FUTURE IS NOW - J Krishnamurti.

பிறப்பு, இறப்பு என்பது உண்மையே இல்லை. அத்தகைய பொய்யான தோற்றத்தை நமது மனமே உருவாக்கிக் கொள்கிறது. மனம் தனக்கென்று ஒரு உடலை உருவாக்கிக் கொள்கிறது. அதைக் கனவு மழையில் நனைத்துத் துன்பப் படுத்துகிறது. - ரமண மகர்ஷி.

Search This Blog

Friday, March 12, 2010

எதைப் பற்றியும் (அ) இது மாதிரியும் தெரிகிறது (11)

எதைப் பற்றியும் (அ) இது மாதிரியும் தெரிகிறது (11)
'ஒரு துளி கல்கத்தாவும், வேறு சிலவும்' பிரசுரம் : வார்த்தை பிப்ரவரி, 2009.
வ.ஸ்ரீநிவாசன்.

கல்கத்தா (அப்போது அந்நகரத்தின் பெயர் அதுதான்) வில் மூன்று வருடம் (1987-90) உத்யோக நிமித்தமாக இருந்தேன். மிகப்பல அதிசயங்கள் நிறைந்த ஊர் அது. ஜோதி பாசு முதலமைச்சராக இருந்தார். அவரை அடுத்து புத்ததேவ் பட்டாசார்யாதான் முதலமைச்சராவார் என்பது அப்போதே அனைவருக்கும் தெரியும். ஜோதி பாசு அவர்களை யாரும் எப்போதும் சென்று பார்த்துவிடலாம். ஒரு ரூபாய்க்குள் மதிய உணவை முடித்துக் கொள்ளலாம். அதே பணத்துக்குள் டிக்கட் வாங்கி டிராமில் வெகு தூரம் சென்று வரலாம். (டிக்கட் வாங்காமலும்). டாக்ஸி, ஆட்டோ ஓட்டுபவர்கள் மீட்டர் காட்டும் தொகைக்கு மேல் இருபத்தைந்து பைசா கூட வாங்க மாட்டார்கள். அதுதான் உண்மையான சுய மரியாதை. அதே போல் அனைவரின் பெயரின் பின்னாலும் நிச்சயம் ஜாதிப் பெயர் இருக்கும். ஆனால் ஜாதி துவேஷம் இல்லாத மக்கள். மார்வாரிகளை 'எங்கள் மாநிலத்தை விட்டு வெளியே போ' என்று குரலெழுப்பும் குழுக்கள் இருந்தன. அதே சமயம் அத்தகைய ஃபாசிஸப் போக்குக்கு எதிராக நாடகம் நடத்துபவர்களும் இருந்தனர்.

இரண்டே வார்த்தைகளில் அந்நகர் பற்றி சொல்ல வேண்டுமென்றால் 'sweat and sweet' என்று சொல்லலாம். கிட்டத்தட்ட ஒன்பது மாதங்கள் வியர்த்து ஒழுகும். நெடுங்கோடையில் குளித்த அடுத்த நிமிடம் வியர்வை பெருக ஆரம்பித்து விடும். பேருந்துகளில் பயணிக்கையில் மழையில் சொட்ட சொட்ட நனைந்த மாதிரி ஆகிவிடும். காலை முதல் வேலையாக இனிப்பு சாப்பிடுவார்கள். இனிப்புக் கடைகள் திறந்துவிடும். ரசகொல்லாவும், லெயின்சாவும், மிஷ்டி தோயும் மறக்க முடியாதவை. விருந்தோம்பலில் வங்காளிகள் அற்புதமானவார்கள். இனிப்பு, தேனீர், சிகரட் எல்லார் வீடுகளிலும் எப்போதும் கிடைக்கும்.

சராசரி வங்காளிக்கும் தாகூரைத் தெரியும். நீங்கள் வேறு யார் பெயரையும் சொன்னாலும் 'தாகூரிடம் எல்லாம் இருக்கிறது, அது போதும்' என்று சொல்லிவிடுவார்கள். ஹென்றி ஃபோண்டா வாரம், சார்லி சாப்ளின் வாரம் என்று நகரின் ஷகரான சினிமா ஹால்களில் படங்களைப் போடுவார்கள். கூட்டம் அலை மோதும். 'அதிகாரி' என்று என்னுடன் பணியாற்றிய நண்பர் ஒருவர் இருந்தார். அவர் சொல்லுவார். "தெருவில் ஒரு தவளை தத்துகிறது என்றால் அங்கு நூறு வங்காளி வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பான்." காளீ, கம்யூனிஸம், கால்பந்து மூன்றும் அவர்களது மூச்சு.

சந்தா என்று துர்கா பூஜை சமயம் விரட்டிப் பணம் வாங்குவார்கள். அதே போல் ரயில் நிலையங்ககளில் போர்ட்டர்கள் (கட்சியின் அடையாள அட்டை அணிந்துகொண்டு) மிரட்டிப் பணம் பறிப்பார்கள். செங்கல் தெரிய கட்டப் பட்ட வீடுகளில் குடி இருப்பார்கள். அலுவலகங்களில் பலரும் ஏதோ தர்மத்துக்கு வேலை செய்வது போல் வேலை செய்வார்கள். கிரிக்கட், கால்பந்து போட்டிகளை தொலைக் காட்சி வைத்து அலுவல் நேரத்திலேயே பார்ப்பார்கள்.

நம்மூர் மழை ஒரு மழையே இல்லை. பிரளயம் போல் மழை பெய்யும். ஒரு காலத்தில் தினமும் சாலைகளையும், தெருக்களையும் மாநகராட்சியினர் தண்ணீரால் கழுவி விடுவார்களாம். சிலை வைப்பது, சாலைகள், இடங்களின் பெயரை மாற்றுவது போன்ற கெட்ட பழக்கங்கள் தமிழகத்திற்கு வங்காளத்திடமிருந்துதான் வந்திருக்க வேண்டும். நான் அங்கு இருந்த காலத்தில் யாரும் தமிழ்நாட்டைப் போலவே பழைய பெயர்களை மறக்கவில்லை.

தமிழர்கள், ஏன் தென்னிந்தியர்கள் அதிகம் இருந்த பகுதி தெற்கு கல்கத்தா. 'லேக் மார்க்கட்', 'லேக் கார்டன்ஸ்' போன்ற பகுதிகளில் அதிகம் தமிழர்கள் வசித்து வந்தார்கள். காய்கறி மார்க்கட்டுக்குள் நுழைந்ததும் "கத்தரிக்காய் வேணுமா? சேனைக் கிழங்கு புதுசு" என்று வங்காளி கடைக்காரர்கள் நாம் தமிழர் என்பதை பார்த்தவுடனே தெரிந்துகொண்டு அழைப்பார்கள். என் நண்பர் அதிகாரி "சௌத் கல்கத்தா முழுக்க உங்க ஆட்களாகவே இருக்கிறீர்கள். வெகு விரைவில் 'தனி நாடு' கேட்கப் போகிறீர்கள்" என்று கிண்டல் செய்வார். மிகச் சரியாக உங்கள் மாநில அடுத்த முதல்வர் ஜெயலலிதாதான் என்றும் அவர் சொன்னார்.

ஹோமியோபதி மருத்துவர்கள், அலோபதிக்காரர்களை விடவும் கொடி கட்டிப் பறந்து கொண்டிருந்தார்கள். என் வீட்டின் அருகில் மேற்கு வங்காள அரசின் ஆஸ்தான ஓவியர் இருந்தார். அவருக்கு ஹோமியோபதி ஒரு பொழுதுபோக்கு. சிறு சிறு வைத்தியங்களுக்கு அவரிடம் போவோம். ஒருவருக்கு அறுவை சிகிச்சை செய்துதான் நீக்க வேண்டும் என்று கண்ணருகில் வந்திருந்த பாலுண்ணியை அவர் மூன்றே நாட்களில் வெறும் மருந்துகளாலேயே குணப்படுத்தினார்.

'வ'வும் 'ப'வும் அவர்களிடம் மாறி வருவது குறித்து பல ஜோக்குகள் உண்டு. பிபேகாநொந்தோவின் இயற்பெயர் நரேந்த்ரொ தொத்தோ. பல மகான்களையும், மாமேதைகளையும் வங்கம் நமக்குத் தந்திருக்கிறது. இன்றும் இந்தியாவின் பல துறைகளிலும் வங்காளிகள் பளிச்சென்று தெரிகிறார்கள். ஆனால் ஒன்று, அவர்களைப் பொருத்த வரையில் அவர்கள் அனைவரும் வங்காளிகள். இராமக்ருஷ்ண பரமஹம்சர், இரவீந்திரநாத் தாகூர், சரத் சந்திரர், பங்கிம் சந்திரர், உத்தம் குமார், சௌமித்ர சாடர்ஜீ, அஷோக் குமார், கிஷோர் குமார் முதல் இன்றைய புத்த தேவ் பட்டாச்சார்யா, மம்தா பேனர்ஜீ, சோம்நாத் சட்டர்ஜி, பிரணாப் முகர்ஜீ, சவுரவ் கங்கூலி முதலிய பலரும் வங்காளிகளேயன்றி பிராமணர்கள் அல்லர்; சுபாஷ் சந்திர போஸ், ஜக்தீஷ் சந்திர போஸ், ஜ்யோதி பாஸூ, சித்தார்த்த பாசு அனைவரும் வங்காளிகளேயன்றி பாசுக்கள் அல்லர்; ம்ருணாள் சென், அபர்னா சென், அமர்தியா சென், சுசித்ரா சென், சுஷ்மிதா சென் எல்லோரும் வங்காளிகளேயன்றி சென்கள் அல்லர். அதனால்தான் அவர்களுக்கு பாலாறு, காவேரி, முல்லைப் பெரியாறு பிரச்னைகள் வருவதில்லை போலும்.

நோபல் பரிசுக்கும் வங்காளத்துக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. தாகூர், அமர்த்தியா சென் இருவரும் வங்காளிகள். அன்னை தெரஸா, சி.வி.இராமன் (தமிழர்) கல்கத்தாவில் வாழ்ந்தவர்கள். ஆஸ்காரின் வாழ்நாள் சாதனையாளர் விருது பேற்ற ஒரே இந்தியர் சத்யஜித் ரே. நானறிந்த பரிபூரணமான கலைஞர்களில் மிக முக்கியமானவர் ரே. எவ்வளவு திறமை, எவ்வளவு மேதமை, எவ்வளவு எளிமை. நுண் தகவல்களுக்கு கடவுளைப் போன்றவர். "We live only once; we can do lot of things which others are not doing" என்று சொன்னவர், அதை வாழ்ந்தும் காட்டி விட்டார். 'தி கான்டம்பொரரி சினிமா' வில் பெனிலொப் ஹூஸ்டன், "வேறு யாரும் வரும் வரைக்கும் சத்யஜித் ரே யின் வங்காளம்தான் சினிமாவின் இந்தியா" என்கிறார். யாருடைய தமிழ்நாடும் இன்னும் சினிமாவின் இந்தியா ஆகவில்லை. விவேகாநந்தரைத் தெரியாத மாநிலம் கிடையாது. நேதாஜியின் பெயரில் சாலை இல்லாத நகரம் தமிழகத்தில் கிடையாது. நமது சுதந்திரப் போராட்டத் தலைவர்களான வ.உ.சி.யையும், ராஜாஜியையும் தமிழகத்திலேயே பலருக்குத் தெரியாது.

என் வீட்டில் 'ராதா' என்கிற பெண் வீட்டு வேலை செய்தார். என் மனைவிக்கும் அவருக்கும் இடையே 'துவிபாஷி', மழலையர் பள்ளியில் சேர இருந்த என் மகள். ராதா எங்கள் வீட்டு உரிமையாளார் வீட்டிலும் வேலை செய்து வந்தார். இருபது இருபத்திரண்டு வயதுக்குள் இருக்கும். அவருக்கு திருமணம் ஆகி குழந்தையும் இருந்தது. அவரது தாயார் முதலில் எங்கள் வீட்டு உரிமையாளர் வீட்டில் வேலை செய்து வந்து இப்பொது இவர். வேலைக்கு வந்து முதல் வாரத்தில் ஒரு சிறு செடி வாங்கி வந்து எங்கள் வீட்டில் வைத்தார். அது 'மணி ப்லான்ட்' என்று பின்பு தெரிந்து கொண்டோம். அவரது வறுமை கண் கூடாகத் தெரியும். எனினும் அவருக்கு ஒரு அழகுணர்ச்சியும், அக்கறையுமிருந்தது. (மத்திய அரசு நிறுவனங்களில் உயர் பதவியிலிருந்த பொறியியலாளரான என் நண்பர் ஒருமுறை கூறினார். "வெயிலும், புழுதியும் நிறைந்த வேலைக் களங்களிலிருந்து மாலை வேலை முடிந்து ஜீப்பில் வரும் உயர் பதவியாளர்கள் சோர்ந்து தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டு வருவார்கள். நாள் பூரா நேரடியாக வேலை செய்த தொழிலாளர்கள், குறிப்பாக பெண்கள் சந்தோஷமாக சிரித்துப் பேசியபடி உல்லாஸமாக லாரிகளில் வருவார்கள்.")

ஒரு முறை நாங்கள் சென்னை வந்து சில நாட்கள் கழித்துத் திரும்பிப் போகையில் ராதா வேலைக்கு வரவில்லை. வீட்டுக்காரர் வீட்டில் அவரை நிறுத்தி விட்டார்கள். மறுபடி ஒரு நாள் நாங்கள் வெளியே சென்றிருக்கும் போது அவர் வந்து போயிருக்கிறார். பக்கத்து வீட்டுக் காரர் மூலம் அது தெரிந்தது. மறுபடி அவரைப் பார்க்கவேயில்லை. அவ்வளவு பெரிய ஜன சமுத்திரத்தில் ஆயிரக் கணக்கான குடிசைகளின் நடுவே பாஷை தெரியாமல் அவரை எங்கு தேடுவது. இருபது வருடம் கழிந்தும் அவரை நாங்கள் நினைத்துக் கொள்கிறோம்.


அவருக்குப் பின் வீட்டு வேலை செய்ய வந்த பெண்மணி வங்காளிகளைப் போல் சேலை அணிந்து இருந்தார். அவர்களுக்கு யூனியன் உண்டு. அதன்படிதான் சம்பளம். அவர்கள் புடவை கட்டும் விதமும் ஆண்கள் வேட்டி அணியும் விதமும் அவர்களை வங்காளிகள் என்று காட்டிக் கொடுத்துவிடும். பஞ்சகச்சமாக அணிந்த வேட்டியின் ஒரு நுனி ஜிப்பா பைக்குள் இருக்கும். பெரும்பான்மையான வங்காளிகள் கண்ணாடி அணிந்து இருப்பார்கள். சிகரட் பிடிப்பார்கள். ஒல்லியாக இருப்பார்கள். வங்காளியிலேயே பேசுவார்கள். 'இந்தி நீச மொழி' என்பார்கள். அனைவருக்கும் இந்தி நன்றாகத் தெரியும். கல்கத்தாவின் குப்பைக்கும், ஊழல்களுக்கும் பிற மாநிலங்களிலிருந்து (குறிப்பாக பீஹார்) வந்தவர்களே காரணம் என்பார்கள். தமிழர்களைப் போல் அரிசி சோறு சாப்பிட்டாலும் பிராமணர்கள் உள்பட அனைத்து வங்காளிகளுக்கும் அத்தியாவசிய உணவு மீன். வங்காளப் பெண்களின் அழகுக்கும் வங்காளிகளின் அறிவுக்கும் இதுவே காரணம் என்றும் சொல்வதுண்டு. அழகில் பெண்களுக்கு நேர் எதிரிடையாக ஆண்கள் இருப்பார்கள்.

எனக்கு அடுத்த ஜென்மம் பற்றி தெரியாது. நம்பிக்கையும் கிடையாது. ஒருவேளை இருந்தாலும் அது irrelevant. நினைவில் இல்லாத விஷயம் இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன? ஒருவேளை இருந்தால் வங்காளியாகப் பிறக்க வேண்டும். வங்க மொழியின் இலக்கிய அழகு, கலைச் செழுமை என்று கம்பீரமாக சொல்ல எண்ணினாலும் உண்மையில் அழகு, செழுமை என்று கவனம் செல்வது வேறிடத்திற்குத்தான்.

**************

'ஒருவர் படும் கஷ்டங்களுக்கு அவர்கள் வினைப் பயன் அல்லது கர்ம பலன் காரணம் போன ஜென்மத்தில் செய்த பாவம்' என்று சொல்லுவது வழக்கம். அப்போது முதல் ஜென்மத்தில் நடப்பவைக்கு என்ன காரனம் என்ற ஒற்றைக் கேள்வியில் அந்த கருத்து வலுவிழந்து போகிறது. மேலும் 'law of karma' என்றறியப் படும் கர்ம வினையை நான் இப்படிப் புரிந்து கொள்கிறேன். கிட்டத் தட்ட ந்யூடனின் விதி மாதிரி. நாம் ஒட்டுமொத்தமாக ஒரே உயிர். நமது செயல்கள் நடவடிக்கைகள் அவற்றுக்கான எதிர்வினைகளை ஏற்படுத்துகின்றன. நம் கண்மூடித்தனமான பேராசையால் இயற்கை வளங்களைப் பாழாக்குகையில், தட்டுப் பாடுகள் வருகின்றன. நம் வினைகளின் பயன் ஓஸோன் ஓட்டை. இந்த ரீதியில் நான் கர்ம பலனை கண்கூடாகக் காண்கிறேன்.

கடவுளைக் கூட இப்படித்தான் புரிந்து கொள்ள முடிகிறது. ஸ்டீஃபன் ஹாகின்ஸ் சொன்ன மாதிரி "I take God as a metaphor for Nature's Laws". 'ரிஷி' என்ற சொல்லுக்கு 'seer' என்று பொருள் சொல்கிறார்கள். 'பார்ப்பவர்' பார்த்ததைச் சொல்கையில் பார்க்கப் பட்டது, கூடப் பார்ப்பவர் அல்லது கேட்பவர் மனதில் வேறுரு கொள்ளவே அதிகம் வாய்ப்பு இருக்கிறது. இயற்கையின் விதிகள், தலை முடிக்கும், சதிர்த் தேங்காய்க்கும் பதில் சொல்லும் தெய்வமாய் மாறியதில் வியப்பில்லைதான்.

இந்தப் 'பார்த்தல்' பற்றி ஜே.க்ருஷ்ணமூர்த்தி மிக அதிகம் சொல்லி இருக்கிறார். ஓரிடத்தில் 'observation is love' என்கிறார். "Observation is the unfolding of what is taking place" என்று இன்னோர் இடத்தில் அவர் சொல்கையில் முன்னதும் விளங்குகிறது. நாம் எதையாவது 'அன்ஃபோல்ட்' பண்ண விடுகிறோமா? உடனே திணிக்கத்தான் நம் கருத்து காத்திருக்கிறதே. நாம் எவ்வளவு படித்திருக்கிறோம் அதெல்லாம் வீண் போகலாமா? புதிய தரிசனம் நம் தினசரி வாழ்வில் எங்கேனும் இருக்கிறதா? தன்னிடம் வந்து 'I have come here to learn" என்றவருக்கு, இரமண மகர்ஷியின் மறுமொழி: "This is a place to unlearn". சத்யஜித் ரேயின் மறைவுக்குப் பின் 'பொறுப்பு' இப்போது இவர் கையில் என்று ஷ்யாம் பெனெகல் சுட்டிக் காட்டிய அடூர் கோபாலக்ருஷ்ணன், "Every moment is a moment of discovery" என்கிறார்.

************

ஆப்பிரிக்கப் பழங்குடி மக்களான 'பிக்மி' இன மக்களின் மொழியில் 'பகைமை' 'போர்' இரண்டிற்கும் சொற்கள் இல்லையாம்; அன்புக்கும், பரிவுக்கும் பல சொற்கள் உள்ளனவாம். 'காட்ஸ் மஸ்ட் பி க்ரேஸி' படத்தில் வரும் புஷ்மன் இன மக்களைப் போல.

**********

பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று. - திருக்குறள்.

*********

No comments: