FUTURE IS NOW - J Krishnamurti.

பிறப்பு, இறப்பு என்பது உண்மையே இல்லை. அத்தகைய பொய்யான தோற்றத்தை நமது மனமே உருவாக்கிக் கொள்கிறது. மனம் தனக்கென்று ஒரு உடலை உருவாக்கிக் கொள்கிறது. அதைக் கனவு மழையில் நனைத்துத் துன்பப் படுத்துகிறது. - ரமண மகர்ஷி.

Search This Blog

Friday, March 12, 2010

எதைப் பற்றியும் (அல்லது) இது மாதிரியும் தெரிகிறது - 4.

எதைப் பற்றியும் (அல்லது) இது மாதிரியும் தெரிகிறது - 4. பிரசுரம் : வார்த்தை ஜூலை, 2008.

வ.ஸ்ரீநிவாசன்.

1996ல் நான் ஆரணியில் பணி புரிந்து கொண்டிருக்கும்போது அவ்வூரில் 'கேன்சர் ட்ரீட்மென்ட் சென்டர்' துவங்கப் பெற்றது. ப்ரொஃபஸர் டாக்டர் சேகர் (தமிழ்நாடு ஹாஸ்பிடல்) பேசுகையில் "நம் உடலில் இருக்கும் எண்ணற்ற செல்கள் ஒவ்வொன்றும் இரண்டு வேலைகளைச் செய்ய வேண்டும். ஒன்று அந்தந்த பாகத்துக்கான வேலை. இரண்டாவது இனப் பெருக்கம். எந்த செல்கள் இரண்டாவது வேலையை மட்டும் அளவுக்கு அதிகமாகச் செய்கின்றனவோ அங்கு கேன்சர் வருகிறது" என்று எளிமையாக விளக்கினார்.

ஜீவராசிகள் அனைத்தும் அவ்வாறேதான் செய்கின்றன. அதனதன் பாகத்தைப் பூர்த்தி செய்கின்றன. இன விருத்தி செய்கின்றன.

ஆக இந்த உலகின், பிரபஞ்சத்தின் செல்களாக அனைத்து உயிர்களும் என்று தோன்றியது.

இ.னொரு நோக்கில் இம்மனித உடல் ஒர் உலகம், ஒரு பிரபஞ்சம்.

டாக்டர் ஸாலமன் விக்டர் ஹிந்து ஃபோலியோ நவ.'96 இதழில் 'தி பீட் ஆஃப் லைஃப்' கட்டுரையில் 'it is awesome to realise that the heart beat is governed by the same forces that govern the universe - the influx and efflux of hadrons and leptons which are sub-atomic particles' என்கிறார். எவ்வளவு ஆச்சர்யமான அடிப்படையான விஷயம். நம் இதயம் சுருங்கி விரிவதைப் போன்றே பிரபஞ்சமும்.

ஒரு மனித உடலும் இன்னொரு மனித உடலும் சேர்ந்து பிறக்கும் புது மனித உயிர் எவ்வளவு சிறிய உயிரணுக்களிலிருந்து உருவெடுக்கிறது. வளர்ந்த இறுதி மனித உடல் அந்த உயிரணுக்களை விட எத்தனை மடங்கு பெரியது.

இந்த ஜீவராசிகளை விட இந்தப் பிரபஞ்சம் அதே அளவு பெரியதாக இருக்கலாம்.

நம் உடலில் உள்ள அனந்த கோடி விஷயங்கள், செல்கள், வண்ணங்கள், உரோமங்கள் இத்யாதி அத்தனை சிறிய உயிரணுவில் எவ்வளவு சீராக ப்ரொக்ராம் செய்யப் பட்டு புதைக்கப் பட்டு இருக்கின்றன.

எல்லாம் ஒன்றுதான் போலும். இந்த மனித உடல்தான் அந்த சின்னஞ்சிறிய உயிரணு. அதுவே பிரபஞ்சம். இந்த இதயமும், பிரபஞ்சமும் இயங்குவது ஒரே சக்திகளால்தான்.

*****

'கற்றல்' என்ற சொல் 'learning' என்கிற ஆங்கில சொல் தருகின்ற பொருளிலேயே உள்ளது. இதன் வேர்ச் சொல்லாகிய 'கல்' லிலிருந்தே 'கல்வி' வருகிறது. கல்வி என்பது கற்றல்தான். மனப் பாடம் செய்வதில்லை. கல்விக்கான ஆங்கிலச் சொல்லான 'eucation' ' educare' என்கிற இலத்தீன் வேர்ச்சொல்லிலிருந்து வந்தது என்பார் ஜே. க்ருஷ்ணமூர்த்தி. Educare என்றால் 'to draw from within ' என்று பொருள். வெளியிலிருந்து ரொப்புவதில்லை. அதேபோல் 'school' என்கிற சொல் 'leisure' ரைக் குறிக்கிறது. ரஃபேலின் 'ஸ்கூல் ஆஃப் ஏதன்ஸ்' ஓவியத்தில் படுத்துக் கொண்டும், சாய்ந்து கொண்டும் ஓய்வாக சுகமாக இருக்கும் மாணவர்களைக் காணலாம். நமது 'பள்ளி' எனும் சொல் படுப்பதையும் குறிக்கிறது அல்லவா? இப்போது நமது பள்ளிகளில் leisure க்கு இடம் உண்டா? அதைப் பற்றிப் பேசினால் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளி விட மாட்டார்களா?

'அறிவு' எனும் சொல் 'knowledge', 'intelligence' என்கிற இரண்டு பொருளிலும் உபயோகப் படுத்தப் படுகிறது. கூர்ந்து கவனித்தால் knowledge என்பது 'தகவல் அறிவு' மட்டுமே என்பது தெரியும். அறிவு (intelligence) 'அறிதலி'ல் இருந்து வருவது. கற்றல் அறிதல் சார்ந்தது.

தகவல் அறிவு பௌதிக விஷயங்களில் பயன் மிக்கது. ஆனால் உளவியலில் பிரச்னை செய்வது. பூனை பௌதிக அறிவு. பூனை குறுக்கே போனால் அபசகுனம் என்பது உளவியல் சார்ந்தது.

தகவல் அறிவு பூரணமாகும் வாய்ப்பு இல்லாதது. குறை பட்டது. அதனால்தான் தட்டையான உலகம் கலீலியோவுக்குப் பின் உருண்டையாகிறது. தீ விபத்தின் போது கம்பளியின் இடத்தை தண்ணீர் பிடித்துக் கொள்கிறது. நேர்க் கோட்டில் சென்று கொண்டிருந்த ஒளி அலை அலையாகவும் போக ஆரம்பிக்கிறது. ஹார்மோன் மாற்று சிகிச்சையும், கண்களுக்கு ரேசர் சிகிச்சையும் சரியா தவறா என்று குழம்புகிறது.

ஆதாம் ஆப்பிள் பறித்தது 'tree of knowledge' ல் இருந்துதான்.

இஷோபநிஷத்: "அறியாமைப் பாதையைப் பின்பற்றுகிறவர்கள் குருடாக்கும் இருளுக்குள் நுழைகிறார்கள்; அதனினும் மகா இருளுக்குள் நுழைகிறார்கள் அறிவை (knowledge) வாகனமாகக் கொள்கிறவர்கள்"

வேதம் என்பது அறிவாகையில் வேதாந்தம் அறிவின் முடிவாகிறது. அறிவின் பாரம் முற்றாக முடிவுறுவது வேதாந்தம் என இருக்கலாம்.

பகுத்தறிவு பற்றி நமக்குத் தெரியும். பகா அறிவு பற்றி திருலோக சீதாராம் பேசுகிறார்.

எது எப்படியோ கல்வியும் அறிவும் மிகச் சரியான சொற்கள். மிகத் தவறான புரிதலில் நடைமுறை படுத்தப் படுபவையும்.

'புரிதல்' என்பதே தமிழின் மேன்மையை விளக்கும் இன்னொரு சொல். 'புரிந்து கொள்ளுதல்' மற்றும் 'செய்தல்' என்னும் இரண்டு பொருளிலும் வருவது. புரிந்து கொண்ட விஷயத்தைச் செய்யாவிட்டால் புரிந்து கொள்வதில் என்ன பயன் உள்ளது?

'உள்ளது' என்கிற வார்த்தையும்தான். 'இருக்கிறது' எனும் சொல் 'இருந்தது' 'இருக்கப் போவது' என்று ஆகும். ஆனால் உள்ளது என்ற சொல் நிகழ் காலத்தில் மட்டுமே வரும். அது எப்போதும் இப்போது மட்டுமே. உள், உள்ள, ஊள்ளது, உண்மை. உண்மையை உணர்வது உள்ளம். ஆயினும் உள்ளம் பல இடங்களில் மனம் என்ற பொருளில் வருகிறது. மனம் 'இன்மை'யின் பட்டறை. 'அசதோமா சத் கமயா' என்று ஜக்கி வாசுதேவ் முதலிய யோகப் பயிற்சியாளர்கள் சொல்லித் தருகிறார்கள். 'இன்மையிலிருந்து உண்மைக்கு இட்டுச் செல்க' என்பது சுருக்கமாக அருமையாக தமிழில் அதன் பொருள்.

'பொருள்' என்பதே அற்புதமான சொல். 'thing', 'meaning' இரண்டிற்குமாக இருக்கும் ஒரே சொல். 'நாற்காலி' என்ற சொல்லின் பொருள் நாற்காலி என்கிற பொருளே. 'எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே' (தொல்காப்பியம்).

தமிழில் எண்களும் சுலபமாகவே குறிக்கப் படுகின்றன. பத்து வரை தெரிந்தால் போதும். எண்பத்து ஒன்பது வரை சொல்லி விடலாம். (தொண்ணூறு எப்படி வந்தது என்று தமிழறிஞர்கள் சொல்லி இருப்பார்கள்) லெவன், ட்வெல்வ், க்யாராஹ், பாராஹ் போன்ற புதுச் சொற்கள் இல்லை. பதினொன்று, பனிரெண்டு என்று மட மடவென்று வந்துவிடும். தமிழ் போன்றே சம்ஸ்க்ருதத்திலும் ஏகமும், துவியும் தசத்தோடு சேர்ந்து ஏகாதசி, துவாதசி ஆகும் என்று என் நண்பர்கள் சொல்லி அறிந்தேன். புதுச் சொற்கள் கிடையா.

முழுக்க முழுக்க விடுதலை பற்றிய விஷயமே 'விடுதலை'.

'எனக்கு உடம்பு சரியில்லை என்பது, நான் வேறு உடம்பு வேறு என்று அறிந்த மொழியினரின் பிரயோகம். என்ன ஒரு வேதாந்தமான பாஷை' என்று வியக்கிறார் ஜெயகாந்தன்.

'மந்திரம் போல் வேண்டுமடா சொல்லின்பம்'. 'நெருப்பென்றால் வாய் வெந்து விட வேண்டும்' என்று லா.ச.ரா (என்னை கேலி செய்வதற்கும் இதை கோட் செய்கிறார்கள் என்று அவர் சொன்ன போதிலும்) கூறுவதும் இதைத்தானே.

'சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே' - தான் தமிழன் என்பதால் கூறிய வார்த்தைகளல்ல. பன்மொழி அறிவும், கவி உளமும் வாய்த்த மகாகவியின் கூற்று.

'ஆரம்பத்தில் அந்த சொல் இருந்தது' (ஜான் 1:1) என்று விவிலியம் கூறுகிறது. 'அது இப்போது எங்கே' என்று தார்க்காவ்ஸ்கி 'சாக்ரிஃபைஸ்'ஸில் குரல் போன பாலகன் எண்ணுவதாகக் கேட்டு படத்தை முடிக்கிறான்.

*******

ஒரு செய்தித் தாளில், சில குழந்தைகள் நடமாடிக் கொண்டிருக்கும் குன்று ஒன்றின் புகைப்படத்தைப் பார்த்தேன். அது குப்பைகளால் ஆன குன்று. தினம் தினம் வளர்வது. அந்தக் குழந்தைகள் காலையிலிருந்து பொழுது சாயும் வரை அதிலேயே இருப்பர். அந்தக் குப்பைகளைக் கிளறி சில குறிப்பிட்ட பொருட்களை பொறுக்கி எடுத்து செல்வர். அப்பொருட்களுக்கான விலை அக்குழந்தைகளின் குடும்பத்தின் வருமானம். தினம் தினம், வாரக் கணக்காக, மாதக் கணக்காக, வருடக் கணக்காக குழந்தைகள் இதைச் செய்து வருகிறார்கள். நம் வீட்டில் உள்ள குப்பை போடும் பையையோ, தொட்டியையோ நாம் கூர்ந்து பார்த்திருக்கிறோமா? தெருவில் உள்ள குப்பைத் தொட்டியை (அப்படி ஒன்று இருந்தால்) ? குப்பை லாரியை? அது தெருவில் நுழைகையிலேயே (அப்படி நுழைந்தால்) அதன் நாற்றம் நமக்குத் தெரிந்து விடுகிறதில்லையா? அது போன்ற பல லாரிகள் கொண்டு வந்து குவித்த குப்பை மலையில் குழந்தைகள். அங்கு ஆளும் கட்சி, எதிர்க் கட்சி, கூட்டணிக் கட்சி பிரமுகர்கள் வீட்டுக் குழந்தைகள் இரா. ஏன் என் வீட்டுக் குழந்தைகளும் உங்கள் வீட்டுக் குழந்தைகளுமே கூடத்தான். அந்தக் குழந்தைகளில் ஒரு குழந்தையின் பெயர் கண்ணகி. ஆமாம் கண்ணகி.

சரி கண்ணகியும் இதர குப்பை மேட்டுக் குழந்தைகளும் ஏன் பள்ளிக்குச் செல்லவில்லை? க்ரீமி லேயர்?

*********

சமீபத்தில் தொலைக் காட்சியில் பி. ஆர்.பந்துலு அவர்களின் 'கர்ணன்' திரைப்படத்தின் கடைசி காட்சிகள் சிலவற்றைப் பார்த்தேன். குந்தி தேவி (எம்.வி. ராஜம்மா), க்ருஷ்ணர் (என்.டி.ராமராவ்) இருவரின் அற்புதமான நடிப்பு, சீர்காழி அவர்களின் ஸ்பஷ்டமான உச்சரிப்பில் பாடல்கள், ஸ்லோகங்கள், அருமையான எடிடிங் (கர்ணன் மேல் அம்பு பாய்ந்ததும் சூரிய பகவான் அதிர்ச்சி, கர்ணன் இறக்கையில் தர்ம தேவதை ' மகனே' என்று கதறுவது) என பிரமாதமாக இருந்தது. நான் முன்பு எப்போதோ பார்த்தபோதே உருகிய அந்த வசனமும் இறுதியில் வந்தது. "ஐயோ ! கர்ணனைக் கொன்று விட்டேனே, கொன்று விட்டேனே" என்று குமுறும் அருச்சுனனை அலட்சியமாகப் பார்த்து க்ருஷ்ணர் கூறுகிறார்: "நீயெங்கே கொன்றாய்? உனக்கு முன்பே ஆறு பேர் கர்ணனைக் கொன்று விட்டார்கள். கவச குண்டலங்களைக் கவர்ந்து சென்ற இந்திரன்; ப்ரம்மாஸ்திரத்தை செயலிழக்கச் செய்த பரசுராமர்; 'போர்க் களத்தில் தேர் குழியில் இறங்கும்' என்று சாபமிட்ட அந்தணர்; நாகாஸ்திரத்தை ஒரு முறைதான் பிரயோகிக்க வேண்டும் என்று வரம் வாங்கிய குந்தி; போர்க்களத்தில் பாதியில் தேரின் சாரத்யத்தை விட்டுச் சென்ற சல்லியன்; காலால் தேரை அழுத்தி நாகாஸ்திரம் அருச்சுனனைக் கொல்லாமல் காப்பாற்றிய கண்ணன் என ஆறு பேர் அவனை ஏற்கனவே கொன்ற பிறகு, செத்த பாம்பை அடித்துவிட்டு நான் கொன்றேன், நான் கொன்றேன் என்கிறாயே". எப்பேற்பட்ட வசனம், காட்சி.

ஆனால் படத்தில் கர்ணனைக் கொன்றது அந்த ஆறு பேரோ, அருச்சுனனோ அல்ல. கட்டபொம்மன்.

*************

No comments: