FUTURE IS NOW - J Krishnamurti.

பிறப்பு, இறப்பு என்பது உண்மையே இல்லை. அத்தகைய பொய்யான தோற்றத்தை நமது மனமே உருவாக்கிக் கொள்கிறது. மனம் தனக்கென்று ஒரு உடலை உருவாக்கிக் கொள்கிறது. அதைக் கனவு மழையில் நனைத்துத் துன்பப் படுத்துகிறது. - ரமண மகர்ஷி.

Search This Blog

Friday, March 12, 2010

எதைப் பற்றியும் (அ) இது மாதிரியும் தெரிகிறது (7)

எதைப் பற்றியும் (அ) இது மாதிரியும் தெரிகிறது (7) பிரசுரம் : வார்த்தை அக்டோபர், 2008.

வ.ஸ்ரீநிவாசன்.

நிர்வாகக் காரணங்களுக்காக இந்த மாதம் எழுதுவதைச் சற்று முன்னதாகவே அனுப்பி வைக்குமாறு 'வார்த்தை' ஆசிரியர் குழுவில் கூறினார்கள். சீக்கிரம் அனுப்புவதால் தவறுகள் வராமல் இருக்க வேண்டுமே என்று இருந்தது.

"There is a kind of "perfectionism' which leads some scholars to publish nothing, because they know that nothing can be perfect. I don't respect this." என்று ஆனந்த குமாரஸ்வாமி அவர்கள் எழுதியுள்ளதை நினைத்துக் கொண்டேன். வரிக்கு வரி, வார்த்தைக்கு வார்த்தை, அறிவும், தெளிவும், erudition னும் insight டும் பொங்கிப் ப்ரவஹிக்கும் எழுத்துக்களை அளித்த அவரே சொல்லும்போது, 'எதைப் பற்றியும் ' எழுதும் நான் பெர்ஃபெக்ஷனுக்குக் காத்திருக்க வேண்டுமா? இப்படியெல்லாம் யோசித்து யோசித்து வழக்கமாக அனுப்பும் நாளிலேயே அனுப்பி விட்டேன்.

கூடிய வரை தவறுகள் இல்லாமல் எழுத வேண்டும். நாம் அறிந்ததை, நமக்குப் புரிந்ததை, நாம் உணர்ந்ததை எழுத வேண்டும். நம் வார்த்தையில் எழுத வேண்டும். மேற்கோள்கள் காட்டுவது நாம் சொல்ல வருவதை முன்பே யாராவது மிகச் சரியாக, 'அதைவிட சிறப்பாக சொல்வது சாத்தியமில்லை' என்கிற மாதிரி சொல்லியிருக்கும் போது எடுத்தாளுவதுதான். அல்லது அந்த மேற்கோளில் தாங்க முடியாத கவர்ச்சி இருக்க வேண்டும். அழகு ஒளிர்ந்திட வேண்டும். உண்மைக்கென்றே அதில் நிலவும் அழகு இருக்கிறது. அலங்காரமாக அழகாக, நெகிழ்வாக பேசவேண்டும், எழுத வேண்டும் என்று செய்கையில் அது என்றும் அதிக பட்சம் இரண்டாம் தரமாகத்தான் இருக்கிறது.


மேற்கோள்கள் என்கையில் இவற்றைப் பாருங்கள், எப்படி இருக்கின்றன?.

"Life's but a walking shadow, a poor player
That struts and frets his hour upon the stage
And then is heard no more. It is a tale
Told by an idiot, full of sound and fury,
Signifying nothing" - ஷேக்ஸ்பியர்.

"காட்சியில் தெளிந்தனம் ஆகலின் மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே" - கணியன் பூங்குன்றனார்.

எனக்கு இவையெல்லாம் உண்மையும், அழகும் நிரம்பித் ததும்புவனவாக 'பர்ஃபெக்ட்'டாக இருப்பதாகத் தோன்றுகிறது.

எல்லாம் பர்ஃபெக்ட்டாக இருந்தால் நடிகர் டஸ்டின் ஹாஃப்மன்னுக்கு பயம் வந்து விடுமாம்; "இப்படி இருக்கக் கூடாதே, முடியாதே; இப்படி இருந்தால் ஏதாவது கெடுதல், தாங்க முடியாத கஷ்டம் வந்து விடுமே" என்று எண்ணுவாராம்.

காம்யூவின் 'ப்ளேக்'கில் ஒரு பாத்திரம் ஒரே ஒரு பத்தியை (para) நாவல் முழுவதும் மெருகேற்றிக் கொண்டே இருக்கும். ஒவ்வொரு முறை எழுதிக் காட்டும் போதும் சிறு மாற்றங்கள், மேலும் சிறப்பாக்கும் முயற்சி.

தாஸ்தயெவ்ஸ்கியின் 'எ ஃபெயின்ட் ஹார்ட்' கதையில் நாயகன் வாழ்வில் எல்லாம் சரியாக இருக்கும். காதலிக்கும் இவனுக்கும் எல்லாம் பொருத்தமாக இருக்கும். கல்யாணத்துக்கு எந்தத் தடையும் இல்லை. இவன் ஆவணங்களைப் பிரதி எடுத்துக் கொடுப்பவன். ஒரு வேலையை இவன் செய்து முடிக்க வேண்டி இருக்கும். நன்பனிடம் வேலை இதோ முடிந்து விடும், அதோ முடிந்துவிடும் என்று பொய் சொல்லிக் கொண்டிருப்பான். முதலாளியைப் பார்ப்பது, காதலியை வாழ்த்துவது என்று எல்லாம் நடக்கும். நண்பனும் ஆதரவாக நம்பிக்கையோடு இருப்பான். திங்கள் கிழமை காலையில் முடித்துத் தரவேண்டிய வேலை. சனி இரவு, ஞாயிறு என்று வேலை செய்வான். இரவில் பாதியில் எழுந்த நண்பன் இவன் பேய் அடித்த மாதிரி எழுதிக் கொண்டிருப்பதைப் பார்ப்பான். அருகில் சென்று எவ்வளவு முடிந்தது என்று பார்க்கையில், வெள்ளைத் தாளில் மசியற்ற பேனா 'எழுதி எழுதி மேற்செல்லும்'. காதல் மணத்தில் முடியாது. அவன் முடிக்க முடியாமல் போன வேலை முக்கியமான வேலை இல்லை, காதலிக்கு அவனிடம் வேறு எதிர்பார்ப்பு இல்லை. ஒரு பிரச்னையும் இல்லை. அவனுக்கு, அவன் சந்தோஷம் தாங்க முடியாத ஒன்றாகி, அவனே அதை சிதைத்து விடுகிறான்.

எனவேதான் 'நான் சந்தோஷமாயிருப்பதற்கு அஞ்ச மாட்டேன்' என்று புரிந்து கொள்ளச் சொல்கிறார் டேல் கார்னகி. மனித குலம்தான் எவ்வளவு சபிக்கப் பட்டது !

முதல் நாளே எளிதாகச் செய்துவிடக் கூடிய வேலையை கடைசி நாள் கடைசி மணியில் கடைசி நிமிடத்தில் அவசரமாகச் செய்யும் மனோபாவத்தை என்ன சொல்வது?

காரம் போர்டில் எதிராளி போட ஒரே ஒரு காயையும் நாம் போட ஒன்பது (எல்லாக்) காய்களையும் வைத்து விளையாட விழைவதை? அதீத சுய நம்பிக்கை? வேண்டுமென்றே மரணக் குழியிறங்கும் மனித மனம்?

நகுலன் இதையெல்லாம் அனாயாசமாகச் சொல்லி விடுகிறார்.

தன்மிதப்பு

யார் தலையையோ சீவுகிற
மாதிரி அவன் பென்சிலை
சீவிக் கொண்டிருந்தான்.
அவனைப் போல் பென்சிலும்
பேசாமல் இருந்தது - அது
கூடத் தவறு, அந்த நிலையில்
அவன் தன் கழுத்தை
இன்னும் இவனுக்குச்
சௌகர்யமாகச் சாய்த்துக்
கொடுத்திருப்பான் - இந்த
நிலைமையையும் தன்னு
டைய வெளித் தெரியாத
ஆற்றலால் சமாளிக்க
முடியுமென்ற தன் மிதப்பில்.

இந்தத் தன்மிதப்பும் சஞ்சலமும் ஏன்? தேவதாஸ் கதையையே எடுத்துக் கொள்ளுங்களேன். அது காதல் கதை என்கிறார்கள். எனக்கு அது சஞ்சலத்தின் கதை. தேவதாஸ் மட்டும் சஞ்சலப் படாமல் 'சரி' என்று முதலிலேயே திடமாக சொல்லியிருந்தால் பார்வதியை மணந்து கொண்டு, காவியமாகாமல், யார் நினைவிலும் தங்காது, கோடானு கோடி புண்யவான்களைப் போல சந்தோஷமாகவோ, கவலைப் பட்டோ, முட்டாளாகவாவது வாழ்ந்திருப்பான். அது சஞ்சலம் பற்றிய கதை என்பது ஒரு பாட்டில் கோடி காட்டப் பட்டிருக்கும். "சஞ்சலப்பேய் வசமானாய்' என்ற வரியின் மூலம். கிடைக்காமல் போனதும் தேவதாஸின் வாழ்க்கையே பார்வதிதான் என்று பின்னால் ஆகி விடுகிறது.


வாழ்க்கையே இதற்காகத்தான் என்று எனக்கு எதுவுமே இல்லை என்கிறார் ஜெயகாந்தன். உண்மைதானே. 'அபேத வாதம்' எழுதி சோசலிசத்தை இங்கு கொண்டு வந்த ராஜாஜி தர்க்கத்தோடும், தத்துவார்த்தமாகவும் அதனை முற்றிலும் எதிர்ப்பவராக மாறிப் போய் தாராள மயமாக்கலுக்கு (ஆனால் ஏழைகளை கணக்கில் எடுத்துக் கொள்ளும்) அக்னாலட்ஜ்மெண்ட் இல்லாத மூலகர்த்தா ஆகிறார்.. 'காந்தியம், காங்கிரஸ், கள்ளுண்ணாமை'யை ஆதரித்த பெரியார் இவை அனைத்தையும் முழுக்க முழுக்க எதிர்ப்பவராக ஆகிறார். 'திண்ணையில் படுத்தாவது திராவிட நாடு அடைவோம்' என்ற அண்ணா இந்திய அரசியல் சாசனத்தின்படி தமிழ் நாட்டின் முதலமைச்சர் ஆகிறார். தீவிர நாத்திகர்கள் மேல் மருவத்தூரிலும், புட்டபர்த்தியிலும் அடைக்கலம் புகுகிறார்கள். கடவுளர் மேல் கீர்த்தனைகளையும், ஸ்லோகங்களையும் கனிந்துருகப் பாடிய கர்நாடக மாமேதை எம்.டி.ராமநாதன் 'ராமனாவது, கிருஷ்ணனாவது, அம்பாளாவது எல்லாம் பொய்" என்று கசந்து போகிறார். வாழ்க்கை எனும் ரோலர் கோஸ்டர் ஒவ்வொருவரையும் எங்கெங்கோ கொண்டு போய் நிறுத்தி விடுகிறது.

சார்த்தரின் 'ஏஜ் ஆஃப் ரீஸன்' முடிந்து டபிள்யூ.ஹெச். ஆடனின் 'ஏஜ் ஆஃப் ஆங்க்ஸைடி' யும் தீர்ந்து 'ஏஜ் ஆஃப் அன்சர்டனிடி'யிலிருந்து 'ஏஜ் ஆஃப் ஆம்பிக்யுடி'க்கு வந்து விட்டோம் என்று தோன்றுகிறது. எங்கே நமது அரசு, தனியார் தொலை தொடர்பு நிறுவனங்களின் தொலைபேசி, கைபேசி கட்டணப் பட்டியல், வேறு வேறு வங்கிகளின் வட்டி விகிதம், நம் அரசியல் தலைவர்கள் யார் யார், யார் யாரை எதிர்த்தார்கள், ஆதரித்தார்கள், அதிமுக ஆட்சியில் யார் யார் எதெதற்கு அமைச்சர்களாக இருந்தார்கள், ஆற்காட்டார் ஆட்சியில் தமிழகத்தில் எந்த எந்த ஊர்களில் எந்த எந்த நேரங்களில் மின்சாரம் இருப்பதில்லை, அல்லது (கேள்வியை சுலபமாக்கினால்) இருக்கிறது என்கிற தகவல் பட்டியலை கொஞ்சம் யோசித்த பிறகாவது கூறுங்கள் பார்க்கலாம்.


'செம்பருத்தி' என்ற எப்போதோ பார்த்த மலையாளப் படத்தில் ஐயப்ப பஜனை அதி சிரத்தையாக, தீவிரமாக நடந்துகொண்டிருக்கும் வேளையில் அங்கிருப்பவரின் மகள் ரோஜா ரமணி (?) வன்புணர்ச்சிக்குள்ளாக்கப் படுவார். மரங்கள் நிறைந்த வேலூர் சிஎம்சி ஆஸ்பத்ரியில், பறவைகளின் ஒலி விசும்பை நிறைக்கும் மாலை வேளைகளில் , அவ்வொலிகளோடு மரண ஓலங்கள் கலப்பதை கண்டிருக்கிறேன்.

இத்தகைய சிக்கலான வாழ்க்கையில் எது ஒருவரது சரிதை? பஜனையில் நெக்குருகும் மனமா? வன்புணர்ச்சியின் அதிர்ச்சியில் செத்து அல்லது மீண்டும் மீண்டும் சாகப் போகும் உயிரா? பட்சி ஜாலமா, மரண ஓலமா?

அதனால்தான் ஆனந்த குமாரஸ்வாமி 'பிரமுகர்களின் வாழ்க்கை மற்றும் ஆளுமைகளைப் பற்றிய தகவல்களை வெளியிடும் நவீன வழக்கத்தை அநியாயமான ஆவலுக்கு போடப்படும் ஆபாசத் தீனி' என்கிறார். ராஜாஜி தன் சரிதையை எழுத வந்த பலரிடம் ' நிறைய பொய் சொல்ல வேண்டி வரும். வேண்டாம்' என்கிறார். அவருக்கு சிலை வைக்க அணுகியபோது அவர் அனுமதியோ, போஸோ கொடுக்கவில்லை. ஜவஹர்லால் நேருவும் தனக்கு சிலை வேண்டாம் என்கிற விஷயத்தில் வழ்நாள் முழுதும் பிடிவாதமாக இருந்தார்.

மீண்டும் தாஸ்தயெவ்ஸ்கி வந்து உட்கார்ந்து கொண்டு நம்மைப் பார்த்து ரஷ்யனில் கேட்கிறார். நாம் ஆங்கிலத்தில் கேட்டுக் கொள்வோம்.
'How can a man of perception respect himself?"

**************

ரோஜர் ஃபெடரர் பதிமூன்றாவது டென்னிஸின் மகா போட்டியில் வென்றுள்ளார். இன்னும் ஒரு வெற்றி அவரை பீட் சாம்பிராஸுக்கு இணையாக்கும், இரண்டு வெற்றிகள் உலக சாதனையாளராக ஆக்கும். இன்னும் வெகு சில ஓட்டங்ககளில் சச்சின் லாரவின் உலகசாதனையை மிஞ்சுவார். முரளிதரனை ஆஸ்திரேலியாவில் உலக சாதனை செய்ய விடமாட்டோம் என்று ஆஸ்திரேலியர்கள் செய்தது போலவே இலங்கையில் சச்சினை செய்ய விடமாட்டோமென்ற ஸ்ரீலங்கா அணியினர் அதை நடத்தியும் காட்டினார்கள். தனி தங்கப் பதக்கம்பெற்ற முதல் இந்தியர் என்பது அபிநவ் பிந்த்ராவின் சாதனை.

வேறு சில மகத்தான சாதனைகளைச் சொல்லாவிட்டால் அது அறமாகாது. பத்து வேடமிட்டு தசாவதாரம் எடுத்த கமல், இருபத்திரண்டு வேடமிட்ட ( கர்நாடகாவுக்கும், தமிழ் நாட்டுக்கும் தலா ஒன்றென ப்ளஸ் டூ அவதாரம் எடுத்த) ரஜினி போன்றவர்களைப் பற்றியே ஒட்டியும் வெட்டியும் பேசிக் கொண்டிருக்கும் தமிழர்கள் செய்யும் சாதனை, 'கோலங்கள் என்ற தொலைக் காட்சித் தொடரை மின்வெட்டின் காரணமாகப் பார்க்க முடியாமல் போய் , வெளியாகாத போது பால் கட்டிக் கொள்வது போல் கண்ணீர் கட்டிக் கொண்ட பெண்மணிகள் மற்றும் அவர்கள் கடிதங்கள் கண்டு அவர்கள் 'வாழ்வா சாவா' பிரச்னையைப் புரிந்து கொண்டு அப்பகுதிக் கதையை வெளியிட்டுள்ள பத்ரிகை (அத்தொடரின் தயாரிப்பும் அவர்களே) ஆகியோர் செய்துள்ள சாதனை, குடியரசுத் தலைவர், உப தலைவர், ஆளுனர்களின் சம்பளத்தையும் (முன்னூறு சதவீதம்) ஓய்வூதியத்தையும் உயர்த்திய இந்திய அரசின் சாதனை, கொசுக்களுக்கும், இருளுக்கும், மாசிற்கும், வியர்வைக்கும், அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருக்கும் ஊழலுக்கும் மத்தியில் மனிதர் வாழலாம் என்று நிரூபித்து வரும் இந்தியர்களின் உலக சாதனை. அனைவருக்கும் வாழ்த்துகள்.

****************


இரண்டு கேள்விகள்:

1. 'மொராலிடி'யே இல்லாத உலகம் என்று சொல்லப் படும் சினிமா உலகில் இங்கோ, வட நாட்டிலோ, மேல் நாடுகளிலோ ஏன் (எனக்குத் தெரிந்தவரை) ஒரு எய்ட்ஸ் மரணம் கூட இல்லை?

2. ஒரு வேளை டீ செலவுக்கு லட்சங்களிலும், கோடிகளிலும் செலவு செய்யும் அரசியல் கட்சிகளின் வருமானத்திற்கு ஏன் தணிக்கையோ வரி விதிப்போ இல்லை.

இவற்றை எழுதும் போது மொத்த வட இந்தியாவும், கொஞ்சம் தென்னிந்தியாவும் 'பப்புவுக்கு டான்ஸ் ஆட வராது' என்று ஏ.ஆர் ரஹ்மானின் இசையில் மச்சானிடம் சொல்லிக் கொண்டிருக்கின்றன.

***************

The one who is doing the truth is coming to the light (III chapter of St.John's gospel)

************

No comments: