FUTURE IS NOW - J Krishnamurti.

பிறப்பு, இறப்பு என்பது உண்மையே இல்லை. அத்தகைய பொய்யான தோற்றத்தை நமது மனமே உருவாக்கிக் கொள்கிறது. மனம் தனக்கென்று ஒரு உடலை உருவாக்கிக் கொள்கிறது. அதைக் கனவு மழையில் நனைத்துத் துன்பப் படுத்துகிறது. - ரமண மகர்ஷி.

Search This Blog

Friday, March 12, 2010

எதைப் பற்றியும் (அல்லது) இது மாதிரியும் தெரிகிறது. - 3.

எதைப் பற்றியும் (அல்லது) இது மாதிரியும் தெரிகிறது. - 3. பிரசுரம் : வார்த்தை ஜூன், 2008.

வ.ஸ்ரீநிவாசன்.

பொதுமைப் படுத்துதல் பெருந்தவறாகவே இருக்கிறது. இதிலும் இரண்டு வகை. ஒன்று: 'இந்த குழுவினன் இப்படித்தான் இருப்பான் ' என்னும் மனோபாவம் பொய்களில் சவாரி செய்து நரகத்துக்கு இட்டுச் செல்கிறது. எவ்வளவோ உதாரணங்களைச் சொல்லலாம். வெள்ளையரை எதிர்த்த வீரரும், அவர்களுக்கு ஆதரவாய் இருந்தவரும் ஒரே நாயக்கர் ஜாதியினரர்தான். கட்டபொம்மன், எட்டப்பன். இந்தியாவில் ரத்தக் களறியை ஏற்படுத்திய ஜெனரல் டயரும், இந்திய சுதந்திர இயக்கத்துக்கு அடிகோலிய அன்னி பெஸன்ட்டும் ஆங்கிலேயர்கள்தான். ஏசுநாதரும், கார்ல் மார்க்ஸ¤ம் யூதர்கள்தான். நீங்களும் உங்கள் அடுத்த வீட்டு அல்லது சீட்டுக்காரரும் ஒரே மொழியினர்தான். எப்பொதும் இயங்கிக் கொண்டே இருக்கிற மனித உயிர்களைப் பொதுமைப் படுத்தவே முடியாது.

இரண்டாவது: ஒருவர் ஒரு விஷயத்தில் ஓர் அடையாளத்தைக் காட்டினால் அவரது மொத்த சுபாவத்தையும் பற்றிய பொது அபிப்பிராயம். (உ-ம்) நாத்திகக் கொள்கைகளையுடைய கட்சியைச் சேர்ந்தவர் எப்பொதும் பகுத்தறிவாளராக இருப்பார் என்று நம்புவது; திருநீறோ, திருமண்ணோ, குல்லா-தாடியோ, சிலுவையோ, வேறு மதச் சின்னத்தையோ அணிந்த ஒருவர், மூட நம்பிக்கைகள் கொண்டவராக இருப்பார் என்று நினைப்பது.

மனிதன் ஒவ்வொரு கணம் ஒவ்வொன்றாக இருக்கிறான். குடும்பம், சமூகம் குறிப்பாக சுய பாதுகாப்பு கருதி பலரும் சட்ட திட்டங்களுக்கோ, தர்மத்துக்கோ உட்பட்டு வாழ்ந்தாலும், மனம் கொலைகளைப் புரிகிறது; வன்புணர்ச்சி செய்கிறது; குமுறுகிறது; விக்கி விக்கி அழுகிறது; பொறாமையால் புழுங்குகிறது. அன்பின் முன் கரைந்தும் போகிறது.

இத்தகைய எப்போதும் சலனித்திருக்கும் மனதை உடைய மனிதனை எப்படி 'இவன் இப்படித்தான்' என்று சொல்ல முடியும். மேலும் வெளியில் தெரிபவனும், உள்ளே இருப்பவனும் எப்போதும் ஒன்றா? இந்த ஜோக்கைப் படித்துவிட்டு சொல்லுங்கள்.

ருஷ்ய விண்வெளி வீரர், வரலாற்றிலேயே முதன்முறையாக, விண்வெளிப் பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பியதும் சோவியத் அதிபர் பிரெஷ்னெவ் அவருக்கு ஒரு விருந்தளிக்கிறார். விருந்து முடிந்து இருவரும் தனியாக இருக்கையில் அதிபர் கேட்கிறார்.
"அங்கு கடவுளைப் பார்த்தீர்களா?"

"ஆமாம். ஆமாம். பார்த்தேன்".

"நானும் அப்படித்தான் நினைத்தேன். யாரிடமும் வெளியில் சொல்லாதீர்கள். இது அரசு உத்தரவு" என்கிறார் அதிபர்.

பிறகு விண்வெளி வீரர் பல நாடுகளுக்கும் அழைக்கப் பெற்று கௌரவிக்கப் படுகிறார். ரோமில் போப்பாண்டவரைச் சந்திக்கிறார். இருவரும் தனியாய் இருக்கையில் போப் கேட்கிறார்.

"அங்கு கடவுளைப் பார்த்தீர்களா?" அதிபரின் உத்தரவு நினைவுக்கு வர விண்வெளி வீரர் சொல்கிறார்:

"இல்லை. இல்லை. பார்க்கவில்லை."

"நானும் அப்படித்தான் நினைத்தேன். யாரிடமும் வெளியில் சொல்லாதீர்கள்".


*******

"சுட்ட பழம் வேண்டுமா, சுடாத பழம் வேண்டுமா' என்று 'ஔவையார்' திரைப்படத்தில் முருகபெருமான் மாறு வேடத்தில் மரத்திலிருந்து ஔவையிடம் கேட்பதை முதன் முறை பார்த்த போது ஆச்சர்யமாய் இருந்தது. பிறகு எப்போதாவது நினைக்கையில் அது ஒரு 'ஜென்' கேள்வி மாதிரியும் தெரிந்தது." என் நண்பர் இப்படிக் கூறியதும் நான் இதையே அவரிடம் ஆறு மாதத்திற்கு முன்பு கூறியிருந்தது நினைவுக்கு வந்தது. 'பேச்சுக்கெல்லாம் காப்பி ரைட் வைத்துக் கொள்ள முடியுமா' என்று இன்னொரு நண்பர் மிகவும் சரியாகக் கேட்டார்.

வார்த்தை இணை ஆசிரியர் தான் தன் வலைப்பதிவில் எழுதுவது சில எழுத்தாளர்களால் எடுத்தாளப் பட்டு அச்சுருவில் வந்துள்ளது குறித்து ஆதங்கத்துடன் ஒருமுறை சொன்னார். எழுத்துலகில் புதுமைப் பித்தனின் 'கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்' எதன் காரணமாக வந்தது என்பதை க.நா.சு. சொல்லியிருக்கிறார். தமிழ் நாட்டின் இசை தேவர்கள், மன்னர்கள், ராஜாக்களிடமே கூட ஹிந்தி இசை அமைப்பாளர்கள் நௌஷாத், ஷங்கர்-ஜெய்கிஷன், எஸ்.டி.பர்மன் போன்றவர்களின் தாக்கம் தெரிகிறது. அந்தக் கால 'வேதா' சமீபத்திய "உள்ளத்தை அள்ளித் தா' சிற்பி" போன்றவர்கள் தாக்கம் என்றெல்லாம் குழம்பியதேயில்லை. அப்பட்டம்தான். கே.பாலச்சந்தரின் எந்த எந்த படங்கள் எந்த எந்த மொழியில் முதலில் வந்துள்ளன, கண்ணதாசனின் எந்த எந்த எந்த வரிகள் தமிழிலக்கியத்தில் எங்கெங்கு முன்பே வந்துள்ளன என்பது பற்றி பேசுவது சுவராஸ்யமாக இருக்கும்.

வார்த்தைகளை, வாக்கிய அமைப்புகளை, ட்யூன்களை மட்டுமின்றி பாணியை நகல் செய்வது எப்போதுமே உள்ளது. ஜே.கே., தி.ஜா., முதல் சுஜாதாவரை எழுத்தாளர்களுக்கும், ராஜரத்தினம் பிள்ளை, மாலி முதல் கண்டசாலா வரை இசை வித்வான்களுக்கும் எவ்வளவு வம்சாவளியினர். திரைப் படங்களில் எத்தனை நேரடியான, அரைகுறையான, மேலெழுந்தவாரியான, வக்கிரமான, வெளியில் சொல்லிக் கொள்கிற, பொருத்தமேயில்லாத (வடிவேலு அவர்களின் வசவுகளைப் பெற்ற 'உயிர்' என்ற திரைப் படத்தை 'ரே'யின் 'சாருலதா' என்று விளம்பரப் படுத்தி இருந்தார்கள்) கணக்கில் அடங்காத காப்பிகள்.

எழுபதுகளில் மாநிலக் கல்லூரியில் தமிழ்ப் பேச்சுப் போட்டிகள் மிக பிரபலம். அங்கு பேசிய ஒருவர், 'அரசியல் துறை, சினிமாத் துறை, இலக்கியத் துறை, மேடைப் பேச்சுத் துறை ஆகிய எல்லாத் துறைகளிலும் சிறப்புற்று விளங்குவதால்தான் அவர் பெயர் 'அண்ணாத் துரை'' என்று பேசி கைதட்டல் வாங்கினார். அதே கல்லூரியில் படித்த தி.மு.க. பிரமுகர் ஒருவர் ஒரு பெரிய பொதுக் கூட்டத்தில் இதையே பேசி அனைவரது பாராட்டுக்கும் ஆளானார். பிறகு அமைச்சரும் ஆனார். இப்போதுள்ள பொது இடப் பேச்சாளர்கள் (குறிப்பாக தொலைக் காட்சி, வானொலி) யாரும் 'ர' 'ற' வென்றில்லாமல், 'ழ', 'ய', 'ள', 'ல' வையெல்லாம் ஒன்றாக்கி விட்டார்கள்.


தாஸ்தயெவ்ஸ்கிக்கு சுருக்கெழுத்தாளராகப் போய் பிறகு அவரையே மணந்து கொண்ட அவரை விட இருபத்து ஐந்து வயது இளைய அன்னா ஸ்னிட்கின் 'கேம்ப்ளர்' நாவல் எழுதப் பட்ட வறுமையும், சூழ்ச்சியும், தீவிரமும், கலை உச்சமும் நிரம்பிய நாட்களை பற்றி எழுதியிருக்கிறார். அது 'ரீடர்ஸ் டைஜெஸ்ட்' டில் வந்தது. (சேலத்தில் அதை எங்கள் வங்கி வாடிக்கையாளர் ஒருவர் இரவல் வாங்கிக் கொண்டு போய்விட்டு திருப்பியே தரவில்லை. (1980) அவர் எழுத்தாளர் சுஜாதாவின் தமையனார். அவர் புத்தகம் பிரசாதம் - சுந்தர ராமசாமி எழுதியது - என்னிடம் உள்ளது) தாஸ்தயெவ்ஸ்கியின் வாழ்க்கையின் இந்தப் பகுதி மலையாளத்தில் 'ஒரு சங்கீர்த்தனம் போல' என்ற புத்தகமாக வந்து தமிழில் 'ஒரு சங்கீதம் போல' என்று மொழிபெயர்க்கப் பட்டுள்ளது. (சங்கீர்த்தனமும், சங்கீதமும் ஒன்றா?) ஜெயகாந்தனின் கதைகளின் தலைப்புகள், அவற்றில் வரும் சம்பவங்கள், பாத்திரங்கள் சர்வ சாதாரணமாக சினிமாக்களில் எடுத்தாளப் பட்டுள்ளன. நாஞ்சில் நாடனின் 'இடலக்குடி ராஜா'வாக விக்ரம் எத்தனை முறை நடிப்பார்?

தமிழிசை தமிழ் நாட்டில் பாடப்படவேண்டும் என்று பெரிதும் முயன்ற டி.கே.சிதம்பரநாத முதலியார்., கல்கி, ராஜாஜி முதலியவர்களின் பெயர்கள் வேறு சிலருக்கு இடம் கொடுத்து விட்டன. மது விலக்கு, தமிழகத்துடன் 'திருத்தணி' சேர்ந்தது, மதறாஸிலிருந்து ஆந்திரா பிரிந்த போது சென்னை மதறாஸ¤க்கு கிடைத்தது, கதர், தீண்டாமை ஒழிப்பு, பெண்களின் முன்னேற்றம் ஆகிய எல்லாவற்றுக்கும் உழைத்தவர்கள் / முன்னோடிகள் யார் யார் என்பது அரசியல், ஜாதி காழ்ப்புகள் காரணமாக கடத்தி மாற்றப்படும் வரலாற்றுத் திரிபுகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. எல்லாக் காலங்களிலும் இது நடந்திருக்கலாம். இராவணன் வென்றிருந்தால் அல்லது அவன் எச்சங்கள் அதிகாரம் பெற்றிருந்தால் 'இராவணாயணம்' எழுதப் பெற்றிருக்கும். இராவண சேதுவை வைத்து அரசியல் நிகழும்.

ஒருவர் செய்ததை இன்னொருவர் நகல் செய்வதும், அதன் பலன்களை பெறுவதும் சர்வ சாதாரணமாக தெரிந்தும் தெரியாமலும் நடை பெறுகின்றன. அறிவியல் கண்டுபிடிப்புகளிலும், இலக்கிய உலகிலும் தீராத சர்ச்சைகள் காலம் காலமாக உண்டு. யார் முதலில் செய்தார் என்பதை யார் சொல்ல முடியும். 'முதலில் என்று ஒன்று உள்ளதா?' 'There is not a singla thought, That has not passed through the Roman hat' என்று திருலோக சீதாராம் சொல்வாராம். எல்லாம் சுட்ட பழம்தான்.

*********

ஒரு அறையின் மதிப்பு மூன்று கோடி ரூபாய். அறை என்றால் 'ரூம்' அல்ல. பளார்! ஹர்பஜன் சிங் ஸ்ரீசாந்துக்குக் கொடுத்தது. ஹர்பஜன் முன்பே பல சிக்கல்களில் மாட்டிக் கொண்டவர். சமீப கால ஆஸ்த்திரேலிய ஆன்ட்ரூ சிம்மன்ட்ஸ் விவகாரம் இரு நாட்டு வாரியங்களின் பொருளாதார சார்புகளால் ஒருவாறாக இப்பொதுதான் கிட்டத்தட்ட சுமுகமாக முடிந்தது. ஸ்ரீசாந்த்துடனான பிரச்னையில் பதினோரு போட்டிகளில் விளையாடத் தடை என்ற தண்டனையால் ஹர்பஜனுக்கு ரூ.மூன்று கோடி நஷ்டம். ஹர்பஜன் ஆ·ப் ஸ்பின் போடுபவர். அவரை விட சிறந்த ஆ·ப் ஸ்பின் போடுபவர்களை கிரிக்கட் கண்டிருக்கிறது. மேற்கிந்தியத் தீவுகளின் லான்ஸ் கிப்ஸ், இந்தியாவிற்கு ஆடிய கர்நாடகாவின் பிரஸன்னா, தமிழரான வெங்கட்ராகவன் இன்னொரு தமிழரான (இலங்கை) உலக சாதனை புரிந்துள்ள முரளீதரன் எல்லோருமே கண்யமான தலை சிறந்த ஆ·ப் ஸ்பின்னர்கள். ஐம்பது அறுபதுகளில் தமிழ் நாட்டின் ஏ.ஜி. கிருபால் சிங் அணியின் தலைவர் மற்றும் இந்தியாவின் முக்கியமான ஆ·ப் ஸ்பின்னர். கிரிக்கட் ரசிகர்கள் மத்தியில் அவர்தான் எம்.ஜி.ஆர். தான் ஆடிய முதல் டெஸ்ட் போட்டியில் சதம் அடித்தவர். தலைப்பாகையும் தாடியும் இல்லாத சீக்கியர். அவர் சகோதரர் மில்கா சிங்கும் டெஸ்ட் வீரர். இருவரும், அவர்கள் தந்தை ஏ.ஜி.ராம்சிங்கும், சகோதரர் சத்வேந்தர் சிங்கும் மதறாஸில் ரசிகர்கள் மத்தியில் புகழ் பெற்ற கிரிக்கட் வீரர்கள். கிருபால் ஒருமுறை "ஷாப் லி·ப்டிங்" கில் மாட்டிக் கொண்டாரேயன்றி குடும்பமே தமிழர்களால் மைதானத்தில் அவர்கள் நன்னடத்தையால் புகழப் பெற்ற குடும்பம்.

கிரிக்கட்டில் அடிதடியும் நடக்காத விஷயம் அல்ல. சமீபத்தில் பாகிஸ்தானின் ஷோயப் அக்தர் அவர் சகாவான அஸீ·ப்பை மட்டையால் அடித்தார். பல வருடங்கள் முன்பு ஆஸ்திரேலியாவின் லில்லி கையால் அடித்ததும் பாகிஸ்தானின் ஜேவெட் மியண்டாட் அதற்கு மட்டையால் திருப்பிக் கொடுத்ததும் நடந்துள்ளன. 1999 உலகக் கோப்பையில் ஒரு போட்டியின் போது இந்திய ரசிகர் ஒருவர் டிராவிடை அடித்தபோது அவர் 'தேமே' என்று இருந்தார். பக்கத்தில் இருந்த வெங்கடேஷ் பிரஸாத் நடுவில் போய் தடுத்தார்.

அடிப்பது என்பது வேறு வேறு விதமான விளைவுகளை ஏற்படுத்தி விடுகின்றது. நான் கொல்கொத்தாவிலிருந்து ரயிலில் வந்து கொண்டிருந்த போது வண்டி கிளம்பி சில மணிநேரங்களுக்குப் பின் எதிர் எதிராக இருந்த தனித் தனி இருக்கைகளில் பயணம் செய்த தம்பதிகளில் கணவன் பளாரென்று மனைவியின் கன்னத்தில் அறைந்து விட்டார். அவர்கள் இருவருமே முப்பது வயதுக்குள்ளானவர்கள்தான். கம்ப்பார்ட்மென்டில் இருந்த அனைவரும் 'கப்சிப்' என்று ஆகி விட்டார்கள். இன்னும் இருபது மணி நேர பயணம் பாக்கி இருந்தது. சில நிமிடங்களில் சகஜ நிலை திரும்பி விட்டது. காரணம் அந்த மனைவி. ஒன்றுமே நடக்காதது போல் அவர் இயல்பாக இருந்து விட்டார். கிட்டத் தட்ட அனைத்துப் பெண்களுமே இத்தகைய ஆபாச, அராஜக, அநியாய அவமானங்களை வாழ்வில் சந்தித்தே விடுகிறார்கள். இது மாதிரியே ஆண்கள் நினைத்துப் பார்க்கவும் முடியாத விதத்தில் எதிர் கொள்ளவும் செய்கிறார்கள். எல்லாப் பெண்களுமே தாழ்த்தப் பட்டவர்கள்தான்.

பல வருடங்களாக எங்கள் வீட்டில் வேலை செய்த பெண்மணி அருகிலிருந்த இரண்டு வீடுகளிலும் வேலை செய்து வந்தார். நடு வீட்டு அம்மாவோடு கொஞ்சம் அதிக சகஜமாகவே பழகுவார். 'நீ, வா, போ' என்று ஒருமையில்தான் பேச்செல்லாம். அந்தம்மாவை பெயர் சொல்லித்தான் கூப்பிடுவார். பாக்கி வீடுகளிலும் உரிமையோடு, கொஞசம் அதிகாரமாகத்தான் பழகுவார். ஒரு நாள் என்னமோ கேட்டதற்கு நடு வீட்டம்மா அந்த வேலைக்காரப் பெண்மணியை பளாரென்று கன்னத்தில் அறைந்து விட்டார். மூன்று வீடுகளில் இருந்த அனைவருக்கும் சப்த நாடியும் ஒடுங்கி விட்டன. அந்தம்மாவும் பயந்து போய் விட்டார். பயத்தில் தன் கன்னத்தைக் காட்டி 'இந்தா அடி, அடி' என்றார். வேலைக்கார பெண்மணி ஒன்றும் சொல்லாமல் வேலைகளை முடித்துக் கொண்டு போய் விட்டார். மறுநாளில் இருந்து ஒரே ஒரு மாற்றம் இருந்தது. அந்தம்மாவை வழக்கம் போல் பெயர் சொல்லி ஒருமையில் அழைத்தாலும் பெயரோடு கூட ஒரு 'அம்மா'வைச் சேர்த்துக் கொண்டு அழைத்தார். சில நாட்களுக்குப் பின் அவர்கள் இருவருமே அந்த சம்பவத்தைச் சொல்லி சிரிக்க ஆரம்பித்து விட்டனர். அதற்கு அடுத்த நாளிலிருந்து அனைவரும்.


********

எனக்கு கம்யூனிஸ்ட்களை எப்போதுமே ரொம்பப் பிடிக்கும். வாரிசு அரசியலுக்கு மத்தியில் ஜனநாயக முறையில் உட்கட்சி தேர்தல் நடத்துபவர்கள். ஐந்து கோடி, பத்து கோடி, இருபது கோடி, ஐம்பது கோடி என்று சொத்து விவரம் காட்டும் சாமான்ய எம்.பி. வேட்பாளர்களுக்கு இடையில் இருபத்து மூன்றாயிரம், ஏழாயிரம் என்று சொத்து வைத்திருப்பவர்கள். பிறந்த நாள் பரிசுகளை கோடி ரூபாயாக இருந்தாலும் அதைக் கட்சிக்கு கொடுப்பவர்கள். இந்த எல்லா நற்பண்புகளுக்கும் மேலாக அல்லது எதிராக அனைத்து அராஜகங்களையும் செய்பவர்களுக்கு உறுதுணையாக இருப்பவர்கள். தேர்தலில் பங்கேற்கும் அதிசயப் பிறவிகள். 'தமிழன்' சான்றிதழ் வழங்கும் பெரியார் பல்கலை கழகம், 'இந்தியர்' பட்டம் தரும் ஆர்.எஸ்.எஸ். சர்வகலாசாலை மாதிரி 'முற்போக்கு' 'மத சார்பின்மை' என்கிற 'ட்யூயல் டிக்ரி' வழங்கும் யுனிவர்ஸிடி இவர்கள். 'இருபது வயதில் ஒருவன் கம்யூனிஸ்ட் இல்லை என்றால் அவனுக்கு இதயம் இல்லை. நாற்பது வயதிலும் ஒருவன் கம்யூனிஸ்ட்டாக இருந்தால் அவனுக்கு மூளை இல்லை' என்றார் மினு மஸானி. இந்த இருபது, நாற்பது பிரச்னைகள் இல்லாத இயக்கம் இந்திய கம்யூனிஸ்ட் இயக்கம். வலது, இடது இரண்டிலும் எண்பதுக்குக் குறைந்த பெருந்தலைவர்கள் இல்லை. மேலும் பல விசித்திரங்களையும் பார்க்கலாம். ஹிரேன் முகெர்ஜீ என்கிற வங்காளத்தின் மூத்த கம்யூனிஸ்ட், தினமும் காலையில் சம்பிரதயமான புனஸ்காரங்களை செய்தவாராம். 'நான் ஒரு ஹிந்து கம்யூனிஸ்ட்' என்பாராம். ஹர்கிஷண் சிங் சுர்ஜீத் ஆசாரமான சீக்கிய தோற்றத்திலேயே இருப்பவர். நம்பூதிரிபாடு விடியற்காலையில் பத்மனாபனை தரிசிப்பார் என்று கரிச்சான் குஞ்சு எழுதி உள்ளார். (ராஜாவுக்கும் முன்னால் தரிசிக்கும் 'புரட்சி'.)


பிரெஷ்னேவ் பொதுவுடமைக் கட்சியின் பொதுச் செயலாளராகவும், சோவியத் யூனியனின் தலைவராகவும் அதிகாரத்தின் உச்சத்தில் இருக்கையில் அவர் தாயார் இரண்டு வாரத்திற்கு ஒரு முறை ஊரிலிருந்து வந்து மகனைப் பார்ப்பாராம். ஒரு முறை அவருக்குப் பிடித்த தின் பண்டங்களைக் கொண்டு வந்து கொடுத்து விட்டு தான் அவரைப் பற்றி மிகவும் கவலையுற்றிருப்பதாக கூறினார். பிரெஷ்னெவ் அவரை அமைதிப் படுத்தி விட்டு "நான் பத்திரமாக, நலமாக இருக்கிறேன். எந்தக் கவலையும் வேண்டாம் அம்மா" என்றார். அவரது தாயார் விடாமல் "இல்லை மகனே, உனக்குத் தெரியாது. நான் உன்னைப் பற்றியும் நாட்டைப் பற்றியும் மிகவும் கவலையுற்று இருக்கிறேன்."என்று சொல்லி விட்டுச் சென்றார். இரண்டு வாரம் கழித்து வருகையில் மகனுக்காக குளிருக்கு இதமான கையுறைகளையும், ம·ப்ளரையும் கொண்டு வந்தார். மகன் தான் அற்புதமாக இருப்பதாகவும் எல்லாம் பிரமாதமாக இருப்பதாகவும் கூறினார். "இல்லை இல்லை அன்பு மகனே, எல்லாம் சரியாக இருப்பதாக சொல்ல முடியாது. எனக்கு கவலையாக இருக்கிறது. என்ன நடக்குமென்று யாரறிவார்." என்றார். பிரெஷ்னெவ், "கவலையே வேண்டாம் அம்மா, எல்லாம் என் கட்டுப்பாட்டில் இருக்கிறது. எல்லோரும் நான் சொல்வதைத்தான் செய்கிறார்கள். என்னைப் பாதுகாக்க காவலர்கள் இருக்கிறார்கள்" என்றார். "இல்லை இல்லை " என்று முனகியபடியே சென்ற தாயார் இரண்டுவாரம் கழித்து வருகையில், வீட்டில் செய்த வோட்காவைக் கொண்டு வந்தார். சிறிது நேரம் கழித்து தன் கவலையை அம்மா சொன்னபோது, பிரெஷ்னெவ், "எந்த ஒரு மனிதரும் விரும்பக் கூடிய எல்லாம் என்னிடம் இருக்கிறது. மேற்கு நாடுகளின் மிக விலை உயர்ந்த கார்கள் என்னிடம் இருக்கின்றன. நான் உலகின் விலை உயர்ந்த உடைகளையே அணிகிறேன். மிகச் சிறந்த உணவையே உண்கிறேன். இந்த நாட்டிலேயே, ஏன் இந்த உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்த மனிதன் நான்தான். உன் கவலைதான் என்ன?" என்று கேட்டார். "மகனே, உனக்குத் தெரியாதா? கம்யூனிஸ்ட்டுகள் ஆட்சியை எடுத்துக் கொண்டு விட்டால்...?" என்றார் தாயார் கவலையுடன்.

இரண்டு 'பிரெஷ்னெவ்' ஜோக்குகளையும் சொன்னவர் : ஜே. கிருஷ்ணமுர்த்தி.

***********

No comments: