FUTURE IS NOW - J Krishnamurti.

பிறப்பு, இறப்பு என்பது உண்மையே இல்லை. அத்தகைய பொய்யான தோற்றத்தை நமது மனமே உருவாக்கிக் கொள்கிறது. மனம் தனக்கென்று ஒரு உடலை உருவாக்கிக் கொள்கிறது. அதைக் கனவு மழையில் நனைத்துத் துன்பப் படுத்துகிறது. - ரமண மகர்ஷி.

Search This Blog

Saturday, December 25, 2010

காஞ்சனை - ஓர் அனுபவம்

காஞ்சனை - ஓர் அனுபவம்

  பிரசுரம்:சொல்வனம் - இதழ் 40 | 17-12-2010
 
புதுமைப்பித்தன் எழுதிய காஞ்சனை சிறுகதை அக்காலத்துக்கே உரித்தான, வாழ்வின் பிரச்னைகளையும், வறுமையையும் மீறிய விச்ராந்தியான தருணங்களில் ஆரம்பிக்கும் கதை. இத்தகு தருணங்களை சத்யஜித் ராயின்படங்களில், தி.ஜா., கதைகளில் காண்கிறோம். படத்தைப் பார்க்கையில், கதைகளைப் படிக்கையில் ஒரு பறவையின் அழைப்பை, தூரத்து ஒலியைத் துல்லியமாகக் கேட்க முடியும். அதுதான் அடிப்படை. இயல்பு. சகஜம். அதன்மேல் இயக்கங்களும், இயக்கம் பற்றிய மாசு படிந்த கவனிப்புகளும், நினைவுப் பதிப்புகளும், அவற்றில் படியும் தூசிகளும் நிகழ்கின்றன. அத்தூசிகளோடு கற்பனை குதிரையும் எழும்பிப் பறக்கின்றது. ‘காஞ்சனை அத்தகு தருணங்கள் மனதளவில் தவிடு பொடியாவதில், வேண்டுமென்றே தவிடு பொடி ஆக்கப் படுவதில் துவங்குகின்றது.

(’காஞ்சனை’யைப் படிக்கையில் ஞாபகம்வைத்துக் கொள்கிறேன்: ‘ புதுமைப்பித்தனின் கதைகளில் மூட்டைப்பூச்சிகள் ‘அபிவாதயே’ சொல்லும்.)

இத்தகைய விச்ரந்தியான தருணங்களில் (கஷ்டமும் இல்லை, அளவுக்கு மிஞ்சிய துன்பமும் இல்லை; புகையிலையைக் கூட கடனெழவே என்றோ, பழக்க தோஷத்தாலோ, அனிச்சையாகவோஅன்றி அனுபவித்து பவித்திரமாக போட்டுக் கொள்ள முடிகிறது) மனதால் சும்மா இருக்க முடியுமா? அதுவும் ஒரு இரண்டாவது பிரம்மாவுடைய மனதால்? Devil’s workshop?

இது எழுத்தாளனின் சரடு - கயிறு - ஆனால் அரவு. இது வாசகனுக்குவிடப்படும் சரடு மட்டுமல்ல. தனக்குமேயானது. முதலில் தான் அனுபவிக்க. இந்த ஒற்றைப் பரிமாண வாழ்வின் சலிப்பை வரவொட்டாமல் அதுபற்றிய குறிப்பைக் கூட அண்டவிடாமல், தன்னை அனுபவிக்க வைக்க விடப்படும் சரடு. அதைத்தான் நாமும் சேர்ந்து அனுபவிக்கிறோம். கலையென்னும் அம்ருத தாரையில் கரங்களை குவித்து எப்போதும் கலைஞனே முதலில் பருகுகிறான். அவன் கை விரலிடுக்குக்ளில் பெருகி வழிவதைதான் நாம் அனுபவிக்கிறோம்.

இது ‘தன்மை’ யில் எழுதப்பட நேர்ந்ததற்குமிதுவே காரணம்.
சரடு.

teimoso 

மனம் ரதம் அல்ல என்றதும் ரதமாகிறது. ‘பேய்’ ஓட்டும் ரதமாகிறது. இது மனதின் இயல்பு. ‘மருந்தை அருந்துகையில் குரங்கை நினைக்காதே’ என்றதும் செய்கிற வேலையைச் செய்கிறது. சாதாரணமாக அநாதி காலந்தொட்டு ஒரே தடங்களில் மீண்டும் மீண்டும் செல்லும் கட்டை வண்டிதான். மனதைப் பற்றி எத்தனை அழகாகச் சொல்கிறார்? இதுதானே மனம்? மனதின் இயல்பு. தினம் தினம் ஒன்றையே, ஒற்றைப் பாதையில்தானே நாம் சிந்திக்கிறோம்?

அதே தடம்தான், வெகு விலகி போவதுபோல் தெரிந்தாலும். (அதே மனிதர்களைப் பற்றி, அதே அபிபிராயங்களைச் சுற்றி, அதே கொள்கைகள், அதே துவேஷங்கள், அதே வார்த்தைகள் - நமமனைவருக்கும் அப்படித்தானே) இந்தப் பிரபஞ்சம் பௌதீகமாக எத்தனை பெரியதோ அத்தனைக்கத்தனை சிறியது இந்த மனவெளிப் பிரதேசம். இதிலும் ஆகாசத்தில் பறப்பதாக பாவித்துக் கொள்ளலாம். அதை நம்பவும் செய்யலாம்.

அதிலும் மூக்கணாங்கயிறை முதுகில் போட்டுவிட்டு கட்டை வண்டி ரதம் தானே போகும்படி செய்தால்?

இனி தன்னிஷ்டம்தான். தூக்க மயக்கம். மயக்கம். விழிப்பு, வேண்டுமென்றே கண்காணா பிரதேசத்தில் வந்து சேர்ப்பித்த கலத்தை தெரிந்தே தொலைத்துவிடும் மயக்கத்தின் இன்பம். எழுத்தாளனின் ‘deliberate’ மனம் சொல்லும் கட்டளைகள் கூட இல்லை. காளையின் கால் போனபடி ரதம் போகிறது. சாதுவான , ஆபத்தில்லாத மயிலைக் காளைப் பாதையாம்! என்ன கொழுப்பு?

அந்தப் பாதையில் காஞ்சனை வருகிறாள். வௌவால், பிச்சைக்காரி, பிணவாடை, ஊதுவத்தி, சாம்பிராணி, சேமக்கல சப்தம், இதில் எது கட்டை வண்டி ரதம் தன்னிசையாக சென்ற பாதை?

என்றாலும் வண்டிக்காரன் முழுதும் தூங்கவில்லை. தினசரி வேலைகள் தம்பாட்டுக்கு. பிரக்ஞை கூர்மையாக இருக்கிறது. புகையிலையை பவித்திரமாக போட்டுக் கொள்கிறான். பிரம்பு நாற்காலி க்றீச்சிட்டு ஆட்சேபிக்கிறது. துல்லிய கவனம் அவ்வபோது, பெருகி போதையேற்றும் கற்பனா சாகரத்தின் மத்தியில்.

தொழில்? பிரம்ம வித்தை. தெரிந்தவன் சும்மா இருக்கலாமா? அங்கீகரிக்கப்படும் பொய்களை உருவாக்க வேண்டாமா? சென்ற தடத்திலேயே எப்படிச் செல்வது? எனவே நிஜந்தோரும் தன் கல்பனா லோக சஞ்சாரத்தைக் கலக்கிறது. எழுத்தாளன் இது உண்மை என்கிறான்.

அவன் கண்ட காஞ்சனை நிஜம். ஆனால் அவன் மனைவி காணவில்லை. அவள் பிரம்ம குலம் இல்லை. மனதைச் சீண்ட வேண்டிய அவசியமும் இல்லை. ஊதுபத்தி வாசனை - அவளும் மெலிதாக ஆமோதிப்பது உண்மையாகவும் இருக்கலாம். ஒப்புக்காக, சமாதானத்துக்காகவும் இருக்கலாம். அவன் படிக்கும் புத்தகத்தின் ஆங்கில வாக்கியங்களை காஞ்சனை தமிழில் சொல்வது அவனுக்கு மட்டுமே தெரியும்.

இவனுக்கு கற்பனையின் எல்லைகளைத் தொட்டுவிட வேண்டும். கஞ்சா அடிப்பத்தைப்போல. அதை நிஜமாக்க வேண்டும். அதற்கு முதலில் அவனே அவற்றை நம்ப வேண்டும். அதனால்தான் ‘இன்னுமின்னும்’ என்பதற்காகத்தான் கண்ணாடி.

கண்ணாடிக்குள் இவனுக்குத் தெரிவது மனைவிக்குத் தெரிவதில்லை. அவள் சிரிப்பைக் கேட்பதில்லை. வாசனையை முன்னறிந்து சொல்வதில்லை. கழுத்துக் காயம் பற்றிக் கவலைப்படுவதில்லை. மூன்று மாத கர்பிணி வேறு.

மூன்று மாத கர்ப்பிணியை பேயோடு யாராவது விடுவார்களா? வெளியாளிடம் வேண்டாம். மனைவியிடம் இதைச் சொல்லலாம் இல்லையா? ‘அந்தப் பிச்சைக்காரி வேண்டாம். பேய் மாதிரி இருக்கிறாள். பேய்தான். அவளால் உனக்கு ஆபத்து’ என்று.

சொல்வதில்லை. ஏன்? அவனுக்கு அந்த எல்லையைக் காண வேண்டும். அடியாழத்தில் மயக்க விழிப்பில் அவனுக்குத் தெரியும், இது சரடு.

மனதின் இயல்புகளிலொன்று. எப்போதும் ஒருபிரச்னையை உண்டு பண்ணி அதைத் தீர்ப்பது. (உ -ம்) ஒரு குழந்தை பள்ளியிலிருந்து வீட்டுக்கு வழக்கமான நேரத்துக்கு வரவில்லை. பயம். கற்பனை. விபத்து பற்றி. கடத்தல் பற்றி. பிரார்த்தனைகள். புலம்பல்கள். குழந்தை வந்ததும் ரிலீஃப். மகிழ்ச்சி. கடவுளுக்கு நன்றி.

இங்கு மனம் விளையாட உற்பத்தி செய்து வினையாகி விட்ட பேய். பெண் பேய். மோக லாகிரியை எழுப்பும் பேய். மனைவிக்கு ஆபத்து வரை போயாகிவிட்டது. விபூதி தடவி பேயும், பேயின் பின் விளைவுகளும் போய் விட்டன.

தனக்குத் தானே, தன்னை மீறி, தன்னை விடுத்து, தன்னை மறந்து, விட்டுக் கொண்ட சரடு.

மீண்டும் புதுமைப் பித்தன்.

காஞ்சனை என்னும் பிசாசு உண்டா இல்லையா?

அதை விடுங்கள். ஆனால் நினைத்தால் பயமாய் இருக்கிறதே.

சிறிது சினிமா - 1

சிறிது சினிமா - 1

பிரசுரம்:சொல்வனம்-இதழ் 39 | 30-11-2010  
 
சுமார் இரண்டு மாதங்கள் சிங்கப்பூரில் மகள் வீட்டில். தங்கை வீடும் இங்குதான். பாதி நாட்கள் கழிந்து விட்டன. சில திரைப்படங்களை வீடியோ / தொலைக்காட்சியில் பார்க்க முடிந்தது. களேபரமான காம்பினேஷன்.

12-angry-men-old-dvdcover 

12 ஆங்ரி மென்’- (12 Angry Men) ஹென்றி ஃபோண்டா தயாரித்து நடித்தது. நான்கு ஆஸ்கர் நாமினேஷன்கள். 1957 வருடப் படம். சேரியில் வாழும் ஒரு ஏழைப் பையன் தந்தையைக் கத்தியால் குத்திக் கொன்ற வழக்கு. படம் ஆரம்பிக்கையிலேயே நீதிமன்ற விசாரணைகள் மற்றும் குறுக்கு விசாரணைகள் முடிந்து ஜூரர்களின் சிபாரிசுதான் பாக்கி. 12 ஜூரர்கள். விதவிதமான பின் புலம், வயது, வாழ்வு மற்றும் சமூகம் பற்றிய நோக்கம். அனுசரணை, ஆதிக்கம், சமரசம், கூச்சம் என பல்வேறு மனநிலைகள். பூரண ஈடுபாட்டிலிருந்து, கடனெழவே என்கிற பங்கெற்பு வரை தெரியும் விதவிதமான அணுகு முறைகள்.

ஒரே ஒரு சிக்கல். பனிரெண்டு பேரும் ஒருமனதான முடிவை / சிபாரிசை தெரிவிக்க வேண்டும். அந்தப்பையன் குற்றவாளியா இல்லையா என்கிற கேள்விக்கு ‘ஆம்’அல்லது ‘இல்லை’ என்கிற பதில் தான் சிபாரிசு. ஒருவர் மாறுபட்டிருந்தாலும் அது ஜூரர்களின் சிபாரிசாகாது. சாட்சிகளும், பின்புலமும், பின்கதையும் ஏற்கனவே பையன் நள்ளிரவில் தந்தையைக் குத்திக் கொன்றுவிட்டு படிகளில் இறங்கி ஓடியதை நிரூபித்தாயிற்று. ‘ஓபன் அண்ட் ஷட்’ கேஸ். ஐந்து நிமிடங்களில் முடிவைச் சொல்லி விடலாம்.

ஜுரர்களில் தலைமை தாங்கி நடத்திச் செல்பவர் முடிவை ஓட்டுக்கு விடுகிறார். பதினோரு பேர் ‘ஆம்’ என்கையில் ஒரு கை உயராமல் ‘சந்தேகமாக இருக்கிறது’என்கிறது. பிறகு அடுத்த சில மணிகளில் அந்த ‘ஓபன் அண்ட் ஷட்’ கேஸ் என்னவாகிறது என்பதுதான் படம்.

தயாரிப்பாளர் ஹென்றி ஃபோண்டா மட்டுமில்லாமல் வேறு பலரும் சிறப்பாக நடித்திருந்தார்கள். மூன்று நிமிடங்களைத் தவிர முழுப் படமுமே ஒரே அறைக்குள் படமாக்கப் பட்டிருந்தது. அதுவும் நாம் இப்போதைய படங்களில் காணும் சௌகர்யமான அறை இல்லை. ஓடாத ஃபேன், வெளியே கொட்டும் மழையால் இறுக்கமான (கோவையில் இதை உப்புசம் என்பார்கள்) சூழல், வியர்வை. எரிச்சல். ஒரு பெண் கூட நடிக்கவில்லை. கொலை, அதைத் தொடர்ந்து, மற்றும் அதற்கு முன் நடந்தவை எல்லாமே வசனத்தில்தான் வருகின்றன.

பெரிய உணர்ச்சி கொந்தளிப்புகள் இல்லை. ‘உபதேசங்களுக்கு’ வாய்ப்பிருந்தும் இடம் பெறவில்லை. இது வரை எடுக்கப்பட்ட படங்களிலேயே மிகச் சிறந்தவைகளில் ஒன்று’ என்று பெயர் வாங்கியுள்ள படம்.

ஓரிருவரின் நடிப்பு பிறருடையதைப் போல் அமைந்திருந்தால், துளி எட்டிப் பார்க்கும் மேடை நாடகத் தன்மையும், கதை ஓட சிறிதளவு உபயோகப்படுத்தி இருக்கும் உத்தியும் தவிர்க்கப் பட்டிருந்தால் நாமினேஷன்களை தாண்டி ஆஸ்கர் வென்றிருக்கக் கூடும். ஆஸ்கர் இல்லவிட்டால்தான் என்ன?

அடுத்து ‘டிஸ்ட்ரிக்ட் 13’ என்கிற ஃப்ரென்ச் படம். ‘parkour’ சண்டைகளுக்காக புகழ்பெற்ற படம்.http://www.youtube.com/watch?v=bTyWfbvX0xQ&feature=player_embedded
அரசு இயந்திரம் செயலற்றுப்போய் நுழைய முடியாத ஒரு தாதா மாவட்டத்தில் இரண்டு இளைஞர்கள் - ஒருவர் அங்கேயே பிறந்து அதை தூய்மைப் படுத்தவேண்டும் என்கிற முனைப்பில் இருப்பவர்; இன்னொருவர் போலிஸ் இலாகாவில் உள்ள இலட்சியவாதி. முதலிலிருந்து முடிவு வரை ஒரே ஓட்டம்தான், வசனங்களிளும். சாதாரணமாக இப்படி எடுக்கப் படும் படங்களில் ‘உயிர்’ இருக்காது. மறைக்கப்பட்ட சங்கிலிகள், கயிறுகள், ‘கம்ப்யூட்டர் க்ராஃபிக்ஸ்’ போன்ற உபகரணங்களால் அசாதாரணமான சண்டைகள் காட்டப்படும் இக்கால கட்டத்தில் இவை எதுவுமில்லாமல் இயற்கையான சண்டைக் கட்சிகள். மனித உடலின் அதி வேகம், சக்தி, வளையும் தன்மை போன்றவற்றைக் காண நிம்மதியாக இருந்தது. இரண்டு கதாநயகர்களும், பிறரும் சரியாக நடித்திருந்தார்கள். பெரிய தாதாவை இருவரும்போட்டு துகைக்காமல் யாரோ வேறு சிலரால் அவர் கொல்லப் படுவது இன்னொரு நிம்மதி. கூர்மையான வசனங்கள். திருப்பங்கள். அமெரிக்கப் படங்களின் உயிரின்மையும், போலி நெகிழ்வுணர்ச்சிக் காட்சிகளும் இல்லாத மகிழ வைக்கும் படம்.

மூன்றாவதாக ‘இன் கோஸ்ட் ஹவுஸ் இன்’ (In Ghost House Inn) என்கிற மலையாளப் படம். காமெடி த்ரில்லர். நிறைய திருப்பங்களும், சுற்றல்களும். முகெஷ், ஜகதீஷ், சித்திக், அசோகன்,நெடுமுடி வேணு மற்றும் பலர்.  பதினெட்டு வருடங்களுக்கு முன் முதல் நால்வரும் நடித்த இன் ஹரிஹர் நகர் வந்தது. (இது தமிழில் எம்.ஜி.ஆர் நகரில் என்று ஆனந்த் பாபு, விவேக், சின்னி ஜெயந்த், சார்லி நடித்து வந்ததாக நினைவு. ) மீண்டும் சமீபத்தில் அதேகூட்டணியில் ‘2, ஹரிஹர் நகர்’ வந்து உடனே ‘கோஸ்ட் ஹவுஸ்’. படு சுவாரஸ்யமாக நேரம்போவதே தெரியாதபடிக்கு இருந்தது.

‘மர்டர் பை டெத்’ நான் பார்த்ததிலேயே சிறந்த அற்புதமான காமெடி த்ரில்லர். காமெடியும், கொலையும் சேர்ந்து வந்து கலக்கிய தமிழ்ப்படம் 1966-இல் வெளிவந்த ‘சாது மிரண்டால்’. இதில் சில நகைச்சுவை காட்சிகளை மட்டும் மீண்டும் பார்த்தேன். நடிப்பின் சிகரங்களை இப்படத்தில் பார்க்கலாம். நகைச்சுவைக்குப் புகழ் பெற்ற டி.ஆர்.ராமச்சந்திரனின் அற்புதமான சீரியஸ் நடிப்பு. நாகேஷ் கேட்கவே வேண்டாம். மிகக் கச்சிதமான, தரமான ஓ.ஏ.கே. தேவரின் நடிப்பு. மனோரமா. இதில் ஏ.கருணாநிதி வரும் காட்சியைப்பார்த்துவிட்டு யாராலாவது சிரிக்காமல் இருக்க முடியுமென்றால் அவர் வேற்று பிரபஞ்சவாசியாகத்தான் இருக்கக் கூடும். கொஞ்ச நேரத்தில் அந்த சமயங்களில் சீரியஸ் பாத்திரங்களிலேயே நடித்து வந்த டி.எஸ்.பாலையாவின் அதி அற்புத நகைச்சுவை நடிப்பு. அவர் பாடும் கர்நாடக இசைப் பாடல்களை அவர் நடிப்போடு கேட்கையில் எப்பேற்பட்ட மேதை என்கிற எண்ணம் மேலெழுகிறது. மொத்தமாக மாமேதைகள் பலர் சேர்ந்து நடித்திருந்தபடம். நகைச்சுவை த்ரில்லர்.

பிறகு ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’. மேற்சொன்ன த்ரில்லர் படங்களையெல்லாம் விட என்னை திடுக்கிட வைத்த படம். முதல் த்ரில். ஆர்யாவை எனக்குப் பிடிக்கும், அவர் என் நண்பர் சுகா இயக்கும் திரைப்படத்தின் தயரிப்பாளர் என்பதால். மற்ற படி நடிப்பு கிடிப்பு என்றெல்லாம் அவர் என்னை தொந்தரவு செய்ததேயில்லை. ‘பாஸ்’படத்தில் நடித்திருந்தார். நயனதாராவும், சந்தானமும் கூட ஆச்சர்யகரமாக நன்றாக நடித்திருந்தார்கள். பெஸ்ட் பர்ஃபார்மென்ஸ் சரவணனாக நடித்த பஞ்சு அருணாசலத்தின் மகன், ‘பாஸ்’ஸின் தாயாரக நடித்தவர், சித்ரா லட்சுமணன். படம் தொந்தரவு செய்யாமல் போயிற்று. தமிழகத்தில் பெரிய வெற்றியாம்.

 

கொஞ்சம் கொஞ்சம் ‘மதராசப்பட்டினம்’ பார்த்தேன். பீரியட் ஃபிலிம் என்பதால், அந்த ஐரோப்பிய பெண்ணால், மற்றும் ஆர்யா மீதுள்ள அபிமானத்தால் படம் பார்க்கத் தோன்றியது.

கதைக்குக் கையுண்டா காலுண்டா என்பார்கள். ஒரே புருடா. அதுவும் சுதந்திர நாளன்று ரயில்வே ஸ்டேஷனில் வரும் வெற்றி கோஷங்களும், பொதுமக்கள் உரையாடல்களும் அபத்தக் களஞ்சியம். நல்ல வேளை தலைவர்களாக யாரையும் காட்டவில்லை.

வரலாற்றை இப்படியெல்லாமா திரிப்பார்கள்? 1947 ஆகஸ்ட் பதினைந்து சமய்த்தில் காமராஜர் அகில இந்தியத் தலைவர் இல்லை. சரி தமிழ் நாட்டில் வாழ்க கோஷமிடுகிறார்கள் என்று வைத்துக் கொள்ளலாம். ‘ஆச்சாரியார் வாழ்க’ என்கிறர்கள். பொது மக்கள் ‘ராஜாஜி’ என்றே சொல்வார்கள். திராவிட இயக்கத்தினர் முதலில் ‘ஆச்சாரியார்’ என்றும் பின்பு ‘மூதறிஞர்’ என்றும் சொல்வது வழக்கம். இப்போது எல்லோரும் மூதறிஞர் என்றே சொல்கிறர்கள். பெரியாரின் தி.க. சுதந்திர தினத்தை துக்க தினமாகக் கொண்டாடியவர்கள். ப்ரிட்டிஷ் காரர்களை தொடர்ந்து ஆட்சி செய்யுமாறு கோரியவர்கள். அவர்கள் ராஜாஜியை வாழ்த்த வாய்ப்பில்லை.

வரலாற்றுப்படி ராஜாஜி சுதந்திரத்துக்கு முதல் நாளே கல்கத்தா சென்றுவிட்டார், கவர்னராக. ஆகஸ்ட் 15 அன்று கல்கத்தாவில் இருந்தார். ராஜாஜி உத்தரவுப் படி ‘கவர்ன்மென்ட் ஹவுஸ்’ பொது மக்களுக்குத் திறந்து விடப்பட்டது. 2,00,000 சாமானியர்கள் உள்ளே வந்து சுதந்திரத்தைக் கொண்டாடினார்கள். மறு நாள் வங்காளத்தில் முகாம் இட்டிருந்த மகாத்மா காந்தியை சந்திக்கிறார். காந்திஜியின் கரங்களை ராஜாஜி தன் கரங்களில் எடுத்துக் கொள்கிறார். இருவரும் ஒன்றும் பேசாமல் வெகு நேரம் இருக்கிறார்கள். ஆனால் மதறாசப் பட்டினத்தில் ‘ஆசாரியார் வாழ்க’ (என் காதில் விழுந்தது சரி என்றால்) என்று அவரை வரவேற்க ரயில்வே ஸ்டேஷனில் கோஷமிடுவது போல் வருகிறது.

இதற்கெல்லாம் சிகரம் ‘சத்தியமூர்த்தி வாழ்க’ தான். ஆசாரியாரும் சத்தியமூர்த்தியும் வண்டியில் வருவதாக வேறு பேசிக் கொள்கிறார்கள். 28-3-1943ல் இறந்து போன சத்திய மூர்த்தியின் ஆவிதான் அங்கு வந்திருக்கக் கூடும். அந்த அளவில் ம.ப.(மதராசப் பட்டணம்)வும் ஒரு ம.ப. (மர்மப் படம்) ஆகிவிட்டது.

அம்மா





அம்மா   பிரசுரம்:சொல்வனம்-2-11-2010 இதழ்-37

இருள் உதிரும். ஒழுகும்.
சிம்னி விளக்கு சுவரில் ஒட்டியபடி
உயரத்தில்.
அப்பா அம்மா மத்தியில்
இன்னும் யோசித்துத் தனியாகாத
பத்திரக் குழந்தை.
தரையில் மெத்தென்ற,
புடவை, வெள்ளை வேட்டியால்
புனைந்த படுக்கை.
-o00o-
காலணி தயார். தேய்த்த உடை தயார்.
பசி அறியாத வயிற்றுக்கும் வாய்க்கும்
ருசியான உணவு தயார். எல்லோரும்
சினிமா போய் வந்த நாலு மணி
நேரத்திற்குப் பின்பும் உடை மாற்றும் முன்
சூடான சாப்பாடு தயார்.
குமிட்டிதான்.
ஃபிரிட்ஜ், ஓவன் என்ற பெயரெல்லாமே
தெரியாது.
-o00o-
பண்டிகை நாள், பலகாரம், பட்சணம்
புதுத் துணி, மஞ்சள் குங்குமம்,
எண்ணெய் ஸ்நானம்
‘லட்சுமி கல்யாணம் வைபோகமே’
எல்லாம் சரியாய் இளைப்பின்றி
எப்படி நடந்தது.
அப்பாவுக்குத் தண்ணீர் தம்ப்ளரில்
கையில் தர வேண்டும்
அருமையை விட கடுமை அதிகம்.
முள்ளில் ரோஜா.
-o00o-


கிணற்று மேடையில்
குடம் வைக்க அமைத்த குழியில்
தேங்கிய தண்ணிரைக் காகம் பருகும்.
துணி காயப் போடும் கம்பிகளில்
சென்ற நிமிடம் என்பது இருந்தது
என்னும் சாட்சியாய் நீர் முத்துகள்.
ஓடுகள் குளிரும்.
துவைக்கும் கல் கழுதையை விட பொறுமை.
பொதியோடு அடி சுமக்கும்.
அதன் முகமெங்கும் அம்மை வடு.
நாற்புறமும் இறங்கிக் குமிழும் ஓடு.
நடுவில் சிறு முற்றம்.
ஒரு பக்கம் தாழ்வாரம்.
ஒரு பக்கம் கிணறு.
குட்டிச் சுவர் தடுத்த குளியலறை ஒரு பக்கம்.
நடுவில் ஆட்டுக் கல். துவைக்கும் கல்.
வெந்நீர் அறையில் அண்டாவும்
விறகும் போய் பாய்லரும் கரியும்.
சமையல் அறையில் மூலைகளில்
மண் அடுப்புகள், விறகு மறைந்து
குமிட்டியும் போய் மண்ணெண்ணெய்
ஸ்டவ்.
தரை வெறும் தரை.
தினம் பெருக்கித் துடைக்கும் வேலைக்காரப்
பெண்மணி, காய்க்கார, பால்கார, கரிக்கார,
பழக்கார பெண்கள் எல்லாரும்
அவள் பேச்சுக்காய் காத்திருப்பர்.
எல்லோருக்கும் கொடுப்பதற்கு
ஏதாவது வைத்திருப்பாள்,
அதைவிட நிச்சயம் அன்பு.
-o00o-

அம்மா (மீண்டும்)

இப்போதெல்லாம்
நான் நிறைய நேரம்
ஒதுக்குகிறேன், உனக்காக.
அலுவலக பகாசூரன்
விழுங்கியது போக,
அகமுடையாள், குழந்தை.
அம்மாவுக்கு ஏது நேரம்?
தொலைக் காட்சி, பத்திரிகை,
தூக்கம், ஆசை.
தின்னவும் குளிக்கவும் கூட
நேரம் இல்லை.
சோம்பல், மயக்கம்
தூக்கக் கலக்கம்.
இடையில் வள்ளல் நினைப்பில்
உன் அறைக்குள் நுழைகையில்
அலுவல், இலக்கியம், அரசியல்
நினைவு வரும்.
‘உம்’ கொட்டல் பேச்சா?
கொஞ்ச நேரம் - இன்னும்
கொஞ்ச நேரம் - இருந்திருக்கலாம்.
ஆனால் ஆபீஸ், ஆசை, யோசனைப் பேய்
தூக்க வெறி.
இப்போ அப்படியில்லை.
ஆபீஸில், மோட்டார் சைக்கிளில்,
பொண்டாட்டி, பெண், டி.வி.யோடு
போது போகையில்
உன்னோடு (மட்டுமே) இருக்க
முடிகிறது.
நீ போன பிறகு.
-o00o-

அம்மா (3)

அவள் ஒரு மந்திரவாதி.
இப்படித்தான் ஒரு சமயம்
தன் வளையை
சைக்கிளாய் மாற்றினாள்.
அப்பா ஆபீஸ் போனது அதில்தான்.
தங்கை பிறந்த போது
வெய்யிலைத் தணிக்க
வளையலை மின் விசிறியாக்கினாள்.
மருத்துவர் செலவு, மருந்து
என்றெல்லாம் ஆக்கியிருக்கிறாள்.
ஒருநாள் கூட அயர்ந்து படுத்ததில்லை.
அலண்டு போனதில்லை.
சோம்பல், சுணக்கம் இல்லை.
கசங்கின புடைவையோ, கலைந்த
தலையோ, தூசித் தரையோ
பத்தான பாத்திரமோ
பார்த்தில்லை.
பிறக்கும் முன் தகப்பனை
பின் பதினைந்தில் தாயை,
முப்பதுகளில்கணவனை
இழந்த துக்கத்தை
எவர் மீதும் ஏற்றியதில்லை.
எங்கும் காட்டியதில்லை.
எட்டு நாள்
ஐ.சி.யூ.வின்
கண்ணாடி மௌனத்தில்
இரும்பு இதய நர்ஸ்களின்
அசட்டு சுத்த அலட்சியத்தில்
தனிமை வாசம்.
ஒரு நாள் கூட
அதற்கு முன்
தனியாய் இருந்ததில்லை,
முழு வாழ்நாளிலும்.



அம்மா (4)

எவ்வளவோ எண்ணங்கள்
எதையுமே சொல்லவில்லை.
எவ்வளவோ வண்ணங்கள்
எதையுமே பார்க்கவில்லை.
பிறந்தவுடனேயே தொப்புள் கொடியைத்
துண்டித்து விட்டார்கள்.
பிள்ளை தனி. தாய் தனி.
இது புரியாமல்……..
அவனுக்கு அவன் ஆசை,
ஆபீஸ். அவ்வளவுதான்.
அவளுக்கு இன்னமும் அவன்
குழந்தைதான், மடி மேல்.
அவன் பசி அவளது.
அவன் சட்டை கசங்கல்
அவள் மனத்தது.
அவன் வெற்றி யார் கண்ணும்
படாமல் அமைதியாய் பருக, நிறைய.
அவன் பயத்தை கவலையை
அவள் வாங்கித் துடைத்து எறிவாள்.
அவனுக்குத் துக்கமே இல்லை
எப்பவும்
நேற்றுவரை.
அவள் இருக்கிறாள்
எதையும் தீர்க்க.
ஒரு வேளை சோறு ஆறியதில்லை.
காப்பி கசந்ததில்லை.
பசி வந்ததில்லை, தாகம்
எடுத்ததில்லை.
உப்போ சர்க்கரையோ
தூக்கலாய் இருந்ததில்லை
வெளியில் இருந்து திரும்புகையில்
கதவில் பூட்டு தொங்கியதில்லை.
வெற்றி வெளியே தெரிவதற்கில்லை.
அது அவள் வாழ்வின் உள்ளே.
வீண் உணர்ச்சி, உயர்வு நவிற்சி
கிடையவே கிடையாது.
அவள் என்றும் ராணிதான்.
பயந்தோ கெஞ்சியோ
பழக்கம் இல்லை.
வீட்டின் சகல
பொறுப்புகளையும், பிள்ளைகளின்
வாழ்வின் சகல நிகழ்ச்சிகளையும்
தினசரியின் சகல காரியங்களையும்
அன்பால், ஆளுமையால்
தொப்புள் கொடி அறுந்ததையே
தெரிந்து கொள்ளாமல் அசடாய்
நிகழ்த்தியவள்.
ஒருநாள் இரண்டு நாள் அல்ல.
நாற்பத்தைந்து வருடங்கள், ஐந்து
மாதங்கள், மூன்று நாட்கள்
அவளைப் பொறுத்தவரை
அன்றுதான்
தொப்புள் கொடி
எரிக்கப் பட்டது.
அதுவரை அவன்
அவளில் ஒரு
அங்கம்தான்.
அவள் அவன்
வாழ்க்கையை வாழ்ந்த
அஞ்ஞானத்தில்
தன் வாழ்க்கையை
வாழத் தவறி விட்டாள்.