FUTURE IS NOW - J Krishnamurti.

பிறப்பு, இறப்பு என்பது உண்மையே இல்லை. அத்தகைய பொய்யான தோற்றத்தை நமது மனமே உருவாக்கிக் கொள்கிறது. மனம் தனக்கென்று ஒரு உடலை உருவாக்கிக் கொள்கிறது. அதைக் கனவு மழையில் நனைத்துத் துன்பப் படுத்துகிறது. - ரமண மகர்ஷி.

Search This Blog

Saturday, November 19, 2011

மலை மீது பயணம் (ஒரு கொண்டை ஊசி வளைவுக் கவிதை)


மலை மீது பயணம் (ஒரு கொண்டை ஊசி வளைவுக் கவிதை)

வ.ஸ்ரீநிவாசன் பிரசுரம் : சொல்வனம் | இதழ் 59 | 12-11-2011 
சூரியனை
- மகிழ்வோடு
வரவேற்கும் - எங்கேயும் போலான -
ஆதரவு வெளிர் வானம்.
துணை உள்ளோம், துயர் துடைக்க என
உயர்ந்திருக்கும் பெயர் தெரியா
பெருமரங்கள்.
விரி சிரிப்பை, சுக ஒளியைப்
பரப்பி வரும் சிறு குழந்தை
மழைப் பூக்கள்; பூ மழைகள்.
மென் செடிகள், புதர்கள்,
தாவரங்கள், புள்ளினங்கள்,
பூச்சிகள், புழுக்கள்.
மேக உறவினர்கள்.
குளிர்ப் பச்சை.
எல்லாவற்றையும் இணைக்கும்
பூங்காற்று. 
வளைவில் திகைப்பூட்டும்
அருவிகள், அருவித் தடங்கள்.
தூரத்துப் புகை ஊர்கள்…..
மனித இதயம் போல்
கடிந்திருந்தாலும்
அனைத்தையும்
ஏந்தி நிற்கும் மலை.
-o00o-
இவை,
மற்றும்
மலைதனைப் பிளந்து
சாலை செய்த தொழிலாளர்
பொறியாளர்
அனைவருக்கும்
என் வணக்கம்.
-o00o-
பார்வை அமைதியைக்
குலைக்கும்
கவிதையின் சொல்லுருவைத்
தொலைத்தேன்.
-o00o-
நெஞ்சப் பனிமலையுருகி
மொத்தமாய்க் கரைந்து
பெருகிய தன்பருவி.
 

Friday, September 30, 2011


தர்ப்பணம்

வ.ஸ்ரீநிவாசன்                      பிரசுரம் : சொல்வனம் : இதழ் 56 | 19-9-2011
வாத்தியார் வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்ததும் மனசு விச்ராந்தியாக இருப்பதை ஸ்ரீதரன் உணர்ந்தான். மணி ஏழு. மாதம் பிறக்கும்போதும், அமாவாசையன்றும் அவன் அதிகாலையில் எழுந்திருக்கிறான். குளிக்கிறான். நெற்றிக்கு இட்டுக் கொள்கிறான். அம்மா கொடுக்கும் எள், வெற்றிலை பாக்குப் பொட்டலத்தோடு கிளம்பி இதுபோல் வாத்தியார் வீட்டுக்கு சைகிளில் வருகிறான். இன்றைக்கு கல்லூரி இல்லை. அவசரம் இல்லை.
திண்ணை நன்றாக வழவழவென்று இருந்தது. சாய்ந்து உட்கார்ந்து கொண்டான். சிம்மாசனம் மாதிரி சிகப்பு சிமின்டில் திரட்சியாக ஒரு வளைசல். அது திண்டு மாதிரியும் இருந்தது. கையை அதன் மேல் அணைவாகப் போட்டுக் கொண்டு காலை வேளைக் குளத்தையும், அதற்கப்பால் தெரிந்த பார்த்தசாரதி பெருமாள் கோவிலையும் பார்த்தான். அதற்குள்ளாகவே ஜன நடமாட்டம் இருந்தது. நிறையப் பேர் கோவிலுக்குள்ளேயும், கோவிலிலிருந்தும் போய்க்கொண்டு இருந்தார்கள்.
வாத்தியார் வர இன்னும் அரை மணியாகலாம். ஒரு பேட்ச் முடிந்து எல்லோரும் போய் விட்டார்களாம். வாத்தியார் யார் வீட்டுக்கோ போய் இருக்கிறார். அப்பா இருந்தபோது இது மாதிரி இடைவெளிகளில் வீட்டிற்கே வந்து பண்ணி வைப்பார். வாத்தியார் அவன் முதல் பிறந்த நாளின் போதும் வந்தவர். அவன் பிறப்பதற்கு பத்து வருடங்களுக்கு முன்பாகவே அதாவது சுமார் 28 வருடங்களாகவே அவன் வீட்டுக்கு வைதீகக் காரியங்கள் செய்பவராக இருப்பவர். அவன் அத்தை பாஷையில் சத்தான மனுஷர். எழுபது வயதுக்கு மேல் இருக்கும். வெள்ளை முடி படர்ந்த முகம், மார்பு. சிகப்புத் தோல். உள்ளடங்கின, வெளியில் எங்குமே சாப்பிடாத வயிறு. இளையாளோடு இந்த வீட்டில் ஒரு போர்ஷனில் குடியிருக்கிறார்.
உள்ளேயிருந்து வாத்தியாருடைய பெண் வந்தாள். சிகப்பாக, சுருட்டை மயிரோடு இருக்கிற தன்னைப் பார்ப்பதற்குத்தான் வருகிறாளோ என்ற சந்தேகத்தோடு அவன் தீவிரமாக வெளியில் பார்க்க ஆரம்பித்தான். அப்புறம் “ஸ்ப்ச். எனக்கென்ன” என்கிற மாதிரி அவளைப் பார்த்தான். அவள் வாசல் கதவருகில் போய் நின்று கொண்டாள். பதினாறு வயதிருக்கும். அழகாக இருந்தாள். அவள் அவன் பக்கம் திரும்பி வெகு இயல்பாக சாதாரணமாக, “ அடுத்த தெருவுக்குத்தான் போயிருக்கார், நான் வேணும்னா போய் சொல்லிட்டு வரவா?“ என்றாள்.
அவளை நேரே பார்க்காமல் “வேணாமே ! நேரமானா பரவாயில்லை,” என்றான் ஸ்ரீதரன்.
“இன்னிக்கு ஒரு பாட்ச்தான். வெளியிலிருந்து வந்ததும் உடனே பண்ணி வச்சுடுவார்,” என்று தகவல் சொன்னாள். ஸ்ரீதரனுக்கு என்ன சொல்வதென்று புரியவில்லை.
அவள் உள்ளே போகாமல் கதவு அருகிலேயே நின்றாள். தெருவின் இருபுறமும் திரும்பிப் பார்த்தாள். கணுக்கால் அருகில் பாவாடையில் கிழிசல்; அவள் சுதந்திரமாக தன்னிச்சையாக நின்றாள். அவனை அலட்சியப் படுத்துகிற மாதிரியும் இல்லாமல், அவன் இருப்பால் கஷ்டப் படுகிற மாதிரியும் இல்லாமல் அவள் இந்தக் காலை வெய்யில் மாதிரி, அந்த வீட்டு வாசலில் தெருவில் போட்டிருந்த கோலம் மாதிரி சுபாவமாக நின்றாள். ‘கோலம் அவள் போட்டதுதானோ?’ என்று ஸ்ரீதரன் யோசித்தான்.
‘ஏய்!’ ரோட்டில் போன இன்னொரு பெண்ணைக் கூப்பிட்டாள். அவன் ஆவலோடு அவளைத் தாண்டி தன் பார்வையை செலுத்தினான். பார்த்த கணமே ‘எலி மாதிரின்னா இருக்கா’ என்று மனதில் சொல்லிக் கொண்டான்.
வாத்தியாரின் பெண் வாசற்படியில் லாகவமாக இறங்கி ஸ்ரீதரன் நிறுத்தியிருந்த சைக்கிளைத் தாண்டி, அந்த எலி மாதிரி இருந்த பெண்ணின் கையைக் கோர்த்துக் கொண்டு கோவில் நோக்கி நடக்க ஆரம்பித்தாள். தலை மயிரைத் தூக்கிச் செருகி இருந்ததால் கழுத்தின் செழுமை நன்றாகத் தெரிந்தது. அதில் வளையமிட்ட முடிக்கற்றைகள் அதன் அழகை இன்னும் அதிகப் படுத்தின. அவள் போவதையே அவன் பார்த்துக் கொண்டிருந்தான். அவள் நடை அசிங்கமாக இருந்தது. காலை எட்டி எட்டி வைத்தாள். தூரத்தில் போனதும் எதேச்சையாகத் திரும்பிப் பார்த்துவிட்டுப் போனாள். எதேச்சையாகவா என்று ஸ்ரீதரனுக்குத் தோன்றியது.
அவளுடைய மைனஸ் பாயின்டுகள் அவனுக்கு இப்போது தோன்ற ஆரம்பித்தன. அவன் அவளை மறந்துவிட்டு குளத்தைப் பார்த்தான்.
குளத்தின் எதிர்ப்புற படிக்கட்டுகளில் ஒரு இள வயதுப் பெண் நிற்பதை அசுவாரஸ்யமாகப் பார்த்தான். அவள் படியோரமாக நடந்து ஒரு மண்டபத்தின் தூணின் அருகில் நின்றாள். புடவைக் கொசுவத்தை உடம்பிலிருந்து உயர்த்திப் பிடித்துக் கொண்டாள். இவன் புரிந்து கொண்டான். குளத்து நீரின் நினைப்பு குமட்டியது. குளம் மொத்தமுமே மூத்திர ஜலம்தானோ?
அந்தப் பெண் புடவையாலேயே கால்களைத் துடைத்துக் கொண்டாள். அதே குளத்துத் தண்ணீரை எடுத்து முகத்தைக் கழுவிக் கொண்டாள். அப்புறம் புடவைத் தலைப்புக்குள் கைவிட்டு ரவிக்கையை அவிழ்க்கத் துவங்கினாள். காசிப கோத்ர விஜயராகவ சர்மனின் பிள்ளையான ஸ்ரீநிவாச சர்மனின் பிள்ளையான ஸ்ரீதரனுக்குக் குளத்தின் அந்தப் பக்கத்துக்குப் போகவேண்டும் போல் இருந்தது.
“யாருப்பாது? கோபுவா?”
வாத்தியார்.
“இல்லை தாத்தா ! நான்தான் ஸ்ரீதரன்.”
“சீதரனா ! மன்னிச்சுகோடாப்பா. மறந்தே பூட்டேன். வந்து ரொம்ப நாழியாச்சா?”
“இல்லை ! இப்பதான் வந்தேன்.”
“சரி உள்ளே வா!”
மனசே ஆகாமல் உள்ளே போனான்.
“மாடிக்குப் போ ! நான் தாம்பாளம் எடுத்துண்டு வரேன்.”
அவன் மாடிக்குப் போனான். மாடியின் முகப்புப் பகுதியிலிருந்த போர்ஷன் அவன் வீதியைப் பார்க்க வொட்டாமல் தடுத்தது.
அவன் மொட்டை மாடியில் வெறுமே நின்றான். வாத்தியார் மாடியேறி வந்தார். காலைச் சூரியனில் வாத்தியாரின் சிகப்பு நிறம் - தோல் சுருங்கின நிலையிலும் - பிரமாதமாக இருந்தது.
“உக்காந்துக்கோ.”
உட்கார்ந்தான்.
“சட்டையை அவுத்துடு.”
- குளித்துவிட்டு மடி வேஷ்டியைக் கட்டிக்கொண்டு, குருவை சேவித்து. . . .
சட்டையையும் பனியனையும் அவிழ்த்தான். வாட்சைக் கழட்டி சட்டைப் பாக்கட்டில் வைத்தான். தான் சினிமா போகிற மாதிரி வந்ததை நினைத்து வருத்தப் பட்டான். - அப்பா ! மன்னிச்சுக்கோங்கப்பா ! - கையை மாரில் கட்டிக் கொண்டான். தலையைக் குனிந்துகொண்டான்.
வாத்தியார் அவன் காலடியில் இரண்டு தர்ப்பத்தைப் போட்டார். கையில் இருந்த பவித்திரத்தை அவனிடம் கொடுத்தார். முதலில் ஆசமனம் பண்ணச் சொன்னார்.
ஆசமனம். மந்திரமே இவனுக்குத் தெரியாது. கிறிஸ்தவன் மாதிரி புஜங்களையும், முகத்தையும் தொட்டுக் கொண்டன்.
பிராணாயாமம். மந்திரம்? அப்பா பெயரை திரும்பத் திரும்ப மனதுக்குள் சொல்லிக் கொண்டான். இதானா பிராணாயாமம்? அவனுக்குத் திடீரென்று இது ரொம்ப உசத்தி என்று தோன்றியது.
வாத்தியார் மந்திரம் சொன்னார். இவன் தொடர முடியாத வேகத்தில் சொன்னார். படு அவசரம். - இன்னும் எத்தனை வீடுகளுக்குப் போகவேண்டுமோ? வாத்தியார் பெண்ணின் பாவாடை கிழிசல் அவனுக்கு ஞாபகம் வந்தது. - இவன் மந்திரத்தைக் கூடச் சொல்வதாக பாவனை செய்தான். வீட்டிற்கு வந்து அப்பாவுக்கு பண்ணிவைக்கும் போது வாத்தியார் மெதுவாக பவ்யமாக சொல்லுவாரென்பதை நினைத்துக் கொண்டான்.
“ம். ப்ராசீனாவேதம்.”
“ப்ராசீனாவேதம்.”
“கூடச் சொல்றயே ! பூணலை இந்தப் பக்கம் போட்டுக்கோ !”
“ம்.”
“எள் கொண்டு வந்திருக்கியா?”
“சட்டையிலே இருக்கு.”
கஷ்டப் பட்டுக் கொண்டு நுனிவிரலால் சட்டையை நிமிர்த்தி - மடி - பாக்கட்டிலிருந்து அந்தப் பொட்ட்லத்தை எடுத்தான். வெத்தலையெல்லாம் கூட வந்தது.
“சீக்கிரம்ப்பா!”
“இதோ வர்ரேன்.” கடுமை தொனித்தது.
“ஜலத்தை எடுத்துக்கோ !”
அப்புறம் அப்பா,  தாத்தா, கொள்ளுத்தாத்தா, பாட்டி . . . .
கையை நிமிர்த்திண்டு வலது கை கட்டைவிரலை கிண்டி வாய் மாதிரி வச்சுண்டு அதன் வழியாக ஜலத்தை விடறதுக்கு நன்னா இருக்கு. இது மாதிரி பண்ணிண்டே இருக்கலாம் போல இருக்கு. இதே மாதிரி ஹோமத்துல நெய்யை மேலேருந்து - கைய உசத்தி விடு, சுட்டுடப் போறது - விடறதும் ரொம்ப இன்டரஸ்டிங். விட்டுண்டே இருக்கலாம். காடு பத்திண்டு எரியற மாதிரி , ஜ்வலிச்சுண்டு நெருப்பு மேலே கிளம்பும்.
“பாட்டி பேரு என்ன?”
“ம்?”
“அப்பாவோட அம்மா பேரு !”
“கோமளவல்லி.”
“ம். பேரச்சொல்லு.”
சொன்னான்.
மாடியில் இருந்த அந்தப் போர்ஷனிலிருந்து ஒரு பெண் வந்தாள். இவனைப் பார்த்தாள். உதட்டைச் சுழித்து “அப்பா ! வாத்தியார் வந்தாச்சு. யாருக்கோ பண்ணி வச்சுண்டு இருக்கார். குளிக்கப் போங்கோ,” என்றாள்.
இவனைவிட இரண்டு அங்குலமும், இரண்டு வயதும் ஜாஸ்தியாய் இருக்கும்.
இவன் கூச்சப்பட்டான். மேல் கையால் உடம்பை மூட முடியவில்லை. நான் எதுக்கு வெக்கப் படணும்? பொம்ம்னாட்டியா என்ன? ஆனா கையை தாம்பாளத்துங்கிட்டே வச்சுண்டு மேல் கையால் நெஞ்சை மூடிக்கறச்சே மார் பொம்ம்னாட்டி மாதிரிதான் இருக்கு.
சிரித்தான். தீவிரமாக மந்திரம் சொல்ல ஆரம்பித்தான்.
அந்தப் பெண் அங்கே நின்றவாறு அவன் தர்ப்பணம் செய்வதையே பார்த்தாள். அவனுக்கு ரொம்பக் கூச்சமாக இருந்தது. தன் உடம்பின் குறைகள் எல்லாம் அவளுக்குத் தெரிவதாய் உணர்ந்தான். மேலே பார்த்தான்.
வாத்தியார் அவனை எழுந்துகொண்டு தாம்பாளத்தை வலம் வரச் சொன்னார். இவன் எழுந்ததும், நழுவுவது போல் இருந்த வேஷ்டியை இறுகப் பற்றிக் கொண்டான். அவள் உள்ளே போய்விட்டாள்.
“ம். சேவி !”
சேவித்தான்.
“அபிவாதயே !….”
“அபிவாதயே,” - காதுல கையை வச்சுண்டதுக்கப்புறம் சேவிக்கணுமா? சேவிச்சதுக்கப்புறம் காதுல கைய வச்சுக்கணுமா? -
“உக்காந்து ஆசமனம் பண்ணு.”
ஆசமனம். கிறிஸ்தவம். சர்வம் க்ருஷ்ணார்ப்பணம்.
எழுந்து அம்மா கொடுத்த வெத்தலை பாக்கையும், சட்டை பாக்கட்டிலிருந்த ரூபாயையும் வாத்தியாரிடம் கொடுத்து சேவித்தான்.
“இரு வரேன்!” என்று சொல்லிவிட்டு வாத்தியார் கீழே போனார்.
வாட்சைக் கட்டிக் கொண்டான். பனியனை எடுத்துப் போட்டுக் கொண்டான். தலை கீழாகப் போட்டுக் கொண்டதால் அவிழ்த்து மீண்டும் மாட்டிக் கொண்டான். சட்டையைப் போட்டுக் கொண்டான். ஜன்னல் வழியாக அந்தப் போர்ஷனுக்குள் பார்த்தான். அந்தப் பெண் இருக்கும் இடம் தெரியவில்லை.
“சீதரா ! இங்கே வாடாப்பா !” வாத்தியாரின் குரல்.
குளக்கரை ஞாபகம் அப்போதுதான் வந்தது. அவன் விறுவிறுவென்று கீழே போனான்.
வாத்தியார் அவனிடம் நோன்பு சரட்டைக் கொடுத்து “அக்காவாத்துல கொடுத்துடு. நான் அப்பறமா போய் பாக்கறேன்”
“சரி.”
கிளம்பினான்.
“அடுத்ததரம் இனிமே அமாவாசைதான். இதே மாதிரி வந்துடு. ரெண்டு நிமிஷத்துல பண்ணி வச்சுடறேன்.”
“சரி. நான் வரட்டுமா?”
அவன் வேகமாக வெளியே போனான். அந்தப் பெண் ஜாக்கட்டை படிக்கட்டின் மேல் உலர்த்திவிட்டு அருகில் உட்கார்ந்துகொண்டிருந்தாள்.
அவன் சைக்கிளை மிதித்தான். அப்பாவுடைய சைக்கிள்தான். அவன் பிறப்பதற்கெல்லாம் முன்பே வாங்கியது. கனமாக, ஒரு துருவில்லாமல் இருந்தது. முனகாமல், மிருதுவாக ஓடியது. கையிலுள்ள வாட்ச் அப்பாவுடையதுதான். அவர் கல்யாணத்துக்குப் போட்டது. ஜரிகை மற்றும் சாதாரண எட்டு முழ வேஷ்டிகள், சட்டைகள், பான்ட்கள், அவர் காலேஜில் படிக்கையில் போட்டுக் கொண்டவை கூட கிழிசல் இல்லாமல். அப்பா எல்லாவற்றையும் அப்படி பத்திரமாக வைத்துக் கொள்வார். அதில் டென்ஷனும் இருக்காது. தன் உடம்பைத்தான் பார்த்துக் கொள்ள முடியவில்லை. அது அவரோட அப்பா அம்மா கொடுத்தது. சின்ன வயசில் கால் முட்டி வலியோடு ஜுரமும் வந்திருக்கிறது. யாரும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ‘முட்டியை நக்கிய கிருமி இதயத்தை கடித்து’ விடுமாம். பின்னால் ‘ருமாடிசம்’ என்கிற அந்த வியாதி பற்றி எங்கோ படிக்கையில் தெரிந்துகொண்டான்.
சாவதற்கு சில நாட்கள் முன்பு கூட ஆபீஸிலிருந்து திரும்பி வந்து நாற்காலியில் உட்கார்ந்துகொண்ட அப்பா எதற்கோ அவர் பர்ஸை எடுக்கச் சொன்னார். அவன் நல்ல லெதர் வாசனை இப்போதும் அடிக்கும் அந்த பழங்காலத்துப் பர்ஸை எடுத்து அவரிடம் கொடுத்தான். “என் கிட்டே ஏன் கொடுக்கற. இனிமேல் நீதான் பர்ஸ் பணம் எல்லாம் வச்சுக்கணும்; அப்பாவையும், அம்மாவையும் பாத்துக்கணும்.காலேஜ் சேர்ந்தாச்சு,” என்று புன் முறுவல் பூத்தவாறே சொன்னார். அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. வெறுமனே தலையை ஆட்டினான். அந்த முறுவல் அவனுக்கு ஏதாவது கற்றுக் கொடுக்கும் போது மட்டும் விசேஷமாக வரும். சப்தரிஷி கணங்களை பீச்சில் படுத்தவாறே முதன்முறையாகக் காட்டியபோது, டிக்ஷனரி பார்க்க, டைரக்டரி பார்க்க, பாங்க்குக்குப் போக, சிரசாசனம் போட, ஆஃப் ஸ்பின் எது, லெக் ஸ்பின் எது என்று கற்றுக் கொடுத்தபோதெல்லாம் அந்த முறுவல் கூடவே இருக்கும். ப்ளஸ் டூ முடிந்து காலேஜ் சேர்ந்ததும் “ஹௌ டு வின் ஃப்ரெண்ட்ஸ் அண்ட் இன்ஃப்லூயன்ஸ் பீபிள்” புத்தகமும், ‘எ மாரேஜ் மானுவல்” புத்தகமும் வாங்கிக் கொடுத்து ‘படிச்சுக்கோ, உபயோகமா இருக்கும்’ என்றபோதும் இருந்தது. ஹ ! என்ன மாதிரி அப்பா ! இந்த மாதிரி அப்பா கிடைக்க கொடுத்து வச்சிருக்கணும். அவர் போய்ட்டாதான் என்ன? அவர் ப்ரியம்? அவரிடம் நான் வளந்த இந்த பதினெட்டு வருஷங்களின் நினைப்பு? இதுக்கு நான் என்ன செய்வேன்? என்ன செய்ய முடியும்? அட் லீஸ்ட் இனிமேல் தர்ப்பணம் பண்ணாமலாவது இருக்கலாம். -
சைக்கிளை ‘டக்’ கென்று நிறுத்தினான். மனம் தெளிவாக இருந்தது. முகத்தில் ஒரு முறுவல் பூத்தது. இன்றுதான் காலேஜ் இல்லையே, என்ன அவசரம்? மெதுவாக சைக்கிளை தள்ளியவாறு வீடு நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

Saturday, June 11, 2011

மூன்று கவிதைகள்


மூன்று கவிதைகள்

வ.ஸ்ரீநிவாசன் | பிரசுரம் : சொல்வனம் : இதழ் 51 | 10-6-2011
படிக்க ஒரு நூல்
வெட்டி உயிர் போகும்.
விழும் உடல் எழும்.
கட்டிவைத்த ஆசை
காமம் காற்றோடு போகும்.
விடுதலையும் தளையும் என
வேஷம் போடும்.
சூடும் குளிர்ச்சியும்
இடை நிலைகளும்
உணரும் உடம்பு
பேசும் பேச்சைக்
கேட்டால் போதும்.
பிறகெதுவும் வேண்டாம்.
-o00o-
ஒரு பறவை பழம் தின்னும்
எச்சமிடும்; கூடுகட்டும்;
குடும்பம் நடத்தும்.
ஒரு பறவை வெறுமனே
அமர்ந்திருக்கும்.
அது
ஆன்மாவா?
ஆதிக்க சக்தியா?
அலட்சிய புத்தியா?
மரணமா?
இரண்டு உளவா?
தீராத் துயரென்னும்
சந்தர்ப்பத்தில்
உள்ளே எக்காளமிடும்.
அதுவே
அடிவயிற்றிலிருந்து
உருண்டையாய்க் கிளம்பி
அழும் ஒன்றை விழுங்கி
அசைக்க முடியாததெனத் தோன்றி
அழிந்தும் போகும்.
-o00o-
எதுவும் முடிவதில்லை
நேற்று நீ செய்த நன்றை - நான்
நினைத்தே பார்ப்பதில்லை.
வழியெல்லாம் மழை பெய்து வெள்ளம்.
வண்டி ஏதும் தப்புவதில்லை.
இடுப்பில் குழந்தை.
இல் சுகத்தின், துயரின்
இல்வெறுப்பின், அலுப்பின்
இறுதி வடிவம்.
தீபப் பிறை வர்த்தி
ஏற்றப்படும் முன்
இருந்ததா கடவுள்?
இருந்ததா வன்முறை?
இல்லையா கடவுள்?
இல்லையா வன்முறை?
அன்றி
ஏதும் தொடர்வதில்லை.

Sunday, May 29, 2011

மரமும் நிழலும், மற்றும் சில கவிதைகள்


மரமும் நிழலும், மற்றும் சில கவிதைகள்

வ.ஸ்ரீநிவாசன் | பிரசுரம்: சொல்வனம்- இதழ் 49 | 09-05-2011 
ப்பொழுதும் போல்” எதுவும் நடப்பதேயில்லை.
முப்பொழுதும் முகிழ்க்கும் புதிது.
இப் பொழுதுக்கு ஏழு கடல், ஏழு மலை,
ஏழு ஜென்மம் தாண்டி வர வேண்டும்.
0
அது துல்லியமானது.
காத்திரமானது.
பிரபஞ்சத்திலேயே பலமானது.
உண்மை மட்டுமே ஆனது.
அதைப் பிடித்துக் கொண்டு
சொர்க்கத்திற்குப் போய் விடலாம். - ஏன்
மோட்சத்தையே அடைந்து விடலாம்.
அது
இங்கு மட்டுமே இப்போது மட்டுமே.
0
தூய ஊற்றின் துளி ஒன்று
கலைஞனின் உள் பட்டு என்
கண்ணை, காதை, மனதைத் தொட்டு
ஒளியேற்றும். ஒளியை
கைப் பையில், பாக்கட்டில்,
நினைவில், உயிலில்
போட்டு வைக்க முடியாது.
0
எல்லா உணர்ச்சிகளும்
கண்ணீர்களும்
சிரிப்புகளும்
அப்போதைக்கு
மட்டுமே.
moon_tree
ற்று முன் பார்த்த
சந்திரன் - அருகில் ஒரு தாரகை -
அவற்றை
நாலு அடி நடந்த பின்
தீர முழுதாய்ப் பார்த்துவிட வேண்டும் எனத்
திரும்பினால்
தெரிவது அவற்றை மறைக்கும்
மரமும், நிழலும்தான்.
மரமும், நிழலும் மட்டும்
மட்டமா என்ன?
0
திரை கழன்று
தெரியும் காட்சியும்
இன்னொன்றின் திரை.
0
ஸ்பரிசம்
உடல்
மொழியையும்
எண்ணத்தையும்
உதிர்த்து விட்டு
தானே
தொடர்பு கொள்ள
விழைகிறது.
0
கண்ணாடிக்கு நினைவுகளே இல்லை/கிடையாது.
0

தி.ஜானகிராமன் குறித்து அசோகமித்திரனுடன் ஒரு பேட்டி


தி.ஜானகிராமன் குறித்து அசோகமித்திரனுடன் ஒரு பேட்டி

வ.ஸ்ரீநிவாசன் | பிரசுரம்: சொல்வனம் : இதழ் 50 | 24-05-2011 
ami2
தி.ஜானகிராமன் சிறப்பிதழ் பற்றிச் சொல்லி ஏதாவது எழுதித்தர முடியுமா என்று தொலைபேசியில் கேட்ட போது அசோகமித்திரன் தனக்கு இருக்கும் ஆரோக்யக் குறைவில் (கை வலி, மற்றும் கண் தொந்திரவு) அது சாத்யமில்லை என்றார். பேச்சு வாக்கில் இரண்டொரு கருத்துகளைச் சொன்னார். அப்போதுதான் ஒரு பேட்டியே எடுத்துவிடலாமே என்ற எண்ணம் தோன்றியது. நான்கைந்து நாட்களில் மீண்டும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்ட போது நிகழ்ந்த உரையாடலில் பெற்ற பேட்டி இது.
சொல்வனம்: தி.ஜா. பற்றி, அவரது நாவல்கள், சிறுகதை பற்றிச் சொன்னீர்கள். இன்னும் விரிவாக ஒரு பேட்டியாக இதை அமைத்துக் கொள்ளலாமா? உங்களுக்கு அது முடியுமா?
அசோகமித்திரன்: அது கொஞ்சம் கஷ்டம். ஜானகிராமனைப் பற்றி அதற்குள் என்ன சொல்லிவிட முடியும். இப்போ என் கையில் ஒரு நண்பர் அனுப்பிய ‘நதானியல் வெஸ்ட்’ பற்றிய கருத்துரை இருக்கிறது. அவர் 1940களிலேயே இறந்து விட்டார். சினிமாவுக்கெல்லாம் எழுதி இருக்கிறார். இப்போது அவர் எழுதிய இரண்டு நாவல்களை ‘க்ளாஸிக்ஸ்’ என்கிறார்கள். 70 வருடங்களுக்குப் பிறகு. ஜானகிராமன் மறைந்து எத்தனை ஆண்டுகள் ஆகி இருக்கும்?
சொ.வ.: 30 வருடங்கள்.
அ.மி.: இது ரொம்ப சீக்கிரம் இல்லையா? அவர் பற்றிய உணர்ச்சிப் பூர்வமான கணிப்புகள் அடங்கிய பிறகுதான் சொல்ல முடியும்.
சொ.வ.: அது சரி, உங்களுக்கு அவர் எழுத்துகள் எப்போது எப்படி அறிமுகம்?
அ.மி.: என் நண்பர் ராஜாமணிதான் 1950 களில் தி.ஜா.வின் ‘சிகப்பு ரிக்‌ஷா’ வை மிகவும் சிலாகித்து என்னிடம் படிக்கக் கொடுத்தார். என்னமோ எனக்கு அது அவ்வளவாக பிடிக்கவில்லை. ஆனால் அவர் எழுதிய ‘அடுத்த..’ என்கிற கதை ரொம்பப் பிடித்தது. பிறகு இல்லஸ்ட்ரேடட் வீக்லியில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப் பட்டு வந்த கதைகளை அந்த நண்பர் மூலமாக படித்தேன். எனக்குப் பிடித்தது.
சொ.வ.: அவரோடு எப்படி பரிச்சயம்?
அ.மி.: எஸ்.வி.சகஸ்ரநாமம் வீட்டில்தான் அவரைப் பார்த்தேன். அவருடைய ‘நாலு வேலி நிலம்’, ‘வடிவேலு வாத்தியார்’ முதலிய நாடகங்களை சகஸ்ரநாமம்தான் மேடையேற்றினார். நாலு வேலி நிலம் திரைப்படமாகக் கூட வந்தது. அதில் சகஸ்ரநாமத்துக்குப் பெரிய நஷ்டம். நாலு வேலி நிலத்தை சாதாரணமா ஆயிடக் கூடிய கதையை, ரொம்ப நன்னா, தளுக்கா எழுதியிருந்தார். வடிவேலு வாத்தியார் சகஸ்ரநாமத்துக்கு அவ்வளவா பிடிக்கலை. அப்புறம் ‘மோகமுள்’ நாவல் வந்தது. அப்போவெல்லாம் ஆயிரத்து நூறு காப்பிகள் போடுவார்கள். மொத்தமா ஸ்டாக் பண்ணி வைப்பார்கள். தயாரான புத்தகங்களை விற்க முடியாதபடி ஒரு சிக்கல் வந்தது. அப்போ என்னிடம் தி.ஜா. “இது கொஞ்சம் ‘unwieldy’ யா இருக்கு, ‘streamline’ பண்ணு,”ன்னார். நானும் அதை எடுத்துக் கொண்டேன். ஆனால் அதை செய்து முடிக்க முடியலை. ஒண்ணு அவர் வயசிலே பெரியவர். அப்புறம் ஒரு அட்மைரரால அந்த வேலையைச் செய்ய முடியாது. ஆனா அந்த மாதி எடிட் டெல்லாம் பண்ணாமலே அந்த நாவல் வெளி வந்து பேரும் புகழும் பெற்றது. சில இடங்கள் அதுலெ பிரமாதமா வந்திருக்கும்.
சொ.வ.: மோகமுள், மற்ற நாவல்கள் பற்றி என்ன நினைக்கிறீங்க?
அ.மி.: மோகமுள்ளில் யமுனாவைப் பெண் பார்க்க வர்ர இடம் பிரமாதமா எழுதியிருப்பார். அதே மாதிரி ‘க்ளைமாக்ஸ்’ஸும் ரொம்ப நன்னா இருக்கும். சில இடங்கள் சரியா வந்திருக்காது. அவர் நாவல்களில் இந்த ‘inconsistencies’ இருந்தது. பின்னாடி அம்மா வந்தாள் வரச்சே ஃபார்ம் அவருக்கு கை வந்துடுத்து. ஆனா அந்த நாவல்லே எல்லாருக்கும், அவனோட அப்பாவுக்கு, அந்தப் பெண்ணுக்கு (இந்துவுக்கு), எல்லாருக்கும் தெரிஞ்ச விஷயம் அவனுக்கு மாத்திரம் தெரிந்திருக்காது. அந்த மாதிரி வரும். பின்னாடி மரப்பசு, நளபாகமெல்லாம் சரியா வரல. நளபாகத்துலேயாவது சில இடங்கள் நன்னா இருக்கும். ரெண்டு நாவலும் கணையாழிலதான் வந்தது. மரப்பசுவைப் படித்து விட்டு நா.மகாலிங்கம் கணையாழி சந்தாவையே கேன்சல் செய்துவிட்டார். அவரது புகழ் பெற்ற நாவல்களை விட உயிர்த்தேன், மலர் மஞ்சம், செம்பருத்தியெல்லாம் நன்னாருக்கும்.
சொ.வ.: அவர் சிறுகதைகள்?
thija-logo4அ.மி.: “Essentially a far better short story writer than a novelist.” நிறைய கதைகள் நன்னாருக்கும். ஜானகிராமனுடைய நாவல்களை விட சிறுகதைகள்தான் மிகவும் சிறப்பானவை என்பது என் அபிப்ராயம். அவர் சிறுகதைகளில் பெரிய master. தமிழின் மிகச்சிறப்பான சிறுகதைகளை எழுதியிருக்கிறார். பாயசம், கண்டாமணி ஆகியவை மிகவும் சிறந்தவை. ஜானகிராமன் கதைகள் கருணையை மட்டுமே சொல்பவை என்று பொதுமைப் படுத்திவிட்டார்கள். ஜானகிராமனின் எத்தனையோ சிறுகதைகளில் - பாயசம் கதையில் வரும் பெரியவரைப் போல - மனித மனத்தின் வேறு குணங்களையும் பதிவு செய்திருக்கார். ‘அடுத்த…’ என்றொரு சிறுகதை பற்றி சொன்னேனே. அது ரொம்பவும் ஏழ்மையில் கஷ்டப்படும் ஒரு குடும்பத்தைப் பத்தின கதை. பல குழந்தைகள் ஏற்கனவே. பிரசவ வேதனையில் அந்தப் பெண் துடிச்சிண்டிருப்பா. ஆம்புலன்ஸுக்குச் சொல்லி அது வந்து சேர தாமதமாயிடும். ஆம்புலன்ஸ் வருவதற்குள் வீட்டிலேயே பிரசவமாயிடும். அப்போ அந்தப் பெண்ணோட கணவன் சொல்வான் “அடுத்த முறை ஆம்புலன்ஸுக்குக் கொஞ்சம் சீக்கிரமே சொல்லி வச்சுடணும்.” ஏழ்மையை ரொமாண்டிசைஸ் செய்யாமலும், இழிவு செய்யாமலும் - அவங்களோட சந்தோஷம், துக்கம் எல்லாவற்றையும் உள்ளது உள்ளபடி ஜானகிராமனால பதிவு செய்ய முடிஞ்சுது.
சொ.வ.: உங்கள் கதைகளை அப்போதே அவர் படிச்சிருந்தாரா?
அ.மி.: சொல்லப் போனால் அவர் என் கதைகள் எல்லவற்றையுமே அப்போது படிச்சிருந்தார். ‘கலைமகள்’லெ எழுதறதுல அதுதான் அட்வான்டேஜ். அவர் கலைமகளை விடாம படிச்சிருந்தார். ஒரு வாட்டி நான் மதிய உணவுக்குப் பின் அலுவலகத்துக்குப் போயிண்டிருந்தேன். ஆள்வார்பெட் சந்திப்பில் அப்போ அங்கே அவரை எதேச்சையாக சந்தித்தேன். நல்ல வெயில். ஆனால் ரொம்ப நேரம் நின்னு என் கதைகளை ரொம்ப சிலாகிச்சுப் பேசினார்.
சொ.வ.: ஓய்வுக்குப் பின் அவர் சென்னை வந்த பிறகு தொடர்பு இருந்ததா?
அ.மி.: இருந்தது.
சொ.வ.: அவர் கணையாழி எடிடராக இருந்தார் இல்லையா? சேர்ந்து பணியாற்றி இருக்கிரீர்களா?
அ.மி.: அவர் ரிடயர் ஆன பின்னால்தான் கணையாழி எடிடராக இருந்தார். அப்போ கூட கணையாழி ஆபீஸுக்கு எப்பவாவதுதான் வருவார். அவருக்கு ‘மேனுஸ்க்ரிப்ட்’ களைப் படிக்கப் பிடிக்காது. நான் எல்லா மேனுஸ்க்ரிப்ட்களையும் படிப்பேன். நானும் 1983ல் கணையாழியை விட்டு வெளியேறி விட்டேன்.
சொ.வ.: சங்கீதம் பற்றி பேசுவாரா?
அ.மி.: பேசவே மாட்டார். ஒருவேளை எனக்கு சங்கீதம் தெரியாது என்பது அவருடைய அபிப்பிராயமா இருந்திருக்கலாம். மதுரை மணி ஐயர் அவருக்கும் சிட்டி சுந்தரராஜனுக்கும் ஃபேவரைட் என்பது மட்டும் தெரியும்.
சொ.வ.: பிற இலக்கிய நண்பர்கள் பற்றி..
அ.மி.: அவருக்கு ‘ஸ்ட்ராங் லைக்ஸ் அண்ட் டிஸ்லைக்ஸ்’ இருந்தது. அது எழுத்துகளை எடை போடுவதையும் ‘இன்ஃப்ளூயன்ஸ்’ பண்ணித்து. தீபத்தில் எழுதச் சொல்லி பார்த்தசாரதியும், நானும் நிறையக் கேட்டோம். அவர் எழுதவில்லை. க.நா.சு வைப் பிடிக்காது. ‘ஆல்பெர்டோ மொராவியா’ ரொம்ப ஹாட்டா இருந்த நேரம். ‘கன்ஃப்ர்மிஸ்ட்’ னு நினைக்கிறேன், அவருடையது, அது எனக்குப் பிடிக்கும். தி.ஜா.விடம் கேட்ட போது ‘எனக்கு சப்ஜெக்டிவ் ரைட்டிங் பிடிக்காது,’ என்றார். இத்தனைக்கும் மொராவியா சப்ஜெக்டிவ் ரைட்டரே கிடையாது. எம்.வி.வி அவருக்கு ரொம்ப நெருக்கம். ஆனால் ரெண்டு பேரும் வித்யாசமானவங்க. எம்.வி.வி.க்கு நிறைய ‘ஆஸ்பிரேஷன்’கள் இருந்தன. தி.ஜா.வுக்கு அதெல்லாம் கிடையாது. எம்.வி.வி.’நான் தான்யா மௌனி படத்தை முதலில் போஸ்டரில் போட்டேன்’ என்றெல்லாம் சொல்வார். எம்.வி.வி.பற்றிய செமினார் ஒன்றில் நான் பேசியபோது எம்.வி.வி. கண் கலங்கி விட்டார்.
சொ.வ.: உங்கள் கதைகள் பற்றி குறிப்பா ஏதாவது சொல்லியிருக்காரா?
அ.மி.: ‘விபத்து’ ‘நாடகத்தின் முடிவு’ இல்லஸ்ட்ரேடட் வீக்லியில் வந்த ‘ பாஸ்போர்ட் சைஸ் ஃபோட்டோ’ வெல்லாம் அவருக்கு மிகவும் பிடித்திருந்தது.
சொ.வ.: ஓய்வு பெற்றதும் சென்னையில் ஏன் செட்டில் ஆனார்?
அ.மி.: அவருக்கு ஹவுசிங் போர்ட் ஃப்ளாட் ஒண்ணு அலாட் ஆகி இருந்தது. அப்போவெல்லாம் ஃப்ளாட்டுக்கு அவ்வளவு டிமாண்ட் இல்லை. திருவான்மியூரில் அவர் ஃப்ளாட் இருந்தது. அங்கு வந்து இருந்தார்.
சொ.வ.: பொருளாதார ரீதியாக சௌகர்யமானவர்தானே?
அ.மி.: ரிடயர் ஆயிட்டார். ரொம்ப சௌகர்யம் என்றெல்லாம் சொல்ல முடியாது. கடைசி மூன்று, நாலு வருஷம் எழுதவேயில்லை.
சொ.வ.: இன்றைய காலகட்டத்துல தி.ஜா.வின் இடம் என்னன்னு நினைக்கிறீங்க.
அ.மி.: அதான் சொன்னேனே ‘இட் இஸ் டூ ஏர்லி’. அவரை ‘அப்ஜெக்டிவ்’ வா பார்க்க நாளாகும். அவரை இப்போ ‘டிஸ்ஸ்க்ட்’ பண்ணக் கூடாது. இப்போ எல்லாம் தி.ஜா. தி.ஜா. ன்னு சொல்லலாம். ஒரு பத்து வருஷத்துலே எல்லாம் மாறிப் போயிடலாம். அவரை மறந்து போயிடலாம். கா.ந.சு. செல்லப்பா, எம்.வி.வி. எல்லோரையும்தான். எனக்கும் அதுதான்.
பேட்டி நாள்: 18-5-2011.

Friday, January 21, 2011

A Buddha Statue seen in a Buddhist Temple in Singapore


Monday, January 17, 2011

நாஞ்சில் நாடன் - ஒரு கனிந்த தமிழ் இதயம்

வ.ஸ்ரீநிவாசன் : பிரசுரம் : சொல்வனம் : இதழ் 42 : 16-01-2011 

வாசிப்பின் சுகம் ஒருவரை தொடர்ந்து வாசிக்க வைக்கிறது. அதுதான் அடிப்படை. விமர்சனம் பண்ண வேண்டிய நிர்பந்தமும், போக்குகளைப் பற்றிய தகவல் சுமைகளும் அதிருஷ்டசாலி வாசகனை பீடித்து இந்த சுகத்தை வதம் செய்து விடுவதில்லை.
அதே போல் கலையானுபவம் கலைஞனுக்கும், ரசிகனுக்கும் இடையே ஆன பிரத்யேக உறவு.
சுகமும், பிரத்யேக உறவும், கலைஞனின், வாசகனின் குறிப்பாக வாழ்க்கையின் புரிதலை தெளிவாக்கி விரிவாக்குகின்றன.
கலைஞன் தான் காணும் ஒளியால் நிரம்பி வழிகையிலேயே தாஸ்தாயவ்ஸ்கியும், காஃப்காவும், பாரதியும், புதுமைப் பித்தனும் கிடைக்கிறார்கள். நாஞ்சில் நாடனும் அவ்வழியில் வந்தவர்தான்.
dsc_5439-1வெகுசனப் பத்ரிகைகளும்,‘இஸம்’ ‘இனம்’ சார்ந்த பத்ரிகைகளும் அதிகமாயுள்ள சூழலில் ஒரு வாசகன் சாதாரணமாகக் காண்பது வெற்றுச் சந்தடி, இலட்சிய கோஷம், பொழுது போக்கு நீர்மை, காழ்ப்பு. எழுதுபவர்களிலோ பலரும் எங்கோ எதிலோ தேங்கிப் போனவர்கள். இது வசை அல்ல. இத்தகைய சூழலில் ஊற்றுக் கண்களையும், வரத்து வாய்க்கால்களையும் மூடி விடாத, புண்ணிய நதியாகும் நோக்கமுமற்று நமது அன்றாட வாழ்வின் அங்கமான சாமான்ய ஆறாக நாஞ்சில் நாடன் ஓடுகிறார்.
சுமைகளும், பழைய குப்பைகளும், பாசியும் அற்ற இந்த ஆறு, தமிழர்களின், அதன் மூலம் மனிதர்களின் இயல்பை, முரண்பாடுகளை, பஞ்சமா பாதகங்களை அஞ்சாது செய்யக் கூடிய சாத்தியக் கூறுகளை, கருணையின் சாயையை, தூய்மையை, சர்வ சாதாரணமாக, ‘அனுபவங்களை முயற்சி செய்து பெற்ற செயற்கைத் தகவல்கள்’ இன்றி அனாயாசமாக, ஆனால் மிகப் பெரிய வேட்கையோடு காட்டிச் செல்கிறது.
இவரோடு எழுத வந்த பலர் தீவிரமாக இயங்குவதை நிறுத்தி பல காலம் ஆகி விட்டது. இவர் இன்னமும் தன் வாசகர் வட்டமும், அவர்கள் மேல் தன் தாக்கமும் அதிகரித்தபடி இயங்கிக் கொண்டிருக்கிறார். இதற்கு முக்கிய காரணம் இவர் எந்தக் கொட்டகையிலும், சாதனையிலும் ஓய்வெடுத்துக் கொள்ள நினைத்து உறங்கிப் போய் விடவில்லை. வாழ்வின் சவால்களும், சண்டைகளும், தாக்குதல்களும் பேனாவைப் பிடுங்கி எறியவும் இவர் விடவில்லை. கதவு, கூரை, சன்னல்கள் அற்ற இடத்தில் உயிர்ப்புடன் இருப்பதனாலேயே இவருக்கு இது சாத்தியமாகி இருக்கிறது.
இவர் பெரிதும் மதிக்கும் முன்னோடிகளில் ஒருவரான நகுலன் சொன்ன ‘When you hate some thing you cannot understand it’ என்கிற சொற்கள் இவர் வாழ்நாள் முழுவதும் துணை வரும் ஜீவ வாக்யங்களில் ஒன்றென்பதால் எதன் மீதும் துவேஷமற்று எதையும் புரிந்து கொள்ள இவரால் முடிகிறது. இலக்கியம் வாழ்க்கையின் புரிதலுக்கான ஒரு சாதனம் என்றாகையில் அந்த சாதனத்தின் சாதகர்களில் இதன் காரணமாகவே இவர் மிக முக்கியமானவராகிறர்.
நாஞ்சில் நாடன் அவர்களின் எழுத்தில் உடனே தென்படுபவை: வாழ்க்கையைப் பார்க்கும் பார்வையின் முன் முடிவுகள் அற்ற கூர்மை, கொள்கலனின் கொள்ளளவின் பிரம்மாண்டம், எங்கும் தங்காது எந்த முடிவுப் புதரிலும் சிக்காது இயங்கும் நேர்மை, அனாதைகள், அபலைகளின் மேல் (பிரச்சார, தன்னை ‘இன்னார்’ என்று வெளி உலகுக்கு பறைசாற்ற காட்டிக் கொள்கிற நீச புத்தி அற்ற) உண்மையாக உள்ள அக்கறை, சுவாரஸ்யம், பாதகம் செய்பவரைக் கண்டு அஞ்சாத எள்ளல், எல்லாவற்றுக்கும் மேல் வளமும், எளிமையும், குளிர்ச்சியும், செழுமையும் மிளிரும் தமிழ்.
காலங்கள் தோறும் இவர் கற்றுக் கொண்டேயிருந்திருக்கிறார். இன்னமும் கற்கிறார். ஒரு தமிழ்ப் பேராசிரியன் செய்ய வேண்டிய வேலையை தன் சொந்தப் பணத்தைச் செலவழித்து செய்து கொண்டேயிருக்கிறார். தமிழில் வெளிவரும் முக்கியமான புத்தகங்கள் அனைத்தையும் காசு கொடுத்து வாங்கிப் படிப்பவர். நான் கூட வேடிக்கையாகக் கேட்பேன். “பெண்டிங் விழுந்த அரியர்ஸ்ஸை எல்லாம் க்ளியர் பண்ணிட்டீங்களா” என்று. “இன்னும் மூன்று புத்தகங்கள் இருக்கு. இந்த வாரம் படிச்சுடுவேன்” என்பார்.
இதற்கிடையில் சங்கத் தமிழ், அகராதிகள், கம்பன், ஆழ்வார்கள், தேவாரம், ஔவை, என்று கலந்து பழக இவருக்கு எப்படி நேரம் இருக்கிறது என்பது இவர் இலக்கிய தாகம் எத்தகையது என்பதற்கு சான்று.
இவ்வளவு படித்தும் அறிவின் சுமை இவரிடம் இல்லை. அதனால் வாசகனுக்கு அயற்சியும் இல்லை. இவர் தனிப் பேச்சில் கூட யாருக்கும் வகுப்பு எடுப்பதோ உபதேசம் செய்வதோ இல்லை. ஆறு நாவல்கள், 110 சிறுகதைகள், ஏராளமான கட்டுரைகள், இரண்டு கவிதைத் தொகுதிகள், எண்ணற்ற பேட்டிகள், முன்னுரைகள், மதிப்புரைகள் எழுதியுள்ள இவரிடம் ஒரு புது எழுத்தாளர் சுலபமாகத் தன் கருத்துகளைக் கூற முடியும். சில சமயம் அவர்கள் மட்டுமே கூட பேசி, இவர் கேட்டுக் கொண்டிருப்பதும் உண்டு.
அதே போல் இவரை முகஸ்துதியாக யாரும் புகழவும் முடியாது. ‘அந்தக் கதை ப்ரமாதம், எனக்கு ரொம்பப் பிடித்தது’ என்று யாராவது ஆரம்பிக்கையில், பேச்சை வேறெங்கோ மாற்றி எடுத்துச் சென்று விடுவார். அதே சமயம் அவர் கதைகளை ஆழமாக விவாதிக்கும் நல்வாய்ப்பும் என் போன்ற சிலருக்குக் கிடைத்திருக்கிறது.
அனைவருக்கும் நண்பர். எல்லா கூடாரங்களிலும் இவருக்கு நண்பர்கள் உண்டு. எனினும் தன் கருத்துகளைக் கூற அஞ்சாதவர். இவரது துவேஷமற்ற போக்கும் நேர்மையுமே இவர் பெயரை எவர் ஜாபிதாவிலும் இடம் பெற வைத்து விடுகிறது.
தன் மனதைப் புண் படுத்தியவர்களிடம் கூட இவர் சாதாரணமாக பகைமை பாராட்டுவதில்லை. ‘அவன் இப்பிடி செஞ்சுட்டான். இனி அவனுக்கு நான் எதையும் அனுப்பப் போறதில்லை’ என்று சொல்லிக் கொண்டிருக்கையிலேயே அந்த நபர் ஃபோனில் வந்தால், ‘என்ன. . . . நல்லாருக்கீங்களா’ என்று ஆத்மார்த்தமாகக் கேட்பார்.
nanjil3
அறிவு, சாமர்த்தியமாக மாறாத எல்லையில் இருப்பவர். எதிர் கருத்துகளைக் கூறுபவர்களிடமும் பொறுமையாக இருக்கும் பக்குவம் பெற்றவர். குடும்பம், நண்பர்கள் என பேச, அன்பு செலுத்த 24 மணி நேரமும் இவருக்கு ஆட்கள் இருந்து கொண்டே இருக்கிறார்கள். ஆயினும் வாழ்வில் காட்டும் அன்பெனும் அமுதைப் போன்றே ஆலகாலத்தையும் எழுத்தில் மட்டும் கொண்டு வருகிறார் நிதர்சன வாழ்வில் அது எங்கும் நிறைந்திருப்பதை உணர்ந்தவர் என்பதால்.
புற உலகு, அக உலகு என்று இரண்டு இருப்பது போல் தோன்றுகிறது. அதே போல் மூளை, இதயம் என்கிற இரண்டு இயக்கங்களும் மனதில் இயங்குகிற மாதிரி தோன்றுகிறது. Subjectivity - objectivity, இடது மூளை - வலது மூளை, கலை - அறிவியல் என்றெல்லாம் இவை பிளவு பட்டு நிற்பது போன்ற தோற்றங்களும் உள்ளன. இவ்விரட்டைகளை புராண அன்னத்தைப் போல் பால், நீர் என்று பிரிப்பது என்பது எல்லாக் காலங்களிலும் இயலாது.
புற உலக நிகழ்வுகளை இதயம் கொண்டு ‘சப்ஜெக்டிவ்’ வாக எழுதுவதோ, அக உலக இயக்கங்களை ‘அப்ஜெக்டிவ்’ வாக எழுதுவதோ உலக இலக்கியங்களில் அரிதில்லை. எல்லாவித ‘பர்முடேஷன் காம்பினேஷன்’களிலும் இதைப் பார்க்கலாம்.
புதுமைப் பித்தனும், மௌனியும் வேறு மாதிரி என்று தெரிந்தாலும் இருவரும் மிகுந்த தெளிவுடன் சிலவற்றை ‘இன்டலெக்ட்’ டை உபயோகித்து எழுதியவர்களே! சிலகதைகளில் வேண்டுமென்றாவது ஈரம் கொஞ்சம் கம்மியாக இருப்பதைப் படிக்கும் போதே உணரலாம்.
‘இதயம், இதயம்’ என்ற தம்பட்ட எழுத்துகளுக்குப் பஞ்சம் இல்லை. இதய நிகழ்வுகளை இதயம் மூலம் கனிவோடு அணுகியவர் தி.ஜானகிராமன். இவர் போன்றே புறப்பட்ட நகலெழுத்துகளினூடே ஆயாசமடைய வைக்கும் அபரிமித நெகிழ்ச்சிகளும் பல உண்டு.
பெருங்கலை என்பது இதயமும் மூளையும் வலது இடது பேதமின்றி ‘சப்ஜெக்டிவ்’ விஷயங்களைப் பற்றிக் கூட ‘அப்ஜெக்டிவ்’ வாக எழுதும் போது நேர்கிறது. கலைஞன் வாழ்வின் தரிசனத்தில் லயித்து கரைந்த பின்னரே வெளிவந்து தன் அறிவால் மொழியால் அதை நம்மிடம் தொடர்பு கொண்டு கூறுகிறான். இந்த சரிவிகிதக் கலப்பில் இதயம் உணர்வதை மூளை சரியாக சொல்கையில் பெருங்கலை தோன்றி விடுகிறது.
போர்ஹே சற்று தூக்கலான இன்டலெக்டின் வெளிப்பாடு என்றால் காஃப்கா சரியான இதய மூளை கலப்பாக, அதாவது முழுமையான பார்வை, கூர்மை, வெளிப்பாடு சேர்ந்து ‘கலை’ செய்தவராகவும் தெரிகிறார். தாஸ்தாயவ்ஸ்கியும், டால்ஸ்டாயும் அப்படியே. லாவ்ட்சு சொல்லும் “clear heads and calm minds’. இவர்கள் மிகக் களேபரத்தில் இருக்கும் வாழ்க்கையையும் அப்படியே எழுத்தினால் ‘காம் மைண்ட்’டுடன், அதாவது திரிக்காத மனதினால் வாசகனுக்குக் கடத்துபவர்கள்.
புற உலகு பற்றிய இதயத்தின் வெளிப்பாடாக பழந்தமிழ் இலக்கியம் பெரும்பாலும் இருக்கிறது. மன நெகிழ்வின் உச்சமாக அதன் பின் வந்த காவியங்களும், பக்தியும். இவை அனைத்திலும் ஊறியது நாஞ்சில் நாடனின் மனம். புற உலக வாழ்க்கையை வறட்டு, தத்துவ, கோட்பாடு, தர்க்க நோக்கின்றி இதயத்தால் பார்த்துணர்ந்து எழுதியவை இவர் எழுத்துகள்.
இதயத்தில் ‘காலம் மீறி இருந்து சொதசொதத்துப் போகாமல்’ எழுதுவதே இவர் கலை வெளிப்பாடு. அதற்கு கறாரான தர்க்கத்தின் மீதமைந்த கணிதத்தில் முதுகலைப் பட்டப் படிப்பு பெற்றவர் என்பதும் ஒரு முக்கிய காரணமாயிருக்கலாம். இன்னொரு முக்கிய காரணம் பழந்தமிழ், பக்தித் தமிழ், காவியத்தமிழ் மட்டுமின்றி பாரதி துவங்கி, இன்று எழுதும் எவ்வித பின்புலமோ, பிரபலமோ அற்றவரின் எழுத்துகள் வரை அயராது ஆர்வத்துடன் படிப்பது. மேலும் உலக இலக்கியங்களோடான பரிச்சயம்.
மற்றொன்று இவரது தாட்சண்யம். ஈழத் தமிழருக்காக, ஒரு பைசா பிரதியுபகாரமாகப் பெறாமல், உண்மையிலேயே துக்கமுற்றுத் துடித்தவர். முற்றிலும் எதிரிடையான கருத்துகளைச் சொல்பவரிடத்தும் முகம் சுளிக்காது கேட்பவர். தன் அபிப்பிராயங்களைக் கட்டித் தொங்காமல் இருப்பது மனிதரிடையே மிக அரிதாக காணப் படும் அருங்குணம். அதுவும் இவருக்கு சாத்தியமாகி இருக்கிறது.
கலை, நீதியுனர்வோடு இரண்டறக் கலந்தது. ‘வெள்ளாளர் வாழ்க்கை’யில் ‘காலம் நிகழ்த்திய மாற்றங்களை’ நூலாக எழுதிய இவரை தற்கால தமிழ் வழக்கப் படி ‘வெள்ளாளர் அடைப்புக் குறிகளு’க்குள் அடைக்க முடியாது. இவரது எழுத்துகளைப் படித்தவருக்கு இது தெரியும். லௌகீக வாழ்விலும் வெள்ளாளர்கள் அவர்கள் இனத்து அமைச்சருக்கும் சேர்த்து இவரை கௌரவிக்க அழைத்தபோது அந்த விழாவையே ‘வர முடியாது’ என்று தவிர்த்தவர்.
வெள்ளாளர், தமிழர் என்றில்லாமல் மனிதருக்குப் பொதுவான மனம் இவரது எழுதும் மனம். அதனால்தான் வட இந்தியாவிலிருந்து “காஞ்ச ரொட்டியைத் தின்னுக்கிட்டு ஊருலே கெடக்காம , ஊரை நாறடிக்க வந்திருப்பதாக” வசைபாடப்படும் க்ஷெத்ராடனம் வரும் வட இந்திய ஏழை யாத்ரீகர்களுக்காக “மேற்கில் மேலாங்கோடும், கிழக்கில் முப்பந்தலும் தாண்டியிராத, தெற்கே கன்யாகுமரி கடலையும், வடக்கே காளிகேசம் மலைகளையும் தாண்டவே முடியாத” வெற்றுக் காழ்ப்பினருக்கு எதிராக எழுத முடிகிறது.
கலை உள்ளம் என்பது எப்போதுமே ‘anti-establishment’ டாகத்தான் இருக்கும். வெற்றி தோல்விகளிலோ, சாச்வதத்தைப் பற்றியோ அதற்குக் கவலை இல்லை. இது ஒரு மாற்றமுடியாத சூத்திரம். அவ்வுள்ளம் எழுதவோ, பிற கலைகளில் ஈடுபடவோ கூட வேண்டாம். மகாத்மா காந்தியிடமும், ராஜாஜியிடமும், பாரதியிடமும், ஜெயகாந்தனிடமும், ஜெயமோகனிடமும் இன்ன பிறரிடமும் நாம் இதைத்தான் கண்டோம்; காண்கிறோம். (அவ்வுள்ளம் சகட வாழ்க்கையினால் சின்னாப் பின்னமாக்கப் பட்டோ, சாமர்த்தியத்தாலோ எஸ்டாப்ளிஷ்மென்டுக்கு இணக்கமாகப் போனால் அதில் கலை செத்து விடும் என்பதும் கண்கூடு) அந்நியர் ஆட்சிக்கு இணங்கிப் போவதே அனுகூலம் என்ற கால கட்டத்தில் அதை எதிர்ப்பது, நாத்திகப் போர்வையில் துவேஷம் வளர்ப்பதில் உள்ள அநீதியை முழுமூச்சாக எதிர்ப்பது, அரசு கையில் இருப்பதால், அரசியல் கூட்டம் பின்னால் இருப்பதால் எல்லா புகழும் எனக்கே என்பவரின் பொய்யை எதிர்ப்பது எல்லாமே ‘anti-establishment’ உணர்வுகள்தான். தராசு அநியாயமாக தாழ்கையில் எதிர்த்தட்டில் அமர்ந்து சரி செய்பவன் கலைஞன். அதைத் தொடர்ந்து செய்து வருபவர் நாஞ்சில் நாடன்.
உயர்கலையும் இலக்கியமும் ஒரு மொழியைச் சேர்ந்ததாய் இருந்தாலும், ஒரு பிரதேசத்தில் உருவானாலும் அவை உலகளாவியவை. உயிர்கள் அனைத்தையும் தழுவியவை. அதனால்தான் நாஞ்சில் நாடன் கதைகளில், இரையுண்டதாலோ கர்ப்பிணியாயிருப்பதாலோ நிறைந்த வயிறோடு சாலையைக் கடந்து செல்லும் பாம்புக்காக வண்டியை நிறுத்திய பேருந்து ஓட்டுநர் “போ மோளே பெட்டென்னு’ என்று கனிவு கசிய கூறி காக்கிறார். எங்கிருந்தோ வரும் பாபுராவும், யுகங்களாய்த் தொடரும் மனித குலத்தின் பசியின் வடிவமாய் நாத்ரேயும் சந்திக்கும் அந்த திரிவேணி சங்கமத்தில் கண்ணுக்குத் தெரியாமல் அனைத்துக்கும் ஆதாரமாக ‘தயை’ சரஸ்வதியாக ஓடுகிறது. அதனால்தான் ‘யாம் உண்பேம்’ என்பது தகப்பன் சாமியின் உபதேசம் போல், மிச்ச வாழ்க்கைக்குமான மந்திரம் போல் பாபுராவின் காதில் ஒலிக்கிறது. நம் காதிலும்.