FUTURE IS NOW - J Krishnamurti.

பிறப்பு, இறப்பு என்பது உண்மையே இல்லை. அத்தகைய பொய்யான தோற்றத்தை நமது மனமே உருவாக்கிக் கொள்கிறது. மனம் தனக்கென்று ஒரு உடலை உருவாக்கிக் கொள்கிறது. அதைக் கனவு மழையில் நனைத்துத் துன்பப் படுத்துகிறது. - ரமண மகர்ஷி.

Search This Blog

Thursday, July 30, 2009

எமன்.

எமன் : பிரசுரம் : சொல்வனம்  12-7-2009


வ.ஸ்ரீநிவாசன்.


எங்கள் வீட்டின் நான்கு குடித்தனங்களுக்கும் சொர்க்கம் நிச்சயம் மேலேதான் என்பதில் சந்தேகம் இல்லை. வீட்டின் மொட்டை மாடிதான் எங்கள் சொர்க்கம். பெரிய திடல் மாதிரி அது இருக்கும். நாலு பக்கமும் மூன்றடி உயர கைப்பிடிச் சுவர் மொட்டை மாடியை ஒரு குளம் மாதிரி காட்டும். சிறுவர்கள் விளையாட்டு மைதானம் அதுதான். மணல் அற்ற மைதானம். துளசி, மல்லிகை என்று செடி கொடிகள் ஓரமாய் இருக்கும் ஒரு நந்தவனமும் அதுதான். வடாம் போட, துணி உலர்த்த, கோடை காலத்து இரவில் தூங்க என்று அது எங்களுக்கு எல்லாமாக இருந்தது. அந்தக் கைப்பிடி சுவரில் சாய்ந்து கொண்டு வீதியைப் பார்த்தால் பொழுது நிமிடமாய்ப் போகும். மல்லாந்த இரவில் வானத்தைப் பார்த்தால் சுருக்க விடிந்துவிடும். கைப்பிடி சுவரில் சாய்ந்து எத்தனை கல்யாண ஊர்வலம், சாமி புறப்பாடு, அரசியல் ஊர்வலம், ஆலி ஜூலா எல்லாம் பார்த்திருக்கிறோம், எதோ உப்பரிகையிலிருந்து ராஜா பார்ப்பதைப் போல.

அப்பா எப்போதாவதுதான் அங்கெல்லாம் வருவார். அன்றும் வந்தார். ஒரு பிரம்பு சாய்வு நாற்காலியை நான் கொண்டு வந்தேன். அம்மா ஏற்கனவே பாயில் உட்கார்ந்து இருந்தாள். நானும் என் இரண்டு தங்கைகளும் கைப்பிடி சுவரில் சாய்ந்து நின்று கொண்டு இருந்தோம்.

ஜூலை மாதத்து மாலை நேரம். அருகில் இருந்த நாற்சந்தி வழக்கம் போல் ஜன சந்தடியோடு, வாகன இரைச்சலோடு இருந்தது. மூலையில் இருந்த பிள்ளையார் கோவில், அடுத்த திருப்பத்தில் இருந்த மார்க்கட், நேராகப் போனால் வரும் மெயின் ரோடு எல்லாமுமே கூட்டத்துக்கும், இரைச்சலுக்கும் காரணமாயிருந்தன. விளக்குக் கம்பங்களில் அரசியல் கட்சித் தோரணங்கள், இண்டு இடுக்கு விடாமல் வீட்டு சுவர்களில் சுவரொட்டிகள், சுதந்திரமாய்த் திரியும் மாடுகள் என்று வண்ணங்கள் கண்ணில் அடித்தன.

அப்போது அப்பா பெயர் சொல்லி யாரோ வீதியிலிருந்து கூப்பிடுவது கேட்டது. நான் எட்டிப் பார்த்தபோது சுமார் ஐம்பது, ஐம்பத்தைந்து வயது மதிக்கத் தக்க ஒருவர் வீட்டு வாசலில் நின்று கொண்டிருப்பது தெரிந்தது. கட்டம் போட்ட அரைக்கை சட்டையும், வேட்டியும் அணிந்திருந்தார். கீழே போய் அவருக்கு என்ன வேண்டும் என்று கேட்டேன். அப்பாவைப் பார்க்க வேண்டும் என்றவரைக் கூட்டிக் கொண்டு மேலே வந்தேன்.

“என்னைத் தெரியுதா” என்று கொஞ்சம் கலங்கியவாறே அவர் அப்பா அருகில் வந்தார். அப்பா அவரைப் பார்ததில் அவருக்குச் சட்டென்று தெரியவில்லை என்பது தெரிந்தது.

“கீழே போய் இன்னொரு சேர் கொண்டு வா” என்று அப்பா சொன்னார். நான் புறப்படும் முன், “அதெல்லாம் வேண்டாம் தம்பி” என்றவாறே அப்பா காலடியிலேயே அவர் தரையில் உட்கார்ந்து விட்டார்.

அம்மா எழுந்து “இந்தப் பாயில் உட்கார்ந்து கொள்ளுங்கள்” என்றாள்.

“வேண்டாம்மா. நீங்க ஒக்காருங்க” என்று கொஞ்சம் பதற்றமாகக் கைகளாலும் சைகை செய்தபடி சொன்னவர் நிமிர்ந்து அப்பாவையே பார்த்தார்.

அப்பா கொஞ்சம் கூச்சமாகி இருந்தார். பிறகு மெள்ள, “செல்லம்... செல்லையா...” என்றார்.

“ஆமா, செல்லையாவேதான். பரவாயில்லை. ஞாபகம் வச்சிருக்கியே.” என்று நிறுத்தியவர், “எப்படி இருக்கே, நல்லா இருக்கியா.. முப்பத்தஞ்சு வருஷமாச்சு நாம பாத்து”என்றார். பிறகு அம்மாவிடம் திரும்பி, “நீங்க ஒக்காருங்கம்மா” என்றார். எங்கள் பக்கம் பார்த்து, “பசங்களா?” என்று கேட்டார்.

அப்பா “ஆமாம்” என்றார்.

“கோயமுத்தூர் போன மாசம் போயிருந்தேன். உங்க டிபார்ட்மென்ட்லே ஒன்னப் பத்தி விசாரிச்சேன். நீ மெட்றாஸ் போய் இருபது வருஷமாச்சுன்னாங்க. இங்க வந்து விசாரிச்சு உன்னப் பத்திக் கேட்டு அட்ரஸ் தெரிஞ்சுகிட்டு இங்க வரேன்....இப்ப என்ன இன்ஸ்பெக்ஷன்லே இருக்கியாமே, ஊர்லே இருக்கியோ இல்லயோன்னு நினச்சேன்”

“இப்போ மெட்றாஸ்லேதான் ட்யூட்டி. இன்னும் ரெண்டு மாசத்துக்கு.. .. நீ இப்போ எங்கே இருக்கே?”

“சீரங்கத்துலேயேதான் இருக்கேன். மலேசியா, சிங்கப்பூர், துபாய்னு போயிட்டு பத்து வருஷம் முன்னாடி ஊர் திரும்பிட்டேன். உனக்கு எப்போ ரிடயர்மென்ட் ?”

“இன்னும் மூணு வருஷம் இருக்கு. நீ என்ன பண்றே?”

“ம்..... என்னெல்லாமோ பண்ணேன்.” என்றவர் என்னைப் பார்த்து, “என்ன படிக்கிறே தம்பி” என்றார்.

“ஃபர்ஸ்ட் இயர் பி. காம்.”

“நீங்கம்மா?”

“நான் லெவென்த். இவ நைன்த்” என்று சொல்லிவிட்டு என் முதல் தங்கை அப்பாவைப் பார்த்தாள்.

அப்பா, “இவர் என் கூட திருச்சி காலேஜ்லே படிச்சவர். முப்பது முப்பத்தஞ்சு வருஷம் முன்னாடி. நான் ஹாஸ்டல், இவர் டே ஸ்காலர்” என்றார்.

“நாம காலேஜ்ல சேந்து படிச்சதைச் சொல்றே. முக்கியமான விசயத்தச் சொல்லு” என்றவர், மெல்ல எங்கள் பக்கம் திரும்பி, “நான் உயிரோட இருக்கறதுக்குக் காரணமே உங்கப்பாதான்.” என்று சொல்லி எங்கள் மூவரையும் பார்த்தார்.

“நாங்கள் காலேஜ்ல படிக்கறப்ப காவேரிலே நான் போயிருக்க வேண்டியவன். உங்கப்பாதான் என்னைக் காப்பாத்தினார்.” இதைச் சொல்லும்போது, அவர் குரல் கொஞ்சம் விம்மியது.

இவ்வளவு நேரம் ‘யார் இந்த ஆள்’ என்று பார்த்துக் கொண்டிருந்த அம்மாவின் கண்கள் பிரகாசமாயின.

பிறகு அவர் எங்கப்பாவைப் பார்த்து, “ நான் அன்னிக்கே போயிருக்கலாம்பா. என்னை ஏன் காப்பாத்தினே” என்றார். உட்கார்ந்தவாறே அப்பாவின் கைகளைப் பிடித்துக் கொண்டார். அவர் கண்கள் கலங்கி இருந்தன.

இரண்டு நிமிடம் யாரும் ஒன்றும் பேசவில்லை. அப்பாவின் கைகளை விடுவித்தவாறே தலையைக் குனிந்தவாறு பொதுவாக “ஐயாம் சாரி” என்றார்.

“உம் பிரதர் கோபாலன் எங்கே இப்ப” என்று அப்பாவிடம் கேட்டர்.

“மதுரையிலேயே ப்ராக்டீஸ் பண்ணிண்டு இருக்கார்”

“உண்மையிலேயே சொல்றேம்பா. எனக்கு உயிர் தந்ததுக்கு நான் உனக்கு என்ன வேணும்னாலும் தரலாம். நம்ம செத்துருவோமோன்னு கொஞ்சம் கூட தயங்காம தண்ணிலே குதிச்சு என்னை வெளிலே கொண்டு வந்தே. எங்கம்மாப்பா உன்னைத்தான் குலதெய்வம்பாங்க. ஆனா நான் வாழ்ந்திருக்கக் கூடாதுப்பா. என் கதை அன்னிக்கே முடிஞ்சிருக்கணும். நீ பண்ணது எவ்வளவு பெரிய தப்புன்னு உனக்குத் தெரியாது. என்ன அப்படியே சாக விட்டிருக்கணும். ஆனா நீதாம்பா எனக்கும் கண் கண்ட கடவுள்”.

அப்பாவுக்கு கூச்சம் அதிகமாகி இருந்தது. நல்ல வேளை வேறு குடித்தனக் காரர்கள் யாரும் இன்னும் வரவில்லை.

அவர் மேலும் பேசும் முன் அப்பா, “சும்மா இரு செல்லம். அதெல்லாம் ஒண்ணுமில்லே.” என்றார். பிறகு, “நான் எங்க உன்னக் காப்பாத்தினேன். ஏதோ பதட்டத்தில தண்ணிலே குதிச்சேனே ஒழிய நானே முழுகிடுவேனோன்னு பயந்துட்டேன். நான் முழுகிப் போகாம இருக்க முயற்சி பண்ணப்ப நீயும் என் கூட வெளிலே வந்தே. அதப் பத்தி திருப்பித் திருப்பி பேசாதே. உனக்கு எத்தன பசங்க. என்ன பண்றாங்க. உன் குடும்பம் பத்தி
சொல்லு.” என்றார்.

“நான் மேக்கொண்டு முப்பத்தஞ்சு வருஷம் வாழ்ந்தது ஒன்னாலேதான். நீயா என்னக் காப்பாத்தினயோ இல்லே உன் விதியோட என் விதி பிணஞ்சு நானும் தப்பிசேனோ...... ஆனா நான் அன்னிக்கே போயிருக்கலாம். ஒண்ணு தெரிஞ்சுக்க. இந்தத் தடவை ஒன்னாலே ஒண்ணும் பண்ண முடியாது. ஒன்னப் பாக்கணும் ஒருவாட்டியாவதுன்னுதான் அதைத் தள்ளிப் போட்டேன். எனக்கு என்னெல்லாம் நடந்ததுன்னு ஒனக்குத் தெரியாது, இனிமேலும் என்னப் பத்தி ஒனக்கு ஒண்ணும் தெரியாது. உன்னாலே என்னைத் தடுக்கவும் முடியாது.”

அவரது கலைந்த தலைமுடியும், கறுக்கும் முகமும், கலங்கிய கண்களும் இதற்கெல்லாம் சற்றும் சம்பந்தமில்லாத சிறிய புமுறுவலோடு இருந்த உதடுகளும் அவர் பயித்தியமோ என்று எண்ண வைத்தன. அப்பாவுக்குக் கூச்சத்தோடு இப்போது குழப்பமும் சேர்ந்திருந்தது. “அதெல்லாம் இருக்கட்டும். ராத்திரி இங்கே சாப்டுட்டுப் போலாம்” என்றார்.

அவர் மெல்ல சிரித்தார். முகம் தெளிவான மாதிரி இருந்தது. “ இனிமே எனக்கு சாப்பாடு வேண்டாம். உன்னைப் பார்த்தது போதும். உன்னைப் பார்க்கத்தான் உயிரோடு இருந்தேன். நீ என்னைக் காப்பாத்தினபோது எங்க அப்பா அம்மாதான் இருந்தாங்க. அப்புறம் எவ்வளவோ புது சொந்தம். ஆனா இன்னைக்கு யாரும் கிடையாது. அப்பா அம்மா கூட கிடையாது. நீ மட்டும்தான் எனக்கு. அதான் உன்னைத் தேடி அலைஞ்சேன். உன்கிட்டே சொல்லிட்டுப் போக. இனிமே உன்னால் என்னைக் காப்பாத்த முடியாது.”

அம்மா இதற்குள் கீழே போய்ப் காப்பி கொண்டு வந்துவிட்டாள். அதை மறுக்காமல் வாங்கிக் கொண்டார். சொட்டு விடாமல் குடித்தார். நல்ல பசியோடு இருக்கிறார் என்று தெரிந்தது. சடக்கென்று எழுந்து கொண்டார். அம்மாவைப் பார்த்து பெரிய கும்பிடு போட்டார். ‘ நான் யாரோ பக்கிரின்னு நினைச்சுராதீங்க. பி.ஏ.பி.எல். படிச்சு இருக்கேன். நில புலன்லாம் இருக்கு. நான் பார்க்காத ஊர் இல்லே. ஆனா இதுக்கெல்லாம் ஒண்ணும் அர்த்தம் இல்லை.” என்றார். அம்மா என்ன சொல்வது என்று தெரியாமல் அப்பாவைப் பார்த்தாள்.

அவர் கீழே விழுந்து அப்பாவை வணங்க முற்பட்டபோது அப்பா அவரைத் தடுத்து விட்டார். “செல்லம்” என்று ஒரு அதட்டல் போட்டார்.

“இன்னும் ‘ ருமாடிஸம் இருக்கா ஒனக்கு” என்றார் அவர். அப்பா ‘உம்’ கொட்டினார். அவர் எப்போ கிளம்பிப் போவார் என்பது மாதிரி இருந்தார்.

அவர் மறுபடியும் “ஐயாம் சாரி” என்றார். “வரேம்ப்பா” என்று அப்பாவின் இரண்டு கன்னங்களையும் தடவி விட்டு கிளம்பி எங்களிடம் “வரேன்” என்று சொல்லிவிட்டு அம்மாவைப் பார்த்து மறுபடியும் ஒரு கும்பிடு போட்டுவிட்டு விறுவிறுவென்று படியிறங்கிப் போய் விட்டார். எல்லாம் ஒரு பத்து, பதினைந்து நிமிடங்களுக்குள் வேகவேகமாக நடந்து விட்டன.

அப்போது வாசலில் ஒரு பெரிய ஊர்வலம் வந்தது. அரசியல் தலலவர் ஒருவரின் பிறந்த நாள். பேரிரைச்சலுடன் அலங்கரிக்கப் பட்ட வாகனங்கள், விதம் விதமான ஆட்டங்கள் என்று அந்த ஊர்வலம் சென்றது. வாழ்க ஒழிக கோஷங்கள், ஒலி பெருக்கிகளில் பிரசாரப் பாடல்கள், பேச்சாளர்கள், குழாய் விளக்குகள், ஜெனரேட்டர், போலீஸ், குதிரை, யானை என்று ஊர்வலம் போய்க் கொண்டே இருந்தது.

இது நடந்து இருபது வருடம் ஆகி விட்டது. அதற்கப்புறம் செல்லையாவைப் பற்றி ஒன்றும் கேள்விப்படவேயில்லை. ஆனால் அவரை எப்போதுமே மறக்க முடியாதபடி ஆகிவிட்டது. அன்று இரவுதான் எங்கப்பா போய் விட்டார்.

***********

பெயரிலென்ன இருக்கிறது?

பெயரிலென்ன இருக்கிறது?

எழுதியவர் வ.ஸ்ரீநிவாசன் - (பிரசுரம் : சொல்வனம் 6/24/09)

இது ஷேக்ஸ்பியர் ஓரிடத்தில் கேட்பது. என் உயர் அதிகாரி ஒருவர், ‘பெயரில்தான் எல்லாம் இருக்கிறது’ என்றார். எங்கள் வங்கியில் இருந்த பெரும்பான்மை உயர் அதிகாரிகள் கொங்கணி மொழிக்காரர்கள். இவரும்தான். ஆங்கிலம், மலையாளம், தமிழ் பேசுவார். இவரோடு ஒரு முறை பேங்களூரு வரை போய் வர வேண்டி இருந்தது. காரில். அப்போது அவர் பேசிக் கொண்டே வந்தார். ‘ஒருவருடைய பெயர் தான் அவருடைய ‘Life Script’. அதில்தான் அவர் வாழ்க்கை ஒட்டு மொத்தமாக அடங்கியுள்ளது. என் பெயரில் சதானந்த் இருக்கிறது. அதனால் தான் நான் எப்போதும் ஆனந்தமாய் இருக்கிறேன்’ என்றார். அவர் ஆனந்தமாய் இருந்தாரோ என்னவோ அவரிடம் பணியாற்றிய அதிகாரிகள் சதா ஒரு வித கிலியிலும்,குழப்பத்திலுமே இருந்தார்கள். (அதனல்தான் அவர் ஆனந்தமாய் இருந்தார் போலும்). அவர் எப்போது என்ன செய்வார் என்று தெரியாது. காலையில் சென்று அவரிடம் ‘குட் மார்னிங்க்’ சொல்பவரிடம் ‘உன்னை தண்ணியில்லா காட்டுக்கு அனுப்பி விடுவேன்’ என்பார். மேசையின் அறைகளில் கடைசி அறையைத் திறந்து அதில் தன் கால்கள் இரண்டையும் போட்டுக் கொண்டு கேபினில் அமர்ந்திருப்பார். அவர் அறை குண்டூசியை யாருமே தொட மாட்டர்கள். எல்லாம் அவர் பல் பதம் பார்த்தவை. ‘காலையில் ஒரு மணி வாக் போவேன் தினமும்’ என்பார். அவர் சொல்லும் பாதை உதாரணத்திற்கு ‘பாரிசில் புறப்பட்டு, தாம்பரம் வரை போய் திரும்பி, வலசரவாக்கம் வந்து மீண்டும் ஆவடி வந்தேன்’ என்கிற ரீதியில் இருக்கும். மாதந்தோறும் அவர் மருந்துகளோடு தொலை பேசியில் கத்தி வாங்கும் கருத்தடை சாதனம் எல்லார் கவனத்தையும் கவரும். சில சமயம் ராமாயணம், இந்த லைஃப் ஸ்கிரிப்ட் போன்ற விஷயங்களைப் பற்றி சுவாரஸ்யமாக, அவர் படிப்பில் தங்கப் பதக்கம் வாங்கியது உண்மைதான் என்று தோன்றும்படி, பேசுவார். மற்றபடி தங்கப் பதக்கம் வாங்கியவன் வங்கியில் சேர்ந்த மாதிரிதான்.

நான் பிற்காலத்தில், மிக்க பொறுப்போடு வேலை பார்த்த என் துணை அதிகாரி ராமலிங்கம் என்பவர் மாற்றல் ஆகிச் செல்கையில், இந்த ‘லைஃப் ஸ்கிரிப்ட்’ விஷயத்தைப் பேசினேன். எங்கள் கிளை ப்யூன் ‘குமாரு’க்கு இரண்டு மனைவிகள். ‘க்ருஷ்ணன்’ என்கிறவருக்கு பல சிநேகிதிகள். இதையெல்லாம் சொல்லி விட்டு ‘ராமலிங்கம் ஆதர்ச மகனாக, கணவனாக, சகோதரனாக, நண்பனாக இருந்த ராமன் போல் ஓர் ஆதர்ச அதிகாரியாக இருந்தார். லிங்கத்தைப் போல அரூபமாக (இந்த இடத்தை துளியும் விரச அர்த்தம் வர வாய்ப்பே கொடுக்காமல் பேசினேன்) மர்மமாகவும் இருந்தார்’ என்றேன். அதற்கும் காரணம் இருந்தது. அவருக்கு வரும் தொலை பேசி அழைப்புகள். அவர் திடீர் திடீரென்று காணாமல் போவது. அவர் வீடு எங்கு இருக்கிறது என்று யாருக்கும் தெரியாமல் இருந்தது போன்றவை.

‘சின்னப்பையன்’ என்ற பெயர் கொண்ட ஒருவர் என்னுடன் வேலூரில் பணியாற்றினார். முதலில்
மிலிடரியில் பணிசெய்தவர். (எக்ஸ் சர்விஸ் மென்களில் மூன்று வர்க்கங்கள் உண்டு. ஆர்மி, நேவி, ஏர் ஃபோர்ஸ் என்று. கொஞ்சம் பழக்கத்திற்குப் பின் ஒருவர் எந்தப் பிரிவில் பணி புரிந்தவர் என்று அவர்களைக் கேட்கமலே சொல்லி விடலாம். ஆனால் பொதுக் குணம்: கேள்வி கேட்காமல் சொன்ன வேலையை செய்வது. உடல் வலு மிக்கவர்களாக இருப்பது.) தலைமை கடை நிலை ஊழியர். அவர் போன்ற பொறுப்பு மிகுந்த ஊழியர்களைக் காண்பது அரிது. அவர் இல்லாவிட்டால் கிளையை நடத்துவது சிரமம். ஆயிரக் கணக்கான ஓய்வூதியக் காரர்களை வாடிக்கையாளர்களாய்க் கொண்டிருந்த இந்தக் கிளையில் ஒவ்வொரு பென்ஷனரையும் தனிப்பட்ட முறையில் அறிந்தவர். பல சமயங்களில் அவர்கள் பென்ஷன் தொகை உட்பட. இந்த சின்னப் பையன்தான் எங்கள் கிளையில் இருந்த சுமார் முப்பது பேரில் முதியவர்.

அவர் குடும்பத்தில் இருந்த ஒரு இளைஞன் பெயர் ‘ஜாம்பவான்’. டி.வி. சம்பந்தப் பட்ட வேலைகளைச் செய்து வந்தார். எங்கள் வீட்டு ஆன்டனாவை வைக்க வந்த போது அவர் நண்பனை துணக்குக் கூட்டி வந்தார். அவர் பெயர் ‘நட்சத்திரம்’. இதைத் தவிர என் கல்லூரி நாட்களில் என்னுடன் ‘படவட்டம்’ என்று ஒருவர் படித்தார். மிக இனிமையானவர். மாலையிலும் காலை வேளைகளிலும் அஞ்சல் அலுவலகத்தில் பணி புரிந்து கொண்டே படித்து வந்தார். ‘என்னங்க படம் பட்டம்’ என்று கூப்பிடுபவர்களைப் பார்த்தும் புன்னகையே புரிவார்.

‘புதுமைப் பித்தன்’, ‘மௌனி’ போன்றவர்களது கதைகளைப் படிக்காமல் அந்தப் பெயர்களைக் கேட்கையில் கொஞ்சம் கூச்சம் ஏற்படுகிற மாதிரி இருக்கும் என்றே நினைக்கிறேன். அவர்கள் பெயராக அவை இருந்ததனால் அவை சாதாரணமாக ஏன் பொருத்தமாகக் கூட ஒலிக்கின்றன. ‘ஜெயகாந்தன்’ வெற்றியை ஈர்ப்பவர் என்றும் ‘ஜெயமொகன்’ வெற்றியை நேசிப்பவர் என்றும் பொருள் ஆகின்றன. ‘ராமம்ருதம்’ வேறு எந்தப் பெயராக இருந்திருக்க முடியும்? ‘நாஞ்சில் நாடன்’ என்ற பெயராலேயே, கட்சி நெடி அடிக்கும் என்று அவர் அருகிலேயே நான் சென்றதில்லை. 2001ல் தான் முதல்முறையாக அவரைப் படித்தேன். அப்போதுதான் தெரிந்தது இது எதிர் துருவத்தில் இருக்கும் நாஞ்சில் நாடு என்பது. பிரமிளின் பெயர் சிவராமலிங்கம். “அழிக்கும் கடவுள் பின் காக்கும் கடவுள் மறுபடி அழிப்பு தான். அதுதான் அவரோடு ஆன உறவு பரம பத சோபன படம் போல் கொஞ்சம் ஏணியும் நிறைய பாம்புகளும் கொண்டது” என்று வெங்கட் சாமிநாதன் சொன்னதாகக் டேவிட் என்னிடம் சொன்னார். ‘அசோக மித்திரன்’ என்ற பெயரும் பு.பி. மௌனி மாதிரி கூச்சம் வரவழைப்பதாகத்தான் உள்ளது. (உண்மையில் அவன் ‘சோக மித்திரன்’ என்று சுஜாதா எழுதினார்.)

‘ரஸ்கால்நிகாவ்’ முதல் சிறிய பாத்திரமான ‘மர்மலடாவ்’ வரை பல காரணப் பெயர்களைக் கொண்டது தாஸ்த்தாயெவ்ஸ்கியின் ‘குற்றமும் தண்டனையும்’.

நான் ஓரிடத்தில் பேசப்போனேன். விழாவுக்கு தலைமை வகித்த புலவர் ஒருவர், வயதுமுதிர்ந்தவர், தன் பெயருக்கு ஏற்ற மாதிரி சுறுசுறுப்பான சீனிவாசன் (எறும்பு என்ற விளக்கத்தோடு) இப்போது உரை ஆற்றுவார் என்று அறிமுகம் செய்தார். அப்போதே நான் நல்ல வெளையாகக் கவனமாக ஸ்ரீநிவாசன் என்றே எல்லா இடத்திலும் உச்சரிப்பு கெடாமல் எழுதுகிறேன் என்று நினைத்துக் கொண்டேன். ஆனாலும் இந்தப் பெயர் சீனு, சீனி, சீனா, ஸ்ரீ, ஸ்ரீநி, சீமாச்சு (குறைந்த பட்சம் பழைய கதைகளில்) இன்னும் பல்வேறு ரூபம் கொள்கிறது. சுப்ரமண்யமும் அப்படித்தான். ஆனாலும் சில பெயர்களில் அபாயம் அதிகம். காமினி, சோபா (வாடகை சோபா இருபது ரூபா), மிருனாளினி (இது ஆங்கிலத்தில் Mi-மை ru-ரு na- ந li-ளி ni-னி ஆகிற கொடுமையைப் பார்த்திருக்கிறேன்). புண்டரிகாட்சன், குஞ்சித பாதம் (இப்பெயர்கள் இப்போது புழக்கத்தில் உள்ளனவா?) போன்ற பெயர்கள் தூங்கு மூஞ்சி ஆசிரியர்களின் வாயில் பாதியில் நின்று திரும்பத் திரும்ப உச்சரிக்கப்படுகையில் வகுப்பறை ரண களம் ஆகி விடும்.

மும்தாஜ், அப்பாஸ் ‘காஃபி வித் அனு’ தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சேர்ந்து தோன்றினார்கள். மும்தாஜ், அப்பாஸை ‘ஆயுஷ்மான் பவ” என்று வாழ்த்தினார். இன்னொரு நிகழ்ச்சியில் அஸின் தன் பெயரின் பொருளை இப்படி விளக்கினார். “ஆங்கிலமும் சம்ஸ்க்ருதமும் சேர்ந்த பெயர். ஸின் (sin)- பாவம்; எதிர்ப்பதம் அஸின். ‘ஸின்’ ஆங்கிலம், ‘அ’ சம்ஸ்க்ருதம்” என்றார். மும்தாஜ் வட இந்திய இஸ்லாமியர். அஸின் கேரள கிறிஸ்தவர்.

சம்ஸ்கிருதம் பற்றியும் எனக்கு ஒன்றும் தெரியாது. எங்கள் பள்ளியில் வி.வி.என். என்கிற வி.வி.நடராசன் அற்புதமான தமிழாசிரியர். அவர் சொல்லிக் கொடுத்த கம்ப ராமாயணப் பாடல்கள் இன்னமும் மனதில் இருக்கின்றன. அவர் சம்ஸ்கிருதத்தை ‘வட்ட்ட்ட மொழி’ என்று கூறி பல்லைக் கடிப்பார். அவர் ‘ஐயர்’ ஜாதியைச் சேர்ந்தவர் என்று என் பள்ளித் தோழன் மூலமாக சமீபத்தில்தான் தெரிந்து கொண்டேன். தமிழ் பற்று = சம்ஸ்க்ருத வெறுப்பு என்று தமிழ் நாட்டில் இருக்கிறது.

இதை எழுதுகையில் பெயர்கள் தமிழில் இல்லாததால் சிலர் வாங்கிக் கட்டிக் கொண்டது நினைவுக்கு வருகிறது. திரு. கி.ஆ.பே. விஸ்வநாதம், திரு சி.பா.ஆதித்தனார் ஆகியோர் மாநிலக் கல்லூரியில் பேச வந்த போது உடன் பேச வந்த தேவநேய பாவாணர், முன்னவரை ஏன் பெயரை ‘உலக நம்பி’ என்று மாற்றிக் கொள்ளவில்லை என்றும், இரண்டாமவரை ‘பத்ரிகையின் பெயரை ஏன் நாட்கம்பி என்று மாற்றவில்லை என்றும் திட்டித் தீர்த்தார். கி.ஆ.பே. அவர்களின் பேத்தி பெயர் (ஜெயஸ்ரீ) கூட விமர்சிக்கப் படடதாக நினைவு. அதே கூட்டத்தில் கல்யாண பத்ரிகைகளில் சிரஞ்சீவி என்று போடுகிறீர்கள் சிரம் என்றால் தலை, எனவே சிரஞ்சீவி என்றால் தலையை வெட்டுகிறவன் என்று பொருள் வருகிறது என்று கி.ஆ.பே. பேசினார். நான் என் பள்ளி நாட்களை நினைத்துக் கொண்டேன். வகுப்புகளில் ‘Soothing Effect’ ‘தளை, அடி, தொடை” ‘ கூதிர் காலம்” போன்ற வார்த்தைகள் வருகையில் பள்ளி மாணவர்கள் ‘களுக்’கென்று சிரிப்பதில் குழந்தைத்தனம் இருக்கும்.

ஒரு கவிஞர் திடீரென்று தன் பெயர் கடவுள் பெயர் என்று அறிந்து கொண்டு ஒரு நெருப்பு கக்கும் புரட்சிப் பெயரில் பல நாள் எழுதி வந்தார். மீண்டும் ஞானோதயம். அந்த புரட்சி வடமொழி புரட்சி என்பதால் இப்போதெல்லாம் அதைத் தமிழ் படுத்தி, படுத்தி வருகிறார். ஸ்ரீநிவாசனுக்கு தமிழ்ப் பெயர் இருக்கிறதா என்று யோசித்து இருக்கிறேன். சமீபத்தில் தான் நாஞ்சில் சார் எதேச்சையாக சொல்லிய ‘திருவாழி’ என்கிற பெயர் தெரிய வந்தது. ஆனால் அது முடிவு பெறாத சொல்லாகப் பட்டது. ‘திருவாழி மார்பன்’ முழுச் சொல்லாக இருக்கிறது. ஆனால் ஸ்ரீநிவாசன் திருவாழி மார்பனைவிட சுருக்கமாக இருக்கிறது. மேலும் திருவாழி என்கிற சொல் பெருசு, பிரபலம், கதை சொல்லி, பூச்சி கொல்லி மாதிரி அஃறிணை சாயலில் இருந்ததால் என் பெயர் ஆகும் வாய்ப்பை இழந்தது. தவிர ஸ்ரீநிவாசனும், ராமனும், க்ருஷ்ணனும், சுப்ரமண்யமும், ராஜகோபாலனும், ராமசாமியும், காமராஜனும், கருணாநிதியும், ராமச்சந்திரனும் தமிழனுக்கு மட்டுமே சொந்தமான அவனுடைய ப்ரத்யேக சம்ஸ்கிருதம்.

பெயரில் என்னவெல்லாம் இருக்கிறது!

Tuesday, July 7, 2009

திரும்பிப் பார்த்தலும் திரு அல்லிக் கேணியும்.

திரும்பிப் பார்த்தலும் திரு அல்லிக் கேணியும்.

வ.ஸ்ரீநிவாசன்.

‘நாஸ்டல்ஜியா’. - அகராதிப்படி நாடு / வீடு திரும்புதல் பற்றிய பேரவா, கடந்த காலத்தைப் பற்றிய உணர்ச்சி மிகு ஏக்கம். பழைய அனுபவங்களைத் திரும்பிப் பார்த்தலைக் குறிக்கவும் இச்சொல் பயன்படுத்தப் படுகிறது. நாஸ்டல்ஜியாவை உணர்ச்சி மிக உபயோகப்படுத்திக் கொண்டதாலேயே வெற்றி பெற்ற திரைப் படங்கள் எங்கும் உண்டு. சமீபத்தில் தமிழில் ‘அழகி, ஆடோகிராஃப்’. குரோசாவாவின் ‘ட்ரீம்ஸ்’ கடந்த காலம் என்னும் கட்டுக்குள் சிக்காமல் எக்காலத்துக்கும் ஏற்றதான க்ளாஸிக். மற்றும் பெர்க்மனின் ‘ஃபேன்னி அண்ட் அலெக்ஸான்ட்ரா’.

சொந்த ஊர் உணர்ச்சிமிகப் பேசுபவர்களை நான் சந்தித்திருக்கிறேன். சொந்த ஊரில் போய்தான் சாக வேண்டும் அல்லது சாவதற்காவது சொந்த ஊர் போய்விட வேண்டும் என்கிற நண்பர்கள் எனக்கு உண்டு. சொந்த ஊர் தண்ணீர், வாசனை, பாஷை பற்றி ஏங்குபவர்களை எனக்குத் தெரியும். அது போன்ற உணர்வுகள் என்னை அலைக்கழித்ததில்லை.

ஏதோ ஒரு ஊரிலிருந்து பல வருட இடைவெளியில் சென்னை சென்டிரல் ஸ்டேஷனில் இறங்குகையில் ஒரு பரிச்சய உணர்வு (ஃபெமிலியர் ஃபீலிங்) சில நொடிகள் இருக்கும். ஏழு மணி ஆகிவிட்டால் சூரியன் உதித்து இத்தகைய உணர்வுகளைச் சுட்டெரித்துவிடும்.


இருபத்தெட்டு வருடங்களுக்குப் பிறகு ஒரு மாலை அசோகமித்திரன் அவர்களின் 75வது வயது ஆரம்ப விழாவிற்காக திருவல்லிக்கேணி சென்றேன். மௌன்ட் ரோடில் (அண்ணா சாலை) இந்து ஆஃபீஸில் இறங்கி எதிர் திசையில் ஒரு பஸ் பிடித்து வாலாஜா சாலை வழியாக திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் இறங்கியதும் ஒரு பாதுகாப்பு உணர்வு, ஒருஅமைதி கலந்த மகிழ்ச்சி சூழ்ந்தது. அப்போது புரிந்தது சொந்த ஊருக்காக ஏங்குபவர்களைப் பற்றி. இந்த ‘நாஸ்டல்ஜியா’ உண்மையில் உடல் சம்பந்தப் பட்டது என்று தோன்றுகிறது; பழகிய இடம், சூழல், காற்று, வானம், வாசம் என்று. புது இடத்தில் தூங்க மறுக்கும் உடலின் நுண்புலனுணர்வு போல். இது வழக்கம் போல் நினைவுகளால் அபகரிக்கப் பட்டு பூதாகாரப் படுத்தப் படுகிறது. காமம், சாப்பாடு போல் கொஞ்சம் உடலாலும், பெரும்பாலும் மனதாலும் பேணப்படுவதாக இருக்கிறது. ‘எடர்னல் ப்ரெஸென்ட்’ புலனாகையில் இவ்வுணர்வுகள் மங்கிவிடுகின்றன.

இவ்விருபத்தெட்டு வருடங்களில், நான் பிறந்ததிலிருந்து இருபத்தேழு வருடங்கள் வாழ்ந்த திருவல்லிக்கேணி சிறியதாகி இருந்தது. ‘பெரிய தெரு’ சிறிய தெருவாகி இருந்தது. மிக அகலமான தெருக்கள் என்று நினைவில் இருந்தவை குறுகி இருந்தன. என் பால்ய பருவத்தில் பதிவாகி இருந்த நினைவுகளில் இருந்த திருவல்லிக்கேணி அப்போதிருந்த என் வளர்ச்சியைக் கணக்கிலேயே எடுத்துக் கொள்ளவில்லை போலும். மேலும் கட்டடங்கள் பெரும்பாலானவை இப்போது இரண்டு மூன்று மடங்கு உயரம் கூடி இருந்தமையும் ஒரு முக்கிய காரணம். முப்பத்தைந்து வருடங்கள் கழித்து சென்னை திரும்பிய என் நண்பனும் இதே மாதிரி உணர்ந்ததைச் சொன்னான். என்னை விட உயரமான அவனுக்குத் திருவல்லிக்கேணி இன்னும் சிறியதாக ஆகி இருக்கும்.

திருவல்லிகேணியிலிருந்துதான் பார்த்த சாரதி பெருமாள் பரிபாலனம் செய்து வருகிறார். அவரது கோயிலின் குளம்தான் அல்லிக்கேணி எனும் அழகு தமிழ்ப்பெயர் கொண்டது. வைணவத் தமிழின் எழிலுக்கு இணை இருக்கிறதா என்ன? பார்த்தனின் சாரதி பெரிய மீசையுடன், அம்பு பட்ட தழும்புகளோடு ஆஜானுபாகுவாய் நிற்கிறார். கோவிலின் வாயிலிலிருந்தே காணக்கிடைக்கிறார்.



ஒரு காலத்தில் சனிக்கிழமை தோறும் சென்று தரிசித்து வந்த கோயிலுக்கு, கடந்த சுமார் நாற்பது வருடங்களில், நான்கைந்து முறையே சென்றிருக்கிறேன். சமீபத்தில் திரு நாஞ்சில் நாடன் அவர்களோடு நானும் இயக்குனர் சுகாவும் சென்றோம். அந்தக் கோவிலில் எந்த சந்நிதி எங்கே இருக்கும், என்ன சம்பிரதாயம் போன்ற விஷயங்கள் குறித்து ஒன்றும் தெரியாமல் இருந்த என்னை “அய்யங்கார் என்று அபாண்டமாக பழி சுமத்தப் படுகிற’ (உபயம் ‘கவிஞர்’ கனிமொழி பற்றிய ‘சோ’ வின் பிரயோகம்) என்கிற அடைமொழியோடு விளித்து அவருக்கே உரிய நகைச்சுவையோடு கிண்டல் செய்தார் சுகா.

இக்கோவிலில் இருக்கும் மூலவர் சிலை, கடவுளின் குறியீடு எனில் எதிரே கடற்கரைக்குக் கிழக்கே நீண்ட நெடிய நீலக்கடலாய் அவரது ஸ்தூல சரீரம். பைந்நாகங்கள் யுகயுகமாய் கரை சேர்ந்து கடல் மீண்டு கொண்டிருக்கின்றன.

மெரினா கடற்கரை. திருவல்லிக்கேணிவாசிகள் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்தது. உலகின் இரண்டாவது நீண்ட கடற்கரை என்கிறார்கள்.


கடலெதிரில் சென்னை பல்கலைக் கழகம், மாநிலக் கல்லூரி, இராணி மேரிக் கல்லூரி, விவேகாந்தர் இல்லம் ஆகியவை.

நட்பு யாதெவற்றையும் விட உற்றதாய் இருந்த ஒரு காலத்தில் எங்கள் நண்பர் குழாத்தின் மாலைகள் மற்றும் முன்னிரவுகளெல்லாம் இக்கடற்கரையில்தான் கழிந்தன. கடலின் பின்னணியில் எவ்வளவு யுகங்களாய் மனிதனின் சிரிப்பும், கண்ணீரும், காதலும் இங்கு காற்றில் கலந்து கரைந்து கொண்டிருக்கின்றன. எவ்வளவு பேருக்கு வாழ்வாதாரமாய் கடலும், அதன் கரையும்.

இங்குதான் மகாகவி பாரதி பேசியிருக்கிறார். வ.உ.சியும் அவர் குருநாதர் பால கங்காதர திலகரும், சுப்ரமணிய சிவாவும் பேசியிருக்கிறார்கள். ராஜாஜியும், காமராஜரும் சேர்ந்து பேசியதை நானே கேட்டிருக்கிறேன். சர்வ கட்சி கூட்டம் ஒன்றில் (சீனப் போர் சமயம் என்று நினைக்கிறேன்) கலைஞர் முதலிய பெரும் பேச்சாளர்கள் பேசியவற்றையெல்லாம் விட கவிஞர் கண்ணதாசன் ‘கடலெங்கும் அலை கொண்ட மணல் எங்கும் தலை’ என்று ஆரம்பித்துப் பேசிய பேச்சு அங்கு திரண்டிருந்த மக்களை அக்கணமே போர்க்களத்திற்குச் செல்ல தயாராக்கும் விதத்தில் அமைந்தது. சோ அவர்கள் பேசிய மாபெரும் பொதுக் கூட்டத்தைக் கேட்டிருக்கிறென். பெரியார் அவர்கள் வராததால் அவர் பேச்சை திரு வீரமணி அவர்கள் படிக்கக் கேட்டிருகிறேன்.


கடற்கரை அல்லாத திருவல்லிக்கேணியின் பிற பகுதிகளில் ம.பொ.சி., ஜெயகாந்தன், நா. பார்த்தசாரதி, நெல்லை ஜெபமணி போன்றவர்களின் பேச்சுகளைக் கேட்டிருக்கிறேன். 1967ல் அண்ணாவின் தேர்தலுக்கு முந்தைய கடைசிப் பேச்சு திருவெட்டீஸ்வரன் பேட்டையில் மதியம் நடந்தது. அப்பேச்சைக் கேட்டேன். பல பிராமணர்கள் தி.மு.க.வுக்கு ஓட்டு கேட்ட தேர்தல் அது. பின்னர் பாலர் அரங்கத்தில் (கலைவாணர் அரங்கம்) ராஜாஜி பிறந்த நாளுக்கு முதலமைச்சர் அண்ணா வந்திருந்து ஆங்கிலத்தில் ஆற்றிய உரையையும் கேட்டிருக்கிறேன். நாவலர் நெடுஞ்செழியன், சின்ன அண்ணாமலை, நாஞ்சில் மனோகரன் முதலியவர்களின் பொதுக் கூட்டங்களுக்கும் போனதுண்டு.

நான் படித்த இந்து உயர் நிலைப் பள்ளி ஆசிரியர்கள் அனைவரின் மேன்மையும் இப்போது புரிகிறது. பழுப்பேறிய, பல முறை துவைத்துக் கட்டப் பெற்ற வேட்டிகளோடும், கசங்கிய, சிலசமயம் கிழிந்த சட்டைகளொடும் வந்து பாரபட்சம் இன்றி, அனைத்து மாணவர்களையும் ஒன்றாக பாவித்து பாடம் சொல்லிக் கொடுத்த அவர்களது வறுமையில் செம்மை வாழ்க்கைக்கான உரத்தை இளமையிலேயே எங்களுக்கு அளித்தது.

பிறகு படித்த மாநிலக் கல்லூரி பிரம்மாண்டமானது. சுதந்திரம் மிக்கது. இருபாலரும் படித்தது. ‘ப்ரின்ஸஸ் ஆஃப் ப்ரெஸிடென்சி’ என்பார்கள். வாழ்க்கையின் சிக்கல்கள், பிரிவினைகள் அனத்தும் லேசாக புரிய ஆரம்பித்திருந்த காலம். கல்லூரிக்கு அருகில் இருந்த மாணவர் விடுதி பின் வரும் காலம் எப்படி இருக்கும் என்பதற்கு அடையாளமாய் இருந்தது. இன மற்றும் சாதி உணர்வுகள் நீறு பூத்து இருந்த அந்தக் காலத்தில் ஒரு ‘சிங்’ மாணவர் தலைவராக முடிந்தது.

அம்பு பட்ட மால் தென்கிழக்கில் என்றால் வெட்டுப் பெற்ற ஈஸ்வரன் வட மேற்கில் ஆட்சி செய்கிறார். திருவெட்டீஸ்வரன். அவரைத் தாண்டிப் போனால் இசுலாமியர் வாழும் பகுதிகள்.

திருவல்லிக் கேணியில் ஸ்டார் டாக்கீஸ், பாரகன் தியேட்டர் இருந்தன. வட மேற்குப் பக்கம் வசிப்பவர்களுக்கு தேவி, பிளாசா, சாந்தி, அண்ணா, ஓடியன், க்ளோப், மிட்லேண்ட் மற்றும் கெயிட்டி, கேஸினோ தியேட்டர்கள் நடக்கிற தூரம்தான். கதவுகள் எல்லாம் திறக்கப் பட்ட சினிமாக் கொட்டகைகளில், காற்றாட நடக்கும் இரவுக் காட்சிகளும், சிகரெட் புகையால் சூழப்பெற்று தேவலோகமாகும் அவற்றின் இடைவேளைகளும், காட்சி முடிந்து திரும்புகையில் திறந்திருந்து விருந்தோம்பும் பால் கடைகளும் சுகமானவை.

ஹிந்து உயர் நிலைப் பள்ளியில் கர்நடக சங்கீத கச்சேரிகளும், கதா காலட்சேபங்களும் நடைபெறும். வாரியார் சுவாமிகள், பால க்ருஷ்ண சாஸ்திரிகள் போன்றவர்கள் சுவை குன்றாது கூறிய இராமாயண, மகாபாரதக் கதைகள் இன்னமும் நினைவில் உள்ளன. என்.கே.டி கலா மண்டபத்தில் நாடகங்கள் தொடர்ந்து நடந்தன. கே.பி. சுந்தராம்பாள் போன்றவர்கள் பாடினார்கள்.

‘அவமரியாதை’ வேரூன்றவில்லை. மனிதரிடையே பரஸ்பர நம்பிக்கை இருந்தது. எல்லோருமே பெரும்பாலும் மத்யதர, கீழ் மத்யதரத்தைச் சேர்ந்தவராய் இருந்தார்கள். பொருளாதார ஏற்ற தாழ்வுகளின் இடைவெளி கம்மியாய் இருந்தது. அரசியல்வாதிகளில் கௌரவமானவர்கள், நேர்மையாளர்கள் மதிக்கப் பட்டார்கள்.’ஜென்’னில் கூறுவதைப் போல் ‘A careless trust on the divine occasion of our dust’ இருந்தது.

‘ரத்னா கேஃப்’தான் மிக உயர்ந்த சிற்றுண்டிச் சாலை. அவர்கள் பரிமாறிய சாம்பாரும், கொடுத்த காபியும், ஸ்தல புராணங்களில் இடம்பெறும் தகுதி வாய்ந்தவை. அதை தவிர பைக்ராப்ட்ஸ் ரோடு (பாரதி சாலை) முழுவதும் சிற்றுண்டிசாலைகள் தான். ‘ரோலக்ஸ்’ ‘புஹாரி’ மற்றும் பல அசைவ உணவகங்களும் இருந்தன. தனியார் ‘மெஸ்’கள் பல உண்டு. திருவல்லிகேணியை ‘பிரம்மச்சாரிகளின் சொர்கம்’ என்று இதனால்தான் சொல்வார்கள். அப்போதே சென்னையில் (மதறாஸில்) சில பிரம்மச்சாரிகளின் (மற்றும் அல்லாதவர்களின்) சொர்கம் அல்லது நரகமாக கோடம்பாக்கம்.

சென்னை, நகரமாக மெடாமார்ஃபாஸிஸ் ஆகிக் கொண்டிருந்த ஆரம்ப காலத்திலேயே அதன் முக்கிய குடியிருப்புப் பகுதிகளில் ஒன்று திருவல்லிக்கேணி. 1ம் எண் பேருந்து திருவல்லிக்கேணி யிலிருந்து பாரிமுனை செல்லும். 2 ம் எண் பேருந்து தங்கசாலை செல்லும்.

இப்போது எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியம் என்று அழைக்கப் படும் ‘கிரிக்கட்’ மைதானம் அப்போது மெட்றாஸ் க்ரிக்கட் க்ளப்’ (எம்.சி.சி.) என்று அழைக்கப் பட்டது. இது சேப்பாக்கம் என்கிற திருவல்லிக்கேணி பகுதியைச் சார்ந்தது. இதைத்தவிர மாநிலக் கல்லூரிக்கு சொந்தமான மெரினா க்ரௌண்ட்ஸிலும் கிரிக்கட் நடக்கும். க்ருபால் சிங், வி.வி.குமார்,வெங்கட்ராகவன் முதலிய சூப்பர் ஸ்டார்களோடு ரசிகர்கள் அருகிலிருந்து அளவளாவி, தொட்டுத் தழுவி மகிழ்ந்திருந்த இடங்கள் இவை.

மகாகவி வாழ்ந்த இடம் பார்த்த சாரதி கோவிலின் மாட வீதிகளில் ஒன்றான துளசிங்கப் பெருமாள் கோவில் தெரு. தமிழ் தாத்தாவின் வீடு திருவெட்டீஸ்வரன் கோவிலின் மாட வீதிகளில் ஒன்றான பிள்ளையார் கோவில் தெருவில் உள்ளது. வீட்டின் பெயர் தியகராஜ விலாசம். சாமிநாதைய்யரின் நண்பர் தியாகராஜ செட்டியாரின் நினைவாக. இதே தெருவில் சி.சு. செல்லப்பா பல காலம் வசித்து வந்தார். எழுத்து பத்ரிகை நடந்தது இங்கிருந்துதான். ‘கசடதபற’ திருவல்லிக்கேணியிலிருந்துதான் வந்தது. நா.பா.வின் ‘தீபம்’ பத்ரிகை ஆஃபீஸ் எல்லீஸ் சாலையில் இருந்தது. ‘கணையாழி’ அலுவலகம் சிலகாலம் பெல்ஸ் சாலையில் இருந்தது.

இந்து உயர் நிலைப் பள்ளியைத் தவிர, கெல்லட் பள்ளி, நேஷனல் பாய்ஸ் ஹை ஸ்கூல், நேஷனல் கேர்ல்ஸ் ஹை ஸ்கூல், முஸ்லிம் உயர் நிலைப் பள்ளி, லேடி வில்லிங்டன் பள்ளி எல்லாம் இங்கிருந்த பெரிய பள்ளிகள். ஜாம்பஜார் முக்கியமான மார்க்கெட். அருகிலேயே பெரிய மசூதியும், ஆற்காட் நவாப் அரண்மனையான ‘அமீர் மஹாலு’ம் இருக்கும்.

திருவல்லிக்கேணி நெடுஞ்சாலைதான் நீண்ட பெரிய சாலை. இதில் ஒருகாலத்தில் ட்ராம் வண்டிகள் செல்லுமாம். நான் டிராம் வண்டிகளுக்காக போடப் பட்ட தண்டவாளங்களைப் பார்த்திருக்கிறேன்.

தமிழர் தலைவர்களான காஞ்சிபுரத்து அண்ணாதுரை, இலங்கையில் பிறந்த எம்ஜியார் ஆகியோரது சமாதிகள் அடங்கிய நினைவிடங்கள் திருவல்லிக்கேணிக்கு வட கிழக்கு விளிம்பில் உள்ளன. அதன் தென் கிழக்கில் உள்ள கிருஷ்ணாம்பேட்டையில்தான் - என்னை விட வயதில் மிக மூத்தவர்களான, பசும்பாலூற்றிய யசோதா, கோதண்டம் தம்பதியினரும், எருமைப் பால் ஊற்றிய சகுந்தலாவும், அவரது மகன் பதியும், எதிரில் இருந்த ரிக்ஷா வண்டி நிலையத்தில் கைரிக்ஷா அயராது ஓட்டிய அன்பே வடிவான (சிறுவனான என்னை காசு வாங்காமல் சும்மா மாட வீதிகளைச் சுற்றி ஒரு சுற்று ஓட்டி வருவார்கள். என் அப்பா ஒருவர் வாசலுக்கு வரும்போது மட்டும் எழுந்து நிற்பார்கள். அவர் அவர்களை மரியாதையாக நடத்துவார். மழை வந்தால் வீட்டு வாசற்கதவுகளைத் திறந்து விட்டு விடுவார். அவ்வளவுதான்) முருகேசனும், சக்கரையும், முனுசாமி சகோதர்களும் (அண்ணன் தம்பி இருவர் பெயருமே முனுசாமிதான்) சின்னத் தம்பியும், மதுரையும், அவர்களது மனைவியரும், ராதா என்கிற மதுரையின் மகளும் (“பாவம்டா அவ” என்று அவளுக்கு மட்டும் கொஞ்சம் அதிகமாகவே சாதம் கொடுப்பாள் என் தாயார். அவள் பாவம்டா என்று சொன்னதன் காரணத்தை பால்வினை நோய் என்றால் என்ன என்று படித்து தெரிந்து கொண்ட வயதில் நான் தெரிந்து கொண்டேன்), எதிர்வீட்டு முதலியார் பாட்டியும், என் முதல் ஆசிரியர் நாயுடுவும், மீசைக்கார நாயக்கர் தாத்தாவும், லாலா என்று சகட்டுமேனிக்கு அழைக்கப் பட்ட வட இந்தியர்களும், எங்கள் ஆஸ்தான தையற்காரர்களான இப்ரஹீமும், முஸ்தாபாவும், எல்லோரும் - ஆம் அந்த க்ருஷ்ணாம்பேட்டையில்தான் என் தந்தையைப் போல், எங்கள் பக்கத்து வீட்டுகாரப் பெரியவர்களைப் போல் எரியூட்டவோ புதைக்கவோ பட்டிருப்பார்கள். அங்கிருந்து பின்னர் திருவல்லிகேணியில் முங்கிக் குளித்து தேவதைகளாக அங்குதான் உலவிக் கொண்டு இருப்பார்கள். அதுதான் அந்த பாதுகாப்பு உணர்வு. அவர்கள் அங்கு மட்டும் இல்லை எங்கும், எந்த ஊரிலும், எந்த கண்டத்திலும் கூடவே வரும் சந்திரனைப் போல் கூடவே இருக்கிறார்கள்.

அதனால்தான் ‘எங்கள் ஊர்’ என்று ஒவ்வொரு எழுத்தாளரும் எழுதுகையில் ஜெயகாந்தன் சொல்கிறார்: “என்கதைகளில் மண் வாசனையை விட மனித வாடையே அதிகம் வீசும்”.

****************