FUTURE IS NOW - J Krishnamurti.

பிறப்பு, இறப்பு என்பது உண்மையே இல்லை. அத்தகைய பொய்யான தோற்றத்தை நமது மனமே உருவாக்கிக் கொள்கிறது. மனம் தனக்கென்று ஒரு உடலை உருவாக்கிக் கொள்கிறது. அதைக் கனவு மழையில் நனைத்துத் துன்பப் படுத்துகிறது. - ரமண மகர்ஷி.

Search This Blog

Sunday, August 23, 2009

பொழுது போக்கும், ரஜினியும்.

பொழுது போக்கும், ரஜினியும்.

வ.ஸ்ரீநிவாஸன்

பொழுது ஏகமாக மலை போல் குவிந்து கிடக்கிறது. பல சமயம் கவலை, பயம், துக்கம் என்று குட்டி வேறு போடுகிறது. அதை என்ன செய்வது? செலவழிக்கக் கூடிய வாய்ப்பும், வசதியும், வகையும் உள்ளவர்கள் சிலர். உயிர் வாழ, உணவு, உடைக்காக உழைப்பவரும் இருபத்தி நாலு மணி நேரமும் உழைப்பதில்லை. இன உறவிலும் மகா பஞ்சம். கிடைக்கையிலும் சிலருக்கு தயாரிப்பும், காரியமும், தளர்ச்சியும் அரை மணி கூட இல்லை. சிலருக்கு அது அடிப்படை தாகம் இல்லை. கேளிக்கை தான். இதில் நிஜத்தை விட கற்பனைக்கே இந்த சமூகத்தில் வாய்ப்பு ஏராளம். வம்பு, ஆராய்ச்சி, வன்மம் என்ற பொழுது போக்கு அறிவுஜீவிகளைப் போன்றவர்களின் ஏகபோக உரிமையாகி விட்டது. பாக்கிப் பேர் மிஞ்சினால் மனதளவில் எண்ணுவதோடு சரி. அரசியல் எல்லோருக்கும் அமைவதில்லை. அந்த இடங்களில் பல சமயம் பாத்திரம் மாறி விடுகிறது. என்டர்டெய்ன் செய்பவர் யார் ரசிப்பவர் யார் என்பதில்.

இந்தத் தீராப் பொழுதைப் போக்க உதவியவர்களில் பலர் முன்பெல்லாம்
கீழ்மையாய், இளக்காரமாய் நோக்கப் பெற்றார்கள். கூத்தாடி, பாகவதர்,
நாட்டியக்கரி....சிலர் சாமியோடு சேர்த்து வணங்கப் பெற்றார்கள். சிலர்
மரியாதைக்குரிய தலைவர்கள் ஆனார்கள். கிரிக்கட், கால் பந்து, பொதுக்
கூட்டம், கச்சேரி, புத்தகம், பத்ரிகை, நாடகம் என்று பகிரங்கமாக பொழுது
போக்க எத்தனை சாதனங்கள். பின் வானொலி, சினிமா மற்றும் டி.வி வேறு.

முதலில் இருந்த நிலை மாறி, பிறகும் இப்பொழுதும் அதிகம் பேரின் பொழுது போக உதவியவர்கள் அதிகம் சம்பாதிக்கின்றனர். இதில் தரம், சமூகப் பிரக்ஞை, நீதி, நியாயத்திற்கு எதற்கு இடம்?

பொழுது போக்கிலேயே கூட இரண்டு வகை என்கிறார்கள். ஒன்று வெறுமனே பொழுது போக்குவதற்காம்; இன்னொன்று பொழுதையும் போக்கி விட்டு சிந்தனை லாபத்தையும் பெறுவதற்காம். வியாபார புத்தி. வெறுமனே பொழுது போனால் என்னவாம்? சிந்தனை லாபம் என்ற பம்மாத்து கடைசியில் வெறும் பொழுது போக்குத் தானே? சிரிக்க வைத்தால் போதாதா? சிந்திக்கவும் வைக்கணுமாம் ! எதற்கு? என்ன சிந்தித்து எது சித்தித்தது?

கடந்த அரை நூற்றாண்டில் சினிமா, கோவில்களின் இடத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பிடித்துக் கொண்டு விட்டது. கோவில் பழைய செவ்வியல் கேளிக்கை. அரசியல், சுதந்திர தாக, சமூக சீர்திருத்த, பொதுவுடமைப் பேச்சுகள், எழுத்துகள், கறுப்பு வேள்ளை சினிமா நவீனத்துவ கேளிக்கை. இன்றைய கிரஃபிக்ஸ், இன்டர்நெட், பண்(பற்ற)பலை வரிசை போன்ற ஹை-டெக் பொழுது போக்குகள் பின் நவீனத்துவ கேளிக்கை.

ரஜினி தமிழ் நாட்டில் சிசுக்கள், நகர முடியாத கண் தெரியாத வயோதிகர்கள்
தவிர அனைவரையும் என்டர்டெய்ன் ( இதை எப்படி தமிழில் சொல்வது? சந்தோஷப் படுத்துகிறார் என்று சொல்லலாமா?) செய்கிறார். வெளி நாட்டுறைத் தமிழர்கள், இதர மாநிலத்தவர் போன்றவர்களைச் சேர்த்தால் இது இருபது கோடியைத் தாண்டலாம்.

சிலர் பல தடவை அவர் படத்தைப் பார்த்து மெய் மறக்கிறார்கள். ஒரு மாத
சம்பளத்தைக் கொடுத்து டிக்கட் வாங்குகிறார்கள். பாலாபிஷேகம்
செய்கிறார்கள். சிலர் வெறுமனே பார்க்கிறார்கள். சிலர் அவரைத்
திட்டுகிறாகள். சிலர் அவர் வாழ்க்கை வரலாறை புத்தகம் போட்டு சமூக சேவை செய்கிறார்கள். சிலர் அவரைக் கட்டுடைக்கிறார்கள். சிலர் அவரிடம் குழைகிறார்கள். சிலர் அவரை பயமுறுத்துகிறார்கள். நமக்குத் தெரியாத எத்தனை எத்தனையோ டீல்கள். மொத்தத்தில் அவரளவு அதிகம் பேரை, தமிழர்களை, தமிழகத்தவரை என்டர்டைன் / எங்கேஜ் வேறு யாரும் பண்ணுவதில்லை. கேளிக்கை தருவது மூலமாக. அதுவும் கமிட்மென்ட் இல்லாத என்டர்டைன்மென்ட். அவரைக் கேட்டு விட்டு நீங்கள்
காவியையோ, கறுப்பையோ, செங்கொடியையோ ஏந்த வேண்டாம். மன சாட்சி
குறுகுறுப்பு போன்ற பம்மத்து வேலைகளுக்கு இடம் தராத ப்யூர் என்டர்டைன்மென்ட்.

இத்தனை கோடிப் பேருக்கும் அவர் தேவைப் படுகிறார். அதுவும் அவர்
விற்கிறார், இவர்கள் வாங்குகிறார்கள், அல்லது சரியாகச் சொல்ல
வேண்டுமெனில், நாம் வாங்குகிறோம். நிர்பந்தமோ ஒப்பந்தமோ இல்லாத சுலபமான பரிவர்த்தனை.

ஆளுக்கு ஒரு ரூபாய் கொடுத்தாலும் அவர் சம்பளம் தயார்.
அவர் கறுப்புப் பணம் செய்யும் பட்சத்தில் அது அரசு கவனிக்க வேண்டிய
குற்றம். மற்றபடி என்டர்டைன்மென்ட் நோக்கில் டிமாண்ட் மற்றும் சப்ளை
என்பதை விட சப்ளை மற்றும் டிமாண்ட் என்கிற ரீதியில் இதுதான் நடக்கிறது. இதில் எரிச்சல் படுவது உலக இயக்கத்தைப் பற்றி புரிந்து கொள்ளாமையால்தான்.

இருபது கோடி என்ன, நாஞ்சில் நாடனையும், ஜெய மோகனையும் பத்தாயிரம் பேர் படிப்பார்களா? அடுக்கவே அடுக்காது. ஆயிரம் பேர் ஊன்றிப் படித்தால்
அதிகம். ரஜினி சினிமா, ஊன்றிப் படிப்பது முதலிய கமிட்மென்ட் எதுவும்
இல்லாத வெள்ளந்தியான (இது சமீப தமிழ் உலகில் நையப் புடைக்கப் பட்ட ஒரு சொல்) கேளிக்கை. இதில் குடல் கருகுவதில்லை, கும்பி எரிவதுமில்லை. கேன்ஸர் வருவதில்லை, பாலியல் நோய் பற்றிக் கொள்ளவோ தொற்றிக் கொள்ளவோ செய்வதில்லை. மூளை மழுங்குகிறது என்று சொல்பவர்கள் உண்டு. எதனால் மூளை மழுங்குவதில்லை? ஆத்திகத்தால், அரசியலால், விளையாட்டால், மதத்தால், மொழியால், பகுத்தறிவால் மழுங்கவில்லையா? பொய்யை விற்கிறார்கள் என்பதற்கு யார் பொய்யை விற்கவில்லை என்று தயை கூர்ந்து சிந்தியுங்கள் என்று பதிலிறுக்கலாம். தவிர பொய்யைத்தானே விற்க முடியும்? அதுதானே கவர்ச்சியாய் சுவாரஸ்யமாய் இருக்கிறது? உண்மையே உன் விலை என்ன?

நமக்குத் தேவை மலையாய் கடலாய், குவியும் விரியும் பொழுதை எப்படியாவது போக்குவது. எளிமையான சுலபமான சமூக அங்கீகாரம் பெற்ற, சட்டத்துக்கு உட்பட்ட, சாமர்த்தியம் தேவைப் படாத கேளிக்கை சினிமா. அதிலும் என் ரசனை அளவில் சுவாரஸ்யமான ஒன்று என்றால் ஒசத்தி கண்ணா ஒசத்தி. அதை நயம்பட விற்பவர் ரஜினி.

சினிமா இருக்கக் கூடாது என்றால் சாரயக் கடைகள் இருக்கக் கூடாது. சாராயக் கடைகளிலும், சாராய கொள்கலன்களிலும் 'குடி குடியைக் கெடுக்கும்' என்று எச்சரிக்கிறார்கள். சினிமா அரங்குகளில் அவ்வாறு இன்னும் இல்லை. மது தொலைக் காட்சியில் தென்படும் சமயங்களிலும் இப்போது எச்சரிக்கைகள் வருகின்றன. ஏதோ அதில் வரும் இதர காட்சிகள் நம்மை நேரே மோட்சத்திற்கே இட்டுச் சென்று விடும் என்பது போல. மதுவாவது, ரஜினி திரையில் முதலில் வரும் கணத்தைப் போல பலரை மோட்சத்திற்கு இட்டு செல்லும் என்று என் நண்பர்கள் சிலர் அடித்துச் சொல்லி நான் கேட்டதுண்டு. சாராய விற்பனை சென்ற ஆண்டை விட இரண்டு மடங்கு அதிகரித்துள்ளதாம் தமிழகத்தில். சாரயம் ஒரு பொழுது போக்குத்தானே? சத்து மாவு விற்க வேண்டும் என்று சொல்ல நாம் யார்? சத்து மாவில் கலப்படம் இல்லை என்று யார் சொன்னது? சத்து மாவில் என்ன சுவாரஸ்யம் இருக்கிறது?

மேலும் சினிமா இருக்கக் கூடாது என்றால் சிற்றுண்டிச் சாலைகள் இருக்கக்
கூடாது. ஆண்களும் பெண்களும் கண்களைத் தவிர இதர உடம்பை மறைத்துக்
கொண்டுதான் (ஜனாதிபதி மன்னிப்பாராக) வாழ வேண்டும். நமது முதலமைச்சர்கள் கண்டு களிக்கும் நன்றி நவிலும் நட்சத்திரக் கொண்டாட்டங்கள் நடக்க முடியாது.

நல்ல சினிமாதான் வேண்டும் என்பது இன்னும் அடாத செயல். எது நல்ல சினிமா? ஆளாளுக்கு மாறு படும். இதுதான் நல்ல சினிமா என்று பேசாத படம் தோன்றி, டிஜிடல் சினிமா தோன்றாத காலத்திலிருந்தே மக்கள் திரும்ப திரும்பக் காட்டி விட்டார்கள். ரொம்பப் பிடிவாதம் பிடித்தால் நல்ல அரசியல் தலைவர், சமூக சீர்திருத்தவாதி, மடத் தலைவர், மதத் தலைவர், நல்ல எழுத்தளர், கவிஞர், பத்ரிகை, இவை எல்லவற்றையும் விட நல்ல காற்று, நல்ல தண்ணீர், நல்ல உணவு வேண்டும் என்று கூட மக்கள் கேட்க ஆரம்பித்து விடுவார்கள். நாம் விரும்புவதை அல்லது நாம் விரும்புவதாக தோற்றுவிக்கப் பட்ட பிரமையை, நம் தகுதிக்கு ஏற்றதை எல்லா இடங்களிலும் நாம் பெற்றுக் கொண்டவாறே இருக்கிறோம்.

யாரும் யாரையும் வழி கேட்பதில்லை உயிர் வாழ. தாய், தகப்பன், உற்றார்,
சமூகம், வாத்தியார், போலிஸ், தலைவர், குருஜி மற்றும் சமய சந்தர்ப்பம்;
மேலும் இவை அனைத்தையும் மிஞ்சிய ஆசை, பயம் இவற்றின் இடை விடாத உந்துதல்; மற்றும் லட்சோப லட்சம் விஷயங்கள் மூலம் தாக்கம் பெற்று வாழ்கிறோம். வாழ்க்கையும் யாருக்கும் சுலபமாக எப்போதும் இல்லையே. உத்தரவாதங்களும் இல்லை. செவ்வியான் ஆக்கமும் அவ்விய நெஞ்சத்தான் கேடும் தானே நினைக்கப் படுகின்றன. அது வேறு குழப்பம்.

இதைத்தான் செய்ய வேண்டும் என்று யாரும் நிர்ணயம் பண்ண முடியாது. வாழ்க்கை பிய்த்துக் கொண்டு போய் விடும். புத்தன் கடவுள் ஆகவில்லையா? மதம் போதை வஸ்து என்ற முன்னாள் சோவியத் யூனியனில் பின்னர் போதை வஸ்துவே மதமாகவில்லையா?

ரஜினியை விட அதிகம் என்டர்டைன் செய்தவர்கள் அவரை விட அதிகம் செல்வமும் செல்வாக்கும் பெற்றார்கள். பெறுகிறார்கள். பெறுவார்கள். சிலர் விரித்த சினிமா அரசியல் என்ற இரண்டு கடைகளிலும் பரப்பிய பொருள் கொள்ளை கொள்ளையாய்க் கொள்ளப் பட்டது அல்லவா? அவர்கள் பெரும் பணக்காரர்கள் ஆனார்கள் என்றால் அந்த அளவு பொழுது போக்க உதவி இருக்கிறார்கள் என்று பொருள். இதிலும் கறுப்புப் பண விவகாரம் அரசால், நீதித் துறையால் கவனிக்கப் பட வெண்டிய ஒன்று என்பதைத் தவிர குறை சொல்ல என்ன உள்ளது?

கேளிக்கையில் உயர்ந்தது, தாழ்ந்தது என்று உள்ளது என சுலபமாகச் சொல்லி
விடுவார்கள். அவர்கள் ஒரு வகையில் மனுவாதிகள் அல்லது மார்க்ஸ்வாதிகள். எல்லா கேளிக்கையும் ஒன்றே, குலத்தைப் போல. வேண்டுமானால் ரகசிய கேளிக்கைகள் எல்லாருக்கும் கிடைப்பதில்லை எனலாம். கேளிக்கை எப்பேற்பட்டதாயினும் அதில் மனம் அடையும் மகிழ்வோ நெகிழ்வோ ஒன்றே. தீவிரம் வேண்டுமானால் மாறு படலாம்.

ஆனால் ரஜினி மேட்டர் pure entertainment. அவர் படத்தைப் பார்த்துக்
கொண்டிருக்கும் போது யாரும் வன் முறை செய்வதில்லை. அவருக்கு முந்திய சூப்பர் ஸ்டார் போல் அவருக்காக பச்சை குத்தவோ வாக்குச் சீட்டை குத்தவோ கூட வேண்டாம். முன்னவருக்கும் முந்தைய சூப்பர் ஸ்டாரைப் போல வெறும் அப்பழுக்கில்லாத பொழுது போக்கு. இவருக்கு சங்கீத ரசனை கூட வேண்டாம்.

எம்ஜியார் காலத்தில் " நம்பியாரிடம் எப்பவும் ஜாக்ரதையாய் இரு" என்று
அக்கறையும், அஞ்ஞானமுமாய் அறிவுரை கூறி அவருக்கே ஓட்டு போட்ட மூதட்டிகள் உண்டு. அவர் ஆதரித்தவர் அரசமைத்தார். இப்போதெல்லாம் யாரும் திரையில் தோன்றும் ரஜினியை நிஜ ரஜினி என்று நம்பி ஏமந்து ஓட்டளிப்பதில்லை. அப்படியே ஏமாந்தாலும் என்ன செய்வது? சத்யஜித் ரே படங்களை தமிழ்ப் படுத்தி எல்லா தியேட்டர்களிலும் ஓட்டலாமா? யார் பார்ப்பது? பொழுது மேன்மேலும் விளைந்து புற்று வைத்து விடாதா?

இயற்கை அதன் தர்மத்தை செய்து வருகின்றது. மனிதனின் விழைவு நியாயமா, சந்தோஷமா? காத்தலா, அழித்தலா? மனிதன் விதியின் கைப்பாவையா, விதி மனிதனின் காரியங்களுக்குக் கைத்தடியா? இது எல்லாமுமேயா, இடைப் பட்டதா, அல்லது எதுவுமே இல்லையா? மனிதர்க்கு என்ன தேவை? காற்று, தண்ணீர், உணவு, பிறகு உடை, உறைவிடம். உயிர் வாழ்ந்தால்தான் இன விருத்தி. எனவே பின்பு அது.

இதைத் தவிர மலையாய் நிமிர்ந்து எழுந்து கடலாய் விழுந்து புரண்டு
இருக்கும் பொழுதை என்ன செய்வது? எனவே உண்டி கொடுத்தோருக்குப் பின்
கேளிக்கை கொடுத்தவர்தானே உயிர் கொடுத்தோர்.

இது நேரிடையான - satire சிறிதும் இல்லாத - கட்டுரை.
*********

5 comments:

RK Murthy said...

you are right, Sir......the person who relieves the pain of a stormy feelings in oneself and therefore provides pleasure is just next to the one who relieves the pain of hunger by offering food and therefore provides energy! Well, quoted.....I like it

Unknown said...

You are right sir Srini. He shows his talent and his fans love it. Who are the others to lament over this.

Unknown said...

Nice article Srini. He shows his talent and it is for his fans to decide to take the film to success. Others feelings have no grounds.
SRV

Unknown said...

A nice write up Srini.
SRV

V.Srinivasan./வ.ஸ்ரீநிவாசன் said...

Thank you SRV.