FUTURE IS NOW - J Krishnamurti.

பிறப்பு, இறப்பு என்பது உண்மையே இல்லை. அத்தகைய பொய்யான தோற்றத்தை நமது மனமே உருவாக்கிக் கொள்கிறது. மனம் தனக்கென்று ஒரு உடலை உருவாக்கிக் கொள்கிறது. அதைக் கனவு மழையில் நனைத்துத் துன்பப் படுத்துகிறது. - ரமண மகர்ஷி.

Search This Blog

Showing posts with label ஆள்மை. Show all posts
Showing posts with label ஆள்மை. Show all posts

Friday, September 4, 2015

‘திரு. நாஞ்சில் நாடன் வாழ்த்தரங்கி’ல் ஓர் உரை

‘திரு. நாஞ்சில் நாடன் வாழ்த்தரங்கி’ல் ஓர் உரை

 | சொல்வனம் இதழ் 133 | 01-08-2015|
(18-07-2015 அன்று கோவையில் ‘மாலதி பதிப்பகத்தார்’ திரு. ரா. பத்மநாபன் எழுதிய ‘ஸ்ரீமத் பகவத் கீதை’ (மூலம் – தமிழாக்கம்) நூல் அறிமுகத்தையும், திரு நாஞ்சில் நாடன் அவர்களின் 40 ஆண்டு எழுத்துப் பணிக்குப் பாராட்டு விழாவையும் ஒரு சேர நிகழ்த்தினார்கள். அதில் திரு. வ. ஸ்ரீநிவாசன் பேசியது.
அனைவருக்கும் வணக்கம்.
Nanjil_Nadan_VaSri_Events_Lectures_Talks_Stage_Meets_Shrinivasan
நான் பகவான் ஸ்ரீ க்ருஷ்ணர் அருளிய பகவத் கீதையை வாசித்ததில்லை. பொதுவாக, பரவலாக ஒரு சராசரி தமிழனுக்கு கீதையைப் பற்றி எவ்வளவு தெரியுமோ அவ்வளவுதான் – ஒருவேளை அதற்கும் குறைவாகத்தான் –  எனக்குத் தெரியும். ஒருகால் கண்ணன் அதை தமிழிலே இசைத்திருந்தால் ‘காற்றினிலே வரும் அந்த கீத’த்தை நான் கேட்டிருந்திருக்கக் கூடும்; படித்திருந்திருக்கக் கூடும். இல்லாது போனாலும் திரு நாஞ்சில் நாடன் அவர்கள் அதைப் பற்றி நிச்சயமாக எழுதியிருப்பார்கள். அப்போது நானும் நிச்சயமாக அதைப் படித்திருப்பேன், ‘சிற்றிலக்கியங்களை’யும், ‘கம்பனின் அம்பறாத் தூணி’யையும் படித்த மாதிரி.
1975 அவர் எழுத்து முதன் முதலில் பிரசுரம் ஆகியிருக்கிறது. 2001ல்தான் நான் அவரை முதன் முதலில் படித்தேன். 26 ஆண்டுகால நீண்ட இடைவெளி. காரணம் அந்தப் பெயர். ஒருவேளை அவர் எழுத்தில் அரசியல் நெடி அடிக்குமோ என்கிற தயக்கம். படித்தபின் தான் தெரிந்தது அந்த எழுத்து தரமற்ற அரசியலை, அறமற்ற அரசியலைத்தான் அடிக்குமேயன்றி அதிலிருந்து எந்த நெடியும், வாடையும் அடிக்காது என்பது; மேலும் அதில் தமிழ் மணமே கமழுமென்பதும்.
முதலில் படித்தது அவரது ஆறாவது நாவலான ‘எட்டு திக்கும் மத யானை’. என்னவொரு தலைப்பு ! எவ்வளவு அழகான, கவித்துவமான அனைத்தையும் விட முக்கியமாக, பொருத்தமான தலைப்பு ! நாவலைப் படித்ததும் அதன் செறிவு, செழுமை, நுட்பம், சுவாராஸ்யம், அந்தத் தமிழ்.. ..  இவற்றில் மனதைக் கொடுத்தேன். உடனே அதுவரை என் வாழ்நாளில் செய்யாத ஒரு வேலையை முதன் முதலில் செய்தேன். ஓர் எழுத்தாளரை நானே நேரடியாகத் தொடர்பு கொண்டேன். திருச்சியில் இருந்த நான் கோவையில் இருந்த அவரோடு தொலைபேசியில் பேசினேன். நாவலில் நான் ரசித்த இடங்களை, விஷயங்களைப் பற்றிச் சொன்னேன். என் புகழ் வார்த்தைகள் அவரிடம் எந்த ஒரு புளகாங்கிதத்தையும் ஏற்படுத்தவில்லை என்பது தெரிந்தது. அதனால் எனக்கு அவர் மீதான மதிப்பு வளர்ந்தது. கொஞ்சம் பிறகு W. H. ப்ராடியின் விற்பனைப் பிரிவு உயர் அதிகாரியாக அவரும், கனராவங்கியிலிருந்து சமீபத்தில்தான் விருப்ப ஓய்வு பெற்ற முதுநிலை மேலாளராக நானும் பேசத் துவங்கினோம்.
“என் மகள் +2 எழுதியிருக்கிறாள். அவளுக்கு எந்த ஊரில் பொறியியல் கல்லூரியில் இடம் கிடைக்கிறதோ அந்த ஊருக்குப் போக வேண்டும்” என்று சொன்னேன். அவர் உடனே சொன்னார் “கோயம்புத்தூருக்கே வந்துடுங்க. நாங்கள்ளாம் இருக்கோம்ல”.
கவி வாக்கு பலித்தது. ஓரிரு மாதங்களில் என் மகளுக்கு கோவை ஜிசிடியில் இடம் கிடைத்து நாங்கள் கோவை வந்தோம்.
அவரை முதன் முதலில் நேரடியாக சந்தித்தது ‘மண்ணுள்ளிப் பாம்பு’ நூல் வெளியீட்டு விழாவில்தான். மேடையில் பேசுகையில் அவர் சொன்னார் : ” இந்தக் கவிதைகள் குறித்து உங்கள் ஒவ்வொருவருக்கும் என்னென்ன விமர்சனங்கள் உள்ளனவோ அவை அனைத்தும் எனக்கும் இருக்கின்றன.” தன் நூல் பற்றி தனக்கே விமர்சனமாம். அதுவும் ஒன்றிரண்டு இல்லை. ஒவ்வொருவருக்கும் இருக்கும் அத்தனை விமர்சங்களுமாம். எழுதியவரே சொல்கிறார். அவருக்கு அகந்தை என்பதே கிடையாது. அகந்தை இல்லாத இடத்தில் கண்ணன் இருக்கிறான். அவன் ‘மதுர மோஹன கீத’மும் இருக்கிறது.
அதே ஆண்டு விஜயதசமி தினத்தன்று அவருக்கு இதய சிகிச்சை நடந்தது. அந்த சமயத்தில்தான் அவரது இல்லத்தில் சென்று அவரைச் சந்தித்தேன். அப்புறம் சில ஆண்டுகள் கோவை, 4 ஆண்டுகள் சென்னை, மீண்டும் கோவை, மீண்டும் 2 1/2 ஆண்டுகள் திருச்சி மீண்டும் இப்போது கோவை என்று இருந்த போதிலும் எங்கள் நட்பு தொடர்ந்து வருகிறது.
Author_Va_Srinivasan_Solvanam_Writers_Speech
26 ஆண்டுகளாக இவரைப் படிக்காமல் விட்டோமே என்கிற குறை இருந்த போதிலும் அதில் ஒரு பெரும் அனுகூலமும் இருந்தது. படிக்க அவர் ஏற்கனவே எழுதியவை எத்தனை இருந்தன? அது தவிர அவர் ‘கரென்டாக’ எழுதுவதும்.
எத்தனை விஷயங்கள் எழுதுகிறார். எவ்வளவு தகவல்கள், தாவரங்கள், மரங்கள், மனிதர்கள், சூழல்கள், மண்கள், குணங்கள், க்ரோதங்கள், த்ரோகங்கள், தயை, அன்பு, கருணை…எத்தனை? எப்படி இவ்வளவும் அவருக்கு எழுத முடிகிறது? அந்தக் ‘கொள்கலன்’ மிகவும் பெரியது. அதில் மிகப் பெரிய இடத்தை அடைத்துக் கொள்ளும் தன் முனைப்பு என்பகிற பொருளும் வேறு அடைத்துக் கொண்டிருக்கவில்லை. தகவல்கள், தமிழ், கிரஹிப்பு மட்டுமல்ல அந்தக் கொள்கலன் மிகப் பெரியதாய் இருப்பதால்தான் குடும்பத்தினர், உறவினர், நண்பர்கள், வாசகர்கள் என்கிற மிகப் பெரிய எண்ணிக்கையிலான மனிதர்களையும் அது கொள்கிறது. அதனால்தான் எல்லோருக்கும் ஒதுக்க நேரமும், கொடுக்க இடமும் அவரிடம் இருக்கிறது. அது ஒரு கனிந்த பரந்த தமிழ் இதயம்.
இவ்வளவு வாசகர்கள் இருந்த போதிலும் அவரது முதல் வாசகன், முதன்மை வாசகன் நான்தான். என்னடா இது இப்போதுதான் அகந்தையை, தன்முனைப்பைத் தாக்கி விட்டு இவ்வளவு தன் முனைப்பு கொப்புளிக்கும் ஒரு கூற்று என்று நீங்கள் நினைக்கலாம். நான் உண்மையைத்தான் சொல்கிறேன். சொல்வனத்துக்கு அவர் எழுதுபவற்றின் கையெழுத்துப் பிரதியை முதலில் வாசிப்பது நான்தான். பின்னர்தான் அவை தட்டச்சு செய்யப் பட்டு பிரசுரமாகும். ஆக ஒரு சில எழுத்துக்களுக்காவது நான் முதல் வாசகன். இந்த மாதிரி ‘ ப்ரொடெக்டிவ் க்ளாஸஸ்’ ‘டிஸ்க்ளெய்மர்ஸ்’ இல்லாமல் அவரது முதன்மை வாசகன் நான் தான். ஏன் என்று இதோ சொல்கிறேன்.
2001 ல் அவருக்கு அவர் இதயத்தில் எந்த ரத்தக் குழாயில் எந்த இடத்தில் அடைப்பு ஏற்பட்டதோ 2011ல் எனக்கு என் இதயத்தில்  அதே ரத்தக் குழாயில் அதே இடத்தில் அடைப்பு ஏற்பட்டது. அவர் மேற்கொண்ட அதே சிகிச்சையை மேற்கொண்டு நானும் குணமடைந்தேன். மறு நாள் சிகிச்சை நடக்கப் போகிறது. இன்று ‘டயக்னோஸிஸ் ரிபோர்ட்’ வந்து விட்டது. அதை நாஞ்சிலின் மகள் டாக்டர் சங்கீதாவிடம் காட்டினேன். அவங்க உடனே சொன்னாங்க “அங்கிள், அப்பாவுக்கும் இதே இடத்தில் இதே மாதிரிதான் வந்தது” நான் உடனே சொன்னேன் “பாத்தியாம்மா ! உங்கப்பா வோட பெஸ்ட் வாசகன் நான்தான் என்பதற்கு இதை விட ப்ரூஃப் வேண்டுமா?”
நான் மருத்துவ மனையில் இருந்த அந்த நாட்களில் என்னோடு இருந்த இருவர் : ஒன்று திரு. நாஞ்சில் நாடன் இரண்டாவது : அவர் மகள் டாக்டர் சங்கீதா (அவர் எனக்கும் மகள்தான்)
“கோயம்புத்தூருக்கே வந்துடுங்க. நாங்கள்ளாம் இருக்கொம்ல”. சொன்னாரில்லையா முதன் முதலில் பேசியபோது. இருந்தார். இடுக்கண் களைவதுதானே நட்பு?
ஆனால் இது பற்றி அவர் ஒருவரிடமும் சொல்லியிருக்க மாட்டார். அவருக்கு இது நினைவில் இருந்தால்தானே சொல்வதற்கு. அவர் இது போல் பலருக்கும் உதவியிருக்கிறார். அவருக்கு இருக்கும் தன்னலம் மிக மிகக் கம்மிதான்.
இப்போது கூட மாலதி பதிப்பகத்தார் இந்த விழா எடுக்கவேண்டும் என்று பிரஸ்தாபித்தபோது அவர் என்னிடன் தொலைபேசியில் சொன்னார் “ஆடிட்டர் தப்பா நினைச்சுக்கப் போறார். அவர்ட்ட சொல்லிடுங்க. பெரிய விழாவெல்லாம் வேண்டாம். எப்படியும் பகவத் கீதை அறிமுக விழா இருக்கு. அதில் என்னைக் கூப்பிட்டு ஒரு ஷால் போட்டாப் போறும்”
பயன் கருதாது, பலன் கருதாது தங்கள் பணி செய்பவர்களுக்கு சரியான விஷயங்கள், சரியான நேரத்தில், சரியாக, பொருத்தமாக நடக்கும். அதற்கு உதாரணம் இந்த விழா. எப்படி நடக்கிறது பாருங்கள். அவரது ஆசிரியர்களில் ஒருவரான ‘கீதை தமிழ் செய்த மாறன்’ திரு. ரா. பத்மநாபன் அவர்களின் நூல் அறிமுக விழாவோடு சேர்ந்து நடக்கிறது. முது பெரும் அறிஞரான திரு. வைத்யநாதன் க்ருஷ்ணன் மற்றும் புவியரசு ஐயா முன்னிலையில் நடக்கிறது. அதுவும் எங்கே? ‘சிருஷ்டி’ மஹாலில். உங்களைப் போன்ற இலக்கிய ஆர்வம் மிக்க வாசக நண்பர்களின் மத்தியில் நடக்கிறது. சேவை மனப்பான்மையோடு இயங்கி வரும் ‘மாலதி பதிப்பகத்தார்’ இதை முன்னின்று நிகழ்த்துகிறார்கள்.
அவர் மேலும் கேட்டார் : ” இப்போ எதுக்கு ? 50 ஆண்டு ஆகட்டுமே. 50 ஆண்டுகள் நாம எழுத மாட்டோமா என்ன?”
அதற்கான பதிலை இந்த மேடையில் தருகிறேன் ” நிச்சயம் எழுதுவீர்கள் நாஞ்சில் சார். 50 ஆண்டுகள் நிச்சயம் எழுதுவீர்கள். அதற்கு மேலும் பல்லாண்டுகள் நிச்சயம் எழுதுவீர்கள். உங்கள் வாசகர்களாகிய நாங்களும் அவற்றையெல்லாம் படித்து இன்புற்று இதே போல் பொருத்தமாக, சிறப்பாக ஒவ்வொரு முறையும் விழா எடுத்து எங்கள் மகிழ்ச்சியை நிச்சயமாகக் கொண்டாடுவோம் என்று கூறி விடை பெறுகிறேன். நன்றி வணக்கம்.”

அஃகம் சுருக்கேல் – நாஞ்சில் நாடன் கட்டுரைத் தொகுப்பு – ஒரு மெச்சல்

அஃகம் சுருக்கேல் – நாஞ்சில் நாடன் கட்டுரைத் தொகுப்பு – ஒரு மெச்சல்

 | சொல்வனம் இதழ் 119 | 29-12-2014|
ஆள்வது என்றால் முழுக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது. துன்புறுத்துவது அல்ல, பரிபாலனம் செய்வது. மேன்மையுறக் கலந்துறவாடுவது.போற்றுவது.
ஒருமுறை நாஞ்சில் நாடன் அவர்களிடம், “‘நமஹ’ என்கிற சம்ஸ்க்ருத சொல்லின் பொருள் எனக்குத் தெரியாது; ஆனால் அதற்குப் பதிலாக தமிழ் வழிபாட்டுத் துதிகளில் ‘போற்றி’ என்று இருப்பது தெரியும். தமிழன் காலங்காலமாகப் போற்றி போற்றி என்று யாரையாவது முகஸ்துதி செய்து கொண்டே இருப்பவன் போலும்” என்று சொன்னேன். உடனே அவர் ‘போற்றி’ என்பது புகழ்வது மட்டுமல்ல; அதற்கு இன்னும் பல ஆழமான பொருள்கள் உண்டு என்று விளக்கினார். போற்றுவது என்பது அக்கறையோடு பேணுவதும் கூட. மதிப்பு தருவது மட்டுமின்றி அன்பு செலுத்துவதும் கூட என்றெல்லாம் பேசினோம். அந்த விதத்தில் ஆள்வது என்பது இவையனைத்துமானது.
ஆள்பவன் என்பவன் இப்படி இருந்தால் ‘ஆபயன் குன்றாது; அறு தொழிலோர் நூல் மறவார்’ குடியாள்பவன் இப்படி என்றால் எழுத்தாள்பவன் எப்படி இருக்க வேண்டும்? மொழியின் மீது, சொல்லும் பொருளின் மீது முழுக்கட்டுப்பாடும், மோகமும், போற்றுதலும், நுண்ணறிவும், புலனுணர்வும், மொழியின் பரப்பையும், வீச்சையும் துல்லியமாய் கணிக்கும் திறனும் உடையவனாக இருக்க வேண்டும். மொழியை ஆள வேண்டும். போற்றிப் பேண வேண்டும். அவன்தான் எழுத்தாளன். இது எம்மொழிக்கும் பொருந்தும். பாக்கிப் பேர் ‘எழுத்துபயோகிகள்’ மட்டும்தான். தமிழில் அரிதாகக் கிடைக்கிற எழுத்தாளர்களில் நாஞ்சில் நாடனும் ஒருவர்.
இத்தகைய எழுத்தாளர்களிலும் வாழ்நாள் சுருக்கத்தாலும், வாழ்வின் நெருக்கத்தாலும், மனப் பாங்கினாலும் தேர்ந்தோ, எதேச்சையாகவோ எழுத்தின் பல்வேறு துறைகளிலும் கவனத்தைச் செலுத்தாதவர் அல்லது செலுத்துபவர் என்று இரு பெரும் பிரிவுகள் உண்டு. புதுமைப் பித்தனும், மௌனியும் நாவல் எழுதியதில்லை. ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி முதலியவர்கள் போல் நாஞ்சில் நாடனும் சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை போன்ற பல பிரிவுகளிலும் தடம்பதித்தவர். தடம் பதித்தவர் என்றால் ஏனோ தானோ என்று அல்ல. முழு வீச்சுடனும் ஆழமாக. இவை தவிர திரைக்கதை, மேடைப் பேச்சு, உரையாடல், நேர்காணல் என்னும் பல துறைகளிலும் கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக இலக்கியப் பணி புரிந்து வருபவர்.
இப்போது எழுத்துகளை புனைவு, அ-புனைவு என்று பிரிக்கும் வழக்கம் வந்துள்ளது. முன்பெல்லாம் கதை, கவிதை மற்றும் கட்டுரை என்று சொல்வதுதான் வழக்கம். இந்த புனைவு மற்றும் அபுனைவு ஆங்கில Fiction, non-fiction ஆகிய இரண்டின் தமிழ்ப்படுத்துதல். புனைவு. இதில் எத்தனை அபுனைவு? இந்த அபுனைவில் எவ்வளவு புனைவு? உலக இலக்கியத்தில் இது போன்ற கறாரான, மூச்சு முட்டும் கட்டுப்பாடுகள் எப்போதோ தளர்ந்து விட்டன. ‘Fiction, nonfiction – the two are bleeding into each other all the time.’ என்கிறார் ஜெஃப் டையர். இதை தமிழில் செய்தவர்களில் நாஞ்சில் நாடன் முக்கியமானவர். இவரது கதைகளில் கட்டுரைத் தன்மை திடீரென்று கதையாகும் மாயம் நிகழும். உதாரணத்திற்கு இரண்டு: ‘வனம்’ என்கிற சிறுகதை, மற்றும் சில ஆண்டுகளுக்கு முன் ஆனந்த விகடனில் வெளியான ‘பெருந்தவம்’ என்கிற கதை. அதே போல் இவரது கட்டுரைகளில் சிறுகதைகளின் சுவை இருக்கும்.
agham_surukkel
கதை, கட்டுரை மட்டுமல்ல. கவிதையும் அப்படித்தான். நம் மரக்காலால் அளக்க முடியாத மகாநதி. கவிதை என்பது கவிதைகளில் மட்டுமே எழுதப்படுவது மட்டுமன்று. அது கவி உளத்திலிருந்து பிறப்பது. அப்படிப் பார்த்தால் இப்போது கவிதைகள் பலவற்றில் கவிதை இல்லை என்று சொல்லி விடலாம். எழுத்தின் இசை கவிதை. ஒரு கதையில், ஒரு கட்டுரையில் ஒரு கவிதை வரி மனதை ஆண்டு விடும். ‘மோகமுள்’ என்கிற தலைப்பே கவிதை. ‘கற்பு கற்பென்று கதைக்கிறீர்களே, இதுதான் ஐயா பொன்னகரம்’ என்கிற வரிகள் கவிதை. ‘கம்பனுக்குள் வந்த கதையில்’ நாஞ்சில் நாடன் தன் கம்ப ராமாயண ஆசிரியர் திரு ரா.பத்மநாபன் பற்றிக் குறிப்பிடுகையில் “ரா.ப. வுக்கு எந்த விதத்திலேயும்  உபகாரம் செய்திருக்கலாகும் என அவர் இறந்து ஒரு வனவாச காலம் கடந்தபின்பு, இந்த நூலை (கம்பனின் அம்பறாத் தூணி) காணிக்கையாக்கி நான் அவருக்குக் கடன் செய்கிறேன். நீர்க்கடன் அல்ல நூற்கடன்” என்கையில் சொல்லாலும், பொருளாலும் நோக்கத்தாலும் கவிதை நிகழ்ந்துவிடுகிறது.
எனவே கட்டுரை அல்லது அபுனைவு என்பது நல்லதோர் எழுத்தாளனின் ஆளுமையில் வறண்ட தரிசு நிலம் அல்ல. அவன் கலை புணர்ந்து பெறும் குழந்தைகளுக்கு நாம் வைக்கும் பெயர்களால் அவற்றின் குணம் கட்டுப்படப் போவதில்லை.
கட்டுரை உட்பட எழுத்தின் அடிப்படை, வாழ்க்கையின் அடிப்படையுமான, அதே சமயம் சொல்லிச் சொல்லித் தேய்வழக்காகி விட்ட ‘உண்மை, அன்பு, அழகு’தான். அதை எம்மொழியில் சொன்னால் என்ன? ‘Truth Beauty, Love’ என்றாலும், ‘சத்யம், சிவம் சுந்தரம்’ என்றாலும் ஒன்றுதான். மேன்மையான எழுத்து இவற்றின் மேல் மலர்வது.
‘உண்மை’ பற்றிச் சொல்கையில், நாஞ்சில் நாடன் அவர்களின் கதைகளிலேயே கூட ஒரு தகவல் இருந்தால் அது சரியாகத்தான் இருக்கும் என்கிறார் வெங்கட் சாமிநாதன். அப்போது கட்டுரைகள் பற்றி என்ன சொல்வது. கட்டுரைகள் என்பவை எழுத்தாளனின் தொடர்ந்த உரையாடல். அவன் சொல்லும் விஷயங்கள் தவிர அவனைப் பற்றியும், நம்மைப் பற்றியும் அவ்வெழுத்துகள் மூலம் நாம் தெரிந்து கொள்கிறோம். அதில் தில்லு முல்லுகள் செய்வது, திரிப்பது என்பவை பஞ்சமா பாதகங்களை விட கொடியவை. நாஞ்சிலின் கட்டுரையில் உள்ள தகவல்கள் பலமுறை பல கோணங்களில் சரிபார்க்கப்பட்ட பின்பே அச்சுக்கு வருபவை. அவரது மனச் சாய்வுகள், பிடித்த பிடிக்காத தன்மைகள் என்று வாசகர் சிலவற்றைக் கருதலாம். ஆனால் தகவல் பிழைகள் இரா.
‘அன்பு’ என்பது துன்பம் துடைத்தல். அதை மகத்தான எழுத்துகள் செய்து கொண்டே இருக்கின்றன. அதனால்தான் அநியாயத்துக்கு எதிரான, எனவே ஏழைகளுக்கும், பலஹீனமானவர்களுக்கும், வஞ்சிக்கப் பட்டவர்களுக்கும் ஆன, அதே சமயம் அதன் மூலம் ஆதாயம் தேடாத குரலாக நாஞ்சில் நாடன் எழுத்துகள் ஒலிக்கின்றன. இந்தத் துன்பங்களுக்குக் காரணமான வாழ்க்கைச் சீரழிவுகளைப் பற்றி மீண்டும், மீண்டும் பேசுகின்றன.
‘அழகு’ என்பது துல்லியம், சரியான அளவு, தன்மை. சொல்ல வந்த விஷயத்தைப் பிசிறின்றிச் சொல்வது. இதற்கு அகத்தெளிவும், விஷய அறிவும் அவசியம். ‘The difference between the right word and the almost right word is the difference between lightning and a lightning bug.’ என்கிறார் மார்க் ட்வெய்ன். இந்த விஷயத்தில் வார்த்தைப் பற்றாக் குறை என்கிற பேச்சுக்கே இடமில்லாமல் எழுதுபவர் நாஞ்சில் நாடன். பழந்தமிழ்ச் சொற்கள், சமீப காலம் வரை இருந்து பிற மொழி மோகத்தால் வழக்கற்ற தமிழ்ச் சொற்கள் என்று கொட்டிக் கிடக்கும் நமது கருவூலத்தின் சாவி இவர் வசம் இருக்கிறது. இவரது நடை பழந்தமிழ் போல் இருக்கிறது. நவீன உலகுக்கு இது சாத்தியப்படுமா என்பவர்களுக்கு ஒரே ஒரு கேள்வி : ‘நீங்கள் நவீனம் என்பதை ஆங்கிலம் என்று நினைக்கிறீகளா, அல்லது ஒரு மொழியின் உயிர்த் தன்மை என்று நினைக்கிறீர்களா?’
மேலும் கூடியவரை தமிழ்ச் சொற்களையே தனிப் பேச்சிலும் பயன்படுத்தும் இவர் தேவை இருக்கையில் பொருளின் தன்மை கருதி பிற மொழிச் சொற்களைப் பயன்படுத்தத் தயங்குவதில்லை. ஒரு கலைஞனால் எந்த ஒரு மொழியையும் எப்படி துவேஷிக்க முடியும்?
உலக நாடுகளுக்கும், இந்தியாவின் பலபகுதிகளுக்கும் சென்று வந்தவரும், இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளில் பல ஆண்டுகள் வாழ்ந்துள்ளவருமான இந்த நாகர்கோவில் தமிழர், அடிப்படையில் ஒரு விவசாயியாகவே தன்னைப் பாவிக்கிறார். இவரது உறவு முதலில் மண்ணோடு, பயிர்களோடு, தாவரங்களோடு, விலங்குகளோடு, பறவைகளோடு. இந்த உறவுகளின் வலிமையின் காரணமாகவே இவருக்கு மனித உறவுகள் சீராகவும், சிக்கலற்றும், அன்போடும் இருக்க வேண்டும் என்கிற அக்கறையும், அதுகுறித்த தற்காலச் சூழல் மற்றும் தாக்கங்களால் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் அழிவு பற்றிய அச்சமும் ஒருங்கே உள்ளன. அதனல்தான் “இந்தியா பூராவும் செல்போன்களின் விதவிதமான வல்லிசைகளால் நிரம்பி பிரபஞ்சத்தில் வழியும் காலம் வெகு தூரத்தில் இல்லை” எனக் கவலுறுகிறார். “செண்பகப் பறவைக்குத் தெரியுமா அதன் பெயர் செண்பகம்” என்று என்று வினவுகிறார். “இவ்வுலகு மனிதர்க்கு மட்டுமே சொந்தமானது அல்ல” என்பதை நமக்கு நினைவு படுத்துகிறார்.
எழுத்தாளன் நேர்மையாக இருக்க வேண்டும். சமன் செய்து சீர் தூக்கும் கோல் போல். எல்லாம் சரி என்பதல்ல இக்கோல். எது சரி என்பதுதான். நாஞ்சில் நாடன் சில இடங்களில் ஒரு விஷயத்தின் இரண்டு பக்கங்களையும் சொல்லிச் சென்று விடுவார். உதாரணம் : “பர்வம்’ என்னும் வடமொழிச் சொல்லின் தமிழ் வார்ப்பே பருவம் என்றும் சொல்வார்கள் அற்ப மகிழ்ச்சி அடைய.”
ஆனால் இது போன்ற பெரிய ஆபத்தில்லா உபாதைகளைப் போலன்றி உயிர் கொல்லும் நோய்கள் பற்றி சர்வ நிச்சயமாகத் தன் நிலைப்பாடு இதுதான் என்பதை ஐயத்துக்கிடமின்றிச் சொல்லி, தான் யார் என்பதையும் காட்ட இவர் தயங்குவதில்லை. இது தமிழுலகில் அரிதான குணம். பாசாங்கு , சுயலாபக் கணக்கின் இடையறாத துரத்தல் தவிர அச்சத்தின் காரணமாகவும், தரங்கெட்ட சமூக அபாயங்கள் காரணமாகவும் இத்தகைய தீர்மானமான கருத்துகளைச் சொல்ல பலரும் தயங்குகிற சூழலில் தன் கருத்து இதுதான் என்பதை எள்ளளவும் தயங்காது உரத்துச் சொல்லும் இவர் துணிவு அரிதினும் அரிதானது. அத்துணிவினால்தான் “கம்ப ரசம் எழுதப்படலாம். கீமாயணம் எழுதப் படலாம். கொண்டு வந்து போட்டுக் கொளுத்து எனலாம். இராமனைச் செருப்பால் அடிக்கலாம். செருப்பு மாலை போடலாம். சீதையின் மேலாக்கை மாநாட்டு ஊர்வலத்தில் விலக்கி விலக்கிக் காட்டலாம். ஆனால் கம்பனும், அவனது இராமாயணமும் யாவற்றையும் வென்று வாழும்.” என்று இவரால் சொல்ல முடிகிறது.
அவரைப் பற்றி அவரே சொல்வது போல தமிழுடன் சகவாசம், இசையுடன் இசைவு, இளையவர் நட்பு இவரை முதுமையடையாமல் பார்த்துக் கொள்கிறது. அது நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாகத் தொய்வின்றி எழுதி வரும் இவர் எழுத்தில் தெரிகிறது.
தத்துவச் சேற்றுக்குள் கால் வைக்காதவர். இவரது வாழ்க்கை நெறி முறையும், அது குறித்து இவரது உறுத்தாத அறிவுரையும் மிக எளிமையனவை : “சக மனிதனைச் சகித்துக் கொள்ள முயல வேண்டும். சக மனிதனைப் புரிந்து கொள்ள முயல வேண்டும். முடியுமானால் நான் சக மனிதன் மீது அன்பு செய்ய முயல வேண்டும்.” “உலகம் அயோக்கியமயமாக இருக்கட்டும். நமக்கு வாய்த்திருக்கும் நல்ல தன்மைகளை அற்ப சுகங்களுக்காக இழக்க நாம் தயாராக இல்லை” இவ்வளவுதான். இதை விட வேறு என்ன வேண்டும்?
நாஞ்சில் நாடனின் இக்கட்டுரைகள் தீவிரமான விஷயங்களைப் பற்றிப் பேசினாலும் அவரது எழுத்தின் இயல்பான நகைச்சுவை, ‘கன்னியாகுமரி கடலை என்ன செய்வதென்று தெரியாமல் வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கும் ஐயன் திருவள்ளுவன் சிலை’ என்பன போன்ற கவனிப்புகளாக, படிக்கும் சுவாரஸ்யத்தைத் தூண்டிக் கொண்டே இருக்கும்.
‘செந்தமிழ்க் காப்பியங்கள்’ கட்டுரை ஐம்பெருங்காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள், கம்ப ராமாயணம், மகாபாரதத் தமிழாக்ககங்கள், பெரிய புராணம், சீறாப்புராணம், இரட்சணி யாத்திரிகம், தேம்பாவணி என காப்பியங்கள் பற்றி சுருக்கமான அறிமுகங்களைத் தரும் முக்கியமான கட்டுரை. இது நாஞ்சில் நாடனின் இன்னொரு தொண்டு. தமிழன் தன்னிடம் உள்ள முத்துகளையும், வைர, வைடூர்யங்களையும் பற்றி கிஞ்சித்தும் அறியாமல் பிறரைப் பழிப்பதிலோ, பிரிவினை பேசுவதிலோ, வெற்று கோஷங்கள் எழுப்புவதிலோ, தமிழ்த் தொண்டு ஆற்றி விட்ட நிம்மதியில் உறங்கிக் கிடக்கிறான். ‘மொழியை அரணாகப் பயன்படுத்த, அதன் மூலம் இனத்தை, மரபை, பண்பாட்டை, இலக்கியச் செல்வங்களைக் காக்க நமது செயல் திட்டங்கள் என்ன’ என்று சிந்திக்க ஒரு நொடி ஒதுக்குவதில்லை. அவனிடம் “கேளப்பா இவையெல்லாம் உன் சொத்து. கண் திற” என்று அறிமுகம் செய்கிறார்.
பல முக்கியமான தகவல்களைத் தரும் அறிவு சார் கட்டுரைகள் இவரது இன்னொரு தொண்டு. இவை தமிழில் எங்குள்ளன? யார் எழுதியவை? அவை பற்றிய அறிமுகம், மற்றும் கிடைக்குமிடம், அந்நூல்களின் சிறப்பு பற்றி எழுதுகிறார்.
கணித முதுகலைப் பட்டதாரி. புள்ளியியல் படித்தவர். அபார நினைவாற்றல் உள்ளவர். இணையத்தின் துணையின்றியே பல நீண்ட விரிவான தகவல்களையும், பட்டியல்களையும் தரக் கூடியவர். கலைத் தன்மை, தர்க்கம் இரண்டும் ஒரு சேர இயங்கும் முழு மூளைக் காரர். இவ்வொத்திசைவினால் தாவரங்கள், தல விருட்சங்கள், மாடன்கள் என்று நீண்ட பட்டியல்களைத் தருகையிலேயே அவற்றின் உட்பொருளையும், அவை நம் வாழ்வாதாரங்கள் என்பதை நமக்கு உணர்த்தவும் இவரால் முடிகிறது.
இயற்கையும் நாமும் ஒன்றுதான் என்கிற அடிப்படை உணர்வை இவரது கட்டுரைகள் வாசகருக்குத் தொடர்ந்து கடத்துகின்றன. மறந்து போன உண்மைகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வருகின்றன. வெட்டுப்பட்ட ஆல மரத்தின் வெட்டுப் பரப்பில் உட்கார்ந்தது, இவருக்கு அறியாச் சிறுவனாய் தன் சித்தப்பா, சித்தி மடியில் அமர்வதைப் போல் இருக்கிறது. இது எவ்வளவு உண்மைகளை வாசகருக்கு ஒரு சேர அளிக்கிறது ! அமர்ந்தது மரத்தடி கூட இல்லை. என்றோ இருந்த ஆல மரத்தின் வெட்டுப் பரப்பு. அந்தப் பரப்பு மனித மடி ஆகிறது. அறியாச் சிறுவனின் வாழ்வில் மடி எவ்வளவு உந்நதமான, பாது காப்பான, நிம்மதியான இடம்? வளர்ந்த மனிதன் சாகும் வரை அத்தகு மடி தேடித்தானே அலைகிறான், கோயில் கோயிலாக, தலைவன் தலைவனாக, கொள்கை கொள்கையாக, கேளிக்கை கேளிக்கையாக . . . . அந்த மடி, உலகோர் குறுக்கி எதிர்பார்ப்பது போல் சொந்தப் பெற்றோரது கூட இல்லை. தாய் தகப்பனைப் போல் அல்லது தாய் தந்தையினும் சாலப் பரிந்து வாழ்வமுதூட்டிய சித்தப்பா சித்தி மடி.
“அல்லாஹூ ஆலம்’ என்பதில் ஆலம் என்பதன் பொருள் உலகம். உலகமே இறைவன், இறைவனே உலகம்” என்று பொருள் சொன்ன நண்பரின் இச்சொற்றொடரில் ஆலம் என்கிற சொல்லினால் ஈர்க்கப் பட்டு “கடவுள் ஆலம், கடவுள் ஆலம், கடவுள் ஆலம்”  என்று இவர் திரும்பத் திரும்பச் சொல்லிப் பார்க்கிறார். ஆல மரத்தின் வெட்டுப் பரப்பு சித்தப்பா சித்தி மடி ஆகையில் ஆலம் கடவுளும்தானே? அனைத்தும் கடவுள்தானே?
ஆனால் நாஞ்சில் நாடன் குணரூபமான (abstract) விஷயங்களில் ருசி கண்டு அங்கேயே உழல்பவர் அல்ல. மிகவும் யதார்த்தமானவர். நிஜ வாழ்க்கையை சரியாக்கும் பணியில் தளாராது ஈடுபடுபவர். அதனால்தான் நம்மிடம் கேட்கிறார் : “நாம் ஒன்றாக நின்று – வேற்றுமைகளுக்கு உள்ளும் ஒற்றுமையாக நின்று காசி என்று நினைத்தால் ராமேஸ்வரம் நினைவுக்கு வருவதைப் போல கூட்டாக உய்யப் போகிறோமா? அல்லது தன்படை சுட்டுச் சாகப் போகிறோமா?” கவனமும் கவலையும் மிக்க இக் கேள்விக்கு நாம் வாழ்வதன் மூலமாகச் சொல்லும் பதிலில் இந்தியாவின், தமிழனின் எதிர்காலம் உள்ளது.
ஓர் எழுத்தாளனின் பணி இதுதான். மனித குலத்தைத் துண்டாடுவனவற்றை மறுதலிப்பது. அடிப்படையில் நாம் அனைவரும் ஒன்று என்கிற உண்மையை விட்டு அசையாதிருப்பது. அதைச் செய்யும் இக்கட்டுரைகள் ஒரே நூலாக வருவது மிகுந்த மகிழ்ச்சிக்குக் காரணமாகிறது.
தமிழ் மொழி, சமுக சிந்தனை, கல்வி, இலக்கியம், கலை, பண்பாடு, குடும்பம், உறவுகள், இயற்கை முதலிய பல்வேறு தளங்களில் கூர்மையான பார்வைகளையும், கருத்துகளையும் நேர்மையாக வைக்கும் திரு நாஞ்சில் நாடன் அவர்களின் பல கட்டுரைகளிலிருந்து பெரும்பாலான இத்தன்மைகள் வெளிப்படுமாறு இத்தொகுப்பு அமைந்திருக்கிறது.

****
Aggam_Surkkel_Nanjil_Nadan_Books_Essays_Tamil_Letters_Cover_2015
தொகுப்பாசிரியர் : ஜி. ஆர். பிரகாஷ்
நூல் கிடைக்குமிடம் : மாலதி பதிப்பகம், கோவை. தொடர்புக்கு : 9 9946  95242, 94881 85920
மின்னஞ்சல் :  malathipathipagam@gmail.com
விலை : ரூ. 150/-

ஆயிரம் பிறை கண்ட அரிமா! – ஜெயகாந்தன்

ஆயிரம் பிறை கண்ட அரிமா! – ஜெயகாந்தன்

 |சொல்வனம் இதழ் 114 | 10-05-2014|

1960களின் மத்தியில் பள்ளியில் கே.பாலசந்தர், கே.எஸ்.கோபாலக்ருஷ்ணன் என்று சினிமா டைரெக்டர்கள் பற்றி பேசும் மாணவரிடையே அறிவியல் ஆசிரியர் திரு என்.எஸ். இரகுநாதன் “இதப் பத்தியெல்லாம் பேசறீங்களே, ஜெயகாந்தனைப் படியுங்கப்பா” என்று சொன்னார்.
வாழ்க்கையின் புதியனவற்றுக்கு எல்லையே கிடையாது என்கிற உண்மையில் அது பற்றி அறியவே செய்யாது திளைக்கும் சிறுவர் பருவம். சந்தேகம் கிடையாது. கடிவாளங்கள், கோட்பாடுகள் எதுவும் கிடையாது. நீடித்த கவலைகளும்தான். எனவே உடனே ஜெயகாந்தன் படிக்கத் துவங்கினோம். படிக்கத் துவங்கிக் கிடைத்த ஆனந்தத்தில், ஏதோ நாங்கள் ஒவ்வொருவருமே கண்டுபிடித்த அபூர்வமாக அவரை உணர்ந்ததில் அவரது எழுத்துகளும், பின்னர் அவரது பேச்சுகளும் அவற்றுக்கு வெகு காலத்திற்குப் பின் நிகழ்ந்த சந்திப்புகளும் ஜெயகாந்தனை எழுத்திலும், பேச்சிலும், நேரிலும் படிப்பதை வேத மந்திரம் போல் ஆக்கின.
jk
“நீரெல்லாம் கங்கை, நிலமெல்லாம் காசி” என்றவர், “எழுத்தும் தெய்வம், எழுதுகோலும் தெய்வம் என்று நம்புகிற மக்களிடையே இத்தகைய தெய்வ லீலைகள் நிகழும்” என்று தமக்கு கிடைக்கும் அங்கீகாரம் பற்றிச் சொன்னவர் பற்றி இப்படிச் சொல்வது தகும்.
ஆனந்த விகடன் எப்போது வரும் என்று வீட்டு வாயிற்படியில் காத்திருப்போம். பெரும்பாலும் அதில் ஜெயகாந்தன் கதைகள் இருக்கும் காலம் அது. வந்த பின் படித்து, பிறகு பள்ளிக்குப் போய் நண்பர்களிடையே அதை சிலாகித்து பேசிக் கொண்டே இருப்போம்.
பின்பு ஜெயகாந்தன் எங்கெல்லாம் பேசுகிறாரோ அங்கெல்லாம் சென்று கேட்போம். அல்லது கேட்டவர்களிட்மிருந்து ஜெயகாந்தன் என்ன பேசினார் என்று கேட்டுத் தெரிந்து கொள்வோம்.
40 ஆண்டுகளுக்கு முன் யு.எஸ்.ஐ.ஏஸ். ஸில் நடந்த “நேருக்கு நேர்” நிகழ்ச்சியில் ஒருவர் “உங்கள் வாழ்வின் லட்சியம் என்ன?” என்று கேட்டபோது “Not to die” என்று அவர் சொன்ன பதில், எண்பதாம் ஆண்டு நிறைவின்போது திரு. நல்லி குப்புசாமி “ நீங்கள் நூறாண்டு வாழ்வீர்கள் “ என்று வாழ்த்தியபோது போது சொன்ன “ஆமாம்” என்கிற ஆமோதிப்பில் தொடர்கிறது. இப்படி சொல்ல, இப்படி எண்ண ஒருவர் உண்டென்றால் அது ஜெயகாந்தன்தான்.
“நான் பொழுது போனால் குடிப்பவன்” என்று காந்தி ஜெயந்தி விழாவில் பேச ஆரம்பித்தவர். தமிழாசிரியர்கள் மாநாட்டில் மிக நீண்ட முஸ்தீபுக்குப் பின் அவர்களுக்கு ‘நமஸ்காரம்’ சொன்னவர். பெரியாரின் துவேஷத்தின் அநீதியை அவர் மேடையிலேயே துணிந்து தர்க்க ரீதியாக, தர்ம ரீதியாக எதிர்த்தவர். பல வண்ணங்கள் கொண்ட சட்டையுடன் மேடை ஏறியவரை ‘பாம்பாட்டி’ என்று சொன்ன அரசியல்வாதியை, ‘மேடையில் இருக்கும் உங்களையெல்லாம் ஆட்ட வந்த பாம்பாட்டிதான் நான்” என்று பதில் சொன்னவர். நான் ‘கலைஞர் பேசுகிறேன்’ என்று ஃபோனின் மறு முனையிலிருந்து சொன்ன குரலிடம் ‘நானும் கலைஞர்தான் பேசுகிறேன்’ என்று பதிலிறுத்தவர். இராட்டை சுற்றும் பெண் என்னும் சின்னத்தினை கெவலமாகப் பேசிய மூத்த அரசியல்வாதியின் கண்களை காமப்புழு நெளியும் கண்  என்று சினந்து, உன் தாய், மகள் அவர்களை மறந்தாயா என்று கேட்டவர்.
35 வருடங்களுக்கு முன், ‘ம்யூசிக் அகாடமி’யில் நடந்த ‘மாக் பார்லிமென் ட்’ டில் இவர் ஒரு புறமும், சோ ஒரு புறமும் அமர்ந்திருக்க மேலும் பலர் பேசக் காத்திருக்கையில் “I can’t relish this nonsense” என்று இவர் அறிவித்ததும், சோ  “இவர் பேசட்டும். நாம் கேட்போம். இவர் பேசுவதை எல்லோரும் கேளுங்கள். நம் எல்லோருக்கும் நாட்டுக்கும் அது நல்லது” என்று கூட்டத்திடம் கூறினார். பின்னர் பொழிந்த ஜெயகாந்தன் “இப்போது மஹாத்மா காந்தி பிறந்திருந்தால் அவரை ஒரு சேரியில்தான் தேட வேண்டும்; அவர் மறு பிறவியில் அங்குதான் பிறக்க விரும்பினார்” என்று கூறி மிகப் பிரமாதமான உரையை நிகழ்த்தினார். மாக் பார்லிமென் ட் நடக்கவில்லை. ரொம்பி வழிந்த ம்யூசிக் அகாடமி அவ்ர் பேச்சை மட்டுமே வெகு கவனமாக பூரண ஈடுபாட்டுடன் கேட்டது.
இன்னொரு மேடையில் காந்தி வெளிநாடு செல்கையில் அவர் அன்னை ‘மது, மாமிசம், மாது’ வேண்டாம் என்று வாக்குக் கேட்டதைப் பற்றிச் சொல்கையில் என் தாய் எனக்கு ஆசை ஆசையாய் ஊட்டிய அசைவ உணவை நான் விட வேண்டியதில்லை. இதன் தாத்பர்யம் புலனின்பத்தில் உன்னை இழந்து விடாதே என்பதுதான்” என்றார்.
பாரதி, புதுமைப் பித்தன் என்கிற இரண்டு பெயர்களை எங்கள் காதுகளில் உபதேசித்தவர் ஜெயகாந்தன்தான்.
பாரதி என்னும் மஹா கவியின் உரைநடையை எங்களுக்கு அறிமுகப்படுத்தியவர் அவரே.
என் கட்டுரைகளில் எல்லாம் எங்காவது ஜெயகாந்தன் வந்து விடுவார் என்று என் நண்பர்கள் சொல்வதுண்டு. இது அவரைப் பற்றிய கட்டுரை இதை எழுதுகையில் பாரதி பற்றி ஜெயகாந்தன் சொன்னதை நினைவு கூருகிறேன்.
“எனது நூல்கள் யாவும் மகாகவி பாரதியின் பாத கமலங்களில் சமர்ப்பிக்கப்படுவனவே யெனினும் இந் நூல் பாரதியின் இலக்கியச் சோலையிலிருந்து பறித்தெடுத்த மலர்களால் தொகுக்கப் பட்டது என்பதனைக் கருதிச் சொந்தத்தோடும், உரிமையோடும் அவரது சென்னியிலிதைச் சூட்டுகிறேன். (பாரதி பாடம்)“
இவரை நேரில் அருகில் பார்த்தது 1987-90 ல் நான் கல்கத்தாவிலிருந்தபோது சென்னை வந்தபோது. திரு. அசோகமித்திரனைச் சந்தித்து விட்டு ஆழ்வார்பேட்டையிலிருந்த மடத்துக்கு வந்து இவரைப் பார்த்தேன். ஒரு 15 நிமிடம் உடன் இருந்தேன்.அது சந்திப்பு அல்ல.
பின்னர் 2001ல் பொங்கல் சமயத்தில் தஞ்சாவூரில் நடந்த ஒரு விழாவுக்கு திரு. மோதி. ராஜ கோபால்* என்னையும், அவர் உயிர் நண்பர் பத்மனாபன் அவர்களையும் தன் காரில் திருச்சியிலிருந்து அழைத்துச் சென்றார். அதுதான் ஜே. கே. யுடனான முதல் சந்திப்பு.
கார் பாதி வழியில் பங்க்சர் ஆகி விட்டது. ஒரு பஸ் பிடித்து தஞ்சை சென்றோம். சா. கந்தசாமி மற்றும் ஜெயகாந்தனின் நண்பர்கள் பலரும் இருந்தார்கள். தஞ்சை அறிஞர், சேக்கிழார் அடிப்பொடி திரு டி.என். இராமச்சந்திரனின் ‘வழி வழி பாரதி’ என்னும் நூல் வெளியீட்டு விழா. “நாங்கள் எல்லோரும் சிரமப்பட்டு படிகளில் மெல்ல ஏறி ஓர் இடத்தை அடையப் பார்த்தால் அங்கே அனாயாசமாக உலவிக் கொண்டிருப்பவர் ஜெயகாந்தன் “ என்று சொன்னார் திரு. டி. என். ஆர்.
ஜெயகாந்தனிடம் ஃபார்மலாக என்னை அறிமுகம் செய்து வைத்தார் மோதி. அந்த அறையில் கூட சுமார் 20 பேர் இருந்தார்கள். அந்த அமைப்பை ‘சபை’ என்று சொல்வார்கள். ஜெயகாந்தன் மட்டும் பேசினார். தொடர்ந்து பேசினார். பேசிக் கொண்டே இருந்தார். அந்தப்பேச்சின் தொடர்ச்சியை மாலை மேடையில் நூல் வெளியீட்டு விழாவிலும் பேசினார். பாரதி பற்றி அவரது மற்றொரு மகத்தான உரையைக் கேட்டேன். மானசீகமாக அவரை நமஸ்கரித்தேன்.
இரவு கிளம்பும் சமயம் அவரை உண்மையிலேயே சாஷ்டாங்கமாக நமஸ்கரித்தேன். படுக்கையில் ஒருக்களித்து அமர்ந்திருந்த அவர் நிமிர்ந்து கைகளை ஆசீர்வதிப்பது போல் செய்து ‘காட் ப்ளெஸ் யூ” என்றார். மிக இயல்பாக அந்நிகழ்ச்சி முன் திட்டம் ஏதுமின்றி நடந்தது. அதுவரை நான் எந்த பிரமுகர், மடாதிபதி, மதத் தலைவர், மூன்றாம் மனிதரையும் வணங்கியதில்லை என்பதை மோதியிடம் சொன்னேன். அதே போல் ஜெயகாந்தனும் பாசாங்காய் யாராவது எதாவது செய்தால் நிராகரித்து விடுவார். இன்று உங்களை ஆசீர்வதித்தார் என்று மோதி சொன்னார்.
Suga_Jeyakanthan_Writers_Authors_Tamil_Icons
(சுகா, ஜெயகாந்தன், வ.ஸ்ரீநிவாசன்)
மதியம் அறையில் பேசிக் கொண்டிருக்கையில், எந்த மாதிரி கதைகளை எழுத மாட்டேன் என்பது பற்றிச் சொன்னார். “ஒரு வீட்டில் ஒரு பெண் இருப்பாள். அவள் வீட்டுக்கு மத்தியான நேரத்தில் ஒரு ஆண் வந்து விட்டுப் போவார். தினமும், அந்தப் பெண்ணின் கணவர் வெளியே சென்ற பின், இது நடக்கும். ஆனால் நான் இதை எழுத மாட்டேன்” என்றார்.
தொடர்ந்து, “அக்னிப் பிரவேசம்’ கங்கா பற்றி பேச்சு வந்தது. அவளே அவனைக் கண்ணைக் காட்டி அழைத்திருக்கலாம். அவளே அவனுக்கு சைகை செய்திருக்கலாம். ஆனால் அதை நான் எழுத மாட்டேன்” என்றார். எனக்கு உடனே துணுக்குற்றது.  மாலை மீட்டிங் முடிந்து வந்ததும், உறுத்திக் கொண்டே இருந்த கேள்வியைக் கேட்டு விட்டேன்.  “அவள் குழந்தையல்லவா? அவளைப் பற்றி இப்படிச் சொல்கிறீர்களே?”  அவர் உடனே “ கண்ணைக் காட்டியோ, வேறு சைகை செய்தோ அழைத்திருந்தால் மட்டும் அவள் குழந்தை இல்லாமால் போய் விடுவாளா? அவளே மீண்டும் மீண்டும் அவனிடம் போனாலும் கூட குழந்தை இல்லாமல் ஆகி விடுவாளா? “ என்றுகேட்டார். எனக்கு கண்களில் நீர் தளும்பி விட்டது. அவரது அனைத்தையும் அரவணைக்கும் அன்பு, பாவிகளே இல்லாத அவரது உலகம் தெரிந்தது.
அவர் பல நூல்களைப் படித்திருக்கிறார். ஒரு கல்விக் கூடத்தில் பேசப்போன இவரை திடீரென்று  ‘கம்பரைப் பற்றிப் பேசுங்கள்” என்று கோரியிருக்கிறார்கள். உடனே ஒரு மணி நேரத்துக்கும் மேலாகப் பேசியிருக்கிறார். இவர் பேசியது கம்பனின் ‘இராமகாதை’ பற்றியல்ல. “ஏர் எழுபது” பற்றி. நம்மில் எத்தனை பேருக்கு கம்பனின் இந்த நூல் பற்றித் தெரியும்? ஒரு முறை டென்னஸி வில்லியம்ஸின் ஒரு பாத்திரம் பற்றி பேச்சு வந்தது. என்னிடம் ‘அது ரோஸ் டாட்டூ’ தானே என்றுகேட்டார். நான் “ஆமாம் ஜே.கே.” என்றேன்.
மிக கம்பீரமாக எழுதும் இவர் தனிப் பேச்சிலும் கம்பீரமாய் இருப்பார். தனிப்பட்ட கண்ணியம் எல்லோருக்கும், எப்போதும் காக்கப் படும். எல்லோர் தேவைகளையும் நினைவில் வைத்திருப்பார். நகைச்சுவை எட்டியே பார்க்காமல் எழுதும் இவர் தனிப் பேச்சுகளில் கம்பீரத்தோடு சேர்ந்து பிரதானமாக இருப்பது இவரது நகைச்சுவைதான். சிரித்து மாளாது.
மோதி, திருச்சியைச் சார்ந்த பிரமுகர் திரு. எம். எஸ். நாடார் பற்றி ஜே.கே.யிடம் சொல்கையில், “இவர் சிரிக்கச் சிரிக்கப் பேசுவார்” என்று அறிமுகமாகச் சொல்லியிருக்கிறார். உடனே திரு நாடார், “ஐயய்யோ ! நான் சொல்லும் நகைச்சுவையெல்லாம் ஜே. கேயிடமிருந்து பெற்றவைதான்” என்று சொன்னாராம்.
நான் சிகரெட், கஞ்சா, மது என்கிற எந்தப் பழக்கமும் இல்லாதவன் என்பது தெரிந்ததும் அனைவருக்கும் சுழற்சியில் தரப்படும் அவை என்னிடம் வராமல் பார்த்துக் கொள்வார். ஒரு சமயம் “நான் ஏக பத்னி விரதர்களையும், ஏகப்பதிவ்ரதாக்களையும் மதிக்கிறேன்” என்றார். இதன் பொருள் அவர்கள், குறிப்பாக குடிக்காதவர்களும், பிற பெண்கள் தொடர்பு இல்லாதவர்களும், கேலிக்கு உரியவர்கள் அல்ல என்பதே.
இவ்வளவு தொடர்ந்த பேச்சுகளிலும், ஒரு துளி வம்போ, கீழ்ததரமான கிண்டலோ யாரைப் பற்றியும் இருக்காது.
கொச்சை வர்த்தைகள் பேசுவார். ஜாதி, மத, மொழி, இன, வேறுபாடுகள் அறவே இல்லாத மனிதர். பலரை அவர்கள் ஜாதி சொல்லிக் கூப்பிடுவார். கிண்டல் கூட பண்ணுவார். ஆனால் அதில் துளி துவேஷம் இருக்காது. ஒரு முறை மோதி வீட்டுக் கல்யாணம் ஒன்றில் ஒரு நண்பர் ஜே.கே.யிடம் இன்னொரு நண்பரைப் பற்றி அவரதுஜாதியைக் குறிப்பிட்டு ‘அந்த பயல் என்றதும் “நீ . . பயல்தானே அதுதான் அப்படிப் பேசுகிறாய்’ என்றாராம்.
மோதி “போன ஜென்மத்தில் நீங்கள்தான் பாரதி நான்தான் எலிக்குஞ்சு செட்டியார்” என்றதும் தலையசைத்திருக்கிறார். ஒருமுறை பாபநாசம் சிவனின்  ‘என்ன தவம் செய்தனை?” பாடல் பற்றிச் சொல்கையில் “இதைப் பாடுவது தேவகிதான். யசோதாவிடம் தனக்கு அந்த பாக்கியம் கிடைக்கவில்லையே என்று பாடுகிறாள்” என்றார். “பாரதி உலகின்பக் கேணி என்று எழுதியிருக்க மாட்டான். அது உலகின்பக் கேளி” என்பார். “பொன்னை உயர்வை புகழை விரும்பிடும் சின்னக் கவலைகள் தின்னத் தகாதென்று” என்றுதான் எழுதியிருப்பார் என்று பாட பேதம் செய்வார்.
ஒரு முறை சபையில் “ஞானம் என்றால் என்ன தெரியுமா என்று கேட்டுவிட்டு, சுகமாய் இருப்பதுதான் ஞானம் என்று சொன்னார். சுற்றி இருந்த 20 பேரில் ஒருவர், இது பற்றி யோசித்துவிட்டு, கொஞ்ச நேரம் கழித்து, “ஆமாம் ஜே.கே. நல்லவனா இருப்பதுதான் ஞானம்” என்று சொன்னார். ஜே. கே உடனே “ நல்லவனா இருப்பது அல்ல, சுகமா இருப்பதுதான் ஞானம்” என்று அவரைத் திருத்தினார்.
தமக்குக் கிடைக்கும் பாராட்டுகள், விருதுகள் அனைத்தையும் பற்றி சொல்கையில், “பாரதிக்கு செய்யவில்லை இல்லையா? அதுதான் எனக்குச் செய்து தவறைத் திருத்திக் கொள்கிறார்கள்.” என்றும் “பாரதி பயிரிட ஆரம்பித்ததைத்தான் நான் அறுவடை செய்து கொண்டிருக்கிறேன்.” என்பார்.
இவரும் கி. வீரமணியும் ஒரே பள்ளி. பெரியார் வந்து வீரமணியை தத்து எடுத்துச் சென்றாராம். இவருக்கு அந்த வசதியான வாழ்க்கை கிடைக்கவில்லையே என்று வீட்டில் விசனப்பட்டு திட்டினார்களாம். “நல்ல வேளை தப்பித்தேன். அந்தாளோடு போய் யார் இருப்பது ” என்றார்.
எல் எல் ஏ பில்டிங்இல் ஒரு கூட்டத்தில் லா.ச. ரா வின் ஒரு கதையில் எப்படி “இன்று கிடைத்த மீனை என்ன செய்யலாம். கறி வைக்கலாமா கூட்டு வைக்கலாமா” என்று ஒரு பாத்திரம் யோசிக்கிற மாதிரி வருகிறது என்பது பற்றிச் சொல்லி, “உனக்கெதற்கு இந்த வேலை? உனக்கோ மீன் பற்றி ஒன்றும் தெரியாது” என்றார். அதே போல் இவர் எழுதிய ஒரு கதையில் பிராமண பாஷை சரியாக இல்லை என்று ஒருவர் இவருக்கு கடிதம் எழுதினாராம். பிராமண பாஷையின் ஆதென்டிசிடிக்காக நான் எழுதவில்லை என்று சொன்ன போதும் மீண்டும் கடிதம் வந்ததாம். “போடா பப்பாரப் பயலே! என்று பதில் சொல்லி விட்டேன்.” என்றார். கூட்டம் ஆர்பரித்தது. தொடர்ந்து அவர் சொன்னது “அப்படி எழுதியதற்கு வெட்கப் படுகிறேன்.”
jayakanthan_1_050408
பெரியார், அண்ணா, கலைஞர், எம்ஜியார், ஜெயலலிதா எல்லோரையும் பற்றிய அவரது விமர்சனங்கள் கூர்மையாகவும் , கடுமையாகவும் பலசமயம் சிரிப்பு வரவழைக்கக் கூடியனவனவாகவும் இருக்கும்.
“ஜேகே தமிழ் உள்ளவரைக்கும் உங்க பேர் இருக்கும்” என்று சொன்ன திரு மோதியிடம் “அதனால் எனக்கென்ன பிரயோசனம்” என்று கேட்டார்.
20 பேர் சூழ்ந்து இருக்கையிலும் யார் யாருக்கு என்ன சாப்பிட வேண்டும் என்பதைக் கேட்டுத் தெரிந்து கொண்டு கொண்டு வரச் சொல்லுவார். கண்டபடிக்கு வாங்கி உணவு வீணாகப் போவதை விரும்பாதவர். அதே போல் படப்பிடிப்பு முடிந்ததும் ஒரு முறை அங்கிருந்த காப்பிப் பொடி பாக்கெட்டை எடுத்துவைக்கச் சொல்லினாராம். பின் “இது இருந்தால் ஒருத்தருக்கு காப்பி போடத் தோன்றும். அதற்காகப் பால் வாங்குவார்கள். சக்கரை வாங்குவார்கள். பிறகு அவை அதிகமாகி விட்டால் அதற்கென்று மீண்டும் காப்பிப் பொடி வாங்குவார்கள்” என்று சொன்னாராம்.
ஞானத்தின் ஆக்ர்ஷிப்பின் விளைவுகளில் கலையும் ஒன்று. அதனால்தான் கலைஞர்கள் அதர்மத்தின் பக்கம் நியாயத் தராசு சாய்கையில் அதற்கெதிராக அமர்ந்து சமன் செய்வார்கள். எனவேதான் அவர்கள் கால, தேச, இன, மொழி, சாதி, பால் வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டவர்களாய், கலா சிருஷ்டி காலத்திலாவது, சம நோக்கோடு மட்டுமே இருக்கிறார்கள். ஜே.கே. போன்ற விவேகிகள் பல நேரம் அப்படித்தான் இருக்கிறார்கள்.
தமிழர்கள் அனைவருமே பாஸிசத்துக்குத் துணை போனவர்களோ என்று எதிர்கால சந்ததியர் ஏசாமல் இருப்பதற்காக படுகுழியில் விழ இருந்த தமிழ் மக்களை பாரதிக்குப் பின் தடுத்தட்கொண்டவர்களில் முக்கியமானவர் ஜெயகாந்தன். தமிழ் மக்களின் சிந்தனையில் பெரும் தாக்கத்தை நேர்மறையாக ஏற்படுத்தியவர் ஜெயகாந்தன். “உங்கள் மீது ‘ப்ரொ பிராமின்’ என்றொரு குற்றச்சாட்டு இருந்ததே?” என்கிற கேள்விக்கு “இப்போதும் அப்படித்தான். எப்போதும் ப்ரோதான் எல்லோருக்குமே ப்ரோதான்” என்று ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார்.
நாடகம் பற்றி ஒரு கருத்தரங்கம் சத்ய மூர்த்தி பவனில் நடந்தது. சிசுசெல்லப்பா, நா.காமராசன், சோ, ஜெயகாந்தன் எல்லொரும் பெசினார்கள். ஒரு புருவத்தை உயர்த்திக் கூட நடிக்கலாம் என்று நடித்துக் காட்டினார் ஜெயகாந்தன். “தமிழில் நாடகமே இல்லை” என்று அவர் சொன்னதற்கு வேறொருவர் ” மனோன்மணியத்தை வைத்துக் கொண்டு இப்படிச் சொல்வது என் தாத்தாவுக்கு ஒன்றும் தெரியாது என்கிற மாதிரி” என்று கோபமாகப் பேசி தம் அறியாமையைக் காட்டிக் கொண்டார்.  நாடகம் என்றால் ஒரு பாடம் இருக்க வேண்டும் என்று வேறொருவர் பேசினார். அவரை அடுத்துப் பேசிய சோ ‘ அப்படி நாடகம் போட்டால் அது நிச்சயம் ஒரு பாடமாக இருக்கும், அந்த நாடகம் போட்டவருக்கு’ என்றார்.
துக்ளக் பத்ரிகையில் ‘ஓர் இலக்கியவாதியின் அரசியல் அனுபவங்கள்’ தொடர் ஜெயகாந்தன் எழுதுவதற்கு முன், சோ ஒரு முன்னுரைமாதிரி எழுதி, ‘ஜெயகாந்தன் எழுதப்போகிறார். ஈஸ்வரோ ரக்ஷது’ என்று முடித்திருந்தார். ஜெயகாந்தன் ‘ஈஸ்வரோ ரக்ஷது’ என்று துவங்கி, தன் தொடரைப் பொருத்தமாக ஆரம்பித்திருந்தார். தனிப் பேச்சில் மேடையில் தொண்டையைக் கனைத்துக் கொண்டு சோ எப்படி ‘அனைவருக்கும் வணக்கம்’ என்று ஒற்றை வந்தனத்தில் நீண்ட அவர்களேக்களைத் தவிர்த்துப் பேச ஆரம்பித்து விடுவார் என்று நடித்துக் காட்டுவார்.
‘காரல் மர்க்ஸ் ஒரு ஹிந்து’ என்று ஒரு கூட்டத்தில் பேசினார். ‘இந்தியா ஒளிர்கிறது என்று சொல்லாமல் பின் அழுது வடிகிறது என்றா சொல்ல வேண்டும்’ என்றார். ஃபாசிசமா, இம்பீரியலிஸமா என்றால் இம்பீரியலிஸத்தின் பக்கமே இருப்போம் என்றார் மார்க்ஸ். நாமும் கறுப்பா, காவியா என்று வரும்போது காவியின் பக்கமே இருப்போம்’ என்று முழங்கினார்.
கோவையில் ஒரு முறை பேச வந்திருந்தபோது அரங்கம் நிரம்பி வழிந்தது. அப்போது சொன்னார். இங்கிருக்கும் நீங்கள் ஒவ்வொருவரும் என்னைப் பற்றி ஒரு மணி நேரம் பேசக் கூடியவர்கள் என்று. அது உண்மைதான். ஜெயகாந்தனுடன் பரிச்சயம் அவரது எழுத்து, பேச்சு மூலம் உள்ள எவரும் அவ்ரைப் பற்றி குறந்தது ஒரு மணி நேரம் பேசமுடியும். அது கான்ஷியஸாக கட்டப் பட்ட பிம்பம் அல்ல. பிம்பம் பற்றிக்கவலைப்படாமல் ஒருவர் நிஷ்காம்ய கர்மியாக இருந்ததால் எதேச்சையாக விளைந்தது.
இவரது மணிவிழா 1994ம் வருடம் சென்னை காமராஜ் அரங்கத்தில் நடந்தது. மேடையில் இருந்த மத்திய மந்திரி திரு. அருணாசலத்திடம் “தைரியமாக இருங்கள். எல்லோரையும் ஹிந்தி படிக்கச் சொல்லுங்கள்” என்றார். மந்திரி பயந்து போய் விட்டார். தொடர்ந்து, “ஏன் நம்ம பொண்டாட்டியையே, நம்ம அம்மாவையே காப்பத்திட்டு இருக்கணும். எல்லா அம்மாக்களையும் காப்பத்துவோம்” என்றார். எப்படி தான் ஒரு தேர்வுக் குழுவில் இருக்கையில் அதிகம் பேசுபவர்களைக் கொண்டிராத மொழிகளில் வந்துள்ள எழுத்துகளுக்கு பரிசளிக்க சிபாரிசு செய்தேன்” என்பதையும் சொன்னார். மணி விழாவில் கொடுக்கப் பட்ட பண முடிப்பான சுமார் 4, 5 லட்சம் ரூபாய் பற்றிக் குறிப்பிட்டு “இதை நான் என்ன செய்வேன்? குப்பைலே போடுவேன். குப்பைன்னா ‘பாங்க்” என்றார். இறுதியில் மேடையில் பேசிய பிரபலஸ்தர்களையெல்லாம் தனித்தனியாகக் குறிப்பிடாமல் “கோவிலில் மூலவரை நமஸ்கரித்தால் எல்லா சன்னிதிகளையும் வணங்கிய மாதிரி, எனவே மூப்பனாருக்கு என் நன்றி” என்று முடித்துக் கொண்டார். மறுநாள் பத்ரிகையில் “நேற்று அனவருக்கும் சரியான விதத்தில் நன்றி சொல்லாததற்கு வருந்துகிறேன்,. அனைவருக்கும் நன்றி என்று ஜே. கே. சொன்ன செய்தி பத்ரிகைகளில் கட்டம் கட்டி வந்தது.
ஒரு சமயம் ரயில்வே ஸ்டேஷனில் இவர் பெட்டியின் படிகளில் ஏறி வாயிலில் நின்று கொண்டிருந்த போது ஒரு நல்ல உடைகள் அணிந்த இளஞர் இவரிடம் ஒரு பேப்பரை நீட்டி அதில் ஆட்டொகிராஃப் கேட்டர். இவர் போட மறுத்து விட்டார். அந்த இளைஞர் “நானும் தமிழன், நீங்களும் தமிழன். போடுங்கள்” என்றர். இவர் மீண்டும் மறுத்து விட்டார்.அவ்விளைஞர் சென்றதும் “நாமென்ன இங்கிலாந்திலோ அமெரிக்கவிலோவா இருக்கிறோம், நானும் தமிழன், நீங்களும் தமிழன் என்று சொல்லி கையெழுத்து வாங்க. இங்கே கோவையில் இருக்கும் எல்லோரும் தமிழர்கள்தான். இதில் இது என்ன பேச்சு?” என்றார்.
ஒரு முறை தூங்கிப் போய் விட்டதால், கோவையில் இறங்காமல் மேட்டுப் பாளையத்தில் இறங்கி அங்கிருந்து சாவதானமாக, ஒரு பரபரப்பின்றி வந்தார். அதே போல் திருச்சியில் ரயிலைத் தவற விட்டு விட்டாராம். எல்லோரும் பதறிக் கொண்டிருக்கையில் அவர் நிச்சலனமாக இருந்ததோடன்றி ரயில்வே பிளாட்பாரத்திலேயே ஏதோ பாடி ஆடிக் காட்டி இருக்கிறார். பெரும்பாலானவர்கள் பதற்றமடையும் பல சந்தர்ப்பங்களில் அமைதியாக இருப்பவர் என்று அவர் பற்றி இதையெல்லாம் திரு மோதி சொல்லிக் கேட்டிருக்கிறேன்.
அவர் நண்பர் திரு கே.எஸ். சுப்ரமணியம் ஒருகதையில் இப்படி வருமே என்று ஆரம்பித்து சொல்லத் தடங்குகையில் அது எந்தக் கதையில் வரும் எப்படி வரும் என்று மிகச் சரியாகச் சொன்னார் ஜே.கெ. அவ்வளவு நினைவாற்றல். கே.எஸ். செய்த மொழி பெயர்ப்பு ஒன்றை இருவரும் சரி பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஒரே ஒரு வார்த்தையை ஜே.கே. மாற்றினார் அந்த ஆங்கில வாக்கியம் முற்றிலும் மேலானதாக பரிணமித்து விட்டது.
அவரது 74வது பிறந்த நாள் என்று நினைக்கிறேன். இளையராஜா, ரவி சுப்ரமண்யம் இயக்கத்தில் ஒரு செய்திப்படம் ஜெயகாந்தனைப் பற்றி எடுத்திருந்தார். பிறந்த நாள் விழாவில் அப்துல் கலாம் பேசினார். அந்த படத்தின் டிவிடி போட்டுக் காட்டப் பட்டது. அதில் அவர் சொல்லியிருப்பார். “கலைஞர் ‘நான் பெரியாரையும், அண்ணாவையும் பார்க்காமல் இருந்திருந்தால் ஒருகம்யூனிஸ்ட் ஆகியிருப்பேன்’ என்கிறார். இதில் கூத்து என்னவென்றால் நான் அவர்கள் இருவரையும் பார்த்ததால்தான் கம்யூனிஸ்ட் ஆனேன்.” என்று சொல்லிச் சிரிப்பார். திரு.ரவி சுப்ரமணியம் எடுத்த ஆவணப்படம் இங்கு கிடைக்கிறது :
அரசியல் கணிப்புகளை, கணக்குகளை அவர் சரியாகச் செய்ததில்லை. சுய லாபம் தேடாததால் அவருக்கு அதெல்லாம் அவசியமும் இல்லை. எமர்ஜென்ஸி வந்தபோது அதை வரவேற்றார். அதை வரவேற்கத் தயங்கிய கண்ணதாசனையும் வரவேற்க வைத்தார். இப்போதும் மேதா பட்கர் போன்றவர்கள் செய்யும் இயக்கங்களில் ஆன்மீகம் இல்லை என்பார்.
சுந்தர ராமசாமியின் அஞ்சலிக் கூட்டத்தில் பேசத் தொடங்குகையில் சொன்னார் : “அவர் எங்கே? நான் எங்கே? அவர் உயரம். நான் குள்ளம். அவர் செல்வந்தர். நான் செல்வத்தைப் பற்றியே சிந்திக்காதவன்.
அவர் துணைவியார் ஓரிடத்தில் எழுதியிருப்பதைப் போல் “பணம் பண்ணத் தெரியாதவர் அல்ல; பணம் பண்ண விரும்பாதவர்.” ஒரு முறை மோதியிடம் பெசிக் கொண்டிருக்கும் போது உள்ளே போய் சாப்பிட்டு விட்டு வந்தராம். பின் “ரேஷன் அரிசி. உங்களுக்குப் பிடிக்காது. அதுதான் உங்களையும் சாப்பிட அழைக்கவில்லை” என்றாராம். ஆனால் ஒரு விஷயம், ஜெயகாந்தன் தருகிறார் என்றால் ஆலஹால விஷத்தைக் கூட மோதி விரும்பிச் சாப்பிட்டு விடுவார். மோதி மட்டுமில்லை. இன்னும் பல அன்பர்கள் அவருக்கு அப்படி உண்டு. அதில் குறிப்பிடத் தக்கவர்கள் பலர். எனக்குப் பரிச்சயமானவர்களில் திரு பி.ச. குப்புசாமி (வார்த்தை பத்ரிகையில் வந்த அவரது ‘ஆரம்பப்பள்ளிஆசிரியரின் குறிப்புகள்’ ஆசிரியர் பயிற்சி படிப்பில் பாடமாக வைக்கத் தகுந்தது.) இன்னொருவர் கோவையில் ‘சிவகாமி புத்தகப் பூங்கா’ திரு மணி அவர்கள். பல இலக்கியகர்த்தாக்கள் இவர் அண்மையில் இருந்தால் போதும் என்று எழுதாமல் இருந்து விட்டார்கள். அவர்கள் ஒவ்வொருவருமே இலக்கியத் தேட்டமும், நாட்டமும் உள்ளவர்கள். ஜே. கே.யைப் பொருத்தவரை அவர்கள் போலல்ல நான். அவர்கள் ஆழ்வார்கள். நான் தெருவில் செல்கையில் கோவிலின் உள்ளே பார்த்து நெற்றியை கும்பிடாகத் தொட்டு விட்டு போபவன். ஆனால் எனக்கே அவர் பால் இவ்வளவு அபிமானம் இருக்கிறது. மோதி  “ஜே.கே.யுடன் இருக்கும் போது ராமக்ருஷ்ண பரமஹம்சர் கூட இருப்பது போல் இருக்கும்” என்பார்.
ஒருமுறை ஜே.கே.வுக்கு ஒரு பிரபல மலையாளப் பத்ரிகையிலிருந்து தொலைபேசி வந்தது. அவர் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தேன். என்னைத் தவிர அங்கு வேறு யாரும் இல்லை. ஃபோனை வைத்ததும் சொன்னார்: “தி.மு.க. அரசின் இந்த திட்டம் பற்றி என் கருத்து எதற்கு? சோவும், அசோகமித்திரனும் எதிர்க்கிறார்கள், நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்கிறார்கள். நான் எதற்குச் சொல்லவேண்டும். அவர்கள் எதிர்க்கத்தான் செய்வார்கள். நான் எதிர்த்துக் கொண்டுதான் இருந்தேன். அப்போது காங்கிரஸும், கம்யூனிஸ்ட்களும் எதிர்த்தார்கள். இப்போ பல காலமா அவங்கல்லாம் எதிர்ப்பதை விட்டு விட்டார்கள்.அவங்களோடயே சேந்துட்டாங்க. நான் மட்டும் ஒற்றையாளாக எதற்கு எதிர்க்க வேண்டும்? அதுதான் ஒரு கருத்தும் சொல்லவில்லை.”
அவரது கதைகள் பற்றி “அவற்றைத் தாண்டி ஒன்றுமே கிடையாது” என்பவர்களும், “, unbearable, கலைத் தன்மை கிஞ்சித்தும் இல்லாதவை” என்பவர்களும் உண்டு.
ஜெயகாந்தன் கதைகள் பற்றிய என் அபிப்பிராயம் வேறு. அவரது பிரசாரத்துக்குப் பயன் பட்ட சாதனம் கதை. அவர் பிரசாரம் செய்தது ஞானம். அதனால்தான் ‘ஒவ்வொரு வீட்டிலும் ஒரு ஞான்வானை உருவாக்குங்கள்’ என்று கூறினார். மேடை, கட்டுரை, கவிதை, கதை, எல்லாவற்றையும் அவர் தன் சிந்தனைகளைத் தெரியப்படுத்தும் கருவிகளாகவே பயன் படுத்தினார். அவரை விட சிறந்த பல கதாசிரியர்கள் தமிழிலேயே உண்டு. ஆனால் அவர்களில் தெருவில் இறங்கி பணி செய்தவர்கள் அவர் போல் யாரும் இல்லை.
அடங்காத மனைவி, வேலைக்காரி, மாமனார், மாமியார் பற்றிய ஜோக்குகளை ரசித்தும், பாலுறவை மட்டுமே பகிரங்கமாகவும், மறைவாகவும் கேளிக்கையாகக் கொண்டு தன் மனைவி மட்டுமே கற்புக்கரசியாய் இருக்க வேண்டும், அடுத்தவீட்டுப் பெண் தனக்குக் கிடைக்க மாட்டாளா என்கிற எதிர்பார்ப்பிலேயே வாழ்ந்து கொண்டிருக்கும் பெரும்பான்மையோரைக் கொண்ட ஒரு சமுதாயத்தில் அவர் இந்தக் கதைகளையெல்லாம் அந்த சமுதாயத்தைத் திருப்தி செய்யவே நடத்தப்பட்ட ஜனரஞ்சகப் பத்ரிகைகளில் எழுதினார்.
அவர் எழுதுவது எதற்காக என்று அவரே சொல்வது இங்கே :- (இந்த நீர்க்குமிழி வாழ்வில் மகத்தான விஷயங்களாபவை அவை நிகழ வேண்டுமென்பதற்காக ஒருவர் மூலம் வாழ்க்கையே சகலத்தையும் அமைத்துக் கொடுப்பதுதான்.) அதற்கு இந்த லின்க் ஒரு உதாரணம்.
அவரது கதைகள் பற்றிய அபிப்பிராயங்கள் எப்படி இருந்த போதிலும், இன்னொரு ஜே.கே. யான ஜே. கிருஷ்ணமூர்த்தி பற்றி அவர் சொன்னது போல, “இவர் எல்லோரையும் ஏதோ ஓர் இடத்தில் தொட்டு விடுகிறார்.” அதனால்தான் இவரது அபிமான வட்டத்தில் சைவத் தமிழ் அறிஞர் சேக்கிழார் அடிப்பொடி டி. என். ராமச்சந்திரனாரும், வைணவத் தமிழ் அறிஞர் கம்ப ராமர் என அழைக்கப்பட்ட இராமராஜ ரெட்டியாரும், கி. வீரமணியும், இளையராஜாவும், கலைஞர் கருணாநிதியும், கவிஞர் கண்ணதாசனும், ஜெயமோகனும், வைரமுத்துவும்,  குடியரசுத் தலைவரும், ஆட்டோ ஓட்டுனரும் இருக்கிறார்கள்.
jeyakanthan
அவரது பெயரை சொன்னதால் எனக்கு ஆரணியிலும், திருச்சியிலும், கோவையிலும், சென்னையிலும்  80 வயதை நெருங்கும் திரு. பத்மநாபனிலிருந்து இளைஞரான சுகா வரைக்கும் நண்பர்கள் கிடைத்தார்கள்.பாரதியின் கவிதா மண்டலத்தில் ஜெயகாந்தனைச் சேர்ந்தவர்கள் நாங்கள். வாழ்க்கையைப் புரிந்துகொள்ள, நேர்மறையாக இருக்க, யார் மீதும் எதன் மீதும் துவேஷம் இல்லாமல் இருக்க, தமிழ், பாரதம் போன்ற கருத்துருவாக்கங்களின் மீது மெய்யான மதிப்பு வைக்கக் கற்றுத் தந்தவர் அவர்.
முதல் காதல் என்று ரொம்பவும் அடிபட்ட விஷயம் ஒன்றுண்டு. இது ஆண் பெண்ணுக்கு இடையில் வருவதுமட்டுமில்லை. ஓர் ஆளுமை, ஒரு கருத்து, ஓர் இடம் இவற்றோடு வருவதும் கூட. தாயாரின் சமையல் பற்றிக் கூட இப்படி எல்லோருக்கும் முதல் காதல் உண்டு. அதனால்தான் “அன்னையோடு அறுசுவை உண்டி போம்” என்றிருக்கிறது. அது போல் ஜெயகாந்தன் எங்களுக்கு முதற்காதல். முதற்காதல் என்கிற உணர்ச்சிச் சிடுக்கை நாட்பட நாட்பட, அறிவு சரி செய்கையில், கண்மூடித்தனமான உறவுகள் தவிர வேறெதிலும், உண்மை துலங்கும். அப்படி சரி செய்த பின்னும் அந்தக் காதல், வெளியில் நாம் என்ன பாசாங்கு செய்தாலும், உள்ளத்தில் மாற்றம் சிறிதுமின்றி ஒளிர்வது ஒரு சில இடங்களில்தான். அது மாதிரியான முதற்காதல் ஜே.கேயுடனானது. அவர் எழுத்துகளை அவரது பேச்சுகள் மங்கச் செய்யவில்லை. அவருடனான நேரடித் தொடர்புகள் அவர் எழுத்தால் விளைந்த அவர் மீதான நன் மதிப்பைக் கூட்டியனவேயன்றி சற்றும் குறைக்கவில்லை. உலக அளவில் அவரை விட சிறந்த கதைகளை எழுதியவர்கள் உண்டு. அவரைவிட சமூகத்தில் களப்பணி ஆற்றியவர்கள் உண்டு. சிந்தனைத் துறையில் உச்சங்களைத் தொட்டவர்கள் உண்டு. சினிமா எடுத்தவர்கள் உண்டு. ஆனால் இவ்வனைத்துத் துறைகளுக்கும் எங்களை அழைத்துச் சென்றவர் ஜெயகாந்தன். அனைத்தும் தழுவிய அந்தத் துறையை ஆன்மீகம் என்று சொல்லலாம். எங்கள் முதல் ஆன்மீக ஆசான் ஜெயகாந்தன்.
(முற்றும்)
************
#
“80 வயது நிரம்பியவர்களை ஆயிரம் பிறை கண்டவர்கள் என்று அழைக்கிறோம். ஆயிரம் பிறை என்பதை எப்படிக் கணக்கிடுவது? ”
” 80 வயது 10 மாதம் ஆனால், ஆயிரம் பிறையை எட்டிவிடும். 80 வருடத்திற்கு 960 சந்திர தரிசனம். சில வருடங்களில் 13 சந்திர தரிசனம் நிகழும். 80 வருஷத்தில் 30 சந்திர தரிசனம் அதிகமாக இருக்கும். அதையும் சேர்த்தால் 990 வரும். கருவிலிருக்கும் பத்து மாதத்தில் பத்து சந்திர தரிசனத்தையும் சேர்க்கும்பொழுது 1000 பிறைகள் நிறைவுபெறும் ”
* திருச்சியைச் சேர்ந்த திரு மோதி ராஜகோபால், ஆங்கிலத்திலும், தமிழிலும் மெத்தப் படித்தவர். தொழிலதிபர். பரம்பரையான செல்வந்தர். வாழ்வின் நுணுக்கங்களையும் சிக்கல்களையும், உலகத்தின் ஏற்ற இறக்கங்களையும். வியாபார தாத்பர்யங்களையும், நன்கு அறிந்த அறிந்த அனுபவசாலி. ஜே. கே.யின் “ஜெய ஜெய சங்கரா” தொடர் நூல்களை ‘மோதி பிரசுரம்’ என்கிற பெயரில் வெளியிட்டவர். இக்கட்டுரையில் அவரிடமிருந்து அறிந்த செய்திகளையும் ஆங்காங்கே தந்திருக்கிறேன்.
* * * * * * * 

Tuesday, June 24, 2014

நானும், அசோகமித்திரன் அவர்களும்

நானும், அசோகமித்திரன் அவர்களும்

 | பிரசுரம் : சொல்வனம் இதழ் 100 | 23-02-2014
“எழுத்தாளர்கள் பெரும்பாலும் மிகச் சிறிய, சாதாரண மனிதர்கள். அநேகமாக அவர்கள் எல்லாருக்கும் அவர்களைப் பற்றி பிறரிடம் சொல்லும்போதோ எழுதும்போதோ நிஜமல்லாதது மிகவும் இயல்பாக வந்து விடுகிறது” – அசோகமித்திரன்.
சொல்வனத்தில் முன்பு ஓர் இலக்கியப் பெருந்தகையைப் பற்றி யார் யாரிடம் கட்டுரைகள் கேட்கலாம் என்று ஆலோசித்தபோது ஒரு பிரபலஸ்தரின் பெயர் மொழியப்பட்டது. அப்போது அவரிடம் கேட்டால் அவர் முழுக்க முழுக்கத் தன்னைப் பற்றி எழுதிக் கொண்டு விடுவார் என்று சொல்லப்பட்டதும் ‘ஆம், உண்மைதான்’ என்று அவரை அணுகவில்லை. இப்போது அசோகமித்திரன் பற்றிய கட்டுரைகளைத் தாங்கி வரும் சிறப்பிதழில்  என் இந்தக் கட்டுரையும் அதே போல் அதிகம் என்னைப் பற்றி இருக்கும் என்கிற சம்சயம் இருப்பதால்தான் மேற்படி தலைப்பு.
ami_tn copyஒரு நேர்காணலில்  அசோகமித்திரன் இப்படிச் சொல்கிறார் “ஓர் எழுத்தாளனை எவ்வளவு விரிவாகப் பேட்டி கண்டாலும் அது அரைகுறையாகத் தான் இருக்கும். ஆனால் ஒரு சிறுகதையைப் படித்தால் கூட அந்த எழுத்தாளர் பற்றி நிறைய அறிய முடியும்.” அதே போல் இது போன்ற தனி மனிதத் ‘தன்மை’ நோக்கு எப்படியும் மிகுந்துவிடும்  நினைவுப் பதிவுகளாலும் ஓர் எழுத்தாளரைப் பற்றி முழுவதும்  தெரிந்து கொள்ள முடியாது. ஒரு வரியில், ஒரு வாசகத்தில் கவனமான வாசகனுக்கு எழுத்தாளன் அகப்பட்டு விடுவான். ஆயினும் நேரில் சந்தித்துப் பழகுகையில் எழுத்தைச் சார்ந்து மற்றும் எழுத்துக்கு அப்பாற்பட்டு ஒரு சில கவனிப்புகள் நிகழும். அதுவே நீண்ட காலமான தொடர்பாய் இருக்கையில் அது பற்றிய நினைவுகூரல் அவ்வெழுத்தாளரின் எழுத்துகளுக்கு ஓர் அனுபந்தமாய் அமைய வாய்ப்புண்டு. மிக நெருங்கிய உறவினரிடையே உள்ள எடைபோடல்கள், கணிப்புகள் கூட ஒரு மனிதனை சரியாக உருவப்படுத்தித் தர முடியாது. என்றாலும் இவ்வனுபவங்கள் மூலம் ஒரு சித்திரத்தை வரைய முயல்கிறோம். பிள்ளையாரைப் பிள்ளையாராய்ப் பிடிப்பதே கஷ்டம். என்னவாகவெல்லாமோ முடிந்து விடும். அதனால்தான் ‘நானும்’ என்று என்னைப் பிரதானப் படுத்திக் கொண்டு  இக்கட்டுரை.
எனினும் கணந்தோறும் மாறிக் கொண்டே இருக்கிற மனித ஜீவராசியில் ஒரு மனிதனை ‘இவன் இன்னான்’ ‘இப்படிப்பட்டவன்’ என்று எப்படிச் சொல்ல முடியும். என்னைப் பற்றியே என்னால் சொல்லிக் கொள்ள முடியாதே. ஆனால் ஒருவருடனான உறவு எனக்கு என்னவிதமான தாக்கங்களை, உணர்வுகளை, நினைவுகளைத் தந்திருக்கிறது என்று சொல்லலாம். அதில் நேர்மையிருந்தால், அன்பிருந்தால் அது ஓரளவு பயனுள்ளதாகலாம்.
கல்லூரிக் காலத்தில், 1970களின் ஆரம்பத்தில் ‘கணையாழி’ எங்கள் நண்பர் குழாமிற்கு அறிமுகம் ஆனது. அத்துடன் எங்களைப் பிரமிப்பில் ஆழ்த்திய அசோகமித்திரன் அவர்களது எழுத்துகளும். விரைவிலேயே என்னுடைய பள்ளி நண்பர் திரு. என். கல்யாணராமனுடையதும், என்னுடையதுமான எழுத்துகள் கணையாழியில் வெளிவந்தன. கணையாழியை சென்னையிலிருந்து நடத்தி வந்தவர் அசோகமித்திரன். கல்யாணராமனின் பெயர் இருந்த பக்கம் தவறிப் போனதால் கணையாழி ஆசிரியர் ‘சிவசங்கரா’ என்கிற பெயரில் அதை வெளியிட்டார். (‘சிவசங்கரி’ அப்போது மிகவும் பிரபலமான ஜனரஞ்சகப் பத்ரிகை எழுத்தாளர்.) அவரெழுத்துகள் கிட்டத் தட்ட ஒரு ‘சென்சேஷன்’ மாதிரி ஆயின. வெங்கட் சாமிநாதன், சுந்தர ராமசாமி போன்றவர்களையும் கவர்ந்தன. சிவசங்கரா அப்பொதைய எதிர்பார்ப்பில் இன்று ஜெயமோகன் போல் பரவலான அங்கீகாரமும், வாசகர் வட்டமும், தாக்கமும், புகழும் உடைய ஓர் ஆளுமையாக வருவார் என்று எண்ணப்பட்டது. ஆனால் நம்புவதெல்லாம் நடப்பது உண்டா என்ன?
அசோகமித்திரனின் உறவுக்கார இளைஞர்கள் ஐ.ஐ.டி.யில் படித்து வந்த கல்யாணராமனைச் சந்தித்து அசோகமித்திரனை சந்திக்குமாறு சொன்னார்கள். அசோகமித்திரனைச் சந்திக்கச் செல்கையில் கல்யாணராமன் என்னையும் உடன் வரச் சொன்னார்.
அப்போது அசோகமித்திரன் தியாகராய நகரில் தாமோதர ரெட்டி தெருவில் தம் சொந்த வீட்டில் இருந்தார். சொந்த வீடு என்றால் அவரது குடும்ப வீடு. மாடிக் கட்டிடம். தனி வீடு. சந்திப்பு சுமுகமாக, சௌகர்யமாக அமைந்தது. அதன் பின் நான் அவ்வப்போது சென்று அவரைச் சந்தித்து வந்தேன். அப்போதே ‘இல்லஸ்ட்ரேடட் வீக்லி’யில் அவர் எழுத்துகள் வெளிவந்திருந்தன.
ASOKAMITHTHIRAN-4

நன்றி : ‘காலம்’ இதழ்
எப்போதுமே அவரிடம் அதிகம் பேசிவிட முடியும். அந்த விதத்தில் அவர் மற்றும் அதற்கு சுமார் 30 வருடங்கள் கழித்து சந்தித்து நெருங்கிய நண்பராகிவிட்ட  திரு. நாஞ்சில் நாடன் இருவருமே எழுத்தாளர்களில் அதிசயமாக நாம் பேசுவதைக் கேட்பவர்கள்; தாங்கள் பேச வேண்டியதைக் கூட பேசாத அளவுக்கு இடம் கொடுப்பவர்கள். ஆரம்ப காலத்திலும், இப்போது போலவே, நானும் மனதில் தோன்றியதையெல்லாம் பேசினேன். ஒரு கேள்வி இன்னமும் ஞாபகத்தில் இருக்கிறது. “சார்த்தர் (அப்போதெல்லாம் சாத்ரே :-) ) எப்படி? ஜே.க்ருஷ்ணமூர்த்தி மாதிரியானவரா?” இந்த மாதிரியெல்லாம் கேட்டதாலோ என்னவோ அசோகமித்திரன் கல்யாணராமனிடம் “ஹி ஈஸ் எ ஹாட் ஃபெல்லோ. இவனோடு எப்படி ஃப்ரெண்டாய் இருக்கிறீர்கள்?”என்று கேட்டிருக்கிறார். கல்யாணராமனும் கர்ம சிரத்தையாய் என்னிடம் அதை வந்து சொல்லியும் விட்டா(ன்)ர். ஆனால் ஆச்சர்யகரமாக இந்த விஷயம் என் மனதில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. நான் அவரிடம் எப்போதும் போலவே இருந்தேன். இது நினைவில் ஒரு வடுவையும் ஏற்படுத்தாத வெறும் செய்தியாக அப்படியே நிற்கிறது.
இதற்குள் இரண்டு கதைகளும், சில கடிதங்களும், கவிதைகளும் என்னுடையவை கணையாழியில் வெளிவந்து விட்டன. மூன்றாவதாக ‘கிணற்றில் விழுந்த சோகம்’ என்கிற கதையை எழுதிக் கையெழுத்துப் பிரதியை அசோகமித்திரனிடம் கொடுத்தேன். சில நாட்கள் கழித்து அவர் வீட்டுக்கு ஒரு பின் மாலை நேரத்தில் போனபோது, அவர் மாடியிலிருந்து இறங்கி வந்தார். எனக்கு அருகில் வந்து“ரொம்ப நன்னா இருக்கு. கடவுள் அருளால நீ நன்னா இருக்கணும். நிறைய எழுதணும். நன்னா வரணும்” என்று ஆசீர்வதிப்பது போல் ஒரு புனித உணர்வோடு மெல்லச் சொன்னார். பின் அந்தக் கதை ‘கணையாழி’யில் பிரசுரமாகியது. திரு. விட்டல் ராவ் அவர்கள் தொகுத்த ‘இந்த நூற்றாண்டு சிறுகதைகள்’ நூலிலும் இடம் பெற்றது.
அசோகமித்திரனின் ஆசி பற்றிச் சொல்கையில், மீண்டும், “நம்புவதெல்லாம் நடப்பது உண்டா என்ன?”தான். நான் அதற்கப்புறம் அதிகம் எழுதி பத்ரிகைகளுக்கு அனுப்பவில்லை. இரண்டு கதைகளும், சில கவிதைகளும் கணையாழியில் வெளிவந்தன.
ஒரு வேளை நம்பியது நடப்பது உண்டுதான் போலும், நம் காலக் கணக்குகளுக்கு அப்பாற்பட்டு. சுமார் 30 வருடங்கள் கழிந்த பின்னர் ‘வார்த்தை’ இதழில் மீண்டும் நான் எழுதத் துவங்கி அது ‘சொல்வனத்தில்’ தொடர்கிறது. கல்யாணராமனும் தன் தமிழிலிருந்து ஆங்கிலத்துக்குச் செய்யும் மொழிபெயர்ப்புகள் மூலம் மிக அவசியமான தமிழ் இலக்கியச் சேவை செய்து வருகிறார். அவரது சொல்வனம் பேட்டியை இங்கே காணலாம்.
அந்த முதல் சந்திப்புகளில் அவர் புத்தகங்களை அவர் வீட்டில் பெறுகையில் அதில் கலர் பென்சிலால் கையெழுத்திட்டுத் தருவார். சில வருடங்களுக்கு முன்பு புத்தகக் கண்காட்சியில் அவரைச் சந்தித்த போது ஒரு நூலில் கையெழுத்து இட்டுத் தருகையில் “நாற்பதாண்டு கால நண்பர்” என்று குறிப்பிட்டிருந்தார்.
செஸ் ஆடுவார். அவர் வீட்டில் ஆடிப் பார்த்த ஞாபகம் இருகிறது. வீட்டைப் பெருக்கி அறையைச் சுத்தம் செய்வார். ஒரு வராந்தா இருக்கும்  அதில் ஓரிரு நற்காலிகள். அதில் ஒரு மர நாற்காலிக்குக் ஒரு கை இருக்காது.
திருவல்லிக்கேணியில் என் வீட்டிற்கு அசோகமித்திரன் வந்திருக்கிறார். பின் அபிராமபுரத்தில் நாங்கள் இருந்தபோது அந்த இல்லத்திற்கும் வந்திருக்கிறார். கல்கத்தாவிற்கு வந்தபோது என் வீட்டில் தங்கியிருக்கிறார்.
சேலம், கல்கத்தா, வேலூர், திருச்சி, கோவை என்று பல ஊர்களில் இருந்த சமயங்களில் சென்னைக்குச் செல்லும் போதெல்லாம் கூடியவரை அவரைப் பார்ப்பதுண்டு. சந்திப்புகள் தி.நகரிலிருந்த அவர் வீடு அடுக்ககமான பின்பும் தொடர்ந்தது. பின்னர் அவர் வேளச்சேரியில் உள்ள அடுக்ககத்திற்குச் சென்ற பின்னரும்  தொடர்கிறது.
ASOKAMITHTHIRAN-251, PHOTO BY PUTHUR SARAVANAN
ஒருமுறை 1988ல் கலகத்தாவிலிருந்து வந்தபோது அவரைச் சந்திக்கையில் “உங்களுக்கு ப்ளட் ப்ரெஷர் இருக்கா?’ என்று கேட்டார். நான் இல்லை என்றேன். “இல்லை உங்கள் கழுத்தைப் பார்த்தால் அப்படித் தெரிகிறது” என்றார். அதற்கு இரண்டு வருடங்கள் கழித்து உயர் ரத்த அழுத்தம் என்னோடு வந்து இணைபிரியாமல் ஒட்டிக் கொண்டது.
பின்பொருமுறை உயர் ரத்த அழுத்தம் இருப்பதை  அவரிடம் சொன்னபோது ‘இது மாதிரி பல விஷயங்களிலும் ஈடுபாடு இருக்கும் உங்களுக்கு இது எப்படி வந்தது?” என்று ஆச்சர்யப் பட்டார்.
ஃபார்மலான விசாரணைகள் இருக்காது. இப்போதும் ஃபோன் செய்தால் ‘நான் ஸ்ரீநிவாசன் பேசுகிறேன்” என்றெல்லாம் அவரிடம் சொல்ல வேண்டாம். அவர் எடுத்தவுடனே “சொல்லுங்கோ” என்றுதான் ஆரம்பிப்பார். அதே போல் விஷயம் இல்லாமல் பேச்சை இழுத்துக் கொண்டிருக்க மாட்டார். ரொம்ப ‘ப்ருஸ்க்’காக நாம் பேசுவதைக் ‘கட்’ பண்ணவும் மாட்டார். சரியான அளவு சரியாகப் பேசுவார். பேச்சில் நேரில் பேசுகையில் இருக்கும் நகைச்சுவை அப்படியே வரும். கொஞ்சம் அசந்தால் நாம் நிறைய சுவைகளை விட்டு விடுவோம்.
வீட்டிற்குப் போனதும் பிஸியாக இருந்தால் சொல்லிவிடுவார். வீட்டில் ‘திவசம்’போன்றவை நடக்கையில் இருக்கச் சொல்லிப் பேசுவது என்பது கிடையாது. ஆனால் அனாவசியமாக பிகு செய்து கொள்பவர் இல்லை. தி.நகரில் கிருஷ்ணவேணி தியேட்டர் அருகில், பஸ் டெர்மினஸுக்கு எதிரில் அவர் தெரு. வீட்டிலிருந்து வெளியே வந்து தியேட்டர் அருகில் உள்ள ஒரு ஹோட்டலில் காஃபி சப்பிடுவோம். இப்போதெல்லாம் வேளச்சேரியில் அவர் வீட்டிலேயே காஃபி தந்து விடுகிறார்கள். நல்ல காஃபி. திருமதி.அசோகமித்திரன் சகஜமாக ‘வா, போ” என்று பேசுவார்கள். இவர் இன்னமும் மரியாதையாகத்தான் பேசுவார். பிறரிடம் பேசுகையில் அவன் இவன் என்று சொல்லலாம்.
ஒரு முறை ஒரு மிக முக்கியமான தமிழ் எழுத்தாளர் ஒருவருக்கு இதய சிகித்சை நடை பெற்று இருந்தது. அவர் அசோக மித்திரன் அவர்களுக்கு நெடு நாளைய நண்பர்.  ஊரிலிருந்து வந்த நான் “சார். அவருக்கு இதய சிகித்சை நடைபெற்றது” என்று சொன்னேன். அவர் உடனே “ ஓ ! அப்போ அவரும் மேஜர் ரைட்டர் ஆயிட்டருன்னு சொல்லுங்கோ” என்றார். இதை நான் பின்னர் ஊரிலிருந்த நண்பரிடமும் சொன்னேன். அவர் இதைக் கேட்டு விட்டு ரசித்து சிரித்தார். 2011ல் நானும் மேஜர் ரைட்டர் ஆகி விட்டேன்.
இந்த மாதிரியான கருப்பு நகைச்சுவை’ தவிர தூய நகைச்சுவையும் அவரிடம் கொட்டிக் கிடக்கும். 5, 6 வருடங்களுக்கு முன் சென்னையில் நான் சாலிகிராமத்தில் இருந்தபோது அவர் வேளச்சேரியில் இருந்தார். ஒருநாள் “சந்திக்க வரவா?” என்று ஃபோனில் கேட்டபோது, “அவ்வளவு தூரம் வர வேண்டாம் நான் புத்தகக் கண்காட்சிக்கு நாளை வருகிறேன். அங்கே சந்திக்கலாம்” என்று சொன்னார். அங்கு சென்றேன். ‘காலச் சுவடு’ ஸ்டாலில் அவர் வாசகர்களுக்கு நூல்களில் ‘கையொப்பம்’ இட்டுக் கொண்டிருந்தார். நான் அவர் அருகில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தேன். ஓர் அன்பர் அருகில் வந்தார். 25,30 வயதுக்காரர். அவர் மிகுந்த மரியதையுடன் அசோகமித்திரனிடம் பேசிக் கொண்டே இருந்தார். இவரும் வழக்கம்போல் கேட்டுக் கொண்டிருந்தார்.  ஒரு சமயம் அசோகமித்திரன் நாற்காலியிலிருந்து எழுந்துகொண்ட போது “சார்! உட்காருங்க ! உட்காருங்க! நீங்க ஏன் எழுந்துக்கறீங்க ? என்ன வேணும் சொல்லுங்க. நான் கொண்டு வர்ரேன்” என்றார். “இல்ல சார் பரவாயில்லை” என்றார் அசோகமித்திரன். “நோ நோ ! என்ன வேணும் சொல்லுங்க நான் செய்யறேன்” என்றார் அவர். அசோகமித்திரன் மீண்டும் “பரவாயில்லங்க” என்றார். அவ்விளைஞர் விடுவதாய் இல்லை. அப்போது அசோக மித்திரன் சொன்னார்: “இதை நான் மட்டுந்தான் செய்ய முடியும். எனக்காக வேற யாரும் செய்ய முடியாது சார்”என்று சொல்லி விட்டு சிரித்தார். பிறகு ‘டாய்லெட்’ பக்கம் போனார்.
இப்போது சமீபத்தில் சொல்வனம் கலந்துரையாடல் ஏற்பாடுகள் பற்றி ஃபோனில் அவரிடம் சொன்னபோது, “ஓஹோ கஸ்தூர்பா நகரிலா? அங்கே ஒரு ‘ஹியரிங் எய்ட் ரிப்பேர்’ கடை இருக்கு. அங்கே கொஞ்சம் போயிட்டு போக முடியுமா? இதை ரவிசங்கரோட ‘காதுல’ போடறேளா?” என்று கேட்டு விட்டு சிரித்தார்.
அந்தக் கலந்துரையாடலில் கூட என்னைப் பற்றிக் குறிப்பிடுகையில் கோயம்பத்தூரில் இருக்கிறார், என்று சொல்லி ஸ்ரீரங்கத்தில் என்று திருத்தியதும் “கோயம்பத்தூர் என்றால் ஸ்ரீரங்கத்தில் இருக்கிறேன் என்பார், ஸ்ரீரங்கம் என்றால் கோயம்பத்தூர் என்பார்” என்று சொல்லுவதுதான் அவர் பாணி. சில தனிப்பட்ட வேலைகள் காரணமாக இரண்டு ஊரிலும் இருந்து கொண்டிருக்கும் எனக்கே இந்த சந்தேகம் வருவதுண்டு. ‘ஜன் சதாப்தி’யில் திருச்சி கோவைக்கிடையே எத்திசையில் செல்கையிலும் சக பயணி “எங்கே இருக்கீங்க?” என்றதும் நானே “நாம் எங்குதான் இருக்கிறோம்” என்று திகைப்பது வழக்கம்.
தி. நகரில் ஒரு சமயம் இவரைச் சென்று சந்தித்தபோது வேறு சிலரும் இருந்தார்கள். அவர்கள் பின்னாளில் எழுத்துத் துறையில் பிரபலமானவர்களானார்கள். ஒருவர் மிகவும் பிரபலம் ஆகியுள்ளார். அவர் அசோகமித்திரனிடம் ஒரு பேனாவைக் கொடுத்து “கரைந்த நிழல்கள் எழுதிய கைகளுக்கு” என்று நாடக பாணியில் சொன்னார். அவர்கள் எல்லோரும் கொஞ்ச நேரம் கழித்துப் போய்விட்டர்கள். அப்போது அசோக மித்திரன் சொன்னார் : “இவர் கரைந்த நிழல்களைப் படிக்கவேயில்லை.”
ஆனால் எந்த ஓர் எழுத்தாளரைப் பற்றியும், அவர்களது தனி வாழ்க்கை பற்றியும் கேவலமாகவோ, துவேஷத்துடனோ ஒரு வார்த்தை சொன்னதில்லை. பிரமிளோடு ஆன ஒரு சந்திப்பில் ஜே. க்ருஷ்ணமூர்த்தி பற்றி அவர் சொன்னவையெல்லாம் தவறு என்று ஆணித்தரமாக இவர் ஒருமுறை சொல்லி நிறுவியிருக்கிறார். ஆனால் பிரமிள் பற்றி தரக் குறைவான விமர்சனங்கள் வந்ததே இல்லை. (சொல்லப் போனால் நான் படிக்காத பிரமிளின் எழுத்து ஒன்றின்  பிரதியை என்னிடம் கொடுத்தார். நான் அதை எடுத்துவர மறந்து விட்டேன்.) அதே போல் வெங்கட் சாமிநாதன் பற்றியோ, சுந்தர ராமசாமி பற்றியோ கூட. ஜெயகாந்தனிடம் கணையாழிக்காக தொடர்பு கொண்டபோது அவர் எவ்வளவு கண்ணியமாக நடந்து கொண்டார் என்பதைப் பற்றிச் சொல்லியுள்ளார்.
அவர் மூத்த மகன் ரவிசங்கர் அஸ்ஸாமில் இருந்த போது  கல்கத்தாவில் இருந்த என் வீட்டிற்கு வருவதுண்டு. மிக அமைதியான, இனிமையான பையன். இளைய மகன் முத்துக் குமாரும் வந்திருக்கிறார். அசோக மித்திரனின் மூன்றாவது மகன் ராமக்ருஷ்ணன் குமுதத்தில் ஒரு ‘சைகிள் தொலையும் கதை’ எழுதியிருப்பார். அருமையான புத்திசாலித்தனமான வியக்க வைக்கும் கதை. மூவரையும் பற்றி நினைக்கையில் தோன்றும் : ‘அவரவர் எச்சத்தாற் காணப் படும்.
அசோகமித்திரன், மனைவி குழந்தையுடன். நன்றி : 'காலம்' இதழ்

அசோகமித்திரன், மனைவி குழந்தையுடன். நன்றி : ‘காலம்’ இதழ்
ஃபோன் போன்றவையெல்லாம் 1990 களுக்குப் பின்னர்தான் சாமான்யருக்கும் சாத்தியமாகின. அதற்கு முன்னர், அதற்குப் பின்னரும் கூட போஸ்ட் கார்டில் தொடர்பு இருந்தது. போஸ்ட் கார்டில் ‘டியர் ஃப்ரெண்ட்’ என்றுதான் ஆரம்பிப்பார். பெயர் விளிப்பு இருக்காது.
அசோக மித்திரன் மெல்லிய குரலில், சிரித்துக் கொண்டே, அனாயாசமாகப் பல அற்புதங்களைச் சொல்லிவிடுவார். சில வருடங்களுக்கு முன் ஜெயமோகனின் கோவை வாசகர் சந்திப்பில் திரு. சண்முக நாதன் என்கிற ஒருவர் அசோகமித்திரன் டில்லி வந்திருந்த போது அவர் நினைவில் நிற்கும் ஒரு வாசகத்தினைக் கூறுமாறு கேட்டவர்களிடம் அவர் (அசோகமித்திரன்) சொன்னதைச் சொன்னார்: “The futility of gratification of a desire”.
இதே போல் ஒரு வாசகத்தினை ஜெயமோகனிடம் கேட்ட போது அவர் சொன்னது: “ Wave is nothing but water, so is the sea”. இருவரின் ‘பெர்ஸனாலிடி’ யும் இதில் தெரிவதாக எனக்குத் தோன்றியது.
தனிப்பேச்சுகளில் அவர் தன் கருத்துகளை மழுப்பிச் சொன்னதில்லை. மேடைகளிலும், நேர்காணல்களிலும் கூட நல்ல பெயர் வாங்க ‘பொலிடிகல்லி கரெக்ட்’ டாக தொனிக்க, வரலாற்றில் ‘முற்போக்கு’முத்திரை பெற அவர் பேசியதில்லை.
ஒரு பிரபல தமிழ் நடிகர் பற்றி சொல்கையில் ‘விஷக் கிணறு’ என்றும் பிரபல இயக்குனரை ‘விஷ ஊற்று’ என்றும் என்னிடம் சொன்னார்.
‘ 70 களில் பேசுகையில் “இன்னும் பத்து வருடங்களில் பிராமண துவேஷம் இருக்காது” என்று அவர் சொன்னார். நான் “இல்லை சார், தி.மு.க. ஆட்சி அமைந்தபின் பல்கலைக் கழகங்கள், கல்வி சம்பந்தப் பட்ட துறைகள், அரசு இயந்திரத்தின் முக்கிய இடங்கள் ஆகியவற்றில் எல்லாம் தங்கள் கட்சியின் மற்றும் தி.க.வினரின் கொள்கைகளோடு உடன்படுபவர்களாகவே சேர்த்துவிட்டார்கள். அதனால் இது இன்னும், குறைந்த பட்சம் இலக்கிய, அறிவுஜீவி உலகிலாவது மிகவும் அதிகரிக்குமேயன்றி குறைய வாய்ப்பில்லை” என்றேன். பல வருடங்கள் கழித்து இந்த உரையாடலை நினைவுகூறி “நீங்கள் சொன்ன மாதிரிதான் ஆகிவிட்டது” என்று சொன்னார்.
கல்கத்தாவுக்கு இவர் வந்த சமயம் எனக்கு உடல் நலமில்லாமல் இருந்தது. ஆனால் அவரிடம் சொல்லவில்லை. கல்கத்தா தமிழ்ச் சங்கம் அவரை வரவழைத்திருந்தது. என் வீட்டில் தங்கினார். அங்கிருந்தே பீஹார் சென்று அவர் தம்பியையும் அவர் குடும்பத்தினரையும் சந்தித்து வந்தார். இராமக்ருஷ்ண மடத்திற்குச் சென்று வந்தார். அங்கு இராமக்ருஷ்ணரின் சிலை முன்பு முழந்தாளிட்டு அவர் வணங்கும் போது அவரது உடல் எவ்வளவு நெகிழ்ச்சியாக, கெட்டிப்படாமல் இருக்கிறது என்பதைத் தெரிந்து கொண்டேன். அதே போல் அவரை விட சுமார் 20 வயது இளையவனான எனக்குத் தூக்க சிரமமாக இருந்த தோள் பையை சிரமமில்லாமல் தூக்கிக் கொண்டார். என்னிடமிருந்து அவர் வாங்கிக் கொண்டதும் எனக்கு உண்மையிலேயே ‘அப்பாடா’ என்றிருந்தது. அவர் எழுத்துகளும் அவ்வாறே. வெளியில் தோன்றும் எளிய மெல்லிய தோற்றத்துக்கு உள்ளே சக்தியும், வலுவும் மிக்க ஆரோக்கியமான ஒன்று.
கல்கத்தாவிலிருந்து பின் பாங்காக் சென்று வந்தார். அங்கிருந்து வருகையில் என் 4 வயது மகளுக்கு ஒரு ஃப்ராக்’ வாங்கி வந்திருந்தார். அவருக்கு அதற்கு நேரமும், கவனமும்,  மனமும் இருந்திருக்கிறது. அதுதான் அசோகமித்திரன்.
சாப்பாடு மேசையில் அவர் சாப்பிடுகையில் என் பெண் மேசையின் மேல் அமர்ந்து கொண்டு அவரோடு பேசுவாள். அவர் அவளிடம் “என்னம்மா கிளி, சொல்லும்மா கிளி” என்றுதான் பேசுவார். எல்லாக் குழந்தைகளையும் அப்படித்தான் சொல்வார் போலும். தமிழர்களையே சந்திப்பது அபூர்வம் என்கிற படியால் வீட்டுக்கு வரும் தமிழ் நாட்டுக்காரர்களோடு விடாமல் அவள் பேசுவாள். மேலும் எல்லோரையும் போலவே அவளும் அவரிடம் அதிகம் பேசினாள்.  “உங்க பல் ஏன் இப்படி இருக்கு?” என்பது போன்ற பிறரைக் கூச்சமோ, கோபமோ கொள்ளச் செய்து விடும் கேள்விகளையும் அவர் கவனத்துடன் கேட்டு அவள் கேள்விக்கெல்லாம் அசராமல் பொறுமையாகப் பதில் சொன்னார்.
என் மனைவியோடு பேசிக் கொண்டிருந்த போது, சுஜாதா வாசகியான அவரிடம், “ஸ்ரீநிவாசனுக்கெல்லாம் சுஜாதாவை அவ்வளவு பிடிக்காது. சுஜாதா எழுதுவார். ஆனால் கொஞ்சம் வக்கிரம்” என்றார். சாப்பிட்ட சமையலை, குறிப்பாக ரசத்தை மிகவும் புகழ்ந்தார் என்பதை இன்னமும் என் மனைவி நினைவில் வைத்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு எந்த விஷயமுமே பொருட்படுத்தத்தக்கதுதான். ஆனால் உண்மையிலேயே பொருட்களின் மேல் ஆசையில்லாதவர், பொருள் ஈட்டுவதிலும்.
எழுதுவதும், படிப்பதும் தரும் மகிழ்ச்சிக்காகவே இலக்கியத்தில் இருக்கிறார்.
கல்கத்தா தமிழ் சங்கத்தில் பேசுகையில் ‘இன்னும் சுமார் பத்து வருடங்களில் அடுத்த நூற்றாண்டு வரப் போகிறது. அப்போது நீங்கள் எல்லோரும் இருப்பீர்கள். நான் நிச்சயம் இருக்க மாட்டேன்’ என்று பேசினார். என்னடா இது இப்படிப் பேசுகிறாரே என்று தோன்றியது.
சென்னையில் நான் இருந்த காலத்திலும், இல்லாத போதும் என் வீட்டிற்கு வந்து என் அம்மா, தங்கை குடும்பத்தாரைப் பார்த்து விட்டுப் போவார்.
1990களில் அவர் சிங்கப்பூர் போக நேர்ந்தபோது வெகு நாள் இடைவெளிக்குப் பின் என்னைத் தொடர்பு கொண்டார். அப்போது என் தங்கை குடும்பம் அங்கே போய் செட்டில் ஆகி விட்டார்கள். அவர்கள் வீட்டில் கூடப் போய்த் தங்கலாம் என்று சொன்னோம். “என்னவாவது எடுத்துப் போக வேண்டுமா?” என்று அவர் கேட்டதும் “சரி தருகிறேன்” என்று என் அம்மா சொன்னார். அப்போது என் அம்மா உடல் நலம் குன்றி வீட்டில் படுத்திருந்தார். ஆனால் மீண்டும் அசோகமித்திரன் வீட்டிற்கு வந்தபோது அவர் ஏதோ சென்னையிலிருந்து திருச்சியோ, கோவையோ செல்வது மாதிரி எண்ணி சற்று பெரிதான ஒரு பார்சலை என் அம்மா என் தங்கைக்காகக் கட்டித் தந்து விட்டார். அதுவும், அப்போது அசோகமித்திரனுக்கு வந்த தர்ம சங்கடமுமாக அவர் எழுதும் கதை ஒன்று என் முன் நடந்தேறியது. ஆனால் அவர் அது பற்றி எழுதவில்லை. நானும். இப்போது சொல்லிவிட்டதால் இனி கதையாக்க முடியாது. அந்த பொருட்களை அவர் தவறாது எடுத்தும் சென்றார்.
சிங்கப்பூரில் என் தங்கை திருமதி.அசோகமித்திரனை சில இடங்களுக்கு அழைத்துச் சென்றார். அவர் மகன் உபநயனத்தின் போது அசோகமித்திரனும் திருமதியும் வந்திருந்தார்கள். க்ரேஸி மோஹனும் வந்திருந்தார். அவர் இவரைப் பார்த்ததும் ‘இவர் செய்யறதுதான் இலக்கியம், நாங்கள் செய்யறதெல்லாம் கலக்கியம்’ என்று அவர் பாணியில் சொன்னார். இது 1997டிஸம்பரில் நடந்தது. 2009 ஆகஸ்ட்டில் என் மகள் திருமணத்தின் போது அசோகமித்திரன் உடல் நலம் குன்றி ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகி இருந்ததால் வர முடியவில்லை. பின்னர்2011 நவம்பரில் என் தங்கையின் மகன் திருமணத்துக்கும் அசோகமித்திரன் திருமதியோடு வந்திருந்தார். மிகவும் பலஹீனமாக இருந்தார். கிளம்புகையில் அவர் காரில் கண்களை மூடி சரிந்து அமர்ந்ததும் நன் பயந்து போய் விட்டேன். வீட்டிற்குப் போய்ச் சேர்ந்து ஃபோனில் பேசியதும்தான் நிம்மதியாயிற்று.
சொல்வனத்துக்காகக் கேட்டதும் உடனே தி.ஜா. பற்றி ஃபோனிலேயே நேர்கணல் செய்ய முடிந்தது. அது சொல்வனம் – 50 தி.ஜானகிராமன் சிறப்பிதழில் வந்தது.
அதே போல் ஐந்தாம் ஆண்டு ஆரம்பத்தின்போது அந்த இதழுக்காக தானே கணினியில் தட்டச்சு செய்து மொழி பெயர்ப்பு பற்றி ஒரு சிறு கட்டுரையை அனுப்பி வைத்தார். வெளியே சென்று தபாலாபீஸிலிருந்து அனுப்புவது என்பது தற்போதைய போக்குவரத்து நெரிசலில் எப்படி தனக்கு முடியாத காரியம் ஆகி விட்டது என்பதையும், அதனாலேயே டைப் செய்த கட்டுரையை அனுப்பியதையும் சொன்னார்.
சி.சு.செல்லப்பா அவர்களுடைய ‘வாடிவாசல்’ பற்றிய என் விமர்சனக் கட்டுரையைப் படித்து விட்டு ‘ப்ரில்லியன்ட்’ என்று மெயில் அனுப்பியிருந்தார். ஃபோனில் பேசுகையில் “செல்லப்பா இருந்த காலத்தில் அவருக்கு இது போன்ற ஒரு விமர்சனக் கட்டுரை வரவில்லை” என்றார்.
அசோகமித்திரன் எவ்வளவுக்கெவ்வளவு சுவாரஸ்யமாக உரையாடுபவரோ அவ்வளவுக்கவ்வளவு ஒரு விதத்தில் ‘reluctant speaker’. ஓட்டுக்குள் போய் விடுவார். நாம் சொல்வதை வெறுமனே தலையசைத்து ஆமோதித்து விடுவார். இல்லாவிட்டால் ஒரு chuckle. அவ்வளவுதான்.
அவரது நகைச்சுவை உயர்தரமானதும் நுட்பமானதுமாகும். நாம் கவனிக்கவில்லை என்றால் தவற விட்டு விடுவோம். (உ-ம்) “முன்னுரை என்பதை சில சமயம் படிக்காமலேயே கூட எழுத முடியும்.”
இசை அறிவும், ருசியும் உள்ளவர். ‘சிம்மெந்திர மத்தியம’த்தில் அமைந்த எம். எஸ். அவர்கள் ‘சேவாசதனத்’தில் பாடிய ‘குகசரவணபவ’ பாடல் பற்றி இவர் ஒரு கட்டுரையில் எழுதியதும் தான் என் தாயார் எனக்கு தாலாட்டு பாடிய அப்பாடல் பற்றிய, ராகம், படம் போன்ற முழுத் தகவல்களும் தெரிந்தன.
அசோகமித்திரன் பற்றி பல கட்டுரைகளும், சில நூல்களும் வந்திருக்கின்றன. அசோகமித்திரனின் வீச்சும், பரப்பும், ஆழமும், இன்னமும் பூரணமாக ஆராயவோ எழுதவோபடவில்லை. அவரை நகர மத்யதர வாழ்க்கையைப் பற்றி எழுதுபவர் என்றவர்களுக்கும், அவரை வறுமையில்வாடுபவராக எழுதியவர்களுக்கும் அவரைப் பற்றி அதிகம் தெரியவில்லை. தாம் தோராயமாய் அனுமானித்ததை உண்மை போல் சொல்கிறார்கள். வறுமையில்இருப்பது வேறு, வாடுவது வேறு.
அசோகமித்திரன் கூரான யதார்த்த வாதி, புத்திசாலி. ஆனால் தந்திரசாலியல்ல. தன் புத்திசாலித்தனத்தை அவர் பணம் செய்யப் பயன் படுத்தவில்லை. அவரது தமிழ், ஆங்கில எழுத்துகள் அச்சேறிய போது இக்கட்டுரையை வாசிக்கும் பலர் பிறந்திருக்கக் கூட மாட்டர்கள். ஆனால் தன் இலக்கியத்திறனை சுயலாபத்துக்குப் பயன்படுத்திக் கொள்ளவேயில்லை. ஒரு மணிவிழா, ஒரு பொன்விழா எதுவும் பெரிய அளவில் எடுத்துக் கொள்ளவில்லை. சினிமாவிலேயே இருந்திருந்தும் அதில் பணம் பண்ண நுழையாதவர். மிக நுண்புலனுணர்வு கொண்டவர். யார் முன்பும் தன் கலையைச் சமர்ப்பணம் செய்யாதவர். பட்டதாரியான இவர் ஏதோ ஒரு வேலையில் ‘பாதுகாப்பை’ப் பெற்றுக் கொண்டு இருந்திருக்கலாம். எழுத்துக்காக மிக எளிய வசதியற்ற வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்து வாழ்பவர். அவர் வீட்டுச்சூழல் ‘வறுமையின் வாட்டல்’ அல்ல. ஆனால்  ‘சௌகர்யமானதும்’ அல்ல. இவர் போல இலக்கியத்துக்காக சம்பாத்யத்தை விட்ட மனிதரை வைத்துக்கொண்டு திருமதி.அசோகமித்திரன்  கஷ்டப் பட்டிருக்கிறார். அசோகமித்திரன் இது பற்றியெல்லாம் பேசியதே இல்லை. குடும்ப வீடு. வடகையில்லை. பிழைத்தார். மூன்றும் ஆண் பிள்ளைகள். தப்பித்தார். இன்றைய இலக்கிய உலகில் எந்த ஒருவரை விடவும் தார்மீக வாழ்வில் வழுவியவர் இல்லை. அது பற்றி உரத்த குரலில் பேசாதவர். அவ்வளவுதான்.  ‘காந்தி’யைப் பற்றி எழுத எல்லாத் தகுதிகளும் உடையவர்.
அசோகமித்திரன், மனைவியுடன். நன்றி : 'காலம்' இதழ்

அசோகமித்திரன், மனைவியுடன். நன்றி : ‘காலம்’ இதழ்
 கூச்சமும் ‘ஹ்யுமிலிடி’யும் உள்ளவர். தன் புகழ் அறவே பேசாதவர். அபார ஞாபகசக்தி உண்டு. நான் 40 வருடங்களுக்கு முன்பிருந்த தெருவின் பெயரை மறக்காமல் சொல்லுவார். இந்த ஞாபக சக்தியும் அக்கறையும் அவருக்கு பல நண்பர்களைப் பெற்றுத் தந்துள்ளன. எல்லோரோடும் அவரால் நுணுக்கமாக, அணுக்கமாக இருக்க முடிகிறது.
சாவியோ, குமுதமோ,விகடனோ எங்கும் ஒரேமாதிரி எழுதியவர். பலர் மாதிரி ஜாக்ரதையாக தன் அபிப்பிராயங்களைச் சொல்லாமல் இருப்பவர் அல்ல. சாருவின் நூலுக்கு அவர் எழுதிய முன்னுரையில் எனக்கு இக்கதைகள் புரியவில்லை என்கையிலாகட்டும், வேறு ஒருவரது நூலை உயிர்மை மேடையில் வெளியிட்டபோது அந்நூலில் நம்பகத் தனமை இல்லை என்று சொன்னதிலாகட்டும் உண்மையைச் சொல்வதிலிருந்து அவர் பின்வாங்கவில்லை. விலக்குகளும் உண்டு. சில நூல் முன்னுரைகளில் கூர்மையற்ற விமர்சனமற்ற மையமான அசோகமித்திரனைப் பார்க்கலாம். அது அவராக முன்னுரை என்றால் அப்படித்தான் இருக்க வேண்டுமென்று  தேர்ந்தெடுத்துக் கொண்டது.
இவ்விதழில் உள்ள இன்னொரு கட்டுரையை எழுதியவர் இவர் பற்றி தம் நண்பர்களுக்கு எதிர்மறை அபிப்பிராயங்கள் இருப்பதாகக்  குறிப்பிட்டிருந்தார். இவர் கதைகளைப் படித்து விட்டு இவரை அன்பின் வடிவம் ‘personification of love’ என்று பிம்பப் படுத்திக் கொண்டு விடுகிறார்கள். அவர்களுக்கு அன்பு பற்றி வேறு பிம்பங்கள் உள்ளன. அன்பு உண்மையிலிருந்து விலகியது என்றும் நினைப்பவர்கள் உண்டு. அவரது, லேசான எள்ளல் அவ்வப்போது ஊடுருவும், கூர்மையான யதார்த்தமான உண்மையான பேச்சில் ஏமாற்றம் அடைந்து விடுகிறார்கள்.
அயோவா சென்று பல மாதங்கள் கழித்து திரும்பியதும் ஒரு முறை சொன்னார். “ வீட்டு மனிதர்கள் பற்றிய நினைவு வரவில்லை. என் கனவில் அவர்கள் ஓரிரு முறை வந்திருந்தால் அதிகம்”. இந்த ஒட்டற்ற தன்மை கூட அவர் பற்றிய எதிர்மறை அபிப்பிராயங்களுக்கு காரணமாக இருக்கலாம். மிகைப் படுத்தப் பட்ட சொற்களலான உள்ளீடற்ற உறவுகளுக்கே பழக்கமான மனிதர்களுக்கு இப்படித் தோன்றுவது ஆச்சர்யம் இல்லை. எழுத்தாளனின் objectivity அவன் கதைக்கு, கலைக்கு பெரிதும் உதவினாலும் ஒரு விதத்தில் இத்தகைய கருத்துகள் உருவாகக் காரணமாகி விடுகிறது. மேலும் அசோகமித்திரன் போன்ற நுண்புலனுணர்வு மிக்கவர்களுக்குத் தான் அறிவாளி என்பது தெரியும். Mediocrity யை அவர் அதிக நேரம் அனுமதிப்பதில்லை. அதை அவர் அவமானப் படுத்துவதும் இல்லை.
எழுத்தாளர்களுக்குப் பல சமயம் சக மனிதர்களின் மனம் பரிசோதனைச் சாலையாக ஆகிவிடுகிறது. அதனலேயே ஞானம் அல்லது முக்திக்கு, இலக்கியம் என்னும் ஆன்மீக சாதனம் ஒரே நேரத்தில் வழியாகவும், தடையாகவும் ஆகி விடுகிறது. இதை முற்றிலும் உணர்ந்தவர் நம்மோடு பழகும் அசோகமித்திரன்.
தமிழக அறிவு சீவி உலகில் நிலவும் துவேஷத்துக்கு இலக்கிய உலகில் பெரிதும் ஆளானவர். ஆனால் சாமானிய வாசகருக்கு சாதி, மதங்களைக் கடந்து வாழ்வு பற்றிச் சொல்லும் நண்பர். அஞ்சாதவர். உறுதியானவர். தமிழ் இலக்கிய உலகில் மெத்தப் படித்த வெகு சிலரில் ஒருவர். இன்னமும் படித்துக் கொண்டிருப்பவர், எழுதிக் கொண்டிருப்பவர். தமிழ்ச்சிறுகதையுலகில் புதுமைப்பித்தன்போல இவரும் ஒரு சிகரம்.
ஆனாலும் ஒரு புது எழுத்தாளனைப் போன்ற ஆர்வத்துடனும், ஆசையுடனும்  இன்றுதான் முதல் கதை எழுதியவர் போன்று “எப்படி இருக்கு, பரவாயில்லையா?” என்றோ, நாம் “நன்றாய் இருக்கிறது” என்று ஆரம்பித்ததும் “அப்படியா நன்னாயிருக்கா?” என்று அரைகுறை ஆமோதிப்புடனோ கேட்பவர். ‘ஆகாயத்தாமரை’ க்ரேசியாக இருந்தது என்றதும் சிரித்து ரசித்தார். ‘மானசரோவரில்’ என்னதான் நடந்தது என்று கேட்ட போது தமக்கும் தெரியாது என்று சொன்னார்.
ஆரம்ப நாட்களில் பொதுக் கூட்டங்களில் சந்தித்தால் கைகளை மெல்லப் பற்றிக் கொள்வார். அடுத்தவர் வந்ததும் நம்மிடமிருந்து கைகளை விடுவித்துக் கொண்டு அவர்கள் கைகளைப் பிடித்துக் கொள்வார். கோர்ப்பதும், விடுவதும் எளிதாக, நிகழ்வதே தெரியாதவாறு மென்மையாக இருக்கும். ஜே. க்ருஷ்ணமூர்த்தி ஞாபகம் வரும். அவரும் அப்படிச் செய்வதைப் பார்த்திருக்கிறேன். ஜே. க்ருஷ்ணமூர்த்தியின் காலை வேளை உரையாடல் ஒன்றில் அடையாறில் உள்ள வசந்த விஹாரில் கூட அசோகமித்திரனை ஒரு மார்கழி மாதத்தில் சந்தித்து இருக்கிறேன். “ இந்த வானிலை எல்லோருக்கும் சுகமாக இருக்கும். என் போன்ற உடல் நலம் இல்லதவர்களுக்குத்தான் அப்படியில்லை” என்றார். அப்போதே அவர் ஆஸ்துமாவினால் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தார்.
க்ருஷ்ணமூர்த்தியின் பேச்சொன்றின் முழுத் தமிழ் வடிவை இவர் நாவலின் ஓர் அத்தியாயமாகவே வைத்திருந்தார். (ஆகாயத் தாமரை என்று நினைக்கிறேன்.) பின்னர் சமீபத்தில் நான் முக நூலில் க்ருஷ்ணமூர்த்தியின் மேற்கோள்களை எடுத்துப் போடுவதைப் பார்த்து எனக்கு எழுதியிருந்தார். “ நானும் ஒரு காலத்தில் அவரால் ஈர்க்கப் பட்டிருந்தேன். ஆனால் பின்னால் டிஸில்யூஷன் ஆகி விட்டது”
இனி அவர் எழுத்தைப் பற்றிக் கொஞ்சம் :
80 வயதில் முகநூலில் புதிதாய் வர அவருக்கு முடிந்தது. கணினியில் தமிழில் தட்டச்சுவதைத் தெரிந்து கொண்டார். எப்போதும் கற்றுக் கொண்டே இருப்பவர். எல்லவற்றிலிருந்தும். எல்லோரிடமிருந்தும். அதனால்தான் இன்னமும் நாம் எதிர் பார்க்காத மாதிரியான எழுத்துகளை அவரால் தர முடிகிறது. இந்த எதிர்பார்க்க முடியாத, கணிக்க முடியாத தன்மை நல்ல எழுத்துக்கு இன்றியமையாதது. அது சம்பவங்களின் திடீர்த் தன்மையாலோ, திடீர்த் திருப்பங்களாலோ விளைவது அல்ல. சொல்லப் போனால் அவற்றால் நிச்சயம் அவை நிகழ்வதே இல்லை. ஆனால் வாழ்வின் சுய ரூபத்தை நாம் பார்க்காத அளவுக்கு – நம் கண்களும் காதுகளும் மனமும் மூடப்பட்டு இருப்பதால் நம்மால் கனிக்க முடியாமல் மறைந்து கிடப்பனவற்றை – இவர் சொல்லும்போது ‘அட’ என்கிற வார்த்தை கூட எழாமல் நாம் அவ்வுண்மையை சந்திக்கிறோமே அந்த unpredictability யைச் சொல்கிறேன்.
இந்த ஜகதீசன் தியாகராஜனுக்கும் மூன்று கண்கள்தாம். நமக்குத் தெரியாதவற்றையெல்லாம் அவை பார்த்துவிடும். பரந்த வெளி பழக்கமில்லாது தாறுமாறாக ஓடும் எலியைக் காக்கைக் கொத்திக்கொண்டு போவதை எல்லோரும் காணமுடியும். அதற்கு அப்பால் போய் முந்தின இரவு எலிப்பொறியின் கொக்கியில் மாட்டிய வடை அப்படியே தின்னப்படாமல் இருப்பதை அவர் பார்க்கிறார்.  அம்பிகாபதியின் மரண தண்டனை நிறைவேற்றப் பட்டபின் அமராவதி என்னவானாள் என்று கேட்கிறார்.
ASOKAMITHTHIRAN-27, PHOTO BY PUTHUR SARAVANAN
சுஜாதா இவரைப் பற்றிச் சொல்கையில் “உண்மையில் அவன் சோகமித்திரன்” என்பார். அவரது பெரும்பாலான கதைகளின் மொத்தத் தாக்கம் அப்படியிருக்கலாம். கதைகளூடேயும், அவரது பல கட்டுரைகளிலும் அவர் ‘அசோக’மித்திரனும்தான் என்பதை உணர்வோம்.
தூய தமிழில் கதைகள் எழுதப்படுவதற்கான முன்னோடிகளில் ஒருவர்.  அந்தக் காலத்தில் புழக்கத்தில் இருந்த ‘தண்டவாளங்கள்’ என்று எழுதாமல் ‘இருப்புப் பாதைகள்’ என்று எழுதியவர். இது ஒரு உதாரணம்தான்.
எல்லா நல்ல எழுத்தாளர்களுக்கும் வாசகருக்கும் இடையே உள்ளது போலவே அசோகமித்திரனுக்கும் வாசகருக்கும் இடையே அவர்களுக்கு மட்டுமேயான பிரத்யேக உறவு உண்டு. அவருடைய மிக பிரசித்தி பெற்ற சிறுகதைகளைத் தவிர, சில சமயம் ‘விட’ வேறுகதைகள் ஒரு வாசகரைக் கவரும். அவருடைய ‘இந்திராவுக்குவீணை கற்றுக்கொள்ள வேண்டும்’ மற்றும் அதன் தொடர்ச்சியாக பலவருடங்களுக்குப் பின் வந்த ‘இந்திராவுக்கு வீணைகற்றுக் கொள்ளமுடியவில்லை’ இரண்டும் அது மாதிரி என்னை மிகவும்கவர்ந்த கதைகள். ‘‘குழந்தைகள்’, ‘அப்பாவின்சிநேகிதர்’, தீபாவளி மலர் ஒன்றில் வந்த ‘நகலகக் கதை’ எல்லாமேஅந்த மாதிரிதான்.சொல்லப் போனால் ஒரு தீபாவளி மலரில் வந்த மிகப் பிரபலமான இன்றைய முன்னணி இளம் எழுத்தாளர்கள் இருவர் கதைகளையும் விட இந்த முதியவர் எழுதிய கதை நன்றாக இருந்தது.
ஒரு கதையில் ஒருஅகலமான, மிகவும்போக்குவரத்து உள்ள சாலையை அவ்வளவாக வசதி இல்லாத  ஒரு முதியவர் கடக்கமுயல்கையில் ஒரு ஏழைச் சிறுமி அவரிடம் சீப்பு / earbuds விற்க முற்படுவாள். ஒரு பக்கம்அளவுதான் இருக்கும் அந்தக் கதை. அவர் எப்படியோ கஷ்டப்பட்டு பாதிச் சாலையைக் கடந்து இடைவெளியில் நிற்கையிலும்அவள் அவரைத்தொடர்வாள். சிறுமி, அதுவும் ஏழை என்பதால் அவளுக்குநேர்ந்திருக்கக் கூடிய அபாயங்களை அவர் இதற்கிடையில் யோசிப்பார்.அந்தப் பரிவில் பொருள் எதையும் வாங்காமல் அவளிடம் ஒரு பத்துரூபாயைக் கொடுத்துவிட்டு, நெரிசலைத் தண்டி ஒரு வழியாக எதிர்ப்புறம் சென்றுசேர்ந்ததும் அந்தச்சிறுமி கூடவே வருவதைப் பார்ப்பார். வந்தவள் அவரிடம் ஒரு சீப்பை / ear buds ஸைக்கொடுத்துவிட்டுப் போவாள்.
நுண்தகவல்களை வர்ணிப்பதில் அவர் சத்யஜி ராய் மாதிரி. இவர் எழுத்து என்கிற ஊடகத்தின் வழியாக செய்து கொண்டிருப்பதை இன்னும் பல் பரிமாணமுள்ள சினிமா ஊடகத்தில் ராய் செய்தார். ராய் மேலும் ஓவியம் வரையவும், இசை அமைக்கவும், சிறுவர் மற்றும் துப்பறியும் கதைகள் எழுதவும்,குழந்தைகள் பத்ரிகை நடத்தவும், ஒளிப்பதிவு, எடிடிங் போன்றவற்றையும் அப்பழுக்கில்லாமல் செய்தார். இருவரது எளிமை, சிக்கலற்ற தெளிவு, கூர்மை, கவனிப்பு,கருணை, நகைச்சுவை, பார்வை அரிதானவை. கலையின் ஊற்று அவற்றில் தென்படும். ‘பீதோவனி’ன்  இசை பற்றிச் சொல்கையில் ராய் அதன் ‘Strength and simplicity’ யை நினைவு கூர்வார். மூவரின் கலைக்கும் அது பொருந்தும்.
ஒரு கதையைப் படிக்கையில் நாம் வாழ்வையும், எழுதிய ஆசிரியரையும் நம்மையுமே படிக்கிறோம். ஒரு மோசமான கதை எழுத்தாளர் யாரென்பதை நமக்குக் காட்டிக் கொடுக்கும். நல்ல கதைகள் நேர்மறையாகவும், பிற எதிர்மறையாகவும் நமக்கு, மெல்ல, நம்மையறியாமலே கற்பிக்கும்.
சில கதைகளைப் படிக்கும்போது அதன் ஆசிரியர் தம்மை வெளிப்படுத்திக் கொள்ள முயல்வதற்கு நேரெதிராக நான் அவரை முழுதும் புரிந்துகொள்கிறேன். ஜெயகாந்தனையோ, ஜானகிராமனையோ படிக்கையில் வாழ்வு பற்றிய அவர்களது கருணை மிகு பார்வையை நான் உணர்கிறேன். அசோகமித்திரன் ‘ஒற்றனி’ல் பூண்டு அதிகம் சாப்பிடும் எழுத்தாளன் ஒருவனின் வாழ்வில் நிகழும் பெருந்துயரைச்சொல்லும் அத்தியாயத்தில் கடைசி வரியில் பூண்டு வாசனையைப்பற்றி மீண்டும் எழுதுகையில்’ஹா! இது,இது, இதுதான் அசோகமித்திரன்’ என்று தெரிந்துகொள்கிறேன்.
 புற நிகழ்வுகளைப் பற்றி மட்டுமே சொல்லி அக நிகழ்வுகளை முழுமையாக உணர்த்துகிற மாயம் தெரிந்தவர். அவர் எழுதுவது ‘ரிபோர்டிங்’ இல்லை. அப்படி என்றெண்ணி அவர் பாணியில் பலரும் எழுத முற்பட்டு தோல்வி அடைந்திருக்கிறார்கள். காரணம் அவரது எழுத்து தொடர்ந்த ‘உட் பார்வைகளால்’(insights) கோர்க்கப் பட்டது. ஒன்றன் பின் ஒன்றாக அவை மலரும். ஒவ்வொரு விஷயமும்,நிலைமையும், மனமும், செயலும் மிக்க ஆழத்திலிருந்து தம்மை வெளிப்படுத்திக் கொள்கையில் அவ்வாழத்திற்கு இடைஞ்சல் இல்லாமல் அதை அமைதியாகக் கவனித்து எழுதும் பொறுமையும், தீர்க்கமும் அவருக்கு உண்டு.  அதே போல் அவரது எழுத்துகள் ‘still photographs’ ஸும் இல்லை. இயங்கிக் கொண்டே இருப்பவை. ‘His writings are movements in insights. ‘இன்சைட்’ களின் பவனி.
வாழ்வோடேயே பொறுமையாய், நிதானமாய், நோக்கமின்றி நடந்து அதுசொல்வதையெல்லாம் கேட்டு, காட்டுவனவற்றையெல்லாம் பார்த்து அதை எழுதுபவர் அசோகமித்திரன்.
குழந்தைகள் கதையின் கடைசி வரி, (“எல்லாப் பெண்களுக்கும் இனி பிறக்கப் போகும் குழந்தைகள் பற்றியும் அவள் நினைத்தாள்”) ‘இன்று’ நாவலில் வரும் சீதாவின் ‘புனர் ஜென்மம்’, (இந்த தற்கொலைக்கு ஈடாக நான் எங்குமே படித்ததில்லை. என்னைக் கண்ணீர் சிந்த வைத்த பல அசோக மித்திரனின் எழுத்துகளில் இதுவும் ஒன்று. ‘இன்று’ நாவலின் ஒவ்வொரு அத்தியாயமும் டால்ஸ்டாயின் நூல்களின் தலைப்பைக் கொண்டிருக்கும்.) ‘தண்ணீரி’ல் வரும் நெல்லூர் தடியன்கள் முன் நிர்வாணமாக நடக்க வேண்டிய வாழ்க்கை, வாயைத் திறந்து கொண்டு தூங்கும் இந்திராவினம்மா, அப்பாவின் சிநேகிதரிடம் அழும் அம்மா, ‘ஒற்றனில்’ நிகழும் அசாதாரண சம்பவங்கள், அதில் வரும் ‘அம்மாவின் பொய்கள் கவிதை’ நாடகமாகையில் நடக்கும் அபத்த நாடகம், உண்மையும் பொய்யும் இரண்டற கலந்து விட்ட இடுப்பளவு தண்ணீரே உள்ள பாவம் கழுவும் மானசரோவர்,   பாட்டியை  போ போன்னு விரட்டிட்டு ரயில் ஏத்தக் கூட வராத அப்பாவிடம் என்ன சொல்வது என்கிற பேத்தியின் நிலை, அவளை வீட்டிற்கு அழைத்துச் செல்கிறேன் என்கிற அப்போதுதான் ரயில் நிலையத்தில் சந்த்தித்தவனிடம் ‘அதோ அவ அப்பா வந்து விட்டார்’ என்று பொய்யாய்ச் சொல்லிக் காக்கும் பாட்டி என்று கணக்கற்ற வாழ்க்கையின் உண்மைகள். மலர்களை மட்டுமே காட்டி முட்களை மறைக்க மாட்டார்.
எழுத்தாளர் அசோகமித்திரன் என்றால் ஒரே வார்த்தையில் awareness. அதன் விரிந்த பொருள்  விழிப்பு, விழிப்புணர்வு, விதிவிலக்குகளேயற்ற கவனிப்பு, துல்லியம், தெளிவு, இரக்கமற்ற கருணை.
அவரது ‘யுத்தங்களுக்கு நடுவில்’ ஒரு Magnum opus ஆகியிருக்க வேண்டியது. ஒரு பெரு நாவலின் hints கள் போல், தந்தி மொழியில் ஒரு கதையைச் சொல்வது போல் அமைந்து விட்டது. கால அவகாசம் இல்லை என்று அப்படி வெளியிட்டு விட்டாரோ என்னவோ. ஆனால் அதில் எனக்கு ஒரு ஆசுவாசம். பல மனிதர்களை, பல ஆண்டுகளைச் சொல்லும் ஒரு தமிழ் நாவலில் நல்ல வேளையாக ‘adultery’ இல்லை. அது பற்றிப் பேசாத ஒரு பெரிய நாவல் வருமா என்று காத்திருந்தேன்.
அதே போல் ‘குறி’ யீட்டு  – அதாவது ஆண் குறி, பெண் குறி என்கிற வார்த்தைகள் எப்படியும் இருந்தாக வேண்டும் என்கிற எழுதாத நியதி உள்ள – நாவல்களால் நிரம்பிய நவீன தமிழ் இலக்கிய  உலகில் அந்த நியதியை மீறியவராகவே அசோகமித்திரன் எழுதி வருகிறார். ‘ஷாக்’கொடுக்க அவர் முயன்றதே இல்லை. எனவேதான் அவர் சொல்பவை அவற்றின் முழு நம்பகத் தனமையால் நம்மைத் தப்பிக்க விடாது தாக்குகின்றன. படித்து வெகு காலத்துக்கு உண்மையாக வலிக்கும்.
1971ல் மண்டபம் பழனிச்சாமி என்பவர் இவர் கதைகளை விமர்சித்து இருந்தார். ‘தண்ணீர் ஒரு தண்டனை’ என்று எழுதியிருந்தார். ஒரு கதையில் “குந்திக் கொண்டு உட்கார்ந்தான் என்று எழுதியிருப்பது தவறு. குந்திக் கொண்டான் என்றாலே போதும். இப்படியெல்லாம் எழுதுகிறார்.” என்று குறிப்பிட்டிருந்தார். அசோக மித்திரனின் சிறுகதைத் தொகுப்பு நூலில் பின்னட்டையில் மண்டபம் பழனிச்சாமியின் கருத்துகள் இடம் பெற்றிருந்தன.
முதன்முதலாக மண்டபம் பழனிச் சாமியோடு நடந்த விவாதத்தில் நான் இவர் எழுத்து பற்றி இரண்டு வார்த்தைகளில் குறிப்பிட்டுச் சொன்ன போது அவர் சில கதைகளே எழுதியிருக்கக்கூடும். ஆனால் இந்த வார்த்தைகள் கணையாழி அக்டோபர் 1971 இதழின்  அட்டையில்வந்தன. இப்போது இந்தக் கட்டுரையையும் அவ்வார்த்தைகளோடு முடிக்கிறேன். ‘மகத்தான எழுத்து.’