FUTURE IS NOW - J Krishnamurti.

பிறப்பு, இறப்பு என்பது உண்மையே இல்லை. அத்தகைய பொய்யான தோற்றத்தை நமது மனமே உருவாக்கிக் கொள்கிறது. மனம் தனக்கென்று ஒரு உடலை உருவாக்கிக் கொள்கிறது. அதைக் கனவு மழையில் நனைத்துத் துன்பப் படுத்துகிறது. - ரமண மகர்ஷி.

Search This Blog

Saturday, June 12, 2010

மரங்கள் இல்லாத நிலம் பயங்கரமானது

மரங்கள் இல்லாத நிலம் பயங்கரமானது


ஜே.க்ருஷ்ணமூர்த்தி - தமிழில்: வ.ஸ்ரீநிவாசன் | பிரசுரம் : சொல்வனம் 11-6-2010


ஒவ்வொரு வருடமும் ஜூன் 5-ஆம் தேதி ‘உலக சுற்றுச்சூழல் நாளாக’ அனுசரிக்கப்பட்டு வருகிறது. சென்ற வாரம் அனுசரிக்கப்பட்ட இந்த நாளை முன்னிட்டு மரங்கள் பற்றியும், இயற்கையுடனான மனிதர்களின் உறவு பற்றியும் ஜே.கிருஷ்ணமூர்த்தி பேசிய பேச்சுகளில் சிலவற்றை இங்கே திரு.வ.ஸ்ரீனிவாசன் மொழிபெயர்ப்பில் தருவதில் சொல்வனம் மகிழ்ச்சியடைகிறது.

மாணவன் (மா) : ஐயா, இங்கே ரிஷி வேலி (Rishi Valley) பள்ளியில் இருக்கும்போது நாங்கள் ஏதாவது இசைக் கருவிகளை வாசிக்கிறோமா, என்று நீங்கள் கேட்டீர்கள். நாங்கள் பாடுகிறோமா, சித்திரம் தீட்டுகிறோமா, கவிதைகள் எழுதுகிறோமா, மரங்களை நட்டு ஒரு அழகான தோட்டத்தை உருவாக்குகிறோமா என்றும் நீங்கள் கேட்டீர்கள். நான் உங்களைக் கேட்க விரும்புகிறேன் ஐயா : ‘நாங்கள் எதற்காக மரங்களை நட வேண்டும்?’

ஜே. க்ருஷ்ணமூர்த்தி (கே) : நீங்கள் உங்களை ஏன் அழகு படுத்திக் கொள்கிறீர்கள்? ஏன் குளிக்கிறீர்கள், நல்ல ஆடைகளை அணிந்து கொள்கிறீர்கள், கண்ணாடியில் உங்களைப் பார்த்துக் கொள்கிறீர்கள்? உங்களுக்குத் தெரியுமா, மரங்கள் இல்லாத ஒரு நிலம் பயங்கரமானது, அது ஓடுகின்ற நீர் அற்ற நிலத்தைப் போன்றது: ஒரு நதி. ஒரு ஆற்றின் அருகில் நீங்கள் எப்போதாவது அமர்ந்து இருக்கிறீர்களா? அதனுடன் மிதந்து செல்லும் அனைத்துடனும் அதைக் கவனித்திருக்கிறீர்களா? அது எடுத்துச் செல்லும் மாசு, பூச்சிகள், வண்ணத்துப் பூச்சிகள், மற்றும் அனைத்து இதர இறந்த விஷயங்களை நீங்கள் பார்த்ததுண்டா? அதற்கும் அப்பால் தெளிந்த, தூய்மையான நீரைப் பார்த்திருக்கிறீர்களா?

நீங்கள் எப்போதாவது மரங்களை கவனித்திருக்கிறீர்களா? அசாதாரணமானவை இல்லையா? அவை நிழல் தருகின்றன. எழில் சேர்க்கின்றன. எங்கெல்லாம் அதிக மரங்கள் இருக்கின்றனவோ அங்கெல்லாம் அதிக மழை பொழிய வாய்ப்பிருக்கின்றது.

மரங்கள் பூமியை அழகாக்குகின்றன. பறவைகள் அவற்றுக்கு வருகின்றன. நீங்கள் ஒரு மரம் நட்டால் அதைக் கவனியுங்கள். ஒரு மரத்தை வளர்க்கையில், அதற்கு நீங்கள் சிரத்தை எடுக்கையில், இந்த பூமியின் ஒரு பகுதி நீங்கள் என்கிற - புத்தி அளவில் மட்டும் அல்லாத - உணர்வை அது தருகிறது.

மா : ஐயா, நான் ஒன்று சொல்லட்டுமா? மரங்கள் நாம் பயன் படுத்தும் சோப்பைக் கொடுக்கின்றன.

கே : ஆம், அனைத்து உபயோகப் பொருட்களையும். தருக்கள் நமக்கு மரத்தைத் (wood) தருகின்றன. சம்ஸ்க்ருத மொழியில் மரத்தைக் குறிக்கும் வார்த்தைகளில் ஒன்று அது பயன்படு பொருள், உபயோகமானது, அதிலிருந்து பொருட்களைச் செய்யலாம் என்கிற அர்த்தத்தில் உள்ளது என்று நினைக்கிறேன்.

பகல் வேளைகளில் ஒரு மரம் உங்களை வரவேற்கிற மாதிரி, திறந்து, வடிவழகோடு தெரிவதையும், மாலையில் அது எப்படியோ உள்வாங்கிக் கொண்டு, மூடிக்கொண்டு இருப்பதையும் நீங்கள் கவனித்ததுண்டா என்று எனக்குத் தெரியவில்லை.

ஒவ்வொருவரும் ஒரு செல்லப் பிராணியை வைத்திருப்பது இயலாத ஒன்று. செல்லப்பிராணி என்கையில் நான் ஒரு நாயை, பூனையை, பறவையை, குதிரையை - நீங்கள் அக்கறையெடுத்துக் கொள்கிற, நீங்கள் பத்திரமாகப் பார்த்துக் கொள்கிற ஒன்றைச் சொல்கிறேன். நீங்கள் அதை ‘ப்ரஷ்’ செய்வீர்கள், அதற்கு சீவி விடுவீர்கள், அதற்கு நோய் வராமல் பார்த்துக் கொள்வீர்கள். நீங்கள் அதையும் அது உங்களையும் நேசிக்கையில், உங்களையும், - சேலைகள் வேண்டும், ‘கோட்’கள் வேண்டும் பார்ப்பதற்கு எப்படி இருக்கிறோம் என்று வியந்து கொண்டு இவை போன்ற - உங்களைப் பற்றிய விஷயங்களையும் மட்டுமின்றி வேறு ஏதோ ஒன்றை நேசிக்கிற உணர்வு உங்களுக்கு இருக்கும்.

அநேகம் பேர் எல்லா நேரமும் தங்களைப் பற்றியே நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். நீங்கள் மரங்கள் நட்டால், ஒரு தோட்டம் வைத்தால், உங்களைப் பற்றியே இருக்கும் இந்த நினைப்பை நிறுத்த அது உதவும்.

வேறொன்றையும் நீங்கள் கவனைத்திருக்கிறீர்களா என்று எனக்குத் தெரியவில்லை. இந்தியாவில் வெகு சிலரே ஒரு தோட்டத்தை அமைக்கும் சிரமத்தை எடுத்துக் கொள்கிறார்கள். அதைக் கவனித்து இருக்கிறீர்களா?

கீழே போய் அவர்கள் கற்களை எடுத்துவிட்டு புதர்களையும், மரங்களையும் நடுவதைப் பாருங்கள். ஐரோப்பாவிலும், அமெரிக்காவில் கலிஃபோர்னியாவிலும் நான் இதைச் செய்திருக்கிறேன். அங்கெல்லாம் பூமி வெறும் இடிந்த கற்களாகவும், புதராகவும், பாறைகளாகவும் இருக்கும். அவற்றையெல்லாம் களைந்துவிட்டு மரங்களை நட்டேன். எதை நடப் போகிறோம் என்று யோசிக்கையில், ஒரு கல்லை அங்கே வைக்க வேண்டும், பெரிய பாறையை அங்கே வைக்க வேண்டும், அங்கே நட வேண்டும் என்று எண்ணுகையில் நீங்கள் ஏதோ ஒன்றை போற்றத் தொடங்குகிறீர்கள். நீங்கள் அழகான ஏதோ ஒன்றை உருவாக்குகிறீர்கள். இந்தியாவில் வெகு சிலரே - பணக்காரர்களிடையே கூட - இதையெல்லாம் செய்கிறார்கள் என்பதை கவனித்திருக்கிறீர்களா? நீங்கள் அதைச் செய்யக் கூடாதா? நிலத்திலிருந்து ஏதோ ஒன்றை செய்வது - அது கல்வியின் ஒரு அங்கம் இல்லையா? நீங்கள் படிக்காவிட்டால் உங்கள் மூளை மந்தமாகும். அதே போல் உங்களைச் சுற்றியுள்ள பூமியைப் பாருங்கள். கவனிக்காமல் விட்ட குழந்தையைப் போல் அது இருக்கிறது. ஐரோப்பாவில் வெகு அழகான சில தோட்டங்களை நான் பார்த்திருக்கிறேன். இருநூறு, முன்னூறு வருடப் பழமையானவை. அழகான புல்தரைகள். நூற்றாண்டுகளாக நீர் பாய்ச்சப்பட்டு, கத்தரித்து சீர் செய்யப் பட்ட அப்புல்தரைகள் - நாம் அதன் மேல் நடக்க அஞ்சும் ஒரு தரை விரிப்பைபோல். அது போன்ற பூமியின் மீதான அக்கறை, குழந்தைகள் மீதான அக்கறை - அதுவே நல்ல கல்வி என்று நான் நினைக்கிறேன்.

மா: ஐயா, நம்மிடம் ஒரு பூனை இருந்து நாம் அதைக் கவனித்துக் கொண்டால் அது நம்முடன் விளையாடும். ஆனால் ஒரு மரம் நட்டால் அது வளர்ந்து பயன் தர பல வருடங்கள் ஆகும்.

கே : வேறு யாரோ அதனால் பயனடைவார்கள். ஐரோப்பவிலும், அமெரிக்காவிலும் நான் நட்ட மரங்களை நான் பெரும்பாலும் பார்க்கவே போவதில்லை. ஆனல் ஒரு மரத்தை நடுவது என்பது ஜாலியான (fun) ஒரு விஷயம். யாரோ அதன் பயனை அடைவார்கள்.

நீங்கள் மரங்களை நட்டு அவற்றைக் கவனித்துக் கொண்டால் ஒருவேளை நீங்கள் திருமணமாகி ஒரு குழந்தையுடன் இங்கு வருகையில் அவன் “கடவுளே (by jove) எத்தனை அழகு’ எனலாம். மேலும் நீங்கள் மரங்களைப் பற்றி மிகப் பலவற்றையும் தெரிந்து கொள்வீர்கள். என்ன மாதிரி மண் வேண்டும் - அமிலத்தன்மையது, உப்பு தன்மையது, நைட்ரஜன் இருப்பது என்று - அதை நீங்கள் கவனித்துக் கற்பீர்கள். ஒரு ரோஜாவை நட வேண்டுமென்றால் ஆழமாக தோண்டவேண்டுமென்பதை நீங்கள் கற்றுக் கொள்வீர்கள். (அமெரிக்கர்கள் சொல்வது போல்: இரண்டு டாலருக்கு ரோஜா வாங்கி, பத்து டாலருக்கு குழி வெட்ட வேண்டும்). பிறகு நீங்கள் அந்தச் செடியை (nourish) அக்கறையோடு கவனித்துக் கொள்வீர்கள், அதற்கு உரமிடுவீர்கள். எனவே உங்கள் மனம் - உங்களுடுடைய அடுத்த வேலையைப் பற்றி, உங்கள் மனைவி அல்லது கணவரோடான சண்டையைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கிற - இறந்து போனதாய் இருக்காது. அது விழிப்பாய் இருக்க ஆரம்பிக்கிறது.

இங்கு தூரதர்சினி (telescope) இருக்கிறதா? நீங்கள் எப்போதேனும் நட்சத்திரங்களைப் நோக்கியதுண்டா? எவ்வளவு ஆச்சர்யமான விஷயங்கள் வானத்தில் இருக்கின்றன என்று உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் இவ்வனைத்து நட்சத்திரங்களையும், கோள்களையும், பால் வெளியையும் பார்க்கிறீர்கள். அவையெல்லாம் ஒன்றிலிருந்து ஒன்று பிரமாதமான (terrific) வேகத்தில் தள்ளி நகர்ந்துகொண்டே இருக்கின்றன. எத்தனை மில்லியன் நட்சத்திரங்கள் அங்கே இருக்கின்றன என்று எனக்குத் தெரியாது, ஆனால் நீங்கள் என்ன நடக்கிறது என்று கற்பனை செய்யலாம். ஒன்றையொன்று தூரத் தள்ளிக் கொண்டு…. எவ்வளவு ‘வெளி’ (space) என்று எண்ணிப் பாருங்கள்.

(சுட்டிக் காட்டியபடி) அங்கே அணில்கள் இருக்கின்றன என்று உங்களுக்குத் தெரியுமா? முன்னால் ஒரு பெரிய துவாரம் இருக்கிறது. அதைப் பார்த்தீர்களா?

மா : ஆமாம்.

கே : நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? நான் இங்கே இருந்தால் என்ன செய்வேன் தெரியுமா? எனக்கு ‘சன் ஸ்ட்ரோக்’ வந்துவிடும், நான் அதிகம் சூரிய வெப்பத்தில் நடப்பதில்லை. ஆயினும் நான் அங்கு ஒரு மரத்தை நடுவேன். அதற்கு முதல் தரமான உரத்தை போடுவேன். அந்த துவாரம் எனக்கு மனதைக் குறிக்கிறது. கிரிக்கட் விளையாடுவதில், படிப்பதில், சண்டை போடுவதில் நீங்கள் மூழ்கியுள்ளீர்கள். உங்களுக்கு என்றும் பூமியைப் பற்றி அக்கறை இல்லை. பூமியின் பால் உங்களுக்கு அக்கறை இல்லையென்றால் நீங்கள் வாழ்வதே இல்லை. ஆனால் யாரோ ஒருவர் அதன்பால் அக்கறை கொண்டுள்ளார். பயிரிடுபவர்.

-ரிஷி வேலி, ஃபிப்ரவரி, 1956.

************



பூமியிலிருக்கும் ஒவ்வொரு மரத்தின், புதரின், பூவின் நண்பன்.

பச்சையான, ஜொலிக்கும் நிலங்களினூடே சூரிய ஒளியால் பிரகாசமான வனத்திலும் அதற்கப்பாலும் போகும் பாதை ஒன்று உள்ளது. ஒளியாலும், நிழல்களாலும் நிரம்பிய இவனத்திற்குள் யாரொருவரும் வருவதில்லை. அது மிக அமைதியாக, நிசப்தமாக, தனித்து இருக்கிறது. அங்கு அணில்களும், எப்போதேனும் கவனம் மிகுந்த வேகம் மிகுந்த மானுமிருக்கும். கிளைகளிலிருந்து அணில்கள் உங்களைக் கவனிக்கின்றன; சிலசமயம் திட்டுகின்றன. கோடையின் வாசனையும், ஈர மண்ணின் மணமும் இக்காட்டில் இருக்கின்றன. பழைய, பாசி படிந்த, பிரும்மாண்டமான மரங்கள் இருக்கின்றன. அவை உங்களை வரவேற்கின்றன, நீங்கள் அவ்வரவேற்பின் மனமார்ந்த அன்பை உணர்கிறீர்கள். ஒவ்வொரு முறை நீங்கள் அங்கு அமர்ந்து அற்புதமான நீல வானத்தை கிளைகள் மற்றும் இலைகள் வழியாக நிமிர்ந்து பார்க்கையில் அந்த அமைதியும் வரவேற்பும் உங்களுக்காகக் காத்திருக்கின்றன. நீங்கள் மற்றவர்களோடு வனத்தினூடே போனீர்கள்; ஆனால் அப்போது விலகி நிற்கும் தனிமையும், நிசப்தமுமிருந்தன. மரங்களின் காம்பீர்யத்தையும், கண்ணியத்தையும் அறியாத, கவனிக்காத மனிதர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு அவற்றோடு உறவில்லை. ஒருவேளை அவர்கள் ஒருவருக்கொருவர் இடையேயும் உறவில்லை.

உங்களுக்கும் மரங்களுக்கும் இடையே ஆன உறவு முழுமையானதும், உடனடியானதும் ஆகும். அவையும் நீங்களும் நண்பர்கள். எனவே நீங்கள் பூமியிலிருக்கும் ஒவ்வொரு மரத்தின், புதரின், பூவின் நண்பன். நீங்கள் அங்கே அழிப்பதற்காக இல்லை எனவே அவற்றுக்கும் உங்களுக்கும் இடையே அங்கு சாந்தி இருந்தது.

(க்ருஷ்ணமூர்த்தியின் சஞ்சிகை.)

***********

நான் இயற்கையின் ஓர் அங்கம். நாம் வாழும் இந்த மிருகத்தனமான உலகை அதன் அத்தனை கொடூரங்கள், பயங்கரவாதம் முதலியவற்றோடும், நாம் வாழும் இவ்வசாதாரணமான உலகின் ஒவ்வொரு பகுதியின், நதிகளின், நிலத்தின் அழகையும் புரிந்து கொள்ளாமல் என்னைப் பற்றிய ஒரு தெளிந்த பார்த்துணர்தல் (perception) எனக்கு எப்படி இருக்க முடியும்? இவை அனைத்தோடும் எனக்கான உறவு என்ன? நான் அவையனைத்திற்கும் பார்வையின்றி இருக்கிறேனா? அவை அனைத்திற்கும் வாய்மூடி இருக்கிறேனா? அல்லது எனக்கு இருக்கும் குறிப்பிட்ட தீர்மானமான முடிவுகள் என் மீது அதிகாரம் செலுத்துகின்றனவா? முடிவுகள் எண்ணத்தின் விளைவு. இயற்கை எண்ணத்தின் விளைவு அல்ல.

(ஒரு உரையாடலில்)

*******

எனவே ஒன்றரை மணி அல்லது எவ்வளவு நேரமோ கழிந்து நீங்கள் உங்கள் சகல பிம்பங்களையும் விட்டு விட்டு வெளியே செல்கிறீர்கள். அதை முதன் முறையாகப் பார்ப்பது போல் மரத்தைப் பார்க்கிறீர்கள். அப்போது அந்த மரத்தின் எழிலால் உங்கள் கண்களில் நீர் துளிர்க்கும். பிறகு நீங்கள் மலைகளையும், குன்றுகளையும், நிழல்களையும் முன்பெப்போதும் பார்த்திராததனால் பார்ப்பீர்கள். பிறகு உங்கள் மனைவியை, நண்பரை, கணவரை முதன் முறையாகப் பார்ப்பீர்கள்; அவையனைத்தின் அழகையும் முதன் முறையாகக் காண்பீர்கள். அப்போது உங்களை நீங்கள் ஒரு பிம்பமுமின்றி பார்ப்பீர்கள். நீங்கள் ஒன்றுமேயில்லை என்பதை உணர்வீர்கள். முழுமையாக ஒன்றுமில்லாமல் இருப்பதில் மிகப் பெரிய அழகு இருக்கிறது. அப்போது உண்மை என்றால் என்னவென்று நீங்கள் தெரிந்து கொள்வீர்கள்.

(சானென் ஆகஸ்ட் 6, 1972.)

***********



பயன்பாட்டால் நிர்ணயிக்கப் பட்ட நோக்கத்துடனே நாம் மரங்களைப் பார்க்கிறோம்.

நாம் ஒருபோதும் ஒரு மரத்தைப் பார்ப்பதில்லை. அப்படிப் பார்த்தாலும் அந்த மரத்தை உபயோகப் படுத்தும் நோக்கில்தான் அதைச் செய்கிறோம், அதன் நிழலில் அமர்வதற்கோ, அல்லது அதை தட்டு முட்டு சாமான்களுக்காக வெட்டுவதற்கோ. வேறு வார்த்தைகளில் சொன்னால் பயன்பாட்டால் நிர்ணயிக்கப் பட்ட நோக்கத்தில்தான் நாம் மரங்களைப் பார்க்கிறோம். நமது சௌகர்யத்துக்காக உபயோகப்படுத்துவதை கற்பனை செய்யாமல் நாம் ஒரு மரத்தை பார்ப்பதேயில்லை. நாம் மண்ணையும் அதன் பொருட்களையும் அதே விதத்தில்தான் நடத்துகிறோம். பூமியின் மீது அன்பு இல்லை, பயன் படுத்துவதுதான் இருக்கிறது. ஒருவர் உண்மையிலேயே மண்ணை நேசித்தால் அம்மண் தரும் பொருட்களை பயன் படுத்துவதில் சிக்கனம் இருக்கும். அதாவது பூமியோடான நமது உறவைப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால் பூமி தரும் பொருட்களை பயன் படுத்துவதில் நாம் கவனமாக இருக்கவேண்டும்.

ஒருவரின் இயற்கையோடான உறவைப் புரிந்துகொள்வது அவருக்கும் அடுத்த வீட்டுக்காரருக்கும், அவருக்கும் அவர் மனைவிக்கும், குழந்தைகளுக்கும் உள்ள உறவைப் புரிந்து கொள்வதைப் போல் கடினமானது. நாம் அதைப் பற்றி சிந்தித்ததே இல்லை. நட்சத்திரங்களை, நிலவை, மரங்களைப் பார்ப்பதற்காக நாம் உட்கார்ந்ததே இல்லை. நாம் சமுதாய, அரசியல் செயல்பாடுகளில் மூழ்கி இருக்கிறோம். இச்செயல்பாடுகள் நம்மிடமிருந்து தப்புவதற்கானவை என்பது தெளிவு. மெலும் இயற்கையைத் தொழுவதும் நம்மிடமிருந்து தப்புவதற்காகவே.

நாம் எப்போதும் இயற்கையை உபயோகப்படுத்திக் கொண்டே இருக்கிறோம், தப்புவதற்காக அல்லது பயன்பாட்டிற்காக. நாம் எப்போதும் உண்மையாகவே நின்று பூமியையோ அதன் பொருட்களையோ நேசிக்கிறதில்லை. நமது உணவு, உடைகளுக்காக பயன்படுத்திக் கொள்கிறோமேயன்றி, நாம் மிகச் செழுமையான வயல்வெளிகளை கண்டு மகிழ்வுறுவதில்லை. நமது கைகளைக் கொண்டு நிலத்தை உழ நாம் விரும்புவதில்லை. நமது கரங்களால் வேலை செய்வது குறித்து நாம் அவமானம் கொள்கிறோம். உங்கள் கைகளால் நிலத்தில் நீங்கள் உழைக்கையில் ஒரு அசாதாரணமான விஷயம் அங்கே நிகழ்கிறது. ஆனால் இந்த வேலை கீழ் ஜாதி மக்களாலேயே செய்யப் படுகிறது.

மேல்தட்டு மக்களாகிய நாம் நமது கரங்களையே உபயோகிக்க முடியாத அளவுக்கு மிக முக்கியமானவர்கள்! எனவே நாம் இயற்கையுடனான நமது உறவை இழந்து விட்டோம். அந்த உறவை, அதன் முக்கியத்துவத்தை நாம் ஒரு தடவை உணர்ந்து கொண்டிருந்தால், சொத்தை உனதென்றும் எனதென்றும் பிரித்துக் கொள்ள மாட்டோம். ஒருவருக்கு ஒரு துண்டு நிலம் சொந்தமாயிருந்து அதில் அவர் ஒரு வீட்டையும் கட்டிக் கொண்டிருக்கலாம்; எனினும் அது ‘எனது’ அல்லது ‘உனது’ என்று பிறருக்கில்லாத பிரத்யேக உரிமை என்கிற பொருளில் இருக்காது. அது உறைவிடம் என்கிற அர்த்ததிலேயே இருக்கும். நாம் பூமியையும் அதன் பொருட்களையும் நேசிக்காமல் வெறுமனே பயன் மட்டும் படுத்துவதால் ஒரு அருவியின் அழகிற்கு நாம் நுண்புலனுணர்வு (sensitivity) அற்றவர்களாக இருக்கிறோம். வாழ்வின் தொடர்பை இழந்து விட்டோம். ஒரு மரத்தின் மீது சாய்ந்து நாம் அமர்ந்ததேயில்லை; எனவே நாம் இயற்கையை நேசிக்காததனால், மனிதர்களையும், விலங்குகளையும் நேசிப்பது எப்படி என்று நமக்குத் தெரியாது. தெருவில் இறங்கிப் பாருங்கள் அவற்றின் வால்களெல்லாம் வடிவற்றுப் போய் வண்டி மாடுகள் எப்படி நடத்தப் படுகின்றனவென்று. நீங்கள் உங்கள் தலையை ஆட்டி ‘ரொம்ப பரிதாபம்’ என்கிறீர்கள். ஆனால் நாம் மென்மையை, நுண்புலனுணர்வை, அழகான விஷயங்களுக்கான மறுமொழியை இழந்து விட்டோம். அந்த நுண்புலனுணர்வின் புதுப்பித்தலில்தான் நமக்கு உண்மையான உறவினைப் பற்றிய புரிதல் இருக்க இயலும். ஒரு சில ஓவியங்களை மாட்டுவதிலோ, ஒரு மரத்தை வரைவதிலோ, சில மலர்களைத் தலையில் சூடிக் கொள்வதிலோ அந்த நுண்புலனுணர்வு வருவதில்லை. இந்த பயன்பாட்டு நோக்கத்தை முற்றிலும் விட்டொதுக்கும் போது மட்டுமே அந்த நுண்புலனுணர்வு வரும். இதன் பொருள் நீங்கள் நிலத்தை உபயோகப்படுத்தவே கூடாது என்பதில்லை, அதை எப்படி உபயோகப் படுத்த வேண்டுமோ அப்படி உபயோகப் படுத்தவேண்டும். ‘உன்னுடையது’ ‘என்னுடையது’ என்று பிரிப்பதற்காகவன்றி, அன்பு செலுத்தப் படுவதற்காக, அக்கறையோடு கவனித்துக் கொள்ளப் படுவதற்காக இந்த பூமி உள்ளது. ஒரு சுற்றுச் சுவருக்குள் ஒரு மரத்தை நட்டு அது ‘என்னுடையது’ என்பது முட்டாள்தனம். பிறர் யாருக்குமின்றி எனக்கு மட்டுமே என்கிற தன்மையிலிருந்து விடு பெறும் போதே இயற்கைக்கு மட்டுமின்றி, மனிதர்க்கும் வாழ்க்கையின் முடிவில்லாத சவால்களுக்குமான நுண்புலனுணர்வு சாத்தியம்.

புனே, அக்டோபர் 17, 1948.

சுரண்டல்

சுரண்டல்   :  பிரசுரம்  :  சொல்வனம் 11-06-2010 இதழ் 27

வ.ஸ்ரீநிவாசன்


paradox-clockவேணுகோபால் ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து கொண்டு விட்டான். ஆறு மணிக்குள் கார் வந்துவிடும். ராணிப்பேட்டை, மேல் விஷாரம், ஆம்பூர், வாணியம்பாடி என்று போய் ‘கோடவுன்’களை ஆய்வு செய்து விட்டு மாலை நான்கு மணிக்குள் பாரிமுனையில் உள்ள அவன் வங்கிக் கிளைக்குப் போய் விட வேண்டும். இந்தத் தொழிற்சாலைகளுக்கு அவன் போவது இதுதான் முதல் தடவை. அதனால் சரியாக எத்தனை நேரம் ஆகும் என்று தெரியவில்லை.
ஐந்து மணிக்கு எழுந்துவிட வேண்டும் என்ற நினைப்பிலேயே ராத்திரி சரியாகத் தூங்கவில்லை. இத்தனைக்கும் மனைவியிடமும், தாயாரிடமும் எழுப்ப வேறு சொல்லியிருந்தான். அலாரமும் வைத்திருந்தது. இது என்ன பாதுகாப்பு இன்மையா, ஜாக்ரதை உணர்வா என்ன இழவோ தெரியவில்லை.
அவன் மனைவி குறைந்தது இரண்டு மணி நேரம் முன்னதாகவே எழுந்து கொண்டு இருப்பாள். வெந்நீர் தயார் செய்து, டிபன் ஏற்பாடு பண்ணி, டிபன் டப்பாவில் தோசையும் கட்டி வைத்து விட்டாள். அவன் அம்மாவும் விழித்துக் கொண்டு விட்டாள் என்பதைக் கூடத்திலிருந்து வந்த இருமல் தெரியப் படுத்தியது. அம்மா அதைத் தெரியப் படுத்துவதற்காகவே கூட இருமியிருக்கக் கூடும். சந்தேகம், அது சின்ன சந்தேகமோ, பெரிய சந்தேகமோ அதற்குக் கருணையும், நாகரிகமும் கிடையாது. அது எப்போது யார் பற்றி எதற்கு வரும், வராது என்றும் தெரியாது.
இந்தக் காலைக் கடனும் அப்படித்தான். அவனுக்கு அதிகாலையில் கிளம்பிச் செல்ல வேண்டிய வேலை இருந்தால் மூளையில் இருந்து வெகு தூரத்தில் இருக்கும் வயிற்றுக்கு எப்படித் தெரியுமோ தெரியாது, அன்று ஸ்ட்ரைக்தான். காப்பி, இரண்டு குவளைத் தண்ணீர் எதற்கும் மசியாது. இன்றைக்கு என்ன செய்வது என்று அவன் குழம்பினான். ரோடு மேலே போய் விட்டு ஆற்றிலோ குட்டையிலோ சுத்தம் செய்து கொள்ள அவனுக்குத் தெரியாது. இவ்விதமான ஆய கலைகள் அறுபத்து நான்கில் பலவும் நகர வாசிகளுக்குத் தெரிவதில்லை.
சரி, போகிற இடங்களில் பார்த்துக் கொள்ளலாம் என்று இரண்டு தோசையும், காப்பியும் சாப்பிட்டுவிட்டு வேணு கிளம்பி விட்டான். போன இடத்தில் ‘டாய்லட் எங்கே’ என்று அதுவும் ‘இதற்காக’ என்று கேட்பதே கூச்சமான செய்கையாய் இருக்கும். அங்கே பக்கட், தண்ணீர் இருக்குமோ இல்லையோ. ஆனால் மணி ஆகிவிட்டது. காரும் வந்து விட்டது. ரமேஷ்குட்டியும் எழுந்து கொண்டாயிற்று. காற்றில் கைகளைக் குத்தி, கால்களால் சைக்கிள் ஓட்டிக் கொண்டிருந்தது. இவனைப் பார்த்ததும் சிரித்தது. அது குளிக்கவில்லை. பல்லே இன்னும் முளைக்கவில்லை, தேய்ப்பதற்கு. ஆனால் புஷ்பம் போல் புதிதாக இருந்தது.
அதன் கன்னத்தில் ஆர முத்தமிட்டு விட்டு (“எச்சப் பத்து வரும்டா, கன்னத்தைத் துடைத்து விடு” என்று அம்மா கூடத்திலிருந்து கூறுவது அவனுக்குக் கேட்டது) அங்கே போய் “தூங்கினியாம்மா நன்னா” என்று கேட்டான். அம்மா தலை அசைத்தாள். அவளும் குழந்தை மாதிரிதான் இருந்தாள். அவளால் படுக்கையிலிருந்து நகர முடியாது. எழுந்து உட்கார இரண்டு மாதமாவது ஆகும் என்று டாக்டர் சொல்லியிருந்தார். அழகாகச் சிரித்தாள். அது மகனுக்கேயான சிரிப்பு. ‘ஜாக்ரதையா, பத்திரமா போய்ட்டு வா’ என்றாள்.
‘சரி வரேம்மா’ என்று சொல்லிவிட்டு சமையலறைக்குப் போய் மனைவியிடமும் சொல்லிவிட்டு, கவனமாக மறுபடியும் அம்மாவிடம் சொல்லிக் கொள்ளாமல் ஃப்ளாட் கதவை மூடிவிட்டுக் கிளம்பினான். வார நாட்களில் எத்தனையோ வாரங்கள் கழித்து இன்று சீக்கிரம் வீடு திரும்ப ஒரு வாய்ப்பு. சின்ன விஷயத்தில் கூட இன்று மனைவிக்கு கோபிக்க இடம் தந்து விடக் கூடாது.
டிரைவர் சலாம் வைத்துவிட்டு, பின் கதவைத் திறந்தார். வேணு புன்னகைத்தவாறே பின் சீட்டில் அமர்ந்துகொண்டு, டிபன் டப்பா, தண்ணீர் பாட்டில் இருந்த வலைப்பையை முன் சீட்டில் டிரைவர் சீட் அருகில் வைத்தான். ஒரு சிறிய தோல் பையில் அலுவலகக் காகிதங்கள் இருந்தன. அதையும் முன் சீட்டில் வைத்தான்.
வண்டி கிளம்பிய கொஞ்ச நேரத்தில் வெணுவுக்குத் தூக்கம் கண்ணைச் சுற்றிய மாதிரி இருந்தது. அப்படியே அம்பாஸிடர் காரின் பின் சீட்டில் குறுக்கிப் படுத்துக் கொண்டான். கண்களை மூடிக் கொண்டான். கார் ஒரே சீரான கதியில் ஓடிக்கொண்டிருந்தது.
சாயந்தரம் அலுவலகம் போனதும் அங்கே ஏகப்பட்ட வேலை காத்துக் கொண்டிருக்கும். மேனேஜர் வேறு லீவு. அதைத் தவிர வீட்டுக்குப் போகும் வழியில் அவர் கணக்கில் இருந்து ஐந்தாயிரம் ரூபாய்க்கு ஐந்து ரூபாய் நோட்டு புதுக் கட்டு ஒன்று கொண்டு வரச் சொல்லியிருந்தார். பாரிமுனையிலிருந்து ஆழ்வார்பேட்டை போகும் வழியில் நுங்கம்பாக்கம் எப்படி வந்தது என்று தெரியவில்லை. அவன் ஆய்வை முடித்துக் கொண்டு நேரே சீக்கிரம் வீட்டுக்குப் போய்விடுவானோ என்கிற சந்தேகம்தான். அவர் தொழிற்சங்கத் தலைவராக வேறு இருந்தார். ஒரு நாள் கூட ஐந்தரை மணிக்கு மேல் அலுவலகத்தில் இருந்தது கிடையாது. சில நாட்கள் இரவு ஒன்பது மணிக்கு தன்னந்தனியாக அந்த மூன்று மாடிக் கட்டிடத்தில் வேலை செய்து கொண்டிருக்கையில் வேணுவுக்கு ‘என்ன வேலை இது, ஏன் இதில் வந்து மாட்டிக் கொண்டோம்’ என்று இருக்கும்.
இன்று ஸ்கூட்டரும் கிடையாது. போவது வாடிக்கையாளரின் கார். கார் இவனை மாலை அலுவலகத்தில் விட்டு விட்டுப் போய்விடும். ஒன்று வேண்டுமானால் செய்யலாம். காரை வங்கி வாசலிலேயே காத்திருக்கச் சொல்லிவிட்டு ஒரு மணி நேரத்தில் வேலையை முடித்துக் கொண்டு காரிலேயே போய் விடலாம்.
வெய்யில் அடிக்க ஆரம்பித்து, சளசளப்பும் வாகன சப்தமும் அதிகரித்தன. ஒரு ஐந்து நிமிடம் தூங்கி இருப்போம் என்று நினைத்தான். ஆனால் அதற்குள் தோல் ஃபாக்டரி வந்து விட்டது. வயிறும் நல்ல வேளையாக இதுவரை தொந்தரவு செய்யவில்லை.
ஃபாக்டரி முதலாளி ஒரு முக்கியமான பிரமுகர். அரசியல் தொடர்புகள் உள்ளவர். பல நாட்கள் வெளி நாட்டில்தான் இருப்பார். பல வருட வாடிக்கையாளர். வங்கியின் நன்மதிப்பைப் பெற்றவர். இந்த ஆய்வெல்லாம் ஒரு சம்பிரதாயத்துக்குதான். ஆச்சர்யமாக அன்று அவரும் ஃபாக்டரி அலுவலகத்தில் இருந்தார். நான்கு ஊர்களிலும் அவருக்குக் கிளைகள் இருந்தன. ஒரு உதவியாளரை கூட அனுப்பினார்.
வேலை டக் டக் கென்று முடிந்தது. நான்கு தொழிற்சாலைகளையும் மிகக் குறுகிய நேரத்திலேயே பார்த்து ‘ஸ்டாக்’ சரி பார்க்க முடிந்தது. தோல் பதனிடும் நாற்றம்தான் சகிக்க முடியவில்லை. இரசாயனங்களோடும், கழிவுகளோடும் பிளாஸ்டிக் உறைகளை கைகளிலும், கால்களிலும் சுற்றிக் கொண்டு வேலை செய்துகொண்டிருந்த தொழிலாளர்களுக்கு என்ன வியாதியெல்லாம் இருந்ததோ என்ன வியாதியெல்லாம் வருமோ. இந்த நிலைமையில் அவர்களிடையே, அந்த உதவியாளரைப் பார்த்தே, பிறர் உணரத் தக்க பயம் நிலவியதும் தெரிந்தது.
கடைசி ஃபாக்டரியில் உதவியாளர் இறங்கிக் கொண்டார். முதல் ஃபாக்டரிக்கு மறுபடியும் சில கோப்புகளை ஒப்பு நோக்கப் போகையில் சாலையில் மர நிழலில் காரை நிறுத்தி டிபன் பாக்ஸிலிருந்து தோசையையும், தண்ணீரில் பாதியையும் சாப்பிட்டான். டிரைவர், அவன் சம்பிரதாயத்துக்கு ‘சாப்டறிங்களா’ என்று கேட்டதற்கு, ‘ஆச்சுங்க. நீங்க சாப்பிடுங்க’ என்றார். அதுவும் சம்பிரதாயத்துக்கு இருக்கலாம். இது தவிர ஒவ்வொரு ஃபாக்டரியிலும் காஃபி, டீ என்று கிடைத்தது.
ஃபேக்டரியில் முதலாளி வேணுவை சாப்பிட அழைத்தார். அவன் தயங்கியதும், ‘வெறும் சப்பாத்தியும், டீயும்தான். எல்லாம் வெஜிடேரியன்தான்’ என்று புன்னகைத்தார். தான் அவசரமாக ஊர் திரும்ப வேண்டி இருப்பதாக அவன் சொன்னதும் மீண்டும் வற்புறுத்தவில்லை. அவனிடம் அந்த ஃபேக்டரி அலுவலகத்தின் கணக்கர் ஒரு பையைக் கொண்டு வந்து கொடுத்தார். அதில் ஒரு தோல் பையும், சுருட்டி வைக்கப் பட்ட, செருப்புகளுக்கான, கறுப்பு நிறத் தோலும் இருந்தன. ‘இதெல்லாம் எதுக்குங்க சார்’ என்று அவன் கேட்டதும், ‘இது ஒண்ணுமில்லீங்க. எங்க கிட்டே துண்டு விழுவதுதான். இங்கே வர்ற ஒவ்வொரு ஆபீஸருக்கும் அன்பாத் தர்றது. எடுத்துக்கோங்க’ என்றார். அவனுக்கு அது குறைந்த பட்சம் நானூறு ரூபாய் இருக்கும் என்று தெரியும்.
இருவரிடமும் விடை பெற்றுக் கொண்டு வேணு கிளம்பினான். நாளை சுதந்திர தினம். நாளைக்கு மறு நாளிலிருந்து மைலாப்பூரில் இருந்த அவனது வங்கியின் அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரியில் ஒருவாரம் அவனுக்கு ‘டிரயினிங்’ இருந்தது. ஒருவாரம் நிம்மதியாக இருக்கலாம். சொல்ல முடியாது சிலசமயம் மேனேஜர் ‘டிரயினிங் முடிந்த கையோடு கிளைக்குக் கொஞ்சம் வந்து விட்டுப் போங்கள்’ என்று அழைக்கவும் கூடியவர்தான்.
திரும்பும்போது வெயிலும், போக்குவரத்தும் அதிகரித்து இருந்தன. டிரைவரிடம் பேச்சுக் கொடுத்துக் கொண்டே வந்தான். அவரைப் போன்ற பலரை அவன் பல நிறுவனங்களில் பார்த்து இருக்கிறான். அதாவது சிறிய அளவு தனியார் நிறுவனங்களில். அனுசரணையாகவும், சமயோசிதமாகவும், எப்படியும் வங்கியில் தங்கள் அலுவலக வேலையைக் கட்டாயம் முடித்துக் கொண்டு போய்விடும் கெட்டிக்காரர்களாகவும் ஒவ்வொரு கம்பனியிலும் யாராவது ஓருவர் இருப்பார். உண்மையிலேயெ கம்பனிக்கு, அதாவது முதலாளிக்கு செருப்பாய் உழைப்பார்கள்.
அவர்கள் கிடைக்கிற சம்பளத்துக்கு உழைப்பதாகச் சொல்லவே முடியாது. ஏதோ அவ்வாறு உழைப்பதற்காகவே பிறந்தது போல் உழைப்பார்கள். சேலம் கிளையில் வேலை செய்கையில் ஒரு கார் விற்பனைக் கம்பனியில், ஒரு மாவு மில்லில் எல்லாம் பார்த்திருக்கிறான். வங்கி பனிரெண்டு மணிக்கு மூடினால் பனிரெண்டரைக்கும், இரண்டு மணிக்கு மூடினால் இரண்டரைக்கும் வருவார்கள். கையில் குறைந்தது ஒரு மணி நேரத்துக்கான வேலை வைத்திருப்பார்கள். என்ன திட்டினாலும், கோபித்துக் கொண்டாலும், கதவைத் தாள் போட்டாலும் கோபமே வராது. சிரித்தபடியே இருப்பார்கள். ஒவ்வொரு ஊழியரிடமும் அவர் தன்மைக்கும், ஸதானத்துக்கும் தகுந்த மதிரி பேசி, சிரித்து, எப்படியாவது வேலைகளை முடித்துக் கொண்டு போய் விடுவார்கள். இது தினசரி நடக்கும். ஏதோ கம்பனியே அவர்களுடையது மாதிரி ஒவ்வொரு பைசாவையும் கணக்குப் பண்ணி காரியம் செய்வார்கள். அவர்கள் ஆபீசில் போய் பார்த்தல்தான் அவர்கள் உண்மை நிலைமை புரியும்.
இந்த டிரைவரும் அப்படித்தான் போலும். ‘ஏதாவது சாப்டறீங்களா பாய்” என்று வேணு கேட்டதற்கு, ‘ஆச்சுங்க, நீங்க ஏதாச்சும் சாப்டறீங்களா” என்றார். ‘அதுக்கில்லீங்க” என்றான் வேணு. அவர் எப்போது சாப்பிடுவார், எப்போது சிறு நீர் கழிப்பார், எப்போது காரிலிருந்து தன்னைப் பிரித்து எடுத்துக் கொள்வார் என்றே தெரியவில்லை. அவர் கன்னங்கள் ஒட்டிப் போய் இருந்தன. பல வருடங்களாக இந்த முதலாளியிடம் இருக்கிறாராம். வண்டியில் இருப்பவர் மனதறிந்து ஓட்டினார். ஒரு குலுக்கல், அவசரம், சடன் ப்ரேக் இல்லை.
காரியமெல்லாம் நினைத்தவாறே நடந்து ஒரு நாளும் இல்லாத திருநாளாக ஏழு மணிக்கெல்லாம் வீடு திரும்பியாகி விட்டது. ஆபீஸிலிருந்து வீட்டுக்கு காரில் சென்றது கொஞ்சம் சங்கடமாக இருந்தது. மேனேஜர் வீட்டில் இல்லாததால் பணத்தை அவர் மனைவியிடம் கொடுத்துவிட்டு உடனே புறப்பட முடிந்தது.
வீட்டில் சாதாரணமாக ஒன்பது மணிக்கு வருபவன் ஏழு மணிக்கெல்லாம் வந்தது ஆச்சர்யம். அம்மாவிடமும், மனைவியிடமும் செருப்புத் தோலைக் காட்டினான். ‘இதை எதுக்கு வாங்கிண்டு வந்தே’ என்றாள் அம்மா. ‘கொடுத்தாங்க. வாங்கிண்டு வந்தேன். எல்லாம் வழக்கமா தரதுதான். அவனவன் ஆயிரம் பண்றான். இது வெறும் செருப்புத்தோல். நூறு இருநூறுதான் இருக்கும். எங்காபீஸ்ல இதெல்லாம் எல்லாருக்கும் கிடைச்சிண்டுதான் இருக்கு’ என்றான். தனக்கும் இதெல்லாம் லஞ்சமில்லை என்று சமாதானப் படுத்திக் கொள்ள இந்த வார்த்தைகள் போதுமானவையாய் இருந்தன.
********
cobblerசுதந்திர தினம் எல்லோருக்கும் விடுமுறை. ஆனால் செருப்புத் தைப்பவர்கள், காய் விற்பவர்கள், வண்டி இழுப்பவர்கள், ரிக்ஷாக்காரர்கள் என்று சம்பாதித்தால்தான் அன்றைய சாப்பாடு என்று இருப்பவர்களுக்கும், தடையில்லாமல் பண வரவு இருக்கவேண்டும் என்று இருக்கும் வியாபாரிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் அது மற்றுமொரு வேலைநாளே!
நான்கு தெரு தள்ளி ஒரு செருப்புத் தைப்பவரைக் கண்டு பிடித்தான். அவரிடம் தோலைக் காட்டிக் கேட்டமைக்கு அவர் ஒரு ஜோடி பெரிய செருப்பும், ஒரு ஜோடி சின்ன செருப்பும் செய்யலாம் என்றார். வீட்டு விலசத்தை சொல்லி வரச்சொல்லிவிட்டு தோலை எடுத்துக் கொண்டு வந்தான்.
சற்று நேரத்தில் செருப்புத் தைப்பவர் வந்ததும் அவனும் மனைவியும் அளவு கொடுத்தார்கள். ஃப்ளாட் காம்பவுண்டில் ஸ்கூட்டர்கள் வைக்கும் இடத்தில் இருந்த நிழலிலேயே தன் உபகரணங்கள், பை இவற்றுடன் அமர்ந்து வேலையை ஆரம்பித்தார். ஒரு ஜோடிக்கு ஐம்பது ரூபாய் என்று ஆரம்பித்து ஜோடிக்கு நாற்பது என்று முடிவாயிற்று.
வேணு குளித்து, சாப்பிட்டுவிட்டு வந்த போது செருப்புகள் தயாராயிருந்தன. செருப்புத் தொழிலாளியிடமிருந்து லேசாக சாராய நெடி வீசியது. இதை முதலிலேயே கவனிக்கவில்லையே என்று நினைத்தான். நல்ல வேளையாக சில்லறையாக எண்பது ரூபாய் இருந்தது. அதை வாங்கிக் கொண்டு அவர் சென்று விட்டார்.
புதுச் செருப்புகளை வீட்டில் கொண்டு வந்து வைத்து விட்டு வேணு வெளியில் போக வேண்டுமாய் இருந்தது. நூலகத்தில் புத்தகங்களைக் கொடுத்துவிட்டு வந்தபோது மழை பிடித்துக் கொண்டது. அந்த சமயம் மழை வரும் காலமில்லை. என்றாலும் வெளியில் போகிற எண்ணம் போய் அன்று முழுவதும் தூக்கத்திலேயே கழிந்தது.
பயிற்சி மையம் ஸ்கூட்டரில் போக ஐந்து நிமிட தூரம்தான். பத்து மணிக்குப் போய்விட்டு மேனேஜர் தொந்தரவு இல்லையென்றால் ஐந்து மணிக்கு வந்து விடலாம். வந்தவர்களில் அவனுக்குத் தெரிந்தவர்கள் யாரும் இல்லை. சென்னையிலிருந்து அவன் மட்டும்தான். வகுப்பு அறை குளிர் பதனம் செய்யப் பட்டு இருந்தது. ஒரு மணிக்கு ஒரு தரம் டீ பிரேக் இருந்தது. பயிற்சியாளரின் விரிவுரை முதற்கொண்டு தூங்குவதற்கான சகல தூண்டுதல்களும் இருந்தன. மதியம் சாப்பாட்டுக்குப் பின் தூங்குவதைத் தவிர்க்கவே முடியாது. ஒரு மணிக்கு சாப்பாட்டு நேரம். அங்கேயே சாப்பாடு கொடுத்தார்கள்.
இன்னும் நாற்பது நிமிடம் இடைவேளை இருந்தது. வெளியே வந்த வேணு நோக்கமற்று காலாற நடக்க ஆரம்பித்தான். கபாலி கோவில் குளத்தைப் பார்த்து நாளாயிற்று போகலாமா என்று எண்ணி அந்தப்புறம் திரும்பி பத்து அடி வைத்திருப்பான். வலது கால் செருப்பு ‘பட்’டென்று அறுந்து விட்டது. அவனுக்கு திடுக்கிட்டுப் போய் விட்டது. ‘என்ன சனியன், புதுச் செருப்பு இப்படி அறுந்து விட்டதே’ என்று. நல்ல வேளையாக கூப்பிடு தூரத்தில் ஒருவர் செருப்புகளோடு அமர்ந்திருந்தார். அவரிடம் போய் செருப்பைக் காட்டி ‘இதைத் தச்சுக் கொடுங்க. அப்படியே இந்த செருப்பிலும் ஒரு எக்ஸ்ட்ரா தையல் போட்டு விடுங்க’ என்று இடது கால் செருப்பையும் கொடுத்தான்.
அவர் இரண்டையும் கையில் எடுத்துப் பார்த்துவிட்டு ‘இது வராதுங்களே சார். நீங்க எத்தனை தச்சாலும் புட்டுக்கிடும்’ என்றார்.
‘ஏங்க?’ என்றான் வேணு.
‘இது வெறும் அட்டைதானுங்களே’ என்றார் அவர்.
‘என்னங்க இது, இப்படி சொல்றிங்க. தோல் ஃபேக்டரிலே வாங்கினதுங்க’.
‘இல்லீங்க. எங்களுக்குத் தெரியாதா? வெறும் அட்டைதான். வேணும்னா தையல் போடறேன். ஒரு நாளைக்குத் தாங்காது. இல்லே வேற யார்கிட்டே வேணாலும் கேட்டுக்கிடுங்க. அடுத்த தெருவுலே கூட ஒருத்தர் இருப்பாரு’.
வேணுவுக்கு திடீரென்று எல்லாம் புரிந்தது.
கம்மிய குரலில் ‘பரவாயில்லீங்க. நீங்க போடுங்க’ என்றான்.