FUTURE IS NOW - J Krishnamurti.

பிறப்பு, இறப்பு என்பது உண்மையே இல்லை. அத்தகைய பொய்யான தோற்றத்தை நமது மனமே உருவாக்கிக் கொள்கிறது. மனம் தனக்கென்று ஒரு உடலை உருவாக்கிக் கொள்கிறது. அதைக் கனவு மழையில் நனைத்துத் துன்பப் படுத்துகிறது. - ரமண மகர்ஷி.

Search This Blog

Sunday, August 23, 2009

உயிரிழை பிரசுரம் : சொல்வனம் 21.8.09

பூதம் அவனைக் குறித்துச் சொல்லியது: " நீ சாகணும், நான் பார்க்கணும்". அது அவனை நேராகப் பார்த்துச் சொல்லியிருந்தால் கூட அவனுக்கு அவ்வளவு பயமாக இருந்திருக்காது. அது சுவரைப் பார்த்து சொல்கிற மாதிரி, போஸ்டரில் இருப்பவனைப் பார்த்து சொல்கிற மாதிரி, தூரத்தில் போகிறவனைப் பார்த்து சொல்கிற மாதிரி, தான் கனவில் கண்டவனை நினைத்துச் சொல்கிற மாதிரி சொன்னதுதான் அவனுக்குப் பீதியையும் கவலையையும் உண்டு பண்ணியது.
அந்த பூதம் ரொம்ப நாட்களாக அங்கு இருக்கிறது. வேலைக்காரி பெருக்கும்போது அதை மூலையில் குவித்து விடுவாள். காற்றடிக்கும் போதெல்லாம் அது வீடு முழுக்க பரவி விடும். அது இருப்பது அவனுக்குத் தெரியும் என்று அதற்கும் தெரிந்திருக்க வேண்டும். ஆனாலும் அவனுக்குத் தெரிந்திருக்கவில்லை என்பது போல் இருவரும் இருந்தார்கள்.
அவனுடைய அம்மா அப்பா எல்லாருமே அவனுக்கு பூதம் இருப்பது தெரியாது என்று விடாப்பிடியாக நம்பினார்கள். அது பற்றி வெளிப்படையாகப் பேச விடாமல் எதோ ஒன்று அவர்களைத் தடுத்தது.
அன்று காலை அவன் நாற்காலியில் அமர்ந்து காலாட்டிக் கொண்டிருந்த போதுதான் பூதம் "நீ சாகணும், நான் பார்க்கணும்" என்று யரையோ சொல்வது போல், குடி மயக்கத்தில் சொல்வது போல் சொல்லியது. அந்த நேரத்தில் அதை அவன் எதிர் பார்க்கவில்லை. அது சொல்லியது முதலில் வெறும் ஒலியாகப் பொருளற்றுதான் அவன் காதில் விழுந்தது. அது தொடர்ந்து 'இன்னிக்கு சாயந்தரத்துக்குள் செத்துரு. என்ன சரியா?" என்று சொல்லியதும்தான் அவன் முதலில் சொன்னவற்றையும் சேர்த்து யோசித்தான்.
பயம் கிளம்பினாலும் அது சொன்னது காதில் விழாத மாதிரி இருக்கப் பார்த்தான். பூதம் கோபமாக திரும்பி வாசல் நோக்கி சென்றது. அது எப்போதெல்லாம் மூலையில் மறைவாக இருக்கும், எப்போதெல்லாம் வெளியே போகும் என்பவை எல்லாம் அவனுக்கு அத்துப்படி. அதனாலேயே அவன் பள்ளியிலிருந்து வருகையில் அது வீட்டில் பரவி இருக்கும் சமயம் என்றால் வீட்டில் நுழையாமல் கால் போன போக்கில் பக்கத்துத் தெரு வழியாகவெல்லாம் போய்விட்டு அது மூலைக்குப் போயிருக்கும் என்று நிச்சயம் ஆன பிறகுதான் வீட்டுக்குள் வருவான். இன்று அது அவன் இருக்குமிடத்திற்கு வந்தது எதிர் பாராத நேரத்தில்.
அது சும்மா சொல்லியதா அல்லது கோபத்தில் சொல்லியதா அல்லது உண்மையிலேயே ஏதாவது செய்து விடுமா என்று அவனுக்குத் தெரியவில்லை. சங்கடமாக இருந்தது. அது அந்த சமயத்தில் வந்ததே பயத்தை உண்டு பண்ணியது.
அன்று மத்யானம் வீட்டு வாசலில் ஒரு ஆட்டோ வந்து நின்றது. அதிலிருந்து ஒரு ஆணும் ஒரு பெண்ணும் இறங்கினர். அப்பா அலுவலகத்தில் அவரோடு பணி புரிகிறவர்கள். இவனைப் பாத்ததும் புன்னகைத்தவாறே "அப்பா இருக்காரா" என்றார்கள். இவன் "உள்ளே வாங்க" என்று அவர்களை அழைத்து அமரச் சொன்னான். "அப்பா இதோ வந்து விடுவார்" என்று சொல்லிவிட்டு உள்ளே போனான்.
சமையலறையில் தரையில் அமர்ந்து அப்பா சாப்பிட்டுக் கொண்டிருந்தார். "யார்டா" என்பது போல் நிமிர்ந்து பார்த்தார். "அவங்கதான்" என்றான். "போய் ரெண்டு கூல் ட்ரிங்க் வாங்கிக் கொண்டு வா. சட்டைப் பையில் பர்ஸ் இருக்கு. எடுத்துக்கோ" என்றார்.
முன் அறையில் இருந்த இரண்டு நாற்காலிகளிலும் அவர்கள் உட்கார்ந்து இருந்தார்கள். அதைத் தவிர வேறு நாற்காலி கிடையாது. அப்பா வந்தால் கட்டிலில்தான் உட்கார வேண்டும். ஒரு சின்ன ஸ்டூல் இருந்தது. அவன் அவர்களைப் பார்த்து மீண்டும் புன்னகைத்து விட்டு "அப்பா இதோ வந்து விடுவார்" என்றான். "நீ என்ன கிளாஸ் படிக்கிறே" என்றார் அவர். போன மாதம் வந்த போதும் அவர் அதே கேள்வியைக் கேட்டார் என்பது ஞாபகம் வந்தது.
"ப்ளஸ் டூ"
"நல்லாப் படி. ஆல் தெ பெஸ்ட்" என்றார் அவர்.
அந்தப் பெண்மணியும் புன்னகைத்தாள். இவன் பர்ஸிலிருந்து பணத்தை அவர்கள் பார்க்காத வண்ணம் எடுக்க முடியாது. பர்ஸை எடுத்துக் கொண்டு உள்ளே போனான்.
"எவ்வளவு எடுத்துக்கட்டும்..... உங்களுக்கு?"
"எனக்கு வேண்டாம். ரெண்டு வாங்கிட்டு வா. உனக்கு வேணுமா"
"வேண்டாம்" என்று சொல்லிவிட்டு பர்ஸை அப்பாவின் மடியில் போட்டு விட்டு வெளியே போனான்.
பக்கத்துக் கடை மூடி இருந்தது. அடுத்த தெரு வழியாக மெயின் ரோட்டில்தான் போய் வாங்க வேண்டும். இவன் மெயின் ரோட்டை நெருங்குகையில் ஒரு பெருங்கூச்சல் கேட்டது. ஒரு ஊர்வலம் போய்க் கொண்டிருப்பதைப் பார்த்தான். தெருவும் சாலையும் சந்திக்கும் இடத்தில் இருந்த மூடி இருந்த ஒரு கடையின் வாசலில் நின்று கொண்டான். "ஓ. அதுதான் பக்கத்துக் கடை மூடி இருந்ததா?"
சிறிய சாலையாகையால் அது முழுவதையும் அடைத்துக் கொண்டு ஊர்வலம் சென்றது. அதன் ஆரம்பம் எங்கே என்று தெரியவில்லை. வெகு நேரமாக சென்று கொண்டிருக்க வேண்டும். அவர்கள் குறிப்பிட்ட குழுவினரைத் தாக்கியும் இன்னொரு குழுவினரை ஆதரித்தும் கோஷமிட்டுக் கொண்டு போனார்கள். கூட்டத்தில் ஒரு பகுதியினர் இவன் வந்த தெருவில் நுழைந்தனர். அது வழியாக மைதானத்திற்கு குறுக்கு வழி இருந்தது. அங்கு மாலை பொதுக் கூட்டம் இருந்தது. ஊர்வலம் போனவர்களில் சிலர் கையில் கம்பு வைத்திருந்தனர். ஒருவர் சோடா பாட்டில் ஒன்றை நடுத் தெருவில் போட்டு உடைத்தார். பல பேர் காலில் செருப்பு இல்லாமல்தான் நடந்து சென்றனர். இன்னும் சில பாட்டில்கள் உடைக்கப் பட்டன. ஒரு சில்லு இவனைத் தாண்டிக் கொண்டு போய் மூடியிருந்த கடையின் சுவரில் மொதி மேலும் உடைந்து தெறித்தது. இவன் அய்யோ என்று நகருவதற்கு முன் கூட்டத்தில் சென்ற ஒருவன் இவனைப் பார்த்து "நீ அவனா" என்று கேட்டான். அவன் கேள்வி புரிய கொஞ்ச நேரம் ஆயிற்று. இவன் 'இல்லை' என்று தலை ஆட்டினான். அவன் நம்பவில்லை என்று தோன்றியது. ஒருவேளை தன்னை அடிப்பார்களோ என்ற பயம் வந்தது. அந்தாளின் பின்னால் வந்தவன் அவனை 'போ ! போ ! ' என்று நெட்டித் தள்ள அவன் இவனைத் திரும்பிப் பார்த்தவாறே போய் விட்டான்.
நல்ல வேளையாக ஊர்வலம் அந்த இடத்தைக் கடந்து சென்று விட்டது. கடைகளை மெல்லத் திறந்தார்கள். இவன் இரண்டு அட்டை டப்பாக்களில் அடைக்கப் பட்ட குளிர் பானங்களை வாங்கிக் கொண்டு திரும்பினான்.
அப்பா கோபமாக இருந்தார். "என் இவ்வளவு லேட்" என்றார். அவர் கோபம் அலுவலகத்திலும் பிரசித்தம் போலும். அந்த பெண்மணி 'பரவாயில்லை ஸார்" என்றாள். "பக்கத்துக் கடை இல்லேப்பா, ஏதோ ஊர்வலம் வேறே". அந்த ஆள் "என்ன ஊர்வலம்?" என்றார். "தெரியவில்லை" என்றான்.
குளிர் பானம் குடிக்கவே வந்தவர்கள் போல் அவர்கள் குடித்த உடனே கிளம்பிப் போனார்கள்.
அம்மா உள்ளே வந்தாள். "சினிமா போலாமா" என்றாள்.
அவன் அரை டிராயரைக் கழட்டி விட்டு பேன்ட்டைப் போட்டுக் கொண்டான். அவன் நினைத்த மாதிரியே அப்பா "மூணு டிக்கட் வாங்கி வை" என்று தியேட்டார் பெயரைச் சொன்னார். அந்த தியேட்டருக்கு அடிக்கடி போனதில்லை.
"புதுப் படம்பா."
"தியேட்டர் மேனேஜர் கிட்டே எங்க ஆபீஸ் பேரைச் சொல்லி என் பேரைச் சொல். டிக்கட் தருவார்". என்று சொல்லிவிட்டு மேனேஜர் பெயரைச் சொன்னார்.
அவன் பணத்தை வாங்கிக் கொண்டு உல்லாசமாகக் கிளம்பினான். வாசலுக்கு வந்ததும் பக்கத்து வீட்டுப் பையன் "எங்கேடா? நானும் வரேன்" என்றான். 'சரி உடனே வா." எந்தப் படம், எந்த தியேட்டர் என்று சொன்னான். தான் பார்த்துவிட்டதாகவும், சும்மா தியேட்டர் வரை வருவதாகவும் கூறி இவன் தோளில் கையைப் போட்டுக் கொண்டான்.
அந்தத் தியேட்டர் அவர்கள் வீட்டிலிருந்து தூரமாக இருந்த ஒன்று. அவனுக்கு சைக்கிள் தெரியாது. இருவரும் நடந்தே போனார்கள். பேச்சு அந்தப் படத்தைப் பற்றியும் அதன் இயக்குனர் மற்றும் நடிக நடிகைகள் பற்றியும் இருந்தது.
தியேட்டர் வாசலில் பெருங்கூட்டம். இவர்கள் முண்டி அடித்துக் கொண்டு மேனேஜர் அறை எங்கே என்று கேட்டுக் கொண்டு உள்ளே போகப் பார்த்தார்கள். அந்தக் கூட்டம் இவர்களை லட்சியம் செய்யும் கூட்டம் இல்லை. ஓரு கார் வந்தது. அது உள்ளே போகக் கதவைத் திறந்த போது கூட்டமும் உள்ளே போயிற்று. இவர்கள் எப்படி உள்ளே வந்தார்கள் என்றே தெரியவில்லை. மெள்ள அலுவலக அறை போல் தெரிந்த ஒன்றின் அருகில் கொண்டு செல்லப் பட்டார்கள். அதன் கதவு மூடப் பட்டு இருந்தது. அதன் வாசலிலும் பெரும் கூட்டம் இருந்தது. அதன் கதவைத் திறந்துகொண்டு ஒருவர் ஒரு அலுமினியப் பெட்டியுடன் வேளியே வந்தார். கூட்டம் அவரைச் சூழ்ந்துகொண்டது. "எல்லாரும் கவுன்டருக்கு வாங்க" என்று சொல்லி விட்டு அவர் நடந்தார். அப்போது ஒரு போலிஸ்காரர் உள்ளே வந்தார். கையில் இருந்த கம்பை தரையில் பல முறை அடித்தார். கூட்டம் சற்று தூரத்தில் இருந்த கவுன்டரை நோக்கி நகர்ந்தது.
சுமார் பத்து பேர் அந்த அறை வாசலிலேயே நின்றனர். இவன் திறந்த கதவு வழியாக வேளியே வந்தவரிடம் "மேனேஜர் சார் இருக்காங்களா" என்றான். மேனேஜரின் பெயரைச் சொன்னான். அவர் உள்ளே போகுமாறு சைகை காட்டிவிட்டு போனார். இவர்கள் ஊள்ளே நுழைந்ததும் பாக்கிப் பேரும் உள்ளே நுழைந்தனர். அறைக்குள் இருந்த இருவரில் ஒருவர் பாக்கிப் பேரை வெளியே தள்ளி விட்டு, தானும் வெளியே போய் கதவை மூடினார். கதவிலிருந்த தாள் கதவை மூடும் போதே தானாகவே போட்டுக் கொண்டது.
கண்ணாடி போட்டுக் கொண்டு நெற்றியில் விபூதியோடு நாற்காலியில் அமர்ந்திருந்தவர்தான் மேனேஜராக இருக்கக் கூடும் என்று அவரிடம் போனார்கள்.
"சார்."
என்ன வேண்டும் என்பது போல் பார்த்தார். அவன் அப்பா அலுவலகம் மற்றும் அப்பா பேரைச் சொன்னான்.
"இதே ரோதனயாப் போச்சு" என்றார் அவர். பிறகு "எத்தனை டிக்கட் வேண்டும்" என்றார். "மூணு" என்றான் அவன்.
"எதுக்கு மூணு நீங்க ரெண்டு பேர்தானே இருக்கீங்க?"
"அப்பா அம்மா வந்துட்டே இருக்காங்க. இவன் வரலை" என்று நண்பனைக் காட்டினான்.
அவர் மூன்று டிக்கட்களைக் கொடுத்தார். இவன் பணத்தைக் கொடுத்தான்.
அதே நிமிஷம் கதவு தட தடவென்று இடிக்கப் பட்டது. அவர் எழுந்து ஒர் நாற்காலியை கதவருகில் போட்டார். "இதே ரோதனையாப் போச்சு" என்றார்.
"டேய் கதவைத் திறடா" என்று பல பேர் கத்தினார்கள்.
"நாலே நாலு டிக்கட் கொடுத்துவிட்டு ஹவுஸ் ஃபுல்லாடா நாயே" கதவைத் திறடா" "அந்த ரெண்டு நாயிங்களுக்கு மட்டும் எப்படிடா டிக்கட் கொடுத்தே." "டேய் நாயிங்களா. வெளிலே வாங்கடா பார்க்கலாம்" என்று பலவாறு கூச்சல்கள் கேட்டன. அவனுக்கு பயம் தாங்க முடியவில்லை. கதவு பெயர்ந்துவிடும் போல் இருந்தது.
வெளியிலிருந்து ஒரு குரல் ஒரு ஜாதிப் பெயரைச் சொல்லி கூடவே நாயிங்களா வெளியே வாங்கடா என்று இரண்டு மூன்று ஆபாச சொற்றோடர்களைக் கத்தியது. இன்னும் பல பேர் அதில் சேர்ந்து கொண்டார்கள்.
ஒரு கதவின் மேல் தழ்ப்பாள் பிய்த்துக் கொண்டது. மேனேஜர் "இதைப் பிடிங்கப்பா" என்று சொல்லவும் அவர்கள் அவர் காட்டிய மேஜையைப் பிடித்துக் கொண்டார்கள். மூவரும் அதை நகர்த்தி கதவுக்கு அண்டக் கொடுத்தார்கள்.
அவன் உடம்பு நடுங்கிக் கொண்டிருந்தது. அவன் சிநேகிதனும் பயத்தில் வெளிறிப் போயிருந்தான். மேனேஜர் இதெல்லாம் சகஜம் என்பது போல் ஒரு சமயம் தோற்றமளித்தாலும் "ரோதனை ரோதனை" என்று திரும்பத் திரும்பச் சொன்னார்.
அந்த அறைக்கு இருந்த ஒரே சன்னல் அடைத்து சாத்தப் பட்டிருந்தது.
ஒரு ஸ்டூலின் மேலிடுந்த ஃபோனை எடுத்து அவர் டயல் செய்தார். தியேட்டர் பேரைச் சொல்லிவிட்டு "கொஞ்சம் கலாட்டாவா இருக்கு" என்றார்.
எதிர் முனையில் என்ன சொன்னார்களோ "எந்த ஷோவுக்கு சார்" என்று கேட்டு விட்டு "உங்களுக்கு இல்லாமயா சார். எப்ப வேணா வாங்க". என்றார்.
மேஜையும் சேரும் நகர்ந்தன. மேனேஜரும் இவர்கள் இருவரும் மேஜையின் மறு பக்கத்திலிருந்து அதைக் கதவை நோக்கித் தள்ளினார்கள். அதற்குள் வெளியே கூட்டத்தில் யாரோ ஒருவர் கீழே விழுந்து பலமான அடி பட்டு விட்டது போலிருக்கிறது. "கண்ணு தெரியலையா பேமானிங்களா" என்று அங்கு ஒரு புதிய சண்டை ஆரம்பம் ஆகி விட்டது.
ஐந்து நிமிடத்தில் வெளியே கலாட்டா சுத்தமாக நின்று விட்டது. ஒரு குரல் "கதவைத் திறய்யா" என்றது. மேஜையையும், சேரையும் நகர்த்திவிட்டு, பின் மேனேஜர் கதவைத் திறந்தார். ஒரு ஆள் நின்று கொண்டிருந்தார். அவர் தோரணையும், மிடுக்கும் அவர் மஃப்டியில் இருக்கும் போலிஸ் என்பதைக் காட்டின. "ஏன்யா. புதுப் படத்துக்கு கொஞ்சமாவது டிக்கட் விக்கக் கூடாதா? அத்தனையையுமா ப்ளாக்குலே விப்பீங்க" என்றார். "சரி ஒவ்வொரு கவுன்டருக்கும் அம்பது டிக்கட்டாவது பப்ளிக்குக்குக் கொடுங்க" என்றார். "எல்லாரும் ப்ளாக்கிலேயே வாங்கிப்பாங்க சார்"என்றார் மேனேஜர்". "நீ ஒதை பட்டு சாகணும்னு.." என்று பேச்சு தொடர்ந்து கொண்டிருக்கும் போதே இவர்கள் இருவரும் மெள்ள வெளியே வந்துவிட்டார்கள். டிக்கட் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் கூட்டம் எல்லாம் கவுன்டர்களின் முன் நின்றது.
நண்பன் விடை பெற்றுக் கொண்டான். ஒன்றும் பேசவில்லை. இவன் தியேட்டருக்கு வெளியே வந்து நின்றான். பயத்தின் கேவல் இன்னமும் மனதில் இருந்தது.
தியேட்டர் எதிரில் ஒரு சிறிய பாலம். ஆனால் அகலமானது. எல்லா வாகனங்களும் அதன் வழியாகத்தான் வர வேண்டும், போக வேண்டும். ஒரு சைக்கிள் ரிக்ஷா பாலத்தின் எதிர் முனையில் தென் பட்டது. அது மேலே மேலே ஏறி வருகையில் அதில் அப்பாவும் அம்மாவும் அமர்ந்திருப்பது தெரிந்தது. சில நிமிடங்களில் படம் பார்க்கப் போவது குதூகலமாக இருந்தது.
***************

பொழுது போக்கும், ரஜினியும்.

பொழுது போக்கும், ரஜினியும்.

வ.ஸ்ரீநிவாஸன்

பொழுது ஏகமாக மலை போல் குவிந்து கிடக்கிறது. பல சமயம் கவலை, பயம், துக்கம் என்று குட்டி வேறு போடுகிறது. அதை என்ன செய்வது? செலவழிக்கக் கூடிய வாய்ப்பும், வசதியும், வகையும் உள்ளவர்கள் சிலர். உயிர் வாழ, உணவு, உடைக்காக உழைப்பவரும் இருபத்தி நாலு மணி நேரமும் உழைப்பதில்லை. இன உறவிலும் மகா பஞ்சம். கிடைக்கையிலும் சிலருக்கு தயாரிப்பும், காரியமும், தளர்ச்சியும் அரை மணி கூட இல்லை. சிலருக்கு அது அடிப்படை தாகம் இல்லை. கேளிக்கை தான். இதில் நிஜத்தை விட கற்பனைக்கே இந்த சமூகத்தில் வாய்ப்பு ஏராளம். வம்பு, ஆராய்ச்சி, வன்மம் என்ற பொழுது போக்கு அறிவுஜீவிகளைப் போன்றவர்களின் ஏகபோக உரிமையாகி விட்டது. பாக்கிப் பேர் மிஞ்சினால் மனதளவில் எண்ணுவதோடு சரி. அரசியல் எல்லோருக்கும் அமைவதில்லை. அந்த இடங்களில் பல சமயம் பாத்திரம் மாறி விடுகிறது. என்டர்டெய்ன் செய்பவர் யார் ரசிப்பவர் யார் என்பதில்.

இந்தத் தீராப் பொழுதைப் போக்க உதவியவர்களில் பலர் முன்பெல்லாம்
கீழ்மையாய், இளக்காரமாய் நோக்கப் பெற்றார்கள். கூத்தாடி, பாகவதர்,
நாட்டியக்கரி....சிலர் சாமியோடு சேர்த்து வணங்கப் பெற்றார்கள். சிலர்
மரியாதைக்குரிய தலைவர்கள் ஆனார்கள். கிரிக்கட், கால் பந்து, பொதுக்
கூட்டம், கச்சேரி, புத்தகம், பத்ரிகை, நாடகம் என்று பகிரங்கமாக பொழுது
போக்க எத்தனை சாதனங்கள். பின் வானொலி, சினிமா மற்றும் டி.வி வேறு.

முதலில் இருந்த நிலை மாறி, பிறகும் இப்பொழுதும் அதிகம் பேரின் பொழுது போக உதவியவர்கள் அதிகம் சம்பாதிக்கின்றனர். இதில் தரம், சமூகப் பிரக்ஞை, நீதி, நியாயத்திற்கு எதற்கு இடம்?

பொழுது போக்கிலேயே கூட இரண்டு வகை என்கிறார்கள். ஒன்று வெறுமனே பொழுது போக்குவதற்காம்; இன்னொன்று பொழுதையும் போக்கி விட்டு சிந்தனை லாபத்தையும் பெறுவதற்காம். வியாபார புத்தி. வெறுமனே பொழுது போனால் என்னவாம்? சிந்தனை லாபம் என்ற பம்மாத்து கடைசியில் வெறும் பொழுது போக்குத் தானே? சிரிக்க வைத்தால் போதாதா? சிந்திக்கவும் வைக்கணுமாம் ! எதற்கு? என்ன சிந்தித்து எது சித்தித்தது?

கடந்த அரை நூற்றாண்டில் சினிமா, கோவில்களின் இடத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பிடித்துக் கொண்டு விட்டது. கோவில் பழைய செவ்வியல் கேளிக்கை. அரசியல், சுதந்திர தாக, சமூக சீர்திருத்த, பொதுவுடமைப் பேச்சுகள், எழுத்துகள், கறுப்பு வேள்ளை சினிமா நவீனத்துவ கேளிக்கை. இன்றைய கிரஃபிக்ஸ், இன்டர்நெட், பண்(பற்ற)பலை வரிசை போன்ற ஹை-டெக் பொழுது போக்குகள் பின் நவீனத்துவ கேளிக்கை.

ரஜினி தமிழ் நாட்டில் சிசுக்கள், நகர முடியாத கண் தெரியாத வயோதிகர்கள்
தவிர அனைவரையும் என்டர்டெய்ன் ( இதை எப்படி தமிழில் சொல்வது? சந்தோஷப் படுத்துகிறார் என்று சொல்லலாமா?) செய்கிறார். வெளி நாட்டுறைத் தமிழர்கள், இதர மாநிலத்தவர் போன்றவர்களைச் சேர்த்தால் இது இருபது கோடியைத் தாண்டலாம்.

சிலர் பல தடவை அவர் படத்தைப் பார்த்து மெய் மறக்கிறார்கள். ஒரு மாத
சம்பளத்தைக் கொடுத்து டிக்கட் வாங்குகிறார்கள். பாலாபிஷேகம்
செய்கிறார்கள். சிலர் வெறுமனே பார்க்கிறார்கள். சிலர் அவரைத்
திட்டுகிறாகள். சிலர் அவர் வாழ்க்கை வரலாறை புத்தகம் போட்டு சமூக சேவை செய்கிறார்கள். சிலர் அவரைக் கட்டுடைக்கிறார்கள். சிலர் அவரிடம் குழைகிறார்கள். சிலர் அவரை பயமுறுத்துகிறார்கள். நமக்குத் தெரியாத எத்தனை எத்தனையோ டீல்கள். மொத்தத்தில் அவரளவு அதிகம் பேரை, தமிழர்களை, தமிழகத்தவரை என்டர்டைன் / எங்கேஜ் வேறு யாரும் பண்ணுவதில்லை. கேளிக்கை தருவது மூலமாக. அதுவும் கமிட்மென்ட் இல்லாத என்டர்டைன்மென்ட். அவரைக் கேட்டு விட்டு நீங்கள்
காவியையோ, கறுப்பையோ, செங்கொடியையோ ஏந்த வேண்டாம். மன சாட்சி
குறுகுறுப்பு போன்ற பம்மத்து வேலைகளுக்கு இடம் தராத ப்யூர் என்டர்டைன்மென்ட்.

இத்தனை கோடிப் பேருக்கும் அவர் தேவைப் படுகிறார். அதுவும் அவர்
விற்கிறார், இவர்கள் வாங்குகிறார்கள், அல்லது சரியாகச் சொல்ல
வேண்டுமெனில், நாம் வாங்குகிறோம். நிர்பந்தமோ ஒப்பந்தமோ இல்லாத சுலபமான பரிவர்த்தனை.

ஆளுக்கு ஒரு ரூபாய் கொடுத்தாலும் அவர் சம்பளம் தயார்.
அவர் கறுப்புப் பணம் செய்யும் பட்சத்தில் அது அரசு கவனிக்க வேண்டிய
குற்றம். மற்றபடி என்டர்டைன்மென்ட் நோக்கில் டிமாண்ட் மற்றும் சப்ளை
என்பதை விட சப்ளை மற்றும் டிமாண்ட் என்கிற ரீதியில் இதுதான் நடக்கிறது. இதில் எரிச்சல் படுவது உலக இயக்கத்தைப் பற்றி புரிந்து கொள்ளாமையால்தான்.

இருபது கோடி என்ன, நாஞ்சில் நாடனையும், ஜெய மோகனையும் பத்தாயிரம் பேர் படிப்பார்களா? அடுக்கவே அடுக்காது. ஆயிரம் பேர் ஊன்றிப் படித்தால்
அதிகம். ரஜினி சினிமா, ஊன்றிப் படிப்பது முதலிய கமிட்மென்ட் எதுவும்
இல்லாத வெள்ளந்தியான (இது சமீப தமிழ் உலகில் நையப் புடைக்கப் பட்ட ஒரு சொல்) கேளிக்கை. இதில் குடல் கருகுவதில்லை, கும்பி எரிவதுமில்லை. கேன்ஸர் வருவதில்லை, பாலியல் நோய் பற்றிக் கொள்ளவோ தொற்றிக் கொள்ளவோ செய்வதில்லை. மூளை மழுங்குகிறது என்று சொல்பவர்கள் உண்டு. எதனால் மூளை மழுங்குவதில்லை? ஆத்திகத்தால், அரசியலால், விளையாட்டால், மதத்தால், மொழியால், பகுத்தறிவால் மழுங்கவில்லையா? பொய்யை விற்கிறார்கள் என்பதற்கு யார் பொய்யை விற்கவில்லை என்று தயை கூர்ந்து சிந்தியுங்கள் என்று பதிலிறுக்கலாம். தவிர பொய்யைத்தானே விற்க முடியும்? அதுதானே கவர்ச்சியாய் சுவாரஸ்யமாய் இருக்கிறது? உண்மையே உன் விலை என்ன?

நமக்குத் தேவை மலையாய் கடலாய், குவியும் விரியும் பொழுதை எப்படியாவது போக்குவது. எளிமையான சுலபமான சமூக அங்கீகாரம் பெற்ற, சட்டத்துக்கு உட்பட்ட, சாமர்த்தியம் தேவைப் படாத கேளிக்கை சினிமா. அதிலும் என் ரசனை அளவில் சுவாரஸ்யமான ஒன்று என்றால் ஒசத்தி கண்ணா ஒசத்தி. அதை நயம்பட விற்பவர் ரஜினி.

சினிமா இருக்கக் கூடாது என்றால் சாரயக் கடைகள் இருக்கக் கூடாது. சாராயக் கடைகளிலும், சாராய கொள்கலன்களிலும் 'குடி குடியைக் கெடுக்கும்' என்று எச்சரிக்கிறார்கள். சினிமா அரங்குகளில் அவ்வாறு இன்னும் இல்லை. மது தொலைக் காட்சியில் தென்படும் சமயங்களிலும் இப்போது எச்சரிக்கைகள் வருகின்றன. ஏதோ அதில் வரும் இதர காட்சிகள் நம்மை நேரே மோட்சத்திற்கே இட்டுச் சென்று விடும் என்பது போல. மதுவாவது, ரஜினி திரையில் முதலில் வரும் கணத்தைப் போல பலரை மோட்சத்திற்கு இட்டு செல்லும் என்று என் நண்பர்கள் சிலர் அடித்துச் சொல்லி நான் கேட்டதுண்டு. சாராய விற்பனை சென்ற ஆண்டை விட இரண்டு மடங்கு அதிகரித்துள்ளதாம் தமிழகத்தில். சாரயம் ஒரு பொழுது போக்குத்தானே? சத்து மாவு விற்க வேண்டும் என்று சொல்ல நாம் யார்? சத்து மாவில் கலப்படம் இல்லை என்று யார் சொன்னது? சத்து மாவில் என்ன சுவாரஸ்யம் இருக்கிறது?

மேலும் சினிமா இருக்கக் கூடாது என்றால் சிற்றுண்டிச் சாலைகள் இருக்கக்
கூடாது. ஆண்களும் பெண்களும் கண்களைத் தவிர இதர உடம்பை மறைத்துக்
கொண்டுதான் (ஜனாதிபதி மன்னிப்பாராக) வாழ வேண்டும். நமது முதலமைச்சர்கள் கண்டு களிக்கும் நன்றி நவிலும் நட்சத்திரக் கொண்டாட்டங்கள் நடக்க முடியாது.

நல்ல சினிமாதான் வேண்டும் என்பது இன்னும் அடாத செயல். எது நல்ல சினிமா? ஆளாளுக்கு மாறு படும். இதுதான் நல்ல சினிமா என்று பேசாத படம் தோன்றி, டிஜிடல் சினிமா தோன்றாத காலத்திலிருந்தே மக்கள் திரும்ப திரும்பக் காட்டி விட்டார்கள். ரொம்பப் பிடிவாதம் பிடித்தால் நல்ல அரசியல் தலைவர், சமூக சீர்திருத்தவாதி, மடத் தலைவர், மதத் தலைவர், நல்ல எழுத்தளர், கவிஞர், பத்ரிகை, இவை எல்லவற்றையும் விட நல்ல காற்று, நல்ல தண்ணீர், நல்ல உணவு வேண்டும் என்று கூட மக்கள் கேட்க ஆரம்பித்து விடுவார்கள். நாம் விரும்புவதை அல்லது நாம் விரும்புவதாக தோற்றுவிக்கப் பட்ட பிரமையை, நம் தகுதிக்கு ஏற்றதை எல்லா இடங்களிலும் நாம் பெற்றுக் கொண்டவாறே இருக்கிறோம்.

யாரும் யாரையும் வழி கேட்பதில்லை உயிர் வாழ. தாய், தகப்பன், உற்றார்,
சமூகம், வாத்தியார், போலிஸ், தலைவர், குருஜி மற்றும் சமய சந்தர்ப்பம்;
மேலும் இவை அனைத்தையும் மிஞ்சிய ஆசை, பயம் இவற்றின் இடை விடாத உந்துதல்; மற்றும் லட்சோப லட்சம் விஷயங்கள் மூலம் தாக்கம் பெற்று வாழ்கிறோம். வாழ்க்கையும் யாருக்கும் சுலபமாக எப்போதும் இல்லையே. உத்தரவாதங்களும் இல்லை. செவ்வியான் ஆக்கமும் அவ்விய நெஞ்சத்தான் கேடும் தானே நினைக்கப் படுகின்றன. அது வேறு குழப்பம்.

இதைத்தான் செய்ய வேண்டும் என்று யாரும் நிர்ணயம் பண்ண முடியாது. வாழ்க்கை பிய்த்துக் கொண்டு போய் விடும். புத்தன் கடவுள் ஆகவில்லையா? மதம் போதை வஸ்து என்ற முன்னாள் சோவியத் யூனியனில் பின்னர் போதை வஸ்துவே மதமாகவில்லையா?

ரஜினியை விட அதிகம் என்டர்டைன் செய்தவர்கள் அவரை விட அதிகம் செல்வமும் செல்வாக்கும் பெற்றார்கள். பெறுகிறார்கள். பெறுவார்கள். சிலர் விரித்த சினிமா அரசியல் என்ற இரண்டு கடைகளிலும் பரப்பிய பொருள் கொள்ளை கொள்ளையாய்க் கொள்ளப் பட்டது அல்லவா? அவர்கள் பெரும் பணக்காரர்கள் ஆனார்கள் என்றால் அந்த அளவு பொழுது போக்க உதவி இருக்கிறார்கள் என்று பொருள். இதிலும் கறுப்புப் பண விவகாரம் அரசால், நீதித் துறையால் கவனிக்கப் பட வெண்டிய ஒன்று என்பதைத் தவிர குறை சொல்ல என்ன உள்ளது?

கேளிக்கையில் உயர்ந்தது, தாழ்ந்தது என்று உள்ளது என சுலபமாகச் சொல்லி
விடுவார்கள். அவர்கள் ஒரு வகையில் மனுவாதிகள் அல்லது மார்க்ஸ்வாதிகள். எல்லா கேளிக்கையும் ஒன்றே, குலத்தைப் போல. வேண்டுமானால் ரகசிய கேளிக்கைகள் எல்லாருக்கும் கிடைப்பதில்லை எனலாம். கேளிக்கை எப்பேற்பட்டதாயினும் அதில் மனம் அடையும் மகிழ்வோ நெகிழ்வோ ஒன்றே. தீவிரம் வேண்டுமானால் மாறு படலாம்.

ஆனால் ரஜினி மேட்டர் pure entertainment. அவர் படத்தைப் பார்த்துக்
கொண்டிருக்கும் போது யாரும் வன் முறை செய்வதில்லை. அவருக்கு முந்திய சூப்பர் ஸ்டார் போல் அவருக்காக பச்சை குத்தவோ வாக்குச் சீட்டை குத்தவோ கூட வேண்டாம். முன்னவருக்கும் முந்தைய சூப்பர் ஸ்டாரைப் போல வெறும் அப்பழுக்கில்லாத பொழுது போக்கு. இவருக்கு சங்கீத ரசனை கூட வேண்டாம்.

எம்ஜியார் காலத்தில் " நம்பியாரிடம் எப்பவும் ஜாக்ரதையாய் இரு" என்று
அக்கறையும், அஞ்ஞானமுமாய் அறிவுரை கூறி அவருக்கே ஓட்டு போட்ட மூதட்டிகள் உண்டு. அவர் ஆதரித்தவர் அரசமைத்தார். இப்போதெல்லாம் யாரும் திரையில் தோன்றும் ரஜினியை நிஜ ரஜினி என்று நம்பி ஏமந்து ஓட்டளிப்பதில்லை. அப்படியே ஏமாந்தாலும் என்ன செய்வது? சத்யஜித் ரே படங்களை தமிழ்ப் படுத்தி எல்லா தியேட்டர்களிலும் ஓட்டலாமா? யார் பார்ப்பது? பொழுது மேன்மேலும் விளைந்து புற்று வைத்து விடாதா?

இயற்கை அதன் தர்மத்தை செய்து வருகின்றது. மனிதனின் விழைவு நியாயமா, சந்தோஷமா? காத்தலா, அழித்தலா? மனிதன் விதியின் கைப்பாவையா, விதி மனிதனின் காரியங்களுக்குக் கைத்தடியா? இது எல்லாமுமேயா, இடைப் பட்டதா, அல்லது எதுவுமே இல்லையா? மனிதர்க்கு என்ன தேவை? காற்று, தண்ணீர், உணவு, பிறகு உடை, உறைவிடம். உயிர் வாழ்ந்தால்தான் இன விருத்தி. எனவே பின்பு அது.

இதைத் தவிர மலையாய் நிமிர்ந்து எழுந்து கடலாய் விழுந்து புரண்டு
இருக்கும் பொழுதை என்ன செய்வது? எனவே உண்டி கொடுத்தோருக்குப் பின்
கேளிக்கை கொடுத்தவர்தானே உயிர் கொடுத்தோர்.

இது நேரிடையான - satire சிறிதும் இல்லாத - கட்டுரை.
*********