FUTURE IS NOW - J Krishnamurti.

பிறப்பு, இறப்பு என்பது உண்மையே இல்லை. அத்தகைய பொய்யான தோற்றத்தை நமது மனமே உருவாக்கிக் கொள்கிறது. மனம் தனக்கென்று ஒரு உடலை உருவாக்கிக் கொள்கிறது. அதைக் கனவு மழையில் நனைத்துத் துன்பப் படுத்துகிறது. - ரமண மகர்ஷி.

Search This Blog

Friday, September 4, 2015

அஃகம் சுருக்கேல் – நாஞ்சில் நாடன் கட்டுரைத் தொகுப்பு – ஒரு மெச்சல்

அஃகம் சுருக்கேல் – நாஞ்சில் நாடன் கட்டுரைத் தொகுப்பு – ஒரு மெச்சல்

 | சொல்வனம் இதழ் 119 | 29-12-2014|
ஆள்வது என்றால் முழுக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது. துன்புறுத்துவது அல்ல, பரிபாலனம் செய்வது. மேன்மையுறக் கலந்துறவாடுவது.போற்றுவது.
ஒருமுறை நாஞ்சில் நாடன் அவர்களிடம், “‘நமஹ’ என்கிற சம்ஸ்க்ருத சொல்லின் பொருள் எனக்குத் தெரியாது; ஆனால் அதற்குப் பதிலாக தமிழ் வழிபாட்டுத் துதிகளில் ‘போற்றி’ என்று இருப்பது தெரியும். தமிழன் காலங்காலமாகப் போற்றி போற்றி என்று யாரையாவது முகஸ்துதி செய்து கொண்டே இருப்பவன் போலும்” என்று சொன்னேன். உடனே அவர் ‘போற்றி’ என்பது புகழ்வது மட்டுமல்ல; அதற்கு இன்னும் பல ஆழமான பொருள்கள் உண்டு என்று விளக்கினார். போற்றுவது என்பது அக்கறையோடு பேணுவதும் கூட. மதிப்பு தருவது மட்டுமின்றி அன்பு செலுத்துவதும் கூட என்றெல்லாம் பேசினோம். அந்த விதத்தில் ஆள்வது என்பது இவையனைத்துமானது.
ஆள்பவன் என்பவன் இப்படி இருந்தால் ‘ஆபயன் குன்றாது; அறு தொழிலோர் நூல் மறவார்’ குடியாள்பவன் இப்படி என்றால் எழுத்தாள்பவன் எப்படி இருக்க வேண்டும்? மொழியின் மீது, சொல்லும் பொருளின் மீது முழுக்கட்டுப்பாடும், மோகமும், போற்றுதலும், நுண்ணறிவும், புலனுணர்வும், மொழியின் பரப்பையும், வீச்சையும் துல்லியமாய் கணிக்கும் திறனும் உடையவனாக இருக்க வேண்டும். மொழியை ஆள வேண்டும். போற்றிப் பேண வேண்டும். அவன்தான் எழுத்தாளன். இது எம்மொழிக்கும் பொருந்தும். பாக்கிப் பேர் ‘எழுத்துபயோகிகள்’ மட்டும்தான். தமிழில் அரிதாகக் கிடைக்கிற எழுத்தாளர்களில் நாஞ்சில் நாடனும் ஒருவர்.
இத்தகைய எழுத்தாளர்களிலும் வாழ்நாள் சுருக்கத்தாலும், வாழ்வின் நெருக்கத்தாலும், மனப் பாங்கினாலும் தேர்ந்தோ, எதேச்சையாகவோ எழுத்தின் பல்வேறு துறைகளிலும் கவனத்தைச் செலுத்தாதவர் அல்லது செலுத்துபவர் என்று இரு பெரும் பிரிவுகள் உண்டு. புதுமைப் பித்தனும், மௌனியும் நாவல் எழுதியதில்லை. ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி முதலியவர்கள் போல் நாஞ்சில் நாடனும் சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை போன்ற பல பிரிவுகளிலும் தடம்பதித்தவர். தடம் பதித்தவர் என்றால் ஏனோ தானோ என்று அல்ல. முழு வீச்சுடனும் ஆழமாக. இவை தவிர திரைக்கதை, மேடைப் பேச்சு, உரையாடல், நேர்காணல் என்னும் பல துறைகளிலும் கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக இலக்கியப் பணி புரிந்து வருபவர்.
இப்போது எழுத்துகளை புனைவு, அ-புனைவு என்று பிரிக்கும் வழக்கம் வந்துள்ளது. முன்பெல்லாம் கதை, கவிதை மற்றும் கட்டுரை என்று சொல்வதுதான் வழக்கம். இந்த புனைவு மற்றும் அபுனைவு ஆங்கில Fiction, non-fiction ஆகிய இரண்டின் தமிழ்ப்படுத்துதல். புனைவு. இதில் எத்தனை அபுனைவு? இந்த அபுனைவில் எவ்வளவு புனைவு? உலக இலக்கியத்தில் இது போன்ற கறாரான, மூச்சு முட்டும் கட்டுப்பாடுகள் எப்போதோ தளர்ந்து விட்டன. ‘Fiction, nonfiction – the two are bleeding into each other all the time.’ என்கிறார் ஜெஃப் டையர். இதை தமிழில் செய்தவர்களில் நாஞ்சில் நாடன் முக்கியமானவர். இவரது கதைகளில் கட்டுரைத் தன்மை திடீரென்று கதையாகும் மாயம் நிகழும். உதாரணத்திற்கு இரண்டு: ‘வனம்’ என்கிற சிறுகதை, மற்றும் சில ஆண்டுகளுக்கு முன் ஆனந்த விகடனில் வெளியான ‘பெருந்தவம்’ என்கிற கதை. அதே போல் இவரது கட்டுரைகளில் சிறுகதைகளின் சுவை இருக்கும்.
agham_surukkel
கதை, கட்டுரை மட்டுமல்ல. கவிதையும் அப்படித்தான். நம் மரக்காலால் அளக்க முடியாத மகாநதி. கவிதை என்பது கவிதைகளில் மட்டுமே எழுதப்படுவது மட்டுமன்று. அது கவி உளத்திலிருந்து பிறப்பது. அப்படிப் பார்த்தால் இப்போது கவிதைகள் பலவற்றில் கவிதை இல்லை என்று சொல்லி விடலாம். எழுத்தின் இசை கவிதை. ஒரு கதையில், ஒரு கட்டுரையில் ஒரு கவிதை வரி மனதை ஆண்டு விடும். ‘மோகமுள்’ என்கிற தலைப்பே கவிதை. ‘கற்பு கற்பென்று கதைக்கிறீர்களே, இதுதான் ஐயா பொன்னகரம்’ என்கிற வரிகள் கவிதை. ‘கம்பனுக்குள் வந்த கதையில்’ நாஞ்சில் நாடன் தன் கம்ப ராமாயண ஆசிரியர் திரு ரா.பத்மநாபன் பற்றிக் குறிப்பிடுகையில் “ரா.ப. வுக்கு எந்த விதத்திலேயும்  உபகாரம் செய்திருக்கலாகும் என அவர் இறந்து ஒரு வனவாச காலம் கடந்தபின்பு, இந்த நூலை (கம்பனின் அம்பறாத் தூணி) காணிக்கையாக்கி நான் அவருக்குக் கடன் செய்கிறேன். நீர்க்கடன் அல்ல நூற்கடன்” என்கையில் சொல்லாலும், பொருளாலும் நோக்கத்தாலும் கவிதை நிகழ்ந்துவிடுகிறது.
எனவே கட்டுரை அல்லது அபுனைவு என்பது நல்லதோர் எழுத்தாளனின் ஆளுமையில் வறண்ட தரிசு நிலம் அல்ல. அவன் கலை புணர்ந்து பெறும் குழந்தைகளுக்கு நாம் வைக்கும் பெயர்களால் அவற்றின் குணம் கட்டுப்படப் போவதில்லை.
கட்டுரை உட்பட எழுத்தின் அடிப்படை, வாழ்க்கையின் அடிப்படையுமான, அதே சமயம் சொல்லிச் சொல்லித் தேய்வழக்காகி விட்ட ‘உண்மை, அன்பு, அழகு’தான். அதை எம்மொழியில் சொன்னால் என்ன? ‘Truth Beauty, Love’ என்றாலும், ‘சத்யம், சிவம் சுந்தரம்’ என்றாலும் ஒன்றுதான். மேன்மையான எழுத்து இவற்றின் மேல் மலர்வது.
‘உண்மை’ பற்றிச் சொல்கையில், நாஞ்சில் நாடன் அவர்களின் கதைகளிலேயே கூட ஒரு தகவல் இருந்தால் அது சரியாகத்தான் இருக்கும் என்கிறார் வெங்கட் சாமிநாதன். அப்போது கட்டுரைகள் பற்றி என்ன சொல்வது. கட்டுரைகள் என்பவை எழுத்தாளனின் தொடர்ந்த உரையாடல். அவன் சொல்லும் விஷயங்கள் தவிர அவனைப் பற்றியும், நம்மைப் பற்றியும் அவ்வெழுத்துகள் மூலம் நாம் தெரிந்து கொள்கிறோம். அதில் தில்லு முல்லுகள் செய்வது, திரிப்பது என்பவை பஞ்சமா பாதகங்களை விட கொடியவை. நாஞ்சிலின் கட்டுரையில் உள்ள தகவல்கள் பலமுறை பல கோணங்களில் சரிபார்க்கப்பட்ட பின்பே அச்சுக்கு வருபவை. அவரது மனச் சாய்வுகள், பிடித்த பிடிக்காத தன்மைகள் என்று வாசகர் சிலவற்றைக் கருதலாம். ஆனால் தகவல் பிழைகள் இரா.
‘அன்பு’ என்பது துன்பம் துடைத்தல். அதை மகத்தான எழுத்துகள் செய்து கொண்டே இருக்கின்றன. அதனால்தான் அநியாயத்துக்கு எதிரான, எனவே ஏழைகளுக்கும், பலஹீனமானவர்களுக்கும், வஞ்சிக்கப் பட்டவர்களுக்கும் ஆன, அதே சமயம் அதன் மூலம் ஆதாயம் தேடாத குரலாக நாஞ்சில் நாடன் எழுத்துகள் ஒலிக்கின்றன. இந்தத் துன்பங்களுக்குக் காரணமான வாழ்க்கைச் சீரழிவுகளைப் பற்றி மீண்டும், மீண்டும் பேசுகின்றன.
‘அழகு’ என்பது துல்லியம், சரியான அளவு, தன்மை. சொல்ல வந்த விஷயத்தைப் பிசிறின்றிச் சொல்வது. இதற்கு அகத்தெளிவும், விஷய அறிவும் அவசியம். ‘The difference between the right word and the almost right word is the difference between lightning and a lightning bug.’ என்கிறார் மார்க் ட்வெய்ன். இந்த விஷயத்தில் வார்த்தைப் பற்றாக் குறை என்கிற பேச்சுக்கே இடமில்லாமல் எழுதுபவர் நாஞ்சில் நாடன். பழந்தமிழ்ச் சொற்கள், சமீப காலம் வரை இருந்து பிற மொழி மோகத்தால் வழக்கற்ற தமிழ்ச் சொற்கள் என்று கொட்டிக் கிடக்கும் நமது கருவூலத்தின் சாவி இவர் வசம் இருக்கிறது. இவரது நடை பழந்தமிழ் போல் இருக்கிறது. நவீன உலகுக்கு இது சாத்தியப்படுமா என்பவர்களுக்கு ஒரே ஒரு கேள்வி : ‘நீங்கள் நவீனம் என்பதை ஆங்கிலம் என்று நினைக்கிறீகளா, அல்லது ஒரு மொழியின் உயிர்த் தன்மை என்று நினைக்கிறீர்களா?’
மேலும் கூடியவரை தமிழ்ச் சொற்களையே தனிப் பேச்சிலும் பயன்படுத்தும் இவர் தேவை இருக்கையில் பொருளின் தன்மை கருதி பிற மொழிச் சொற்களைப் பயன்படுத்தத் தயங்குவதில்லை. ஒரு கலைஞனால் எந்த ஒரு மொழியையும் எப்படி துவேஷிக்க முடியும்?
உலக நாடுகளுக்கும், இந்தியாவின் பலபகுதிகளுக்கும் சென்று வந்தவரும், இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளில் பல ஆண்டுகள் வாழ்ந்துள்ளவருமான இந்த நாகர்கோவில் தமிழர், அடிப்படையில் ஒரு விவசாயியாகவே தன்னைப் பாவிக்கிறார். இவரது உறவு முதலில் மண்ணோடு, பயிர்களோடு, தாவரங்களோடு, விலங்குகளோடு, பறவைகளோடு. இந்த உறவுகளின் வலிமையின் காரணமாகவே இவருக்கு மனித உறவுகள் சீராகவும், சிக்கலற்றும், அன்போடும் இருக்க வேண்டும் என்கிற அக்கறையும், அதுகுறித்த தற்காலச் சூழல் மற்றும் தாக்கங்களால் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் அழிவு பற்றிய அச்சமும் ஒருங்கே உள்ளன. அதனல்தான் “இந்தியா பூராவும் செல்போன்களின் விதவிதமான வல்லிசைகளால் நிரம்பி பிரபஞ்சத்தில் வழியும் காலம் வெகு தூரத்தில் இல்லை” எனக் கவலுறுகிறார். “செண்பகப் பறவைக்குத் தெரியுமா அதன் பெயர் செண்பகம்” என்று என்று வினவுகிறார். “இவ்வுலகு மனிதர்க்கு மட்டுமே சொந்தமானது அல்ல” என்பதை நமக்கு நினைவு படுத்துகிறார்.
எழுத்தாளன் நேர்மையாக இருக்க வேண்டும். சமன் செய்து சீர் தூக்கும் கோல் போல். எல்லாம் சரி என்பதல்ல இக்கோல். எது சரி என்பதுதான். நாஞ்சில் நாடன் சில இடங்களில் ஒரு விஷயத்தின் இரண்டு பக்கங்களையும் சொல்லிச் சென்று விடுவார். உதாரணம் : “பர்வம்’ என்னும் வடமொழிச் சொல்லின் தமிழ் வார்ப்பே பருவம் என்றும் சொல்வார்கள் அற்ப மகிழ்ச்சி அடைய.”
ஆனால் இது போன்ற பெரிய ஆபத்தில்லா உபாதைகளைப் போலன்றி உயிர் கொல்லும் நோய்கள் பற்றி சர்வ நிச்சயமாகத் தன் நிலைப்பாடு இதுதான் என்பதை ஐயத்துக்கிடமின்றிச் சொல்லி, தான் யார் என்பதையும் காட்ட இவர் தயங்குவதில்லை. இது தமிழுலகில் அரிதான குணம். பாசாங்கு , சுயலாபக் கணக்கின் இடையறாத துரத்தல் தவிர அச்சத்தின் காரணமாகவும், தரங்கெட்ட சமூக அபாயங்கள் காரணமாகவும் இத்தகைய தீர்மானமான கருத்துகளைச் சொல்ல பலரும் தயங்குகிற சூழலில் தன் கருத்து இதுதான் என்பதை எள்ளளவும் தயங்காது உரத்துச் சொல்லும் இவர் துணிவு அரிதினும் அரிதானது. அத்துணிவினால்தான் “கம்ப ரசம் எழுதப்படலாம். கீமாயணம் எழுதப் படலாம். கொண்டு வந்து போட்டுக் கொளுத்து எனலாம். இராமனைச் செருப்பால் அடிக்கலாம். செருப்பு மாலை போடலாம். சீதையின் மேலாக்கை மாநாட்டு ஊர்வலத்தில் விலக்கி விலக்கிக் காட்டலாம். ஆனால் கம்பனும், அவனது இராமாயணமும் யாவற்றையும் வென்று வாழும்.” என்று இவரால் சொல்ல முடிகிறது.
அவரைப் பற்றி அவரே சொல்வது போல தமிழுடன் சகவாசம், இசையுடன் இசைவு, இளையவர் நட்பு இவரை முதுமையடையாமல் பார்த்துக் கொள்கிறது. அது நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாகத் தொய்வின்றி எழுதி வரும் இவர் எழுத்தில் தெரிகிறது.
தத்துவச் சேற்றுக்குள் கால் வைக்காதவர். இவரது வாழ்க்கை நெறி முறையும், அது குறித்து இவரது உறுத்தாத அறிவுரையும் மிக எளிமையனவை : “சக மனிதனைச் சகித்துக் கொள்ள முயல வேண்டும். சக மனிதனைப் புரிந்து கொள்ள முயல வேண்டும். முடியுமானால் நான் சக மனிதன் மீது அன்பு செய்ய முயல வேண்டும்.” “உலகம் அயோக்கியமயமாக இருக்கட்டும். நமக்கு வாய்த்திருக்கும் நல்ல தன்மைகளை அற்ப சுகங்களுக்காக இழக்க நாம் தயாராக இல்லை” இவ்வளவுதான். இதை விட வேறு என்ன வேண்டும்?
நாஞ்சில் நாடனின் இக்கட்டுரைகள் தீவிரமான விஷயங்களைப் பற்றிப் பேசினாலும் அவரது எழுத்தின் இயல்பான நகைச்சுவை, ‘கன்னியாகுமரி கடலை என்ன செய்வதென்று தெரியாமல் வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கும் ஐயன் திருவள்ளுவன் சிலை’ என்பன போன்ற கவனிப்புகளாக, படிக்கும் சுவாரஸ்யத்தைத் தூண்டிக் கொண்டே இருக்கும்.
‘செந்தமிழ்க் காப்பியங்கள்’ கட்டுரை ஐம்பெருங்காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள், கம்ப ராமாயணம், மகாபாரதத் தமிழாக்ககங்கள், பெரிய புராணம், சீறாப்புராணம், இரட்சணி யாத்திரிகம், தேம்பாவணி என காப்பியங்கள் பற்றி சுருக்கமான அறிமுகங்களைத் தரும் முக்கியமான கட்டுரை. இது நாஞ்சில் நாடனின் இன்னொரு தொண்டு. தமிழன் தன்னிடம் உள்ள முத்துகளையும், வைர, வைடூர்யங்களையும் பற்றி கிஞ்சித்தும் அறியாமல் பிறரைப் பழிப்பதிலோ, பிரிவினை பேசுவதிலோ, வெற்று கோஷங்கள் எழுப்புவதிலோ, தமிழ்த் தொண்டு ஆற்றி விட்ட நிம்மதியில் உறங்கிக் கிடக்கிறான். ‘மொழியை அரணாகப் பயன்படுத்த, அதன் மூலம் இனத்தை, மரபை, பண்பாட்டை, இலக்கியச் செல்வங்களைக் காக்க நமது செயல் திட்டங்கள் என்ன’ என்று சிந்திக்க ஒரு நொடி ஒதுக்குவதில்லை. அவனிடம் “கேளப்பா இவையெல்லாம் உன் சொத்து. கண் திற” என்று அறிமுகம் செய்கிறார்.
பல முக்கியமான தகவல்களைத் தரும் அறிவு சார் கட்டுரைகள் இவரது இன்னொரு தொண்டு. இவை தமிழில் எங்குள்ளன? யார் எழுதியவை? அவை பற்றிய அறிமுகம், மற்றும் கிடைக்குமிடம், அந்நூல்களின் சிறப்பு பற்றி எழுதுகிறார்.
கணித முதுகலைப் பட்டதாரி. புள்ளியியல் படித்தவர். அபார நினைவாற்றல் உள்ளவர். இணையத்தின் துணையின்றியே பல நீண்ட விரிவான தகவல்களையும், பட்டியல்களையும் தரக் கூடியவர். கலைத் தன்மை, தர்க்கம் இரண்டும் ஒரு சேர இயங்கும் முழு மூளைக் காரர். இவ்வொத்திசைவினால் தாவரங்கள், தல விருட்சங்கள், மாடன்கள் என்று நீண்ட பட்டியல்களைத் தருகையிலேயே அவற்றின் உட்பொருளையும், அவை நம் வாழ்வாதாரங்கள் என்பதை நமக்கு உணர்த்தவும் இவரால் முடிகிறது.
இயற்கையும் நாமும் ஒன்றுதான் என்கிற அடிப்படை உணர்வை இவரது கட்டுரைகள் வாசகருக்குத் தொடர்ந்து கடத்துகின்றன. மறந்து போன உண்மைகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வருகின்றன. வெட்டுப்பட்ட ஆல மரத்தின் வெட்டுப் பரப்பில் உட்கார்ந்தது, இவருக்கு அறியாச் சிறுவனாய் தன் சித்தப்பா, சித்தி மடியில் அமர்வதைப் போல் இருக்கிறது. இது எவ்வளவு உண்மைகளை வாசகருக்கு ஒரு சேர அளிக்கிறது ! அமர்ந்தது மரத்தடி கூட இல்லை. என்றோ இருந்த ஆல மரத்தின் வெட்டுப் பரப்பு. அந்தப் பரப்பு மனித மடி ஆகிறது. அறியாச் சிறுவனின் வாழ்வில் மடி எவ்வளவு உந்நதமான, பாது காப்பான, நிம்மதியான இடம்? வளர்ந்த மனிதன் சாகும் வரை அத்தகு மடி தேடித்தானே அலைகிறான், கோயில் கோயிலாக, தலைவன் தலைவனாக, கொள்கை கொள்கையாக, கேளிக்கை கேளிக்கையாக . . . . அந்த மடி, உலகோர் குறுக்கி எதிர்பார்ப்பது போல் சொந்தப் பெற்றோரது கூட இல்லை. தாய் தகப்பனைப் போல் அல்லது தாய் தந்தையினும் சாலப் பரிந்து வாழ்வமுதூட்டிய சித்தப்பா சித்தி மடி.
“அல்லாஹூ ஆலம்’ என்பதில் ஆலம் என்பதன் பொருள் உலகம். உலகமே இறைவன், இறைவனே உலகம்” என்று பொருள் சொன்ன நண்பரின் இச்சொற்றொடரில் ஆலம் என்கிற சொல்லினால் ஈர்க்கப் பட்டு “கடவுள் ஆலம், கடவுள் ஆலம், கடவுள் ஆலம்”  என்று இவர் திரும்பத் திரும்பச் சொல்லிப் பார்க்கிறார். ஆல மரத்தின் வெட்டுப் பரப்பு சித்தப்பா சித்தி மடி ஆகையில் ஆலம் கடவுளும்தானே? அனைத்தும் கடவுள்தானே?
ஆனால் நாஞ்சில் நாடன் குணரூபமான (abstract) விஷயங்களில் ருசி கண்டு அங்கேயே உழல்பவர் அல்ல. மிகவும் யதார்த்தமானவர். நிஜ வாழ்க்கையை சரியாக்கும் பணியில் தளாராது ஈடுபடுபவர். அதனால்தான் நம்மிடம் கேட்கிறார் : “நாம் ஒன்றாக நின்று – வேற்றுமைகளுக்கு உள்ளும் ஒற்றுமையாக நின்று காசி என்று நினைத்தால் ராமேஸ்வரம் நினைவுக்கு வருவதைப் போல கூட்டாக உய்யப் போகிறோமா? அல்லது தன்படை சுட்டுச் சாகப் போகிறோமா?” கவனமும் கவலையும் மிக்க இக் கேள்விக்கு நாம் வாழ்வதன் மூலமாகச் சொல்லும் பதிலில் இந்தியாவின், தமிழனின் எதிர்காலம் உள்ளது.
ஓர் எழுத்தாளனின் பணி இதுதான். மனித குலத்தைத் துண்டாடுவனவற்றை மறுதலிப்பது. அடிப்படையில் நாம் அனைவரும் ஒன்று என்கிற உண்மையை விட்டு அசையாதிருப்பது. அதைச் செய்யும் இக்கட்டுரைகள் ஒரே நூலாக வருவது மிகுந்த மகிழ்ச்சிக்குக் காரணமாகிறது.
தமிழ் மொழி, சமுக சிந்தனை, கல்வி, இலக்கியம், கலை, பண்பாடு, குடும்பம், உறவுகள், இயற்கை முதலிய பல்வேறு தளங்களில் கூர்மையான பார்வைகளையும், கருத்துகளையும் நேர்மையாக வைக்கும் திரு நாஞ்சில் நாடன் அவர்களின் பல கட்டுரைகளிலிருந்து பெரும்பாலான இத்தன்மைகள் வெளிப்படுமாறு இத்தொகுப்பு அமைந்திருக்கிறது.

****
Aggam_Surkkel_Nanjil_Nadan_Books_Essays_Tamil_Letters_Cover_2015
தொகுப்பாசிரியர் : ஜி. ஆர். பிரகாஷ்
நூல் கிடைக்குமிடம் : மாலதி பதிப்பகம், கோவை. தொடர்புக்கு : 9 9946  95242, 94881 85920
மின்னஞ்சல் :  malathipathipagam@gmail.com
விலை : ரூ. 150/-

ஆயிரம் பிறை கண்ட அரிமா! – ஜெயகாந்தன்

ஆயிரம் பிறை கண்ட அரிமா! – ஜெயகாந்தன்

 |சொல்வனம் இதழ் 114 | 10-05-2014|

1960களின் மத்தியில் பள்ளியில் கே.பாலசந்தர், கே.எஸ்.கோபாலக்ருஷ்ணன் என்று சினிமா டைரெக்டர்கள் பற்றி பேசும் மாணவரிடையே அறிவியல் ஆசிரியர் திரு என்.எஸ். இரகுநாதன் “இதப் பத்தியெல்லாம் பேசறீங்களே, ஜெயகாந்தனைப் படியுங்கப்பா” என்று சொன்னார்.
வாழ்க்கையின் புதியனவற்றுக்கு எல்லையே கிடையாது என்கிற உண்மையில் அது பற்றி அறியவே செய்யாது திளைக்கும் சிறுவர் பருவம். சந்தேகம் கிடையாது. கடிவாளங்கள், கோட்பாடுகள் எதுவும் கிடையாது. நீடித்த கவலைகளும்தான். எனவே உடனே ஜெயகாந்தன் படிக்கத் துவங்கினோம். படிக்கத் துவங்கிக் கிடைத்த ஆனந்தத்தில், ஏதோ நாங்கள் ஒவ்வொருவருமே கண்டுபிடித்த அபூர்வமாக அவரை உணர்ந்ததில் அவரது எழுத்துகளும், பின்னர் அவரது பேச்சுகளும் அவற்றுக்கு வெகு காலத்திற்குப் பின் நிகழ்ந்த சந்திப்புகளும் ஜெயகாந்தனை எழுத்திலும், பேச்சிலும், நேரிலும் படிப்பதை வேத மந்திரம் போல் ஆக்கின.
jk
“நீரெல்லாம் கங்கை, நிலமெல்லாம் காசி” என்றவர், “எழுத்தும் தெய்வம், எழுதுகோலும் தெய்வம் என்று நம்புகிற மக்களிடையே இத்தகைய தெய்வ லீலைகள் நிகழும்” என்று தமக்கு கிடைக்கும் அங்கீகாரம் பற்றிச் சொன்னவர் பற்றி இப்படிச் சொல்வது தகும்.
ஆனந்த விகடன் எப்போது வரும் என்று வீட்டு வாயிற்படியில் காத்திருப்போம். பெரும்பாலும் அதில் ஜெயகாந்தன் கதைகள் இருக்கும் காலம் அது. வந்த பின் படித்து, பிறகு பள்ளிக்குப் போய் நண்பர்களிடையே அதை சிலாகித்து பேசிக் கொண்டே இருப்போம்.
பின்பு ஜெயகாந்தன் எங்கெல்லாம் பேசுகிறாரோ அங்கெல்லாம் சென்று கேட்போம். அல்லது கேட்டவர்களிட்மிருந்து ஜெயகாந்தன் என்ன பேசினார் என்று கேட்டுத் தெரிந்து கொள்வோம்.
40 ஆண்டுகளுக்கு முன் யு.எஸ்.ஐ.ஏஸ். ஸில் நடந்த “நேருக்கு நேர்” நிகழ்ச்சியில் ஒருவர் “உங்கள் வாழ்வின் லட்சியம் என்ன?” என்று கேட்டபோது “Not to die” என்று அவர் சொன்ன பதில், எண்பதாம் ஆண்டு நிறைவின்போது திரு. நல்லி குப்புசாமி “ நீங்கள் நூறாண்டு வாழ்வீர்கள் “ என்று வாழ்த்தியபோது போது சொன்ன “ஆமாம்” என்கிற ஆமோதிப்பில் தொடர்கிறது. இப்படி சொல்ல, இப்படி எண்ண ஒருவர் உண்டென்றால் அது ஜெயகாந்தன்தான்.
“நான் பொழுது போனால் குடிப்பவன்” என்று காந்தி ஜெயந்தி விழாவில் பேச ஆரம்பித்தவர். தமிழாசிரியர்கள் மாநாட்டில் மிக நீண்ட முஸ்தீபுக்குப் பின் அவர்களுக்கு ‘நமஸ்காரம்’ சொன்னவர். பெரியாரின் துவேஷத்தின் அநீதியை அவர் மேடையிலேயே துணிந்து தர்க்க ரீதியாக, தர்ம ரீதியாக எதிர்த்தவர். பல வண்ணங்கள் கொண்ட சட்டையுடன் மேடை ஏறியவரை ‘பாம்பாட்டி’ என்று சொன்ன அரசியல்வாதியை, ‘மேடையில் இருக்கும் உங்களையெல்லாம் ஆட்ட வந்த பாம்பாட்டிதான் நான்” என்று பதில் சொன்னவர். நான் ‘கலைஞர் பேசுகிறேன்’ என்று ஃபோனின் மறு முனையிலிருந்து சொன்ன குரலிடம் ‘நானும் கலைஞர்தான் பேசுகிறேன்’ என்று பதிலிறுத்தவர். இராட்டை சுற்றும் பெண் என்னும் சின்னத்தினை கெவலமாகப் பேசிய மூத்த அரசியல்வாதியின் கண்களை காமப்புழு நெளியும் கண்  என்று சினந்து, உன் தாய், மகள் அவர்களை மறந்தாயா என்று கேட்டவர்.
35 வருடங்களுக்கு முன், ‘ம்யூசிக் அகாடமி’யில் நடந்த ‘மாக் பார்லிமென் ட்’ டில் இவர் ஒரு புறமும், சோ ஒரு புறமும் அமர்ந்திருக்க மேலும் பலர் பேசக் காத்திருக்கையில் “I can’t relish this nonsense” என்று இவர் அறிவித்ததும், சோ  “இவர் பேசட்டும். நாம் கேட்போம். இவர் பேசுவதை எல்லோரும் கேளுங்கள். நம் எல்லோருக்கும் நாட்டுக்கும் அது நல்லது” என்று கூட்டத்திடம் கூறினார். பின்னர் பொழிந்த ஜெயகாந்தன் “இப்போது மஹாத்மா காந்தி பிறந்திருந்தால் அவரை ஒரு சேரியில்தான் தேட வேண்டும்; அவர் மறு பிறவியில் அங்குதான் பிறக்க விரும்பினார்” என்று கூறி மிகப் பிரமாதமான உரையை நிகழ்த்தினார். மாக் பார்லிமென் ட் நடக்கவில்லை. ரொம்பி வழிந்த ம்யூசிக் அகாடமி அவ்ர் பேச்சை மட்டுமே வெகு கவனமாக பூரண ஈடுபாட்டுடன் கேட்டது.
இன்னொரு மேடையில் காந்தி வெளிநாடு செல்கையில் அவர் அன்னை ‘மது, மாமிசம், மாது’ வேண்டாம் என்று வாக்குக் கேட்டதைப் பற்றிச் சொல்கையில் என் தாய் எனக்கு ஆசை ஆசையாய் ஊட்டிய அசைவ உணவை நான் விட வேண்டியதில்லை. இதன் தாத்பர்யம் புலனின்பத்தில் உன்னை இழந்து விடாதே என்பதுதான்” என்றார்.
பாரதி, புதுமைப் பித்தன் என்கிற இரண்டு பெயர்களை எங்கள் காதுகளில் உபதேசித்தவர் ஜெயகாந்தன்தான்.
பாரதி என்னும் மஹா கவியின் உரைநடையை எங்களுக்கு அறிமுகப்படுத்தியவர் அவரே.
என் கட்டுரைகளில் எல்லாம் எங்காவது ஜெயகாந்தன் வந்து விடுவார் என்று என் நண்பர்கள் சொல்வதுண்டு. இது அவரைப் பற்றிய கட்டுரை இதை எழுதுகையில் பாரதி பற்றி ஜெயகாந்தன் சொன்னதை நினைவு கூருகிறேன்.
“எனது நூல்கள் யாவும் மகாகவி பாரதியின் பாத கமலங்களில் சமர்ப்பிக்கப்படுவனவே யெனினும் இந் நூல் பாரதியின் இலக்கியச் சோலையிலிருந்து பறித்தெடுத்த மலர்களால் தொகுக்கப் பட்டது என்பதனைக் கருதிச் சொந்தத்தோடும், உரிமையோடும் அவரது சென்னியிலிதைச் சூட்டுகிறேன். (பாரதி பாடம்)“
இவரை நேரில் அருகில் பார்த்தது 1987-90 ல் நான் கல்கத்தாவிலிருந்தபோது சென்னை வந்தபோது. திரு. அசோகமித்திரனைச் சந்தித்து விட்டு ஆழ்வார்பேட்டையிலிருந்த மடத்துக்கு வந்து இவரைப் பார்த்தேன். ஒரு 15 நிமிடம் உடன் இருந்தேன்.அது சந்திப்பு அல்ல.
பின்னர் 2001ல் பொங்கல் சமயத்தில் தஞ்சாவூரில் நடந்த ஒரு விழாவுக்கு திரு. மோதி. ராஜ கோபால்* என்னையும், அவர் உயிர் நண்பர் பத்மனாபன் அவர்களையும் தன் காரில் திருச்சியிலிருந்து அழைத்துச் சென்றார். அதுதான் ஜே. கே. யுடனான முதல் சந்திப்பு.
கார் பாதி வழியில் பங்க்சர் ஆகி விட்டது. ஒரு பஸ் பிடித்து தஞ்சை சென்றோம். சா. கந்தசாமி மற்றும் ஜெயகாந்தனின் நண்பர்கள் பலரும் இருந்தார்கள். தஞ்சை அறிஞர், சேக்கிழார் அடிப்பொடி திரு டி.என். இராமச்சந்திரனின் ‘வழி வழி பாரதி’ என்னும் நூல் வெளியீட்டு விழா. “நாங்கள் எல்லோரும் சிரமப்பட்டு படிகளில் மெல்ல ஏறி ஓர் இடத்தை அடையப் பார்த்தால் அங்கே அனாயாசமாக உலவிக் கொண்டிருப்பவர் ஜெயகாந்தன் “ என்று சொன்னார் திரு. டி. என். ஆர்.
ஜெயகாந்தனிடம் ஃபார்மலாக என்னை அறிமுகம் செய்து வைத்தார் மோதி. அந்த அறையில் கூட சுமார் 20 பேர் இருந்தார்கள். அந்த அமைப்பை ‘சபை’ என்று சொல்வார்கள். ஜெயகாந்தன் மட்டும் பேசினார். தொடர்ந்து பேசினார். பேசிக் கொண்டே இருந்தார். அந்தப்பேச்சின் தொடர்ச்சியை மாலை மேடையில் நூல் வெளியீட்டு விழாவிலும் பேசினார். பாரதி பற்றி அவரது மற்றொரு மகத்தான உரையைக் கேட்டேன். மானசீகமாக அவரை நமஸ்கரித்தேன்.
இரவு கிளம்பும் சமயம் அவரை உண்மையிலேயே சாஷ்டாங்கமாக நமஸ்கரித்தேன். படுக்கையில் ஒருக்களித்து அமர்ந்திருந்த அவர் நிமிர்ந்து கைகளை ஆசீர்வதிப்பது போல் செய்து ‘காட் ப்ளெஸ் யூ” என்றார். மிக இயல்பாக அந்நிகழ்ச்சி முன் திட்டம் ஏதுமின்றி நடந்தது. அதுவரை நான் எந்த பிரமுகர், மடாதிபதி, மதத் தலைவர், மூன்றாம் மனிதரையும் வணங்கியதில்லை என்பதை மோதியிடம் சொன்னேன். அதே போல் ஜெயகாந்தனும் பாசாங்காய் யாராவது எதாவது செய்தால் நிராகரித்து விடுவார். இன்று உங்களை ஆசீர்வதித்தார் என்று மோதி சொன்னார்.
Suga_Jeyakanthan_Writers_Authors_Tamil_Icons
(சுகா, ஜெயகாந்தன், வ.ஸ்ரீநிவாசன்)
மதியம் அறையில் பேசிக் கொண்டிருக்கையில், எந்த மாதிரி கதைகளை எழுத மாட்டேன் என்பது பற்றிச் சொன்னார். “ஒரு வீட்டில் ஒரு பெண் இருப்பாள். அவள் வீட்டுக்கு மத்தியான நேரத்தில் ஒரு ஆண் வந்து விட்டுப் போவார். தினமும், அந்தப் பெண்ணின் கணவர் வெளியே சென்ற பின், இது நடக்கும். ஆனால் நான் இதை எழுத மாட்டேன்” என்றார்.
தொடர்ந்து, “அக்னிப் பிரவேசம்’ கங்கா பற்றி பேச்சு வந்தது. அவளே அவனைக் கண்ணைக் காட்டி அழைத்திருக்கலாம். அவளே அவனுக்கு சைகை செய்திருக்கலாம். ஆனால் அதை நான் எழுத மாட்டேன்” என்றார். எனக்கு உடனே துணுக்குற்றது.  மாலை மீட்டிங் முடிந்து வந்ததும், உறுத்திக் கொண்டே இருந்த கேள்வியைக் கேட்டு விட்டேன்.  “அவள் குழந்தையல்லவா? அவளைப் பற்றி இப்படிச் சொல்கிறீர்களே?”  அவர் உடனே “ கண்ணைக் காட்டியோ, வேறு சைகை செய்தோ அழைத்திருந்தால் மட்டும் அவள் குழந்தை இல்லாமால் போய் விடுவாளா? அவளே மீண்டும் மீண்டும் அவனிடம் போனாலும் கூட குழந்தை இல்லாமல் ஆகி விடுவாளா? “ என்றுகேட்டார். எனக்கு கண்களில் நீர் தளும்பி விட்டது. அவரது அனைத்தையும் அரவணைக்கும் அன்பு, பாவிகளே இல்லாத அவரது உலகம் தெரிந்தது.
அவர் பல நூல்களைப் படித்திருக்கிறார். ஒரு கல்விக் கூடத்தில் பேசப்போன இவரை திடீரென்று  ‘கம்பரைப் பற்றிப் பேசுங்கள்” என்று கோரியிருக்கிறார்கள். உடனே ஒரு மணி நேரத்துக்கும் மேலாகப் பேசியிருக்கிறார். இவர் பேசியது கம்பனின் ‘இராமகாதை’ பற்றியல்ல. “ஏர் எழுபது” பற்றி. நம்மில் எத்தனை பேருக்கு கம்பனின் இந்த நூல் பற்றித் தெரியும்? ஒரு முறை டென்னஸி வில்லியம்ஸின் ஒரு பாத்திரம் பற்றி பேச்சு வந்தது. என்னிடம் ‘அது ரோஸ் டாட்டூ’ தானே என்றுகேட்டார். நான் “ஆமாம் ஜே.கே.” என்றேன்.
மிக கம்பீரமாக எழுதும் இவர் தனிப் பேச்சிலும் கம்பீரமாய் இருப்பார். தனிப்பட்ட கண்ணியம் எல்லோருக்கும், எப்போதும் காக்கப் படும். எல்லோர் தேவைகளையும் நினைவில் வைத்திருப்பார். நகைச்சுவை எட்டியே பார்க்காமல் எழுதும் இவர் தனிப் பேச்சுகளில் கம்பீரத்தோடு சேர்ந்து பிரதானமாக இருப்பது இவரது நகைச்சுவைதான். சிரித்து மாளாது.
மோதி, திருச்சியைச் சார்ந்த பிரமுகர் திரு. எம். எஸ். நாடார் பற்றி ஜே.கே.யிடம் சொல்கையில், “இவர் சிரிக்கச் சிரிக்கப் பேசுவார்” என்று அறிமுகமாகச் சொல்லியிருக்கிறார். உடனே திரு நாடார், “ஐயய்யோ ! நான் சொல்லும் நகைச்சுவையெல்லாம் ஜே. கேயிடமிருந்து பெற்றவைதான்” என்று சொன்னாராம்.
நான் சிகரெட், கஞ்சா, மது என்கிற எந்தப் பழக்கமும் இல்லாதவன் என்பது தெரிந்ததும் அனைவருக்கும் சுழற்சியில் தரப்படும் அவை என்னிடம் வராமல் பார்த்துக் கொள்வார். ஒரு சமயம் “நான் ஏக பத்னி விரதர்களையும், ஏகப்பதிவ்ரதாக்களையும் மதிக்கிறேன்” என்றார். இதன் பொருள் அவர்கள், குறிப்பாக குடிக்காதவர்களும், பிற பெண்கள் தொடர்பு இல்லாதவர்களும், கேலிக்கு உரியவர்கள் அல்ல என்பதே.
இவ்வளவு தொடர்ந்த பேச்சுகளிலும், ஒரு துளி வம்போ, கீழ்ததரமான கிண்டலோ யாரைப் பற்றியும் இருக்காது.
கொச்சை வர்த்தைகள் பேசுவார். ஜாதி, மத, மொழி, இன, வேறுபாடுகள் அறவே இல்லாத மனிதர். பலரை அவர்கள் ஜாதி சொல்லிக் கூப்பிடுவார். கிண்டல் கூட பண்ணுவார். ஆனால் அதில் துளி துவேஷம் இருக்காது. ஒரு முறை மோதி வீட்டுக் கல்யாணம் ஒன்றில் ஒரு நண்பர் ஜே.கே.யிடம் இன்னொரு நண்பரைப் பற்றி அவரதுஜாதியைக் குறிப்பிட்டு ‘அந்த பயல் என்றதும் “நீ . . பயல்தானே அதுதான் அப்படிப் பேசுகிறாய்’ என்றாராம்.
மோதி “போன ஜென்மத்தில் நீங்கள்தான் பாரதி நான்தான் எலிக்குஞ்சு செட்டியார்” என்றதும் தலையசைத்திருக்கிறார். ஒருமுறை பாபநாசம் சிவனின்  ‘என்ன தவம் செய்தனை?” பாடல் பற்றிச் சொல்கையில் “இதைப் பாடுவது தேவகிதான். யசோதாவிடம் தனக்கு அந்த பாக்கியம் கிடைக்கவில்லையே என்று பாடுகிறாள்” என்றார். “பாரதி உலகின்பக் கேணி என்று எழுதியிருக்க மாட்டான். அது உலகின்பக் கேளி” என்பார். “பொன்னை உயர்வை புகழை விரும்பிடும் சின்னக் கவலைகள் தின்னத் தகாதென்று” என்றுதான் எழுதியிருப்பார் என்று பாட பேதம் செய்வார்.
ஒரு முறை சபையில் “ஞானம் என்றால் என்ன தெரியுமா என்று கேட்டுவிட்டு, சுகமாய் இருப்பதுதான் ஞானம் என்று சொன்னார். சுற்றி இருந்த 20 பேரில் ஒருவர், இது பற்றி யோசித்துவிட்டு, கொஞ்ச நேரம் கழித்து, “ஆமாம் ஜே.கே. நல்லவனா இருப்பதுதான் ஞானம்” என்று சொன்னார். ஜே. கே உடனே “ நல்லவனா இருப்பது அல்ல, சுகமா இருப்பதுதான் ஞானம்” என்று அவரைத் திருத்தினார்.
தமக்குக் கிடைக்கும் பாராட்டுகள், விருதுகள் அனைத்தையும் பற்றி சொல்கையில், “பாரதிக்கு செய்யவில்லை இல்லையா? அதுதான் எனக்குச் செய்து தவறைத் திருத்திக் கொள்கிறார்கள்.” என்றும் “பாரதி பயிரிட ஆரம்பித்ததைத்தான் நான் அறுவடை செய்து கொண்டிருக்கிறேன்.” என்பார்.
இவரும் கி. வீரமணியும் ஒரே பள்ளி. பெரியார் வந்து வீரமணியை தத்து எடுத்துச் சென்றாராம். இவருக்கு அந்த வசதியான வாழ்க்கை கிடைக்கவில்லையே என்று வீட்டில் விசனப்பட்டு திட்டினார்களாம். “நல்ல வேளை தப்பித்தேன். அந்தாளோடு போய் யார் இருப்பது ” என்றார்.
எல் எல் ஏ பில்டிங்இல் ஒரு கூட்டத்தில் லா.ச. ரா வின் ஒரு கதையில் எப்படி “இன்று கிடைத்த மீனை என்ன செய்யலாம். கறி வைக்கலாமா கூட்டு வைக்கலாமா” என்று ஒரு பாத்திரம் யோசிக்கிற மாதிரி வருகிறது என்பது பற்றிச் சொல்லி, “உனக்கெதற்கு இந்த வேலை? உனக்கோ மீன் பற்றி ஒன்றும் தெரியாது” என்றார். அதே போல் இவர் எழுதிய ஒரு கதையில் பிராமண பாஷை சரியாக இல்லை என்று ஒருவர் இவருக்கு கடிதம் எழுதினாராம். பிராமண பாஷையின் ஆதென்டிசிடிக்காக நான் எழுதவில்லை என்று சொன்ன போதும் மீண்டும் கடிதம் வந்ததாம். “போடா பப்பாரப் பயலே! என்று பதில் சொல்லி விட்டேன்.” என்றார். கூட்டம் ஆர்பரித்தது. தொடர்ந்து அவர் சொன்னது “அப்படி எழுதியதற்கு வெட்கப் படுகிறேன்.”
jayakanthan_1_050408
பெரியார், அண்ணா, கலைஞர், எம்ஜியார், ஜெயலலிதா எல்லோரையும் பற்றிய அவரது விமர்சனங்கள் கூர்மையாகவும் , கடுமையாகவும் பலசமயம் சிரிப்பு வரவழைக்கக் கூடியனவனவாகவும் இருக்கும்.
“ஜேகே தமிழ் உள்ளவரைக்கும் உங்க பேர் இருக்கும்” என்று சொன்ன திரு மோதியிடம் “அதனால் எனக்கென்ன பிரயோசனம்” என்று கேட்டார்.
20 பேர் சூழ்ந்து இருக்கையிலும் யார் யாருக்கு என்ன சாப்பிட வேண்டும் என்பதைக் கேட்டுத் தெரிந்து கொண்டு கொண்டு வரச் சொல்லுவார். கண்டபடிக்கு வாங்கி உணவு வீணாகப் போவதை விரும்பாதவர். அதே போல் படப்பிடிப்பு முடிந்ததும் ஒரு முறை அங்கிருந்த காப்பிப் பொடி பாக்கெட்டை எடுத்துவைக்கச் சொல்லினாராம். பின் “இது இருந்தால் ஒருத்தருக்கு காப்பி போடத் தோன்றும். அதற்காகப் பால் வாங்குவார்கள். சக்கரை வாங்குவார்கள். பிறகு அவை அதிகமாகி விட்டால் அதற்கென்று மீண்டும் காப்பிப் பொடி வாங்குவார்கள்” என்று சொன்னாராம்.
ஞானத்தின் ஆக்ர்ஷிப்பின் விளைவுகளில் கலையும் ஒன்று. அதனால்தான் கலைஞர்கள் அதர்மத்தின் பக்கம் நியாயத் தராசு சாய்கையில் அதற்கெதிராக அமர்ந்து சமன் செய்வார்கள். எனவேதான் அவர்கள் கால, தேச, இன, மொழி, சாதி, பால் வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டவர்களாய், கலா சிருஷ்டி காலத்திலாவது, சம நோக்கோடு மட்டுமே இருக்கிறார்கள். ஜே.கே. போன்ற விவேகிகள் பல நேரம் அப்படித்தான் இருக்கிறார்கள்.
தமிழர்கள் அனைவருமே பாஸிசத்துக்குத் துணை போனவர்களோ என்று எதிர்கால சந்ததியர் ஏசாமல் இருப்பதற்காக படுகுழியில் விழ இருந்த தமிழ் மக்களை பாரதிக்குப் பின் தடுத்தட்கொண்டவர்களில் முக்கியமானவர் ஜெயகாந்தன். தமிழ் மக்களின் சிந்தனையில் பெரும் தாக்கத்தை நேர்மறையாக ஏற்படுத்தியவர் ஜெயகாந்தன். “உங்கள் மீது ‘ப்ரொ பிராமின்’ என்றொரு குற்றச்சாட்டு இருந்ததே?” என்கிற கேள்விக்கு “இப்போதும் அப்படித்தான். எப்போதும் ப்ரோதான் எல்லோருக்குமே ப்ரோதான்” என்று ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார்.
நாடகம் பற்றி ஒரு கருத்தரங்கம் சத்ய மூர்த்தி பவனில் நடந்தது. சிசுசெல்லப்பா, நா.காமராசன், சோ, ஜெயகாந்தன் எல்லொரும் பெசினார்கள். ஒரு புருவத்தை உயர்த்திக் கூட நடிக்கலாம் என்று நடித்துக் காட்டினார் ஜெயகாந்தன். “தமிழில் நாடகமே இல்லை” என்று அவர் சொன்னதற்கு வேறொருவர் ” மனோன்மணியத்தை வைத்துக் கொண்டு இப்படிச் சொல்வது என் தாத்தாவுக்கு ஒன்றும் தெரியாது என்கிற மாதிரி” என்று கோபமாகப் பேசி தம் அறியாமையைக் காட்டிக் கொண்டார்.  நாடகம் என்றால் ஒரு பாடம் இருக்க வேண்டும் என்று வேறொருவர் பேசினார். அவரை அடுத்துப் பேசிய சோ ‘ அப்படி நாடகம் போட்டால் அது நிச்சயம் ஒரு பாடமாக இருக்கும், அந்த நாடகம் போட்டவருக்கு’ என்றார்.
துக்ளக் பத்ரிகையில் ‘ஓர் இலக்கியவாதியின் அரசியல் அனுபவங்கள்’ தொடர் ஜெயகாந்தன் எழுதுவதற்கு முன், சோ ஒரு முன்னுரைமாதிரி எழுதி, ‘ஜெயகாந்தன் எழுதப்போகிறார். ஈஸ்வரோ ரக்ஷது’ என்று முடித்திருந்தார். ஜெயகாந்தன் ‘ஈஸ்வரோ ரக்ஷது’ என்று துவங்கி, தன் தொடரைப் பொருத்தமாக ஆரம்பித்திருந்தார். தனிப் பேச்சில் மேடையில் தொண்டையைக் கனைத்துக் கொண்டு சோ எப்படி ‘அனைவருக்கும் வணக்கம்’ என்று ஒற்றை வந்தனத்தில் நீண்ட அவர்களேக்களைத் தவிர்த்துப் பேச ஆரம்பித்து விடுவார் என்று நடித்துக் காட்டுவார்.
‘காரல் மர்க்ஸ் ஒரு ஹிந்து’ என்று ஒரு கூட்டத்தில் பேசினார். ‘இந்தியா ஒளிர்கிறது என்று சொல்லாமல் பின் அழுது வடிகிறது என்றா சொல்ல வேண்டும்’ என்றார். ஃபாசிசமா, இம்பீரியலிஸமா என்றால் இம்பீரியலிஸத்தின் பக்கமே இருப்போம் என்றார் மார்க்ஸ். நாமும் கறுப்பா, காவியா என்று வரும்போது காவியின் பக்கமே இருப்போம்’ என்று முழங்கினார்.
கோவையில் ஒரு முறை பேச வந்திருந்தபோது அரங்கம் நிரம்பி வழிந்தது. அப்போது சொன்னார். இங்கிருக்கும் நீங்கள் ஒவ்வொருவரும் என்னைப் பற்றி ஒரு மணி நேரம் பேசக் கூடியவர்கள் என்று. அது உண்மைதான். ஜெயகாந்தனுடன் பரிச்சயம் அவரது எழுத்து, பேச்சு மூலம் உள்ள எவரும் அவ்ரைப் பற்றி குறந்தது ஒரு மணி நேரம் பேசமுடியும். அது கான்ஷியஸாக கட்டப் பட்ட பிம்பம் அல்ல. பிம்பம் பற்றிக்கவலைப்படாமல் ஒருவர் நிஷ்காம்ய கர்மியாக இருந்ததால் எதேச்சையாக விளைந்தது.
இவரது மணிவிழா 1994ம் வருடம் சென்னை காமராஜ் அரங்கத்தில் நடந்தது. மேடையில் இருந்த மத்திய மந்திரி திரு. அருணாசலத்திடம் “தைரியமாக இருங்கள். எல்லோரையும் ஹிந்தி படிக்கச் சொல்லுங்கள்” என்றார். மந்திரி பயந்து போய் விட்டார். தொடர்ந்து, “ஏன் நம்ம பொண்டாட்டியையே, நம்ம அம்மாவையே காப்பத்திட்டு இருக்கணும். எல்லா அம்மாக்களையும் காப்பத்துவோம்” என்றார். எப்படி தான் ஒரு தேர்வுக் குழுவில் இருக்கையில் அதிகம் பேசுபவர்களைக் கொண்டிராத மொழிகளில் வந்துள்ள எழுத்துகளுக்கு பரிசளிக்க சிபாரிசு செய்தேன்” என்பதையும் சொன்னார். மணி விழாவில் கொடுக்கப் பட்ட பண முடிப்பான சுமார் 4, 5 லட்சம் ரூபாய் பற்றிக் குறிப்பிட்டு “இதை நான் என்ன செய்வேன்? குப்பைலே போடுவேன். குப்பைன்னா ‘பாங்க்” என்றார். இறுதியில் மேடையில் பேசிய பிரபலஸ்தர்களையெல்லாம் தனித்தனியாகக் குறிப்பிடாமல் “கோவிலில் மூலவரை நமஸ்கரித்தால் எல்லா சன்னிதிகளையும் வணங்கிய மாதிரி, எனவே மூப்பனாருக்கு என் நன்றி” என்று முடித்துக் கொண்டார். மறுநாள் பத்ரிகையில் “நேற்று அனவருக்கும் சரியான விதத்தில் நன்றி சொல்லாததற்கு வருந்துகிறேன்,. அனைவருக்கும் நன்றி என்று ஜே. கே. சொன்ன செய்தி பத்ரிகைகளில் கட்டம் கட்டி வந்தது.
ஒரு சமயம் ரயில்வே ஸ்டேஷனில் இவர் பெட்டியின் படிகளில் ஏறி வாயிலில் நின்று கொண்டிருந்த போது ஒரு நல்ல உடைகள் அணிந்த இளஞர் இவரிடம் ஒரு பேப்பரை நீட்டி அதில் ஆட்டொகிராஃப் கேட்டர். இவர் போட மறுத்து விட்டார். அந்த இளைஞர் “நானும் தமிழன், நீங்களும் தமிழன். போடுங்கள்” என்றர். இவர் மீண்டும் மறுத்து விட்டார்.அவ்விளைஞர் சென்றதும் “நாமென்ன இங்கிலாந்திலோ அமெரிக்கவிலோவா இருக்கிறோம், நானும் தமிழன், நீங்களும் தமிழன் என்று சொல்லி கையெழுத்து வாங்க. இங்கே கோவையில் இருக்கும் எல்லோரும் தமிழர்கள்தான். இதில் இது என்ன பேச்சு?” என்றார்.
ஒரு முறை தூங்கிப் போய் விட்டதால், கோவையில் இறங்காமல் மேட்டுப் பாளையத்தில் இறங்கி அங்கிருந்து சாவதானமாக, ஒரு பரபரப்பின்றி வந்தார். அதே போல் திருச்சியில் ரயிலைத் தவற விட்டு விட்டாராம். எல்லோரும் பதறிக் கொண்டிருக்கையில் அவர் நிச்சலனமாக இருந்ததோடன்றி ரயில்வே பிளாட்பாரத்திலேயே ஏதோ பாடி ஆடிக் காட்டி இருக்கிறார். பெரும்பாலானவர்கள் பதற்றமடையும் பல சந்தர்ப்பங்களில் அமைதியாக இருப்பவர் என்று அவர் பற்றி இதையெல்லாம் திரு மோதி சொல்லிக் கேட்டிருக்கிறேன்.
அவர் நண்பர் திரு கே.எஸ். சுப்ரமணியம் ஒருகதையில் இப்படி வருமே என்று ஆரம்பித்து சொல்லத் தடங்குகையில் அது எந்தக் கதையில் வரும் எப்படி வரும் என்று மிகச் சரியாகச் சொன்னார் ஜே.கெ. அவ்வளவு நினைவாற்றல். கே.எஸ். செய்த மொழி பெயர்ப்பு ஒன்றை இருவரும் சரி பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஒரே ஒரு வார்த்தையை ஜே.கே. மாற்றினார் அந்த ஆங்கில வாக்கியம் முற்றிலும் மேலானதாக பரிணமித்து விட்டது.
அவரது 74வது பிறந்த நாள் என்று நினைக்கிறேன். இளையராஜா, ரவி சுப்ரமண்யம் இயக்கத்தில் ஒரு செய்திப்படம் ஜெயகாந்தனைப் பற்றி எடுத்திருந்தார். பிறந்த நாள் விழாவில் அப்துல் கலாம் பேசினார். அந்த படத்தின் டிவிடி போட்டுக் காட்டப் பட்டது. அதில் அவர் சொல்லியிருப்பார். “கலைஞர் ‘நான் பெரியாரையும், அண்ணாவையும் பார்க்காமல் இருந்திருந்தால் ஒருகம்யூனிஸ்ட் ஆகியிருப்பேன்’ என்கிறார். இதில் கூத்து என்னவென்றால் நான் அவர்கள் இருவரையும் பார்த்ததால்தான் கம்யூனிஸ்ட் ஆனேன்.” என்று சொல்லிச் சிரிப்பார். திரு.ரவி சுப்ரமணியம் எடுத்த ஆவணப்படம் இங்கு கிடைக்கிறது :
அரசியல் கணிப்புகளை, கணக்குகளை அவர் சரியாகச் செய்ததில்லை. சுய லாபம் தேடாததால் அவருக்கு அதெல்லாம் அவசியமும் இல்லை. எமர்ஜென்ஸி வந்தபோது அதை வரவேற்றார். அதை வரவேற்கத் தயங்கிய கண்ணதாசனையும் வரவேற்க வைத்தார். இப்போதும் மேதா பட்கர் போன்றவர்கள் செய்யும் இயக்கங்களில் ஆன்மீகம் இல்லை என்பார்.
சுந்தர ராமசாமியின் அஞ்சலிக் கூட்டத்தில் பேசத் தொடங்குகையில் சொன்னார் : “அவர் எங்கே? நான் எங்கே? அவர் உயரம். நான் குள்ளம். அவர் செல்வந்தர். நான் செல்வத்தைப் பற்றியே சிந்திக்காதவன்.
அவர் துணைவியார் ஓரிடத்தில் எழுதியிருப்பதைப் போல் “பணம் பண்ணத் தெரியாதவர் அல்ல; பணம் பண்ண விரும்பாதவர்.” ஒரு முறை மோதியிடம் பெசிக் கொண்டிருக்கும் போது உள்ளே போய் சாப்பிட்டு விட்டு வந்தராம். பின் “ரேஷன் அரிசி. உங்களுக்குப் பிடிக்காது. அதுதான் உங்களையும் சாப்பிட அழைக்கவில்லை” என்றாராம். ஆனால் ஒரு விஷயம், ஜெயகாந்தன் தருகிறார் என்றால் ஆலஹால விஷத்தைக் கூட மோதி விரும்பிச் சாப்பிட்டு விடுவார். மோதி மட்டுமில்லை. இன்னும் பல அன்பர்கள் அவருக்கு அப்படி உண்டு. அதில் குறிப்பிடத் தக்கவர்கள் பலர். எனக்குப் பரிச்சயமானவர்களில் திரு பி.ச. குப்புசாமி (வார்த்தை பத்ரிகையில் வந்த அவரது ‘ஆரம்பப்பள்ளிஆசிரியரின் குறிப்புகள்’ ஆசிரியர் பயிற்சி படிப்பில் பாடமாக வைக்கத் தகுந்தது.) இன்னொருவர் கோவையில் ‘சிவகாமி புத்தகப் பூங்கா’ திரு மணி அவர்கள். பல இலக்கியகர்த்தாக்கள் இவர் அண்மையில் இருந்தால் போதும் என்று எழுதாமல் இருந்து விட்டார்கள். அவர்கள் ஒவ்வொருவருமே இலக்கியத் தேட்டமும், நாட்டமும் உள்ளவர்கள். ஜே. கே.யைப் பொருத்தவரை அவர்கள் போலல்ல நான். அவர்கள் ஆழ்வார்கள். நான் தெருவில் செல்கையில் கோவிலின் உள்ளே பார்த்து நெற்றியை கும்பிடாகத் தொட்டு விட்டு போபவன். ஆனால் எனக்கே அவர் பால் இவ்வளவு அபிமானம் இருக்கிறது. மோதி  “ஜே.கே.யுடன் இருக்கும் போது ராமக்ருஷ்ண பரமஹம்சர் கூட இருப்பது போல் இருக்கும்” என்பார்.
ஒருமுறை ஜே.கே.வுக்கு ஒரு பிரபல மலையாளப் பத்ரிகையிலிருந்து தொலைபேசி வந்தது. அவர் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தேன். என்னைத் தவிர அங்கு வேறு யாரும் இல்லை. ஃபோனை வைத்ததும் சொன்னார்: “தி.மு.க. அரசின் இந்த திட்டம் பற்றி என் கருத்து எதற்கு? சோவும், அசோகமித்திரனும் எதிர்க்கிறார்கள், நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்கிறார்கள். நான் எதற்குச் சொல்லவேண்டும். அவர்கள் எதிர்க்கத்தான் செய்வார்கள். நான் எதிர்த்துக் கொண்டுதான் இருந்தேன். அப்போது காங்கிரஸும், கம்யூனிஸ்ட்களும் எதிர்த்தார்கள். இப்போ பல காலமா அவங்கல்லாம் எதிர்ப்பதை விட்டு விட்டார்கள்.அவங்களோடயே சேந்துட்டாங்க. நான் மட்டும் ஒற்றையாளாக எதற்கு எதிர்க்க வேண்டும்? அதுதான் ஒரு கருத்தும் சொல்லவில்லை.”
அவரது கதைகள் பற்றி “அவற்றைத் தாண்டி ஒன்றுமே கிடையாது” என்பவர்களும், “, unbearable, கலைத் தன்மை கிஞ்சித்தும் இல்லாதவை” என்பவர்களும் உண்டு.
ஜெயகாந்தன் கதைகள் பற்றிய என் அபிப்பிராயம் வேறு. அவரது பிரசாரத்துக்குப் பயன் பட்ட சாதனம் கதை. அவர் பிரசாரம் செய்தது ஞானம். அதனால்தான் ‘ஒவ்வொரு வீட்டிலும் ஒரு ஞான்வானை உருவாக்குங்கள்’ என்று கூறினார். மேடை, கட்டுரை, கவிதை, கதை, எல்லாவற்றையும் அவர் தன் சிந்தனைகளைத் தெரியப்படுத்தும் கருவிகளாகவே பயன் படுத்தினார். அவரை விட சிறந்த பல கதாசிரியர்கள் தமிழிலேயே உண்டு. ஆனால் அவர்களில் தெருவில் இறங்கி பணி செய்தவர்கள் அவர் போல் யாரும் இல்லை.
அடங்காத மனைவி, வேலைக்காரி, மாமனார், மாமியார் பற்றிய ஜோக்குகளை ரசித்தும், பாலுறவை மட்டுமே பகிரங்கமாகவும், மறைவாகவும் கேளிக்கையாகக் கொண்டு தன் மனைவி மட்டுமே கற்புக்கரசியாய் இருக்க வேண்டும், அடுத்தவீட்டுப் பெண் தனக்குக் கிடைக்க மாட்டாளா என்கிற எதிர்பார்ப்பிலேயே வாழ்ந்து கொண்டிருக்கும் பெரும்பான்மையோரைக் கொண்ட ஒரு சமுதாயத்தில் அவர் இந்தக் கதைகளையெல்லாம் அந்த சமுதாயத்தைத் திருப்தி செய்யவே நடத்தப்பட்ட ஜனரஞ்சகப் பத்ரிகைகளில் எழுதினார்.
அவர் எழுதுவது எதற்காக என்று அவரே சொல்வது இங்கே :- (இந்த நீர்க்குமிழி வாழ்வில் மகத்தான விஷயங்களாபவை அவை நிகழ வேண்டுமென்பதற்காக ஒருவர் மூலம் வாழ்க்கையே சகலத்தையும் அமைத்துக் கொடுப்பதுதான்.) அதற்கு இந்த லின்க் ஒரு உதாரணம்.
அவரது கதைகள் பற்றிய அபிப்பிராயங்கள் எப்படி இருந்த போதிலும், இன்னொரு ஜே.கே. யான ஜே. கிருஷ்ணமூர்த்தி பற்றி அவர் சொன்னது போல, “இவர் எல்லோரையும் ஏதோ ஓர் இடத்தில் தொட்டு விடுகிறார்.” அதனால்தான் இவரது அபிமான வட்டத்தில் சைவத் தமிழ் அறிஞர் சேக்கிழார் அடிப்பொடி டி. என். ராமச்சந்திரனாரும், வைணவத் தமிழ் அறிஞர் கம்ப ராமர் என அழைக்கப்பட்ட இராமராஜ ரெட்டியாரும், கி. வீரமணியும், இளையராஜாவும், கலைஞர் கருணாநிதியும், கவிஞர் கண்ணதாசனும், ஜெயமோகனும், வைரமுத்துவும்,  குடியரசுத் தலைவரும், ஆட்டோ ஓட்டுனரும் இருக்கிறார்கள்.
jeyakanthan
அவரது பெயரை சொன்னதால் எனக்கு ஆரணியிலும், திருச்சியிலும், கோவையிலும், சென்னையிலும்  80 வயதை நெருங்கும் திரு. பத்மநாபனிலிருந்து இளைஞரான சுகா வரைக்கும் நண்பர்கள் கிடைத்தார்கள்.பாரதியின் கவிதா மண்டலத்தில் ஜெயகாந்தனைச் சேர்ந்தவர்கள் நாங்கள். வாழ்க்கையைப் புரிந்துகொள்ள, நேர்மறையாக இருக்க, யார் மீதும் எதன் மீதும் துவேஷம் இல்லாமல் இருக்க, தமிழ், பாரதம் போன்ற கருத்துருவாக்கங்களின் மீது மெய்யான மதிப்பு வைக்கக் கற்றுத் தந்தவர் அவர்.
முதல் காதல் என்று ரொம்பவும் அடிபட்ட விஷயம் ஒன்றுண்டு. இது ஆண் பெண்ணுக்கு இடையில் வருவதுமட்டுமில்லை. ஓர் ஆளுமை, ஒரு கருத்து, ஓர் இடம் இவற்றோடு வருவதும் கூட. தாயாரின் சமையல் பற்றிக் கூட இப்படி எல்லோருக்கும் முதல் காதல் உண்டு. அதனால்தான் “அன்னையோடு அறுசுவை உண்டி போம்” என்றிருக்கிறது. அது போல் ஜெயகாந்தன் எங்களுக்கு முதற்காதல். முதற்காதல் என்கிற உணர்ச்சிச் சிடுக்கை நாட்பட நாட்பட, அறிவு சரி செய்கையில், கண்மூடித்தனமான உறவுகள் தவிர வேறெதிலும், உண்மை துலங்கும். அப்படி சரி செய்த பின்னும் அந்தக் காதல், வெளியில் நாம் என்ன பாசாங்கு செய்தாலும், உள்ளத்தில் மாற்றம் சிறிதுமின்றி ஒளிர்வது ஒரு சில இடங்களில்தான். அது மாதிரியான முதற்காதல் ஜே.கேயுடனானது. அவர் எழுத்துகளை அவரது பேச்சுகள் மங்கச் செய்யவில்லை. அவருடனான நேரடித் தொடர்புகள் அவர் எழுத்தால் விளைந்த அவர் மீதான நன் மதிப்பைக் கூட்டியனவேயன்றி சற்றும் குறைக்கவில்லை. உலக அளவில் அவரை விட சிறந்த கதைகளை எழுதியவர்கள் உண்டு. அவரைவிட சமூகத்தில் களப்பணி ஆற்றியவர்கள் உண்டு. சிந்தனைத் துறையில் உச்சங்களைத் தொட்டவர்கள் உண்டு. சினிமா எடுத்தவர்கள் உண்டு. ஆனால் இவ்வனைத்துத் துறைகளுக்கும் எங்களை அழைத்துச் சென்றவர் ஜெயகாந்தன். அனைத்தும் தழுவிய அந்தத் துறையை ஆன்மீகம் என்று சொல்லலாம். எங்கள் முதல் ஆன்மீக ஆசான் ஜெயகாந்தன்.
(முற்றும்)
************
#
“80 வயது நிரம்பியவர்களை ஆயிரம் பிறை கண்டவர்கள் என்று அழைக்கிறோம். ஆயிரம் பிறை என்பதை எப்படிக் கணக்கிடுவது? ”
” 80 வயது 10 மாதம் ஆனால், ஆயிரம் பிறையை எட்டிவிடும். 80 வருடத்திற்கு 960 சந்திர தரிசனம். சில வருடங்களில் 13 சந்திர தரிசனம் நிகழும். 80 வருஷத்தில் 30 சந்திர தரிசனம் அதிகமாக இருக்கும். அதையும் சேர்த்தால் 990 வரும். கருவிலிருக்கும் பத்து மாதத்தில் பத்து சந்திர தரிசனத்தையும் சேர்க்கும்பொழுது 1000 பிறைகள் நிறைவுபெறும் ”
* திருச்சியைச் சேர்ந்த திரு மோதி ராஜகோபால், ஆங்கிலத்திலும், தமிழிலும் மெத்தப் படித்தவர். தொழிலதிபர். பரம்பரையான செல்வந்தர். வாழ்வின் நுணுக்கங்களையும் சிக்கல்களையும், உலகத்தின் ஏற்ற இறக்கங்களையும். வியாபார தாத்பர்யங்களையும், நன்கு அறிந்த அறிந்த அனுபவசாலி. ஜே. கே.யின் “ஜெய ஜெய சங்கரா” தொடர் நூல்களை ‘மோதி பிரசுரம்’ என்கிற பெயரில் வெளியிட்டவர். இக்கட்டுரையில் அவரிடமிருந்து அறிந்த செய்திகளையும் ஆங்காங்கே தந்திருக்கிறேன்.
* * * * * * * 

Thursday, August 14, 2014

கீற்று

கீற்று


வ. ஸ்ரீநிவாசன் :  சொல்வனம் இதழ் 110 : 1-8-2014
boy-looking-out-window-in-the-rain
இளம் குளிர்.
பரவலாய் வீசும் மழை.
மரங்களில், இலைகளில் மலர்ச்சி.
வீடுகள் நனைந்து கொண்டே
வெளியே சாலையில் வேடிக்கை பார்க்கும்.
முகப்பில் சன்னல் கம்பிகளில்
அல்லது
கைகளில் கன்னம் பதித்து
சிறுமியரும், பையன்களும் கூட.
உள்ளேயும் உள்ள வானம்
“சற்றே வெறிக்கட்டுமா?”
என்று மெதுவாய்
உத்திரவு கேட்கும்.
உறங்கும் குழந்தை,
மஹாவிஷ்ணுவின் கிலுகிலுப்பைக்கு
சிரித்து முடித்த பின்னர்தான்
‘உம்’ கொட்டும்.
அதுவரை அமைதியாய்க்
கை கட்டி நிற்கத்தான் வேண்டும்.
-