FUTURE IS NOW - J Krishnamurti.

பிறப்பு, இறப்பு என்பது உண்மையே இல்லை. அத்தகைய பொய்யான தோற்றத்தை நமது மனமே உருவாக்கிக் கொள்கிறது. மனம் தனக்கென்று ஒரு உடலை உருவாக்கிக் கொள்கிறது. அதைக் கனவு மழையில் நனைத்துத் துன்பப் படுத்துகிறது. - ரமண மகர்ஷி.

Search This Blog

Sunday, February 2, 2014

கூறுகிறேன்… முடிந்தால் கேளுங்கள் – 3 - கிரிக்கெட்டின் ஆனந்தமும், சதுரங்கத்தின் ரசமும்.


கூறுகிறேன்… முடிந்தால் கேளுங்கள் – 3


பிரசுரம் : சொல்வனம் : இதழ் 97 | 15-12-2013|

கிரிக்கெட்டின் ஆனந்தமும், சதுரங்கத்தின் ரசமும்.

ஒருவிதத்தில் மனித வாழ்க்கை, பௌதிக விதிகளின், குறிப்பாக இந்த மூளையை உள்ளடக்கிய உடல் என்னும் பௌதிக விஷயத்தின் எல்லைகளையும், அவ்வெல்லைகளைக் கடக்கக் கூடிய சாத்தியங்களையும் கண்டடைவதற்காகத்தான் போலும். குப்புறக் கவிழும் கைக்குழந்தை. ஒற்றைக் கழியின் மேல் இரு கால்களையும் வைத்து விறுவிறுவென்று போகும் சிறுமி. சைக்கிளில் கைகளை விட்டுவிட்டு எவ்வளவு தூரம் போக முடிகிறது என்று போய் விழும் சிறுவன். நூறாவது பிறந்த நாளை சென்ற வருடம் கொண்டாடிய 1952ம் வருட மிஸ்டர் யுனிவர்ஸ் மனோஹர் ஐச்.
மொஸார்ட்டும், பீதோவனும், லியனார்டோ தாவின்ஸியும், வான்கோவும், ‘மதுரை மணி ஐயரும், கே.பி. சுந்தராம்பாளும், பிரமிக்க வைக்கும் கதீட்ரல்களும், கற்கோவில்களும், மசூதிகளும், பொற்கோவில்களும், புலியையும், யானையையும், சிங்கத்தையும், சுறாவையும், காளையையும், கரடியையும் அடக்கும் வீரர்களும், எண்ண முடியா உணவு வகைகளை உண்கிற, சம்போகங்களில் திளைக்கிற, மதுவில் நீந்துகிற மனிதர்களும், ‘ட்ரக்ஸு’ம், ‘பங்கி ஜம்ப்களும்’… கண்ணைத் திறந்தால் கண்ணை மூடி செய்த கனவை நனவாக்கும் செயல்களும் இந்த எல்லையைப் பரீட்சிக்கத்தானோ?
விளையாட்டும், கலையும் குலோப் ஜாமுனும், ரஸகுல்லாவும், சேவையும், இடியாப்பமும், ஜாங்கிரியும், ஜிலேபியும் போல் ரொம்ப ரொம்ப நெருங்கிய ஆனால் சூட்சுமமான வித்தியாசம் உள்ள மனித கேளிக்கைகள். விளையாட்டு எந்த சீரியஸ் வேஷமும் போட்டுக் கொள்ளாத கேளிக்கை.
விளையாட்டு உலகில் பத்து செகண்ட் முத்தம், முகமது அலி, ஒலிம்பிக்ஸில் 10க்கு 10 வாங்கும் குழந்தைகளாகிய இளம் சிறுமிகள், பீலி, பீட் சாம்பிராஸ் பின்னாலேயே ரோஜர் ஃபெடரர் முதலிய அதி மனிதர்கள்.
அதில் ஒரு மனிதர் சமீபத்தில் ஓய்வு பெற்றது மிகப் பெரிய நிகழ்வாக இருந்தது. அவர்தான் 16 வயதில் சர்வ தேச அளவில் இந்தியாவுக்காக கிரிக்கட் ஆடிய சச்சின் ரமேஷ் டெண்டுல்கர்.
ST_Cricketers_Young-sachin-tendulkar_Indian_Sports_Youth_Child_Teen_Sensations
இவரது சாதனைகள் பற்றி பெரும்பாலான இந்தியர்களுக்குத் தோராயமாகவாவது தெரியும். இவர் ஆட்டத்தையும், இவர் தன்மையையும் இரண்டு விதமாக அணுகலாம்.
அளவு என்று பார்த்தால் ஓட்டங்களின் எண்ணிக்கை. சமீபத்தில் யாரும் நெருங்க முடியாத எண்ணிக்கை அளவில் உயர எங்கோ இவர் இருக்கிறார் என்பது குழந்தைக்குக் கூடத் தெரியும். அடுத்தது இவர் ஆட்டத்தின் தரம். க்வாலிடி. ஒவ்வொரு ஆட்டக் காரருக்கும் / கலைஞருக்கும் ஒன்றோ இரண்டோ பலஹீனங்கள் இருக்கும். ஸ்டெஃபி க்ராஃபுக்கு பேக் ஹேண்ட். ஆனாலும் அவரது மீதத் திறமை அபரிமிதமாக இருந்ததினால் அவர் முதன்மை ஆட்டக்காரராகவும், உலகின் மிகச் சிறந்த டென்னிஸ் வீராங்கனை (இது என்ன வார்த்தை?) யாகவும் திகழ்ந்தார்/. சஞ்சய் சுப்ரமண்யத்தின் குரல் வளம் அவரது பலம் அல்ல. அவரது அசராத திறமையே நமக்கு அந்த பலஹீனத்தை உணர முடியாமல் செய்கிறது. கங்கூலிக்கும், ஸ்ரீகாந்த்துக்கும் இன்னும் பல இந்திய வீரர்களுக்கும் (மறுபடி இது என்ன வார்த்தை?) ஷார்ட் பிட்ச் பந்துகள். சிலருக்கு ஆஃப் சைடும், சிலருக்கு ஆன் சைடும் வலு அதிகம். சிலர் தரையோடு அடிக்கும் ஷாட்களிலும் (விஜய் மஞ்ச்ரேகர்), சிலர் தூக்கி அடிக்கும் ஷாட்களிலும் (நவாப் ஆஃப் படௌடி ஜூனியர்) வல்லவர்கள். சிலர் மெதுவாகவும், சிலர் வேகமாகவும் ஆடுவார்கள். இந்த மாதிரி எந்த ஒரு சிமிழிலும் அடைபடாமல் எல்லா விதங்களிலும் ஆடத் தெரிந்த பேட்ஸ்மேன் களில் சச்சினும் ஒருவர்; முதன்மையானவர். அவர் காலத்தின் ப்ரயன் லாரா என்னும் இடது கை ஆட்டக்கார மாமேதையும் அப்பேற்பட்டவரே. கிரிக்கட் வரலாறில் பலர் இருந்திருக்கிறார்கள். ப்ராட்மன், சோபர்ஸ், கன்ஹாய், ரிசர்ட்ஸ், லாய்ட், க்ரெக் சேப்பல், பாய்காட், கவஸ்கர், பான்டிங், டிராவிட், விஸ்வநாத், லக்ஷ்மண், டர்னர், கால்லிஸ் என்பது மிகச் சிறிய பட்டியல். இந்தப் பட்டியலில் முதன்மையில் சச்சின் இருப்பதற்குக் காரணம் அளவு, தரம் இரண்டிலும் அவரது சாதனைகள்.
ஊடகங்களின் பெருக்கத்தால் ஹீரோக்கள் அருகி விட்ட காலத்தில், அதன் காரணமாக இல்லாமல், பழைய அளவுகோல்களின் படியும் இவர் ஒரு ஹீரோவாக திகழ்கிறார். மனிதர் மனம் எதை விரும்பும் என்பது முன்கூட்டியே அனுமானிக்க முடியாத விஷயம். மரபார்ந்த அணுகுமுறை ஒரு மினிமம் காரண்டியைத் தரலாம்; ஆனால் அது உச்சியில் கொண்டு போய் சேர்க்கும் என்கிற நிச்சயம் இல்லை. பரவலாகச் சொன்னால் இரண்டு விதமான மனிதர்களுக்கு உலகம் இதயத்தில் இடம் தருகிறது. இந்திய மனதுக்கு இது அமைதியையும், செம்மையையும் வாழ்வாகக் கொண்ட இராமனாகவும், குதூகலத்தையும், சாகசத்தையும் வாழ்வுமுறையாகக் கொண்ட க்ருஷ்ணனாகவும் அமைந்திருக்கிறது. தமிழகத்தின் சமீபத்திய சரித்திரத்தை எடுத்துக் கொண்டாலே சிவந்த நிறமும், நல்லதனங்கள் அனைத்தின் உருவகமாகவும் படங்களில் நடித்த எம்ஜியாரைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ஆனவர் கருப்பான, புகைபிடிப்பதையும், குடிப்பதையும் திரையில் செய்யும் ரஜினிகாந்த்.
Rama_Krishna_MGR_Rajni_Heroes_Ethics_Morality_Role_Models_Tamil_India_Sports_Cinema_Icons_Famous_Worship_Religion
இதில் ஆட்டக்களத்தில் க்ருஷ்ணனைப் போல் சாகசங்கள் செய்த டெண்டுல்கர், பொது வாழ்வில் இராமனைப் போன்ற பிம்பமே படைத்து இருக்கிறார். தகப்பனார் மீது பக்தியும், தாயாரின்பால் மட்டற்ற பாசமும், ஆச்சார்யர்களிடமும், மூத்தோரிடமும் மிகுந்த மரியாதையும், மனைவி, மக்களோடும், சகோதரர்களோடும், சகோதரியோடும்  அன்பும், பற்றும் நிறைந்த மனிதரகவும், குடும்பஸ்தராகவும் இருக்கிறார். அதிருஷ்டவசமாக பெரும்பாலான இந்திய கிரிக்கட் ஹீரோக்கள் தன்மையும், கண்ணியமும் மிக்கவர்களாகவே இருந்து வருகிறார்கள். டிராவிட், லக்ஷ்மண், விஸ்வநாத், கும்ப்ளே, பிரசன்னா, வெங்கட்ராகவன், ஸ்ரீநாத், கபில்தேவ் என்று நீண்டதொரு பட்டியல் இருக்கிறது. கவாஸ்கர் போன்று தன்மானத்தோடு இந்தியாவின் நிலைப்பாட்டை உறுதியாக எடுத்துரைத்தவர்கள், பேடி போல் அரசியல் செய்தவர்கள், நவீன காலத்துக்கேற்ப மரபிற்கு எதிரான காரியங்களைச் செய்யத் தயங்காத கங்குலி போன்றவர்களும் உண்டு.
தன் துறையில் முதல் ஸ்தானம் கிடைத்ததும் பலர் திக்குமுக்காடிப் போய்விடுவார்கள். பகுத்தறிவு அல்லது ஆன்மீகப் பைத்தியமாகவும் ஆகிவிடுவதுண்டு. சிலருக்கு முதல் ஸ்தானம் கூட வேண்டாம் ஒரு அங்கீகாரம் கிடைத்து விட்டாலே போதும். எல்லாவற்றையும் பற்றி ஆணித்தரமாகப் பேச ஆரம்பித்து விடுவார்கள். சச்சினுக்கு இது நிகழவில்லை.
மேலும் வென்றவர்களுக்கு வலைபோடும் கேளிக்கைகளுக்கும், அரசியலாருக்கும், சமூக எதிரிகளுக்கும் ஏகப்பட்ட ஆயுதங்கள் கைவசம் உண்டு. அண்டர் க்ரௌண்ட் தாதாக்கள் கோடி கோடியாய் புழங்கும் இவ்விளையாட்டில் பொன் முட்டையிடும் சச்சினை சும்மாவா விட்டு வைத்திருப்பார்கள்? ஓய்வு பெறும் நாள் வரை பிரச்னைகளில் சிக்கிக் கொள்ளாமல் இருந்து விட்டார்.
இது பழக்கப்படுத்திக் கொள்வதால் வந்த நல்லதனம் இல்லை. அவருக்கு அரணாக இருந்தது கிரிக்கட்டின் பால் அவருக்கு இருக்கும் தாபம். சீதையை இரவணனிடமிருந்து காத்தது கற்புதான் (கற்பின் கனலி – கம்பன்) ஆனால் அது கனல் மட்டுமல்ல காதலின் புனல்.
ஆட்டத்தின் மத்தியில் இருக்கையில் ஒவ்வொரு சிறுதகவல்களையும் பற்றிய பிரக்ஞை முழுதாக வேண்டும் என்பார் சச்சின். அந்த வழுவாத பிரக்ஞைதான் அவரது ‘ஸோன்’ (Zone) ஐம்பது அறுபதினாயிரம் ரசிகர்கள் எழுப்பும் ஆரவார ஒலிகளோடு, இலட்சோபலட்சம் மக்களின் எதிர்பார்ப்புகளோடு தன் பிராபல்யம் அதன் நீடிப்பு ஆகிய அனைத்தையும் விட்டுவிட்டு அந்தப் பந்தையே காணும் ஏகாக்ரக சிந்தை. தலை சிறந்த பேட்ஸ்மன் என்றாலும் பௌலிங்கிலும், ஃபீல்டிங்கிலும் கற்றுக் கொண்டே, புதியனவற்றைச் செய்துகொண்டே இருந்தது இவருக்கு இந்த விளையாட்டின் சகல துறைகளிலும் உள்ள ஆர்வத்தைக் காட்டுகின்றது.
இத்தனை மக்கள் கவனத்துக்குப் பின்னும் இவர் இயல்பாக இருந்ததுதான் அதிசயம். ஒரு பேட்டியில் ப்ராட்மனை (ரன்கள் சராசரி 99.9)ச் சந்தித்ததைப் பற்றி சொன்னார். “இந்நாளில் கிரிக்கெட் ஆடினால் உங்கள் சராசரி எவ்வளவு இருக்கும்” என்று சச்சின் கேட்டதற்கு ப்ராட்மன் “என்ன ஒரு 70 இருந்திருக்கும்” என்றாராம். “அப்போ கிரிக்கெட் இப்போது அதிகக் கடினமாகி விட்டது இல்லையா” என்ற சச்சினின் கேள்விக்கு “அப்படியில்லை, ஒரு 90 வயது மனிதனால் அவ்வளவுதானே அடிக்க முடியும்” என்றாராம். இதைச் சச்சின் சொல்லியபோது ‘அந்தப் பையனின் சிரிப்பில் அந்தக் கிழவரின் குறும்பையும்’ காண முடிந்தது.
சச்சினின் கடைசி டெஸ்ட் மாட்ச் பல முறை சிரத்தையோடு பயிற்சி செய்யப்பட்ட ஒரு மாபெரும் இசை நிகழ்ச்சி போல் அமைந்தது. கொல்கொத்தாவிலோ, சென்னையிலோ அல்லது இந்தியாவில் வேறெங்கோ அவர் ஓய்வு பெற்றிருந்தால் கூட இதே போன்ற இறுதி மேட்சாக, ரசிகர்களின் உணர்வுப் பூர்வ ‘விடைகொடல்’ நடந்திருக்கும். மிகப் பொடுத்தமாக அவரது சொந்த மாநிலத்தில் அவரது ஊரான மும்பையில் நடந்தது. 74 ஓட்டங்களை எடுத்தார். இந்தியா வென்றது. ஒரு பத்ரிகையில் எழுதியிருந்த மாதிரி இத்தனை வருடங்கள் ரசிகர்களைத் தன் மட்டையால் மயக்கி வைத்திருந்த டெண்டுல்கர் கடைசிப் போட்டியின் முடிவிலும் அதையே செய்தார், இம்முறை ‘மைக்’ மூலம். ஒரு நிதானமான, தெளிவான, உணர்ச்சி பிரவாகம் இல்லாத, உண்மை உணர்வுகளும், திருப்தியும் உள்ள ஒரு மனிதனின் மனமார்ந்த வார்த்தைகளால் ஆன பேச்சு அது. பிரியாவிடை கொடுத்த மைதானத்தில் இருந்த ஆயிரக் கணக்கானவர்களும், தொலைக் காட்சிகளில் பார்த்துக் கொண்டிருந்த கோடிக்கணக்கானவர்களும் அமைதியாய், நிறைந்த மனதோடு அந்த அர்ப்பணிப்பில் இரண்டறக் கலந்தனர்.
பாலைவனத்தில் மட்டுமல்ல, பூங்காக்களால் நிரம்பிய பிரதேசத்திலும் அவர் ஒரு பூத்துக் குலுங்கும் சோலை. வெற்றியின் போதையில் தம்பட்டம் அடிக்கும் பலஹீன இதயம் கொண்டவரல்ல. கிரிக்கெட்டை இசைத்த, அதில் மையல் கொண்ட விளையாட்டுக்காரர். ஏதேச்சையாக புகழும், செல்வமும் பெற்றாலும் அவற்றால் பந்தமுறாதவர். அதே சமயம் சமர்த்து.
tendulkar_and_Visvanathan_anand
கிரிக்கெட் போலவே இன்னொரு விளையாட்டு சதுரங்கம். இந்தியாவில் தோன்றிய இதற்கென்று இந்தியப் பெயர் இருக்கிறது. இந்தியர்களுக்கு மிகவும் பரிச்சயமான, புராண காலத்திலிருந்தே புழங்கி வரும் விளையாட்டு. அதனால்தானோ என்னவோ இது மக்கள் மத்தியில் செல்வாக்கு பெறவில்லை. மேலும் இதன் சட்ட திட்டங்கள் கொஞ்சம் சிக்கலானவை. மன்னர்கள், ஆசிரியர்கள், அரசவைப் பிரமுகர்களின் விளையாட்டாக இது இருந்ததும் ஒரு காரணம்.
ஒரு காலத்தில் கிரிக்கெட் சதுரங்கத்தைப் போலவே விளையாடப் பெற்றது. டெஸ்ட் போட்டிகளில் ஆறு அல்லது ஐந்தரை மணி நேரங்களில் 200 ரன்களுக்கும் கீழே கூட அடிக்கப்பட்டதுண்டு. ஒவ்வொரு பந்தும் வீசப்பட்ட முறை அதில் இருந்த நுணுக்கம், அதில் இருந்த ஃபீல்ட் ப்லேஸ்மென்டின் வியூகம், அதை பேட்ஸ்மன் எதிர்கொண்ட விதம், பந்து வீச்சளரை மாற்றுவது எல்லாம் துல்லியமாக கவனிக்கப் பட்டு விமர்சிக்கப்பட்ட காலம் அது. ஃபீல்டிங் ஒடுக்கப்பட்ட மக்களைப் போல் அதிக கவனம் பெறாத ஒன்றாக இருந்தது. ஆட்டத்துக்கு கவனம் கூடக் கூட இதிலும் இந்தியர்கள் முன்னேற்றம் காட்டினார்கள். பின் ஒரு நாள் போட்டி, இப்போது ‘ஒருநாள் போட்டி சினிமாவின் க்ளைமேக்ஸ்’ மட்டும் போன்ற டீ 20. பின்னால் ‘டென் டென்’ வரவும் வாய்ப்புண்டு.
சதுரங்கத்திலும் இதே போன்ற வேக ஆட்டங்கள், ஒருவர் பலரோடு ஆடுவது என்றெல்லாம் பல வித்தியாசமான ஆட்டங்கள் உண்டு. எனினும் பரந்த மைதானமும் அதை விட பல்லாயிரக்கணக்கான மடங்கு சுருங்கிப் போன 64 சதுர ஆட்டமும் ஒரே மாதிரி புகழைப் பெறுவது, கிரிக்கெட்டைப் போன்ற பார்வையாளர்களின் கூட்டமான பங்களிப்பை சதுரங்கம் பெறுவது சாத்தியமில்லை.
கிரிக்கெட் சினிமா மாதிரி ஒரு மக்கள் கேளிக்கை எனில், செஸ் எழுதுவது, படிப்பது மாதிரி தனிப்பட்ட பிரத்யேக கேளிக்கை. அதுவும் சோடா புட்டிக் கண்ணாடியோடு, முகவாய்க் கட்டையை தேய்த்துத் தேய்த்து இல்லாமல் செய்ய தளரா முயற்சியில் ஈடுபட்டுள்ள இருவரது ஆட்டம்.
இந்த விளையாட்டு ரஷ்யர்களின் சட்டைப் பைக்குள் இருந்த சின்னஞ்சிறு செல்லக் குருவி. அதை அதிலிருந்து எடுத்து தன் அமெரிக்கத் தோட்டத்தில் பறக்க விட்டவர் பாபி ஃபிஷர். பின் கார்போவ், காஸ்பரோவ் என்கிற ருஷ்ய மாமேதைகளிடம் மீண்டும் பறந்தது. ஓர் இந்தியன், தமிழன், நினைவு வையுங்கள் எந்தவித அரசு, அமைப்பு, மக்கள் விருப்பம் என்கிற ஆதரவும், துணையும், இல்லாத ஒரு இளைஞன் தன்னந்தனியே தவமிருந்து வரமாக அக்குருவியை மீண்டும் இந்திய வானில் – சதுரங்கத்தின் தாய் வானத்தில் – பறக்க விட்டான். ஒருமுறை விபத்தாய் அல்ல. பலமுறை.
கலை, விஞ்ஞானம் போல் விளையாட்டுக்கும் தேசமில்லை. எப்போதும் இந்தியாதான் ஜெயிக்க வேண்டும் என்று வெறி கொண்டு திரியும் விவரமறியா ரசிகருக்கும், விளையாட்டின் மேன்மைக்கும் சம்பந்தம் கிடையாது. அவர்களே இப்போது பெரும்பான்மை. எனினும் ஒரு வரலாற்றுப் பதிவிற்காகவும், சமுக சூழலில் அனுசரணையற்ற ஒரு நாட்டிலிருந்து ஒருவர் உச்சியைத் தொடுகையில் அதன் ஆச்சர்யம் அளவிடற்கரியது என்பதற்காகவும் இந்த நாடுகளைப் பற்றிய குறிப்புகளைச் சொன்னேன். மேலும் ரஷ்யர்கள் செஸ் தங்களுகே தங்களுக்கானது என்பதில் அசைக்க முடியா பிடிவாத நம்பிக்கை உள்ளவர்களாக இருந்தார்கள். உலகமும் அதை ஆமோதித்தது. ஆனந்தின் சாதனை அந்தச் சூழலில் இன்ன்மும் முக்கியத்துவம் பெறுகிறது. தாழ்த்தப்பட்ட, கல்வி மறுக்கப்பட்ட சமூகத்திலிருந்து உச்சிக்கு வந்த அண்ணல் அம்பேத்கரின் சாதனை கல்வியோ, செல்வமோ அல்லது இரண்டுமோ இருந்த சமூகங்களிலிருந்து மேலே வந்து தேசப்பணி செய்தவர்களின் தொண்டை விட பன்மடங்கு ஒளிர்வதும் இதனால்தான்.
Vishwanathan_Anand_chess_Sports_Champions_Players_World_Best
விஸ்வநாதன் ஆனந்த், மஹாகவி பாரதி பிறந்த அதே டிஸம்பர் 11ல் 1969ல் மயிலாடுதுறையில் பிறந்தவர். 1988ல் க்ரண்ட் மாஸ்டர் ஆனவர். 2000ல் எஃப்.ஐ.டி.ஈ. உலகச் சாம்பியனாகவும், பின் 2007ல் அகில உலக சாம்பியனாகவும் ஆனார். 2008, 2010, 2012 உலகப் போட்டிகளில் மீண்டும், மீண்டும் வென்று இப்பட்டதைத் தக்கவைத்துக் கொண்டார். இப்போட்டிகளில் இவர் வென்ற வீரர்கள் முறையே ரஷ்யாவின் க்ராம்னிக், (Vladimir Borisovich Kramnik), பல்கேரியாவின் டொபலாஃப், (Veselin Aleksandrov Topalov, (pronounced [vɛsɛˈlin toˈpɑlof]) இஸ்ரேலின் கெல்ஃபேண்ட் (Boris Abramovich Gelfand)
2013ல் சென்னையில் அதாவது அவரது சொந்த ஊரில் நடந்த உலகப் போட்டியில் இவருக்கு 21 வயது இளைய மேக்னஸ் கார்ல்செனிடம் தோல்வியடைந்ததால் உலகச் சாம்பியன் பட்டத்தை இழந்தார்.
மக்களிடையே கவனமும், அரசாங்கம் மற்றும் இதர அமைப்புகளின் ஆதரவும் இனி சதுரங்கத்துக்கு ஓரளவு அதிகமாகலாம். அப்படி ஆனால் அதற்குக் காரணம் ஆனந்த்தான். ஒரு கபில்தேவ் வந்த பிறகுதான் இந்திய இளைஞர்களுக்கு வேகப் பந்து வீசும் ஆசையும், ஆர்வமும் நம்பிக்கையும் துளிர்த்தன. டெண்டுல்கரால் கிரிக்கெட்டும், கிரிக்கெட்டால் அவரும் பிரம்மாண்டமான கவனம் பெற்றபின் பல பேட்ஸ்மன்கள் அவரது பாணியிலேயே ஆட முயல்கிறார்கள். இதைப் ‘புதிய இந்தியாவின் பிம்பம்’ என்று சில விமர்சகர்கள் கணிக்கிறார்கள். அது ஓரளவு உண்மைதான் என்பதை ஐபிஎல் கிரிக்கட்களில் நடந்த ‘ஊழல்கள்’ நிரூபித்துவிட்டன.
ஆனந்தும் அமைதியானவர். போலி அடக்கம் இல்லாதவர். இயல்பாகவே அதிர்ந்து பேசாதவர். ஒரு பேட்டியில் சதுரங்க ஆட்டத்தைப் போலவே இந்தியாவில் பிறந்து அவ்விளையாட்டு உலகெங்கும் பரவி ரஷ்யாவில் மையம் கொண்டதைப் போல் அவரது வாழ்க்கையும் அமைந்ததை விளையாட்டாய்க் குறிப்பிட்டிருப்பார்.
சச்சினைப் போலவே இவரும் குடும்ப மனிதர். தன் தாயிடம் செஸ் கற்றுக் கொண்டதாகச் சொல்வார். இவரது பாட்டி ராவணன் செஸ்ஸைக் கண்டுபிடித்த புராணக் கதையை இவரிடம் சொல்லியிருக்கிறார். மனைவி, குழந்தை என்று அமைதியான வாழ்வை வாழ்பவர். தேவையற்ற முரண்பாடுகளில் சிக்கிக் கொள்ளாதவர். கர்வம், அகம்பாவம் அற்றவர். இந்திய விளையாட்டு வீரர்களின் சாதனைகளிலேயே மிக உயர்ந்ததைச் செய்திருப்பவர். இதுதான் உண்மை.
அரசு கௌரவித்தாலும், கௌரவிக்காவிட்டாலும் இவரும் ஒரு ‘பாரதத்தின் இரத்தினம்.’
மன்னராட்சியும், அந்நியராட்சியும் முடிவுக்கு வந்தபின் ஜனநாயகம் மலர்ந்ததால் இந்திய விளையாட்டின் குரல் வெளியுலகுக்குக் கேட்க ஆரம்பித்திருக்கிறது. அவற்றில் இனிமையான, பிசிறுகள் அற்ற, குரல்கள் ஆனந்துடையதும், சச்சினுடையதும். அவை மாசற்ற ஆர்வத்தின், ஒருமுகப்பட்ட கவனத்தின், சிதறாத பயிற்சியின், ஆதரவையோ, துணையையோ, புகழையோ, பணத்தையோ கருதி செய்யப்படாத, விளையாட்டின் பால் இருக்கும் தாங்கொணா பிரேமையால் எழுந்த குரல்கள். அதனாலேயே அவை உலகம் மரியாதையுடனும், அன்புடனும் கேட்கும் குரல்களாக ஆகின்றன.
நம் காலத்தின் இரு அதிமனிதர்கள் சச்சினும், ஆனந்தும்.
oOo
பி.கு. (‘சசின்’ என்கிற இந்தி வார்த்தையின் பொருள் ரசம், இருப்பு என்கிறது ஆன்லைன் அகராதி; ‘ஆனந்து’க்கு அகராதி வேண்டாம்.).

No comments: