FUTURE IS NOW - J Krishnamurti.

பிறப்பு, இறப்பு என்பது உண்மையே இல்லை. அத்தகைய பொய்யான தோற்றத்தை நமது மனமே உருவாக்கிக் கொள்கிறது. மனம் தனக்கென்று ஒரு உடலை உருவாக்கிக் கொள்கிறது. அதைக் கனவு மழையில் நனைத்துத் துன்பப் படுத்துகிறது. - ரமண மகர்ஷி.

Search This Blog

Friday, October 9, 2015

காண்பதும், கேட்பதும்

காண்பதும், கேட்பதும்

 | சொல்வனம் : இதழ் 137 | 04-10-2015
TN_Drivers_Rickshaw_Auto_India_Tamil_Nadu
“கண்ணால் காண்பதும் பொய்; காதால் கேட்பதும் பொய்; தீர விசாரிப்பதே மெய்” என்கிறார்கள். இந்த விசாரிப்பது என்கிற விஷயம்தான் பிரச்னை. அதற்காக, காண்பது, கேட்பது ஆகிய விஷயங்களில் பிரச்னை இல்லை என்று இல்லை. இந்த விசாரிப்பதில் யாரை விசாரிப்பது, என்ன விசாரிப்பது, எப்படி விசாரிப்பது என்று ஆரம்பத்திலேயே விவகாரம் துவங்கி விடும்.
வெளி விஷயங்களுக்கு இந்த விசாரிப்பு ஓரளவு உதவலாம். உள் விஷயங்களுக்கு நாம் யார் யாரையோ விசாரிப்பது பிரயோசனம் அற்றது. நாம் நம்மையேதான் விசாரிக்க வேண்டும்.
உலகில் உள்ள அனைத்து விவகாரங்களிலும், விஷயங்களிலும் சந்தேகம் இருந்தாலும் அவை அனைத்தும் சேர்ந்தும் நம் மீது நமக்கு இருக்கும் சந்தேகத்துக்கு இணையாக மாட்டா. உங்களைப் பற்றித் தெரியாது. என்னளவில் சொல்கிறேன்.
வெளி விஷயங்கள் பற்றி விசாரிப்பதில் அவை பற்றி கிட்டத் தட்ட தெரிந்து கொள்ளலாம்.
கோவையிலிருந்து மதுரை எத்தனை தூரம்? பஸ்ஸில் போனால் எத்தனை நேரம்? என்பதைக் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். மதுரைக்கு அடிக்கடி சென்று வருபவரைக் கேட்டால் கிட்டத் தட்ட சரியான தகவலே வரக் கூடும். கோவை டு மதுரை தடத்தில் பஸ் ஓட்டுநர்கள், நடத்துநர்கள் இன்னமும் சரியாக, துல்லியமாக, மனமிருந்தால், சொல்வார்கள்.
“எப்போ வீட்டுக்கு வர்ரீங்க?” என்கிற கேள்விக்கு, “ ஐந்து மணிக்கு” என்பவர்கள் உண்டு. “ஐந்திலிருந்து ஐந்தரைக்குள்’ என்பவர்களும் உண்டு. ஆனால் அவர்கள் எப்போது வேண்டுமானாலும் வருவார்கள். சிலர் சொல்லிவிட்டு வரமலும் போகலாம்.
சரி. இவ்வளவு பீடிகை ஏன்? இது என்ன கதையா, கட்டுரையா என்று என்னிடம் விசாரித்தீர்கள் என்றால் இது கதை என்றுதான் சொல்வேன், நம்புவதும், நம்பாததும் உங்கள் கையில்.
நான் அவ்வப்போது திருச்சிக்குப் போய் அங்கு என் மனைவியின் பூர்வீக வீட்டில் சில நாட்கள் தங்கி சில வேலைகளை முடித்துக் கொண்டு வருவதுண்டு. ஜாகை என்னவோ கோவையில். நாற்பத்தைந்து வயதிலேயே எல் ஐ சி யிலிருந்து விருப்ப ஓய்வு எடுத்துக் கொண்டு இப்போது ஓய்வு பெறும் வயது அறுபதையும் தாண்டியாயிற்று. சுக ஜீவனம். மொத்த சர்வீஸும் கோவையில் என்பதால் கோவையே தங்குமிடமாகி விட்டது. நாள் பட்ட கல்யாணம். பையன்கள் ரெண்டு பேரும் கோவையிலேயே கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தார்கள்.
திருச்சியில் வீட்டிலிருந்து எங்காவது போய் வர வேண்டுமென்றால் நான்கு தெரு தள்ளி அருகிலேயே ஆட்டோ ஸ்டாண்ட். ஒரு ஃபோன் பண்ணினால் 5 நிமிடத்தில் வந்து விடுவார்கள். அங்கிருந்த பல டிரைவர்களைப் பல வருடங்களாகத் தெரியும். அந்தப் பக்கமாக நடந்து போகையில் தெரிந்த டிரைவர்கள் இருந்தால் புன்னகைப்பார்கள்; வணக்கம் சொல்வார்கள்.
இந்த ஆட்டோக் காரர்கள் கோவை, சென்னையில் இருப்பவர்கள் போலன்றி கொஞ்சம் இணக்கமாக இருப்பார்கள். டவுன் பஸ்ஸிலும் நடத்துநர்கள் இன்னமும் கொஞ்சம் நட்போடு இருப்பார்கள். திருச்சி பெரிய கிராமம் போல் இன்னமும் கூட இருப்பது போல் தோன்றும். அதுவும் எங்கள் வீடு இருக்கும் இடம் அந்த சின்ன ஊருக்குள்  இருக்கும் இன்னொரு சின்ன ஊர். பல ஆட்டோ டிரைவர்களுக்கும் அங்கு வசிக்கும் பலரையும் பர்ஸனலாகத் தெரியும். ஊர்க் காரர்களுக்கும் அவர்களைப் பற்றி தெரியும். இவர்கள் என்றில்லை, மளிகைக் கடைக் காரர்கள், ஹோட்டல்காரர்கள், ரிக்ஷாக்காரர்கள், தெருவில் காய்கறி விற்பவர்கள் முதலிய பலருக்கும் ஊர்க்காரர்களோடு குசலம் விசரிக்க, தம் குடும்ப சேதி சொல்ல விஷயமும், நட்பும் இருக்கும்.
ஆட்டோ ஸ்டாண்டில் 10, 15 வருடங்களுக்கு முன்பு கொஞ்சம் ஆட்டோக்களே இருந்தன. ஊரிலேயே சில இடங்களில்தான் ஸ்டாண்ட் இருக்கும். இப்போதெல்லாம் பல்கிப் பெருகி விட்டன.
அப்போதெல்லாம் எங்கள் வீட்டுக்கு ரெகுலராக ஓட்டியவர் பெயர் க்ருஷ்ணன். அவர் லவுட் ஸ்பீக்கர் வாடகைக்கு விடுகிற குடும்பத்தைச் சேர்ந்தவர். லவுட் ஸ்பீக்கர் க்ருஷ்ணன் என்றுதான் சொல்வார்கள். சின்னப் பையன்தான். அப்போது 18, 20 வயதுதான் இருக்கும். ரொம்ப மரியாதையான பையன்.
சொன்னால் சொன்ன நேரத்துக்கு வந்து விடுவான். தான் வர முடியாவிட்டாலும் ஸ்டாண்டிலிருந்து வேறு யாரையாவது அனுப்பி விடுவான்.
ஒரு முறை ஊருக்கு வந்தபோது ஃபோன் பண்ணினால் எடுக்கவேயில்லை. அப்புறம் இன்னொரு வண்டியைக் கூப்பிட்டேன். அவர் பெயர் கருணாகரன். அவரே அப்புறம் தொடர்ந்து வந்தார். “க்ருஷ்ணன் எங்கேப்பா” என்று கேட்ட போது அவன் இப்போல்லாம் இந்த ஸ்டாண்டுக்கு வரதில்லை சார்” என்றார்.
ஒரு வருடம் இருக்கலாம். க்ருஷ்ணனை எதேச்சையாக திருவானைக்காவலில் பார்த்த போது வழக்கம் போல் கைகட்டிக் கொண்டு பேசினான். “ஜோசியர் ஒரு ரெண்டு வருஷம் வண்டி ஓட்ட வேண்டாம்னு சொல்லிட்டார் சார். அதான் ஓட்டறதில்லை” என்றான்.
அப்புறம் கொஞ்ச நாட்களில் ஒருவேளை ஒரு வருடம் ஒன்றரை வருடம் ஆகியிருக்கலாம். ஒருமுறை ஊருக்கு வந்தபோது க்ருஷ்ணனைப் பழைய ஸ்டாண்டிலேயே பார்த்தேன். இன்னும் சிவகுமார், வெங்கடேசன், ஞான சம்பந்தம் என்றெல்லாம் நிறையப் பேர் ஸ்டாண்டுக்கு வந்து விட்டார்கள்.
கருணாகரனையே நான் வாடிக்கையாகக் கூப்பிட்டேன். அவர் வர முடியாவிட்டால் யாரையாவது அனுப்பி விடுவார். வாடகையும் ஓரளவு நியாயமாக இருக்கும். க்ருஷ்ணனை விட கொஞ்சம் கம்மி என்றே சொல்லலாம். ஒரு முறை கருணாகரனைக் கூப்பிட்டபோது அவர் வேறு சவாரியில் இருந்ததால் க்ருஷ்ணனை அனுப்பினார்.
அதே ஒல்லியான கருத்த உருவம். பவ்யம்.
“என்னப்பா? காணவே காணோம்?” என்றேன்.
கையைக் கட்டிக் கொண்டு, தலையைக் குனிந்துகொண்டு கண்களைச் சந்திக்காமல், “மறுபடியும் இங்கேயே வந்துட்டேன் சார்” என்றான். அவன் வந்த வேளை கருணாகரனுக்கும் வேறு பிரச்னைகள் வந்தபடியால் மீண்டும் க்ருஷ்ணனே தொடர்ந்து வர ஆரம்பித்தான்.
ஒரு தடவை. நல்ல மத்தியான வேளை. திருச்சி கோடை. அவசரமாக மத்திய பஸ் ஸ்டாண்ட் போக வேண்டி இருந்தது. க்ருஷ்ணனுக்கு ஃபோன் பண்ணினேன். “இதோ வரேன் சார்’ என்றான்.
5 நிமிடத்தில் வண்டி வந்து விட்டது. ரொம்ப அநியாயத்துக்கு இளைத்துப் போயிருந்தான். அடர்த்தியில்லாத தாடி வேறு கன்னத்திலும், முகவாயிலும்.
வண்டியில் அமர்ந்ததும் “என்னப்பா? இப்படி எளச்சுட்டே?”என்றேன்.
“நான் க்ருஷ்ணன் இல்லங்க. அவன் பிரதர் ராஜேஷ்” என்றான்.
‘ அட, அப்பிடியே இருக்கே? அவர் வண்டியிலேயே வந்திருக்கே?”
“ஆமா சார் ! ரெண்டு பேருமா வண்டிய ஓட்றோம். காலைலே அவுரு, ராத்திரி நான். இன்னிக்கு அண்ணனுக்கு வேற வேலை வந்திருச்சு. அதான் நான் வந்தேன்”
பஸ் ஸ்டாண்ட் வந்ததும் ‘எவ்ளோப்பா?” என்று கேட்டேன். ஒவ்வொரு முறை ஊருக்கு வரும்போதும் பல மாதங்கள் ஆகியிருப்பதால் எல்லா டிரைவர்களிடமும் வாடகை என்ன என்று கேட்டே கொடுப்பேன். அவர்களும் பெரும்பாலும் நியாயமாகவே சொல்வார்கள்.
கையைக் கட்டிக் கொண்டு பவ்யமாக “200 ருபாய் சார்” என்றான் ராஜேஷ்.
“இருநூறா? க்ருஷ்ணன் 150 தானே வாங்குவாரு?”
“இல்ல சார் இப்போ ஏறிடுச்சு”
எனக்கு எரிச்சலாக இருந்தது. உடனே க்ருஷ்ணனுக்கு ஃபோன் போட்டேன்.
ராஜேஷ் தன் பான்ட் பாக்கட்டில் கையை விட்டு செல் ஃபோனை எடுத்து “ஹலோ’ என்றான்.
“க்ருஷ்ணா” என்றேன்.
“சொல்லுங்க சார்”
எனக்குக் குழப்பமாக இருந்தது. “க்ருஷ்ணன்தானே?”
“இல்ல சார் நான் அவுரு ப்ரதர் ராஜேஷ்”
நான் ஃபோனைத் துண்டித்தேன்.
“என்னப்பா அவன் ஃபோனை நீ வச்சுண்டு இருக்கே?”
‘ஆமா சார். இது சவாரிக்கான ஃபோன். ஆட்டோலேயிருக்கும். இதத் தவிர எங்களுக்கு தனித் தனி ஃபோன் ரெண்டு பேர்கிட்டேயும் இருக்கு”
“சரி ! இந்தா” என்று ரூபாய் 200 ஐக் கொடுத்துவிட்டு போனேன்.
அடுத்த தடவை ஊர் வந்த போது, க்ருஷ்ணனிடம் சொன்னேன் : “உன் தம்பி பஸ் ஸ்டாண்டுக்கு இருநூறு வாங்கிட்டாம்பா”
“இல்ல சார் இப்போ இருநூறுதான்” என்றான்.
அண்ணன் தம்பி தொடர்ந்து வந்தார்கள். கொஞ்சம் ரேட் ஜாஸ்திதான். ஆனால் பதவிசாக ஓட்டுவார்கள். அனாவசிய வேகம் இருக்காது.
ஒரு தரம் ஒரு சேஞ்சுக்காக சிவகுமாரைக் கூப்பிட்டேன், பஸ் ஸ்டாண்ட் போக.
எல்லா ஆட்டோக்களின் விஸிடிங் கார்டுகளும் என்னிடம் இருந்தன. எல்லா கார்ட் களிலும் ரங்கநாதர் சயனித்துக் கொண்டிருப்பார். அதே போல் ஆட்டோக்களின் முகப்புக் கண்ணாடியின் உட்புறத்தில் ரங்கநாதரின் அனந்த சயனம் நிச்சயம் உண்டு. கூடவே வேறொரு சாமி அல்லது அம்மன் துணை என்று போட்டிருக்கும். வெளிக் கண்ணாடிகளிலும், ஸீட்டின் பக்கப் பலகைகளிலும் ஒரு அஜீத்தோ, விஜய்யோ இருப்பர்கள். 15 வருடம் முன்னால் ரஜினி, கமல் படங்கள் இருந்தன.
சிவகுமார் கொஞ்சம் குண்டாகக் கருப்பாக இருப்பான். தாடி பெரிதாக அடர்த்தியாக இருந்தது. க்ருஷ்ணன் வயதுதான் இருக்கும்.
“என்னப்பா தாடி? ஏதாவது வேண்டுதலா?”
“இல்ல சார். வைஃப் ப்ரெக்னன்டா இருக்காங்க. வீட்டுல அதான் ஷேவ் பண்ணக் கூடாதுனுட்டாங்க.”
சிவகுமார் பஸ் ஸ்டாண்ட் போக 150/ தான் வாங்கினான். கொஞ்சம் வேகம் அதிகம். நான் சொல்லி விட்டேன். “எனக்கு அவசரம் கிடையாது சிவகுமார். மெள்ள நிதானமாப் போங்க.” என்று.
அப்புறம் ஒரு மாதத்துக்குள் இரண்டுதடவை போக வேண்டி ஆகி விட்டது. இரண்டு தடவையும் போய் ஒரு வாரம் தங்கியபோது சிவகுமாரையே கூப்பிட்டேன். அவனையும் பழகி விட்டது.
அப்புறம் திருச்சிக்குப் போய் 6 மாசம் ஆகி விட்டது. மேலே வீட்டில் குடி இருந்தவர்கள் காலி செய்கிறார்கள். அதனால் போய் ஒரு பத்து நாள் தங்க வேண்டி வந்தது.
வெளியில் போக வேண்டி வந்ததும் சிவகுமாரைக் கூப்பிட்டேன்.
“குழந்தை பிறந்து விட்டதா?” என்று கேட்டேன். “இல்ல சார், இன்னும் ரெண்டு மாசம் ஆகும்” என்றான். தாடியை மழித்திருந்தான். நான் ஒன்றும் கேட்கவில்லை. வண்டி கிளம்பியதும் வழக்கம்போல் கருணாகரன், வெங்கடேசன் என்று எல்லாரும் எப்படி இருக்கிறார்கள் என்று கேட்டுக் கொண்டே வந்தேன்.
“கருணாகரனுக்குக் கல்யாணம் ஆகி விட்டது. கரூர் போயிட்டான். அங்கே இப்போ வண்டி ஓட்டறான். ஞான சம்பந்தம் காடராக்ட் ஆபரேஷன் பண்ணி ஒரு வாரமா வண்டி ஓட்றதில்லை.”
“க்ருஷ்ணன், ராஜேஷ் எப்படி இருக்காங்க?”
“ஆங்.. க்ருஷ்ணன் இருக்கான். ராஜேஷ் இல்லை” என்றான்.
அண்ணனுக்குக் கல்யாணம் ஆயாச்சு. தம்பிக்கு ஆகலை. பிரிஞ்சு போயிட்டானோ என்னவோன்னு நினத்தபடியே,
“ஏன்? எங்க போயிட்டான்?” என்று கேட்டேன்.
“இல்லங்க. அவன் இல்லை” என்றான்.
“என்னப்பா சொல்றே?”
“உடம்பு சரியில்லாம இருந்தான். வீட்டிலேயே இருந்தான். இப்போ இல்லை”
மேற்கொண்டு அவன் பேச விரும்பவில்லை. வண்டியின் வேகத்தை அதிகப் படுத்தினான்.
“மொள்ள போப்பா’ என்றேன்.
ரொம்ப ஒல்லியா இருந்தான். என்ன வியாதியோ பாவம். வேறென்ன பழக்கம் இருந்ததோ?
எங்கள் வீட்டின் மேலே குடியிருந்தவர்கள் சொன்னது ஞாபகம் வந்தது.
“இப்போல்லாம் ஞாயிற்றுக் கிழமைகளில் மத்தியானத்துக்குப் பின்னால ஆட்டோவே கிடைக்கறதில்லை. எல்லாரும் எங்கயோ போயிடறாங்க. பக்கத்து வீட்டுல லட்சுமணன் பொண்ணு பிரசவ வலிலே துடிச்ச்ண்டு இருந்தா. ஞாயித்துக் கிழமை ராத்திரி மணி 8. ஒரு ஆட்டோ வரலை. அப்பறமா தில்லை நகர்லேருந்து யாரோ அவங்க சொந்தக்காரங்க ஆட்டோ கூட்டிண்டு வந்தாங்க. இந்த டிரைவர்கள் எல்லோருமே ரொம்ப நல்லவர்கள். மரியாதையானவர்கள். ஏழைகள். உழைக்கிறவர்கள். ஆனா யார் யாரோ எது எதுவோ செய்யறாங்க. யார் யாராலேயோ.”
இறங்கும் போது “இன்னும் 10 நாள் இருப்பேன். கொஞ்ச இடங்களுக்குப் போக வேண்டி இருக்கு” என்று சிவகுமாரிடம் சொல்லி அனுப்பினேன்.
வயலூர், வெக்காளியம்மன் கோவில், ஐயப்பன் கோவில், உத்தமர் கோவில் எல்லாம் போய் வந்தேன்.
ஊருக்குக் கிளம்புகிற அன்று காலை சமயபுரம் ப்ரொக்ராம். சிவகுமாரைக் கூப்பிட்டேன். 7:30க்கு வரச் சொன்னேன்.
7: 30 க்கு வண்டி வந்ததற்கு அடையாளமாக ஹார்ன் 2 முறை அடித்தது.
“இதோ வரேன்” என்று குரல் கொடுத்து விட்டு 5 நிமிஷத்தில் வெளியே போனேன்.
க்ருஷ்ணன்.
“என்னப்பா எப்படி இருக்கே?”
வண்டியிலிருந்து இறங்கி நின்று கை கட்டி “நல்லா இருக்கேன் சார்” என்றான்.
“சமயபுரம் போலாம்” என்றேன்.
வண்டி கிளம்பியதும் எப்படிக் கேட்பது என்று தெரியவில்லை. வருத்தமாக இருந்தது. இவனுக்கே 30, 32 வயதுதான் இருக்கும். இவன் தம்பி. இன்னமும் சின்னவன். பாவம்.
“வீட்டிலே எல்லாம் சௌக்கியமா?’
“இருக்காங்க சார்”
‘ராஜேஷ்…’ என்று ஆரம்பித்ததும்
“நைட் டூட்டி சார்” என்றான்.
எனக்கு ஒன்றுமே புரியவில்லை. ஒரே குழப்பம். சிவகுமார் “இல்லை” என்று சொன்னதை நாம்தான் தப்பாகப் புரிந்து கொண்டு விட்டோமோ? நல்ல வேளை உளராமல் இருந்தோம்.
“இப்போ எங்கே இருக்கான்?” என்றேன். இது என்ன கேள்வி என்று எனக்கே புரியவில்லை.
கொஞ்சம் விட்டு பதில் வந்தது. “வீட்டுல இருக்கான் சார்”
நான் மேற்கொண்டு பேசவில்லை.
கோவிலுக்குப் போய் விட்டு வீட்டுக்கு வந்து க்ருஷ்ணனை அனுப்பிய பின் சிவகுமாருக்கு ஃபோன் பண்ணினேன்.
“எங்கப்பா இருக்கே?”
“வீட்லதான் இருக்கேன் சார். எங்கெயாவது போணுமா சார்?”
“இல்லல்ல. ஏன்யா வரலை காலைலே?’
“சாரி சார். அம்மாக்கு கொஞ்சம் ஒடம்பு சரியில்லே. ஆஸ்பத்ரி போயிட்டேன். அதான் க்ருஷ்ணனை அனுப்பிச்சேனே சார். வரலையா அவன்?”
“வந்தான் வந்தான். அம்மா எப்படி இருக்காங்க?”
“கொஞ்சம் முடியலதான் சார். இன்னும் ரெண்டு நாளைக்கு வண்டிய எடுக்க முடியாது. அம்மா கூட ஆஸ்பத்ரிலே இருக்கணும். அம்மாக்கு சாப்பாடு எடுத்துட்டு போகத்தான் வீட்டுக்கு வந்தேன் சார்.”
“பத்ரமா பாத்துக்கோப்பா.. ஆமாம் அவன் என்னமோ ராஜேஷ் வீட்ல இருக்காங்கறான்?”
“ஆமாம் சார். அவன் அப்படித்தான் சொல்லுவான்.”
“பணம் எதாவது வேணுமா சிவகுமார்?’
‘இல்லங்க சார். இருக்கு. வண்டி வேணுன்னா சொல்லுங்க சார். பசங்களை அனுப்பறேன்”
“சரிப்பா”
அன்று இரவு கோவைக்குத் திரும்ப வேண்டும். பத்தே முக்காலுக்கு வண்டி. சிவகுமார் வரமாட்டான் என்பதால், க்ருஷ்ணனுக்கு ஃபோன் பண்ணி ஒன்பதே முக்காலுக்கு வீட்டுக்கு வரச் சொன்னேன்.
சரியாக ஒன்பது நாற்பதுக்கெல்லாம் ஆட்டோ வந்து விட்டது. நான் வெளியே வந்ததும் வழக்கம் போல் வண்டியிலிருந்து இறங்கி கை கட்டிக் கொண்டு பவ்யமாக நின்றான்.
“க்ருஷ்ணா, ஜங்க்ஷனுக்குப் போலாம்பா” என்றவாறே தோள் பையை ஸீட்டில் வைத்து விட்டு ஏறி உட்கார்ந்தேன்.
முன்னால் ஏறிக் கொண்டே “சரிங்க சார், நான் ராஜேஷ் சார்” என்றான்.
வண்டி புறப்பட்டு விட்டது. நான் ஸீட்டில் சரிந்து உட்கார்ந்து விட்டேன். இருட்டு வேறு.
கோஞ்சம் வினாடிகள் கழித்துக் கேட்டேன்:
“ஏன் அண்ணன் வரலை?”
கொஞ்சம் விட்டு பதில் வந்தது.
“ராத்திரிலே அண்ணன் ஓட்டறதில்லை சார், நான்தான்”
குரல் கம்மியிருந்ததோ? அரைகுறை இருட்டிலும், தெருவிளக்கொளியிலும் காதுகளுக்கு முன்னாலும், அடியிலும் அடர்த்தியற்ற தாடி தெரிந்தது. காலையில் இருந்ததா? உடம்பு இளைப்பாகத்தான் தெரிந்தது. வண்டி வேகம் எடுத்தது. பின்னந்தலையும், காலரும், காக்கிச் சட்டையில் மறைந்த மெலிந்த தோள்களும்தான் தெரிந்தன.
இந்த குண்டும் குழியுமான திருச்சியின் சாலைகளில், ஆட்டோவில், எந்த உடம்புதான் குலுங்காது?

No comments: