FUTURE IS NOW - J Krishnamurti.

பிறப்பு, இறப்பு என்பது உண்மையே இல்லை. அத்தகைய பொய்யான தோற்றத்தை நமது மனமே உருவாக்கிக் கொள்கிறது. மனம் தனக்கென்று ஒரு உடலை உருவாக்கிக் கொள்கிறது. அதைக் கனவு மழையில் நனைத்துத் துன்பப் படுத்துகிறது. - ரமண மகர்ஷி.

Search This Blog

Wednesday, June 27, 2012

வார்த்தையும், செம்மையும்


வார்த்தையும், செம்மையும்

வ.ஸ்ரீநிவாசன் | பிரசுரம் :  சொல்வனம் : இதழ் 72 | 20-06-2012

“The sublime is rare in any vocation or art. And Pavlova was one of those rare artists who had it. She never failed to affect me profoundly…..As she danced, every move was the center of gravity. The moment she made her entrance no matter how gay or winsome she was, I wanted to weep, for she personified the tragedy of perfection” - Charles Chaplin, My Autobiography (1964)
(எந்த வேலையிலும், கலையிலும் உந்நதம் அரிதானதாகவே இருக்கிறது. அவ்வுந்நதத்தைக் கொண்டிருந்த அத்தகு அரிதான கலைஞர்களில் பாவ்லோவா ஒருவர். என்னுள் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்த அவர் தவறியதே இல்லை…. அவர் நடனமாடுகையில் ஒவ்வொரு அசைவும் புவி ஈர்ப்பு மையம் குலையாத சமநிலை. ஆட்டத்தில் நுழையும் கணத்தில் அவர் எத்தனைதான் உல்லாசமாக, இனிமையாக, கவருபவராக இருந்தாலும் நான் அழவே விரும்புவேன், ஏனெனில் அவர் பூரணத்துவத்துடைய துக்கத்தின் உருவகமாக இருப்பார். - சார்லி சாப்ளின், என் சரிதை (1964)
சார்லி சாப்ளினின் பிறந்த நாளன்று இதைப் படித்தேன். “I wanted to weep, for she personified the tragedy of perfection” என்கிற வாக்யம் இதை மறக்க முடியாததாக ஆக்கி விட்டது. அதே போல் முதலில் வரும் “The sublime is rare in any vocation or art” என்கிற வார்த்தைகளும்.
நா.பார்த்தசாரதியின் மிகப் பிரபலமான “பொன் விலங்கு” தொடர் கதையாக கல்கியில் வரும்போது ஒவ்வொரு வாரமும் அக்கதையில் வரும் சில சொற்றொடர்களை பொன்மொழியாகக் கட்டம் கட்டிப் போடுவார்கள். சத்திய தாகம் பற்றிச் சொன்னது பிடித்திருந்தது.
அது இலட்சிய வாத காலம். இலட்சியத்தின் சடத்தன்மைக்கு ஆன்ம பலம் உயிரூட்டிய மாயம்தான் காந்தியடிகள் என்று நான் நினைக்கிறேன். அவர் ஒரு ‘சப்லைம்’. ஓர் ஆச்சர்யம். ஒரு அசாத்யம், சாத்யமான விந்தை. மாய வாழ்க்கையின் தொப்பியிலிருந்து வெளிவந்த உயிருள்ள உண்மைப் புறா.
சாப்ளினும் காந்தியும் சந்தித்து இருக்கிறார்கள். டால்ஸ்டாயும் காந்தியும் தொடர்பில் இருந்திருக்கிறார்கள்.
இலட்சியம் மனதின் பொருளாக இருக்கையில் கானல் நீர். சில சமயம் பொழுதுபோக்கு மற்றும் வணிக முதலீடு. அதைச் சொல்லி மக்களைத் திரட்டலாம். நினைத்த இலாபத்தை அடைந்த பிறகு உதறி விடலாம். சில நேரம் ரோஜாவை மட்டும் கற்பனை செய்து முட்களை மறந்த அல்லது மறைத்த கதை. அந்த இலட்சியம் நிறைவேறினாலும் அதனால் பெருத்த துயரே மிஞ்சும். கண்கூடாக இத்தகைய இயக்கங்களை நாம் சென்ற நூற்றாண்டில் பார்த்திருக்கிறோம் இல்லையா? இலட்சியம் வரட்டுத் தியரியாக, மனிதரைப் பிரிப்பதாக, ஒருவருக்கு எதிராக ஒருவரை நிறுத்துவதாக இல்லாமல் இதயத்தின் வெளிப்பாடாக இருக்கையில் உலகும், வாழ்வும் அதற்கிசைந்து போகின்றன. அது நிகழ காத்து நின்று சகாயம் செய்கின்றன.
இலட்சியம் அதனளவில் ஓர் அபாயமான, பொய். எட்ட இருப்பது. நாம் உடனடியாகக் காரியம் செய்யும் அவசியத்தை தள்ளிப் போடும் சால்ஜாப்பு. அருவருப்பானது கூட. ஆனால் அன்பின் பாற்பட்ட ஆதர்சம் நிகழ்கையில் அது உயிருள்ள, துடிப்புள்ளதான (vibrant) நேர்மறை நனவாகிறது.
இப்போதைய காலம், சட்டம் ஒழுங்கை யார் கடை பிடிக்கப் பார்க்கிறார்களோ அவர்கள் முட்டாள்கள் எனக் கருதப்படும் காலம். போக்குவரத்து சிகப்பு விளக்கில் காரை நிறுத்தி பச்சைக்காகக் காத்திருந்த இளைஞரை கெட்ட வார்த்தையால் திட்டிக் கடந்து போன காரோட்டியை சாலிகிராமத்தில் பார்த்திருக்கிறேன். இன்றைய இந்தியா இதுதான் என்பதற்கான ‘பர்ஃபெக்ட்’டான குறியீடு அது.
‘பர்ஃபெக்ஷனு’க்கு தமிழ் வார்த்தையைத் தேடியபோது பூரணத்துவம், பூரணம், உத்தமம், முழுமை ஆகியன தோன்றின. ஒரு தமிழறிஞர் ‘செந்தண்மை’ என்கிற வார்த்தையைப் பரிந்துரைத்திருந்தார். அதுவும் எனக்குப் பிடித்தது. “அந்தணர் என்போர் அறவோர் மற் றெவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுகலான்” என்கிற குறள் நினைவுக்கு வந்தது.
செந்தண்மையில் உள்ள “தண்’ என்கிற வார்த்தை குளுமையைக் குறிக்கிறது. எனவே தண்ணீர் என்றால் குளிர்ந்த நீர்தான். சுடு தண்ணீர், பச்சைத் தண்ணீர், குளிர்ந்த தண்ணீர் போன்ற வார்த்தைகள் மிகவும் புழக்கத்தில் உள்ளன.
இந்த ‘செம்மை’ எனும் சொல்லே பர்ஃபெக்ஷன் என்கிற வார்த்தைக்கு ஏற்ற தமிழ்ச் சொல் என்று தோன்றுகிறது. வறுமையில் செம்மை. செந்தமிழ். செம்மையான தமிழ். முழுமையான, குறையற்ற, பிழையற்ற தமிழ். பாரதி வெகு சரியாக “செந்தமிழை”ப் புகழ்கிறான். தொலைக் காட்சி, பண்பலைத் தமி’லை’ அல்ல. இன்னும் ஒருபடி மேலே போய் “நற்றமிழரை” வாழ்த்துகிறான். ‘ரவுடி’த் தமிழரை அல்ல. ‘செம்மை’ சிகப்பைக் குறிப்பது அல்ல. செம்மை பூரணத்துவத்தைக் குறிக்கிறது. இன்றைய ‘செம கட்டை’ வரையிலும். எனவே செம்மையே போதும்.
‘வறுமையின் நிறம் சிகப்பு’ என்றார் கே. பாலசந்தர். ஆனால் ரஷ்யாவின் ஸ்டாலினும், சீனாவின்
மாவோவும் கொலைகளின் நிறம் மற்றும் கொடுமையின் நிறம் சிகப்பு என்பதையும் சரித்திரமாக்கி விட்டார்கள். செம்மை நிறங்களுக்கு அப்பாற்பட்டது. இந்தியாவில் சிகப்பு, காவி என்பனவெல்லாம் ஒவ்வொரு கொள்கைகளின் குறியீடுகள். எல்லா குறியீடுகளையும் (திருநீறு, நாமம்) எதிர்த்த இயக்கம் கூட கறுப்புக் குறியீட்டுக்குள் சிக்கி தானும் இம்மனித சுபாவத்திற்கு விதிவிலக்கல்ல என்பதை பட்டவர்த்தனமாக்கியது.
இந்த செம்மைத் தன்மை வரமா சாபமா? தி ட்ராஜிடி ஆஃப் பர்ஃபெக்ஷன் என்கிறாரே சாப்ளின். அது அவர் பார்வை. ஹெவன் ஈஸ் பீயிங் பர்ஃபெக்ட் என்கிறார் ரிச்சர்ட் பாஃக். அது அவர் பார்வை. அந்தச் சூழ் நிலை.
ஒரு சரியான சொல்லை சொல்வது எழுதுவது எண்ணுவது எல்லாமே செம்மைத் தன்மைதான். அவ்வார்த்தை கிடைத்ததும் வரும் சுகம் அமைதியானது. அசோகமித்திரன் சொல்லியது போல் பள்ளியில் தமிழ் வகுப்பில் வியாசம் என்று ஒரு பயிற்சி இருந்தது. அவ்வகுப்புகள் மிக இனிமையானவை. நம் கற்பனையின் சுவையை பள்ளி நேரத்திலேயே சுதந்திரமாக அனுபவிக்கலாம். அப்போதே தமிழ் மீதான
காதல் செழித்துப் படர ஆரம்பித்தது. உணருவது எல்லாவற்றையும் துல்லியமாகச் சொல்ல முடிகிற ஒரு மொழி நம் உதவிக்கு இருக்கிறது. அதிலுள்ள இசைவும், தெளிவும் ஆனந்தம். ஆங்கிலம் பயின்றதும் அதே போல் ஆனந்தங்கள் அதிலும் நிகழ ஆரம்பித்தன.
சரியான சொல் ஒரு தொடர் வேட்கையானது. இதில் பிரக்ஞை (சொல்வனம்) ரவி சங்கர் மிகவும் கவனம் செலுத்துபவர். உச்சரிப்பும் இவர் கவனம் பெறும். எம்மொழியானாலும் எழுதப்படுவது சரியான சொல்லா, எழுதப்படும் உச்சரிப்பு சரியான உச்சரிப்பா என்பதில் இவர் காட்டும் அக்கறை பிறருக்கும், தலைமுறைகளுக்கும் மிகவும் பயனுள்ளது. இவ்வேட்கை இருந்தால் வாழ்நாள் முழுவதும் கற்றுக் கொண்டே இருக்கலாம்.
ரவிசங்கரிடமிருந்துதான் நான் ‘முதலியம்’ என்கிற வார்த்தையைக் கற்றுக் கொண்டேன். ‘கேபிடலிஸம்’ முதலாளித்துவம் என எப்படி மொழிபெயர்ப்பானது? எத்தனை பத்தாண்டுகளாக உபயோகத்தில் இருக்கிறது. ‘கேபிடல் என்றால் முதல். கேபிடலிஸம் முதலியம். எவ்வளவு சரியாக இருக்கிறது. இதே போல் ஒளிப்படம் என்கிற சொல்லையும் அவரிடமிருந்துதான் தெரிந்துகொண்டேன். ஃபோட்டோ என்பதற்கு தமிழில் சாதாரணமாக புகைப்படம் என்றே சொல்கிறோம். ‘ஃபோட்டான்’ என்பதே ‘ஒளித் துகள் என்கையில் ‘ஃபோட்டோவை ஒளிப்படம் என்பது எத்தனை சரியாய் இருக்கிறது. சென்ற முறை ஓட்டுநர் உரிமம் வாங்கச் சென்ற இடத்தில் ஃபோட்டோ எடுக்கும் இடத்தில் “நிழற்படம்” என்று குறிப்பிட்டிருந்தார்கள். இதன் அறிவியல் தெரிந்த ஒருவர் இதில் எது சரி என்று கேட்டபோது ஒளிப்படமே சரி என்கிறார்.
‘ஹோட்டல்’ என்பதை சிவாஜி மூன்றாம்தரப் படங்களில் கூட ‘ஹொடேல்’ என்பார். பாரதி மணி சார் ‘ஸ்வீட்’ எனபதை ‘ஸூட்’ என்றால் சூட் ஃபைல் பண்ணி விடுவார்.
பிரசுரம் என்கிற வார்த்தைக்குப் பதிலாக சிலர் பதிப்பு என்கிற வார்த்தையை உபயோகிக்கிறார்கள். இந்தக் கதையை பிரசுரிக்கலாம் என்பதும் பதிப்பிக்கலாம் என்பதும் ஒரே பொருளில் பயன் படுத்தப் படுகின்றன. பதிப்பு என்கிற வார்த்தை பலரால் ப்ரின்ட் என்கிற ஆங்கில வார்த்தைக்கு மொழிபெயர்ப்பாக
உபயோக்கிக்கப் பட்டு வருவதால் பிரசுரம் என்றால் வெளியிடுவது என்றும் பதிப்பு என்றால் அச்சிடுவது என்றும் தோன்றுகின்றது.
Thread என்கிற இணைய வார்த்தை ‘திரி’ என்று குழுமங்களில் பெயர்க்கப் படுகிறது. திரி என்றதுமே வெடி நினைவு வருகிறது, தீபத்தின் திரியை விட. அதனால் இழை என்கிற சொல் இன்னும் பொருத்தமானதாகப் படுகிறது.
அதே போல் புனைவு, அ-புனைவு. ஃபிக்ஷனுக்கும் நான் ஃபிக்ஷனுக்கும். இவற்றைவிட ‘கற்பனை’ மற்றும் ‘கட்டுரை’ உவப்பானவையாக இருகின்றன. கட்டுரையிலும் ஓரளவு கற்பனைக்கு இடம் உண்டு. விஷுவலைஸேஷன். அ-புனைவு அந்தப் பொருளைத் தருவதில்லை.
படைப்பு என்பது பெரிய வார்த்தை. எழுத்து என்பதுதான் சரியானது. இது அடிப்படையில் re-creation தான், என்றும் creation இல்லை. வேறொரு கட்டுரையில் இது பற்றி கொஞ்சம் விரிவாகச் சொல்லியிருக்கிறேன்.
படைப்பாளி! அப்பாடி எவ்வளவு பெரிய வார்த்தை. நாம் அதிக பட்சம் துணையிருக்கலாம், கவனத்தைக் குவிக்கலாம், ஒளி பாய்ச்சலாம் அவ்வளவுதான். ஒரு விவசாயி எழுதுகிறவர்களை விட சிறந்த படைப்பாளி. வில்லியம் ஃபாக்னர் அதனால்தான் தன்னை ஓர் எழுத்தாளர் என்பதைவிட தொழில் முறை விவசாயி என்று சொல்லிக் கொள்வதையே விரும்பினார் போலும்.

இதேபோல் திராவிட இயக்கம் என்கிற வார்த்தை. ஜவஹர்லால் நேரு சொன்னது போல் பாக்கி மூன்று மாநிலங்களிலும் ஒரு முணுமுணுப்பு கூட இது குறித்து இல்லாத போது இது திராவிட என்கிற அடை மொழிக்குச் சற்றும் பொருந்தாது. தமிழ் இயக்கம் என்றால் அது தொல்காப்பியருக்கும் முன்பிருந்தல்லவா ஆரம்பிக்கிறது? தமிழர் இயக்கம் என்றால் என்றால் அரசர்கள், மாமன்னர்கள், சேர சோழ பாண்டியர்கள், புலவர்கள், கவிஞர்கள், எண்ணிலடங்கா சுதந்திரப் போராட்டத் தியாகிகள், தமிழ் அறிஞர்கள், இலக்கிய வாதிகள், சமூக சேவகர்கள், ஸ்தபதிகள், வணிகர்கள், ஆசான்கள், ஆழ்வார்கள், நாயன்மார்கள், சித்தர்கள், கலைஞர்கள், தர்மத்தையும், நியாயத்தையும் கலாச்சாரத்தையும் காப்பாற்றி வரும் கோடிக்கணக்கான சாமன்யர்கள் முதலிய அனைவரையும் கொண்டதல்லவா அவ்வியக்கம்? சமூக, தத்துவ, பொருளாதார, ராஜரீக, அரசியல், கலாச்சார, பண்பாட்டு, கலை, இலக்கிய, ஆன்மீக ஜீவ நதிகள் சேர்ந்த அநாதியான கடலல்லவா அவ்வியக்கம்? நாம் கேபிடலிஸத்தை முதலாளித்துவம் என்பது போல் திராவிட இயக்கம் என்பதையும் ஒரு நோக்கத்தோடு, சரியான பார்வையின்றி சின்னஞ்சிறியதாய் சுருக்கி விட்டோம். இது ஆயிரக் கணக்கான ஆண்டுகளை உள்ளடக்கிய தமிழக அரசியல் இயக்கத்தில் ஒரு கால கட்டத்தில் ஒரு பிரிவினரின் இயக்கம். இதை கழக அரசியல் இயக்கம் என்று சொல்லலாம். ”திராவிட’ என்கிற சொல் வேண்டுமென்றால் திராவிடர் கழக அரசியல் இயக்கம் என்று சொல்லலாம்.
‘கல்சர்’ என்பதற்கும் ‘கலாச்சாரம்’ என்பதற்கும் தமிழ்ச் சொல் ‘பண்பாடு’ என்பதை சரியல்ல என்று ஜெயமோகன் சொல்லியிருக்கிறார். இது டி.கே.சி. போன்ற மாபெரும் தமிழறிஞர் புழக்கத்துக்குக் கொண்டு வந்த வார்த்தை எனினும் பண்பாடு எப்போதுமே ஒரு நேர்மறையான சொல்லாகவும், கன் கல்சர் அல்லது துப்பாக்கிக் கலாசாரம் என்பன போன்ற எதிர்மறை இடங்களில் பண்பாடு என்கிற வார்த்தை சரியாக வருவதில்லை என்பதையும் அவர் எடுத்துக் காட்டியிருப்பார்.
‘பாப் ம்யூசிக்’ என்பதை பரப்பிசை என்று மொழிபெயர்த்து உலவ விட்டிருக்கிறார்கள். அடிப்படையிலேயே தவறு என்று தெரிகிறது. (இதை முதலில் ஏற்ற ஜெயமோகன் பின் மாற்றிக் கொண்டார் என்று நினைக்கிறேன்) பரப்புதலுக்கும் பாபுலர் என்பதற்கும் என்ன சம்பந்தம். பாபுலர் என்பது பீபிள் என்பதிலிருந்து வருகிறது. இது ஜனங்கள், மக்கள் சம்பந்தப் பட்டது. அதே சமயம் மக்களிசையும் இல்லை. எனக்கு சம்ஸ்க்ருதம் உட்பட பிற மொழிகளின் மீது மேல் வெறுப்பு ஏதும் இல்லாமையால் ஜனரஞ்சகம் எனக்கு மனரஞ்சகமாக இருக்கிறது. அதற்காக நாள், மலர், காசு, பிறப்பு போன்ற நற்றமிழ்ச் சொற்களுக்கு அடாவடியாக வலிந்து டே. புஷ்பம், கேஷ், ஜனனம் என்கையில் துன்பமாக இருக்கிறது.
ஸ்வாமிநாதன், சுவாமிநாதன், சாமிநாதன். இவை வகுப்புகளையும் சாதி அடுக்குகளையும், வர்க்கத்தையும் குறிப்பவை என்று ஓர் எண்ணம் பரவலாக இருக்கிறது. உ.வெ.சாமிநாதையர், வெங்கட் சாமிநாதன், ந.முத்துசாமி, சுந்தர ராமசாமி, ஆர்க்காட் வீராஸ்வாமி இதைப் பொய்ப்பிக்கிறார்கள், ஒருவேளை இக்காலத்துக்கு மெய்ப்பிக்கிறார்கள். வீராஸ்வாமிக்கு பகுத்தறிவு எண் ஜோதிடம் காரணமோ என்னவோ? ஜெயலலிதாஆ சசிகலாஆ வுக்கும் அஃதே துணை.
சரியான சொல் ஒரு பெரு மகிழ்ச்சி. Survival of the fittest என்றுதான் டார்வின் தியரியைச் சொல்கிறோம். ஃபிட்டஸ்ட் என்பதுதான் சரியான வார்த்தை. ஸ்ட்ராங்கெஸ்ட் டோ, பிக்கெஸ்ட்டோ (biggest) இல்லை. ஜெயகாந்தன் ஒரு சமயம் “சுகமாய் இருப்பதுதான் ஞானம்” என்றார். கூட இருந்தவர் “ஆமாம் ஜே.கே. நல்லவனாய் இருப்பதுதான் ஞானம்” என்றார். “நான் சொன்னது சுகமாய் இருப்பது” என்று ஜெயகாந்தன் அதைச் சரி செய்தார். சுகமாய் இருப்பது சாதாரண விஷயம் இல்லை. மனம் அடங்கிய வேளையில்தான் ஒருவர் சுகமாய் இருக்க முடியும். கடன்கள் முடிந்து, பணிகள் ஓய்ந்து, எண்ண அலைச்சல்கள் இல்லாதபோதுதான் உண்மைச் சுகம். உண்மையிலேயே ‘சும்மா இருப்பது மட்டும்தான் சுகம்’. சும்மா இருக்கப் பார்க்கையில் தெரியும். சும்மா இருக்க முடியாது என்பது. பாக்கி கொஞ்ச நேர சந்தோஷங்கள். காலி ஆனதும் தலை வலிக்கும்.
சொல்லின்பம் மந்திரம் போல் வேண்டுமென்றான் மகாகவி பாரதி. மந்திரம் என்ற சொல்லின் பொருளை ஓர் உரையாடலில் ஜே. கிருஷ்ணமூர்த்தி இப்படி விளக்கியிருப்பார். : ‘மன்’ என்றால் எதுவாகவுமே ஆகாதிருப்பதை தியானித்தல். (meditate on not becoming) ‘த்ரா’ சுய லாபத்தை அடியோடு விட்டுவிடுதல். (abandon self-interest altogether).
முன் காலத்திலெல்லாம் பத்திரம் போன்ற எழுத்து சான்றுகள் கிடையாது. வாய்
வார்த்தையே அப்படிப் பேணி காப்பாற்றப் பட்டது என்று படிக்கிறோம். அது
எத்தனை தூரம் உண்மை என்பது தெரியாது. ஆனால் அரசன் ஒருவனைத் தவிர
சொத்துரிமை இல்லாத அனைத்து குடிகளும் வாய் வார்த்தையாலேயே எல்லாவற்றையும்
செய்திருக்கக் கூடும். அதை பெரும்பாலானவர்கள் உயிர் போல்
காப்பாற்றியிருக்கவும் கூடும். வெகு சிலர் ஏமாற்றியிருக்கவும் கூடும். ஜானகிராமனின் ஒரு கதையில் கொடுத்த கடனை முதல் நாள் இரவு திருப்பி வாங்கிக்கொண்டு விட்டு பத்திரத்தை மறுநாள் காலை தராமல் ‘எங்கே பணம் கொடுத்தே? கனவு ஏதவது கண்டாயா” என்று ஒரு விதவையின் சகோதரனை
ஏமாற்றுபவரும், அவர் பாவமும் களையட்டும் என்று கங்கையில் முழுக்குப்
போடும் அவ்விதவையும், அச்சகோதரனும், வருவார்கள். ஜானகிராமன் எழுத்து
உரத்துப் பேசாத தர்மத்தின் குரல்.
ஒரு வார்த்தை செய்திருக்கும் பூகம்பங்களை நாம் புராணத்தில் படிக்கிறோம்.
ஒரு வார்த்தையைச் சேர்த்து துரோணரை வீழ்த்துகிறான் தருமன். அவன் தேரும்
தரைக்கு வீழ்கிறது. வரம் வேண்டும் பக்தனின் ஒரு வார்த்தையைத் திரித்து
அருள் மிகு கடவுளர் (!)அவனை வருடத்தில் ஆறு மாத காலம் உறக்கத்தில்
ஆழ்த்துகிறார். கும்பகர்ணன். தசரதனின் வார்த்தையை அவனே விரும்பாத போதும்
சிரமேற்கொண்டு காப்பாற்ற கானகம் செல்கிறான் இராமன்.
ஒரு நோக்கில் செம்மையான வார்த்தை முடிவான முக்கியமான விஷயம் இல்லை. கனிவான செயல்களுக்கும், கனிந்த இதயத்திலிருந்து எழும் செயல்களுக்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறதல்லவா? கை கூப்புவது, புன்னகைப்பது, இன்சொல் பேசுவது, மரியாதை காட்டுவது எல்லோருக்கும் பழக்கத்தால் வந்துவிடும். ஒப்பனை நேயம் நமக்குத் தெரியாததா என்ன? ஆனால் நேயத்தில் ஆழ்ந்த இதயம் கலையின் உந்நதத்தைப் போல் அரிதான விஷயம். அது செய்வதெல்லாம், சொல்வதெல்லாம் சரியே. இதே மாதிரி பயிற்சியால் வரும் செம்மையான வார்த்தையை காட்டிலும் செம்மையின் ஊற்றாக, மூலமாக, அமைதியாக இருக்கிற புனித சுரபி அதி முக்யமானது.
நான் ஒரு சினிமாக் கதையைப் படித்தேன். பெயர் நினைவில்லை. ஓர் இராணுவ அதிகாரியை தண்டனைக்குள்ளாக்க ஒரு விலைமாதுவை பொய் சாட்சியாக ஏற்பாடு செய்கிறார்கள். அந்த இராணுவ அதிகாரி தன் வழக்கமான வாடிக்கையாளர்தான் என்று அவள் சொல்ல வேண்டும். அவள் ‘நான் எதற்குச் சொல்லவேண்டும்? அவர் என் வாடிக்கையாளர் இல்லையே” என்கிறாள். அவளுக்கு அது புரியவேயில்லை. எப்படிச் சொல்வது எப்படிச் சொல்வது என்றபடியே இருக்கிறாள். துன்புறுத்துதல்களும் அவளை மாற்றுவதில்லை. எதற்காக பொய் சொல்லவேண்டும் என்பதுதான் அவள் நிலை. அது லட்சியமெல்லாம் இல்லை. அவளுக்கு அது புரியவேயில்லை. இறுதியில் உயிரையும் விடுகிறாள்.
கவர்னர் ஜெனரல் ராஜாஜியை அவராது நெடு நாளைய நண்பர் பெரியார் ஒரு இரயில்
நிலையத்தில் ரயில் கம்பார்ட்மென்டில் சந்திக்கிறார். அச்சந்திப்புக்குப் பிறகு தன்னை விட 46 வயது இளைய மணியம்மையை மணம் செய்து கொள்கிறார். இயக்கம் உடைகிறது. காலம் பூர இந்த இழிவிற்கும், பிளவிற்கும் ராஜாஜிதான் காரணம் என்று தூற்றுகிறார்கள். 1949ல் இது நடக்கிறது. 1972ல் ராஜாஜியும், 1973ல் பெரியாரும் காலமாகிறார்கள். இரு தலைவர்களின் மறைவுக்குப் பின் உண்மை நிலை திராவிடர் கழகம் வெளியிட்ட 21.2.1949ல் ராஜாஜி பெரியாருக்கு எழுதிய கடிதம் மூலமாக வெளியாகிறது. அதில் ராஜாஜி எழுதியுள்ள வரிகள் : “தங்களுடைய வயதையும், நான் தங்கள்பால் வைத்திருக்கும் அன்பையும் கருதி ஒன்று சொல்ல விரும்புகிறேன். இந்த வயதில் விவாக எண்ணம் வேண்டாம் என்பது என் அபிப்பிராயம்”. தன் நண்பரின் பிரச்னைக்கு தான் சொன்ன தீர்வு பற்றிய தகவல் எங்கள் இருவருக்கு மட்டுமே ஆனது. பிறர் பார்வைக்கல்ல. உலகம் எத்தனை அபாண்டமாகத் தூற்றியபோதும் இந்த மற்றொருவரின் தனிப்பட்ட விஷயம் பகிரங்கப்படுத்தப்பட மாட்டது என்பதுதான் சொல்லப் படாத செம்மையின் புனிதம். (திரு சுப்பு அவர்கள் துக்ளக் பத்ரிகையில் எழுதி வரும் ‘திராவிட மாயை’ தொடரில் இதைக் குறிப்பிடுகிறார். திரு. பழ. கருப்பையா அவர்களும் அவர் எழுதிய தொடரில் விவரமாக இது பற்றி எழுதியிருக்கிறார்)
இந்தப் புனிதம் சத்யஜித் ராயின் பதேர் பாஞ்சாலியில் சோகக் கடலிடையில் மலரும். இறந்து போன அக்கா ஒரு செல்வந்தர் வீட்டிலிருந்து (யாருமறியாது ஆனால் சந்தேகத்துக்கு இடமாகி) எடுத்து வந்த ராக்கொடி பரணில் அகப்படுகையில் அதை யாரிடமும் சொல்லாமல் ஒரு குட்டையில் விட்டெறிந்து விடுவான் சிறுவன் அப்பு. ஒரு வர்த்தைப் பேசப் பட மாட்டாது. அவனுக்கும் அவன் அக்காவுக்குமான உறவு எனபதையும் மீறி ஓர் உயிர் இன்னொன்றுக்கு செய்யும் அன்பு. பதேர் பாஞ்சாலியின் ஆன்மா இந்தக் காட்சி என்று நான் நினைக்கிறேன்.
இராமகிருஷ்ண பரமஹம்ஸர் ஒரு முறை ஒருவர் வீட்டுக்கு வருவதாகச் சொல்லி விட்டு மறந்து விடுகிறார். இரவு நினைவுக்கு வந்ததும் எழுந்து அவர் வீடுவரை சென்று வாசற்படிக்கு அப்புறம் உட்புறமாக அடியெடுத்து வைத்து விட்டு திரும்புகிறார் ( நண்பர் திரு. மோதி ராஜகோபால் சொன்ன கதை)
கோவையில் நண்பர்களோடு பேசுகையில் வளர்ந்த மேலை நாடு ஒன்று பற்றி ஒருவர்
சொன்னார் “அங்கு சிகப்பு விளக்கு சாலையில் எரிகையில் கண்ணுக்கெட்டிய
தூரத்துக்கு யாருமே தென் படவில்லை என்றாலும் வாகன ஓட்டிகள் வண்டியை
நிறுத்திவிட்டு பச்சை விளக்கு வந்ததும் தான் போவார்களாம், எவ்வளவு
முட்டாள் தனம்.” முட்டாள்தனமா இல்லையா என்பதை முடிவு செய்யும் உரிமையை
படிக்கும் உங்களுக்கே அளிக்கிறேன்.
சொல் ஒரு தெரிதொடர்புக் கருவி. கம்யூனிகேஷனை தொடர்பு என்கிறார்கள்.
கான்டாக்ட் என்பதற்கும் அதுவே (இன்னமும்) சரியாக இருக்கிறது. தெரியப்
படுத்துதல் என்னும் சொல் இன்ஃபார்ம் என்பதற்கும் சரியாக இருக்கிறது. ஏன் ‘தெரிதொடர்பு’
என்று சொல்லக் கூடாது? சொல் சரியாக இருக்க இருக்க தெரிதொடர்பு சரியாக
ஆகும்.
சொல் வெறும் தோற்றம்தான். குறியீடுதான். உள்ளிருந்து பெருகும் ஊற்று
செம்மை எனின், கருவி தானே அமையும். ‘உள்ளத்தில் உண்மை ஓளி உண்டாயின்’
என்று பாரதி இதைத்தான் சொல்கிறான்.
“கற்பெனப்படுவது சொல் திறம்பாமை” யும் இதுதான். கற்பு என்பது
செந்தில் ஒரு படத்தில் வந்து சொல்வதைப் போல் “ரப்பர் வைத்து (அல்லது
வைக்காமல்) அழிப்பது” போன்ற வஸ்துவாக கிட்டத்தட்ட hymen னுக்கு இணையான
தமிழ்ச் சொல்லாக இருக்கிறது. ஏதோ ஒரு குடத்து நீரில் ஒரு குவளை எடுத்தால்
அது மட்டுப் படுவது போன்றும் ஒரு சித்திரம்.
மனம் தான் தொட்ட முழுமை அனைத்தையும் மூளியாக்கிவிட்டு பூரணத்துக்கு
பொய்யாய் ஏங்கும் விசித்திர மாயை. அது அமைதியாகி இதயம் மூலம் வாழ்வு
நேரிடுகையில் பூரணத்துவம் அங்கே எதேச்சையாய் நிலவும். “As you live
deeper in the heart the mirror gets clearer and cleaner” - ரூமி.
முழுமையென்னும் கரைகள் அற்ற கடலில் முகர்வதும், நுகர்வதும் அதைக் குறைவு
செய்வதே இல்லை.
“அங்கிருப்பதும் பூரணம்; இங்கிருப்பதும் பூரணம். பூரணத்திலிருந்து பூரணம் உண்டாகி யுள்ளது. பூரணத்திலிருந்து பூரணத்தை எடுத்த பின்பும் மிஞ்சி நிற்பதும் பூரணமே’ - ஈசோபநிடதம். முதல் ஸ்லோகம்.
ஆக இந்த செம்மை, பூரணத்துவம் ஒரு இலட்சியம் அல்ல. இலட்சியமாக இருக்கலாம்.
ஆனால் இது இவ்வுலகில் காலூன்றி இருப்பது. இதன் ஊற்று இவ்வாழ்வின்,
சுழலும் இப்பூமியின், இப்பிரபஞ்சத் துளியின் சிருஷ்டியின் தூய்மை.

விருதுகள், பரிசுகள், பதவிகள், அங்கீகாரங்கள்


விருதுகள், பரிசுகள், பதவிகள், அங்கீகாரங்கள்

வ.ஸ்ரீநிவாசன் | பிரசுரம் : சொல்வனம் : இதழ் 68 | 17-04-2012
ஒவ்வொரு வினைக்கும் அதற்குச் சமமானதும், நேரெதிரானதுமான எதிர்வினை இருப்பதைப் பற்றி ந்யூட்டன் சொல்லி விட்டார். அவர் கவனித்துச் சொல்வதற்கு முன்பிருந்தே அவ்வியற்கை நியதியும் இருந்து வருகிறது. ஒருவிதத்தில் அது இருப்பதற்கு எதிர்வினையாகவே அக்கண்டுபிடிப்பு நிகழ்ந்தது என்றும் கூறலாம்.
பௌதிக விஷயங்களில் போலவே உளவியலிலும் இது நடக்கும் என்று நம்பப்படுகிறது. பௌதிகமும், உளவியலும் பற்பல விகிதங்களில் கலந்ததாகவே ஒவ்வொரு கணமும் அமைந்து விடுவதால் ஒரு வினையில் அல்லது எதிர்வினையில் பௌதிகம் எவ்வளவு உளவியல் எவ்வளவு என்பது கண்டடைய கடினமான ஒன்று. நொடியின் கோடித்துகள்களில் பலவினைகள், எதிர்வினைகள் நடந்து விடுகின்றன.
விளையாட்டு, கலை, இலக்கியம், அரசியல், சமூக சேவை என்று மனித நடவடிக்கைகள் இருக்கும் பல்வேறு துறைகளிலும் நேரடியான மற்றும் மறைமுகமான அங்கீகாரங்கள் அளிக்கப்பட்டவாறே உள்ளன.
இதில் அளவற்ற மகிழ்ச்சிகள், எண்ணற்ற குறைகூறல்கள் எதிர்வினையாக வெளிப்படுத்தப்பட்டவாறேயும் இருக்கின்றன.
bharat-ratna
பாரத் ரத்னாவிலிருந்து, கலைமாமணி வரை பலர் நம்மிடையே உலா வருகிறார்கள். ‘நொபெல்’ பரிசிலிருந்து, ‘சாஹித்ய அகாடமி’ பரிசு வரை, ‘விம்பிள்டன்’ கோப்பையிலிருந்து, பள்ளிகளில் தரப்படும் சோப்பு டப்பாவரை. பணமுடிப்பு, பட்டயம், சான்றிதழ் இவை தவிர மக்கள் அளிக்கும் பட்டங்கள், தானே சூடிக் கொள்பவை, விளிகள், வியப்புகள் இத்யாதி.
ஒரு விளையாட்டு இரண்டு குழுவினருக்கிடையில் நடக்கையில் இருவருக்கும் ஒரே மாதிரி சட்ட திட்டங்கள் அனுசரிக்கப் பட வேண்டும். இயற்கை, உடல் வலு, சீதோஷ்ணம், உபயோகிக்கப் படும் கருவிகள், மற்றும் பொருட்களின் தன்மை போன்றவை மாறியபடி இருந்தாலும் சட்ட திட்டங்கள், விதிகள், வாய்ப்பு அனைத்தும் சம அளவில் இருந்தால்தான் போட்டியும், முடிவும் நியாயமாக நடந்ததாகச் சொல்லமுடியும். கிரிக்கட் மாட்சில் இந்தியாவுக்கு ஒரு ஓவருக்கு 6 பந்துகள் என்றால் இங்கிலாந்துக்கும் அதேதான். அப்போதுதான் அது போட்டி. இல்லவிட்டால் அது அநியாயம்.
எண்ணிக்கைகளில் அடங்கக் கூடிய சமாச்சாரங்கள் உள்ளன. இலக்கியம், ஓவியம், நாடகம், சினிமா போன்றவற்றில் அளவு சமாச்சரமே இல்லை. ஒருவருக்கு அகிலன் பிடிக்கும்; ஒருவருக்கு கல்கி, ஒருவருக்கு புதுமைப் பித்தன். இந்தியாவின் மார்லன் ப்ராண்டோ, தமிழகத்தின் சத்யஜித் ராய், தென்னாட்டு பெர்னாட் ஷா போன்ற ஒப்பீடுகளும் பெரும்பாலும் இனப்பாசத்தாலும், உணர்ச்சி பூர்வமான பற்றாலும் விஷய ஞானம் இல்லாமலேயே மொழியப்பட்டு, ஏற்றுக் கொள்ளப் படுகின்றன.
தனிப்பட்ட பிடித்தங்கள், சார்புகள், காழ்ப்புகள் தேர்வு, ஆதரவு, எதிர்ப்பு எல்லாவற்றையும் கறைபடுத்துகின்றன. நாஞ்சில் நாடனின் கும்பமுனி தனக்கு ஏன் ஒரு விருதும் கிடைப்பதில்லை என்பதற்குக் காரணங்களைப் பட்டியலிடுவார். நான் முற்போக்கு இல்லை, பிராமணன் இல்லை என்று அது போகும். லா.ச.ரா. தனக்கு அரசாங்கத்தின் அங்கீகாரம் எதுவும் கிட்டாததற்கு தான் பிராமணன் என்பது காரணம் என்பார். இரண்டும் அவர்களைப் பொறுத்தவரை உண்மை. ஆனால் அடிப்படை உண்மை பரிசுகளுக்கும், விருதுகளுக்கும் ஜாதி ஒரு அளவுகோலாகி இருக்கும் துரதிருஷ்டம். எல்லாவற்றையும் எதிர்க்கவும், ஆதரிக்கவும் நமக்குத் தெரியும். வரதட்சணை, பால்ய விவாஹம் எல்லாவற்றுக்கும் ஆதரவான வாதங்கள் உள்ளன. எந்த வழுவலையும், வழுக்குதலையும், திரிப்பையும் தர்க்க ரீதியாகவோ, அசுர பலத்தாலோ ஆதரிக்க, நியாயப் படுத்த முடியும்.
சமீபத்தில் கர்நாடக சட்டசபையில் அமைச்சர் மொபைல் ஃபோனில் ‘போர்னோகிராஃபி’ பார்த்தார் என்பது முதல் பக்கச் செய்தி. இதில் எது தவறு? ஒருவேளை பக்தி படம், அல்லது காந்தி அல்லது அம்பேத்கர் திரைப்படம் என்றால் அது ஒகேவா? அல்லது சட்டசபை நேரத்தில் வேறு ஏதோ ஒன்றை செய்து கொண்டிருந்தார் என்பதா? ‘கண்டேன் காதலில்’ (ஜப் வி மெட் டின் தமிழ்) சந்தானத்திடம் அவர் சகோதரி “வெள்ளிக் கிழமையும் அதுவுமா ஓடிப் போயிட்டாளே’ என்று தன் மகளைப் பற்றிக் கூறியதும் அவர் “ அப்ப சனிக்கிழமை ஓடிப்போனா பரவாயில்லையா? “ என்பார். அது மாதிரி.
சரி அப்போ ஆபீஸ் நேரத்தில் சங்கராச்சாரியாரை அல்லது வீரமணியைப் போய்ப் பார்ப்பது, ஷேர் மார்க்கட் செய்வது, பத்ரிகை படிப்பது, ‘கேம்ஸ்’ விளையாடுவது, காய்கறியிலிருந்து எல்லாம் வாங்குவது, சினிமாவுக்குப் போவது, இலக்கியம் படிப்பது, அறம் பற்றி பேசிக் கொண்டே இருப்பது இன்னபிற எதில் சேர்த்தி?
இலக்கிய விருதுகளில் ஆதரவும், எதிர்ப்பும் கூடவே வருபவை. ஒரு எழுத்தாளரை விரும்புபவர்கள், விரும்பாதவர்கள் இருவரும் இருக்கவே செய்வர். ‘எனக்குப் பிடிக்கிறது, உனக்கு’ என்பதே விமர்சனமாய் மலர்கின்றது அல்லது வளர்கின்றது. பிடித்தலுக்குக் காரணங்களை ஆராய்கையில், அல்லது பிடிக்காமைக்குக் காரணங்களை ஆராய்கையில் விமர்சனம் நிகழ்கிறது. இதிலும் பெரும்பாலும் ‘ச்ப்ஜெக்டிவ்’ உணர்வுகள் வழி நடத்துகின்ற்ன.
தேர்வில் கடைபிடிக்கப்படும் உயர்தரமான, கடுமையான சட்டங்களும், நடுநிலைமை விழையும் மரபும், நீதிபதிகளின் நேர்மையும் ஒரு போட்டியின் முக்கியத்துவத்தையும், விருது / பரிசு / அங்கீகரத்தின் அப்பழுக்கற்ற தன்மையையும் நிலை நாட்டுகின்றன. இதனாலேயே ‘விம்பிள்டன்’ போட்டியில் வெல்வதும், ‘ம்யூசிக் அகாடமி’யில் பாடுவதும் உயரியனவாக கருதப்படுகின்றன. இளைய ராஜாவின் ரசிகராக செம்மங்குடி ஸ்ரீநிவாச ஐயர் இருப்பதும், டார்க்கவ்ஸ்கியின் ரசிகராக பெர்க்மன் இருப்பதும் அர்த்தம் மிக்கவையாவது இதனாலயேதான்.
பொருளாதாரத்தில் பெரிதும் பேசப்படும் ‘சப்ளை’யும் ‘டிமாண்டு’ம் இதிலும் பெரும் பங்கு வகிக்கின்றன. என்ன ‘குறைந்து கொண்டே வரும் ஆர்வ விதி’ பல இடங்களில் செல்லுபடியாவதில்லை. பதவி என்பது இந்த விருதுகளிலேயே வலு மிகுந்தது. நேற்றுவரை பிரபலமாக இராத அகிலேஷ் யாதவ் இன்று இந்தியாவின் மாபெரும் மாநிலமான உத்திரப் பிரதேசத்தின் முதலமைச்சர். அவர் தந்தை முலாயம் சிங் யாதவ், தான் அமர வேண்டிய அரசுக் கட்டிலில் மகன் அமர வழி செய்தார். இதைப் பார்த்தவுடன் “வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது” என்று பொருமும் குரலொன்றும் தமிழகத்தில் கேட்கிறது. அந்தக் குரலுக்கு சொந்தக்காரரின் கால்களை இறுகப் பிடித்து அவர் நாற்காலியை நெருங்கவிடாமல் செய்யும் இன்னொருவரும் அதே டயலாக்கை “வடக்கு வழ்கிறது; தெற்கு தேய்கிறது தமிழ் நாட்டுக்குள்ளும்” என்று முனகுகிறார். இறந்த பிறகும் சிவலோகப் பதவி அடைபவர்கள் நம்மிடையே உண்டு. “ப’சித்திரு, த’னித்திரு, வி’ழித்திரு என்ற வார்த்தைகளில் உள்ள முதல் எழுத்துகள்தான் ‘பதவி’ என்று தொடர்ந்து சொல்லி பல பதவிகளைப் பெற்றவர்களும் உண்டு. பெரும்பாலும் பதவிக்கு அலையாதவர்கள் இல்லை. சில விதி விலக்குகளையும் காண்கிறோம்.
தேச விடுதலையின்போது மகாத்மா காந்தி பிரதமராக ஆகியிருக்கலாம். அவர் வாழ்க்கை அதற்கன்று என்பதை அவர் உணர்ந்திருந்தார்.
கவர்னர்-ஜெனரலாக இருந்த ராஜாஜியே ஜனாதிபதியாக வேண்டும் என்று ஜவஹர்லால் நேரு, அம்பேத்கர் முதற்கொண்டு பலரும் விழைகையில் வட இந்தியர் ஒருவர் வர வேண்டும் என்கிற குழுவுக்கு அதிக வலு இருந்தது. அரசியல் வட்டாரங்கள் இந்த உஷ்ணத்தில் பலரைத் தவிக்க வைத்துக் கொண்டிருந்தபோது ஒரே ஒருவர் மட்டும் இது எதிலும் சிக்காமல், இதைப் பற்றிய நினைப்பு கிஞ்சித்தும் இல்லாமல் எப்போதும் போல் விச்ராந்தியாக இருந்திருக்கிறார். அவர்தான் ராஜாஜி. இதை பிமனேஷ் சாடர்ஜீ என்னும் வங்காளி ‘ராஜாஜியுடன் ஆயிரம் நாட்கள்’ என்கிற நூலில் பதிவு செய்துள்ளார்.
jeyakanthan6ஜெயகாந்தனுக்கு சாஹித்ய அகாடமி, ஞானபீடம் கிடைக்காத காலத்தில் அவர் அதைப் பொருட்படுத்தி காயவுமில்லை; காய் நகர்த்தவும் இல்லை. கிடைத்தபின்னரும் ‘செல்ஃப் கான்ஷியஸ்’ஸாக எதுவும் செய்யவில்லை. அவரது 60 வயது நிறைவின்போது சென்னை தேனம்பேட்டை காமராஜ் அரங்கில் ஒரு விழா நடந்தது. அரங்கு உள்ளும், வெளியும் நிரம்பி வழிந்தது. அப்போது பேசுகையில் தனக்கு அளிக்கப்பட்ட பண முடிச்சு பற்றி குறிப்பிட்டு “இதை என்ன செய்வேன்? குப்பையில் போடுவேன்; குப்பை என்றால் ‘பாங்க்’ என்றார். தன்னை கௌரவித்தவர்களை மனம் நெகிழ்ந்து தான் இதற்குத் தகுதியா என்றெல்லாம் ஒரு வார்த்தை பேசவில்லை. “ஏன் தமிழர் அனைவரும் இந்தி கற்க வேண்டும்’ என்பது பற்றி, மேடையில் அமர்ந்திருந்த மத்திய அமைச்சர் நெளியுமாறு பேசினார். இறுதியில் “மூலவரை வணங்கினால் அனைத்து கோவில் விக்கிரகங்களையும், சன்னதிகளையும் வணங்கிய மாதிரி, எனவே மூப்பனாருக்கு நன்றி” என்று முடித்தார். மறுநாள் தினசரிகளில் “நேற்று யாருக்கும் நான் சரியாக நன்றி சொல்லவில்லை. அனைவருக்கும் உளமார்ந்த நன்றி’ என்று அவர் சொன்னதாக செய்தி வெளியாகி இருந்தது.
‘இவ்வருட துக்ளக் ஆண்டு விழாவில் பா.ஜ.க. தலைவர் அத்வானி “சோவை ஒன் மேன் க்ரூஸேடர்” என்று புகழ்ந்ததை “ அத்வானிக்கா நகைச்சுவையும் அங்கதமும் வராது? பாருங்கள் நான் ஒற்றை ஆள். என் பின் ஒருவர் கூட இல்லை, வரமாட்டார்கள் என்பதை எப்படிச் சொல்லிவிட்டார்” என்றுதான் சோ அதை ஏற்றுக் கொண்டார்.
காமராஜர் முன்னிலையில் அவரைப் புகழ்ந்து மேடையில் பேசினால், அவர்களை இடைமறித்து சொல்ல வந்த விஷயத்தைப் பேசச் சொல்லி விடுவாராம். நாஞ்சில் நாடனிடம் அவர் கதை மிகவும் நன்றாக இருக்கிறது என்று யாராவது சம்பிரதாயமாகப் பேச ஆரம்பித்தால் அவர் பேச்சை மற்றி வெறெதையோ பேச வைத்து விடுவார். தான் சொன்னது அவர் காதில் விழுந்ததா என்பதே சந்தேகமாகிவிடும் சொன்னவருக்கு.
‘ஹ்யுமிலிடி’ என்பது பயிற்சியால் வருவதல்ல. அது இதயத்தின் மலர்ச்சி. அதற்கு அங்கீகாரம் தேவையில்லை. அது கைதட்டல்களுக்குக் காத்திருப்பதில்லை. தானாகக் கிடைப்பதையும், கோவிலில் தரும் திருநீறைத் தட்டி விட்டு தன் ‘நம்பிக்கையின்மை’யைப் பறை சாற்றிக் கொள்வதைப்போல், அது கேவலப்படுத்துவதில்லை.
அதற்காக அங்கீகரங்களை பொருட் படுத்தாதவர்கள்தான் உத்தமர்கள் என்றில்லை. அங்கீகாரத்தின் அர்த்தமின்மையை உணர்ந்தவர்களை கிடைக்கையிலும் அது தொந்திரவு செய்வதில்லை,. இந்தப் பின்னணியில் தங்கள் முன்னாலேயே தங்களைப் போற்றிப் புகழ்பவர்களை பல அரசியல் தலைவர்கள் புன்னகையோடு பார்த்து ரசிப்பது நமக்கே சங்கோஜமாக இருக்கிறது.
சார்த்தர் நோபல் பரிசை வேண்டாம் என்றார். டால்ஸ்டாய், காந்திக்கெல்லாம் எந்த விருதும் கிடைத்ததாகத் தெரியவில்லை. பாரதிக்கும்தான். சில விருதுகளின் விலை 15,000 ரூபாய் என்று ஒரு நண்பர் சொன்னார். சில பரிசுகளுக்காக பழம், பணத்தட்டுகளோடு தப்பான ஆளிடம் அவரும் நீதிபதிகளிலொருவர் என்று எண்ணி போனவர்களின் கதைகளும் உலவி வருகின்றன.
இதற்கெல்லாம் மத்தியில் எழுத்துலகத்தில் ‘என்றென்றும் வாசகனா’க இருப்பதில் உள்ள இன்னுமோர் அனுகூலத்தை எண்ணி நான் மட்டற்ற மகிழ்ச்சியுறுகிறேன். அது சிறந்த வாசகர் பரிசு யாரும், இதுவரை வழங்கியதாகத் தெரியாததுதான்.
அது நடக்கும்வரை எனக்கும் ஒரு தொந்தரவும், அறச்சிக்கலும், தர்ம தேவதையோடு வாக்குவாதமும் இல்லை.
 

சாமத்தில் முனகும் கதவு - சிறுகதை குறித்து…


சாமத்தில் முனகும் கதவு - சிறுகதை குறித்து…

வ.ஸ்ரீநிவாசன் | பிரசுரம் :  சொல்வனம் : இதழ் 67 | 30-03-2012
11
சொல்வனம் இதழ் 65-இல் வெளியான, திரு. கே.ஜே.அசோக்குமார் எழுதிய ‘சாமத்தில் முனகும் கதவு’ சிறுகதை குறித்து ஆசிரியர் குழுவிலிருக்கும் திரு. வ.ஸ்ரீநிவாசனின் சில கருத்துகள்.
‘இனர்ஷியா’ பற்றி கதைகள் வந்துள்ளன. அடூரின் ‘எலிப்பத்தாயம்’ இதன் அதீத நிலையைச் சித்திரித்தது.
கூத்தையன் மனதுக்குள், கற்பனையில் அதிகம் வாழ்பவன். கலவி போன்ற புலன்களை தீவிர விழிப்புக்குக் கொண்டு செல்லும் செயல்பாடுகளில் மட்டுமே உணர்வு பெறுபவன். இது உடம்பின் வியாதி இல்லை. முழுக்க முழுக்க மனம் சம்பந்தப்பட்டது. இதில் சிக்கி மனோவைத்தியரை நாடியவர்களை நான் பார்த்திருக்கிறேன். அவர்கள் குளிப்பதை, இயற்கைக் கடன்களைக் கூட ஒத்திப் போட்டு விடுவார்கள். கூத்தையன் அவ்வளவு மோசமில்லை. ஆனால் கற்பனையின் சுகத்தில் செயலை விட்டுவிடும் மனிதன். சோம்பேறி, கொழுப்பு பிடித்தவன், மசை என்ற பல பெயர்கள் இத்தகையோருக்கு இருக்கும். அவர்களின் அந்த சோம்பேறித்தனத்தில் அவர்களது வீழ்ச்சியும், அழிவும் தென்படும். ஆனாலும் சாக்கடையில் குளிக்கும் எருமையை, பன்றியை நாம்தான் மனிதனாகக் கருதி கேவலம் என்கிறோம். அதில் உள்ள சுகம் அதற்குத்தான் தெரியும். கூத்தையன் போன்றவர்களுக்கும் அவர்களது சுகம் அந்த செயலாற்றாமையில்தான் இருக்கிறது. இந்த செயலின்மை ஞானம் சம்பந்தப்பட்டதல்ல. ‘சுகம்’ அல்லது ‘இன்பம்’ சம்பந்தப்பட்டது. இதன் இன்னொரு பக்கம் பயம்.
ஓயாத கற்பனை. தூக்கத்திலும் கனவாய்த் தொடர்வது. அந்தக் கனவு விழிப்பின் பொழுதுகளையும் ஆக்ரமிப்பது என்று கதை துவங்குகிறது.
கற்பனையும், நிஜமும் செய்யும் குழப்பம் அவன் மனதின் பிடித்த பொழுது போக்கு. அதன் அதீதம் அடூரின் ‘அனந்தரம்’ படத்தில் வரும். கூத்தையன் நிலை மோசமில்லை. அவன் முயன்றால் தூக்கி எறியக் கூடியதுதான்.
அந்த சோம்பேறித்தனம் அவனுக்கு எல்லோராலும் வழங்கப் பட்ட பரிசு. கடை வைத்து விட்டுப் போன அப்பா. எவ்வளவு ‘ஜென்டிலான’ அம்மா. மருமகளின் தொடுப்பு பற்றி பேசுகையில் கூட ஆங்காரம் இல்லை. எவ்வளவு தயக்கமாக சுட்டிக் காட்டுகிறாள். மௌனத்திலிருந்து வெளி வந்து ஏமாந்து போய் மீண்டும் மௌனத்தில் தஞ்சம் புகும் அபலை. இவனும் மென்மையானவன்தான். அம்மாவும் பிள்ளையும் அந்தத் தற்கொலையைக் கூட தங்கள் அனுகூலத்துக்குப் பயன்படுத்துவது இல்லை.
அவன் அப்பாவாலும் அம்மாவாலும் மனைவிகளாலுமே பார்த்துக் கொள்ளப்படுபவன்.
காற்றில் சரியாக அண்டக் கொடுக்காத கதவின் ‘க்றீச்சிடலும்’ சம்போக உச்சத்தில் மனைவியின் முனகலும் ‘கற்பனை இன்பத்தில்’ சுகமாய் வாழும் கூத்தையனுக்கு ஒன்றாகப் போகின்றன. கற்பனையின் மீது ஓரளவாவது இருக்கும் ‘கன்ட்ரோல்’ அவனுக்குக் (யாருக்குமே) கனவு-நனவுக் கலப்பின் மீது இல்லை. கனவின் நடுவில் நிகழும் விழிப்புலகச் செயல் கனவில் ஒரு தர்க்க ரீதியான செயலாவதை நாமனைவரும் அனுபவித்து இருக்கிறோம். காலிங் பெல், தட்டப்படும் கதவு போன்றவை கனவுக் காட்சியின் சரியான இடத்தில் வேறாகத் தெரிந்து நாம் தெளிவது அனைவருக்கும் தெரிந்தது. அதை அருமையாகக் கொண்டு வந்திருக்கிறார். ஆனால் கதவு முனகி குழப்பமாய் நினைவுறுத்தும் அந்த மனைவி விஷம் அருந்தி இறந்தவள். அல்லது அந்நினைவுக்கான ஒரு ப்ரமேயம் அந்தக் கதவின் முனகல். அவள் இறப்புக்குப் பின்னும் ஒரு கதை இருக்கிறது. அது வழக்கமான கதை; அவனால் நம்பப்படுவது. (’பேணுகின்ற காதலினைத் தேடியன்றோ பெண் மக்கள் கற்பு நிலை தவறுகின்றார்’ - பாரதி பக்கம் நான்.)
சும்மா இருப்பவர்கள் பயங்கரங்களைச் சாட்சிகளாக இருந்து கவனித்துக் கொண்டிருப்பார்கள். தன்னை அந்த நெருப்பு நெருங்குகையில் வெகு சிலரே அதில் மடிவார்கள். பெரும்பாலானவர்கள் தன்னை காப்பாற்றிக் கொள்பவர்கள். ‘டிப்ரெஷனின்’ தீவிரத்தைப் பொருத்தது அது.
வீட்டின் முன்னால் செல்லும் வாய்க்கால் சாக்கடையாக மறுவதையும், வீட்டில் தொங்கும் ஒட்டடைகளையும், காற்றில் சப்தமிடும் கதவையும் பார்ப்பான். ஆனால் சரி செய்ய ஒன்றும் செய்ய மாட்டான். தன் மனைவியோடு தொடுப்பு இருந்தவனைக் கூட அவனால் தயக்கத்தோடும், செயலின்மையாலும்தான் டீல் செய்ய முடிகிறது.
(இம் மனச்சிக்கலைச் சொல்லும் ஒரு கவிதையைக் கடைசியில் தந்திருக்கிறேன்.)**
இவரது வர்ணனைகள் அழகை மட்டும் தேடுவன அல்ல. அனைத்தும் இவர் கண்களுக்குத் தெரிகின்றன.
ஒரு முறை ஒரே ஒரு முறை சப்தமிடும் கதவை - தினமும் நினவிலிருத்தி அண்டக் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லாமல் - கழற்றி எடுப்பதன் மூலமாக அவன் ஒரு காரியத்தைச் செய்து விடுகிறான். அதுவே அவனது விடுதலை. மிகப்பெரிய ஆன்மீக மாற்றம் அவனுள் நிகழ்ந்து விட்டது. அதனால்தான் அவன் மறுபடியும் அச்சமின்றி கதவை அதே இடத்தில் வைக்கவும், உற்சாகமாக இருக்கவும் செய்கிறான்.
ஒரு அசோகமித்திரன் கதையில் தற்கொலைக்குச் செல்லும் ஒருவன் ஓர் இருப்புபாதையில் படுத்து இருக்கையில் பக்கத்து இருப்புப்பாதையில் ரயில் போய்விடும். அவனும் எழுந்து போய்விடுவான். ஒரு சுஜாதாவின் கதையில் துப்பாக்கியால் சுட்டு சுடப்படுபவர் மேல் அது படாவிடினும் திருப்தியாகிவிடுவார் ஒருவர். நாநா படேகர், மனீஷா கொய்ராலா நடித்த ‘அக்னி சாக்ஷி’ யில் நாநா மனீஷாவைச் சுட்டு விடுவார். அவரும் இறந்தவர் போல் விழுவார். அது ஒரு போலீஸ் நடத்தும் நாடகம். மீண்டும் அவரைப் பார்க்கையில் கூட நாநாவுக்கு பிரச்னையிராது. இத்தனைக்கும் அவருக்கு எல்லாம் தெரியும் என்பது போல் படம் முடியும். (நாநா அசத்தி இருப்பார்). அவ்வளவு ஏன் சமீபத்திய ‘சந்திரமுகி’யில் என்ன ஆகும்? அது போல் அந்தக் கதவை அவன் பெயர்ப்பதில் அதன் சப்தமும், மனைவிகளின் கசப்பு நினைவுகளும் தவிர அவனது துருப்பிடித்த செயலின்மையும் நீங்குகின்றன. கதவை அவன் மீண்டும் அங்கே வைக்கும் அளவுக்கு தெளிவு வந்து விடுகிறது. இது உடனே அல்லது ஓரிரு நட்களில் அல்லது பின்னால் போய் விடலாம். இப்போ அவன் விடுதலையாகி இருக்கிறான்.
இது போன்ற மனசிக்கல்களில் மாட்டிக் கொண்டவர்களுக்கும், அல்லது உடனிருந்து பார்த்தவர்களுக்கும் இந்த விடுதலையின் அர்த்தம் சரியாகப் புலனாகும்.
மனதின் நிகழ்வுகள் அருமையாய் வந்திருக்கின்றன. மொழி லாகவம் இன்னும் சரளமாக, கூர்மையாக இருந்திருக்கலாம். ஆனால் எடுத்துக் கொண்ட விஷயத்தில் உள்ள கவனத்தில், சிரத்தையில் கதை வென்று விடுகிறது. சொல்வனத்தில் வெளிவந்த சிறந்த கதைகளில் இக்கதை நிச்சயம் இடம் பெறும்.
மோட்சம் தேடாத எருமைகள் **
குருவிகள் உள்ளே வந்து - மின்
விசிறியில் அடிபடும் என்று
ஜன்னலைச் சாத்தியாச்சு.
வியர்வை.
விலாவும் தரையும் பிசுபிசுக்க
வலிய வரவழைக்கும் தூக்கம்.
வேலை ஒன்றும் பளுவானதில்லை
ஆனால் ஒரு இடைவேளையையும்
விடுவதற்கு மனசில்லை.
ராப்பூரத் தூக்கம். பகல்பூரத் தூக்கம்.
பிரச்னைகளைத் தீர்க்கக்
காலையில் திடச் சித்தம் பூண்ட காலம்
மலையேறிப் போச்சு.
எது பற்றிப் பேசினலும் ரெண்டு
பக்கமும் சரியோ என்ற
தீராத சந்தேகம்.
இன்று சேற்றிலிருந்து
எழுந்து விட வேண்டும் என்று
உடம்பின் எல்லா மூலைக்கும்
ஆணைகள் விடுத்த மூளைக்கு
அப்பவே தெரியும்
இது ‘சும்மா’ ஒரு அலண்டாத விளையாட்டு.
யார் எந்த அரசியல் பேசினால் என்ன?
ஆபீஸ் சம்பளம் குமாஸ்தா மூளையை
யார் என்ன ஏசினால் என்ன?
மூளையைக் காட்டிலும்
அதில் படரும் பாசி
சக்தியுள்ளது.
இதில் ஒரு துக்கமும் இல்லை.
பதட்டமும் படபடப்பும் குறைந்தாலும்
அதற்குத் தெளிவைக் காட்டிலும்
சோம்பலே காரணம்.
சும்மா இருப்பது
சுகமோ இல்லையோ
அதில் தொந்தரவில்லை !
ஒருகால் -
ஒரு நாள் -
புத்து வைக்கலாம்.
இல்லே ! புல் முளைக்கலாம்.
ஜூன் 1979 கணையாழி.