FUTURE IS NOW - J Krishnamurti.

பிறப்பு, இறப்பு என்பது உண்மையே இல்லை. அத்தகைய பொய்யான தோற்றத்தை நமது மனமே உருவாக்கிக் கொள்கிறது. மனம் தனக்கென்று ஒரு உடலை உருவாக்கிக் கொள்கிறது. அதைக் கனவு மழையில் நனைத்துத் துன்பப் படுத்துகிறது. - ரமண மகர்ஷி.

Search This Blog

Friday, March 12, 2010

எதைப் பற்றியும் (அ) இது மாதிரியும் தெரிகிறது. (5)

எதைப் பற்றியும் (அ) இது மாதிரியும் தெரிகிறது. (5) பிரசுரம் : வார்த்தை ஆகஸ்ட், 2008.
வ.ஸ்ரீநிவாசன்.

சில நாட்களுக்கு முன் 'தாரே ஜமீன் பர்' படம் பார்த்தேன். ஆமீர் கான் இயக்கி நடித்துள்ள படம். என்னைப் பொருத்தவரையில் இது ஒரு 'ஃபீல் குட்' படம். அந்தக் கால ரீடர்ஸ் டைஜெஸ்ட் மாதிரி. 'லகானோ'டு சிறந்த வெளி நாட்டு பட பரிசுக்கு ஆஸ்காரில் போட்டியிட்டு 'நோ மேன்ஸ் லேண்டி'டம் பரிசை இழந்த 'அமேலி' மாதிரி.

'தாரே' யில் குறைகள் உண்டு. அதன் நோக்கம் பரிசாகக்கூட இருக்கலாம். ஆனல் நம் வாழ்க்கை முறை பற்றி சில அடிப்படை கேள்விகளை ஆமீர் கேட்கிறார். பொது கவனத்தை சில முக்கிய விஷயங்களை நோக்கி திருப்புகிறார். தானே தயாரித்து தானே இயக்கி உள்ள இப்படத்தில் இந்த ஹிந்தி சூப்பர் ஸ்டார் இடைவேளைக்கு நொடிகள் முன்புதான் தலைகாட்டுகிறார். ஹே ராம் !

இந்திப் படவுலகில் ஆரம்பத்திலிருந்தே நல்ல முயற்சிகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. பழைய காலத்திய கே.ஏ. அப்பாஸ், குரு தத், (நான் இவர்கள் படம் பார்த்ததில்லை) பிமல் ராய் (மது மதி ஒரு காவியம்) பிறகு ரிஷிகேஷ் முகர்ஜி, பாசு சாட்டர்ஜி போன்றவர்களின் ஃபீல் குட் படங்கள், பாசு பட்டாச்சார்யா, அப்போது வந்த புது வெள்ளத்தில் ஷ்யாம் பெனெகல், மணி கவுல், கிரீஷ் கார்நாட், அமோல் பாலேகர், கொவிந்த் நிஹல்னி, கேதன் மேத்தா, விஜய மேத்தா, சாய் பரஞ்ச்பயி முதலியோர், எக்ஸிஸ்டென்ஷியல் '27 டௌன்', பின் நவீனத்துவ 'ஜானே பீ தோயாரோ', தஸ்தாயெவெஸ்கியன் 'பெஸ்டோன்ஜி' என்று எவ்வளவு முயற்சிகள், சாதனைகள். நஸ்ருத்தின் ஷா, ஓம் புரி, ஷப்னா ஆஸ்மி முதலிய மகத்தான நடிகர்கள்.

இதில் விசேஷம் என்னவென்றால் எனக்கு இந்தி மிக சுமாராகத்தான் புரியும். என் பள்ளிக் காலங்களில் இந்தி எதிர்ப்பு உச்சத்தில் இருந்தது. பல நாட்கள் விடுமுறை கிடைத்தது. ஊர்வலங்களும், கோஷங்களும் போலிஸ் லாரிகளுமாய் நாட்கள் கழிந்தன. மாணவர்கள் லாரிகளில் ஏற்றப்பட்டு ஊருக்கு வெளியே கொண்டு விடப் பட்டார்கள். என் நண்பன் குலசேகரன் போலிஸிடம் மாட்டிக் கொண்டன். நாங்கள் எல்லாம் அந்தப் பக்கமே போக வில்லை. அரை மணி கழித்து எங்கள் முன் வந்து நின்றான். 'எப்படிடா?" என்று கேட்டால், 'நழுவி ஓடி விட்டேன். பிறகு தலை வகிடை மாற்றி எடுத்துக் கொண்டு, சர்ட்டை திருப்பி போட்டுக் கொண்டு அதே போலிஸிடம் போய் குட் மார்னிங் வைத்தேன்' என்ற கதையைச் சொன்னான். எங்களுக்கு அவனிடத்தில் எந்த மாறுதலும் தெரியவில்லை. மராத்தியை தாய் மொழியாகக் கொண்ட என் ஆருயிர் நண்பன் ஆனந்த ராவ் "இந்தி எனும் மந்தியை செந்தீ கொண்டு விரட்டுவோம்" என்று பல இடங்களில் பேசி கைதட்டல் பெற்றான். நாங்கள் இந்திப் பரீட்சையில் வெத்துப் பேப்பரைக் கொடுத்து எங்கள் எதிர்ப்பையும், வீரத்தையும் நிலை நாட்டினோம். பிறகு 20 வருடம் கழித்து கொல்கொத்தாவில் மூன்று வருடங்கள் பணி புரிந்த போது ஆந்திரா, கர்நாடாகா, கேரளாவிலிருந்து வந்த சக ஊழியர்கள் சுலபமாக இந்தியில் புழங்குகையில் நான் திண்டாடும் போதெல்லாம் குலசேகரனை நினைத்துக் கொள்வேன். என்னதான் வகிடை மாற்றி, சர்ட்டை திருப்பிப் போட்டாலும் இந்தி மட்டும் வரவில்லை. என் நண்பன் ஆனந்த ராவ் அஹமதாபதிலும், இன்னொரு நண்பன் டெல்லியில் ஒரு பொருளை 'பச்சீஸ்' ரூபாய்க்கு தருகிறேன் என்ற கடைக்காரனிடம் 'ரொம்ப அதிகம், பச்சாஸ் ரூபாய்க்குத் தந்தால் தான் வாங்குவேன்' என்று அடம் பிடித்துக் கொண்டும் இருந்தனர்.

பள்ளி முடிந்து கல்லூரி வந்ததும் அங்கு விடுதி மாணவர்களுக்கும், தி.மு.க.வினருக்கும் இடையே பெரிய மோதல் வந்தது. மாநிலக் கல்லூரி விடுதிக்கும், பக்கத்தில் இருக்கும் குப்பத்துக்கும் இடையே சண்டைகள் வந்தன. மாணவர் கலவரம் நீடித்தது. பல நாட்கள் கல்லூரி மூடியே கிடந்தது.

கிட்டத் தட்ட அந்த சமயத்தில் சக்தி சாமந்தாவின் படம் 'ஆராதனா' வெளியிடப் பட்டது. ராஜேஷ் கன்னாவும், ஷர்மிளா டாகூரும், கிஷோர் குமார், எஸ்.டி. பர்மன் என்ற மாமேதைகளும் தமிழர்களின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டு விட்டார்கள். பின்பு சில வருடங்களில் ஷர்மிளாவைப் போலவே லட்சுமியும், ராஜேஷ் கன்னாவைப் போலவே கீழ்ப் பார்வை பார்த்து கமலஹாஸனும் நடிக்க ஆரம்பித்தனர்.

இந்தி பேசும் கதாநாயகிகளுக்கு எப்போதும் இங்கு ஆதரவு அதிகம். குறிப்பிட்ட நாயகிகள் வேண்டும் என்று தவம் கிடக்கும் கதாநாயக காந்தங்களைப் பற்றி நமக்குத் தெரியும். நூறு பூக்களின் பெயர்களை சடசடவென்று சொல்லி தன் தமிழ் பற்றை எங்கும் பறை சாற்றிக் கொள்ளும், இவ்வருடம் ஃபிலிம் ஃபேரின் வாழ் நாள் சாதனையாளர் விருதைப் பெற்றுள்ள, சிவகுமார் கூட இந்தி பேசும் நாயகிக்கு தன் குடும்பத்தில் இடம் தர வேண்டியதாய்ப் போயிற்று. நாம் இந்தி திணிப்பைத்தானே எதிர்த்தோம் !

***********

புதுமைப் பித்தன் ஓரிடத்தில் 'எல்லாம் ஒரு சூத்திரப் படி நடக்கிறது என்பவர்கள் ஆத்திகர்கள் என்றும் அப்படி இல்லை என்பவர்கள் நாத்திகர்கள்' என்றும் சொல்லியிருப்பார். புதுமைப் பித்தனின் பல வாசகங்களைப் போன்றே இக்கூற்றும் ஒரு புதிய வெளிச்சத்தைத் தந்தது. எனினும் வேறொரு கோணத்தில் அல்லது அணுக்கத்தில் தெரிவது: நாத்திகர்கள்தானே எல்லாம் ஒருசூத்திரப்படி, ஒரு காரண காரியப்படி, தர்க்கப்படி, அறிவுக்கு திருப்தி தருவதாக வேண்டும் என்கிறார்கள். அப்படி விளக்க முடியாதவற்றை மூட நம்பிக்கை என்கிறார்கள். ஆத்திகர்கள் கடவுள் சித்தம் என்ற காரண, தர்க்க, சூத்திரங்களை மீறிய நம்பிக்கையின் பாற்பட்டு எல்லாவற்றையும் விளக்கிக் கொள்கிறார்கள், விளக்குகிறார்கள்.

தனது மணி விழாவில் (சுமார் 20, 30 பேர் இருந்த) மைலப்பூர் மாடி ஒன்றில் க.நா.சு. "மறுபடி இந்த அறுபது வருடங்கள் வாழக் கிடைத்தால் அதை அப்படியே இப்போது வாழ்ந்த மாதிரியே வாழ்வேன்." என்று கூறியது (அது போன்ற அர்த்தம் கொண்ட பிரயோகத்தை நான் முதன் முதலாகக் கேட்டேன்) மிகவும் ப்ரொஃபௌண்ட்டாகவும், பிரமிப்பாகவும் இருந்தது. ஆனால் உடனே தோன்றியது, மீண்டும் இப்பொதும் பல்லாண்டுக்குப் பிறகும் தோன்றுகிறது : "எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தால் வேறு மாதிரிதான், வேறு, வேறு மாதிரிதான் வழ்வேன். அதே வாழ்க்கையை அப்படியே வாழ்வதா. எப்பேற்பட்ட தண்டனை? நினைவு இருந்தாலும் இல்லாமல் இருந்தாலும். விட்ட வாய்ப்புகளை விடாது, பெற்ற வாய்ப்புகளைப் பெறாது, சொல்ல மறந்த வார்த்தைகளைச் சொல்லி, தவறிச் சொன்ன வார்த்தைகளைத் தவிர்த்து... அப்பா எவ்வளவு செய்யலாம்..சஸ்பென்ஸ்ஃபுல்லாக.

சம்பத்தின் ஒரு கதையில் (சாமியார் ஜூக்குப் போகிறார்) ஒரு பெண் ஆண்களை 'முப்பத்தைந்து வயதிலும் மாஸ்டர்பேடிங் பாஸ்டர்ட்ஸ்' என்று ஏசுவாள். ஆனால் அறுபது தாண்டிய மனைவியை இழந்த, மனைவியோடு இருக்கிற பலர் அந்தக் கூற்றின் எரிச்சலும், ஏச்சும், இளக்காரமும், இன்விடேஷனும் அர்த்தமற்றவை என்பதை இடுங்கிய கண்களோடும், புதைந்த வெற்று ரகஸ்யங்களோடும், சிலர் சுரத்தின்றியும் சொல்லுவர்.

இப்படி பல விஷயங்கள் ஒவ்வொரு சமயம் முற்றிலும் எதிரிடையாகப் போய் விடுகின்றன. முதன்முறை படித்த மாத்திரத்திலேயே கண்களில் நீர் மல்கச் செய்த பீஷ்மனும், அவனது பிரம்மச்சரியமும் நீர்த்து அர்த்தமற்று போயின; ராமனின் பிடிவாத சத்யங்களைப் போல்.

"Truth in Art is that whose contrary is also true" - என்கிறார் ஆஸ்கார் ஒயில்ட். இதைத்தான் "Comic Truth" என்கிறார் போர்ஹே. எனக்குத் தோன்றுவது "கண்ணாடியின் பிம்பம்".

**********

இந்த வாழ்க்கையை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று தெரியாத மனிதன் என்னென்னவோ செய்கிறான். எழுதுவதும் அதில் ஒன்று. என்ன செய்வது என்று தெரியாமல் எதையெதையோ செய்வதைப் பற்றி எழுதுவது நல்லிலக்கியமாகவும் 'தெரியும்' என்று எழுதுவது அவ்வளவாக நல்லிலக்கியம் இல்லாததாகவும் ஆகின்றன.

எத்தனை நூல்கள். எல்லா நூலுக்கும் ஒரு வாசகனாவது இருந்து விடுகிறான். ஒவ்வொரு வாசகனுக்கும் ஒரு நூலாவது இருந்து விடுகிறது. ஆனால் நூல்களை வாசிப்பதிலும், வாங்கிச் சேர்ப்பதிலும், புரட்டிப் பார்ப்பதிலும், நுகர்ந்து மகிழ்வதிலும், துசி தட்டி வைப்பதிலும், அட்டை பொடுவதிலும், அட்டையை அவிழ்ப்பதிலும், நூல் நிலையங்களிலும், புத்தகக் கடைகளிலும் மணிக் கணக்காக நின்று புத்தகங்களுக்கு இடையில் காலம் கழிப்பதிலும், அவை பற்றி பேசுவதிலும் சுகம் காணும், இந்தப் புத்தகப் 'பித்த'ர்கள் 'லீவ் அஸ் விதௌட் புக்ஸ், வீ வில் கோ மேட்' என்ற தஸ்த்யெவெஸ்கியின் கூற்றை அப்படியே ஆமோதிப்பார்கள்.

புத்தகம் எழுதுவது, நாவல், சிறுகதை பற்றியெல்லாம் சீரியஸ்ஸாக பாடம் மாதிரி எழுதுவது படிக்க சுவாரஸ்யமாக இருப்பதில்லை. இது எனக்கு பிறவியிலிருந்தே வருகிற பாடம் பற்றிய ஒவ்வாமை. ஆனால் ஒரு கட்டுரையோ நூலோ கூட தெரிவிக்க முடியாதவற்றை சில மாகலைஞர்கள் ஒரு வாக்கியத்தில் சொல்லி விடுகிறார்கள்.

நாவல் பற்றி காஃப்கா சொன்னது என்றென்றும் மறக்க முடியாதது. 'Novel is an ice axe to break the ocean frozen inside us'.

புத்தகப் பித்தர்கள் போல், இசைப் பித்தர்கள், நடனப் பித்தர்கள், ஓவியப் பித்தர்கள், நாடகப் பித்தர்கள், சினிமா பித்தர்கள் இருக்கிறார்கள். இந்தப் பித்து ஏன் பிடிக்கிறது? மைக்கேலாஞ்சலோ சொன்னது போல ஒரு கலை வெளிப்பாட்டின் முன் மனிதன் தன் ஏகாந்தத்தை மீட்டெடுத்து, பிரபஞ்சத்தின் நிசப்தத்தை செவி மடுப்பதால். (Man regains his solitude and listens to the silence of the universe).

*******

ஒரு உரையாடலில் தி.மு.க. வளர்ந்து ஆட்சியைப் பிடித்ததற்கு முக்கிய காரணம் அண்ணாவா, எம்ஜியாரா, கலைஞரா என்ற கேள்வி எழுந்தது. எனக்குத் தோன்றிய பதில்: தாமஸ் ஆல்வா எடிசன். (கெயாஸ் தியரி?)

*********

No comments: