜிவாகோ படத்தில் ராட் ஸ்டீகரின் பாத்திரம் சாத்தானை நினைவுறுத்தும்)

இந்நூலைப் பற்றி இன்னும் விரிவாக எழுதலாம்தான். இவ்வளவு சாத்தியங்களை எழுப்பும் இவ்வளவு ஆழங்களுக்குச் சென்றிருக்கும் புத்தகத்துக்கு இது கொஞ்சமும் போதாது. எனினும் படித்த மாத்திரத்தில் தோன்றியவை இவை.

மொத்ததில் மானசரோவர் முக்கியமாக எதைப் பற்றிய நாவல்? ‘நிஜம் பொய் கூட இப்படித்தான் பிரித்து சொல்லமுடியாதபடி போய் விடுகிறது’ என்பதுதான் இதன் ரசமாக எனக்குத் தென்படுகிறது.