FUTURE IS NOW - J Krishnamurti.

பிறப்பு, இறப்பு என்பது உண்மையே இல்லை. அத்தகைய பொய்யான தோற்றத்தை நமது மனமே உருவாக்கிக் கொள்கிறது. மனம் தனக்கென்று ஒரு உடலை உருவாக்கிக் கொள்கிறது. அதைக் கனவு மழையில் நனைத்துத் துன்பப் படுத்துகிறது. - ரமண மகர்ஷி.

Search This Blog

Friday, October 9, 2015

காண்பதும், கேட்பதும்

காண்பதும், கேட்பதும்

 | சொல்வனம் : இதழ் 137 | 04-10-2015
TN_Drivers_Rickshaw_Auto_India_Tamil_Nadu
“கண்ணால் காண்பதும் பொய்; காதால் கேட்பதும் பொய்; தீர விசாரிப்பதே மெய்” என்கிறார்கள். இந்த விசாரிப்பது என்கிற விஷயம்தான் பிரச்னை. அதற்காக, காண்பது, கேட்பது ஆகிய விஷயங்களில் பிரச்னை இல்லை என்று இல்லை. இந்த விசாரிப்பதில் யாரை விசாரிப்பது, என்ன விசாரிப்பது, எப்படி விசாரிப்பது என்று ஆரம்பத்திலேயே விவகாரம் துவங்கி விடும்.
வெளி விஷயங்களுக்கு இந்த விசாரிப்பு ஓரளவு உதவலாம். உள் விஷயங்களுக்கு நாம் யார் யாரையோ விசாரிப்பது பிரயோசனம் அற்றது. நாம் நம்மையேதான் விசாரிக்க வேண்டும்.
உலகில் உள்ள அனைத்து விவகாரங்களிலும், விஷயங்களிலும் சந்தேகம் இருந்தாலும் அவை அனைத்தும் சேர்ந்தும் நம் மீது நமக்கு இருக்கும் சந்தேகத்துக்கு இணையாக மாட்டா. உங்களைப் பற்றித் தெரியாது. என்னளவில் சொல்கிறேன்.
வெளி விஷயங்கள் பற்றி விசாரிப்பதில் அவை பற்றி கிட்டத் தட்ட தெரிந்து கொள்ளலாம்.
கோவையிலிருந்து மதுரை எத்தனை தூரம்? பஸ்ஸில் போனால் எத்தனை நேரம்? என்பதைக் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். மதுரைக்கு அடிக்கடி சென்று வருபவரைக் கேட்டால் கிட்டத் தட்ட சரியான தகவலே வரக் கூடும். கோவை டு மதுரை தடத்தில் பஸ் ஓட்டுநர்கள், நடத்துநர்கள் இன்னமும் சரியாக, துல்லியமாக, மனமிருந்தால், சொல்வார்கள்.
“எப்போ வீட்டுக்கு வர்ரீங்க?” என்கிற கேள்விக்கு, “ ஐந்து மணிக்கு” என்பவர்கள் உண்டு. “ஐந்திலிருந்து ஐந்தரைக்குள்’ என்பவர்களும் உண்டு. ஆனால் அவர்கள் எப்போது வேண்டுமானாலும் வருவார்கள். சிலர் சொல்லிவிட்டு வரமலும் போகலாம்.
சரி. இவ்வளவு பீடிகை ஏன்? இது என்ன கதையா, கட்டுரையா என்று என்னிடம் விசாரித்தீர்கள் என்றால் இது கதை என்றுதான் சொல்வேன், நம்புவதும், நம்பாததும் உங்கள் கையில்.
நான் அவ்வப்போது திருச்சிக்குப் போய் அங்கு என் மனைவியின் பூர்வீக வீட்டில் சில நாட்கள் தங்கி சில வேலைகளை முடித்துக் கொண்டு வருவதுண்டு. ஜாகை என்னவோ கோவையில். நாற்பத்தைந்து வயதிலேயே எல் ஐ சி யிலிருந்து விருப்ப ஓய்வு எடுத்துக் கொண்டு இப்போது ஓய்வு பெறும் வயது அறுபதையும் தாண்டியாயிற்று. சுக ஜீவனம். மொத்த சர்வீஸும் கோவையில் என்பதால் கோவையே தங்குமிடமாகி விட்டது. நாள் பட்ட கல்யாணம். பையன்கள் ரெண்டு பேரும் கோவையிலேயே கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தார்கள்.
திருச்சியில் வீட்டிலிருந்து எங்காவது போய் வர வேண்டுமென்றால் நான்கு தெரு தள்ளி அருகிலேயே ஆட்டோ ஸ்டாண்ட். ஒரு ஃபோன் பண்ணினால் 5 நிமிடத்தில் வந்து விடுவார்கள். அங்கிருந்த பல டிரைவர்களைப் பல வருடங்களாகத் தெரியும். அந்தப் பக்கமாக நடந்து போகையில் தெரிந்த டிரைவர்கள் இருந்தால் புன்னகைப்பார்கள்; வணக்கம் சொல்வார்கள்.
இந்த ஆட்டோக் காரர்கள் கோவை, சென்னையில் இருப்பவர்கள் போலன்றி கொஞ்சம் இணக்கமாக இருப்பார்கள். டவுன் பஸ்ஸிலும் நடத்துநர்கள் இன்னமும் கொஞ்சம் நட்போடு இருப்பார்கள். திருச்சி பெரிய கிராமம் போல் இன்னமும் கூட இருப்பது போல் தோன்றும். அதுவும் எங்கள் வீடு இருக்கும் இடம் அந்த சின்ன ஊருக்குள்  இருக்கும் இன்னொரு சின்ன ஊர். பல ஆட்டோ டிரைவர்களுக்கும் அங்கு வசிக்கும் பலரையும் பர்ஸனலாகத் தெரியும். ஊர்க் காரர்களுக்கும் அவர்களைப் பற்றி தெரியும். இவர்கள் என்றில்லை, மளிகைக் கடைக் காரர்கள், ஹோட்டல்காரர்கள், ரிக்ஷாக்காரர்கள், தெருவில் காய்கறி விற்பவர்கள் முதலிய பலருக்கும் ஊர்க்காரர்களோடு குசலம் விசரிக்க, தம் குடும்ப சேதி சொல்ல விஷயமும், நட்பும் இருக்கும்.
ஆட்டோ ஸ்டாண்டில் 10, 15 வருடங்களுக்கு முன்பு கொஞ்சம் ஆட்டோக்களே இருந்தன. ஊரிலேயே சில இடங்களில்தான் ஸ்டாண்ட் இருக்கும். இப்போதெல்லாம் பல்கிப் பெருகி விட்டன.
அப்போதெல்லாம் எங்கள் வீட்டுக்கு ரெகுலராக ஓட்டியவர் பெயர் க்ருஷ்ணன். அவர் லவுட் ஸ்பீக்கர் வாடகைக்கு விடுகிற குடும்பத்தைச் சேர்ந்தவர். லவுட் ஸ்பீக்கர் க்ருஷ்ணன் என்றுதான் சொல்வார்கள். சின்னப் பையன்தான். அப்போது 18, 20 வயதுதான் இருக்கும். ரொம்ப மரியாதையான பையன்.
சொன்னால் சொன்ன நேரத்துக்கு வந்து விடுவான். தான் வர முடியாவிட்டாலும் ஸ்டாண்டிலிருந்து வேறு யாரையாவது அனுப்பி விடுவான்.
ஒரு முறை ஊருக்கு வந்தபோது ஃபோன் பண்ணினால் எடுக்கவேயில்லை. அப்புறம் இன்னொரு வண்டியைக் கூப்பிட்டேன். அவர் பெயர் கருணாகரன். அவரே அப்புறம் தொடர்ந்து வந்தார். “க்ருஷ்ணன் எங்கேப்பா” என்று கேட்ட போது அவன் இப்போல்லாம் இந்த ஸ்டாண்டுக்கு வரதில்லை சார்” என்றார்.
ஒரு வருடம் இருக்கலாம். க்ருஷ்ணனை எதேச்சையாக திருவானைக்காவலில் பார்த்த போது வழக்கம் போல் கைகட்டிக் கொண்டு பேசினான். “ஜோசியர் ஒரு ரெண்டு வருஷம் வண்டி ஓட்ட வேண்டாம்னு சொல்லிட்டார் சார். அதான் ஓட்டறதில்லை” என்றான்.
அப்புறம் கொஞ்ச நாட்களில் ஒருவேளை ஒரு வருடம் ஒன்றரை வருடம் ஆகியிருக்கலாம். ஒருமுறை ஊருக்கு வந்தபோது க்ருஷ்ணனைப் பழைய ஸ்டாண்டிலேயே பார்த்தேன். இன்னும் சிவகுமார், வெங்கடேசன், ஞான சம்பந்தம் என்றெல்லாம் நிறையப் பேர் ஸ்டாண்டுக்கு வந்து விட்டார்கள்.
கருணாகரனையே நான் வாடிக்கையாகக் கூப்பிட்டேன். அவர் வர முடியாவிட்டால் யாரையாவது அனுப்பி விடுவார். வாடகையும் ஓரளவு நியாயமாக இருக்கும். க்ருஷ்ணனை விட கொஞ்சம் கம்மி என்றே சொல்லலாம். ஒரு முறை கருணாகரனைக் கூப்பிட்டபோது அவர் வேறு சவாரியில் இருந்ததால் க்ருஷ்ணனை அனுப்பினார்.
அதே ஒல்லியான கருத்த உருவம். பவ்யம்.
“என்னப்பா? காணவே காணோம்?” என்றேன்.
கையைக் கட்டிக் கொண்டு, தலையைக் குனிந்துகொண்டு கண்களைச் சந்திக்காமல், “மறுபடியும் இங்கேயே வந்துட்டேன் சார்” என்றான். அவன் வந்த வேளை கருணாகரனுக்கும் வேறு பிரச்னைகள் வந்தபடியால் மீண்டும் க்ருஷ்ணனே தொடர்ந்து வர ஆரம்பித்தான்.
ஒரு தடவை. நல்ல மத்தியான வேளை. திருச்சி கோடை. அவசரமாக மத்திய பஸ் ஸ்டாண்ட் போக வேண்டி இருந்தது. க்ருஷ்ணனுக்கு ஃபோன் பண்ணினேன். “இதோ வரேன் சார்’ என்றான்.
5 நிமிடத்தில் வண்டி வந்து விட்டது. ரொம்ப அநியாயத்துக்கு இளைத்துப் போயிருந்தான். அடர்த்தியில்லாத தாடி வேறு கன்னத்திலும், முகவாயிலும்.
வண்டியில் அமர்ந்ததும் “என்னப்பா? இப்படி எளச்சுட்டே?”என்றேன்.
“நான் க்ருஷ்ணன் இல்லங்க. அவன் பிரதர் ராஜேஷ்” என்றான்.
‘ அட, அப்பிடியே இருக்கே? அவர் வண்டியிலேயே வந்திருக்கே?”
“ஆமா சார் ! ரெண்டு பேருமா வண்டிய ஓட்றோம். காலைலே அவுரு, ராத்திரி நான். இன்னிக்கு அண்ணனுக்கு வேற வேலை வந்திருச்சு. அதான் நான் வந்தேன்”
பஸ் ஸ்டாண்ட் வந்ததும் ‘எவ்ளோப்பா?” என்று கேட்டேன். ஒவ்வொரு முறை ஊருக்கு வரும்போதும் பல மாதங்கள் ஆகியிருப்பதால் எல்லா டிரைவர்களிடமும் வாடகை என்ன என்று கேட்டே கொடுப்பேன். அவர்களும் பெரும்பாலும் நியாயமாகவே சொல்வார்கள்.
கையைக் கட்டிக் கொண்டு பவ்யமாக “200 ருபாய் சார்” என்றான் ராஜேஷ்.
“இருநூறா? க்ருஷ்ணன் 150 தானே வாங்குவாரு?”
“இல்ல சார் இப்போ ஏறிடுச்சு”
எனக்கு எரிச்சலாக இருந்தது. உடனே க்ருஷ்ணனுக்கு ஃபோன் போட்டேன்.
ராஜேஷ் தன் பான்ட் பாக்கட்டில் கையை விட்டு செல் ஃபோனை எடுத்து “ஹலோ’ என்றான்.
“க்ருஷ்ணா” என்றேன்.
“சொல்லுங்க சார்”
எனக்குக் குழப்பமாக இருந்தது. “க்ருஷ்ணன்தானே?”
“இல்ல சார் நான் அவுரு ப்ரதர் ராஜேஷ்”
நான் ஃபோனைத் துண்டித்தேன்.
“என்னப்பா அவன் ஃபோனை நீ வச்சுண்டு இருக்கே?”
‘ஆமா சார். இது சவாரிக்கான ஃபோன். ஆட்டோலேயிருக்கும். இதத் தவிர எங்களுக்கு தனித் தனி ஃபோன் ரெண்டு பேர்கிட்டேயும் இருக்கு”
“சரி ! இந்தா” என்று ரூபாய் 200 ஐக் கொடுத்துவிட்டு போனேன்.
அடுத்த தடவை ஊர் வந்த போது, க்ருஷ்ணனிடம் சொன்னேன் : “உன் தம்பி பஸ் ஸ்டாண்டுக்கு இருநூறு வாங்கிட்டாம்பா”
“இல்ல சார் இப்போ இருநூறுதான்” என்றான்.
அண்ணன் தம்பி தொடர்ந்து வந்தார்கள். கொஞ்சம் ரேட் ஜாஸ்திதான். ஆனால் பதவிசாக ஓட்டுவார்கள். அனாவசிய வேகம் இருக்காது.
ஒரு தரம் ஒரு சேஞ்சுக்காக சிவகுமாரைக் கூப்பிட்டேன், பஸ் ஸ்டாண்ட் போக.
எல்லா ஆட்டோக்களின் விஸிடிங் கார்டுகளும் என்னிடம் இருந்தன. எல்லா கார்ட் களிலும் ரங்கநாதர் சயனித்துக் கொண்டிருப்பார். அதே போல் ஆட்டோக்களின் முகப்புக் கண்ணாடியின் உட்புறத்தில் ரங்கநாதரின் அனந்த சயனம் நிச்சயம் உண்டு. கூடவே வேறொரு சாமி அல்லது அம்மன் துணை என்று போட்டிருக்கும். வெளிக் கண்ணாடிகளிலும், ஸீட்டின் பக்கப் பலகைகளிலும் ஒரு அஜீத்தோ, விஜய்யோ இருப்பர்கள். 15 வருடம் முன்னால் ரஜினி, கமல் படங்கள் இருந்தன.
சிவகுமார் கொஞ்சம் குண்டாகக் கருப்பாக இருப்பான். தாடி பெரிதாக அடர்த்தியாக இருந்தது. க்ருஷ்ணன் வயதுதான் இருக்கும்.
“என்னப்பா தாடி? ஏதாவது வேண்டுதலா?”
“இல்ல சார். வைஃப் ப்ரெக்னன்டா இருக்காங்க. வீட்டுல அதான் ஷேவ் பண்ணக் கூடாதுனுட்டாங்க.”
சிவகுமார் பஸ் ஸ்டாண்ட் போக 150/ தான் வாங்கினான். கொஞ்சம் வேகம் அதிகம். நான் சொல்லி விட்டேன். “எனக்கு அவசரம் கிடையாது சிவகுமார். மெள்ள நிதானமாப் போங்க.” என்று.
அப்புறம் ஒரு மாதத்துக்குள் இரண்டுதடவை போக வேண்டி ஆகி விட்டது. இரண்டு தடவையும் போய் ஒரு வாரம் தங்கியபோது சிவகுமாரையே கூப்பிட்டேன். அவனையும் பழகி விட்டது.
அப்புறம் திருச்சிக்குப் போய் 6 மாசம் ஆகி விட்டது. மேலே வீட்டில் குடி இருந்தவர்கள் காலி செய்கிறார்கள். அதனால் போய் ஒரு பத்து நாள் தங்க வேண்டி வந்தது.
வெளியில் போக வேண்டி வந்ததும் சிவகுமாரைக் கூப்பிட்டேன்.
“குழந்தை பிறந்து விட்டதா?” என்று கேட்டேன். “இல்ல சார், இன்னும் ரெண்டு மாசம் ஆகும்” என்றான். தாடியை மழித்திருந்தான். நான் ஒன்றும் கேட்கவில்லை. வண்டி கிளம்பியதும் வழக்கம்போல் கருணாகரன், வெங்கடேசன் என்று எல்லாரும் எப்படி இருக்கிறார்கள் என்று கேட்டுக் கொண்டே வந்தேன்.
“கருணாகரனுக்குக் கல்யாணம் ஆகி விட்டது. கரூர் போயிட்டான். அங்கே இப்போ வண்டி ஓட்டறான். ஞான சம்பந்தம் காடராக்ட் ஆபரேஷன் பண்ணி ஒரு வாரமா வண்டி ஓட்றதில்லை.”
“க்ருஷ்ணன், ராஜேஷ் எப்படி இருக்காங்க?”
“ஆங்.. க்ருஷ்ணன் இருக்கான். ராஜேஷ் இல்லை” என்றான்.
அண்ணனுக்குக் கல்யாணம் ஆயாச்சு. தம்பிக்கு ஆகலை. பிரிஞ்சு போயிட்டானோ என்னவோன்னு நினத்தபடியே,
“ஏன்? எங்க போயிட்டான்?” என்று கேட்டேன்.
“இல்லங்க. அவன் இல்லை” என்றான்.
“என்னப்பா சொல்றே?”
“உடம்பு சரியில்லாம இருந்தான். வீட்டிலேயே இருந்தான். இப்போ இல்லை”
மேற்கொண்டு அவன் பேச விரும்பவில்லை. வண்டியின் வேகத்தை அதிகப் படுத்தினான்.
“மொள்ள போப்பா’ என்றேன்.
ரொம்ப ஒல்லியா இருந்தான். என்ன வியாதியோ பாவம். வேறென்ன பழக்கம் இருந்ததோ?
எங்கள் வீட்டின் மேலே குடியிருந்தவர்கள் சொன்னது ஞாபகம் வந்தது.
“இப்போல்லாம் ஞாயிற்றுக் கிழமைகளில் மத்தியானத்துக்குப் பின்னால ஆட்டோவே கிடைக்கறதில்லை. எல்லாரும் எங்கயோ போயிடறாங்க. பக்கத்து வீட்டுல லட்சுமணன் பொண்ணு பிரசவ வலிலே துடிச்ச்ண்டு இருந்தா. ஞாயித்துக் கிழமை ராத்திரி மணி 8. ஒரு ஆட்டோ வரலை. அப்பறமா தில்லை நகர்லேருந்து யாரோ அவங்க சொந்தக்காரங்க ஆட்டோ கூட்டிண்டு வந்தாங்க. இந்த டிரைவர்கள் எல்லோருமே ரொம்ப நல்லவர்கள். மரியாதையானவர்கள். ஏழைகள். உழைக்கிறவர்கள். ஆனா யார் யாரோ எது எதுவோ செய்யறாங்க. யார் யாராலேயோ.”
இறங்கும் போது “இன்னும் 10 நாள் இருப்பேன். கொஞ்ச இடங்களுக்குப் போக வேண்டி இருக்கு” என்று சிவகுமாரிடம் சொல்லி அனுப்பினேன்.
வயலூர், வெக்காளியம்மன் கோவில், ஐயப்பன் கோவில், உத்தமர் கோவில் எல்லாம் போய் வந்தேன்.
ஊருக்குக் கிளம்புகிற அன்று காலை சமயபுரம் ப்ரொக்ராம். சிவகுமாரைக் கூப்பிட்டேன். 7:30க்கு வரச் சொன்னேன்.
7: 30 க்கு வண்டி வந்ததற்கு அடையாளமாக ஹார்ன் 2 முறை அடித்தது.
“இதோ வரேன்” என்று குரல் கொடுத்து விட்டு 5 நிமிஷத்தில் வெளியே போனேன்.
க்ருஷ்ணன்.
“என்னப்பா எப்படி இருக்கே?”
வண்டியிலிருந்து இறங்கி நின்று கை கட்டி “நல்லா இருக்கேன் சார்” என்றான்.
“சமயபுரம் போலாம்” என்றேன்.
வண்டி கிளம்பியதும் எப்படிக் கேட்பது என்று தெரியவில்லை. வருத்தமாக இருந்தது. இவனுக்கே 30, 32 வயதுதான் இருக்கும். இவன் தம்பி. இன்னமும் சின்னவன். பாவம்.
“வீட்டிலே எல்லாம் சௌக்கியமா?’
“இருக்காங்க சார்”
‘ராஜேஷ்…’ என்று ஆரம்பித்ததும்
“நைட் டூட்டி சார்” என்றான்.
எனக்கு ஒன்றுமே புரியவில்லை. ஒரே குழப்பம். சிவகுமார் “இல்லை” என்று சொன்னதை நாம்தான் தப்பாகப் புரிந்து கொண்டு விட்டோமோ? நல்ல வேளை உளராமல் இருந்தோம்.
“இப்போ எங்கே இருக்கான்?” என்றேன். இது என்ன கேள்வி என்று எனக்கே புரியவில்லை.
கொஞ்சம் விட்டு பதில் வந்தது. “வீட்டுல இருக்கான் சார்”
நான் மேற்கொண்டு பேசவில்லை.
கோவிலுக்குப் போய் விட்டு வீட்டுக்கு வந்து க்ருஷ்ணனை அனுப்பிய பின் சிவகுமாருக்கு ஃபோன் பண்ணினேன்.
“எங்கப்பா இருக்கே?”
“வீட்லதான் இருக்கேன் சார். எங்கெயாவது போணுமா சார்?”
“இல்லல்ல. ஏன்யா வரலை காலைலே?’
“சாரி சார். அம்மாக்கு கொஞ்சம் ஒடம்பு சரியில்லே. ஆஸ்பத்ரி போயிட்டேன். அதான் க்ருஷ்ணனை அனுப்பிச்சேனே சார். வரலையா அவன்?”
“வந்தான் வந்தான். அம்மா எப்படி இருக்காங்க?”
“கொஞ்சம் முடியலதான் சார். இன்னும் ரெண்டு நாளைக்கு வண்டிய எடுக்க முடியாது. அம்மா கூட ஆஸ்பத்ரிலே இருக்கணும். அம்மாக்கு சாப்பாடு எடுத்துட்டு போகத்தான் வீட்டுக்கு வந்தேன் சார்.”
“பத்ரமா பாத்துக்கோப்பா.. ஆமாம் அவன் என்னமோ ராஜேஷ் வீட்ல இருக்காங்கறான்?”
“ஆமாம் சார். அவன் அப்படித்தான் சொல்லுவான்.”
“பணம் எதாவது வேணுமா சிவகுமார்?’
‘இல்லங்க சார். இருக்கு. வண்டி வேணுன்னா சொல்லுங்க சார். பசங்களை அனுப்பறேன்”
“சரிப்பா”
அன்று இரவு கோவைக்குத் திரும்ப வேண்டும். பத்தே முக்காலுக்கு வண்டி. சிவகுமார் வரமாட்டான் என்பதால், க்ருஷ்ணனுக்கு ஃபோன் பண்ணி ஒன்பதே முக்காலுக்கு வீட்டுக்கு வரச் சொன்னேன்.
சரியாக ஒன்பது நாற்பதுக்கெல்லாம் ஆட்டோ வந்து விட்டது. நான் வெளியே வந்ததும் வழக்கம் போல் வண்டியிலிருந்து இறங்கி கை கட்டிக் கொண்டு பவ்யமாக நின்றான்.
“க்ருஷ்ணா, ஜங்க்ஷனுக்குப் போலாம்பா” என்றவாறே தோள் பையை ஸீட்டில் வைத்து விட்டு ஏறி உட்கார்ந்தேன்.
முன்னால் ஏறிக் கொண்டே “சரிங்க சார், நான் ராஜேஷ் சார்” என்றான்.
வண்டி புறப்பட்டு விட்டது. நான் ஸீட்டில் சரிந்து உட்கார்ந்து விட்டேன். இருட்டு வேறு.
கோஞ்சம் வினாடிகள் கழித்துக் கேட்டேன்:
“ஏன் அண்ணன் வரலை?”
கொஞ்சம் விட்டு பதில் வந்தது.
“ராத்திரிலே அண்ணன் ஓட்டறதில்லை சார், நான்தான்”
குரல் கம்மியிருந்ததோ? அரைகுறை இருட்டிலும், தெருவிளக்கொளியிலும் காதுகளுக்கு முன்னாலும், அடியிலும் அடர்த்தியற்ற தாடி தெரிந்தது. காலையில் இருந்ததா? உடம்பு இளைப்பாகத்தான் தெரிந்தது. வண்டி வேகம் எடுத்தது. பின்னந்தலையும், காலரும், காக்கிச் சட்டையில் மறைந்த மெலிந்த தோள்களும்தான் தெரிந்தன.
இந்த குண்டும் குழியுமான திருச்சியின் சாலைகளில், ஆட்டோவில், எந்த உடம்புதான் குலுங்காது?

Friday, September 4, 2015

‘திரு. நாஞ்சில் நாடன் வாழ்த்தரங்கி’ல் ஓர் உரை

‘திரு. நாஞ்சில் நாடன் வாழ்த்தரங்கி’ல் ஓர் உரை

 | சொல்வனம் இதழ் 133 | 01-08-2015|
(18-07-2015 அன்று கோவையில் ‘மாலதி பதிப்பகத்தார்’ திரு. ரா. பத்மநாபன் எழுதிய ‘ஸ்ரீமத் பகவத் கீதை’ (மூலம் – தமிழாக்கம்) நூல் அறிமுகத்தையும், திரு நாஞ்சில் நாடன் அவர்களின் 40 ஆண்டு எழுத்துப் பணிக்குப் பாராட்டு விழாவையும் ஒரு சேர நிகழ்த்தினார்கள். அதில் திரு. வ. ஸ்ரீநிவாசன் பேசியது.
அனைவருக்கும் வணக்கம்.
Nanjil_Nadan_VaSri_Events_Lectures_Talks_Stage_Meets_Shrinivasan
நான் பகவான் ஸ்ரீ க்ருஷ்ணர் அருளிய பகவத் கீதையை வாசித்ததில்லை. பொதுவாக, பரவலாக ஒரு சராசரி தமிழனுக்கு கீதையைப் பற்றி எவ்வளவு தெரியுமோ அவ்வளவுதான் – ஒருவேளை அதற்கும் குறைவாகத்தான் –  எனக்குத் தெரியும். ஒருகால் கண்ணன் அதை தமிழிலே இசைத்திருந்தால் ‘காற்றினிலே வரும் அந்த கீத’த்தை நான் கேட்டிருந்திருக்கக் கூடும்; படித்திருந்திருக்கக் கூடும். இல்லாது போனாலும் திரு நாஞ்சில் நாடன் அவர்கள் அதைப் பற்றி நிச்சயமாக எழுதியிருப்பார்கள். அப்போது நானும் நிச்சயமாக அதைப் படித்திருப்பேன், ‘சிற்றிலக்கியங்களை’யும், ‘கம்பனின் அம்பறாத் தூணி’யையும் படித்த மாதிரி.
1975 அவர் எழுத்து முதன் முதலில் பிரசுரம் ஆகியிருக்கிறது. 2001ல்தான் நான் அவரை முதன் முதலில் படித்தேன். 26 ஆண்டுகால நீண்ட இடைவெளி. காரணம் அந்தப் பெயர். ஒருவேளை அவர் எழுத்தில் அரசியல் நெடி அடிக்குமோ என்கிற தயக்கம். படித்தபின் தான் தெரிந்தது அந்த எழுத்து தரமற்ற அரசியலை, அறமற்ற அரசியலைத்தான் அடிக்குமேயன்றி அதிலிருந்து எந்த நெடியும், வாடையும் அடிக்காது என்பது; மேலும் அதில் தமிழ் மணமே கமழுமென்பதும்.
முதலில் படித்தது அவரது ஆறாவது நாவலான ‘எட்டு திக்கும் மத யானை’. என்னவொரு தலைப்பு ! எவ்வளவு அழகான, கவித்துவமான அனைத்தையும் விட முக்கியமாக, பொருத்தமான தலைப்பு ! நாவலைப் படித்ததும் அதன் செறிவு, செழுமை, நுட்பம், சுவாராஸ்யம், அந்தத் தமிழ்.. ..  இவற்றில் மனதைக் கொடுத்தேன். உடனே அதுவரை என் வாழ்நாளில் செய்யாத ஒரு வேலையை முதன் முதலில் செய்தேன். ஓர் எழுத்தாளரை நானே நேரடியாகத் தொடர்பு கொண்டேன். திருச்சியில் இருந்த நான் கோவையில் இருந்த அவரோடு தொலைபேசியில் பேசினேன். நாவலில் நான் ரசித்த இடங்களை, விஷயங்களைப் பற்றிச் சொன்னேன். என் புகழ் வார்த்தைகள் அவரிடம் எந்த ஒரு புளகாங்கிதத்தையும் ஏற்படுத்தவில்லை என்பது தெரிந்தது. அதனால் எனக்கு அவர் மீதான மதிப்பு வளர்ந்தது. கொஞ்சம் பிறகு W. H. ப்ராடியின் விற்பனைப் பிரிவு உயர் அதிகாரியாக அவரும், கனராவங்கியிலிருந்து சமீபத்தில்தான் விருப்ப ஓய்வு பெற்ற முதுநிலை மேலாளராக நானும் பேசத் துவங்கினோம்.
“என் மகள் +2 எழுதியிருக்கிறாள். அவளுக்கு எந்த ஊரில் பொறியியல் கல்லூரியில் இடம் கிடைக்கிறதோ அந்த ஊருக்குப் போக வேண்டும்” என்று சொன்னேன். அவர் உடனே சொன்னார் “கோயம்புத்தூருக்கே வந்துடுங்க. நாங்கள்ளாம் இருக்கோம்ல”.
கவி வாக்கு பலித்தது. ஓரிரு மாதங்களில் என் மகளுக்கு கோவை ஜிசிடியில் இடம் கிடைத்து நாங்கள் கோவை வந்தோம்.
அவரை முதன் முதலில் நேரடியாக சந்தித்தது ‘மண்ணுள்ளிப் பாம்பு’ நூல் வெளியீட்டு விழாவில்தான். மேடையில் பேசுகையில் அவர் சொன்னார் : ” இந்தக் கவிதைகள் குறித்து உங்கள் ஒவ்வொருவருக்கும் என்னென்ன விமர்சனங்கள் உள்ளனவோ அவை அனைத்தும் எனக்கும் இருக்கின்றன.” தன் நூல் பற்றி தனக்கே விமர்சனமாம். அதுவும் ஒன்றிரண்டு இல்லை. ஒவ்வொருவருக்கும் இருக்கும் அத்தனை விமர்சங்களுமாம். எழுதியவரே சொல்கிறார். அவருக்கு அகந்தை என்பதே கிடையாது. அகந்தை இல்லாத இடத்தில் கண்ணன் இருக்கிறான். அவன் ‘மதுர மோஹன கீத’மும் இருக்கிறது.
அதே ஆண்டு விஜயதசமி தினத்தன்று அவருக்கு இதய சிகிச்சை நடந்தது. அந்த சமயத்தில்தான் அவரது இல்லத்தில் சென்று அவரைச் சந்தித்தேன். அப்புறம் சில ஆண்டுகள் கோவை, 4 ஆண்டுகள் சென்னை, மீண்டும் கோவை, மீண்டும் 2 1/2 ஆண்டுகள் திருச்சி மீண்டும் இப்போது கோவை என்று இருந்த போதிலும் எங்கள் நட்பு தொடர்ந்து வருகிறது.
Author_Va_Srinivasan_Solvanam_Writers_Speech
26 ஆண்டுகளாக இவரைப் படிக்காமல் விட்டோமே என்கிற குறை இருந்த போதிலும் அதில் ஒரு பெரும் அனுகூலமும் இருந்தது. படிக்க அவர் ஏற்கனவே எழுதியவை எத்தனை இருந்தன? அது தவிர அவர் ‘கரென்டாக’ எழுதுவதும்.
எத்தனை விஷயங்கள் எழுதுகிறார். எவ்வளவு தகவல்கள், தாவரங்கள், மரங்கள், மனிதர்கள், சூழல்கள், மண்கள், குணங்கள், க்ரோதங்கள், த்ரோகங்கள், தயை, அன்பு, கருணை…எத்தனை? எப்படி இவ்வளவும் அவருக்கு எழுத முடிகிறது? அந்தக் ‘கொள்கலன்’ மிகவும் பெரியது. அதில் மிகப் பெரிய இடத்தை அடைத்துக் கொள்ளும் தன் முனைப்பு என்பகிற பொருளும் வேறு அடைத்துக் கொண்டிருக்கவில்லை. தகவல்கள், தமிழ், கிரஹிப்பு மட்டுமல்ல அந்தக் கொள்கலன் மிகப் பெரியதாய் இருப்பதால்தான் குடும்பத்தினர், உறவினர், நண்பர்கள், வாசகர்கள் என்கிற மிகப் பெரிய எண்ணிக்கையிலான மனிதர்களையும் அது கொள்கிறது. அதனால்தான் எல்லோருக்கும் ஒதுக்க நேரமும், கொடுக்க இடமும் அவரிடம் இருக்கிறது. அது ஒரு கனிந்த பரந்த தமிழ் இதயம்.
இவ்வளவு வாசகர்கள் இருந்த போதிலும் அவரது முதல் வாசகன், முதன்மை வாசகன் நான்தான். என்னடா இது இப்போதுதான் அகந்தையை, தன்முனைப்பைத் தாக்கி விட்டு இவ்வளவு தன் முனைப்பு கொப்புளிக்கும் ஒரு கூற்று என்று நீங்கள் நினைக்கலாம். நான் உண்மையைத்தான் சொல்கிறேன். சொல்வனத்துக்கு அவர் எழுதுபவற்றின் கையெழுத்துப் பிரதியை முதலில் வாசிப்பது நான்தான். பின்னர்தான் அவை தட்டச்சு செய்யப் பட்டு பிரசுரமாகும். ஆக ஒரு சில எழுத்துக்களுக்காவது நான் முதல் வாசகன். இந்த மாதிரி ‘ ப்ரொடெக்டிவ் க்ளாஸஸ்’ ‘டிஸ்க்ளெய்மர்ஸ்’ இல்லாமல் அவரது முதன்மை வாசகன் நான் தான். ஏன் என்று இதோ சொல்கிறேன்.
2001 ல் அவருக்கு அவர் இதயத்தில் எந்த ரத்தக் குழாயில் எந்த இடத்தில் அடைப்பு ஏற்பட்டதோ 2011ல் எனக்கு என் இதயத்தில்  அதே ரத்தக் குழாயில் அதே இடத்தில் அடைப்பு ஏற்பட்டது. அவர் மேற்கொண்ட அதே சிகிச்சையை மேற்கொண்டு நானும் குணமடைந்தேன். மறு நாள் சிகிச்சை நடக்கப் போகிறது. இன்று ‘டயக்னோஸிஸ் ரிபோர்ட்’ வந்து விட்டது. அதை நாஞ்சிலின் மகள் டாக்டர் சங்கீதாவிடம் காட்டினேன். அவங்க உடனே சொன்னாங்க “அங்கிள், அப்பாவுக்கும் இதே இடத்தில் இதே மாதிரிதான் வந்தது” நான் உடனே சொன்னேன் “பாத்தியாம்மா ! உங்கப்பா வோட பெஸ்ட் வாசகன் நான்தான் என்பதற்கு இதை விட ப்ரூஃப் வேண்டுமா?”
நான் மருத்துவ மனையில் இருந்த அந்த நாட்களில் என்னோடு இருந்த இருவர் : ஒன்று திரு. நாஞ்சில் நாடன் இரண்டாவது : அவர் மகள் டாக்டர் சங்கீதா (அவர் எனக்கும் மகள்தான்)
“கோயம்புத்தூருக்கே வந்துடுங்க. நாங்கள்ளாம் இருக்கொம்ல”. சொன்னாரில்லையா முதன் முதலில் பேசியபோது. இருந்தார். இடுக்கண் களைவதுதானே நட்பு?
ஆனால் இது பற்றி அவர் ஒருவரிடமும் சொல்லியிருக்க மாட்டார். அவருக்கு இது நினைவில் இருந்தால்தானே சொல்வதற்கு. அவர் இது போல் பலருக்கும் உதவியிருக்கிறார். அவருக்கு இருக்கும் தன்னலம் மிக மிகக் கம்மிதான்.
இப்போது கூட மாலதி பதிப்பகத்தார் இந்த விழா எடுக்கவேண்டும் என்று பிரஸ்தாபித்தபோது அவர் என்னிடன் தொலைபேசியில் சொன்னார் “ஆடிட்டர் தப்பா நினைச்சுக்கப் போறார். அவர்ட்ட சொல்லிடுங்க. பெரிய விழாவெல்லாம் வேண்டாம். எப்படியும் பகவத் கீதை அறிமுக விழா இருக்கு. அதில் என்னைக் கூப்பிட்டு ஒரு ஷால் போட்டாப் போறும்”
பயன் கருதாது, பலன் கருதாது தங்கள் பணி செய்பவர்களுக்கு சரியான விஷயங்கள், சரியான நேரத்தில், சரியாக, பொருத்தமாக நடக்கும். அதற்கு உதாரணம் இந்த விழா. எப்படி நடக்கிறது பாருங்கள். அவரது ஆசிரியர்களில் ஒருவரான ‘கீதை தமிழ் செய்த மாறன்’ திரு. ரா. பத்மநாபன் அவர்களின் நூல் அறிமுக விழாவோடு சேர்ந்து நடக்கிறது. முது பெரும் அறிஞரான திரு. வைத்யநாதன் க்ருஷ்ணன் மற்றும் புவியரசு ஐயா முன்னிலையில் நடக்கிறது. அதுவும் எங்கே? ‘சிருஷ்டி’ மஹாலில். உங்களைப் போன்ற இலக்கிய ஆர்வம் மிக்க வாசக நண்பர்களின் மத்தியில் நடக்கிறது. சேவை மனப்பான்மையோடு இயங்கி வரும் ‘மாலதி பதிப்பகத்தார்’ இதை முன்னின்று நிகழ்த்துகிறார்கள்.
அவர் மேலும் கேட்டார் : ” இப்போ எதுக்கு ? 50 ஆண்டு ஆகட்டுமே. 50 ஆண்டுகள் நாம எழுத மாட்டோமா என்ன?”
அதற்கான பதிலை இந்த மேடையில் தருகிறேன் ” நிச்சயம் எழுதுவீர்கள் நாஞ்சில் சார். 50 ஆண்டுகள் நிச்சயம் எழுதுவீர்கள். அதற்கு மேலும் பல்லாண்டுகள் நிச்சயம் எழுதுவீர்கள். உங்கள் வாசகர்களாகிய நாங்களும் அவற்றையெல்லாம் படித்து இன்புற்று இதே போல் பொருத்தமாக, சிறப்பாக ஒவ்வொரு முறையும் விழா எடுத்து எங்கள் மகிழ்ச்சியை நிச்சயமாகக் கொண்டாடுவோம் என்று கூறி விடை பெறுகிறேன். நன்றி வணக்கம்.”

உத்தம வில்லனும், கமலஹாசனும்

உத்தம வில்லனும், கமலஹாசனும்

 | சொல்வனம் இதழ் 128 | 13-05-2015|
Uttama-Villain-Official-Trailer-kamal-haasan-1
திரைப்படம் எடுப்பதும் ஒரு வித்தை. இத்தனை வருடங்களாக இதில் இருக்கிறேன் என்பதாலோ, இத்தனை படங்கள் எடுத்திருக்கிறேன் / நடித்திருக்கிறேன் என்பதாலோ அது கை வந்து விடாது.
சீதா தமிழில் சீதையாவதைப் போல் வித்யா, வித்யையாகி உச்சரிப்பில், பழக்கத்தில் வித்தையாகிறது.  வித்யா என்றால் கல்வி, கற்றல். கல்விக் கடவுள் ‘கலை’மகள். ஆனால் ‘வித்தை’ என்னும் தமிழ்ச் சொல் பல பொருட்களிலும் வருகிறது. செப்பிடு வித்தை, கண்கட்டு வித்தை. ‘வித்தை காட்டுவது’.  சினிமாவைக் கூட இப்படிச் சொல்லலாம்.  கண்கட்டு வித்தையால் வசனகர்த்தாக்களையும், நடிகர்களையும் முதலமைச்சர்களாக்க முடியும். தமிழில் வித்தை என்பதற்கு அதன் சம்ஸ்க்ருத பொருளையும் தாண்டி, திறன், தந்திரம், ஜாலம் என்றெல்லாம் அர்த்தங்கள் உண்டு.
கற்க வேண்டிய வித்தைகளிலேயே தலையாயது எது? சகல ஜீவராசிகளாலும் வேண்டப்படும் வித்தை எது?
‘சாகா வித்தை.’ இந்தப் படம் அதைப் பற்றியது.
இந்தப் படம் சாவைப் பற்றியது. இது சாவை ஆராய்கிறது; கூர்ந்து நோக்குகிறது. வாழ்வின், சாவின் மையப் புள்ளியை நோக்கி உட்புக முனைகிறது.
னோரஞ்சன் என்னும், வயதாகிக் கொண்டிருக்கும், சினிமா சூப்பர் ஸ்டார் சற்று நாட்களில் இறக்கப் போகிறோம் என்று திடீரென்று அறிந்ததும் எஞ்சியுள்ள சின்னாட்களை என்ன செய்கிறார் என்பதுதான் படம். தொழில் ரீதியாக வெகு நாட்களாகப் பிரிந்திருக்கும் தன் குருநாதரோடு சேர்ந்து ஒரு படம்பண்ணுகிறார். அதைப் பார்த்து விட்டு வரும் ரசிகர்கள் சிரித்துக் கொண்டே வர வேண்டும் என்று அதைக் ‘காமெடிப் படமா’கச் செய்கிறார். சில நூற்றாண்டுகளுக்கு முற்பட்ட காலகட்டப் படம்.  “உத்தம வில்லன்”. அந்தப் படத்தின் நாயகன், உத்தமன். அவனும் ஒரு நடிகன்,  கூத்துக் கலைஞன். சந்தர்ப்பவசத்தால் சாகா வரம் பெற்றவன் என்று நம்பப் படுபவன்.
நாம் பார்க்கும் படமும், அந்தப் படத்தில் எடுக்கப்பட்டுக் கொண்டே காட்டப்படும் படமும் என்று இரண்டு படங்கள். இரண்டும் சாவு பற்றி ஆராயும், ஊடுருவிப்பார்க்கும் அது உண்மையில் என்ன என்பதை அறியப் பயணிக்கும் படங்கள். ஒன்று, மனோரஞ்சனின் நிஜமான துக்கமும், தீவிரமும் நிரம்பிய கண்ணெதிர் வாழ்க்கை. இன்னொன்று ஃபான்டஸியான, ஒரு ஃபேரி டேல் போல் இருக்கும் சந்தோஷமான எப்போதும் முடிவிலே இன்பம் என்னும் சுப முடிவு திரைப்பட வாழ்க்கை.
மனோரஞ்சன் வாழ்க்கை தலைவலியாய் இருக்கிறது. அந்தத் தலைவலிதான் சாவின் அழைப்பு மணி. சாவது நிச்சயம். அவனுக்கு அதிருஷ்ட வசமாக வாழ்வின் உயர்வு தாழ்வுகளை, பாவ புண்ணியங்களை, உத்தம, வில்லதனச் செயல்களை சரி செய்ய, ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. அதை அவன் செய்கிறான். பிரிந்த குருவோடு ஒரு படம் செய்வதிலிருந்து, மறைந்த காதலிக்குப் பிறந்த தன் குழந்தையோடு இணைவதிலிருந்து, இருக்கும் மனைவியை அணைப்பதிலிருந்து, இளம் காதலியை ஏற்பதிலிருந்து, மகனோடு இணக்கமாவதிலிருந்து, மாமனாரோடு சகஜமாவதிலிருந்து எல்லாமும் செய்கிறான்.
மிழில்  பல்வேறு வகையான படங்கள் வந்துள்ளன. அவற்றில் ஆன்மீகப் போராட்டம் (Spiritual struggle) பற்றிய, அக மாசை அகற்றுவது பற்றிய படங்கள் மிக மிகக் கம்மி. ‘தேவதாஸ்’ சஞ்சலப் பேய் வசப்பட்டு காதலி(பார்வதி)யைப் பறிகொடுத்த ஒருவனின் மீட்சிக்கான தொல்வியுறும் முயற்சி பற்றியது; ‘யாருக்காக அழுதான்’ குற்றம் செய்யாதவன், செய்தவனுக்காகவும் சிந்தும் கண்ணீர் பற்றியது; ‘என்னதான் முடிவு’ குற்றவாளி, வாழ்க்கையின் மூலம் அடையும் தண்டனை மற்றும் பரிகாரம் பற்றியது; ‘பூவே பூச்சூடவா’ கல் மனதையும், அது கக்கும் விஷத்தையும் கரைக்கும் அன்பு பற்றியது. அவ்வரிசையில் ‘உத்தம வில்லன்’, எல்லொருக்குமே, அவர்கள் இப்போது இருக்கும் காட்சியின் அடுத்த காட்சியாக தோளுக்குப் பின்னால் மறைந்து நிற்கும், ஒரு முறை உண்மையாகவே முன்னால் வந்துவிடும் புலி போன்ற மரணம் மற்றும் அதன் வெகு அருகாமை நேரடிப் பார்வையில் ஒருவன் செய்யும் பாவ நிவிர்த்தி பற்றியது.
சாவு பற்றி ஜனரஞ்சக சினிமாக்களில் முன்பும் படங்கள் வந்திருக்கிறன. மேலோட்டமாக, சாவை ரொமான்டிக்காக அணுகும் நீர்க்குமிழி, நீலவானம், ஹ்ருஷிகேஷ் முகர்ஜியின் ஆனந்த் போன்ற படங்கள்;
“Often  by a queer process of reasoning, movement was equated with action and action with melodrama” என்பார் சத்யஜித் ராய் (Our films their films) அதை நிரூபணமாக்கும் கண்ணீர் பம்ப் காட்சிகள் கொண்ட யதார்த்தத்துடன் அறவே சம்பந்தமில்லாத  கணக்கிலடங்கா மெலோ டிராமாக்கள் வெளிவந்து அவற்றில் பல மாபெரும் வெற்றியும் பலரின் மனதில் நீங்காத இடமும் பெற்றுள்ளன.
உலக அளவில் குரோசாவாவின் ‘இகிரு’ , பெர்க்மனின் ‘செவன்த் ஸீல்’ முதலியவை சாவின் சில நிஜப் பரிமாணங்களைக் காட்டியவை. செவெந்த் ஸீலில் சாவும், மன்னனும் சதுரங்கம் ஆடும் காட்சிகள் மிகப் பிரபலமானவை. இகிரு வில் இன்னும் சில நாட்களில் சாக இருக்கும் ஒரு மாநகராட்சி அதிகாரி தன் வாழ்வை பொருளுள்ளதாக, முழுமையாக்க செய்யும் செய்லகளைக் காட்டும் அற்புதமான படம்.
முதலில் குறிப்பிட்ட ரொமான்டிக் மற்றும் டியர் ஜெர்கர்ஸ் ஆன நடுவாந்திரப் படங்கள் போலல்லாது, ஒரு புதிய அணுகு முறையில் உத்தம வில்லன் எடுக்கப் பட்டுள்ளது, அதன் பல குறை நிறைகளுடன்.
‘ராஜ பார்வை’ கமல்ஹாசனை நிமிர்ந்து பார்க்க வைத்தது. அதில் சில காட்சிகள் வழக்கமான தமிழ் சினிமாவுக்கு முற்றிலும் மாறாக இருந்தன; இன்னமும் நினைவில் இருக்கின்றன.
சிறுவன் மேலே பார் (Bar) கம்பியில் தொங்கிக் கொண்டிருக்கும் போது அதில் விளையாட ஏற்றிவிட்ட தகப்பனார் மாரடைப்பு வந்து சாவார். அந்தச் சிறுவன் கை நழுவி அடியற்ற பள்ளத்துக்குள் கீழே விழுந்து கொண்டே இருப்பான்.
‘அந்தி மழை’ப் பாடலைக் காட்சிப் படுத்திய விதம், ‘ரிடிக்யுலஸ்’,என்று சொல்லிக் கொண்டே எப்போதும் எரிச்சலில் இருக்கும் மாதவியின் தந்தை, சித்தியின் கூச்சமுற வைக்கும் பொய்ப்பாசம், அற்புதமான தாத்தா-பேத்தி உறவு – இவை போல், வேறு எந்த கமலஹாசன் படத்திலும் பாசாங்கு இல்லாத, திணிக்கப்படாத, செல்ஃப் கான்ஷியசாக இல்லாத, இயல்பாகவே எழுந்த காட்சிகள் எனக்குக் கிடைத்ததில்லை.
07slide3
முக்கியமாகப் பலரும் போற்றும் ‘நாயகன்’ என்னும் ஆழமேயில்லாத பாசாங்குப் படம், அதை விட நல்லதே என்றாலும் திசை தெரியாத, வன்முறையைப் பெரிதும் நம்பி எடுக்கப்பட்ட, மிகச் சிறந்த கடவுள் எதிர்ப்புப் படமாக வந்திருக்க வேண்டிய ‘மகாநதி’.
‘குருதிப் புனல்’ மற்றும் ‘உன்னைப் போல் ஒருவன்’ இரண்டும் ஹிந்திப் படங்களின் தமிழ் ஆக்கங்கள். ‘த்ரோகாலி’ல் இருக்கும் ஆன்மீகப் போராட்டத்தை கமல்ஹாசன் என்னும் நட்சத்திர பிம்பத்தால் முழுதாய் ஸ்வீகரிக்க முடியவில்லை. அதனால்தான் துரோகி, (ஒருவேளை ‘துரோகி கமலஹாசன்’ என்னும் பெயர் வந்து விட வாய்ப்பு இருந்ததால்) என்னும் சரியான பெயர் குருதிப் புனலாய் மாற்றப் பட்டு வந்தது. உன்னைப் போல் ஒருவனில் அசலிலிருந்து மாற்றப்பட்ட விஷயங்கள் பிழை மிகுந்து, படத்தின் தீவிரத் தன்மையைப் பெரிதும் குலைத்து இருந்தன. ‘எ வெட்னஸ்டே’யில் ஷாவின் நடிப்பை வேறு முதலிலேயே பார்த்து விட்டதால் நிலைமை அவருக்கு சாதகமாய்ப் போய் விட்டது.
‘தேவர்மகன்’ வணிக வெற்றியை மட்டுமே நோக்கி எடுக்கப்பட்ட நல்ல படமே போன்ற நடுவாந்திரப் படம். ‘அன்பே சிவம்’ அதை விட அபாயமானது. நல்ல படம் என்று சொல்லி, நல்ல படம் என்று நம்பப் படுகிற மோசமான படம் என்பதால். ஃப்ளாஷ் பேக் ஆரம்பிக்கும் வரையிலான முதல் பகுதி நன்றாகவே இருக்க அப்புறம் முற்போக்குவாதி கமல் வந்து விடுவார். படம் செயற்கையான, திணிக்கப்பட்ட இடது சாரி சிந்தனைகள், நம்ப முடியா சம்பவங்கள், மனிதச் சித்தரிப்புகள், பாசாங்கான நெகிழ்சித் தருணங்கள் என்று எதிர் பார்க்கிற திசையில் கண்றாவியாகப் பயணிக்கும், மெனக்கெட்டு கட்டப் பட்ட செத்த படமாகி விடும். திருடன் யூகி சேதுவிடம், “சம்ஸ்க்ருதம் தெரியுமா” என்று மரியாதை கலந்த ஆச்சர்யத்தோடு எந்த அன்பரசு கேட்பாராம் என்று கமலைச் சந்தித்தால் கேட்க வேண்டும்.
‘ஹே ராமி’ல் ராணி முகர்ஜி வந்து விட்டு இறந்ததும் நடக்கும் நிகழ்வுகளும், நிலையும் சுமார் 20 நிமிடங்களுக்கு ஆச்சர்யமாகத் தீவிரமாக இருக்கும். அப்புறம் கமல், அவரது கொள்கைகள், வலிய புகுத்தப்பட்ட உடன் நிகழ்வுகள், செயற்கைத்தனங்கள் எல்லாம் படத்தை ஆக்ரமிக்கும். குணா, ஆளவந்தான் Disasters. நம்மவரில் நாகேஷ் மட்டும்தான்.
நகைச்சுவைப் படங்கள் பலதிலும் மிகச் சிறப்பாக நடித்திருக்கும் கமலஹாசன், ஒப்பனை மற்றும் தோற்ற மாறுபாடுகளின் உதவியில்லாமல் சாமான்ய மனிதராகவே வந்து நன்றாக நடித்திருந்தது மீண்டும் கோகிலா, மூன்றாம் பிறை  போன்ற படங்களில். மூன்றாம் பிறையிலும் கடைசி மெலோடிராமா காட்சி படத்தின் பொதுவான லயத்தோடு பொருந்தாமல் துருத்திக் கொண்டு நிற்கும்.
வற்றையெல்லாம் போலலல்லாது உத்தம வில்லன் படத்தில்தான் இயல்பான தீவிரமான காட்சிகள் மற்றும் நடிப்பு, குறிப்பாக கமலஹாசனின் நடிப்பு யதார்தமாக மலர்ந்துள்ளன.
அப்போதுதான் அக்கா தம்பி என்று தெரிந்து கொண்ட கமலஹாசனின் மகளும், மகனும் அணைத்துக் கொள்ளும் உணர்ச்சி மிகு தருணத்தில் அங்கு உள்ளே வரும் அந்தப் பையனின் கேர்ல் ஃப்ரெண்ட் அதைத்  தப்பாய் எடுத்துக் கொள்ள, விவரம் சொல்லி அவளிடம் விளக்க முற்படும் மகனுக்கு ஓர் உதவியும் செய்யாமல் அவனுடைய தர்ம சங்கடத்தைப் பார்த்து தந்தை கமலஹாசன்  சிரிப்பை அடக்க முடியாமல், கையைத் தட்டிக் கொண்டே அறைக்கு வெளியே செல்வதும், உள்ளே நுழையும் ‘என்ன” என்று கேட்கும் ஜெயராமிடம் “போய்ப் பாருங்கள்” என்று சொல்லி சிரிப்பை நிறுத்தாமலே போவதும்.. .. .. இது போன்ற காட்சியைக் கடைசியாக தமிழ்ப் படத்தில் எப்போது பார்த்தோம் என்பதே நினைவில் இல்லை.
தன் மகளும் தன் மகனும் ஒன்று சேர்ந்து விட்டார்கள். அப்போது நியாயமான, ஆனால் அந்தத் தருணத்தில் அபத்தமான, மன உடைவோடு பையனின் சிநேகிதி. இன்னும் சில நொடிகளில் அவள் சந்தேகம் நிவர்த்தியாகப் போகிறது. அதை சரி செய்து கொண்டிருக்க வேண்டிய அவகாசமோ, அவசியமோ தந்தைக்கு இல்லை. தன் மகளும் மகனும் சேர்ந்து விட்டார்கள். மனம் ஒன்றி விட்டார்கள். எந்த சிறுபிள்ளைத்தனமான உராய்வுகளும், வஞ்சிக்கப்பட்டு விட்ட உணர்வுகளும் இல்லை. தன் வாழ்வின் கடைசித் தருணங்கள்தாம். இருந்தாலும் என்ன? என் மகளும் மகனும் சேர்ந்து விட்டார்கள். அந்த சிநேகிதி, இன்னொரு சிறுமி, அவள் சந்தேகம், நியாயமான சந்தேகம் இதோ நிவர்த்தியாகப் போகிறது. இடையில் விளங்கி அவள் சந்தேகத்தை முடிக்கும் வரை கொஞ்ச நேரம் திண்டாடப் போகும் தன் மகன். ஆம் வாழ்வு முடியப் போகும் நேரம்.  அதுவே துயரம், அதுவே இந்த ஆனந்தம் நிகழக் காரணமும்.
அந்தக் குழந்தைகளும் என்னமாய் நடித்திருக்கிறார்கள். கமலஹாசனின் 50 + வருட அனுபவத்தில் அவர் சீரியஸாக நடித்ததில் இது முதன்மையான காட்சி.
தன் வாழ்வு சாச்வதம் என்கிற அனைவருக்கும் பொதுவான மயக்கத்தில், புகழின் உச்சியில், போதைகளில் வாழும் மனோரஞ்சனின் அந்த ‘ப்ளாக் மெயிலரை’ ஒழிக்கச் சொல்லும் அகம்பாவம், நிலையாமை என்னும் நிதர்சனத்தின் முன் நீங்கி ஜெயராமுடன் முதல் தரம் உட்கார்ந்து உரையாடும் காட்சி. அந்த சதை தொங்கும் கிழ முகத்தின் பரந்த கண்களில்தான் எத்தனை நினைவுகளின் வாசனை சுமக்கும் உணர்ச்சிகள். இந்த மாதிரி க்ளோசப்பில் தைரியமாக நடிக்க இன்று தமிழில் யார் இருக்கிறார்கள்? எவ்வளவு அளவான, தீவிரமான, மிகை எட்டியே பார்க்காத, சப்ட்யூட் என்ற பெயரில் சறுக்கி விழாத கச்சிதமான, அடர்த்தியான, நுட்பமான நடிப்பு. ஜெயராமும் இணையாக நடித்திருக்கிறார்.
கையில் பந்துடன் அப்பாவும், பிள்ளையும் வாழ்க்கையின் உக்கிர கணத்தை நெருங்குகிறார்கள் என்கையில் ஐயோ பாலச்சந்தர் போல நல்ல தருணங்களை ‘டைரக்டோரியல் டச்’ என்று கொலை செய்து விடப் போகிறார்களே என்று நினைத்து பயந்தேன். நல்ல வேளையாகக் க்ளீஷேவாக ஆரம்பிக்கும் கட்சி தன் க்ளீஷே தனத்தைக் களைந்து இயல்பாகி அருமையாக மலர்ந்து விட்டது. மனோகராக வரும் அந்தப் பையன் யார்? நடிக்கவே இல்லை. நம் பக்கத்துத் தெரு பணக்காரப் பையன் போல் இருக்கிறான்.
மரணம் அணைத்துக் கொள்ள அருகில் நிற்கிறது. பகுத்தறிவு வக்கிரங்களும், மரபு, சரி தப்பு போன்ற பாரச் சுமைகளும் பனி போல் மறைந்து பகா அறிவும், அச்சமற்ற பேரன்பும் நிரம்பி ஒரு காட்சியில் மகன், மகளை அணைத்துக் கொள்ளும் மனோரஞ்சனிடம் மனைவியும் வருவார். அவரையும் அவரால் அணைத்துக் கொள்ள முடிகிறது; அணைத்துக் கொள்வார். அனைத்தையும் அரவணைத்துக் கொள்ளும் மன நிலைக்குப் போயிருப்பார். இன்னும் அர்பணா, சொக்கு, மார்க்க தரிசி, கார் டிரைவர், ஜேகப், மாமனார் எல்லோருக்கும் அவர் அரவணைப்பில் இடம் இருக்கிறது. அருகில் வந்திருந்தால் அவர்களையும், நம்மையுமே கூட அணைத்துக் கொண்டிருப்பார்.
uttama-villain-07
இறுதி ஷூட்டிங் முடிந்ததும் ‘அவர்’ என்று சொல்வதற்குப் பதிலாக ‘அது’ என்று சொல்லி விட்டேன், மீண்டும் நடிக்கவா என்று புது மாணவனைப் போல் குற்ற உணர்வுடன், மரியாதை மிகக் கேட்கும் கமலஹாசன், பாலச் சந்தர் ‘வேண்டாம் சரி செய்து கொள்ளலாம்’ என்கையில் மீண்டும் பரவாயில்லையா என்று அதற்கு ஒப்புக் கொள்ளத் தயங்கி தான் செய்த தவறை மீண்டும் சொல்ல முற்படுகையில் வாய் லேசாகாக் குழறும். நாம் முதலில் அதைக் கவனிக்க மாட்டோம். ஒரு புறத்துக் கன்னம் மற்றும் தாடையில் ஒரு மிக நுண்ணிய அசைவுடன் அந்தக் குழறலை அவரிடம் மீண்டும் கவனிக்கும் போது மனம் துணுக்குறும். ஐயோ என்ன ஆச்சு என்று. அந்த வசன உச்சரிப்பையும், அந்த சின்னஞ்சிறு குழறலையும் அதி அற்புதமான இயல்புத் தன்மையோடு கொண்டு வந்திருப்பார்.
ஊர்வசி மார்வலி வந்து படுக்கையில் கணவனிடமும் அருகில் உள்ள ஆண்ட்ரியாவிடமும் பேசும் காட்சி. அவரது க்ளோஸ் அப்கள்.
கடைசிக் காட்சியில் சற்றுத் தொலைவில் டாக்டர் ஆண்ட்ரியா எல்லாம் முடிந்து விட்டது என்பதைப் போல நிற்பதைப்  பார்த்து கமலஹாசனின் மகளும், மகனும் அவரிடம் செல்ல அவர் அவர்கள் இருவரையும் அணைத்துக் கொள்வார். மனோரஞ்சனின் இறப்பைவேறு எந்த விதத்திலும் காட்டி கோரமாக்காமல் செய்திருக்கிறார்கள்.
பாலச்சந்தர் நெடுநாள் தொழில் விரோதி விஸ்வநாத்திடம் சாரி சொல்லும் காட்சி. மனோவின் மாமியாரின் வெகு யதார்த்தமான நடமாட்டங்கள்.
கார் காட்சி இன்னொரு அற்புதமான காட்சியாக இருந்திருக்க வேண்டிய ஒன்று. நினைத்த அளவு நன்றாக வர வில்லை என்று தோன்றுகிறது. ஆண்ட்ரியாவை அவர் தன் மடியில் கிடத்திக் கொண்டிருந்தால் ஒரு வேளை இன்னும் பொருத்தமாக இருந்திருக்கலாம்.

னோரஞ்சனின் காதலி யாமினிக்குப் பிறந்த, ஆனால் பட்டம் பெறும் வயது வரை, யாமினி இறக்கும் வரை அப்படி ஒரு மகள் இருப்பதே மனோரஞ்சனுக்குத் தெரியாத, மகள் மனோன்மணியாக வரும் பார்வதி மேனன் என்னமாய் நடித்திருக்கிறார். ஓர் இளம் நடிகை இவ்வளவு கூர்மையாக, இவ்வளவு பவர்ஃபுல்லாக நடித்திருப்பதும் தமிழ் சினிமாவில் வெகு காலத்துக்குப் பின் நிகழ்ந்துள்ளது. இத்தனைக்கும் அவர் வருவது வெகு சில காட்சிகளில்தான், பேசுவது இரண்டே காட்சிகளில்தான். அந்த இளமைக்கே உரித்த நேர்மை, சுய மரியாதை. அடடா !
எம். எஸ். பாஸ்கர் நன்றாக நடித்திருப்பதை எல்லோரும் சொல்லி  விட்டார்கள்; அப்படியும் அது நன்றாக இருந்தது. இவரைப் போல் அருமையான நடிகர்கள் நம்மிடம் இருக்கிறார்கள். பயன்படுத்தும் கமலஹாசனுக்குப் பாராட்டு.
கே. பாலசந்தர் பேசுவது – “படவா ராஸ்கல், லாங் லாங் அகோ, ஸோ லாங் அகோ” போன்றவை நாகேஷ் பேசுவது மாதிரியே இருந்து நாகேஷ் இந்தப் படத்தில் இல்லையே என்கிற குறையைத் தீர்த்து விட்டது. இவர் சொல்லிக் கொடுத்துதான் அவர் பேசினாரா அல்லது அவர் தாக்கத்தால் இவர் பேசுகிறாரா என்று தெரியவில்லை. அவர் கே. விஸ்வநாத்தை ‘ராவ்ஜி’ என்று அழைப்பது நாகேஷ் நினைப்பால்தானோ என்னவோ? கே. பி. யின் நடிப்பை அவர் படங்களில் பல நடிக, நடிகைகளிடம் ஏற்கனவே பார்த்திருக்கிறோம். சிவாஜியைப் போல் தோற்றுப் போன பந்தயக்காரர். 83 வயதில் நன்றாகவே செய்திருக்கிறார்.
ஆனால் பாலச்சந்தரை விட ஓரளவு நன்றாக படம் எடுத்திருக்கும் கே. விஸ்வநாத் அவரை விட நன்றாக நடித்தும் விட்டார். கே. பாலச்சந்தருக்கு மிக உயர்வான வேடம். அவராகவே (ஆனால் வேறு பெயரில்) வருகிறார், ஓர் உத்தமராக. ஆனால் கே. விஸ்வநாத்துக்கு வில்லன் வேடம். அதைச் செய்ய மிகவும்  துணிவு வேண்டும். அதற்காகவும், இத்தனை இயல்பாக நடித்திருப்பற்காகவும் அவரைப் பாராட்ட வேண்டும்.

ன்பே சிவத்தில் வரும் ஃப்ளாஷ் பேக் முதலில் வரும் படத்தின் தரத்தைக் குலைத்து விடும். உத்தம வில்லனில் படத்துக்குள் வரும் படமான உத்தமனின் உத்தம வில்லன் வெளியில் வரும் மனோரஞ்சனின் உத்தம வில்லன் படத்துக்கு சமானமான ஆழத்தோடு, நுட்பத்தோடு, முற்றிலும் கான்ட்ராஸ்டான வெளிப்பாட்டில், கற்பனை செய்யப் பட்டு இருக்கிறது. ஆனால் எடுத்த விதத்தில் முதல் 10 நிமிடங்கள் செட்டில் ஆகவேயில்லை. வெகு சீரியசாகப் போய்க் கொண்டிருந்த படம் தொய்ந்து விடுகிறது. ஆனால் அதன் பின் முற்றிலும் புதிய நகைச்சுவைப் பாணியில் (க்ரேஸி மோஹன் நினைவு வராத வண்ணம்) போனாலும் அதிலுள்ள சில விஷயங்கள் தமிழ்ப் பார்வையாளர்களை அந்நியப் படுத்துகிறது.
‘தெய்யம்’ என்கிற பாணியில் எடுத்தது மீசைக்கு பதிலாக வண்ணக் கோடுகளில் நரசிம்மமே நரபூனை ஆகி விடுகிறார். இது ஒரு மாதிரி சீப் ப்ரொடக்ஷன் என்கிற இம்ப்ரெஷனைத் தருகின்றது.
தைரியமாக அமெடியஸ் படத்தில் வரும் ஆபரா காட்சிகளைப் போலவோ, நமக்குப் பரிச்சயமான தெருக் கூத்துப் பாணியில் முற்றிலுமோ எடுத்திருக்கலாம்.
அதே போல் இசை. இந்த பின்னணிக்கு, இம்மாதிரி நாட்டார் கலைக்கு ஒரு கே.வி. மகாதேவன், எம். எஸ். விஸ்வநாதன் சரியாக இருந்திருப்பார்கள். முன்னவர் இல்லை. பின்னவர் இசையமத்துக் கொண்டில்லை. அதுதான் இளைய ராஜா இருக்கிறாரே. அவரை வைத்திருந்தால் வேண்டிய மட்டும் செய்திருப்பாரே. கிப்ரான் மோசமில்லை. ஆனால் உத்தமன் கதையின் நகைச்சுவை இசையில் வெளியாக வில்லை. இது என் இசை நுணுக்கங்கள் அறியா பாமரக் கருத்து
ராஜேஷ் கன்னா, நாகேஷ், சிவாஜி போன்றவர்களை ஆரம்ப கால கமலஹசன் நடிப்பில் காணலாம். இன்னொரு மாபெரும் நடிகனான வடிவேலுவையும் உத்தமனில் காண முடிந்தது. நாசர் இருப்பது வேறு 23ம் புலிகேசியை நினைவு படுத்துகிறது.
நாசருக்குப் பதிலாக பிரகாஷ் ராஜ் போன்றவர்களைப் போட்டிருந்தால் இது ஒருவேளை தவிர்க்கப் பட்டிருக்குமோ என்னவோ?
ஒப்பனை, குடுமி, பஞ்சகச்சம், மேக்கப் எல்லாம் தெலுங்கு, கன்னட சாயல். ரேலங்கி காலத்திலிருந்து பிரம்மானந்தம் வரை நினைவுக்கு வருகிறார்கள்.
காட்சிகளும் ப்ரும்மாண்டமாகத் தோன்றவில்லை. கூத்து காட்சிகளைத்தவிர இதர காட்சிகளும் மேடை நாடகம்போலவே உள்ளன. கே. பி. நாடகத்துக்கும், சினிமாவுக்கும் வித்தியாசம் இல்லாமல் முதலில் எல்லாம் படம் எடுத்தாரே, அந்த Terrible habit of theatre ரை  நினைவூட்டவோ?
திருவிளையாடல் போன்ற சாதாரண வணிகப் படத்தில் கூட அந்தக் காலத்திலேயே அவ்வளவாக தொழில் நுட்பத்துக்காக பெயர் பெற்றிராத ஏபிஎன் ஒரு பிரும்மாண்டத்தைக் கொண்டு வந்திருப்பார். ஸூம் வசதிகளோ இதர வசதிகளோ இல்லாத காலத்திலேயே ‘ஒருநாள் போதுமா’ காட்சியிலும், திறந்த வெளிக் காட்சிகளிலும் நிறைய ஸ்பேஸ் இருப்பது போல் காட்டியிருப்பார்.
படத்தில் முக்கியமாக வந்திருக்க வேண்டிய இந்தப் பகுதியே ஏதோ பையன்கள் கரியால் சுவரில் ஸ்டம்ப் வரைந்து ஆடும் க்ரிகெட் மாதிரி ஆகி விட்டது. அவர்களுக்கு வெகு சுவாரஸ்யமாக இருக்கும். ஆடியன்ஸுக்கு?
பேராசிரியர் கு. ஞான சம்பந்தம் அமைச்சராகவே தெரிந்தார். இல்லாவிட்டால் நாசரின் நடு சீட்டைப் பிடித்துக் கொண்டு பட்டிமன்ற நடுவராகி விடுவாரோ என்கிற பயம் வந்திருக்கும். அமைச்சர் கட்சி மாறுவதும், இருக்கும் வலக்காதைப் பொத்திக் கொண்டு நாசர் பூஜா குமாரை காமத்தோடு அணுகுவதும், அவருக்கு கமல் ஊட்டுவதும், அவரது வயிற்று உபாதையும் அப்போது வரும் அருவருப்பூட்டிவிடக் கூடிய ஆனால் ஊட்டாத வசனங்களும் கமல் மற்றும் இதரர் நடிப்பும் என்று நன்றாகவே போகிறது. ஆனால் முக்கால்வாசிக்கு மேல் காதில் வசனங்கள் சரியாக விழவில்லை. பாடல்கள் சுத்தமாகக் கேட்கவில்லை. அதில் கமலஹாசன் தன் கொள்கைகளைப் புகுத்தியிருந்தாலும் நல்ல வேளையாக எனக்கு அவை கேட்கவில்லை; ஒருவேளை நன்றாகவே எழுதியிருந்தால் படத்துக்கு இப்படி கேட்காமல் இருப்பது பெரிய அநீதி. சென்னையில் படம் பார்த்த என் நண்பர்களும் இதையே சொன்னார்கள்.
ஜெயகாந்தன் மும்பை எக்ஸ்பிரஸ் பார்த்துவிட்டு “எனக்குப் படம் பிடித்தது; அதுதான் பயமாய் இருக்கிறது’ என்றாராம். அது போல் இந்த உள் படத்தின் காமெடி வேறு திசையில், வேறு தளத்தில் இருக்கிறது. எனக்குப் பிடிக்கிறது; அதுதான் பயமாகவும் இருக்கிறது.
புலி, பூஜா குமார், அப்பாவி உத்தமன், ம்ருத்யுஞ்ச்ய மந்திரம், அரசன், அமைச்சர்கள், சூழ்ச்சி, இறுதியில் ஒரு ட்விஸ்ட் எல்லாம் நன்றாக இருந்தும், புது மாதிரியான நகைச்சுவை இருந்தும், ஏதோ பஞ்சத்தில் அடிபட்டு படம் எடுத்த மாதிரி இருக்கிறது.

ரு நல்ல படம் எடுக்க முயன்றிருப்பதால் வேறு சிலதும் சொல்ல வேண்டியிருக்கிறது.
இரண்டு நாள் ஜுரம் அடித்தாலே கண்கள் கருவளையம் சூழ்ந்து, தாடைகள் தொங்கி களைப்பு முகத்தில் குடிகொள்கையில் இவ்வளவு சீரியஸான வியாதிக்கு ஷூட்டிங் இல்லாத சமயங்களாக சில காட்சிகளைக் காட்டி  களைப்புற்ற, கொஞ்சம் கொஞ்சமாக சோபை இழந்து கொண்டிருக்கும் மனோரஞ்சனைக் காட்டியிருக்கலாம்.
ஒரு சூப்பர் ஸ்டாருக்கு உடல் நலக் குறைவு என்றால் ஒரு மருத்துவர்களின் பட்டாளமே வந்து விடாதா? இரண்டே மருத்துவர்கள்தான் வருகிறார்கள். வெளி நாடு போக மாட்டாரா? படம் எடுக்கிறேன் என்று இங்குதான் இருப்பாரா?
மனோரஞ்சனின் உத்தம வில்லனிலும் ஒரு சூப்பர் ஸ்டாரின் வாழ்வில் சாதாரணமாகச் சூழ்ந்திருக்கும் ப்ரும்மாண்டம் இல்லை. வீடு, படுக்கை அறை, தோட்டம், ஆஸ்பத்ரி முதற்கொண்டு  எல்லாமே ஒரு அப்பர் மிடில் க்ளாஸ் அமைப்பு போல் உள்ளன.
இதற்கா 80 கோடி செலவு?
ஹிரண்ய வதம் நாடகத்தில் “ஹரி ஹரி” என்கையில் “சொறி சொறி” என்று கேலி செய்திருக்கிறார்கள் என்று கேள்விப் பட்டு கமலஹாசனது தீவிர ரசிகைகள் இந்தப் படத்தைப் பார்க்க வரவில்லை. அவர்கள் கமலஹாசனை விட ம்ருத்யுஞ்சயனான நரசிம்மனுக்கு அதிகம் ரசிகைகள். இன்னும் பல கமல் ப்ராண்ட் பிராமண ஜாதி, ஹிந்து மத தாழ்ச்சிகள், பிற மத உயற்சிகள் படத்தில் உண்டு. ஒரு வேளை இவை வேறு யாராவது நடித்திருக்கும் படத்தில் கவனிக்கப் படாமலே பொயிருக்கும். ஆனால்,  வெண்மணியில் பலிகளின் மீதே குற்றம் கண்டுபிடித்து, திண்ணியம், உத்தபுரத்தில் காட்டும் எதிர்ப்பு முணுமுணுப்பில் கண்ணியத்தை(!)க் கடைபிடித்து, திருப்பித் தாக்க இயலாத ‘சாஃப்ட் டார்கெட்’களை மட்டும் தொடர்ந்து அவமானப் படுத்தும் தமிழக மாவீரர்களின் வரிசையில் வந்த, இவரது கடந்த கால செயல்பாடுகள் இவருக்கு எதிராகவே உள்ளன.
மிகக் கட்டுக் கோப்பாகப் போய்க் கொண்டிருக்கும் மனோரஞ்சனின் கதையில் ஒரு சில வசனங்கள் சற்று பொருந்தாமல் வந்து விழுந்து காட்சிகளின் தீவிரத் தன்மையைத் திசை திருப்புகின்றன. ஊர்வசி மாரடைப்புக்குப் பின் வரும் காட்சியில் கணவனின் நிலையைச் சற்று முன்தான் அறிந்திருப்பவர், வெகு சீக்கிரம் சாகவிருக்கும் தன் கணவர்  தன் கண்ணெதிரே எப்போதும் இருக்க வேண்டும் என்கிறவர் நடுவில் தன் உடல் குண்டானதைப் பற்றி புலம்புவது, மனோரஞ்சன் திடீரென்று கமலஹாசனாகி “ஆத்மாவுக்கு காது கேட்காது” என்கையில், தன் பாய் ஃபிரெண்ட் இன்னொரு பெண்ணை அணைத்துக் கொண்டிருப்பதைப் பார்த்த பதின் வயது இளம் பெண் (குழந்தை) அதிர்ச்சியால், அருவருப்பால் தாக்கப் பட்ட இடத்தில் ‘உனக்காகத்தான் தலை மயிரை குறைத்துக் கொண்டேன்” என்பது எல்லாமே இன்னமும் கொஞ்சம் கொஞ்சம் பழைய கெட்ட கற்றதும், பெற்றதுமான பழக்கங்கள் இவரிடம் ஒட்டிக் கொண்டிருக்கின்றன என்பதைக் காட்டுகின்றன.
நிறைய பொடி வைத்து எழுதப் பட்ட வசனங்கள். கொஞ்சம் ஓவர் லோட். அதே போல் காட்சி மற்றும் கதை அமைப்பு. உதாரணமாக மனோரஞ்சன் கான்சல் செய்யும் படம் ஆதி சங்கரர். அதை நிறுத்தி விட்டுத்தான் உத்தமனைப் பற்றிய உத்தம வில்லனை எடுக்கிறான்.

“புனரபி ஜனனம், புனரபி மரணம்’ என்றிருக்கிற கடக்க முடியாத இப்பிறவிப் பெருங்கடலைக் கடக்க எனக்கு உதவுவாய்” என்று இறைவனை இரைஞ்சிய,  “ப்ரம்மமே ஆன ஆத்மாவாகிய உனக்கு பிறப்புமில்லை; இறப்புமில்லை” என்று மரணமிலாப் பெருவாழ்வு பற்றி உலகுக்கு அறிவித்த மஹா ஞானி சங்கரன். அறுதியான இறுதி உறுதியான சாவே அற்ற பிரம்மத்தை உலகுக்கு எடுத்து உணர்த்திய ஆதி சங்கரனை தவிர்த்து விட்டு அதைவிட சிரமமான ஆனால் அதனோடு ஒப்பிடுகையில் அல்பமான ம்ருத்யுஞ்சய மந்திரத்தைத் தேடி அலைகிறான் மனோ.
ம்ருத்யுஞ்சய மந்திரம் உண்டா கிடையாதா என்பதில் தன் நேரடிப் பொருளில் அது இல்லை என்கிற நிலைப்பாட்டை மிருதுவாகத் தெரிவித்திருக்கிறார். அதே சமயம் அதன் எதிரிடையான அது உண்டு என்பதையும் காட்டியிருக்கிறார். (“a truth in art is that whose opposite is also true” –Oscar wilde) மந்திரம் போல் சொல்லின்பம் வேண்டும் (பாரதி) சொற்கள் மந்திரம் அல்ல. மந்திரம் சொல்லாய்த்தான் இருக்க வேண்டும் என்கிற அவசியமும் இல்லை. சொற்களில் சில மந்திரம் ஆகையில் கற்களில் சில தெய்வமும் ஆகலாம். சொற்கள் எவை அதில் மந்திரம் எவை கற்கள் எவை அதில் தெய்வம் எவை என உணரும் சுத்த அறிவே சிவம். அந்த சிவமே அன்பு. அன்பே ம்ருத்யுஞ்ச்ய மந்திரம்.
ம்ருத்யுஞ்சய மந்திரம் வெறுமனே சொற்களாலான ஒரு மந்திரம் அல்ல என்று உத்தமனே விளக்குகிறான். அந்த வழி முறைகளில் முதல் இரண்டும் கடினமானவையாக இருக்க மூன்றாவதான காலத்தால் அழியாத கலைஞனாக ஆக நாசர் விழைகிறார். ஆம். மிகச் சிறந்த கலைச் செயலால் “பார் மீது நான் சாகாதிருப்பேன் காண்டீர்” என்கிறான் உத்தமன். அதாவது மனோரஞ்சன். கமலஹாசன் செய்யத் துணிவதும், இது மாதிரி ஒரு படத்தை எடுத்து, அதுதானே? ஆக அது – ம்ருத்யுஞ்சய மந்திரம் – உள்ளது.
இறுதியில் உத்தமன் வாழ்கிறான்.  மனோரஞ்சன் இறக்கிறான். எனினும் அவன் நடித்த உத்தமன் பாத்திரம் மூலம் அவனும் சாகாமல் வாழலாம். ம்ருத்யுஞ்சய மந்திரம் அப்படியும் உண்மையாகி விடுகிறது.

த்தம வில்லன் பார்க்கையில் சத்யஜித் ராயின் ‘நாயக்’, ‘கூபி கய்ன் பாகா பய்ன்’ படங்கள் இரண்டும் ஞாபகம் வந்தன. ஒன்று சொஃபிஸ்டிகேடட் தருணங்களாலான, வசதி நிறைந்த வாழ்வு கிடைத்த மனிதர்களைப் பற்றியது. ஒரு ரயில் பயணம், ஒரு நடிகன், ஒரு பெண் நிரூபர். காதல் கத்தரிக்காய் எல்லாம் கிடையாது. மிகச் சிறந்த அகப் போராட்டங்கள் கொண்ட படம். இரண்டாவது ஃபேரி டேல். ராஜா காலத்து ஃபாண்டஸி. உத்தமன் கதையைப் போல. சங்கீதமே வராத கிராமிய சாமானிய பதின் வயது இளைஞர்கள். அதன் காரணமாகவே நாடு கடத்தப் பட்டு காட்டில் ஒரு தேவதை தந்த வரங்களால் போர்களையும், பஞ்சங்களையும், பசியையும் தீர்த்து மனிதர்களை ஆனந்தமாக்கும் படம்.  படத்தின் இசை. அதன் வெகுளித் தனம். அதன் அன்பு. அதன் நோக்கம்.
நாயக் மாதிரி மனோரஞ்சனின் சொஃபிஸ்டிகேடட் வாழ்க்கை, எல்லா குழப்பங்களுடனும், ஆத்ம ஹத்தியுடனும் கொந்தளிக்கும் affluence. கூபி கய்ன் மாதிரி இன்னொசென்ஸை மட்டுமே கருவியாய்க் கொண்ட ஒரு அப்பாவியின் கதை. ( இதில் அந்த அப்பாவித்தனம் ஒரு புத்திசாலி அரசனுடைய வேடம் என்று உத்தமனின் கதை முடிகிறது)
அந்தத் தளத்துக்கு இந்தப் படத்தைக் கொண்டு போயிருக்லாம். தவற விட்டு விட்டார்கள். அப்போது ஒருவேளை படம்  ஓடியிருக்காது. இப்போதும் நிலைமை என்னவென்று நிச்சயமாகத் தெரியவில்லை.

குணம் குற்றம் இரண்டையும், பிறதையும் நாடியாயிற்று. அவற்றுள் மிகை நாடுதல் கீழே:-

50 வருடங்களுக்கு மேலாக திரையுலகில் இருக்கும் கமலஹாசன் நடிப்பார்; விதவிதமாக வருவார்; ஆடுவார்; பாடுவார்; முத்தமிடுவார், யுத்தமிடுவார். எனவே அப்ளாஸ் காட்சிகளை மனதில் வைத்து நரைகூடிக் கிழப்பருவம் எய்திக் கொண்டிருக்கும் ஒரு நடிகன் இளமையாகவே என்றும் தெரிவதற்காக எடுத்துக் கொள்ளும் முயற்சிகளையும், இயற்கைக்கும் அவன் முயற்சிகளுக்குமான போராட்டத்தையும் கூட எடுத்திருக்கலாம்.
ஆனால் அதை ஏற்கனவே நம் காலத்திய சில இந்திய நட்சத்திரங்கள் வாழ்ந்து காட்டி விட்டார்கள்; அமோல் பாலேகர், அனில் சாடர்ஜியை வைத்து நகாப் (Naquab) டி.வி.சீரியல் எடுத்து விட்டார். அந்தப் பேராசையின் உச்ச கட்ட நிர்மூலத்தை ‘ஃபெடொரா’வில் ‘பில்லி வைல்டர்’ காட்டிவிட்டார். சிவாஜி டைரெக்டராக வரும் ‘எது மாதிரியும் இல்லாத புதுமாதிரி’ படம் எடுப்பதாகச் சொன்ன திரு ஏ.எஸ். பிரகாசம் ‘சாதனை’யில் மிகப்பெரிய வாய்ப்பைக் தவற விட்டிருப்பார். அதுபோலவும் ஆகியிருந்திருக்கும். நன்றாக எடுக்கப் பட்டிருந்தால் அவர் ரசிகர்களையும், தயாரிப்பாளர்களையும் திருப்திப் படுத்தியிருக்கும். பத்தோடு பதினொன்றாய்ப் போயிருக்கும்.  நல்ல வேளையாக அதைச் செய்யாததற்காக.. ..
ரு நாவலாக எழுதப் பட்டிருந்தால் தமிழில் எழுதப்பட்ட மிகச் சிறந்த நாவல்களில் ஒன்றாக இருந்திருக்கும். அந்த நாவலைத் திரையில் கடத்துகையில் முழுதாக வெற்றி பெறா விட்டாலும் அந்த முயற்சியை எடுத்ததற்காக.. ..
டத்தில் எடுக்கப்பட்டுள்ள மிகப் பெரிய ரிஸ்கே படத்தின் மிகப் பெரிய பலமாய் அமைந்து விட்டது. தொடர்ந்து மீண்டும் மீண்டும் வரும் க்ளோஸ் அப் காட்சிகள். இதில் நடிக்க அடாத தைரியம் வேண்டும்; தன்னம்பிக்கை வேண்டும். அது கமலிடம் இருக்கிறது. அவரிடம் மட்டும்தான் இருக்கிறது. கரணம் தப்பினால் மரணம். ஒன்று ஓவர் ஆக்டிங் அல்லது செயற்கையான சப்ட்யூட் ஆக்டிங். மெல்லிய கயிறின் மேல் ஆயிரம் அடிகளுக்கு மேலான உயரத்தில் இரண்டு மலைச் சிகரங்களை இணைத்து கீழே வலை கூட கட்டாமல் மிக வெற்றிகரமாக நடந்திருப்பதற்காக.. ..
(முன்பெல்லாம், எஸ்.வி. ரங்காராவ், சிவாஜி கணேசன், டி. எஸ். பாலையா, நாகேஷ், ஜெமினி கணேசன், பானுமதி, சாவித்திரி என்று இப்படி தைரியமாக பெருமளவான காட்சிகளில் எமோட் பண்ணுவதற்கு இருந்தார்கள். இப்போது நமக்கு இருக்கும் ஒரே ஒரு கொழுந்து கமலஹாசன்தான்.
தொழில் நுட்பம் மற்றும் உட்பொருள் பற்றிய விவாதம் உலகளாவியது.  மிகச் சிறந்த திரைப்படங்களை எடுத்தவர்கள் உட்பொருளின் முக்கியத்துவம் பற்றித் தெரிந்தவர்கள். “it is just because a director has something to say that he finds the form, the skill, the technique to bring it out.  If you are concerned only with how you say something without having anything to say then even the way you say something won’t come to anything – Techniques do not enlarge a director. They limit him”  – அகிரா குரோசாவா.
தொழில் நுட்பத்திலும் பணம் காரணமாக நாம் நமக்கு எட்டக் கூடிய அரிய உயரங்களை எட்ட முடிவதில்லை. தொழில் நுட்பம் அன்றி உட்பொருளுக்குத் (Content)தான் நல்ல சினிமாவில் முதல் இடம் என்பதை தமிழ் ஜாம்பவான்கள் (!) உணர்ந்ததே இல்லை. ஜாம்பவான்கள் என்று விதந்தோதப் படுபவர்களில் ஒருவர் தங்கத் தாம்பாளத்தில் அரிசியை வைத்து, மலைகா அரோராவையோ, மல்லிகா ஷராவத்தையோ விட்டு “இதுதான் ஐயா சாப்பாடு, சாப்பிடுங்கள்” என்று கொடுக்க வைப்பவர். இன்னொருவர் அதே அரிசியை சேற்றில் புரட்டி எல்லோரும் இப்படித்தான் சாப்பிடுகிறார்கள் என்று ஜோதி லட்சுமியையோ, சிம்ரனையோ ஆட வைத்துக் கொடுப்பவர். நல்ல வேளையாக, அவலை நினைத்து எது எதையோ இடித்துக் கொண்டிருந்த கமலஹாசன், அவர்களைப் போலெல்லாம் இல்லாமல், content டின் முக்கியத்துவத்தை உணர்ந்துவிட்டார். இது எதேச்சையா இல்லை நிரந்தரப் புரிதலா என்பதை அவரது இனி வரும் படங்கள் காட்டிவிடும்.
நம் புதிய இளம் இயக்குனர்களுக்கு உட்பொருள்தான் திரைப்படத்தின் உயிர் என்பது intuitive வாக வாவது புரிந்திருக்கிறது. நலன் குமாரசாமிகளும், கார்த்திக் சுப்பராஜ்களும், கோகுல்களும், விக்ரம் குமார்களும், விஜய் சேதுபதிகளும் இன்று மலர்ந்துள்ள இளம் பட்டாளத்தில் சீரியஸான திறமை மிகு சிலரும் குழுமி நவ தமிழ் சினிமாவின் உதயத்தைக் கொண்டு வந்து விடுவார்கள் போலிருக்கிறதே என்று என்னைப் போன்றவர்கள் ஆவலோடும், ஆன்க்ஸைடியோடும் காத்துக் கிடக்கையில் பல காலம் முன்பே சுஜாதா எதிர்பார்த்த கமலஹாசன் எவ்வளவோ முறை ஏமாற்றிய பின்னும் கூட இன்னமும் பந்தயத்தில் இருக்கிறார் என்பதற்காக.. ..
கே. விஸ்வநாத், மனோகராக நடித்த பையன், பார்வதி மேனன், எம். எஸ். பாஸ்கர், பாலசந்தர், ஊர்வசி, ஜெயராம், ஆண்ட்ரியா, பூஜா குமார், நாசர் என்று எல்லோருக்குமே நடிக்க வாய்ப்பு இருக்கிறது. ஸ்பேஸ் இருக்கிறது. நடிக்கவும் செய்திருக்கிறார்கள். இந்த எல்லாப் பாத்திரங்களுமே ஒற்றைப் பரிமாண கேரக்டர்களாக இல்லாமல் ஒரு ஆழத்தோடு இருப்பதற்காக.. ..
இப்போதெல்லாம் கமலஹாசன் படங்களின் இயக்குனர்கள் யாராக இருந்தாலும் படத்தின் குறை நிறைகளுக்கு கமலஹாசனே காரணம் என்றுதான் பலரும் எண்ணுகிறார்கள். இந்த விமர்சனமும் அந்த விதத்திலேயே அமைந்துள்ளது. படத்தின் அனைத்து அம்சங்களிலும் அவரது ஒப்புதல் இல்லாமல் எதுவும் வர முடியாது என்றே நினைக்கிறோம். ஒரு வேளை ரமேஷ் அரவிந்த்தின் பங்கு நிறைய இருந்தால் நடிப்பு, காட்சியமைப்பு மற்றும் க்ளோஸ் அப்புகளுக்காக அவருக்கும் பாராட்டுகள்.
சாவு, வாழ்வு இரண்டைப் பற்றியும் பலதும் யோசிக்க வைக்கும் ஒரு படம் யோசிக்கவே விடாத தமிழ்ப் பட சூழலில் எடுத்திருப்பதற்காக, 20+ வயதுப் பெண்ணுக்குத் தந்தையாகக் குறைகளும், குற்றங்களும் நிரம்பிய நடிகனாகக் கமலஹாசன் நடிக்கத் துணிந்தமைக்காக.
துகாறும் தீவிரமான உணர்ச்சி மிகு நடிப்பு என்றால் இதுதான் என்று இருந்த – அவரே உருவாக்கியவை உட்பட – அனைத்து வரையறைகளையும் கமலஹாசன் தகர்த்து எறிந்ததற்காக, புதிய ஒரு உயரத்தைப் பிற்காலச் சாதனையாளர்களுக்காக ஏற்படுத்தியதற்காக,
உத்தம வில்லனை அவசியம் பார்க்கலாம்.
பாசாங்கு குறைந்திருக்கிறது. கமலஹாசன் இதே திசையில் பயணித்தால், தன் தனிப்பட்ட சாய்வுகளை, சார்புகளை, காழ்ப்புகளை மெனக்கெட்டு கதையில், சம்பவங்களில், வசனங்களில், பாத்திரங்களில் புகுத்தாமல், கதையின், பாத்திரங்களின் மனோ தர்மமும், மனோ தத்துவமும் கெடாமல் படங்களை எடுத்தால் உண்மையிலேயே அவர் மூலம் நல்ல படங்கள் வர வாய்ப்பிருக்கிறது.
து நிகழ, ஓரு சிறிய ஆலோசனை : சினிமா வித்தையில் சீரியஸ் மாணவரான கமலஹாசனுக்கு மகத்தான திரைக் கலைஞன் ராபர்ட் ப்ரெஸ்ஸான் தனக்குத் தானே சொல்லிக் கொண்ட இந்த வார்த்தைகள் முன்பே தெரிந்திருக்கும். இது ஒரு நினைவூட்டல்தான்:
“Rid myself of the accumulated errors and untruths. Get to know my resources, make sure of them.”
oOo
நன்றி: இந்தக் கட்டுரைக்குத் தேவையான சில தகவல்களைச் சொன்ன திரு. எஸ். பார்த்தசாரதி அவர்களுக்கு.

அஃகம் சுருக்கேல் – நாஞ்சில் நாடன் கட்டுரைத் தொகுப்பு – ஒரு மெச்சல்

அஃகம் சுருக்கேல் – நாஞ்சில் நாடன் கட்டுரைத் தொகுப்பு – ஒரு மெச்சல்

 | சொல்வனம் இதழ் 119 | 29-12-2014|
ஆள்வது என்றால் முழுக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது. துன்புறுத்துவது அல்ல, பரிபாலனம் செய்வது. மேன்மையுறக் கலந்துறவாடுவது.போற்றுவது.
ஒருமுறை நாஞ்சில் நாடன் அவர்களிடம், “‘நமஹ’ என்கிற சம்ஸ்க்ருத சொல்லின் பொருள் எனக்குத் தெரியாது; ஆனால் அதற்குப் பதிலாக தமிழ் வழிபாட்டுத் துதிகளில் ‘போற்றி’ என்று இருப்பது தெரியும். தமிழன் காலங்காலமாகப் போற்றி போற்றி என்று யாரையாவது முகஸ்துதி செய்து கொண்டே இருப்பவன் போலும்” என்று சொன்னேன். உடனே அவர் ‘போற்றி’ என்பது புகழ்வது மட்டுமல்ல; அதற்கு இன்னும் பல ஆழமான பொருள்கள் உண்டு என்று விளக்கினார். போற்றுவது என்பது அக்கறையோடு பேணுவதும் கூட. மதிப்பு தருவது மட்டுமின்றி அன்பு செலுத்துவதும் கூட என்றெல்லாம் பேசினோம். அந்த விதத்தில் ஆள்வது என்பது இவையனைத்துமானது.
ஆள்பவன் என்பவன் இப்படி இருந்தால் ‘ஆபயன் குன்றாது; அறு தொழிலோர் நூல் மறவார்’ குடியாள்பவன் இப்படி என்றால் எழுத்தாள்பவன் எப்படி இருக்க வேண்டும்? மொழியின் மீது, சொல்லும் பொருளின் மீது முழுக்கட்டுப்பாடும், மோகமும், போற்றுதலும், நுண்ணறிவும், புலனுணர்வும், மொழியின் பரப்பையும், வீச்சையும் துல்லியமாய் கணிக்கும் திறனும் உடையவனாக இருக்க வேண்டும். மொழியை ஆள வேண்டும். போற்றிப் பேண வேண்டும். அவன்தான் எழுத்தாளன். இது எம்மொழிக்கும் பொருந்தும். பாக்கிப் பேர் ‘எழுத்துபயோகிகள்’ மட்டும்தான். தமிழில் அரிதாகக் கிடைக்கிற எழுத்தாளர்களில் நாஞ்சில் நாடனும் ஒருவர்.
இத்தகைய எழுத்தாளர்களிலும் வாழ்நாள் சுருக்கத்தாலும், வாழ்வின் நெருக்கத்தாலும், மனப் பாங்கினாலும் தேர்ந்தோ, எதேச்சையாகவோ எழுத்தின் பல்வேறு துறைகளிலும் கவனத்தைச் செலுத்தாதவர் அல்லது செலுத்துபவர் என்று இரு பெரும் பிரிவுகள் உண்டு. புதுமைப் பித்தனும், மௌனியும் நாவல் எழுதியதில்லை. ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி முதலியவர்கள் போல் நாஞ்சில் நாடனும் சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை போன்ற பல பிரிவுகளிலும் தடம்பதித்தவர். தடம் பதித்தவர் என்றால் ஏனோ தானோ என்று அல்ல. முழு வீச்சுடனும் ஆழமாக. இவை தவிர திரைக்கதை, மேடைப் பேச்சு, உரையாடல், நேர்காணல் என்னும் பல துறைகளிலும் கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக இலக்கியப் பணி புரிந்து வருபவர்.
இப்போது எழுத்துகளை புனைவு, அ-புனைவு என்று பிரிக்கும் வழக்கம் வந்துள்ளது. முன்பெல்லாம் கதை, கவிதை மற்றும் கட்டுரை என்று சொல்வதுதான் வழக்கம். இந்த புனைவு மற்றும் அபுனைவு ஆங்கில Fiction, non-fiction ஆகிய இரண்டின் தமிழ்ப்படுத்துதல். புனைவு. இதில் எத்தனை அபுனைவு? இந்த அபுனைவில் எவ்வளவு புனைவு? உலக இலக்கியத்தில் இது போன்ற கறாரான, மூச்சு முட்டும் கட்டுப்பாடுகள் எப்போதோ தளர்ந்து விட்டன. ‘Fiction, nonfiction – the two are bleeding into each other all the time.’ என்கிறார் ஜெஃப் டையர். இதை தமிழில் செய்தவர்களில் நாஞ்சில் நாடன் முக்கியமானவர். இவரது கதைகளில் கட்டுரைத் தன்மை திடீரென்று கதையாகும் மாயம் நிகழும். உதாரணத்திற்கு இரண்டு: ‘வனம்’ என்கிற சிறுகதை, மற்றும் சில ஆண்டுகளுக்கு முன் ஆனந்த விகடனில் வெளியான ‘பெருந்தவம்’ என்கிற கதை. அதே போல் இவரது கட்டுரைகளில் சிறுகதைகளின் சுவை இருக்கும்.
agham_surukkel
கதை, கட்டுரை மட்டுமல்ல. கவிதையும் அப்படித்தான். நம் மரக்காலால் அளக்க முடியாத மகாநதி. கவிதை என்பது கவிதைகளில் மட்டுமே எழுதப்படுவது மட்டுமன்று. அது கவி உளத்திலிருந்து பிறப்பது. அப்படிப் பார்த்தால் இப்போது கவிதைகள் பலவற்றில் கவிதை இல்லை என்று சொல்லி விடலாம். எழுத்தின் இசை கவிதை. ஒரு கதையில், ஒரு கட்டுரையில் ஒரு கவிதை வரி மனதை ஆண்டு விடும். ‘மோகமுள்’ என்கிற தலைப்பே கவிதை. ‘கற்பு கற்பென்று கதைக்கிறீர்களே, இதுதான் ஐயா பொன்னகரம்’ என்கிற வரிகள் கவிதை. ‘கம்பனுக்குள் வந்த கதையில்’ நாஞ்சில் நாடன் தன் கம்ப ராமாயண ஆசிரியர் திரு ரா.பத்மநாபன் பற்றிக் குறிப்பிடுகையில் “ரா.ப. வுக்கு எந்த விதத்திலேயும்  உபகாரம் செய்திருக்கலாகும் என அவர் இறந்து ஒரு வனவாச காலம் கடந்தபின்பு, இந்த நூலை (கம்பனின் அம்பறாத் தூணி) காணிக்கையாக்கி நான் அவருக்குக் கடன் செய்கிறேன். நீர்க்கடன் அல்ல நூற்கடன்” என்கையில் சொல்லாலும், பொருளாலும் நோக்கத்தாலும் கவிதை நிகழ்ந்துவிடுகிறது.
எனவே கட்டுரை அல்லது அபுனைவு என்பது நல்லதோர் எழுத்தாளனின் ஆளுமையில் வறண்ட தரிசு நிலம் அல்ல. அவன் கலை புணர்ந்து பெறும் குழந்தைகளுக்கு நாம் வைக்கும் பெயர்களால் அவற்றின் குணம் கட்டுப்படப் போவதில்லை.
கட்டுரை உட்பட எழுத்தின் அடிப்படை, வாழ்க்கையின் அடிப்படையுமான, அதே சமயம் சொல்லிச் சொல்லித் தேய்வழக்காகி விட்ட ‘உண்மை, அன்பு, அழகு’தான். அதை எம்மொழியில் சொன்னால் என்ன? ‘Truth Beauty, Love’ என்றாலும், ‘சத்யம், சிவம் சுந்தரம்’ என்றாலும் ஒன்றுதான். மேன்மையான எழுத்து இவற்றின் மேல் மலர்வது.
‘உண்மை’ பற்றிச் சொல்கையில், நாஞ்சில் நாடன் அவர்களின் கதைகளிலேயே கூட ஒரு தகவல் இருந்தால் அது சரியாகத்தான் இருக்கும் என்கிறார் வெங்கட் சாமிநாதன். அப்போது கட்டுரைகள் பற்றி என்ன சொல்வது. கட்டுரைகள் என்பவை எழுத்தாளனின் தொடர்ந்த உரையாடல். அவன் சொல்லும் விஷயங்கள் தவிர அவனைப் பற்றியும், நம்மைப் பற்றியும் அவ்வெழுத்துகள் மூலம் நாம் தெரிந்து கொள்கிறோம். அதில் தில்லு முல்லுகள் செய்வது, திரிப்பது என்பவை பஞ்சமா பாதகங்களை விட கொடியவை. நாஞ்சிலின் கட்டுரையில் உள்ள தகவல்கள் பலமுறை பல கோணங்களில் சரிபார்க்கப்பட்ட பின்பே அச்சுக்கு வருபவை. அவரது மனச் சாய்வுகள், பிடித்த பிடிக்காத தன்மைகள் என்று வாசகர் சிலவற்றைக் கருதலாம். ஆனால் தகவல் பிழைகள் இரா.
‘அன்பு’ என்பது துன்பம் துடைத்தல். அதை மகத்தான எழுத்துகள் செய்து கொண்டே இருக்கின்றன. அதனால்தான் அநியாயத்துக்கு எதிரான, எனவே ஏழைகளுக்கும், பலஹீனமானவர்களுக்கும், வஞ்சிக்கப் பட்டவர்களுக்கும் ஆன, அதே சமயம் அதன் மூலம் ஆதாயம் தேடாத குரலாக நாஞ்சில் நாடன் எழுத்துகள் ஒலிக்கின்றன. இந்தத் துன்பங்களுக்குக் காரணமான வாழ்க்கைச் சீரழிவுகளைப் பற்றி மீண்டும், மீண்டும் பேசுகின்றன.
‘அழகு’ என்பது துல்லியம், சரியான அளவு, தன்மை. சொல்ல வந்த விஷயத்தைப் பிசிறின்றிச் சொல்வது. இதற்கு அகத்தெளிவும், விஷய அறிவும் அவசியம். ‘The difference between the right word and the almost right word is the difference between lightning and a lightning bug.’ என்கிறார் மார்க் ட்வெய்ன். இந்த விஷயத்தில் வார்த்தைப் பற்றாக் குறை என்கிற பேச்சுக்கே இடமில்லாமல் எழுதுபவர் நாஞ்சில் நாடன். பழந்தமிழ்ச் சொற்கள், சமீப காலம் வரை இருந்து பிற மொழி மோகத்தால் வழக்கற்ற தமிழ்ச் சொற்கள் என்று கொட்டிக் கிடக்கும் நமது கருவூலத்தின் சாவி இவர் வசம் இருக்கிறது. இவரது நடை பழந்தமிழ் போல் இருக்கிறது. நவீன உலகுக்கு இது சாத்தியப்படுமா என்பவர்களுக்கு ஒரே ஒரு கேள்வி : ‘நீங்கள் நவீனம் என்பதை ஆங்கிலம் என்று நினைக்கிறீகளா, அல்லது ஒரு மொழியின் உயிர்த் தன்மை என்று நினைக்கிறீர்களா?’
மேலும் கூடியவரை தமிழ்ச் சொற்களையே தனிப் பேச்சிலும் பயன்படுத்தும் இவர் தேவை இருக்கையில் பொருளின் தன்மை கருதி பிற மொழிச் சொற்களைப் பயன்படுத்தத் தயங்குவதில்லை. ஒரு கலைஞனால் எந்த ஒரு மொழியையும் எப்படி துவேஷிக்க முடியும்?
உலக நாடுகளுக்கும், இந்தியாவின் பலபகுதிகளுக்கும் சென்று வந்தவரும், இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளில் பல ஆண்டுகள் வாழ்ந்துள்ளவருமான இந்த நாகர்கோவில் தமிழர், அடிப்படையில் ஒரு விவசாயியாகவே தன்னைப் பாவிக்கிறார். இவரது உறவு முதலில் மண்ணோடு, பயிர்களோடு, தாவரங்களோடு, விலங்குகளோடு, பறவைகளோடு. இந்த உறவுகளின் வலிமையின் காரணமாகவே இவருக்கு மனித உறவுகள் சீராகவும், சிக்கலற்றும், அன்போடும் இருக்க வேண்டும் என்கிற அக்கறையும், அதுகுறித்த தற்காலச் சூழல் மற்றும் தாக்கங்களால் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் அழிவு பற்றிய அச்சமும் ஒருங்கே உள்ளன. அதனல்தான் “இந்தியா பூராவும் செல்போன்களின் விதவிதமான வல்லிசைகளால் நிரம்பி பிரபஞ்சத்தில் வழியும் காலம் வெகு தூரத்தில் இல்லை” எனக் கவலுறுகிறார். “செண்பகப் பறவைக்குத் தெரியுமா அதன் பெயர் செண்பகம்” என்று என்று வினவுகிறார். “இவ்வுலகு மனிதர்க்கு மட்டுமே சொந்தமானது அல்ல” என்பதை நமக்கு நினைவு படுத்துகிறார்.
எழுத்தாளன் நேர்மையாக இருக்க வேண்டும். சமன் செய்து சீர் தூக்கும் கோல் போல். எல்லாம் சரி என்பதல்ல இக்கோல். எது சரி என்பதுதான். நாஞ்சில் நாடன் சில இடங்களில் ஒரு விஷயத்தின் இரண்டு பக்கங்களையும் சொல்லிச் சென்று விடுவார். உதாரணம் : “பர்வம்’ என்னும் வடமொழிச் சொல்லின் தமிழ் வார்ப்பே பருவம் என்றும் சொல்வார்கள் அற்ப மகிழ்ச்சி அடைய.”
ஆனால் இது போன்ற பெரிய ஆபத்தில்லா உபாதைகளைப் போலன்றி உயிர் கொல்லும் நோய்கள் பற்றி சர்வ நிச்சயமாகத் தன் நிலைப்பாடு இதுதான் என்பதை ஐயத்துக்கிடமின்றிச் சொல்லி, தான் யார் என்பதையும் காட்ட இவர் தயங்குவதில்லை. இது தமிழுலகில் அரிதான குணம். பாசாங்கு , சுயலாபக் கணக்கின் இடையறாத துரத்தல் தவிர அச்சத்தின் காரணமாகவும், தரங்கெட்ட சமூக அபாயங்கள் காரணமாகவும் இத்தகைய தீர்மானமான கருத்துகளைச் சொல்ல பலரும் தயங்குகிற சூழலில் தன் கருத்து இதுதான் என்பதை எள்ளளவும் தயங்காது உரத்துச் சொல்லும் இவர் துணிவு அரிதினும் அரிதானது. அத்துணிவினால்தான் “கம்ப ரசம் எழுதப்படலாம். கீமாயணம் எழுதப் படலாம். கொண்டு வந்து போட்டுக் கொளுத்து எனலாம். இராமனைச் செருப்பால் அடிக்கலாம். செருப்பு மாலை போடலாம். சீதையின் மேலாக்கை மாநாட்டு ஊர்வலத்தில் விலக்கி விலக்கிக் காட்டலாம். ஆனால் கம்பனும், அவனது இராமாயணமும் யாவற்றையும் வென்று வாழும்.” என்று இவரால் சொல்ல முடிகிறது.
அவரைப் பற்றி அவரே சொல்வது போல தமிழுடன் சகவாசம், இசையுடன் இசைவு, இளையவர் நட்பு இவரை முதுமையடையாமல் பார்த்துக் கொள்கிறது. அது நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாகத் தொய்வின்றி எழுதி வரும் இவர் எழுத்தில் தெரிகிறது.
தத்துவச் சேற்றுக்குள் கால் வைக்காதவர். இவரது வாழ்க்கை நெறி முறையும், அது குறித்து இவரது உறுத்தாத அறிவுரையும் மிக எளிமையனவை : “சக மனிதனைச் சகித்துக் கொள்ள முயல வேண்டும். சக மனிதனைப் புரிந்து கொள்ள முயல வேண்டும். முடியுமானால் நான் சக மனிதன் மீது அன்பு செய்ய முயல வேண்டும்.” “உலகம் அயோக்கியமயமாக இருக்கட்டும். நமக்கு வாய்த்திருக்கும் நல்ல தன்மைகளை அற்ப சுகங்களுக்காக இழக்க நாம் தயாராக இல்லை” இவ்வளவுதான். இதை விட வேறு என்ன வேண்டும்?
நாஞ்சில் நாடனின் இக்கட்டுரைகள் தீவிரமான விஷயங்களைப் பற்றிப் பேசினாலும் அவரது எழுத்தின் இயல்பான நகைச்சுவை, ‘கன்னியாகுமரி கடலை என்ன செய்வதென்று தெரியாமல் வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கும் ஐயன் திருவள்ளுவன் சிலை’ என்பன போன்ற கவனிப்புகளாக, படிக்கும் சுவாரஸ்யத்தைத் தூண்டிக் கொண்டே இருக்கும்.
‘செந்தமிழ்க் காப்பியங்கள்’ கட்டுரை ஐம்பெருங்காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள், கம்ப ராமாயணம், மகாபாரதத் தமிழாக்ககங்கள், பெரிய புராணம், சீறாப்புராணம், இரட்சணி யாத்திரிகம், தேம்பாவணி என காப்பியங்கள் பற்றி சுருக்கமான அறிமுகங்களைத் தரும் முக்கியமான கட்டுரை. இது நாஞ்சில் நாடனின் இன்னொரு தொண்டு. தமிழன் தன்னிடம் உள்ள முத்துகளையும், வைர, வைடூர்யங்களையும் பற்றி கிஞ்சித்தும் அறியாமல் பிறரைப் பழிப்பதிலோ, பிரிவினை பேசுவதிலோ, வெற்று கோஷங்கள் எழுப்புவதிலோ, தமிழ்த் தொண்டு ஆற்றி விட்ட நிம்மதியில் உறங்கிக் கிடக்கிறான். ‘மொழியை அரணாகப் பயன்படுத்த, அதன் மூலம் இனத்தை, மரபை, பண்பாட்டை, இலக்கியச் செல்வங்களைக் காக்க நமது செயல் திட்டங்கள் என்ன’ என்று சிந்திக்க ஒரு நொடி ஒதுக்குவதில்லை. அவனிடம் “கேளப்பா இவையெல்லாம் உன் சொத்து. கண் திற” என்று அறிமுகம் செய்கிறார்.
பல முக்கியமான தகவல்களைத் தரும் அறிவு சார் கட்டுரைகள் இவரது இன்னொரு தொண்டு. இவை தமிழில் எங்குள்ளன? யார் எழுதியவை? அவை பற்றிய அறிமுகம், மற்றும் கிடைக்குமிடம், அந்நூல்களின் சிறப்பு பற்றி எழுதுகிறார்.
கணித முதுகலைப் பட்டதாரி. புள்ளியியல் படித்தவர். அபார நினைவாற்றல் உள்ளவர். இணையத்தின் துணையின்றியே பல நீண்ட விரிவான தகவல்களையும், பட்டியல்களையும் தரக் கூடியவர். கலைத் தன்மை, தர்க்கம் இரண்டும் ஒரு சேர இயங்கும் முழு மூளைக் காரர். இவ்வொத்திசைவினால் தாவரங்கள், தல விருட்சங்கள், மாடன்கள் என்று நீண்ட பட்டியல்களைத் தருகையிலேயே அவற்றின் உட்பொருளையும், அவை நம் வாழ்வாதாரங்கள் என்பதை நமக்கு உணர்த்தவும் இவரால் முடிகிறது.
இயற்கையும் நாமும் ஒன்றுதான் என்கிற அடிப்படை உணர்வை இவரது கட்டுரைகள் வாசகருக்குத் தொடர்ந்து கடத்துகின்றன. மறந்து போன உண்மைகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வருகின்றன. வெட்டுப்பட்ட ஆல மரத்தின் வெட்டுப் பரப்பில் உட்கார்ந்தது, இவருக்கு அறியாச் சிறுவனாய் தன் சித்தப்பா, சித்தி மடியில் அமர்வதைப் போல் இருக்கிறது. இது எவ்வளவு உண்மைகளை வாசகருக்கு ஒரு சேர அளிக்கிறது ! அமர்ந்தது மரத்தடி கூட இல்லை. என்றோ இருந்த ஆல மரத்தின் வெட்டுப் பரப்பு. அந்தப் பரப்பு மனித மடி ஆகிறது. அறியாச் சிறுவனின் வாழ்வில் மடி எவ்வளவு உந்நதமான, பாது காப்பான, நிம்மதியான இடம்? வளர்ந்த மனிதன் சாகும் வரை அத்தகு மடி தேடித்தானே அலைகிறான், கோயில் கோயிலாக, தலைவன் தலைவனாக, கொள்கை கொள்கையாக, கேளிக்கை கேளிக்கையாக . . . . அந்த மடி, உலகோர் குறுக்கி எதிர்பார்ப்பது போல் சொந்தப் பெற்றோரது கூட இல்லை. தாய் தகப்பனைப் போல் அல்லது தாய் தந்தையினும் சாலப் பரிந்து வாழ்வமுதூட்டிய சித்தப்பா சித்தி மடி.
“அல்லாஹூ ஆலம்’ என்பதில் ஆலம் என்பதன் பொருள் உலகம். உலகமே இறைவன், இறைவனே உலகம்” என்று பொருள் சொன்ன நண்பரின் இச்சொற்றொடரில் ஆலம் என்கிற சொல்லினால் ஈர்க்கப் பட்டு “கடவுள் ஆலம், கடவுள் ஆலம், கடவுள் ஆலம்”  என்று இவர் திரும்பத் திரும்பச் சொல்லிப் பார்க்கிறார். ஆல மரத்தின் வெட்டுப் பரப்பு சித்தப்பா சித்தி மடி ஆகையில் ஆலம் கடவுளும்தானே? அனைத்தும் கடவுள்தானே?
ஆனால் நாஞ்சில் நாடன் குணரூபமான (abstract) விஷயங்களில் ருசி கண்டு அங்கேயே உழல்பவர் அல்ல. மிகவும் யதார்த்தமானவர். நிஜ வாழ்க்கையை சரியாக்கும் பணியில் தளாராது ஈடுபடுபவர். அதனால்தான் நம்மிடம் கேட்கிறார் : “நாம் ஒன்றாக நின்று – வேற்றுமைகளுக்கு உள்ளும் ஒற்றுமையாக நின்று காசி என்று நினைத்தால் ராமேஸ்வரம் நினைவுக்கு வருவதைப் போல கூட்டாக உய்யப் போகிறோமா? அல்லது தன்படை சுட்டுச் சாகப் போகிறோமா?” கவனமும் கவலையும் மிக்க இக் கேள்விக்கு நாம் வாழ்வதன் மூலமாகச் சொல்லும் பதிலில் இந்தியாவின், தமிழனின் எதிர்காலம் உள்ளது.
ஓர் எழுத்தாளனின் பணி இதுதான். மனித குலத்தைத் துண்டாடுவனவற்றை மறுதலிப்பது. அடிப்படையில் நாம் அனைவரும் ஒன்று என்கிற உண்மையை விட்டு அசையாதிருப்பது. அதைச் செய்யும் இக்கட்டுரைகள் ஒரே நூலாக வருவது மிகுந்த மகிழ்ச்சிக்குக் காரணமாகிறது.
தமிழ் மொழி, சமுக சிந்தனை, கல்வி, இலக்கியம், கலை, பண்பாடு, குடும்பம், உறவுகள், இயற்கை முதலிய பல்வேறு தளங்களில் கூர்மையான பார்வைகளையும், கருத்துகளையும் நேர்மையாக வைக்கும் திரு நாஞ்சில் நாடன் அவர்களின் பல கட்டுரைகளிலிருந்து பெரும்பாலான இத்தன்மைகள் வெளிப்படுமாறு இத்தொகுப்பு அமைந்திருக்கிறது.

****
Aggam_Surkkel_Nanjil_Nadan_Books_Essays_Tamil_Letters_Cover_2015
தொகுப்பாசிரியர் : ஜி. ஆர். பிரகாஷ்
நூல் கிடைக்குமிடம் : மாலதி பதிப்பகம், கோவை. தொடர்புக்கு : 9 9946  95242, 94881 85920
மின்னஞ்சல் :  malathipathipagam@gmail.com
விலை : ரூ. 150/-

ஆயிரம் பிறை கண்ட அரிமா! – ஜெயகாந்தன்

ஆயிரம் பிறை கண்ட அரிமா! – ஜெயகாந்தன்

 |சொல்வனம் இதழ் 114 | 10-05-2014|

1960களின் மத்தியில் பள்ளியில் கே.பாலசந்தர், கே.எஸ்.கோபாலக்ருஷ்ணன் என்று சினிமா டைரெக்டர்கள் பற்றி பேசும் மாணவரிடையே அறிவியல் ஆசிரியர் திரு என்.எஸ். இரகுநாதன் “இதப் பத்தியெல்லாம் பேசறீங்களே, ஜெயகாந்தனைப் படியுங்கப்பா” என்று சொன்னார்.
வாழ்க்கையின் புதியனவற்றுக்கு எல்லையே கிடையாது என்கிற உண்மையில் அது பற்றி அறியவே செய்யாது திளைக்கும் சிறுவர் பருவம். சந்தேகம் கிடையாது. கடிவாளங்கள், கோட்பாடுகள் எதுவும் கிடையாது. நீடித்த கவலைகளும்தான். எனவே உடனே ஜெயகாந்தன் படிக்கத் துவங்கினோம். படிக்கத் துவங்கிக் கிடைத்த ஆனந்தத்தில், ஏதோ நாங்கள் ஒவ்வொருவருமே கண்டுபிடித்த அபூர்வமாக அவரை உணர்ந்ததில் அவரது எழுத்துகளும், பின்னர் அவரது பேச்சுகளும் அவற்றுக்கு வெகு காலத்திற்குப் பின் நிகழ்ந்த சந்திப்புகளும் ஜெயகாந்தனை எழுத்திலும், பேச்சிலும், நேரிலும் படிப்பதை வேத மந்திரம் போல் ஆக்கின.
jk
“நீரெல்லாம் கங்கை, நிலமெல்லாம் காசி” என்றவர், “எழுத்தும் தெய்வம், எழுதுகோலும் தெய்வம் என்று நம்புகிற மக்களிடையே இத்தகைய தெய்வ லீலைகள் நிகழும்” என்று தமக்கு கிடைக்கும் அங்கீகாரம் பற்றிச் சொன்னவர் பற்றி இப்படிச் சொல்வது தகும்.
ஆனந்த விகடன் எப்போது வரும் என்று வீட்டு வாயிற்படியில் காத்திருப்போம். பெரும்பாலும் அதில் ஜெயகாந்தன் கதைகள் இருக்கும் காலம் அது. வந்த பின் படித்து, பிறகு பள்ளிக்குப் போய் நண்பர்களிடையே அதை சிலாகித்து பேசிக் கொண்டே இருப்போம்.
பின்பு ஜெயகாந்தன் எங்கெல்லாம் பேசுகிறாரோ அங்கெல்லாம் சென்று கேட்போம். அல்லது கேட்டவர்களிட்மிருந்து ஜெயகாந்தன் என்ன பேசினார் என்று கேட்டுத் தெரிந்து கொள்வோம்.
40 ஆண்டுகளுக்கு முன் யு.எஸ்.ஐ.ஏஸ். ஸில் நடந்த “நேருக்கு நேர்” நிகழ்ச்சியில் ஒருவர் “உங்கள் வாழ்வின் லட்சியம் என்ன?” என்று கேட்டபோது “Not to die” என்று அவர் சொன்ன பதில், எண்பதாம் ஆண்டு நிறைவின்போது திரு. நல்லி குப்புசாமி “ நீங்கள் நூறாண்டு வாழ்வீர்கள் “ என்று வாழ்த்தியபோது போது சொன்ன “ஆமாம்” என்கிற ஆமோதிப்பில் தொடர்கிறது. இப்படி சொல்ல, இப்படி எண்ண ஒருவர் உண்டென்றால் அது ஜெயகாந்தன்தான்.
“நான் பொழுது போனால் குடிப்பவன்” என்று காந்தி ஜெயந்தி விழாவில் பேச ஆரம்பித்தவர். தமிழாசிரியர்கள் மாநாட்டில் மிக நீண்ட முஸ்தீபுக்குப் பின் அவர்களுக்கு ‘நமஸ்காரம்’ சொன்னவர். பெரியாரின் துவேஷத்தின் அநீதியை அவர் மேடையிலேயே துணிந்து தர்க்க ரீதியாக, தர்ம ரீதியாக எதிர்த்தவர். பல வண்ணங்கள் கொண்ட சட்டையுடன் மேடை ஏறியவரை ‘பாம்பாட்டி’ என்று சொன்ன அரசியல்வாதியை, ‘மேடையில் இருக்கும் உங்களையெல்லாம் ஆட்ட வந்த பாம்பாட்டிதான் நான்” என்று பதில் சொன்னவர். நான் ‘கலைஞர் பேசுகிறேன்’ என்று ஃபோனின் மறு முனையிலிருந்து சொன்ன குரலிடம் ‘நானும் கலைஞர்தான் பேசுகிறேன்’ என்று பதிலிறுத்தவர். இராட்டை சுற்றும் பெண் என்னும் சின்னத்தினை கெவலமாகப் பேசிய மூத்த அரசியல்வாதியின் கண்களை காமப்புழு நெளியும் கண்  என்று சினந்து, உன் தாய், மகள் அவர்களை மறந்தாயா என்று கேட்டவர்.
35 வருடங்களுக்கு முன், ‘ம்யூசிக் அகாடமி’யில் நடந்த ‘மாக் பார்லிமென் ட்’ டில் இவர் ஒரு புறமும், சோ ஒரு புறமும் அமர்ந்திருக்க மேலும் பலர் பேசக் காத்திருக்கையில் “I can’t relish this nonsense” என்று இவர் அறிவித்ததும், சோ  “இவர் பேசட்டும். நாம் கேட்போம். இவர் பேசுவதை எல்லோரும் கேளுங்கள். நம் எல்லோருக்கும் நாட்டுக்கும் அது நல்லது” என்று கூட்டத்திடம் கூறினார். பின்னர் பொழிந்த ஜெயகாந்தன் “இப்போது மஹாத்மா காந்தி பிறந்திருந்தால் அவரை ஒரு சேரியில்தான் தேட வேண்டும்; அவர் மறு பிறவியில் அங்குதான் பிறக்க விரும்பினார்” என்று கூறி மிகப் பிரமாதமான உரையை நிகழ்த்தினார். மாக் பார்லிமென் ட் நடக்கவில்லை. ரொம்பி வழிந்த ம்யூசிக் அகாடமி அவ்ர் பேச்சை மட்டுமே வெகு கவனமாக பூரண ஈடுபாட்டுடன் கேட்டது.
இன்னொரு மேடையில் காந்தி வெளிநாடு செல்கையில் அவர் அன்னை ‘மது, மாமிசம், மாது’ வேண்டாம் என்று வாக்குக் கேட்டதைப் பற்றிச் சொல்கையில் என் தாய் எனக்கு ஆசை ஆசையாய் ஊட்டிய அசைவ உணவை நான் விட வேண்டியதில்லை. இதன் தாத்பர்யம் புலனின்பத்தில் உன்னை இழந்து விடாதே என்பதுதான்” என்றார்.
பாரதி, புதுமைப் பித்தன் என்கிற இரண்டு பெயர்களை எங்கள் காதுகளில் உபதேசித்தவர் ஜெயகாந்தன்தான்.
பாரதி என்னும் மஹா கவியின் உரைநடையை எங்களுக்கு அறிமுகப்படுத்தியவர் அவரே.
என் கட்டுரைகளில் எல்லாம் எங்காவது ஜெயகாந்தன் வந்து விடுவார் என்று என் நண்பர்கள் சொல்வதுண்டு. இது அவரைப் பற்றிய கட்டுரை இதை எழுதுகையில் பாரதி பற்றி ஜெயகாந்தன் சொன்னதை நினைவு கூருகிறேன்.
“எனது நூல்கள் யாவும் மகாகவி பாரதியின் பாத கமலங்களில் சமர்ப்பிக்கப்படுவனவே யெனினும் இந் நூல் பாரதியின் இலக்கியச் சோலையிலிருந்து பறித்தெடுத்த மலர்களால் தொகுக்கப் பட்டது என்பதனைக் கருதிச் சொந்தத்தோடும், உரிமையோடும் அவரது சென்னியிலிதைச் சூட்டுகிறேன். (பாரதி பாடம்)“
இவரை நேரில் அருகில் பார்த்தது 1987-90 ல் நான் கல்கத்தாவிலிருந்தபோது சென்னை வந்தபோது. திரு. அசோகமித்திரனைச் சந்தித்து விட்டு ஆழ்வார்பேட்டையிலிருந்த மடத்துக்கு வந்து இவரைப் பார்த்தேன். ஒரு 15 நிமிடம் உடன் இருந்தேன்.அது சந்திப்பு அல்ல.
பின்னர் 2001ல் பொங்கல் சமயத்தில் தஞ்சாவூரில் நடந்த ஒரு விழாவுக்கு திரு. மோதி. ராஜ கோபால்* என்னையும், அவர் உயிர் நண்பர் பத்மனாபன் அவர்களையும் தன் காரில் திருச்சியிலிருந்து அழைத்துச் சென்றார். அதுதான் ஜே. கே. யுடனான முதல் சந்திப்பு.
கார் பாதி வழியில் பங்க்சர் ஆகி விட்டது. ஒரு பஸ் பிடித்து தஞ்சை சென்றோம். சா. கந்தசாமி மற்றும் ஜெயகாந்தனின் நண்பர்கள் பலரும் இருந்தார்கள். தஞ்சை அறிஞர், சேக்கிழார் அடிப்பொடி திரு டி.என். இராமச்சந்திரனின் ‘வழி வழி பாரதி’ என்னும் நூல் வெளியீட்டு விழா. “நாங்கள் எல்லோரும் சிரமப்பட்டு படிகளில் மெல்ல ஏறி ஓர் இடத்தை அடையப் பார்த்தால் அங்கே அனாயாசமாக உலவிக் கொண்டிருப்பவர் ஜெயகாந்தன் “ என்று சொன்னார் திரு. டி. என். ஆர்.
ஜெயகாந்தனிடம் ஃபார்மலாக என்னை அறிமுகம் செய்து வைத்தார் மோதி. அந்த அறையில் கூட சுமார் 20 பேர் இருந்தார்கள். அந்த அமைப்பை ‘சபை’ என்று சொல்வார்கள். ஜெயகாந்தன் மட்டும் பேசினார். தொடர்ந்து பேசினார். பேசிக் கொண்டே இருந்தார். அந்தப்பேச்சின் தொடர்ச்சியை மாலை மேடையில் நூல் வெளியீட்டு விழாவிலும் பேசினார். பாரதி பற்றி அவரது மற்றொரு மகத்தான உரையைக் கேட்டேன். மானசீகமாக அவரை நமஸ்கரித்தேன்.
இரவு கிளம்பும் சமயம் அவரை உண்மையிலேயே சாஷ்டாங்கமாக நமஸ்கரித்தேன். படுக்கையில் ஒருக்களித்து அமர்ந்திருந்த அவர் நிமிர்ந்து கைகளை ஆசீர்வதிப்பது போல் செய்து ‘காட் ப்ளெஸ் யூ” என்றார். மிக இயல்பாக அந்நிகழ்ச்சி முன் திட்டம் ஏதுமின்றி நடந்தது. அதுவரை நான் எந்த பிரமுகர், மடாதிபதி, மதத் தலைவர், மூன்றாம் மனிதரையும் வணங்கியதில்லை என்பதை மோதியிடம் சொன்னேன். அதே போல் ஜெயகாந்தனும் பாசாங்காய் யாராவது எதாவது செய்தால் நிராகரித்து விடுவார். இன்று உங்களை ஆசீர்வதித்தார் என்று மோதி சொன்னார்.
Suga_Jeyakanthan_Writers_Authors_Tamil_Icons
(சுகா, ஜெயகாந்தன், வ.ஸ்ரீநிவாசன்)
மதியம் அறையில் பேசிக் கொண்டிருக்கையில், எந்த மாதிரி கதைகளை எழுத மாட்டேன் என்பது பற்றிச் சொன்னார். “ஒரு வீட்டில் ஒரு பெண் இருப்பாள். அவள் வீட்டுக்கு மத்தியான நேரத்தில் ஒரு ஆண் வந்து விட்டுப் போவார். தினமும், அந்தப் பெண்ணின் கணவர் வெளியே சென்ற பின், இது நடக்கும். ஆனால் நான் இதை எழுத மாட்டேன்” என்றார்.
தொடர்ந்து, “அக்னிப் பிரவேசம்’ கங்கா பற்றி பேச்சு வந்தது. அவளே அவனைக் கண்ணைக் காட்டி அழைத்திருக்கலாம். அவளே அவனுக்கு சைகை செய்திருக்கலாம். ஆனால் அதை நான் எழுத மாட்டேன்” என்றார். எனக்கு உடனே துணுக்குற்றது.  மாலை மீட்டிங் முடிந்து வந்ததும், உறுத்திக் கொண்டே இருந்த கேள்வியைக் கேட்டு விட்டேன்.  “அவள் குழந்தையல்லவா? அவளைப் பற்றி இப்படிச் சொல்கிறீர்களே?”  அவர் உடனே “ கண்ணைக் காட்டியோ, வேறு சைகை செய்தோ அழைத்திருந்தால் மட்டும் அவள் குழந்தை இல்லாமால் போய் விடுவாளா? அவளே மீண்டும் மீண்டும் அவனிடம் போனாலும் கூட குழந்தை இல்லாமல் ஆகி விடுவாளா? “ என்றுகேட்டார். எனக்கு கண்களில் நீர் தளும்பி விட்டது. அவரது அனைத்தையும் அரவணைக்கும் அன்பு, பாவிகளே இல்லாத அவரது உலகம் தெரிந்தது.
அவர் பல நூல்களைப் படித்திருக்கிறார். ஒரு கல்விக் கூடத்தில் பேசப்போன இவரை திடீரென்று  ‘கம்பரைப் பற்றிப் பேசுங்கள்” என்று கோரியிருக்கிறார்கள். உடனே ஒரு மணி நேரத்துக்கும் மேலாகப் பேசியிருக்கிறார். இவர் பேசியது கம்பனின் ‘இராமகாதை’ பற்றியல்ல. “ஏர் எழுபது” பற்றி. நம்மில் எத்தனை பேருக்கு கம்பனின் இந்த நூல் பற்றித் தெரியும்? ஒரு முறை டென்னஸி வில்லியம்ஸின் ஒரு பாத்திரம் பற்றி பேச்சு வந்தது. என்னிடம் ‘அது ரோஸ் டாட்டூ’ தானே என்றுகேட்டார். நான் “ஆமாம் ஜே.கே.” என்றேன்.
மிக கம்பீரமாக எழுதும் இவர் தனிப் பேச்சிலும் கம்பீரமாய் இருப்பார். தனிப்பட்ட கண்ணியம் எல்லோருக்கும், எப்போதும் காக்கப் படும். எல்லோர் தேவைகளையும் நினைவில் வைத்திருப்பார். நகைச்சுவை எட்டியே பார்க்காமல் எழுதும் இவர் தனிப் பேச்சுகளில் கம்பீரத்தோடு சேர்ந்து பிரதானமாக இருப்பது இவரது நகைச்சுவைதான். சிரித்து மாளாது.
மோதி, திருச்சியைச் சார்ந்த பிரமுகர் திரு. எம். எஸ். நாடார் பற்றி ஜே.கே.யிடம் சொல்கையில், “இவர் சிரிக்கச் சிரிக்கப் பேசுவார்” என்று அறிமுகமாகச் சொல்லியிருக்கிறார். உடனே திரு நாடார், “ஐயய்யோ ! நான் சொல்லும் நகைச்சுவையெல்லாம் ஜே. கேயிடமிருந்து பெற்றவைதான்” என்று சொன்னாராம்.
நான் சிகரெட், கஞ்சா, மது என்கிற எந்தப் பழக்கமும் இல்லாதவன் என்பது தெரிந்ததும் அனைவருக்கும் சுழற்சியில் தரப்படும் அவை என்னிடம் வராமல் பார்த்துக் கொள்வார். ஒரு சமயம் “நான் ஏக பத்னி விரதர்களையும், ஏகப்பதிவ்ரதாக்களையும் மதிக்கிறேன்” என்றார். இதன் பொருள் அவர்கள், குறிப்பாக குடிக்காதவர்களும், பிற பெண்கள் தொடர்பு இல்லாதவர்களும், கேலிக்கு உரியவர்கள் அல்ல என்பதே.
இவ்வளவு தொடர்ந்த பேச்சுகளிலும், ஒரு துளி வம்போ, கீழ்ததரமான கிண்டலோ யாரைப் பற்றியும் இருக்காது.
கொச்சை வர்த்தைகள் பேசுவார். ஜாதி, மத, மொழி, இன, வேறுபாடுகள் அறவே இல்லாத மனிதர். பலரை அவர்கள் ஜாதி சொல்லிக் கூப்பிடுவார். கிண்டல் கூட பண்ணுவார். ஆனால் அதில் துளி துவேஷம் இருக்காது. ஒரு முறை மோதி வீட்டுக் கல்யாணம் ஒன்றில் ஒரு நண்பர் ஜே.கே.யிடம் இன்னொரு நண்பரைப் பற்றி அவரதுஜாதியைக் குறிப்பிட்டு ‘அந்த பயல் என்றதும் “நீ . . பயல்தானே அதுதான் அப்படிப் பேசுகிறாய்’ என்றாராம்.
மோதி “போன ஜென்மத்தில் நீங்கள்தான் பாரதி நான்தான் எலிக்குஞ்சு செட்டியார்” என்றதும் தலையசைத்திருக்கிறார். ஒருமுறை பாபநாசம் சிவனின்  ‘என்ன தவம் செய்தனை?” பாடல் பற்றிச் சொல்கையில் “இதைப் பாடுவது தேவகிதான். யசோதாவிடம் தனக்கு அந்த பாக்கியம் கிடைக்கவில்லையே என்று பாடுகிறாள்” என்றார். “பாரதி உலகின்பக் கேணி என்று எழுதியிருக்க மாட்டான். அது உலகின்பக் கேளி” என்பார். “பொன்னை உயர்வை புகழை விரும்பிடும் சின்னக் கவலைகள் தின்னத் தகாதென்று” என்றுதான் எழுதியிருப்பார் என்று பாட பேதம் செய்வார்.
ஒரு முறை சபையில் “ஞானம் என்றால் என்ன தெரியுமா என்று கேட்டுவிட்டு, சுகமாய் இருப்பதுதான் ஞானம் என்று சொன்னார். சுற்றி இருந்த 20 பேரில் ஒருவர், இது பற்றி யோசித்துவிட்டு, கொஞ்ச நேரம் கழித்து, “ஆமாம் ஜே.கே. நல்லவனா இருப்பதுதான் ஞானம்” என்று சொன்னார். ஜே. கே உடனே “ நல்லவனா இருப்பது அல்ல, சுகமா இருப்பதுதான் ஞானம்” என்று அவரைத் திருத்தினார்.
தமக்குக் கிடைக்கும் பாராட்டுகள், விருதுகள் அனைத்தையும் பற்றி சொல்கையில், “பாரதிக்கு செய்யவில்லை இல்லையா? அதுதான் எனக்குச் செய்து தவறைத் திருத்திக் கொள்கிறார்கள்.” என்றும் “பாரதி பயிரிட ஆரம்பித்ததைத்தான் நான் அறுவடை செய்து கொண்டிருக்கிறேன்.” என்பார்.
இவரும் கி. வீரமணியும் ஒரே பள்ளி. பெரியார் வந்து வீரமணியை தத்து எடுத்துச் சென்றாராம். இவருக்கு அந்த வசதியான வாழ்க்கை கிடைக்கவில்லையே என்று வீட்டில் விசனப்பட்டு திட்டினார்களாம். “நல்ல வேளை தப்பித்தேன். அந்தாளோடு போய் யார் இருப்பது ” என்றார்.
எல் எல் ஏ பில்டிங்இல் ஒரு கூட்டத்தில் லா.ச. ரா வின் ஒரு கதையில் எப்படி “இன்று கிடைத்த மீனை என்ன செய்யலாம். கறி வைக்கலாமா கூட்டு வைக்கலாமா” என்று ஒரு பாத்திரம் யோசிக்கிற மாதிரி வருகிறது என்பது பற்றிச் சொல்லி, “உனக்கெதற்கு இந்த வேலை? உனக்கோ மீன் பற்றி ஒன்றும் தெரியாது” என்றார். அதே போல் இவர் எழுதிய ஒரு கதையில் பிராமண பாஷை சரியாக இல்லை என்று ஒருவர் இவருக்கு கடிதம் எழுதினாராம். பிராமண பாஷையின் ஆதென்டிசிடிக்காக நான் எழுதவில்லை என்று சொன்ன போதும் மீண்டும் கடிதம் வந்ததாம். “போடா பப்பாரப் பயலே! என்று பதில் சொல்லி விட்டேன்.” என்றார். கூட்டம் ஆர்பரித்தது. தொடர்ந்து அவர் சொன்னது “அப்படி எழுதியதற்கு வெட்கப் படுகிறேன்.”
jayakanthan_1_050408
பெரியார், அண்ணா, கலைஞர், எம்ஜியார், ஜெயலலிதா எல்லோரையும் பற்றிய அவரது விமர்சனங்கள் கூர்மையாகவும் , கடுமையாகவும் பலசமயம் சிரிப்பு வரவழைக்கக் கூடியனவனவாகவும் இருக்கும்.
“ஜேகே தமிழ் உள்ளவரைக்கும் உங்க பேர் இருக்கும்” என்று சொன்ன திரு மோதியிடம் “அதனால் எனக்கென்ன பிரயோசனம்” என்று கேட்டார்.
20 பேர் சூழ்ந்து இருக்கையிலும் யார் யாருக்கு என்ன சாப்பிட வேண்டும் என்பதைக் கேட்டுத் தெரிந்து கொண்டு கொண்டு வரச் சொல்லுவார். கண்டபடிக்கு வாங்கி உணவு வீணாகப் போவதை விரும்பாதவர். அதே போல் படப்பிடிப்பு முடிந்ததும் ஒரு முறை அங்கிருந்த காப்பிப் பொடி பாக்கெட்டை எடுத்துவைக்கச் சொல்லினாராம். பின் “இது இருந்தால் ஒருத்தருக்கு காப்பி போடத் தோன்றும். அதற்காகப் பால் வாங்குவார்கள். சக்கரை வாங்குவார்கள். பிறகு அவை அதிகமாகி விட்டால் அதற்கென்று மீண்டும் காப்பிப் பொடி வாங்குவார்கள்” என்று சொன்னாராம்.
ஞானத்தின் ஆக்ர்ஷிப்பின் விளைவுகளில் கலையும் ஒன்று. அதனால்தான் கலைஞர்கள் அதர்மத்தின் பக்கம் நியாயத் தராசு சாய்கையில் அதற்கெதிராக அமர்ந்து சமன் செய்வார்கள். எனவேதான் அவர்கள் கால, தேச, இன, மொழி, சாதி, பால் வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டவர்களாய், கலா சிருஷ்டி காலத்திலாவது, சம நோக்கோடு மட்டுமே இருக்கிறார்கள். ஜே.கே. போன்ற விவேகிகள் பல நேரம் அப்படித்தான் இருக்கிறார்கள்.
தமிழர்கள் அனைவருமே பாஸிசத்துக்குத் துணை போனவர்களோ என்று எதிர்கால சந்ததியர் ஏசாமல் இருப்பதற்காக படுகுழியில் விழ இருந்த தமிழ் மக்களை பாரதிக்குப் பின் தடுத்தட்கொண்டவர்களில் முக்கியமானவர் ஜெயகாந்தன். தமிழ் மக்களின் சிந்தனையில் பெரும் தாக்கத்தை நேர்மறையாக ஏற்படுத்தியவர் ஜெயகாந்தன். “உங்கள் மீது ‘ப்ரொ பிராமின்’ என்றொரு குற்றச்சாட்டு இருந்ததே?” என்கிற கேள்விக்கு “இப்போதும் அப்படித்தான். எப்போதும் ப்ரோதான் எல்லோருக்குமே ப்ரோதான்” என்று ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார்.
நாடகம் பற்றி ஒரு கருத்தரங்கம் சத்ய மூர்த்தி பவனில் நடந்தது. சிசுசெல்லப்பா, நா.காமராசன், சோ, ஜெயகாந்தன் எல்லொரும் பெசினார்கள். ஒரு புருவத்தை உயர்த்திக் கூட நடிக்கலாம் என்று நடித்துக் காட்டினார் ஜெயகாந்தன். “தமிழில் நாடகமே இல்லை” என்று அவர் சொன்னதற்கு வேறொருவர் ” மனோன்மணியத்தை வைத்துக் கொண்டு இப்படிச் சொல்வது என் தாத்தாவுக்கு ஒன்றும் தெரியாது என்கிற மாதிரி” என்று கோபமாகப் பேசி தம் அறியாமையைக் காட்டிக் கொண்டார்.  நாடகம் என்றால் ஒரு பாடம் இருக்க வேண்டும் என்று வேறொருவர் பேசினார். அவரை அடுத்துப் பேசிய சோ ‘ அப்படி நாடகம் போட்டால் அது நிச்சயம் ஒரு பாடமாக இருக்கும், அந்த நாடகம் போட்டவருக்கு’ என்றார்.
துக்ளக் பத்ரிகையில் ‘ஓர் இலக்கியவாதியின் அரசியல் அனுபவங்கள்’ தொடர் ஜெயகாந்தன் எழுதுவதற்கு முன், சோ ஒரு முன்னுரைமாதிரி எழுதி, ‘ஜெயகாந்தன் எழுதப்போகிறார். ஈஸ்வரோ ரக்ஷது’ என்று முடித்திருந்தார். ஜெயகாந்தன் ‘ஈஸ்வரோ ரக்ஷது’ என்று துவங்கி, தன் தொடரைப் பொருத்தமாக ஆரம்பித்திருந்தார். தனிப் பேச்சில் மேடையில் தொண்டையைக் கனைத்துக் கொண்டு சோ எப்படி ‘அனைவருக்கும் வணக்கம்’ என்று ஒற்றை வந்தனத்தில் நீண்ட அவர்களேக்களைத் தவிர்த்துப் பேச ஆரம்பித்து விடுவார் என்று நடித்துக் காட்டுவார்.
‘காரல் மர்க்ஸ் ஒரு ஹிந்து’ என்று ஒரு கூட்டத்தில் பேசினார். ‘இந்தியா ஒளிர்கிறது என்று சொல்லாமல் பின் அழுது வடிகிறது என்றா சொல்ல வேண்டும்’ என்றார். ஃபாசிசமா, இம்பீரியலிஸமா என்றால் இம்பீரியலிஸத்தின் பக்கமே இருப்போம் என்றார் மார்க்ஸ். நாமும் கறுப்பா, காவியா என்று வரும்போது காவியின் பக்கமே இருப்போம்’ என்று முழங்கினார்.
கோவையில் ஒரு முறை பேச வந்திருந்தபோது அரங்கம் நிரம்பி வழிந்தது. அப்போது சொன்னார். இங்கிருக்கும் நீங்கள் ஒவ்வொருவரும் என்னைப் பற்றி ஒரு மணி நேரம் பேசக் கூடியவர்கள் என்று. அது உண்மைதான். ஜெயகாந்தனுடன் பரிச்சயம் அவரது எழுத்து, பேச்சு மூலம் உள்ள எவரும் அவ்ரைப் பற்றி குறந்தது ஒரு மணி நேரம் பேசமுடியும். அது கான்ஷியஸாக கட்டப் பட்ட பிம்பம் அல்ல. பிம்பம் பற்றிக்கவலைப்படாமல் ஒருவர் நிஷ்காம்ய கர்மியாக இருந்ததால் எதேச்சையாக விளைந்தது.
இவரது மணிவிழா 1994ம் வருடம் சென்னை காமராஜ் அரங்கத்தில் நடந்தது. மேடையில் இருந்த மத்திய மந்திரி திரு. அருணாசலத்திடம் “தைரியமாக இருங்கள். எல்லோரையும் ஹிந்தி படிக்கச் சொல்லுங்கள்” என்றார். மந்திரி பயந்து போய் விட்டார். தொடர்ந்து, “ஏன் நம்ம பொண்டாட்டியையே, நம்ம அம்மாவையே காப்பத்திட்டு இருக்கணும். எல்லா அம்மாக்களையும் காப்பத்துவோம்” என்றார். எப்படி தான் ஒரு தேர்வுக் குழுவில் இருக்கையில் அதிகம் பேசுபவர்களைக் கொண்டிராத மொழிகளில் வந்துள்ள எழுத்துகளுக்கு பரிசளிக்க சிபாரிசு செய்தேன்” என்பதையும் சொன்னார். மணி விழாவில் கொடுக்கப் பட்ட பண முடிப்பான சுமார் 4, 5 லட்சம் ரூபாய் பற்றிக் குறிப்பிட்டு “இதை நான் என்ன செய்வேன்? குப்பைலே போடுவேன். குப்பைன்னா ‘பாங்க்” என்றார். இறுதியில் மேடையில் பேசிய பிரபலஸ்தர்களையெல்லாம் தனித்தனியாகக் குறிப்பிடாமல் “கோவிலில் மூலவரை நமஸ்கரித்தால் எல்லா சன்னிதிகளையும் வணங்கிய மாதிரி, எனவே மூப்பனாருக்கு என் நன்றி” என்று முடித்துக் கொண்டார். மறுநாள் பத்ரிகையில் “நேற்று அனவருக்கும் சரியான விதத்தில் நன்றி சொல்லாததற்கு வருந்துகிறேன்,. அனைவருக்கும் நன்றி என்று ஜே. கே. சொன்ன செய்தி பத்ரிகைகளில் கட்டம் கட்டி வந்தது.
ஒரு சமயம் ரயில்வே ஸ்டேஷனில் இவர் பெட்டியின் படிகளில் ஏறி வாயிலில் நின்று கொண்டிருந்த போது ஒரு நல்ல உடைகள் அணிந்த இளஞர் இவரிடம் ஒரு பேப்பரை நீட்டி அதில் ஆட்டொகிராஃப் கேட்டர். இவர் போட மறுத்து விட்டார். அந்த இளைஞர் “நானும் தமிழன், நீங்களும் தமிழன். போடுங்கள்” என்றர். இவர் மீண்டும் மறுத்து விட்டார்.அவ்விளைஞர் சென்றதும் “நாமென்ன இங்கிலாந்திலோ அமெரிக்கவிலோவா இருக்கிறோம், நானும் தமிழன், நீங்களும் தமிழன் என்று சொல்லி கையெழுத்து வாங்க. இங்கே கோவையில் இருக்கும் எல்லோரும் தமிழர்கள்தான். இதில் இது என்ன பேச்சு?” என்றார்.
ஒரு முறை தூங்கிப் போய் விட்டதால், கோவையில் இறங்காமல் மேட்டுப் பாளையத்தில் இறங்கி அங்கிருந்து சாவதானமாக, ஒரு பரபரப்பின்றி வந்தார். அதே போல் திருச்சியில் ரயிலைத் தவற விட்டு விட்டாராம். எல்லோரும் பதறிக் கொண்டிருக்கையில் அவர் நிச்சலனமாக இருந்ததோடன்றி ரயில்வே பிளாட்பாரத்திலேயே ஏதோ பாடி ஆடிக் காட்டி இருக்கிறார். பெரும்பாலானவர்கள் பதற்றமடையும் பல சந்தர்ப்பங்களில் அமைதியாக இருப்பவர் என்று அவர் பற்றி இதையெல்லாம் திரு மோதி சொல்லிக் கேட்டிருக்கிறேன்.
அவர் நண்பர் திரு கே.எஸ். சுப்ரமணியம் ஒருகதையில் இப்படி வருமே என்று ஆரம்பித்து சொல்லத் தடங்குகையில் அது எந்தக் கதையில் வரும் எப்படி வரும் என்று மிகச் சரியாகச் சொன்னார் ஜே.கெ. அவ்வளவு நினைவாற்றல். கே.எஸ். செய்த மொழி பெயர்ப்பு ஒன்றை இருவரும் சரி பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஒரே ஒரு வார்த்தையை ஜே.கே. மாற்றினார் அந்த ஆங்கில வாக்கியம் முற்றிலும் மேலானதாக பரிணமித்து விட்டது.
அவரது 74வது பிறந்த நாள் என்று நினைக்கிறேன். இளையராஜா, ரவி சுப்ரமண்யம் இயக்கத்தில் ஒரு செய்திப்படம் ஜெயகாந்தனைப் பற்றி எடுத்திருந்தார். பிறந்த நாள் விழாவில் அப்துல் கலாம் பேசினார். அந்த படத்தின் டிவிடி போட்டுக் காட்டப் பட்டது. அதில் அவர் சொல்லியிருப்பார். “கலைஞர் ‘நான் பெரியாரையும், அண்ணாவையும் பார்க்காமல் இருந்திருந்தால் ஒருகம்யூனிஸ்ட் ஆகியிருப்பேன்’ என்கிறார். இதில் கூத்து என்னவென்றால் நான் அவர்கள் இருவரையும் பார்த்ததால்தான் கம்யூனிஸ்ட் ஆனேன்.” என்று சொல்லிச் சிரிப்பார். திரு.ரவி சுப்ரமணியம் எடுத்த ஆவணப்படம் இங்கு கிடைக்கிறது :
அரசியல் கணிப்புகளை, கணக்குகளை அவர் சரியாகச் செய்ததில்லை. சுய லாபம் தேடாததால் அவருக்கு அதெல்லாம் அவசியமும் இல்லை. எமர்ஜென்ஸி வந்தபோது அதை வரவேற்றார். அதை வரவேற்கத் தயங்கிய கண்ணதாசனையும் வரவேற்க வைத்தார். இப்போதும் மேதா பட்கர் போன்றவர்கள் செய்யும் இயக்கங்களில் ஆன்மீகம் இல்லை என்பார்.
சுந்தர ராமசாமியின் அஞ்சலிக் கூட்டத்தில் பேசத் தொடங்குகையில் சொன்னார் : “அவர் எங்கே? நான் எங்கே? அவர் உயரம். நான் குள்ளம். அவர் செல்வந்தர். நான் செல்வத்தைப் பற்றியே சிந்திக்காதவன்.
அவர் துணைவியார் ஓரிடத்தில் எழுதியிருப்பதைப் போல் “பணம் பண்ணத் தெரியாதவர் அல்ல; பணம் பண்ண விரும்பாதவர்.” ஒரு முறை மோதியிடம் பெசிக் கொண்டிருக்கும் போது உள்ளே போய் சாப்பிட்டு விட்டு வந்தராம். பின் “ரேஷன் அரிசி. உங்களுக்குப் பிடிக்காது. அதுதான் உங்களையும் சாப்பிட அழைக்கவில்லை” என்றாராம். ஆனால் ஒரு விஷயம், ஜெயகாந்தன் தருகிறார் என்றால் ஆலஹால விஷத்தைக் கூட மோதி விரும்பிச் சாப்பிட்டு விடுவார். மோதி மட்டுமில்லை. இன்னும் பல அன்பர்கள் அவருக்கு அப்படி உண்டு. அதில் குறிப்பிடத் தக்கவர்கள் பலர். எனக்குப் பரிச்சயமானவர்களில் திரு பி.ச. குப்புசாமி (வார்த்தை பத்ரிகையில் வந்த அவரது ‘ஆரம்பப்பள்ளிஆசிரியரின் குறிப்புகள்’ ஆசிரியர் பயிற்சி படிப்பில் பாடமாக வைக்கத் தகுந்தது.) இன்னொருவர் கோவையில் ‘சிவகாமி புத்தகப் பூங்கா’ திரு மணி அவர்கள். பல இலக்கியகர்த்தாக்கள் இவர் அண்மையில் இருந்தால் போதும் என்று எழுதாமல் இருந்து விட்டார்கள். அவர்கள் ஒவ்வொருவருமே இலக்கியத் தேட்டமும், நாட்டமும் உள்ளவர்கள். ஜே. கே.யைப் பொருத்தவரை அவர்கள் போலல்ல நான். அவர்கள் ஆழ்வார்கள். நான் தெருவில் செல்கையில் கோவிலின் உள்ளே பார்த்து நெற்றியை கும்பிடாகத் தொட்டு விட்டு போபவன். ஆனால் எனக்கே அவர் பால் இவ்வளவு அபிமானம் இருக்கிறது. மோதி  “ஜே.கே.யுடன் இருக்கும் போது ராமக்ருஷ்ண பரமஹம்சர் கூட இருப்பது போல் இருக்கும்” என்பார்.
ஒருமுறை ஜே.கே.வுக்கு ஒரு பிரபல மலையாளப் பத்ரிகையிலிருந்து தொலைபேசி வந்தது. அவர் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தேன். என்னைத் தவிர அங்கு வேறு யாரும் இல்லை. ஃபோனை வைத்ததும் சொன்னார்: “தி.மு.க. அரசின் இந்த திட்டம் பற்றி என் கருத்து எதற்கு? சோவும், அசோகமித்திரனும் எதிர்க்கிறார்கள், நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்கிறார்கள். நான் எதற்குச் சொல்லவேண்டும். அவர்கள் எதிர்க்கத்தான் செய்வார்கள். நான் எதிர்த்துக் கொண்டுதான் இருந்தேன். அப்போது காங்கிரஸும், கம்யூனிஸ்ட்களும் எதிர்த்தார்கள். இப்போ பல காலமா அவங்கல்லாம் எதிர்ப்பதை விட்டு விட்டார்கள்.அவங்களோடயே சேந்துட்டாங்க. நான் மட்டும் ஒற்றையாளாக எதற்கு எதிர்க்க வேண்டும்? அதுதான் ஒரு கருத்தும் சொல்லவில்லை.”
அவரது கதைகள் பற்றி “அவற்றைத் தாண்டி ஒன்றுமே கிடையாது” என்பவர்களும், “, unbearable, கலைத் தன்மை கிஞ்சித்தும் இல்லாதவை” என்பவர்களும் உண்டு.
ஜெயகாந்தன் கதைகள் பற்றிய என் அபிப்பிராயம் வேறு. அவரது பிரசாரத்துக்குப் பயன் பட்ட சாதனம் கதை. அவர் பிரசாரம் செய்தது ஞானம். அதனால்தான் ‘ஒவ்வொரு வீட்டிலும் ஒரு ஞான்வானை உருவாக்குங்கள்’ என்று கூறினார். மேடை, கட்டுரை, கவிதை, கதை, எல்லாவற்றையும் அவர் தன் சிந்தனைகளைத் தெரியப்படுத்தும் கருவிகளாகவே பயன் படுத்தினார். அவரை விட சிறந்த பல கதாசிரியர்கள் தமிழிலேயே உண்டு. ஆனால் அவர்களில் தெருவில் இறங்கி பணி செய்தவர்கள் அவர் போல் யாரும் இல்லை.
அடங்காத மனைவி, வேலைக்காரி, மாமனார், மாமியார் பற்றிய ஜோக்குகளை ரசித்தும், பாலுறவை மட்டுமே பகிரங்கமாகவும், மறைவாகவும் கேளிக்கையாகக் கொண்டு தன் மனைவி மட்டுமே கற்புக்கரசியாய் இருக்க வேண்டும், அடுத்தவீட்டுப் பெண் தனக்குக் கிடைக்க மாட்டாளா என்கிற எதிர்பார்ப்பிலேயே வாழ்ந்து கொண்டிருக்கும் பெரும்பான்மையோரைக் கொண்ட ஒரு சமுதாயத்தில் அவர் இந்தக் கதைகளையெல்லாம் அந்த சமுதாயத்தைத் திருப்தி செய்யவே நடத்தப்பட்ட ஜனரஞ்சகப் பத்ரிகைகளில் எழுதினார்.
அவர் எழுதுவது எதற்காக என்று அவரே சொல்வது இங்கே :- (இந்த நீர்க்குமிழி வாழ்வில் மகத்தான விஷயங்களாபவை அவை நிகழ வேண்டுமென்பதற்காக ஒருவர் மூலம் வாழ்க்கையே சகலத்தையும் அமைத்துக் கொடுப்பதுதான்.) அதற்கு இந்த லின்க் ஒரு உதாரணம்.
அவரது கதைகள் பற்றிய அபிப்பிராயங்கள் எப்படி இருந்த போதிலும், இன்னொரு ஜே.கே. யான ஜே. கிருஷ்ணமூர்த்தி பற்றி அவர் சொன்னது போல, “இவர் எல்லோரையும் ஏதோ ஓர் இடத்தில் தொட்டு விடுகிறார்.” அதனால்தான் இவரது அபிமான வட்டத்தில் சைவத் தமிழ் அறிஞர் சேக்கிழார் அடிப்பொடி டி. என். ராமச்சந்திரனாரும், வைணவத் தமிழ் அறிஞர் கம்ப ராமர் என அழைக்கப்பட்ட இராமராஜ ரெட்டியாரும், கி. வீரமணியும், இளையராஜாவும், கலைஞர் கருணாநிதியும், கவிஞர் கண்ணதாசனும், ஜெயமோகனும், வைரமுத்துவும்,  குடியரசுத் தலைவரும், ஆட்டோ ஓட்டுனரும் இருக்கிறார்கள்.
jeyakanthan
அவரது பெயரை சொன்னதால் எனக்கு ஆரணியிலும், திருச்சியிலும், கோவையிலும், சென்னையிலும்  80 வயதை நெருங்கும் திரு. பத்மநாபனிலிருந்து இளைஞரான சுகா வரைக்கும் நண்பர்கள் கிடைத்தார்கள்.பாரதியின் கவிதா மண்டலத்தில் ஜெயகாந்தனைச் சேர்ந்தவர்கள் நாங்கள். வாழ்க்கையைப் புரிந்துகொள்ள, நேர்மறையாக இருக்க, யார் மீதும் எதன் மீதும் துவேஷம் இல்லாமல் இருக்க, தமிழ், பாரதம் போன்ற கருத்துருவாக்கங்களின் மீது மெய்யான மதிப்பு வைக்கக் கற்றுத் தந்தவர் அவர்.
முதல் காதல் என்று ரொம்பவும் அடிபட்ட விஷயம் ஒன்றுண்டு. இது ஆண் பெண்ணுக்கு இடையில் வருவதுமட்டுமில்லை. ஓர் ஆளுமை, ஒரு கருத்து, ஓர் இடம் இவற்றோடு வருவதும் கூட. தாயாரின் சமையல் பற்றிக் கூட இப்படி எல்லோருக்கும் முதல் காதல் உண்டு. அதனால்தான் “அன்னையோடு அறுசுவை உண்டி போம்” என்றிருக்கிறது. அது போல் ஜெயகாந்தன் எங்களுக்கு முதற்காதல். முதற்காதல் என்கிற உணர்ச்சிச் சிடுக்கை நாட்பட நாட்பட, அறிவு சரி செய்கையில், கண்மூடித்தனமான உறவுகள் தவிர வேறெதிலும், உண்மை துலங்கும். அப்படி சரி செய்த பின்னும் அந்தக் காதல், வெளியில் நாம் என்ன பாசாங்கு செய்தாலும், உள்ளத்தில் மாற்றம் சிறிதுமின்றி ஒளிர்வது ஒரு சில இடங்களில்தான். அது மாதிரியான முதற்காதல் ஜே.கேயுடனானது. அவர் எழுத்துகளை அவரது பேச்சுகள் மங்கச் செய்யவில்லை. அவருடனான நேரடித் தொடர்புகள் அவர் எழுத்தால் விளைந்த அவர் மீதான நன் மதிப்பைக் கூட்டியனவேயன்றி சற்றும் குறைக்கவில்லை. உலக அளவில் அவரை விட சிறந்த கதைகளை எழுதியவர்கள் உண்டு. அவரைவிட சமூகத்தில் களப்பணி ஆற்றியவர்கள் உண்டு. சிந்தனைத் துறையில் உச்சங்களைத் தொட்டவர்கள் உண்டு. சினிமா எடுத்தவர்கள் உண்டு. ஆனால் இவ்வனைத்துத் துறைகளுக்கும் எங்களை அழைத்துச் சென்றவர் ஜெயகாந்தன். அனைத்தும் தழுவிய அந்தத் துறையை ஆன்மீகம் என்று சொல்லலாம். எங்கள் முதல் ஆன்மீக ஆசான் ஜெயகாந்தன்.
(முற்றும்)
************
#
“80 வயது நிரம்பியவர்களை ஆயிரம் பிறை கண்டவர்கள் என்று அழைக்கிறோம். ஆயிரம் பிறை என்பதை எப்படிக் கணக்கிடுவது? ”
” 80 வயது 10 மாதம் ஆனால், ஆயிரம் பிறையை எட்டிவிடும். 80 வருடத்திற்கு 960 சந்திர தரிசனம். சில வருடங்களில் 13 சந்திர தரிசனம் நிகழும். 80 வருஷத்தில் 30 சந்திர தரிசனம் அதிகமாக இருக்கும். அதையும் சேர்த்தால் 990 வரும். கருவிலிருக்கும் பத்து மாதத்தில் பத்து சந்திர தரிசனத்தையும் சேர்க்கும்பொழுது 1000 பிறைகள் நிறைவுபெறும் ”
* திருச்சியைச் சேர்ந்த திரு மோதி ராஜகோபால், ஆங்கிலத்திலும், தமிழிலும் மெத்தப் படித்தவர். தொழிலதிபர். பரம்பரையான செல்வந்தர். வாழ்வின் நுணுக்கங்களையும் சிக்கல்களையும், உலகத்தின் ஏற்ற இறக்கங்களையும். வியாபார தாத்பர்யங்களையும், நன்கு அறிந்த அறிந்த அனுபவசாலி. ஜே. கே.யின் “ஜெய ஜெய சங்கரா” தொடர் நூல்களை ‘மோதி பிரசுரம்’ என்கிற பெயரில் வெளியிட்டவர். இக்கட்டுரையில் அவரிடமிருந்து அறிந்த செய்திகளையும் ஆங்காங்கே தந்திருக்கிறேன்.
* * * * * * *